PDA

View Full Version : முதற்றாய்மொழி - நம் தமிழ்



கௌதமன்
11-12-2010, 07:20 AM
உலக மொழிகளில் முதலில் தோன்றிய மொழி தமிழ் என்பதை பாவாணர் ஆழ்ந்துச் சிந்தித்து, பல மொழிகளைக் கற்றுணர்ந்து, மூலச்சொற்களை ஆராய்ந்து, சொல்லாராய்ச்சி செய்து, வடமொழி முதலான பிற மொழிச் சொற்களின் வேர்ச்சொற்களைக் கண்டறிந்துச் சொன்ன பேருண்மையாகும். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிஞர் பெருமக்கள் பாவாணர் வழியில் சொல்லாராய்ச்சிச் செய்து வருகின்றனர். நம் மொழி என்ற உணர்ச்சி மேலோங்கிடாமல் அறிவியல் வழியில் ஆதாரத்துடன் மெய்ப்பிப்பதே தமிழ் அறிஞர்களின் கடமையும் பொறுப்புமாகும்.இதற்கு பன்மொழிப் புலமையுடன் வரலாறு மற்றும் புவியியல் அறிவும், அயராத உழைப்பும் மிகவும் தேவை.
அத்தகைய அறிஞர் பெருமகனார்களில் திரு.மா.சோ.விக்டர் என்பாரும் ஒருவர். தமிழ் இணைய பல்கலைகழகத்தால் வெளியிடப்பட்ட பாவாணரின் பல்வேறு நூல்களும், தேவநேயம் என்ற பெயரிலமைந்த பாவாணரின் பல்வேறு தொகுப்புகளும், மா.சோ.விக்டர் அவர்களின் நூல்களும் மற்றும் இணையத்தில் கிடைத்தச் செய்திகளும், விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற நீயா? நானா? நிகழ்ச்சியில் தமிழ் மொழி வளர / வளர்க்க செய்யப்படவேண்டிய முயற்சிகள் குறித்த சொல்லாடலும் இத்திரிக்குக் தூண்டுகோலாக அமைந்தது.

இத்திரியைத் தொடங்குவதில் உள்ளபடியே மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.

இது குறித்த நல்ல சிந்தனைகளை இதில் பதிவுச் செய்வோம்!

தகவல்களில் ஏதேனும் பிழையிருந்தால் அதைச் சுட்டிக் காட்டுமாறுப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

கௌதமன்
11-12-2010, 08:54 AM
வடசொற்கள் என்னும் சமஸ்கிருதச்சொற்களின் வேர்ச்சொற்கள் தமிழே என்பது ஆச்சிரியப்படுத்தும் உண்மையாகும்.

இவையன்றி உலகின் மற்ற மற்ற இடங்களில் எல்லாம் தமிழ் வேர்ச் சொற்கள் பரவிக்கிடக்கின்றன.

அமரன்
11-12-2010, 09:31 AM
மன்றம் வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன் நண்பரே.

உங்களை முல்லைப் பந்தலில் அறிமுகம் செய்து கொள்ளலாமே..

தமிழின் முப்பரிமாணங்களையும் தனித் தன்மையையும் அறிந்து வைத்த்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அதே நேரம் எந்த மொழியில் , எந்த விதத்தில் சொல்ல வேண்டுமோ அந்த விதத்தில் சொல்ல வேணும்.

இது என் பட்டறிவு.

நாஞ்சில் த.க.ஜெய்
12-12-2010, 05:13 PM
"தமிழ் இணைய பல்கலைகழத்தால் பாவாணரின் பல்வேறு நூல்கள் இலவசமாக இணையம் மூலம் பெறத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளது."

அந்த இணையம் என்ன நண்பரே ....மேலும் கூறும் விடயங்கள் புதிது கூற வந்தது ......
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

கௌதமன்
13-12-2010, 05:08 PM
பாவாணர் காட்டும் முதற்றாய் மொழியின் இயல்புகள்

1. மிகப் பழைமையானதாயிருத்தல்

2. பெரும்பாலும் எல்லா மொழிக்கும் பொதுவான எளிய ஒலிகளையே கொண்டிருத்தல்.

3. கூட்டுவரி, மெய்ம்முதல், க ச த ப மெய்களின் பின் வேற்றுமெய் வரவு, வல்லின

மெய்யீறு முதலியனவில்லாதிருத்தல்.

4. முன்னொட்டுகளை மிகுதியாகக் கொள்ளாமை

5. இடுகுறிப் பெயரில்லாதிருத்தல்

6. ஏறத்தாழ எல்லாச் சொற்கட்கும் வேர்ப்பொருள் உணர்த்தல்

7. பல மொழிகட்கும் அடிப்படைச் சொல் வழங்கியிருத்தல்

8. பன்மொழிப் பொதுச்சொற்களின் மூல வடிவத்தைக் கொண்டிருத்தல்

9. சொல்வளமுடமை

10. நெடுங்காலம் கழியுனும் மிகச் சிறிதே திரிதல்

11. இயற்கையான முறையில் வள்ர்ந்திருத்தல்

12. இயன்மொழியாயன்றித் திரிமொழியா யில்லாதிருத்தல்

13. பொருள்பற்றியன்றி ஈறுபற்றிப் பாலுணர்த்தாமை

14. பொருட்பாகுபாடு செய்வதில் எளிய முறையைத் தழுவியிருத்தல்

15. முதற்கால் மக்களின் எளிய கருத்துகளைக் கொண்டிருத்தல்

மொழிஞாயிறு தேவநேய பாவாணர்
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcT7jnTiDhCuoURYRm6Sbftd2OooaEQworNGDhvHGfly0TK5nzuJAQ
அறிஞர் மா.சோ.விக்டர்
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQDsnnp41KsEcLC2mtuHF28EKadnwFPauAwLj_lyYXwWpO0EV1B

கௌதமன்
15-12-2010, 02:35 PM
நுழைவாயில்

பழந்தமிழ் நாடு தற்போதைய குமரி முனையுடன் முடிந்துவிடவில்லை. அது இந்தியப்பெருங்கடலில் நீண்டு சென்று நிலப்பகுதியாக இருந்தது. அதை குமரிநாடு என்றும் குமரிக்கண்டம் என்றும் லெமுரியா என்றும் அழைத்தனர். இந்த நாட்டிற்கு தெற்கு எல்லையாக பஃறுளி ஆறும், வடக்கே குமரி மலையும், குமரி ஆறும் இருந்தன. ஒரு காலத்தில் தோன்றிய கடல்கோளினால் இந்த நிலப்பகுதி அழிந்தது. பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள என்று இந்த நிகழ்ச்சியை சிலப்பதிகாரம் குறித்து வைத்துள்ளது. இந்தக் கடல்கோள் ஏற்பட்டு அந்த நிலப்பகுதி அழிவதற்கு முன்னால் அங்கு வாழ்ந்த மக்கள் தமிழ் மொழியில் புலமை பெற்று திருத்தமான மொழியை பேசியுள்ளனர். பல புலவர்கள் அருந்தமிழ்பாடல்களை பாடியுள்ளனர். இந்தப் பாடல்கள் தமிழ்நாட்டில் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த வரிவடிவ தமிழ் எழுத்துக்களைக் கொண்டு பனையோலைகளில் இலக்கணம் தவறாத சொற்களால் எழுதப்பட்டுள்ளன. சங்கங்கள் நிறுவி தமிழ் மொழியில் சிறந்த புலவர்களைக் கொண்டு பல நூல்களை இயற்றி தமிழை வளர்த்துள்ளனர்.

பாலகன்
15-12-2010, 04:47 PM
ரொம்பவே சுவாரசியமான தகவல்கள் இவை. எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு
தொடருங்கள் கெளதமன்

கௌதமன்
15-12-2010, 05:11 PM
தற்கால அறிவியல் அறிஞர்களின் கருத்துப்படி இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்களும், பல்லாயிரம் கோடி ஆண்டுகட்கு முன்பு ஒரேப் பொருளாகயிருந்ததென்றும், அது வெடித்துச் சிதறி இபோது நாம் காணும் அண்டத்தையும் அதன் பிற உற்ப்புகளையும் தொர்றுவித்ததென்றும் கூறுகின்றனர்.
அவ்வாறு வெடித்துச் சிதறியப் பொருள் விரிந்து பரந்ததன. அவற்றுள் சில நம் சூரியக் குடும்பத்தை உருவாக்கக் காரணமாகவிருந்த்தது. (இதுவே Edwin hubble என்ற அறிவியலாரின் பிரபஞ்சத் தோற்றக் கொள்கையாகும்).

எட்வின் ஹபிள்

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSE7xi9B-Bn7K-X_-pW0CvyFElnMjnroW6-NdMLsYwibReqF-P2PQ

பிரபஞ்சம் விரிவடைதல்

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcS_sh0rfLHCe7Tj1c4hjllbpltp-NWvdaBUydaCxPLRmf8gijZ0

ஆன்டனி ஜானி
15-12-2010, 05:15 PM
பழமையோ ,புதுமையோ ,எதுவோ
உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்
நானும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ......

தொடருங்கள்
வாழ்த்துக்கள்

கௌதமன்
16-12-2010, 03:55 PM
பாஞ்சியா (Pangaea) என அழைக்கப்பட்ட உலகின் முதல் கண்டம், முற்றிலும் ஒருநிலப்பரப்பாகவே இருந்ததாக அறிவியலார் கருதுகின்றனர். பின்னர் வடக்கில் ஒன்றும், தெற்கில் ஒன்றுமாகப் பிரிந்தது. இரண்டுக்குமிடயே கடல்வழி இருந்தது. வடக்குக் கண்டம் லாராசியா (Laurasia) என்றும் தெற்குக்கண்டம் கோண்டுவானா (Gondwana) என்றும் சொல்லப்படுகிறது. இவ்விரண்டும் சிதறி, புதுப்புதுக் கண்டங்கள் தோன்றின.

கௌதமன்
19-12-2010, 12:57 PM
லாராசியா எனும் கண்டத்தில் இன்று நாம் அறியப்படும் வட அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா தவிர்த்த ஆசியா போன்ற கண்டங்கள் உள்ளடங்கியிருந்தன. கோண்டுவானா கண்டத்தில் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அண்டார்டிக்கா, இந்தியா மற்றும் தென் அமெரிக்க உள்ளிட்ட கண்டங்கள் அடங்கியிருந்தன. இவ்விரு பெருங்கண்டங்களும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உடைந்து சிதறின என்பது அறிவியலார் கூற்று. (இக்கொள்கையை ஆல்ஃப்ரெட் வெகெனெர் [Alfred Wegener] என்பார், கி.பி. 1910 ஆண்டில் வெளியிட்டார்.)

கௌதமன்
19-12-2010, 01:01 PM
http://upload.wikimedia.org/wikipedia/commons/2/20/Pt-Laurasia-Gondwana.png

கௌதமன்
19-12-2010, 01:07 PM
வெகனிரின் கருத்தைக் கொண்டு, கண்டப்பெயர்ச்சி (Continental Drift) என்ற கருத்து 1910-ம் ஆண்டில் சொல்லப்பட்டது. இக்கொள்கை நில அதிர்வுகள் மற்றும் சுனாமி (Tsunami) போன்ற அழிவுகளால் மெய்பிக்கப்பட்டது.

கௌதமன்
19-12-2010, 01:18 PM
http://globalextinction.org/PlatesToday.jpg

கௌதமன்
19-12-2010, 01:20 PM
http://globalextinction.org/Plates650mya.jpg

கௌதமன்
19-12-2010, 01:21 PM
ஆல்ஃப்ரெட் வெகனெர்
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcT2wArl2sL687cCn2WTKTQ9mtCe7NpDyO0Pxn0sRFaQXAJpY5Zuhg

கௌதமன்
19-12-2010, 01:37 PM
கோண்டுவானா என்ற நிலப்பரப்பில் தொடக்கத்தில் மாந்த இனம் தோன்றியிருக்கவில்லை. (டைனசர் காலம்).
இந்தக் கோண்டுவானா பெருங்கண்டத்தில் தமிழகமும் அடங்கியிருந்தது. அரியலூரில் கண்டெடுக்கப்பட்ட டைனசர் விலங்கின் முட்டைகள் தமிழத்தின் தொன்மையை வெளிப்படுத்தும் சான்றாக உள்ளன.அரியலூரைச் சுற்றுலும் கிளிஞ்சல்கள், ஆமை ஓடுகள், நத்தைகள், மீன்கள், நண்டுகள் போன்ற கடல் வாழ் உயிரனங்கள் கற்பதிவுகளாக (fossils) சிதறிக்கிடக்கின்றன்.

கௌதமன்
19-12-2010, 01:41 PM
அரியலூர் அகழ்வாராய்ச்சி ஆவணங்கள்
http://www.orissatv.com/UserFiles/FULLPAGE/Image/2009/October/Ariyalur_web.jpg ;http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQ60idJ-SF13ilKfrKGi_Z7mLQCIKbXw0DrWENHcU9S-B2UmbLp; http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQsMChdbsVCoQVOKLvNYUSspiUnS-Q_6qFLt_P0X1JsQYh5YMh8

கௌதமன்
19-12-2010, 03:54 PM
தமிழகத்தின் தொன்மையான நிலப்பகுதிக்கு அரியலூர்ப் பகுதி சரியான சான்றாகும். இதே மண்வகை மடகாஸ்கர் பகுதியுலும் காணப்படுகிறது. தென்னாப்பிரிக்கா-மடகாஸ்கர்-அரியலூர்ப் பகுதிகள் ஒரு காலத்தில் ஒரு பகுதியாக் இருந்து பிரிந்து சென்றுவிட்டதை உணர்த்துகின்றன.

கௌதமன்
21-12-2010, 04:42 PM
உங்கள் பின்னூட்டங்கள் இத்திரிக்கு தூண்டுகோலாக அமையும். இத்திரிக்குத் தொடர்புடைய செய்திகளை நண்பர்கள் பதிவேற்றலாம்.நன்றி.

கீதம்
22-12-2010, 08:47 AM
முதற்றாய்மொழியின் மூலத்தை முற்றிலுமறியத்தருகிறீர்கள். உங்கள் முயற்சியை வரவேற்று அடுத்தடுத்த தகவல்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். சோர்வில்லாமல் தொடருங்கள் கெளதமன் அவர்களே.

கௌதமன்
22-12-2010, 02:29 PM
நம் பூமிப்பந்தில் உயிரினம் தோன்ற ஏதுவானவிடம் எதுவென்று பார்த்தால், கடக, மகரக்கோடுகளுக்கிடையேயான இடமே என்று அறிவியலார் கூறுகின்றனர். காரணம் இவை வெப்பமும் குளிரும் கடுமையாக உணரப்படாத பகுதி.இத்தகைய இயற்கைச் சூழல் கோண்டுவானா நிலப்பகுதியில் காணப்பட்டது.எனவே உயிரினம் முதலில் தோன்றியதற்கான சாத்தியக்கூறுகள் கோண்டுவானா நிலப்பரப்புக்கு உண்டு. இந்தக் கோண்டுவானா நிலப்பரப்பு உடைந்து சிதறியபோது, குமரிக்கண்டம் என்ற பெரு நிலப்பரப்பும், தென்னமெரிக்கா போன்ற நிலப்பரப்புகளும் பிரிந்தன.கோண்டுவானாவில் தோன்றிய உயிரினம் குமரிக்கண்டத்தில் சிறப்பாக வளர்ச்சி கண்டது.

கௌதமன்
22-12-2010, 02:31 PM
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSq-ZoNGI5VUpplUjk8EKJlO3gL1hEMxcS6ywzlWsRZ8RQRttsW

கௌதமன்
22-12-2010, 02:32 PM
கடல் கொண்ட தென்னாடு

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRYXkxf0gkbZYUe3wkWkcgld9RSrV_ZRtvicpR5CisAz3rQ6Oir_g

கௌதமன்
22-12-2010, 04:09 PM
சில அறிஞர்களின் கருதுகோள்கள் (புத்தகங்களிலிருந்து)

1. இராதா குமுத் முகர்ஜி


தென்னிந்தியாவென்பது கோண்டுவானாக் கண்டத்தின் ஒரு பகுதியேவாகும். கோண்டுவானாக் கண்டம், தென்னமெரிக்கா-தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியாவின் மண் பாறைகள், பயிர்கள், பழங்காலப் பதிவுகள் ஆகியவை, இப்பகுதிகள் ஒரு நிலப்பரப்பாக் இருந்தது என்பதை மெய்ப்பிக்கின்றன.இப்போது தென்னிந்தியாவில் காணப்படும் மேற்கு மலைத்தொடரும்,கிழக்கு மலைத்தொடரும் நீர்வழியாகப் பிரிக்கப்பட்டிருந்தன.இந்தியாவில் வடபகுதிகள் கடலாகவிருந்தன.இமயமலை அப்போது அறியப்படவில்லை.

கௌதமன்
24-12-2010, 05:24 PM
2. பால் மேசன் ஓர்செல் (Dr. Paul Masson Oursel)

இந்தியாவின் பழம் நிலப்பகுதி தென்னிந்தியாவே. அக்கால்த்தில் வட-இந்தியா கடலாகவிருந்தது. கோண்டுவானா என்ற நிலப்பரப்பு, தென்னமெரிக்கா - ஆஸ்திரேலியா - இலங்கை - தென்னிந்தியா - அந்தமான் நிக்கோபார் தீவுகள் - மலேசிய நாடுகள் உள்ளிட்ட நிலப்பகுதிகளைக் கொண்ட்ருந்தது. இதுவே பிற்காலத்தில் குமரிக்கண்டமாக உருப்பெற்றது. குமரிக்கண்ட அழிவின் போது தோன்றிய நில அதிர்வு அல்லது வெடிப்பு உலகின் தென்பகுதி நாடுகளையும், வட பகுதி நாடுகளையும் இணைத்தது. ஐரோப்பாவிலும், இந்தியாவின் வடப்பகுதியிலும் பெரு மலைத்தொடர்களைத் தோற்றுவித்தது. இக்காலத்திலேயே சிந்து கங்கையாறுகளும் தோன்றின.

கௌதமன்
26-12-2010, 05:10 AM
3. தர்ஸ்டன் (Dr. E. Thurston)

தற்போதுள்ள இந்தியப் பெருங்கடலில், சுந்தத் தீவுகள் தொடங்கி ஆப்பிரிக்கா வரியிலும் ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்த்தது என்று எக்கேல் (Dr. Haechel) கூறுகிறார். இந்நிலப்பரப்பை லெமூரியக் கண்டம் என்று ஸ்கிலேட்டர் (Dr. sclater) கருதுகிறார். இக்கண்டமே, உயிரினங்களும், விலங்குகளும், மாந்தனும் தோன்றிய இடமாகும். இதற்கு அடிப்படைகளாக, மலேசியா, போர்னியா, சாவா,சுமத்திரா, மலாக்கா ஆகிய பகுதிகளில் காணப்படும் கற்காலப் பொரருட்களை எடுத்துக்காட்டுகிறார். இந்நாடுகளுக்குக் கிழக்கேயுள்ள, செலிபஸ், மோலுகாஸ்,சாலமன் தீவுகள், புதுகினியா போன்ற தீவுக்கூட்டங்களும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்திருந்தவைகளே.

4.கீன் (Keane)

மாந்தத் தோற்றத்தின் தொடக்கம் சாவாவினின்றும் விரித்ததே.இங்கிருந்தே மேற்கிலும், வட மேற்கிலும், வடக்கிலுமாக மாந்த இனம் விரிந்து சென்றது.ஆசிய ஆப்பிரிக்க் இனங்கள் யாவும் இந்த மூலத்தின்றும் இனத்த்வைகளே.

5.கிரீம் வில்லியம்ஸ் (Dr.Greame Williams)

இந்திய நாடே அனைத்து உயிரினங்களும் தோன்றிய நாடாக இருந்தது. காட்டு மாந்தன் , நாகரிக வாழ்க்கை முறையைத் தொடங்கியதும் இந்திய நாட்டிலேயே எனலாம்.

6. வெல்ஸ் (Dr.H.G. Wells)

தென்னாப்பிரிக்கா தொடங்கி இந்தியா வரையிலான நிலப்பகுதியே முதல் மாந்த இனத்தின் தோற்ற நிலமாகும். இந்நிலமானது பன்முறை நீரில் மூழ்கியும் , பெரும் நிலங்கள் பாலை நிலங்களாக மாறியும், மீண்டும் அவை காடுகளாகியும், இயற்கையின் சீற்றங்களுக்கு இரையானது.இப்பகுதி இன்றை இந்தியப் பேராழியினுள் புதைந்து கிடைக்கின்றது.

கௌதமன்
26-12-2010, 12:09 PM
பூம்புகார் கடல் அகழ்வாராய்ச்சி

http://1.bp.blogspot.com/_LTDarCYdGZc/S6mueAOV8uI/AAAAAAAABZ4/KPAiCUUOmU4/s320/phompuhar+1.jpg;http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSrrP7wq1SKnLE1-aLRPXqFpYAUPctXW2x_Km3Jh0RW5an2tvLz_g ;http://www.tnarch.gov.in/images/underwater/uw-pic1.gif;

கௌதமன்
26-12-2010, 12:59 PM
ஒரு மொழி தோன்றி, வளர்ந்து பண்படுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளாகும்.ஒரு மொழியினின்று கிளைக்கும் மற்றொரு மொழிக்கு இக்கால அளவு தேவைப்படாது. கிளை மொழிக்கான மூலச்சொற்கள்,முதன் மொழியிருப்பதால், சூழலுக்கேற்ற புதுப்பபுதுச் சொற்களை, முதன்மொழியின் உதவியுடன் கிளைமொழி பெற்றுக்கொள்ளும். உலக மொழிகளை ஆய்வு செய்யுங்கால், எம்மொழியும் முதன்மொழியாய்த் தோன்றி வளர்ந்ததாக அறிய இயலவில்லை. இன்றும் நேற்றும் வழக்கிலிருந்த அனைத்து மொழிகளும், ஏதோவொரு மொழியை முன்மொழியாக் கொண்டு கிளைத்தவைகளே.

இன்று அறியப்படும் ஆங்கிலம்,ஜெர்மன்,பிரெஞ்ச்,ஸ்பானிஷ்,போர்த்துக்கீஸ் உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய மொழிகளும் இலத்தீன் மொழியின் கிளை மொழிகளே. இலத்தீன் மொழியென்பது, கிரேக்கதினின்றும் கிளைத்த மொழியே. கிரேக்கம் என்ற மொழி கி.மு.1500 ஆண்டுகளில் இருந்ததில்லை. செமெட்டிக், அக்காடிய, சுமேரிய, எபிரேய மொழிகளின் கூட்டுக்கலவையே கிரேக்க மொழியாகும். கிரேக்க மொழியின் மூலச்சொற்களில் பெரும்பாலானவை, இந்நான்கு மொழிகளிலேயே காணப்படுகின்றன.

இந்நான்கு மொழிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளாகும். இவை ஏதோவொரு முன்மொழியினின்றும் கிளைத்தவைகளே என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.அம்முன் மொழி யாதென அவர்களால் அறியப்படவில்லை.அம்முன் மொழியை, ‘ஒரே மொழி’ என்றும், ‘அதே மொழி’, என்றும் விவிலியம் கூறுகிறது. அந்த ஒரே மொழி, அதே மொழி, தமிழ் மொழியா?

கீதம்
27-12-2010, 04:53 AM
அந்த ஒரே மொழி, அதே மொழி தமிழ்மொழியா? அறிய ஆவலுடன் உள்ளேன். பெருஞ்சிரத்தையுடன் தொடர்ந்து பகிரும் தகவல்களுக்கு மிக்க நன்றி கெளதமன்.

கௌதமன்
27-12-2010, 12:15 PM
எபிரேயம் (ஹீப்ரூ) என்ற மொழி கி.மு.4000 ஆண்டுகலில் பேசப்படவில்லை, அவ்வாறு ஒரு இனமும் அறியப்படவில்லை. சுமேரியர்கள், கி.மு.3500 ஆண்டுகளில் பேசப்பட்டனர்.அதற்கு முந்திய கால வரலாறு அறியப்படவில்லை. செமெட்டிக் என்ற இன மக்கள், உலகில் ஒரு வெள்ளப் பேரழிவு தோன்றியதற்குப்பிறகு சின்னாற்றங்கரையில் (டைகீரீஸ்) குடியேறியவர்களாக அறியப்படுகின்றனர். இக்குடியேற்றம் கி.மு.10000 ஆண்டுகளில் நிகழ்வுற்றிருக்கலாம் என அறியப்படுகிறது. அக்காடியம் என்ற மொழி , செமிட்டிக் - சுமேரிய மொழிக்கலப்பினால் உருவானதென்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இம்மொழிகளுக்கும் காலத்தே பின்தங்கியதே கிரேக்க மொழியாகும் எனவே, மேற்கத்திய மொழிகள் அனைத்திற்கும் ஒரு கால அளவை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் தமிழ் மொழியின் தோற்றம் எப்போது என்பதை இதுவரையில் எவராலும் கணிக்க இயலவில்லை.

இப்படி ஆதாரங்கள் இல்லாத நிலையில், ஒரு மொழி இயல்பாக எப்படித் தோன்றியிருக்கலாம் என்பதை அறிவியலும், அனுமானமும் கொண்டுத்தான் காண முடியும்.

கோண்டுவானா என்ற கண்டத்தில் வாழ்ந்திருந்த மாந்தன் ஆதி மனிதனாகவிருந்த காரணத்தினால் விலங்குகளைப் போலவே, வெற்றொலிகளையே எழுப்பியிருக்க வேண்டும். விலங்குகளின் ஒலிகள் உள்ளுணர்வின் அடிப்படையில் அமைந்தவைகளாகும். ஒரு குறிப்பிட்டத் தேவையை, விருப்பத்தை அல்லது வெறுப்பை மட்டுமே, விலங்குகள் தெரிவிக்க இயலும். மனித இனத்தைப் போல் அவை நெடுநேரம் கருத்துப்பரிமாற்றங்களைச் செய்து கொள்ள இயலாது. மனிதனுடய பேச்சும் தொடக்கத்தில் விலங்கின் ஒலிகளையொத்தே அமைந்திருக்க வேண்டும். தன் இனத்தானை அழைக்க, விலங்குகளை விரட்ட, அச்சவுணர்வை வெளிப்படுத்த, பகைமையைச் சுட்ட, மகிழ்வினை வெளிக்காட்ட, இன்னல்களை அறிவிக்கவென பலவொலிகளைத் தொடக்க காலத்து மனிதன் பயன்படுத்தினான். இவ்வொலிகள் யாவும் வெற்றொலிகள். பொருளற்றவை. இப்பொருளற்ற ஒலிகள், தொடக்கத்தில் நெடில்களாகவே அமைந்து, பிற்காலத்தில் சுருங்கியிருக்க வேண்டும். பொருளற்ற ஒலிகளே பிற்காலத்தில் சொற்களாக உருவெடுத்தன.
பொதுவாக வினையின்பாற்பட்ட சொற்களே முதலில் தோன்றி, பின்னர் அவை பெயர்ச் சொற்களாக் உருவெடுத்தனவென்பது மொழியியலாரின் கருத்தாகும். உணர்வின் அடிபடையில் தோன்றிய ஒலிகளே ஆ, ஈ, ஊ, ஏ, ஓ போன்ற ஒலிகள். எடுத்துக்காட்டாக தன் இனத்தானையோ அல்லது தன்னால் பராமரிக்கப்படும் விலங்குகளையோ அழைக்க ’ஏ’ அல்லது ’ஏய்’ போன்ற ஒலிகளையும், விரட்டுவதற்கு ’ஓ’ என்ற ஒலியையும் மாந்தன் கையாண்டான்.

இந்த ’ஓ’ என்ற ஒலியே பிற்காலத்தில் ’போ’ என்றும், ஆடுமாடுகளை அழைக்க ’பா’ என்னும் ஒலி பிற்காலத்தில் ’வா’ என்றும் ஆயின. (இன்றும் கிராமப்புறத்தில் மாடுகளை மேய்க்கும்போது பா, பா என்றே ஒலியெழுப்புகின்றனர்.)
இதைப்போலவே,
கா கா என்பது - காக்கா
கூ கூ என்பது - கூகை
மா மா என்பது - மாடு
யா யா என்பது - யாடு
கர் கர் என்பது - கரடி
குர் குர் என்பது - குரங்கு
என்று ஒலிகளைக் கொண்டே பெயர்களுமமைந்தன.

கருத்துப்பரிமாற்றத்தில் ஏற்றுக்கொண்டதையுணர்த்திய ‘ம்’ என்ற ஒலி, பின் ஆம்- ஓம் என்றானது, அதுபோலவே மறுப்புக் கருத்தை ‘ச்’ என்னும் ஒலியால் ச்சீ - சீச்சீ என்றானது.

தொடக்கக்கால வெற்றொலிகள் காலவோட்டத்தில் சொற்களாயின. சொற்களின் கூட்டு வாக்கியங்களாயின.அக்காலக்கட்டத்தில் எழுத்துகளைப் பற்றிய சிந்தனை இருந்ததிலை. வாக்கியங்களின் கூட்டே ஒரு கருத்தை வெளியிட அமைந்த வழியாகும். இவ்வாறாக வாய்ச்சொல் இலக்கியங்கள் தோன்றின. கதைகள் பின்னப்பட்டு அவை வாய்மொழியாகவே அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லப்பட்டன். இவ்வெண்ணங்களையும், கருத்துகளையும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதன் விளைவே எழுத்துகளாகும். எழுத்துகள் தோன்றியபின், இலக்கியங்கள் வரி வடிவில் பதிவு செய்யப்பட்டன.

இப்படி ஒருவர் எழுதியது மற்றவருக்கு புரிய ஒரே சீரான நடை அவசியம் என உணரப்பட்டது. இதற்காக இலக்கண விதிகள் வரன்முறைப்படுத்தப்பட்டன. இதன் பிறகு இலக்கண விதிகளுக்குட்பட்டு இலக்கியங்கள், உரைநடைகள் என்று படைக்கப்பட்டு மொழி வளர்ந்தது.

இயற்கையின் ஒலி நிலைகளிலிருந்து வளர்ந்து வளர்ந்து உருவான மொழியே தமிழ் மொழியாகும். இம்மொழியை எவரும் தோற்றுவிக்கவில்லை. இயற்கையாகத் தோன்றிய தமிழ் மொழியை, தமிழரின் பண்பாடு, நாகரிக, அறிவாற்றல் கொண்ட செயல்முறைகள், மன்னர்களின் பாதுகாப்பு, மக்களிடையேவிருந்த மொழியார்வம் ஆகியன செம்மைப்படுத்தின. இன்றைய அறிவியல் ஆய்வு முறைகளால், தமிழினும் மூப்புடைய மொழி உலகில் நிலைபெற்றிருந்தது என்பதை எவராலும் நிறுவ இயலாது. ஆனால் தமிழே மூப்புடைய மொழி என்பதை நிறுவ முடியும்.

M.Jagadeesan
27-12-2010, 12:54 PM
"மாடு" என்றால் "செல்வம்" என்பது பொருள்.அக்காலத்தில் ஒருவனுடைய*
செல்வ நிலை அவன் பெற்றிருந்த மாடுகளின் எண்ணிக்கையைக்
கொண்டே மதிப்பிடப்பட்டது.எனவே செல்வத்தைக் குறிக்கும் "மாடு"
என்ற சொல்லே அந்தக் கால் நடைக்கும் பெயராயிற்று.

கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை.

என்ற குறளால் இதை அறியலாம்.

கௌதமன்
27-12-2010, 01:24 PM
மாட்டிருந்து செல்வமா?
செல்வத்திலிருந்து மாடா? மாடு என்ற சொல் எப்படி வந்தது?

இத்திரியை தமிழ் மொழி தோன்றியிருக்கக்கூடிய காலத்தை கண்டறியும் விதமாக, இயல்பாய் ஒலியிலிருந்து எவ்வாறு மொழி வந்தது என்பதை பல அறிஞர்கள் எழுதிய நூல்களிலிருந்து திரட்டிய தகவல்களின் அடிப்படையில் எழுதுகிறேன். எழுத்து தோன்றுவதற்கு முன்பாக எவ்வாறு சொல் தோன்றியிருக்கக் கூடும் என்ற சிந்தனையின் அடிப்படையில் அறிஞர்கள் கூறிய செய்திகளையே கூறியிருக்கிறேன்.
செல்வம் என்ற கருத்து மாந்தரினத்தில் தோன்றியிருந்த காலத்துக்கு முன்னரே தோன்றிய உயிரினம் மாடு என்பதும் அது எழுப்புமுமொலி மா என்பதும் ஐயத்துக்கிடமின்றி ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு ஒலியெழுப்பும் உயிரினத்தை மாந்தன் எப்பெயரிட்டு அழைத்திருப்பான் என்ற சிந்தனையே என் பதிவு. திருவள்ளுவர் காலம் என்பது சொல், வாக்கியம், வாய்மொழி உரையாடல், வாய்மொழி இலக்கியம், எழுத்தின் வரி வடிவம், இலக்கியம், இலக்கணம், பின்பு இலக்கணத்தை பின்பற்றி இலக்கியம் என்ற பல காலங்களுக்கு பிறகு வந்தது. தமிழின் தொன்மையென்பது அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது.

இதுபற்றி விரிவாக திரியில் பிறகு தருகிறேன்.

சொல்லாராய்ச்சி மற்றும் வேர்ச்சொற்கள் பற்றிய சிந்தனைகளை தாங்களும் இத்திரியில் பகிர்ந்துக் கொள்ளுமாறுக் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி!

M.Jagadeesan
28-12-2010, 01:15 AM
ஒலியின் அடிப்படையில் சொற்கள் உருவாகிப் பின்னர் அது மொழியாக
வளர்ச்சி பெற்றது என்ற கருத்து ஏற்புடையது என்றாலும்,வினை அடி
யிலிருந்து (Verbal roots) பெயர்ச் சொற்கள் பிறப்பதையே தமிழ் மொழி
யில் இயல்பாகக் காணமுடிகிறது.

பெயர்.................வினையடி
______................__________

விரல்.................விரி
கடல்..................கட
பகல்..................பகு
பறவை..............பற
பரவை...............பர(பரந்து கிடத்தல்)
மரம்..................மர(மரத்துப் போதல்)
உடுக்கை............உடு
துண்டு...............துண்டி

இதுபோல வினையின் அடியாகப் பிறந்த சொற்கள் ஏராளமாக உள்ளன.
சில வினையடிகள் பெயராகும்போது சிறு மாற்றங்களைப் பெறுகின்றன.
வினையடி................பெயர்
_________...............________
காண்......................கண்
நக்கு...................... நாக்கு
மின்...................... .மீன்
வெல்......................வேல்
முகர்.......................மூக்கு
நில்........................ நிலம்
உகு.........................உகிர்
குதி.........................குதிரை

இதுபோல இன்னும் நிறைய சொற்கள் வினையின் அடியாகப் பிறந்து
சிறு மாற்றம் பெற்று பெயர்ச் சொற்களாக உருவாகியுள்ளன.

தாங்கள் கூறியுள்ள "மாடு","கரடி","குரங்கு" ஆகிய சொற்கள் ஒலியின்
அடிப்படையில் பிறந்தவையாக இருப்பின் நம் சங்க இலக்கியங்களில்
அல்லது தொல்காப்பியத்தில் இடம் பெற்றிருக்கவேண்டும்.என் அறிவுக்கு
எட்டிய வரையில் அச்சொற்கள் பிற்காலத்தில் ஏற்பட்டவை என்பது எனது கருத்து.அவை பழைமையான சொற்கள் எனில் சான்று காட்டவும்.

கௌதமன்
28-12-2010, 02:14 PM
இன்று அறியப்படும் மொழிகளில் எம்மொழியும் கி.மு.3000 ஆண்டுகளில் பேசப்படவில்லை என்பதை வரலாறுகள் மெய்ப்பிக்கின்றன். அக்கால அளவில் பேசப்பட்ட மொழிகள் யாவும் இறந்துபட்டன. கி.மு.3000 ஆண்டுகளில் அறியப்பட்டிருந்த மொழிகளில் எபிரேய மொழி மட்டுமே இன்று வழக்கிலுள்ளதாகும். மேற்கத்திய மொழிகளில் எபிரேயம் மட்டுமே வாழ்ந்துக் கொண்டிருப்பதாகக் கருதலாம்.

எபிரேயத்தின் பலநூறு சொற்கள், தமிழின் வேரினையும், மூலத்தையும் கொண்டிருப்பதால் தற்கால மொழி ஆய்வுகள் எபிரேயம், தமிழின் கிளை மொழியே என்பதை உறுதி செய்கின்றன. ( நூலாதாரம் : எபிரேயத்தின் தாய்மொழி தமிழ், ஆசிரியர் : மா.சோ.விக்டர்)

மொழித்தோன்றி, உரைநடைகள் என்ற இலக்கியங்கள் தோன்றிய பிறகே, இலக்கண விதிகள் வகுக்கப்பட்டன. இவைகள் எல்லாம் நடைமுறைக்கு வந்தபோது, அவை வரிவடிவங்களாக உடண்டியாகப் பதிவுச் செய்யப்பட்டன என கூற முடியாது. இவைகள் வாய்மொழியாகவே பல தலைமுறைகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டன. மொழிவளர்ச்சியின் இறுதி நிலையே வரிவடிவங்கள் ஆகும்.

குமரிக்கண்டம் நிலையான நகரிய நாகரிக வளர்ச்சியை கி.மு.20000 ஆண்டுகளிலேயே பெற்றிருந்ததாகப் பாவாணர் கருதுகிறார். அவ்வளர்ச்சிக்கு மொழியறிவும், எண்ணறிவும் தேவப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையில் , எண்களைப் பற்றிய அறிவும் தமிழ்ர்களிடையே உருவாக்கியிருக்க வேண்டும். முறையான வரிவடிவங்கள் தமிழில் எக்காலத்தில் அறியப்பட்டனவென்று கூற முடியாது. எனினும் குமரிக்கண்டம் அழிவுற்றபோது தமிழ்மொழிக்கு வரிவடிவங்கள் இருந்தன என்பதை பூம்புகாரில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மெய்ப்பிக்கின்றன. கடல் கொண்ட பூம்புகார் நகரில் கிடைக்கப்பெற்ற மண்பானை ஓடுகளில் வரிவடிவங்கள் காணப்பட்ட செய்தியினை இரா.மதிவாணன் குறிப்பிடுகிறார். மேலும் அவை சிந்துவெளியில் காணப்பட்ட வரிவடிவங்களே என்றும் கூறுகிறார்.

தமிழ் வரி வடிவத்தின் தோற்றக்காலம் பற்றியும், அதன் முதிர்ந்த நிலை பற்றியும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. வரி வடிவங்களின் முதல் நிலை பட எழுத்துகளே. இப்படவெழுத்துகள், ஒரு குறிப்பிட்ட செய்தியை விளக்குவதாக அமையும். இப்படவெழுத்துக்கள் கோட்டுப்படங்களாக அறியப்பட்டுள்ளன. தமிழகத்தின் சில மலைப்பகுதிகளில் இக்கோட்டுப்படங்கள் அறியப்பட்டுள்ளன. இக்கோட்டுப்படங்களின் வளர்ச்சியே சொற்களை உருவாக்கின. சொற்கள் தனித்தனி எழுத்துகளின் கூட்டமாக அமைந்தன. அவை கருத்தெழுத்து முறையாகக் கருதப்பட்டன.

ஒரு மொழியின் அடிப்படையான ஒலிகளை எழுத்துக்களாகக் கருதினர். இவ்வொலிகள் தந்த வரிவடிவங்கள் முறைப்படுத்தப்பட்டு, பின்னர் எழுத்துக்களாக உருவெடுத்தன. தமிழில் 31 ஒலிகள் வரையறுக்கப்பட்டன. அவ்வொலிகளை விளக்கும் வரிவடிவங்களை கோடிட்டு விளக்கினர். ஒவ்வொரு கோட்டமைப்பும் ஒரு ஒலியைத்தந்தன. இந்த 31 எழுத்துக்களுக்கான தொல் தமிழ் வரி வடிவம் சிந்து வெளியில் காணப்பட்டன. (அண்மையில் நடைபெற்ற தமிழ் செம்மொழி மாநாட்டில் திரு.பர்போலா அவர்களுக்கு சிந்துவெளி எழுத்துக்களை ஆராய்ந்ததற்கு தமிழக அரசு விருது வழ்ங்கியமையை நினைவிற்கொள்க!)

http://katpahan.com/wp-content/uploads/2010/07/4.jpg ;http://katpahan.com/wp-content/uploads/2010/07/2.jpg

சிந்துவெளி நாகரிகக்காலம், கி.மு.7500 என இந்திய அரசு அண்மையில் அறிவித்து பூம்புகார் நகர அழிவும், சிந்துவெளிக் குடியேற்றமும் அடுத்தடுத்த நிகழ்வுகளாதலாலும் பூம்புகாரில் அறியப்பட்ட வரி வடிவங்களே சிந்துவெளியில் அறியப்படுவதாலும், இக்கால அளவுக்கு இணையான வரிவடிவங்கள் உலகின் பிற மொழிகளில் காணப்படவில்லையென்பதாலும், வரிவடிவங்களை உருவாக்கி உலகிற்கு அறிமுகம் செயதவர்களும் தமிழர்களே என்று கருதலாமா?

கௌதமன்
28-12-2010, 02:49 PM
தாங்கள் கூறியுள்ள "மாடு","கரடி","குரங்கு" ஆகிய சொற்கள் ஒலியின்
அடிப்படையில் பிறந்தவையாக இருப்பின் நம் சங்க இலக்கியங்களில்
அல்லது தொல்காப்பியத்தில் இடம் பெற்றிருக்கவேண்டும்.என் அறிவுக்கு
எட்டிய வரையில் அச்சொற்கள் பிற்காலத்தில் ஏற்பட்டவை என்பது எனது கருத்து.அவை பழைமையான சொற்கள் எனில் சான்று காட்டவும்.

சிந்திக்கத் தூண்டும் பின்னூட்டமிட்ட நண்பருக்கு என் உளபூர்வமான நன்றிகள். தமிழின் மீது ஆர்வம் இருக்கும் அளவுக்கு தமிழிலக்கிய அறிமுகம் இல்லாதவன் நான். கல்லூரிகளில் தமிழை ஒரு பாடமாகக்கூட படிக்கும் வாய்ப்பு கிடைக்காதவன். அதனால் தமிழ் இலக்கியத்தில் மாடு, கரடி போன்ற பெயர்கள் உள்ளனவா என்பதற்கு என்னால் உண்மையிலேயே பதில் சொல்ல முடியாது.

ஆனாலும் என் அறிவுக்கெட்டிய சில கருத்துகளைக் கூற விரும்புகிறேன்.தயவு செய்து நண்பர் விவாதம் எனக் கருத வேண்டாம்.
இப்போது நமக்கு கிடைத்துள்ள தமிழ் இலக்கியங்கள் எல்லாம் முழுமையான சங்க இலக்கிய நூல்கள் என்று கூற முடியுமா? தமிழ்த்தாத்தா உ.வே.சா. முதலானோர் தேடித்தேடி சேகரித்த பொக்கிஷங்கள் அவை. ஆனாலும் முதல், இடை, கடை சங்க நூல்கள் முழுதாக நமக்குக் கிடைத்தனவா? தொல்காப்பியரின் இலக்கண விதிகளில் பல கடைச்சங்க இலக்கியங்களில் மீறப்பட்டுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர் (நூலாதாரம்: தொல்காப்பியச் சிந்தனைகள் ஆசிரியர் : மா.சோ.விக்டர்).ஆகவே சங்க இலக்கியங்களில் ஆதாரம் தேட முயன்றாலும் எல்லா நூல்களும் நமக்கு கிடைக்கவில்லையென்பதே உண்மை. குறிப்பாக தொல்காப்பியத்துக்கு முந்தைய தமிழ் இலக்கிய நூல்கள் கிடைக்கப் பெறவில்லை என்பது வருத்தம் தரக்கூடிய செய்தி.

மாடு, கரடி என்ற சொற்கள் எப்படித் தோன்றியிருக்கலாம் என்ற சிந்தனையே என் முந்தையப் பதிவு. இப்பெயர்களை வினையினடி பிறந்த சொற்களாகக் கருத முடியாது என்பதே என் பணிவானக் கருத்து.

தங்களின் மேலான பின்னூட்டத்துக்கு என் நன்றியை மீண்டும் கூறிக்கொள்கிறேன். தமிழ் கற்க விரும்பும் மாணவன் என்கிற முறையில் என் பதிவில் ஏதாகிலும் பிழையிருந்தால் ஒரு ஆசானாகவிருந்து பிழை களையவுதவுமாறுத் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

கௌதமன்
28-12-2010, 04:28 PM
நண்பருக்கு!

தங்கள் கேள்வி உண்மையிலேயே சிந்தனையைது தூண்டியது. அதன் விளைவாக குரங்கு என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் உள்ளதா என்றத் தேடலின்போது கிடைத்தப் பாடல் இது.கம்ப இராமாயணத்திலும் ’குரக்கினத்தரசு’ என்று வாலி வதைப் படல்த்தில் சொல்லப்பட்டிருந்ததாக சிறு நினைவு. (மன்னிக்கவும்! பள்ளிக் காலத்தில் படித்தது சரியாக நினைவில் இல்லை)

புறநானூறின் 378ம் பாடல்

தென் பரதவர் மிடல் சாய,
வட வடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்து வேல் தடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்,
நற்றார்க் கள்ளின், சோழன் கோயில்,
புதுப்பிறை யன்ன சுதை செய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அது கண்டு.
இலம்பொடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்,
விரல்செறி மரபின செவித் தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின் விரற்செறிக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொ ழிந்தாந்தாஅங்கு,
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் என்னும் வள்ளுவப்பெருந்தகையின் வாக்கின்படி இத்திரிக்கு தூண்டுகோலாக விளங்கும் நண்பர் ஜெகதீசன் அவர்களுக்கு நன்றி!

கௌதமன்
29-12-2010, 12:25 PM
நடுத்தரைக் கடல் நாடுகளில், குமரிக்கண்ட நகர அழிவையடுத்து, தமிழர்களின் குடியேற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். எனினும் பூம்புகாரிலும் சிந்துவெளியிலும் காணப்பட்ட தமிழ் வரிவடிவங்கள், மெசபட்டோமியாவில் இதுவரைக் கிடைக்கவில்லை. மெசபட்டோமியப் பகுதிகளில் காணப்படும் வரிவடிவங்கள் முதன்முதலில் சுமேரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவையாகும். சுமேரியர்கள் கி.மு.5000 ஆண்டுகளில் சிந்துச்சமவெளியிலிருந்து புலம்பெயர்ந்து சென்றிருக்கலாம். சுமேரிய எழுத்துமுறை கி.மு.4000 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டவை என ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். கி.மு.10000 ஆண்டுகளில் தமிழரின் முதல் குடியேற்றமும் நிகழ்ந்துள்ளதைக் கருத்திற்கொண்டு இடைப்பட்ட 5000 ஆண்டுகளில், மெசபட்டோமியாவின் மொழிகள் பற்றி ஆய்வுச் செய்யச் சரியானச் சான்றுகள் கிடைக்கவில்லை என அறிவியலார் கூறுகின்றனர்.

சுமேரியர்கள் வரிவடிவ எழுத்துமுறையை மெசபட்டோமியவில் அறிமுகம் செய்தவர்களாவர். சிந்துவெளியில் அவர்கள் அறிந்திருந்த தமிழ் வரிவடிவங்களை, அதே முறையிலும் சில மாற்றங்களுடன், மெசபட்டோமியாவில் கையாண்டனர். ஆப்பு எழுத்துமுறையை கி.மு.4000 ஆண்டுகளில் சுமேரியர் நடைமுறைப்படுத்தினர் என்றாலும் தமிழ் வரிவடிவங்களும், அவர்களது குறிப்புகளில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக கில்கமேஷ் என்ற பெயர்ச்சொல், சிந்துவெளின்யின் தமிழ் எழுத்துகளாலாயே சுமேரிய மொழியில் அறியப்பட்டுள்ளது. சிந்துவெளியின் தமிழ் வரிவடிவங்கள், சுமேரிய வரிவடிவங்களில் பெருமளவில் அறியப்பட்டுள்ளன. இவ்வரிவடிவங்களையே அக்காடிய மொழியில் பயன்படுத்தினர். அக்காடிய , செமெட்டிக், உகாரிய மொழியில் சுமேரியரின் எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டுள்ளதென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போனீசியர்கள் எழுத்துச் சீர்திருத்தம் செய்து ஒரு புதிய முறையைக் கண்டனர். இது பிராமி எனப்பட்ட தமிழின் புதிய வரி வடிவத்தையொத்ததே என்பது இரா.மதிவாணன் போன்ற ஆய்வாளர்கள் முடிவாகும். போனீசியர்களின் புதிய எழுத்துமுறை எபிரேய மொழி முதலில் ஏற்றுக்கொண்டது. விவிலியத்தின் பெரும்பகுதிகள் இம்முறைகளில் எழுதப்பட்டவைகளே. இதே முறையை கிரேக்கர்களும் ஏற்றுக்கொண்டனர் என்று எரடோட்டஸ் கூறுகிறார். போனீசியர்கள் தாங்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகளில் எல்லாம் இம்முறையை அறிமுகம் செயதனரென்றும் மேலும் கூறுகிறார். காட்மஸ் என்ற போனீசியரே இம்முறையைக் கிரேக்க நாட்டில் அறிமுகம் செய்தாரென்பதும் எரடோட்டஸின் குறிப்புகளிலிருந்து தெரிய வருவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். அத்தகைய போனீசியர்கள் தமிழ் இனத்தவரா?

பாலகன்
29-12-2010, 01:34 PM
இந்த திரியில் உள்ள அனைத்து விரிவுரைகளையும் படித்துவிட்டேன். நண்பர் கெளதமனின் இந்த ஆராய்ச்சிக்கு எனது நன்றிகள். லெமூரியாவை பற்றிய எனது நெடுநாளைய பல கேள்விகளுக்கு இந்த திரியில் விடைகிடைக்கும் என்று நம்புகிறேன்.

நண்பர் ராஜ் அவர்களுக்கும் எனது நன்றிகள்

தொடருங்கள் கெளதமா!

M.Jagadeesan
30-12-2010, 01:28 PM
சங்க இலக்கியத்திலிருந்து சான்று காட்டியமைக்கு நன்றி.தங்களுடைய
தமிழார்வமும்,ஆய்வுத் திறனும் மெச்சத்தக்கது.கம்பர் வாழ்ந்த காலம்
பன்னிரண்டாம் நூற்றாண்டு. இராமாயணத்தில்,"குரங்கு" என்ற சொல் பல இடங்களில்
வந்துள்ளது என்பதை நான் அறிவேன்.ஆகையால்தான் தொல்காப்பியத்
திலிருந்தும்,சங்க நூல்களில் இருந்தும் சான்று கேட்டேன்.
தமிழ் மொழியில் வினையின் அடியாகவும், ஒலியின் அடியாகவும் பிறக்
காத சொற்கள் பல உள்ளன.உதாரணமாக தலை,கால்,செவி,வாய். நான்,
நீ, நீர்,ஒளி,இருள் போன்றவை. "மாடு","கரடி","குரங்கு" போன்ற சொற்
களும் இத்தகையனவே என்பது என் கருத்து.
நாயின் குரைப்பு ஒலிக்கும் அதன் பெயருக்கும் என்ன தொடர்பு உள்ளது?
பூனையின் கத்தலுக்கும் அதன் பெயருக்கும் என்ன தொடர்பு உள்ளது?

மொழியியல் வல்லுனர்கள்தான் இதற்குத் தக்க பதில் கூறமுடியும்.

கௌதமன்
30-12-2010, 01:40 PM
மொழியியல் வல்லுனர்கள்தான் இதற்குத் தக்க பதில் கூறமுடியும்.

தங்களின் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் முதற்கண் நன்றி!

நீங்கள் குறிப்பிட்ட சொற்களுக்கு பாவாணரின் நூற்களில் பதில் உள்ளனவா எனத் தெரியவில்லை? தேடிப்பார்ப்போம் உங்களோடு நானும்!
நன்றி!

கௌதமன்
02-01-2011, 01:59 PM
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறியப்பட்ட சிந்துவெளி நாகரிகமும், ஈராக் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளும்

ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதை உணர்த்தின. மொகஞ்சதாரோ நகரின் ஊர் அமைப்பு, பாபிலோன் நாட்டின் ஊர் (பெயரைக் கவனியுங்கள் நகரத்தின் பெயர்- ஊர்)

நகரை ஒத்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கட்ச் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பல சிந்துவெளிப்பொருட்கள், ஊர்

நகரிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஊர் நகரை ஆய்வு செய்தோர், அவை சுமேரியர் என்ற இனத்தாரின் முயற்சியில், கி.மு.3500 ஆண்டுகலில்

உருவாக்கப்பட்ட நகரமே எனக்கண்டறிந்தனர். அம்மக்கள் பயன்படுத்திய வரி வடிவங்களும் கண்டெடுக்கப்பட்டு, அவை படிக்கப்பட்டன. அவை முழுமையான பொருளில்

இதுவரை படிக்கப்படவில்லையென்றாலும்கூட படிக்கப்பட்ட வரிவடிவங்கள் சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட வரிவடிவங்களை ஒற்றியேக் காணப்பட்டன.

இதனடிப்படையிலேயே சுமேரியர் - சிந்துவெளி மக்கள் ஆகியோர், ஓரின மக்களேவென்று, முதன்முதலில் ஈராஸ் பாதிரியார் அறிவித்தார்.



தமிழகத்திருந்தவர்கள் தமிழகத்திலிருந்து சிந்துவெளிக்கு எப்போது சென்றனர்? தமிழரென அறியப்படும் சுமேரியர் மேலை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்ததற்கான காரணியங்கள்

என்ன? வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மேலை நாட்டு மொழிகளில் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள் எவ்வாறு இடம் பெற்றன?தமிழர்களின் வரலாற்றைத் தோண்டியெடுக்க

வேண்டுமானால், குமரிக்கண்டக் கொள்கைகளையும், தமிழரின் வெளிநாட்டுப்பரவல் என்ற இருக் கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்டால்தான் முடியும்.



குமரிக் கண்டம் எப்போது நிலை பெற்றிருந்தது?

எக்காலத்தில் வெள்ளம் அக்கண்டத்தை அழித்தது?

தப்பிப் பிழைத்த தமிழர்கள் எங்கேச் சென்றனர்?

எந்த நாடுகளில் குடியேறினர்?



என்ற நான்கு கேள்விகளுக்கும், தெளிவான விடை கிடைத்து விட்டால், தமிழ் மொழியே உலகின் முதன்மொழியென்பதும், தமிழரே உலகின் முதன் மாந்தரென்பதும்

தெள்ளத்தெளிவாக நிறுவப்பட்டு விடும். கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?

கௌதமன்
04-01-2011, 02:34 PM
தமிழிலக்கியங்களில் குமரிக்கண்டம்

குமரிக்கண்டம் பற்றித் தமிழில் சொல்லப்பட்டுள்ள செய்திகளை வரலார்று செய்திகளாக்க் கருத இயலாது. தொன்மச் செய்திகளாகவும்,

குமரிக்கண்டத்தைப் பற்றிய குறியீடுகளகவுமே அங்கிங்கு இலக்கியங்களில் காணப்படுகிறது. குமரிக்கண்டம் அழிவுபட்டபோது தப்பிப்பிழைத்த

மாந்தரினம் எழுதியக் குறிப்புகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் இவ்வழிவு பற்றிய செவிவழி செய்திகளை பிற்கலத்தில் இலகியத்தில்

தமிழர்கள் பதிவுச் செய்திருக்கக்கூடும். வெறும் கற்பனையாக இச்செய்திகளைக் கருத முடியாது. ஏனென்றால் அங்ஙனம் எழுதுவதற்கு எந்தவித

உள்நோக்கமும் பண்டையத் தமிழ்ப்புலவர்கள் கொண்டிருக்க முடியாது.


சிலப்பதிகாரம் குமரிக்கண்டம் அழிவுப்பற்றிய செய்திகளைக் கூறினாலும் குமரிக்கண்டம் பற்றிய பிறச்செய்திகள் யாவும் முரண்பாடுகள்

கொண்டவையாக உள்ளன. குமரிக்கண்டத்தின் எல்லைகளும், பரப்பளவும் பற்றிய செய்திகள் தெளிவாக இல்லை.


பஃறுளியாறும் குமரியாறும் குமரிக்கண்டத்தின் வட மற்றும் தென் பகுதிகளில் பாய்ந்தோடின என்றும், இவ்விரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட

தொலைவு 700 காதங்கள் ( சுமாராக 7000 மைல் ) என்றும் சொல்லப்பட்டுள்ளதால் இன்றைய விந்திய மலைத் தொடங்கி, தென்முனை

வரையிலான பகுதியில் குமரிக்கண்டம் நிலைப்பெற்றிருந்தது எனவும் கருத இடம் உண்டு. 7, 70, 700 போன்ற எண்கள் ‘பன்மடங்கு’ என்ற

கருத்திலேயே தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன். எனவே 700 காதத் தொலைவு என்பதை நீண்ட தொலைவு எனக்கருதுவதே

பொருத்தமாயிருக்கும். [ சிறுவர்களுக்கும் சொல்லும் கதைகளில் ஏழு கடல் தாண்டி, ஏழு மலைத் தாண்டி என்றும் ஈரேழு உலகம் என்றும்

கற்பனையில் கூட ஏழு என்ற எண்ணைக் குறிப்பிடுகிறோம். ஆகவே ஏழு என்பதை ’பல’ என்பதன் தொன்மக் குறீயீடாகத்தான் எண்ண

வேண்டியிருக்கிறது ]

குமரிக்கண்டமானது,

1) ஏழ்தெங்க நாடு

2) ஏழ்மதுரை நாடு

3) எழ்முன்பாலை நாடு

4) ஏழ்பின்பாலை நாடு

5) ஏழ்குன்ற நாடு

6) ஏழ்குணகரை நாடு

7) ஏழ்குறும்பனை நாடு

என்றவாறு பிரிக்கப்பட்டிருந்தனவாக செய்திகள் கூறுகின்றன். இக்குறிப்புகளிலிருந்து குமரிக்கண்டம் என்பது ஒரு பேரரசாகவும்மேற்குறிப்பிட்ட

நாடுகள் சிற்றரசுகள் போலவும் வகுத்து ஒரு மன்னனின் கீழ் ஆட்சி நடை பெற்றிருக்க வேண்டும்.


பஃறுளி ஆறு :

பஃறுளி ஆறு என்பது பல் துளி ஆறு என்பதால் பல சிற்றாறுகளைக் கொண்ட பேராறு எனக்கொள்ளலாம். பஃறுளி வளமான நிலங்களை தனது

பாய்ச்சலால் பெற்றிருக்க வேண்டும் என்பதை ‘ நீர்மலிவானென மலிந்த’ என்ற சொற்களால் அறியப்படலாம்.



மலைகள்:

பன்மலையடுக்கம் என்ற சொல் சிலப்பதிகாரத்தில் அறியப்படுகிறது. இதிலிருந்து குமரிக்கண்டதிதிருந்த மலை நீண்ட தொடராக அமைந்திருந்தது

எனக்கருதலாம். மிக உயர்ந்த மலை என்ற பொருளில் மேரு என்று சொல்லப்பட்டிருக்கலாம் அல்லது சுமேரு என்றும் சொல்லப்பட்டிருக்கலாம்.

’சு ’ என்ற எழுத்து தமிழில் ஏழு என்ற எண்ணை குறிப்பதால், ஏழு மலைகள் என்ற பொருளிலிலும் சொல்லப்பட்டிருக்கலாம். பொதுவாகக்

குமரிக்கண்டத்தின் விளக்கங்கள் யாவும் ஏழு என்ற எண்ணை அடிப்ப்டையாகக் கொண்டே சொல்லப்பட்டிருக்கின்றன.


[ வேங்கட மலையை ஏழுமலை என்று குறிக்கப்படுவது இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது. அங்கு ஏழு மலைகள் தான் உள்ளனவா அல்லது பல

மலைகளின் அடுக்கு என்பதன் குறியீடாக ஏழுமலை என்று குறிப்பிடப்படுகிறதா என்பதை நண்பர்கள் யாரேனும் விளக்கினால் நன்றாகயிருக்கும் ]


சிலப்பதிகாரப்பாடல் - நெடியோன் குன்றமும் தொடியோன்

மணிமேகலைப்பாடல் - பொன்றிகழ் நெடுவரை யுச்சித் தோன்றி [ நெடுவரை என்பது உயர்ந்து நிற்கும் மலையைக் குறிக்கும் ]


மேரு மலை பற்றிய இலக்கிய செய்திகள்

சிலப்பதிகாரப்பாடல் : இடைநின் றோங்கிய நெடுநிலை பௌவமும் மேருவில்

மணிமேகலைப்பாடல் : 1) சூழ்கடல் வளை இய வாழ்யங் குன்றத்து நடுவு நின்ற மேருக் குன்றமும்

2) மேருக் குன்றத்து தூரு நீர்ச் சரவண


போன்றப் பாடல்கள் மேரு என்பது உயரமான மலைகள் என்ற பொதுப் பெயராலாயே அழைக்கப்பட்டுள்ளன. என்வெ குமரிக்கண்டத்தில் உள்ள

பன்மலையடுக்கம் என்ற மலையும் மேரு என்றோ சுமேரு என்றோ அழைக்கப்பட்டிருக்கலாம். பிற்காலத்தில் குமரிக்கண்டம் அழிவுப்பட்ட பிறகு

மேரு மலை என்பது தொன்மக் கதைகளில் ஒரு குறியீடாகவும் குறிக்கப்பட்டிருக்கலாம். [ இந்து புராணங்களில் வரும் மேரு மலை பற்றி

குறிப்புகளை இத்தருணத்தில் சிந்தனையில் கொள்க].

Hega
04-01-2011, 03:15 PM
குமரிக் கண்டம் எப்போது நிலை பெற்றிருந்தது?
எக்காலத்தில் வெள்ளம் அக்கண்டத்தை அழித்தது?
தப்பிப் பிழைத்த தமிழர்கள் எங்கேச் சென்றனர்?
எந்த நாடுகளில் குடியேறினர்?



என்ற நான்கு கேள்விகளுக்கும், தெளிவான விடை கிடைத்து விட்டால், தமிழ் மொழியே உலகின் முதன்மொழியென்பதும், தமிழரே உலகின் முதன் மாந்தரென்பதும்
தெள்ளத்தெளிவாக நிறுவப்பட்டு விடும். கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?

அவசியமான அருமையான ஆய்வுகள் கௌதமன் அவர்களே...

இக்கேள்விகளோடு மட்டுமல்ல இன்னும் சில பல கேள்விகளுக்கும் விடை அறிய நானும் ஆர்வமாக இருக்கிறேன். தமிழ் மொழி மற்றும் பண்டைய பூகோள அமைப்பினை குறித்தும் அறிய ஆவலோடு இருக்கிறேன்.

கடற்கோளினால் குமரிகண்டம் பிளவு பட்டிருக்கலாம் என்பதும். அதே கடற்கோளினால் பூமிப்பந்தின் கண்டங்கள் நகர்ந்து சென்றதாகவும் அப்படி சென்ற கண்டங்களில் வாழ்ந்த ஜீவராசிகள் மனிதர்கள் உட்பட இன்று மொழியால் வேறுபட்டு சென்றிருப்பதாகவும் அறிந்திருக்கிறேன்.

ஏபிரேய கீப்ரு மொழிகளோடே ஆதி மொழியாய் தமிழ் மொழி யும் இருந்திருக்கவே வேண்டும்.. தமிழரா முதல் மாந்தர் என அறிய இன்னும் தேடல் தீவீரப்படுத்தப்பட வேண்டுமோ:fragend005:...

உங்கள் முயற்சி அரியது.. தேடல்களை ஊக்குவிக்க வல்லது
அதற்கு என் பாராட்டுக்கள் .. தொடருங்கள்

கௌதமன்
05-01-2011, 12:10 PM
குமரியாறு

பஃறுளியாற்றைப் போல் குமரியாறும் குமரிக்கண்டத்தில் பாய்ந்து வளப்படுத்துகிறது. குமரியாறு பாய்ந்த நிலமே குமரிக்கண்டம் எனப்பட்டது.

தெற்குப்பகுதிகளை குமரியாறு வளப்படுத்தியது. குமரி என்பதற்கு வளமை என்றே பொருள் கொள்ளலாம்.


குமரி என்ற அரசியே முதன்முதலில் அக்கண்டத்தை ஆண்டதால் குமரிக்கண்டம் என்ற பெயர் தோன்றியதாகவும் ஒரு கருத்து உண்டு.

குமரிக்கண்டத்தில் குமரியாறு ஒரு தெய்வமாக வணங்கப்பட்டிருக்க வேண்டும். மணிமேகலைப் பாடலான, ‘ குமரி பாதங் கொள்கையில் வணங்கி’

என்பதிலிருந்து அறியலாம்.


ஏழ்மதுரை நாடு


மதுரை என்ற நகரமே,குமரிக்கண்டத்தின் தலைநகராயிருந்ததென்று இலக்கிய வாயிலாக அறியலாம். குமரிக்கண்ட நகரமான மதுரையின்

பெயர்க்காரணம் பற்றி இரு விதமானக் கருத்துகள் உள்ளன. ஒன்று ஆழமான சிந்தனையின் வெளிப்பாடாகவும் மற்றொன்று எளிமையான

கருத்தையும் கொண்டுள்ளது.


மதுரை என்ற பெயருக்கு பெயர்க்காரணம் அறிய முற்பட்டால், பாண்டியர்கள் நிலவை வழிபட்டு வந்ததாகவும், நிலவுக்கு மதி என்ற பெயரும்

இருந்ததால் தங்கள் தலைநகரை மதிறை அதாவது மதி உறையும் ஊர் எனப்பெயரிட்டதாகவும், மதிரை என்ற சொல்லே மதுரை

எனத்திரிந்ததாகவும் கூறுவர். தமிழர்கள் தங்கள் காவல் தெய்வமாக நிலவை வைத்துக்கொண்ட செய்தி, தமிழர்களின் குடியேற்ற நாடுகளிலும்

அறியப்பட்டன.


நிலவை ஈர் என்ற சொல்லாலும் தமிழர்கள் அழைத்தனர். ஒரு மாதத்தின் கால அளவை இரு பகுதிகளாகத் திங்கள் ஈர்வதால், நிலவுக்கு ஈர் என்ற

பெயரும் இருந்தது எனலாம். எபிரேய மொழியில் ஈர் என்ற சொல் திங்களையும், மாதத்தையும் குறித்த ஒரு சொல்லாகும். ( தமிழிலும் திங்கள்

என்ற சொல் இதே பொருளில் சொல்லப்படுவதைக் காண்க ). ஈர் என்ற நிலவை இறைவனாகக் கருதியதால் , ஈர்கோ என அழைத்தனர். இதுவே

எரிக்கோ (Yeriko) என எபிரேய மொழியில் திரிந்திருக்கக் கூடும். எரிக்கோ என்பது திங்களை வழிப்பட்ட ஊரைக் குறிப்பதாகும்.

இவ்வாறாக மதிகுலத்தைச் சார்ந்த பாண்டியர்கள், மதியை போற்றும் வகையில் தங்கள் தலைநகருக்கு மதுரை என்று பெயர் சூட்டியதாக் ஒரு

கருத்தும் உண்டு.


குமரியாற்றங்கரையிலிருந்து மதுரை, வயல்களால் சூழப்பெற்ற நன்செய் நிலங்களைக் கொண்டிருந்ததாகவும், மருத நிலத்தின் ஊர், மருதை

எனப்பட்டதாகவும் ஒரு கருத்தும் உண்டு. மதுரை என்பது மருதையின் பிற்காலச் சொல்லே என்பாரும் உளர். ( இன்று நாட்டுப்புறத்தில்

மதுரையை மருதை என்று கூறுவதைக் காணலாம்).



மதுரை, குமரிக்கண்டத்தின் தலைநகராகவும், ஏழ்மதுரை நாடென்ற மாநிலத்தின் தலைநகராகவும் இருந்திருக்கலாம். குமரிக்கண்டம்

அழிவுற்றப்பிறகு, தமிழர்கள் தமது முன்னோரின் தலைநகரத்தின் பெயரையே, தற்காலத் தமிழகத்தில் பாண்டிய நாட்டின் தலைநகருக்கு

வைத்தனர் என்று நம்பப்படுகிறது.