PDA

View Full Version : மார்கழிக்கோலம்



simariba
17-09-2010, 01:07 AM
மார்கழி அதிகாலை...



முதல் நாள் இரவே

தின்னையில் வரைந்து

பழகியிருந்த

கலர் கோலம்....



தெருவை அடைத்தபடி

பெரிதாய் உயிர்பெற....



கையில் கலர்களும் கோலமாவும்

காயவைத்த சாரமிழந்த டீத்தூளும்

சலித்தெடுத்த ஆற்றுமணலும்

வேகமாக நிறமாற்றங்களை

சந்திக்க...



மனம் மட்டும் கோலத்திலேயே

அமிழ்ந்திருக்க...



அம்மா, பாட்டி, அத்தைகள்

யாவரும் தூக்கத்திலிருந்து

வெளிவர போராடியபடி...



இந்த டீயை குடித்து விட்டு

மிச்சத்தை போடம்மா...

தலையில் ஒரு கம்பளி

போட்டுகொள்ள கூடாதா?

ரொம்ப குளிருதே...

சின்ன கோலமா போடேன்...



கூஜாவிலிருந்து டம்ளருக்கு

மாறிய சூடான கடை டீயுடன்

உண்மை கரிசனத்துடன்

என் தாத்தா...



எல்லாம் தூங்கரதை பாரு

சின்ன குழந்தையை

கோலம் போட விட்டுட்டு....

என்னால் மற்றவர்களுக்கு

கிடைக்கும் போனஸ் திட்டு...



பஜனை வரும் நேரத்தில்

அவசரமாக கோலத்தை

முடிக்கும் அடுத்த வீட்டு

சின்னப் பாட்டி...



பாம்பு கிடக்கும் நீ

தனியே கொல்லைக்கு

போகாதேன்னு

எத்தனை முறை

சொல்றது...



பதறியபடி

பூசணிப்பூ பறித்து தரும்

என் ஆசைபாட்டி...



தூக்கம் வராமல்

பார்த்துக்கொண்ட

கோவில் ஒலிபெருக்கியின்

சத்தமான பக்தி பாடல்கள்



அரையாண்டு பரிட்சைகள்..

இடையில் படிக்க கிடைத்த

விடுமுறை நாட்கள்...



குளிர் கால மதிய வெயில்

சுட்டெரிக்காமல்

மெல்ல பட்டுச்செல்ல

நாள் முழுதும்


ஊதல் காற்று...



தூரத்தில் கேட்கும்

பறவைகளின் ஒலி

குயிலின் ஒசை



புது பாவாடை சரசரக்க

இனிப்பு வழங்க

வரும் பிறந்த நாள் சிறுமி



இந்த வீட்டுக்கோலம் தான்

ரொம்ப பெரிசா அழகா இருக்கு...

ஆச்சரியத்தபடி போகும்

வழிபோக்கர்கள்...



"யாரு தாத்தா

கோலம் போட்டது?"



"என் பேத்திம்மா"

பெருமையாய்

என் தாத்தா புன்முறுவலுடன்...



என் வீட்டு வாசலில்

சிறிதாய் கோலமிடும் என் அம்மா...



"என்னடீ தாத்தா வீட்டில்

பெரிய கோலமா போடுற

இங்க சின்ன கோலம்

தான் போடமுடியுது

தினமும்"



குளிர் ஒத்துக்கொள்ளாத

அங்கலாய்ப்புடன் அன்பு அம்மா...



"இனி இங்கயும் பெரிய

கோலம் போடுறேம்மா"

இருவீட்டிலும் கோலம்

போட்டு காலை ஏழு மணிக்கு

படுத்துறங்கிய சில நாட்கள்



போகி பொங்கல்

பொங்கல்

மாட்டுப் பொங்கல்

நாட்களில் மட்டும்

என்னை கோலம் போட விடாத

வில்லி அத்தைகள்...



அன்றெல்லாம் அம்மாவின்

திருப்த்திகாய்

இடம் தெரியா வண்ணம்

பாய் விரித்தது போல் ரங்கோலி

என் வாசலில்...



இள வேனிற் காலம் முழுதும்

மார்கழி நினைவில்....



அடுத்த மார்கழி எப்போது

வருமென காத்திருப்பு...



"அவள் வெளி நாட்டில்

இருக்கிறாள்"

இன்று

பெருமையாய் என்

பெற்றோர்...



ஆறாம் மாடியில்...

அப்பார்ட்மென்ட்

வாசலில்....



இருக்கும் இடத்தில்

கோலமிட

மனமில்லாமல்

அதே நான்....

கீதம்
17-09-2010, 01:24 AM
சுகமான சிறுவயதுக் காலங்கள்,
சொக்கவைக்கும் அழகுக் கோலங்கள்.

நானும் இந்த மார்கழிக் கோலத்தின் அடிப்படையில் ஒரு கதை எழுத உத்தேசித்திருந்தேன். நீங்கள் முந்திவிட்டீர்கள். :icon_b: பாராட்டுகள், அபி.

simariba
17-09-2010, 01:44 AM
நன்றி கீதம்! குளிர ஆரம்பித்தவுடன் எழுதத்தோன்றியது.

ஆதவா
17-09-2010, 04:47 AM
கவிதை நெடுகவும் குளிர்..... அனுபவம் அருமை....
நல்ல வார்த்தைக் கோர்ப்பு
வரிசையாக அடுக்கிக் கொண்டே போவதும் அருமை..
முடிவு இப்படியாகத்தான் இருக்கும் என்று யூகம் வருவது தவிர்க்கமுடியவில்லை.

இவ்வளவு நீளக் கவிதையை குறுங்கவிதையில் பதித்தது என்ன காரணமோ?

தொடருங்கள் simariba

சிவா.ஜி
17-09-2010, 08:40 AM
மார்கழி என்றாலே வாசல் கோலமும், பூசனிப்பூவும், பஜனைக் கோஷ்டிகளும், ஒலிபெருக்கிப் பாட்டுக்களும்தான் நினைவுக்கு வரும்.

ஸ்டிக்கர் கோலத்தை மார்பிள் தரையில் ஒட்டவைத்துவிட்டு...இப்படி நேற்றையக் காலத்தை நினைத்துப் பெருமூச்சு விடவேண்டியதுதான்.

நல்லாருக்குங்க அபி. வாழ்த்துக்கள்.

simariba
19-09-2010, 01:59 AM
நன்றி ஆதவா! ஆரம்பித்த போது இவ்வளவு நீளம் வருமென தெரியாது. முடிக்கும் போது குறுங்கவிதைகளில் பதிந்தது மறந்து விட்டது, மறக்கவில்லையானாலும் மாற்ற முடியாதே.

நன்றி சிவா.ஜி! கோலம் மட்டுமில்லாமல் எல்லா பண்டிகைகளும் தனியே சமைத்து கடவுளுக்கு படைப்பதாகவே இருப்பதால், அதை சாப்பிட வைக்க கூட கெஞ்ச வேண்டியிருக்கிறது. பர்கரும் வாஃபுளும் ருசிக்கும் பிள்ளைகளுக்கு ஏனோ சர்க்கரை பொங்கல் கூட நன்றாயில்லை.

நேற்றைய நாட்களை நினைத்து இனிமையான நினைவுகளில் சிறிது நேரம் அமிழ்ந்திருக்க ஆரம்பித்து கடைசியில் தவிர்க்க முடியா புலம்பலாக வெளிப்பட்டு விட்டது.

அனுராகவன்
27-09-2010, 08:04 PM
என்னையும் பழைய நினைவுகளை திரும்ப வைத்தது..
நன்றி சகோ!!

simariba
03-04-2011, 01:36 PM
நன்றி அனு!

கலாசுரன்
11-04-2011, 05:58 AM
நல்லா இருக்கு ...!!
பிடித்திருக்கிறது ..:)

உமாமீனா
11-04-2011, 07:49 AM
மார்கழி கோலம் ஒரு மலரும் நினைவுகள் -:aktion033::4_1_8:

இளசு
13-04-2011, 08:19 PM
சகஜமாய் கைபிடித்து அத்தெருவாசல்களுக்கு அம்மார்கழிக் காலைகளில்
அழைத்துப்போன அழகிய ஞாபகக்கவிதை..

கவிதைக்குப் பொய்யழகு என்பதைப் பொய்யாக்கிய கவிதை..

பாராட்டுகள்..


-------------------------------

தேயிலைத்தூள், சலித்த ஆற்றுமணலும் கோலக்கருவிகள் என அறிந்தேன்..

----------------------------------

கலர் என்பதை வண்ணம் கெடுத்திருக்குமோ???

-----------------------------

திண்ணை - எழுத்துப்பிழையைக் களையலாம். நன்றி!