PDA

View Full Version : கிளி ஜோசியம்



M.Jagadeesan
20-11-2010, 02:52 PM
சிலசில ஆண்டுகள் முன்னம்
பலரும் போற்றும் வண்ணம்
வாழ்ந்து வந்தவன் நான்-இன்று
வாழ்ந்து கெட்டவன் நான்.

என்னுடைய வாழ்வே என்னுடைய செய்தி
எல்லோரும் கேட்பதற்கே என்கதையை உரைக்கின்றேன்.

உணவுக்கடை ஒன்று வைத்தேன்
உளுந்துவடை பொங்கல் மற்றும்
மணங்கமழும் நெய் தோசை
மல்லிகைப்பூ இட்லி என்று
கணக்கின்றி பொது மக்கள்
கடன் சொல்லித் தின்றதனால்
பணக்கஷ்டம் வந்தது ஐயா
படுத்தது ஐயா வியாபாரம்.

மக்கள் நோய் தீர்த்திடவே
மருந்துக் கடை வைத்தேன்
சிக்கல் எதுவும் இன்றி
சில காலம் சென்றதையா
என்கடை மருந்துண்டு ஏழையொருவன் கண்மூட
போலி மருந்தென்று போலீஸ் என்னை விலங்கிட
சிக்கல் வந்ததய்யா கடை சீரழிந்து போனதையா.

பல்லாயிரம் செலவிட்டுப் பலசரக்குக் கடைவைத்தேன்
பொல்லாப் பணியாளர் பொறுப்பிலே விட்டுவைத்தேன்
கல்லாவில் எல்லோரும் கைவைத்த காரணத்தால்
கலகலத்துப் போனதையா பலசரக்கு வியாபாரம்.

இனியொரு தொழில் வேண்டாம்
இருக்கின்ற பணத்தை மட்டும்
பெருக்கிடுவோம் என்று எண்ணி
சிக்கல் இல்லாத சீட்டுக் கம்பெனி ஒன்றில்
பிக்செட் டிபாசிட்டில் போட்டு வைத்திட்டேன்.
பட்ட காலிலே மீண்டும் பட்டதையா
கெட்ட குடியே மீண்டும் கெட்டதையா
குருவிபோல் சேர்த்திட்ட பணத்தை எல்லாம்
பருந்தெடுத்துப் போனதுபோல் பைனான்ஸ் காரன்
இரவோடு இரவாக ஓடிவிட்டான்
இருக்கின்ற நம்பிக்கையும் தகர்ந்ததையா.

செய்வது அறியாமல் சேருமிடம் தெரியாமல்
கால்போன போக்கினிலே போகின்ற வேளையிலே
ஆலமரத்தடியில் அழகான கூண்டு ஒன்றில்
கோல மொழிபேசும் கிளிஒன்றை வைத்தொருவன்
ஜோதிடம் சொல்லக் கண்டு
அவனிடம் நான் சென்று
ஐயா என்பெயர் ஆடியபாதம் என்பார்
செய்யாத தொழிலில்லை, செய்வதற்கு ஏதுமில்லை
தொட்ட தொழிலெல்லாம் துலங்கவில்லை ஐயா
நட்டம் வந்ததையா, நடுத்தெருவில் நிற்கின்றேன்
என்ன தொழில் செய்தால் ஏற்றம் வருமென்று
சொன்னதைச் சொல்லும் கிளியிடம் கேட்டுரைப்பீர்
எனக்கேட்க, ஜோசியனும்
கிளியை நோக்கி
"வாடா ராஜா வந்திடுவாய் வெளியே
ஆடியபாதம் என்ற அழகான பேருக்கு
தேடியொரு சீட்டைத் தேர்ந்தெடுப்பாய்"
எனச் சொல்ல
அழகான கிளியொன்று வெளியே வந்ததையா
அலகால் கவ்வியொரு சீட்டை எடுத்ததையா
சீட்டைப் பிரித்துப் பார்த்திட்ட ஜோசியனும்
சிரித்திட்டான் பலமாக சிரித்திட்டான் எனக்காக

'ஐயா
தக்கதொரு வழிசொல்வேன் தலைவணங்கிக் கேட்டிடுவீர்
மிக்கபுகழ் உண்டாகும் மேதினியில் உந்தனுக்கு
மூலதனம் வேண்டாம், முதலீடு தேவையில்லை
காலம் முழுமைக்கும் காசுபணம் பார்த்திடலாம்
கல்லூரிக் கட்டிடங்கள், கல்யாண மண்டபங்கள்
எல்லாமே கைகூடும்,எண்ணியபடி நடக்கும்
உல்லாசம் எல்லாமே உன்மடியில் காத்திருக்கும்
பெண்டு பிள்ளைகள் பெரியோர்கள் எல்லாமே
கண்டு வணங்கிடுவர், காலில் விழுந்திடுவர்"

"ஜோசியரே அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?'
எனக்கேட்க,
"காவிஉடை அணிந்தே, கமண்டலத்தை ஏந்திடுவீர்
தரையில் விழுமளவு தாடி வளர்த்திடுவீர்
நெற்றியில் திருநீறும், நடுவில் குங்குமமும்
கற்றைமுடி வளர்த்து, கழுத்தில் கொட்டையும்
தாங்கி
சாமியாராகப் போவதே சரியான வழியென்று
நான் சொல்லவில்லை ஐயா,கிளிசொன்ன வழி" என்று
பாவாடைச் சாமியாரின் படம் எடுத்துக் காட்டிட்டான்.

பாலகன்
20-11-2010, 03:31 PM
இப்ப சாமீயாராக ஆகனும்னாலும் நிறைய சரக்கிருக்கனும் :D அப்ப தான் பிசினஸ் நல்லா ஓடும்.

வாழ்க்கையில் எல்லாம் இழந்த ஒருவன் சாமீயாராவது இந்த காலம். எல்லாம் துறந்த ஒருவர் சாமீயாராக ஆனது அந்தக்காலம் :)

பாராட்டுக்கள்

Ravee
20-11-2010, 05:15 PM
ம்ம்ம், பாவம் முதலாளியாய் இருக்கத்தெரியாத காரணத்தால் கடையில் போட்ட முதல் அவரை விட்டு போய் விட்டது. இனி பாவாடைசாமிக்கு சீடராகி என்ன செய்வார் பாவம். :lachen001:

வானவர்கோன்
20-11-2010, 07:03 PM
வாழத் தெரியாதோருக்கு
ஆண்டி வேடமே
பிரமாதம்!
:medium-smiley-088:

M.Jagadeesan
20-11-2010, 07:27 PM
ம்ம்ம், பாவம் முதலாளியாய் இருக்கத்தெரியாத காரணத்தால் கடையில் போட்ட முதல் அவரை விட்டு போய் விட்டது. இனி பாவாடைசாமிக்கு சீடராகி என்ன செய்வார் பாவம். :lachen001:

நன்றி ரவி

M.Jagadeesan
20-11-2010, 07:28 PM
வாழத் தெரியாதோருக்கு
ஆண்டி வேடமே
பிரமாதம்!
:medium-smiley-088:

நன்றி வானவர்கோன் அவர்களே

கீதம்
20-11-2010, 11:08 PM
ஆடியபாதத்தின்
ஆடிப்போன வாழ்வுமிங்கே
ஆடும் மஞ்ஞையின் அழகாய்
தமிழாடிய கவியின் வடிவாய்
என் மனமாடி நிற்கிறதே,
என் மனமாடியில் நிற்கிறதே!

பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
21-11-2010, 02:55 AM
ஆடியபாதத்தின்
ஆடிப்போன வாழ்வுமிங்கே
ஆடும் மஞ்ஞையின் அழகாய்
தமிழாடிய கவியின் வடிவாய்
என் மனமாடி நிற்கிறதே,
என் மனமாடியில் நிற்கிறதே!

பாராட்டுகள் ஐயா.

பாராட்டுக்கு நன்றி கீதம்

ஆன்டனி ஜானி
04-12-2010, 02:48 PM
வாழ்க்கை ஒரு போர்க்களம்
அதில் நாம் எல்லாம் நடிகன்

வாழ்த்துக்கள் .....

M.Jagadeesan
04-12-2010, 04:07 PM
வாழ்க்கை ஒரு போர்க்களம்
அதில் நாம் எல்லாம் நடிகன்

வாழ்த்துக்கள் .....

பின்னூட்டத்திற்கு நன்றி!

பிரேம்
17-12-2010, 05:33 AM
கவிதை அருமை...

M.Jagadeesan
17-12-2010, 07:15 AM
கவிதை அருமை...

பாராட்டுக்கு நன்றி பிரேம் !

M.Jagadeesan
17-12-2010, 07:16 AM
வாழ்த்துக்கு நன்றி ஆன்டனி ஜானி !

ஆன்டனி ஜானி
17-12-2010, 07:24 AM
கிளியை வைத்து ஜோஷியம் பார்ப்பது அந்த காலம்

கம்ப்யூட்டர் ஜோஷியம் இந்த காலம்

இப்படியாகா காலம் மாறிக்கொண்டே போகிறது ........