PDA

View Full Version : நேச நெருப்பு



சுடர்விழி
14-08-2010, 03:26 AM
வங்கிக் கணக்கு நிரம்பி வழிய
பண வேட்டையில் நீங்கள்
பாச வேட்கையில் நான்


ஐந்து வயதில் ஐபாட்
எட்டு வயதில் கைபேசி
இன்று பத்தாவது பிறந்த நாள்
பரிசாக மடிகணினி
மனதில் மட்டும் அணைக்க ஆளின்றி
கனன்று கொண்டிருக்கும் நேச நெருப்பு !


பாசம் கூட பணத்திற்கு ஏற்றாற்போல்
காட்டும் வேலையாட்களுக்கு
மத்தியில் என் நாட்கள்....
அடுத்த தெரு பள்ளிக்குகூட
அமர்த்தலாய் வாகனத்தில் போய்
இறங்கும் பகட்டு..
கையசைத்து விடை பெறுவதென்னவோ
காற்றுக்குத் தான் தினமும்..


சனி ஞாயிறு பகிர்வுக்கென
ஒத்திப்போட்டு மறந்தே போன
சந்தோஷ தருணங்கள்
எத்தனை எத்தனையோ...
வானுலவும் மேகக்கூட்டத்திற்கு
உருவம் கற்பனை செய்து
உயிர்ப்பித்து உணர்வுகள்
கொட்டுகிறேன் அவற்றிடம்...


உன் கவன ஈர்ப்பு வேண்டி
மழைநீரில் என் தவம்
அது தந்த வரமாகக் காய்ச்சல்
ஒருநாள் விடுமுறையுடன்
என் அருகிலேயே நீ...
சுரமும் வலியும் சுகமாகி
அதுவே நீடிக்காதா என்ற
ஏக்கத்தைத் தந்தது அந்நாள்..


ஐந்து வயதில் சொன்னபோது
அறியாப்பிள்ளை என்றாய்
இன்றும் சொல்கிறேன்....


பணமோ பகட்டோ வேண்டாம் அம்மா
பகுதி நேரப்பாசமின்றி முழுதும் வேண்டும் எனக்கு!!
நிலமோ நகையோ வேண்டாம் அம்மா
நிலாச் சோறு போதும் உன் கையால் எனக்கு !!!!!!


---சுடர்விழி

குணமதி
14-08-2010, 04:08 AM
பணக்ககாரக் குழந்தைகளின் பாசத் தவிப்பு! நன்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

ஏழையானாலும் பணக்காரரானாலும் பாசத்திற்கும் அன்பிற்கும் குழந்தைகள் ஏங்குகின்றன.

பல இடங்களில் ஏழைக் குழந்தைகள் மனநிறைவோடும் மகிழ்வோடும் இருப்பதைக் காண்கிறோம்.

வியாசன்
14-08-2010, 05:09 AM
சுடர்விழி அருமையான கவிதை. இருப்பதை விட்டு இல்லாததற்குதானே ஏங்குவோம். தனியே பாசம் மட்டும் இருந்தால் போதுமா? பாசம் கிடைத்தால் பகட்டுக்கு ஏங்குவோம். இன்றைய உலகில் இரண்டும் கிடைப்பது கஷ்டம்

கலையரசி
14-08-2010, 10:23 AM
”பணமோ பகட்டோ வேண்டாம் அம்மா
பகுதி நேரப்பாசமின்றி முழுதும் வேண்டும் எனக்கு!!
நிலமோ நகையோ வேண்டாம் அம்மா
நிலாச் சோறு போதும் உன் கையால் எனக்கு !!!!!!”
இவை நான் பெரிதும் ரசித்த வரிகள். பாசத்துக்கு ஏங்கும் குழந்தையின் வெளிப்பாடு!
பெற்றோர் இருவரும் வேலைக்குப் போவதால் பிள்ளைகளுக்குப் பணம் பகட்டுக்குக் குறைவில்லை. ஆனால் பணத்தால் அன்பை விலைக்கு வாங்க முடியாதே!

அருமையான கவிதை சுடர்விழி! முதற் பரிசுக்கு மிகவும் தகுதியான கவிதை. பாராட்டுக்கள் சுடர்விழி! மேலும் எழுதுங்கள்.

ஆர்.ஈஸ்வரன்
14-08-2010, 10:36 AM
பாசமான கவிதைக்கு வாழ்த்துக்கள்

அமரன்
14-08-2010, 02:21 PM
பிள்ளைகள் நன்றாக வாழ வேண்டுமென்றுதான் பெற்றவர்கள் ஓடு தேய ஓடுகிறார்கள். ஆனால் அந்த ஓடுகள் பிள்ளைகளை வாழும் பாசக்கூட்டின் கூரைகள் என சில நேரங்களில் உணர்ந்திடத் தவறிவிடுகிறார்கள்.

ஒரு பானை சோற்றை, பத்துப்பேர் ஒன்றாக இருந்த சாப்பிட்ட போது இருந்த நிறைவு, மிஞ்ச மிஞ்சச் சோறாக்கி ஒவ்வொருத்தராய் உண்ட போது இல்லை. ஆனால், எப்போதாவது ஒன்றாக உண்ணும் போது இன்னும் பல மடங்காய் நிறைகிறது வயிறும் மனசும்..

எந்தளவில் தேவை என்பதை அறிந்து கொடுத்தால் எல்லாம் சுகமே.

பாராட்டுகள் சுடர்.

தமிழ் மைந்தன்
14-08-2010, 02:28 PM
பாச கவிதை மிக அருமை நண்பரே!
பாராட்டுக்கள்..

கீதம்
15-08-2010, 12:16 AM
பாசத்துக்குப் பரிதவிக்கும் குழந்தையின் ஏக்கத்தை கவி வரிகளால் உணர்த்தியிருக்கும் விதம் வெகுஅருமை. முதல் பரிசு பெற்றமைக்கு என் வாழ்த்தும் பாராட்டும், சுடர்விழி.

சுடர்விழி
15-08-2010, 08:12 AM
பல இடங்களில் ஏழைக் குழந்தைகள் மனநிறைவோடும் மகிழ்வோடும் இருப்பதைக் காண்கிறோம்.

உண்மை தான் குணமதி !

சுடர்விழி
15-08-2010, 08:14 AM
அருமையான கவிதை சுடர்விழி! முதற் பரிசுக்கு மிகவும் தகுதியான கவிதை. பாராட்டுக்கள் சுடர்விழி! மேலும் எழுதுங்கள்.

உங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி கலையரசி !

சுடர்விழி
15-08-2010, 08:19 AM
பாராட்டிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி !!

பாரதி
15-08-2010, 08:29 AM
ஐம்பூதங்களும் அம்மாவின் அன்பிற்கீடாகாது என்பதை உணர்த்தும் பாசக்கவிதை.
வாழ்த்தும் பாராட்டும்.

சுடர்விழி
16-08-2010, 12:20 AM
நன்றி பாரதி!

"பொத்தனூர்"பிரபு
17-08-2010, 06:25 AM
வாழ்வது கொஞ்ச காலம் , அதை பணத்துக்கு மட்டும் அல்லாமல் மனதின் மகிழ்ச்சிக்காக வாழ்வோம்
கவிதை நல்லாயிருக்கு

சுடர்விழி
17-08-2010, 06:51 AM
நன்றி பிரபு !!

Nivas.T
17-08-2010, 09:02 AM
பணத்தைக்கொண்டு பாசத்தை வாங்க முடியாது

அழகான கவிதை

நன்றி! வாழ்த்துக்கள் சுடர்விழி

சுடர்விழி
17-08-2010, 12:03 PM
நன்றி நண்பரே !!