PDA

View Full Version : சின்ன மணி <"\



Ravee
27-07-2010, 03:35 PM
சின்ன மணி


http://farm3.static.flickr.com/2288/3547895576_5e350d6846.jpg



மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் சாலை . காலை மணி நிமிடம் .... திருபரங்குன்றத்தில் இருந்து மதுரை செல்லும் நீண்ட அகண்ட தார்சாலை. ஒரு புறம் பெரிய கண்மாய் ... கரை ஓரம் மண்டிக்கிடந்த புதர்கள் ... மறுபுறம் ரயில்பாதை அதை தாண்டி ஒரு 40 ௦ மீட்டர் இடைவெளியில் ஊர் .

கரையில் புதரின் உள்ளே ஆறு கால்கள் பாய காத்திருந்தன . நாலு காதுகள் கூர்மையாக சத்தங்களை கேட்டுக்கொண்டு இருந்தது . சாலையின் வளைவில் இருந்து தடுப்பு திட்டுகளை தாண்டிய பைக் ... அதன் மேல் இளசுகள் இரண்டு சாலை என்றும் பாராமல் சில்மிஷங்களுடன்.

" சின்னமணி அட்டாக்" கட்டளை கேட்டதும் நாலுகால் பாய்ச்சலில் அந்த வண்டியின் மேல் பாய்ந்தது மணியின் நாய் . வண்டி ஓட்டிய இளைஞன் ஒரு புறமும் அந்த பெண் ஒரு புறமும் கிடந்தனர் , சின்ன மணி அவன் குரல்வளை அருகில் உறுமி கொண்டு இருக்க அந்த பெண் ஈனசுரத்தில் கத்தினாள்

" காப்பாத்துங்க காப்பாத்துங்க"

புதரில் இருந்து மணி வெளியே வர சின்ன மணி ஒரு அடி பின்னே வந்தது . சின்னமணி வாடா இந்த பக்கம் . நாய் பத்தடி தள்ளி போய் அமர்ந்தது.

ரொம்ப தேங்க்ஸ் சார் என்று அருகில் வந்தவன் கன்னத்தில் மணி ஓங்கி விட்டான் அறை ஒன்று.

ஏண்டா கபோதி நாயே ... பொண்ண தள்ளிட்டு வர உனக்கு கோயில் தான் கிடச்சதா ...

சார் இது ஏன் தங்கச்சி சார் ...அழுதான்

டேய் பொம்பிள பொறுக்கி... தங்கச்சியதான் விலாவில குத்திகிட்டே வருவியா.....

பன்னி பன்னி .... கைல கழுத்தில போட்டு இருக்கிறதா எல்லாம் கழட்டு ... இல்ல சொருகிடுவேன் சொருகி ...

இருவரும் அழுது கொண்டே நகைகளை கழட்டி தர இருவரையும் நிற்க வைத்து மணி ஒரு போட்டோ எடுத்துக்கொண்டான் தன் போனில் . மவனே போலிசு கீளிசுன்னு போனா இந்த போட்டாவ காட்டி போடுவேன்.

ஓடி போங்கடா ......பின் மண்டையில் தட்டி இருவரையும் வழி அனுப்பி வைத்தான் .

அன்று வேட்டை முடிந்தது .

மணி , சின்னமணி இருவருக்குமே எல்லா பொறுக்கிகளுக்கும் போலவே ஒரு பிளாஸ்பேக் உண்டு . அப்பா அம்மா சரி இல்லாமல் இருவருமே தெருவுக்கு வந்த ஜாதி . மணி பத்து வயசில் ஜங்சனில் ஒரு பயணியின் பெட்டியை தூக்கி கொண்டு ஓட பிடிபட்டு மைனர் ஜெயில் வாழ்க்கை ... பின்னர் செருப்பு கம்பெனி வேலை ... அங்கே காசு பிரச்சனையில் முதலாளியை குத்திவிட்டு கல்லா பெட்டியுடன் ஓடி வர ..... காசு செலவாகும் வரை லாட்ஜ் வாழ்க்கை. அங்கே இருந்த அய்யர் இவன் வீரத்தை கேள்விபட்டு மதுரையில் வாடகைக்காரன் ஒருவனை வீட்டை விட்டு காலி செய்ய உதவி கேட்டார் . வாடகைகாரனை காலி செய்து விட்டு அய்யரின் வீட்டில் மாடிப்பகுதியை இவன் எடுத்துக்கொண்டான் . ஊருக்கு அவன் போட்டது வாட்ச்மேன் வேஷம் . நிஜத்தில் வழிப்பறி கொள்ளையன் .

அன்று சென்னையை விட்டு மதுரை வந்தவன் தான் . திருநகர் திருப்பரங்குன்றம் பசுமலை நாகமலை செக்கானம் வரை அவன் எல்லை கோடுகள். அந்த முப்பது கீ.மீ குள் பல சபல கேசுகளை பொறி வைத்து சரியாக மடக்கி காசு அடிக்க ஆரம்பித்தான் . யாரும் நேரிடையாக போலீஸ் இடம் போவது இல்லை .மாதம் முப்பது நாற்ப்பது பவுன் தேறும் . ராஜ வாழ்க்கை வாழ்ந்தான் .

கொள்ளை அடித்த நகை , பணத்தை என்ன செய்வது என்று பெரிதாய் திட்டம் கூட கிடையாது . சில நேரம் தோணும் போது நாலுநாள் தொடர்ந்து கண்காணிப்பான் . கண்டிப்பாக ஒரு சபல கேஸ் மாட்டும். கிடைச்சது ஐநூறோ ஆயிரமோ கவலை இல்லை . பணத்தை ஒருவாரத்தில் செலவுசெய்துவிட்டு நகையை மட்டும்ஒரு துருப்பிடித்த தகரபெட்டியில் போட்டு வைத்தான் . பெண்களை தவிர மற்ற எல்லா கெட்ட பழக்கங்களும் அவனுக்கு இருந்தது.

மணிக்கு என்று உறவுகள் யாரும் கிடையாது . சாப்பாட்டுக்கடை சொர்ணத்தை தவிர ... அவர்களை சிலர் அக்கா தம்பி என்றும் சொல்வார்கள் சிலர் வேற மாதிரியும் சொல்வார்கள் . ஆனால் சொர்ணம் இதையெல்லாம் பெரிதாக கவலைபட்டது இல்லை . அவளை போல இருந்த மணியின் மேல் அவளுக்கு ஒரு பாசம் . அவன் சாப்பாட்டுக்கு வர போக இருந்த பிறகு அவளின் கடன் பாக்கிகள் பல சரியானது . மணியின் விவரம் இவளுக்கும் சரியாக தெரியாது .எல்லாரும் போல அய்யர் வீட்டுக்கு காவல்காரன் என்றே நினைத்து இருந்தாள்.

இந்தசூழலில் ஒருநாள் உடல் முழுக்க அடிபட்டு கழுத்தில் இரண்டு மூன்று கம்பி வளையங்களுடன் வந்த நாய்தான் சின்ன மணி . எங்கேயோ பன்னிவேட்டையில் இருந்த அவனை கார்ப்பரேசன்காரர்கள் பிடிக்கப்போகஅவர்களிடம் இருந்து தப்பி குத்துயிரும் குலை உயிருமாக வந்தான் .காலனிகாரர்கள் வெறிநாய் என்று விலகி போக , அடைக்கலம் தந்தான் மணி , அவன் சாப்பாட்டில் பங்கு போட்ட முதல் உறவு .

ஏண்டா மணி யாரையும் தொடக்கூடவிடலை ஒன்கிட்ட எப்படிடா ஒட்டிகிச்சி ... சொர்ணம் கேக்க .

அது ஒண்ணும் இல்ல சொர்ணம் ஒங்கடை இட்டிலி ரெண்டு போட்டேன் தொண்டையில சிக்கி கிச்சா கடிக்க முடியல பாவம் ... அண்ணே காலத்துக்கும் உனக்கு அடிமைன்னு சரண்டர் ஆகிடுச்சி ...

போடா கிறுக்குபயலே என்ற சொர்ணம் ... இதுக்கு என்னடா பேரு வெப்போம் ... என்றாள்.

கொஞ்ச நேரம் யோசனை செய்த பின், நீ மணி இது சின்ன மணி என்றாள் ... சிரித்து கொண்டே.

காலனியில் இருக்கும் போது மணி முரடன் , காவல்காரன் .... எல்லைத்தாண்டும் போது களவாடும் கள்ளன் .

இந்த இரட்டை வாழ்க்கை மணிக்கு பழகி போய் விட்டது .

அன்று அரசுவிடுமுறை மணியின் கை அரிக்க ஆரம்பித்தது . கல்லூரிகள் விடுமுறைநாள் . அப்பன்காசில் ஆட்டம் போடும் இளசுகள் அடங்காமல் திரியும் நாள்,

சின்ன மணி கிளம்புடா .... மணி கொஞ்சம் வேகமாக எட்டிப்போட்டான் நடையை. காலனியில் இருந்து இன்னும் மூன்று வளைவுகள் திரும்பினால் தார்ரோடு. அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் நடந்தால் மணியின் பந்தயபூமி .

ஏனோ அவன் மனம் ஒரே பரபரப்பாக இருந்தது . இன்று ஏதோ நடக்கப்போகிறதோ ....

தொடரும் ...

வியாசன்
27-07-2010, 04:01 PM
கதை சூடுபிடிக்க ஆரம்பிக்க முன்னர் தொடரும் போட்டுவிட்டீர்கள். ஆரம்பமே அமர்க்களமாக இருக்கின்றது. ஒரு அருமையான கதை கிடைக்கப்போகின்றது மன்றத்தவர்களுக்கு அடுத்த பாகத்தை கொஞ்சம் பெரிதாக எழுதுங்கள் ரவி காத்திருக்கின்றேன்.

அன்புரசிகன்
28-07-2010, 06:07 AM
புது வேட்டைக்கார் கதை. கதாபாத்திரங்களை உங்கள் வர்ணணை மூலம் மனக்கண்ணில் கொண்டுவரமுடிகிறது. அழகான ஆரம்பம். தொடருங்கள்.

xavier_raja
28-07-2010, 06:48 AM
மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது நண்பா.. நல்ல ஒரு தொடர்கதைக்கு அடித்தளம் அமைத்து விடீர்கள்.. தொடர்ந்தது எழுதுங்கள்

மதி
28-07-2010, 06:57 AM
நல்ல ஆரம்பம்.. விறுவிறுப்பாக போகின்றது.. ஆண்டுகளுக்கு முன் பார்த்த வாழ்ந்த திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகள் கண்முன் வந்து போனது. தொடருங்கள்... அடுத்த பாகம் எதிர்நோக்கி..

Nivas.T
28-07-2010, 08:02 AM
நல்ல விறுவிறுப்பு, பார்க்க காவல்காரன் உண்மையில் திருடன் :eek: அவனுடன் ஒரு நாய்:sprachlos020:, சபலக்காரர்கள் இலக்கு:sprachlos020:. எத்தனை சுவாரசியம்? இன்னும் பல திருப்பங்களை எதிர்பர்க்கிறேன்
தொடருங்கள் அன்பரே :cool:

govindh
28-07-2010, 09:51 AM
'சின்ன மணி..'.
நல்ல விறுவிறுப்பு...
தொடருங்கள் நண்பரே.

கீதம்
29-07-2010, 03:26 AM
பாராட்டுகள், ரவி அவர்களே. தொடர்கதைக் குழுவில் நீங்களும் ஐக்கியமாகிவிட்டீர்களா? பலே...பலே!

கதையின் ஆரம்பமே விறுவிறுப்புடன் நகர்கிறது. வெகுநாட்களுக்குப் பிறகு உங்கள் எழுத்தைக் காண்கிறேன். தொடர், நீங்கள் நினைத்த பாதையில் பயணித்து நல்லவிதமாய் நிறைவுற என் வாழ்த்துகள்.

Ravee
29-07-2010, 03:07 PM
பாகம் - 2


சின்ன மணி


http://farm2.static.flickr.com/1295/4695747536_590edef1fa.jpg


ஏண்டா சின்ன மணி , நாம ரெண்டு பெரும் சேர்ந்து ஒரு பதினஞ்சி திருட்டு பண்ணி இருப்போமா , சும்மா சொல்லக்கூடாதுடா நீ ஜோடி சேர்ந்தா பிறகு ஒரு தரம் கூட வெறும் கையோட வீடு திரும்பல ... நல்ல வேட்டைதான் . சின்ன மணியும் ஆமோதிப்பது போல மண்டையை ஆட்டிக்கொண்டே வந்தது .

சின்னமணியும் நல்ல முரடன் மணியை போல. ரோட்டில் வேறு பெண் நாயை கண்டால் கூட பின்னால் போக மாட்டான். ராமன் பின்னால் லட்சுமணன் போல இரண்டு அடி தள்ளி நடந்துவருவான் . அவன் காதுகள் எப்போதும் சொருகி வைத்த கத்தி போல மணியின் கட்டளைக்கு காத்து இருக்கும் . வேட்டை முடிந்த கையேடு மணி அங்கிருந்து கிடைக்கும் பேருந்துகளில் எல்லாம் ஏறி ஒரு எட்டு மணிக்கு பிறகுதான் வீடு திரும்புவான். திரும்பவும் அந்த பகுதிக்கு இரண்டு மூன்று வாரங்களுக்கு தலை வைத்துக்கூட படுப்பதில்லை. சின்ன மணி கிளம்பு என்று கட்டளை கிடைத்த உடனே சின்னமணி கருவேலம்காட்டின் வழியாக கண்மாய் பகுதியை கடந்து வயல் வெளி தாண்டி அகதிகள் குடியிருப்பு பகுதி கடந்து சொர்ணத்தின் கடைக்கு வந்து சேரும். சொர்ணம் திங்க எது போட்டாலும் வாய் வைக்காது. மணி வந்து அவன் கையால் தூக்கி எறிந்தால் மட்டுமே சாப்பிடும்.

ஏண்டா இதுக்கு மருவாதியா தட்டுல வச்சி தாங்குறேன் ... திங்குதில்ல ... நீ தூக்கி எறிஞ்சா திங்குதே
பொறுக்கி, பொறுக்கி .... இதுக்கே எல்லாத்தையும் போட்டு நீ வயித்த காயப்போடாத இந்தா நல்ல துன்னு .
பாசமாக இன்னும் இரண்டு இட்டிலி எடுத்து போடுவாள் .

விடு சொர்ணம் நான் செத்தா எனக்குன்னு அழ இதுமட்டும் தானே இருக்கு ... சாப்பிட்டு போகட்டும் போ என்பான் மணி.

ஏண்டா எழவெடுத்தவனே , விளக்கு வைக்குற நேரத்துல என்னடா பேச்சு இது .. சொர்ணம் சலித்து கொள்ள ...
மணியின் கண்கள் லேசாக கலங்கும்.

திடீரென்று , தாழ்வாக பறந்த விமானத்தின் சத்தம் மணியை சுயநினைவுக்கு கொண்டு வந்தது.

டேய் சின்ன மணி ஒருநாள் இந்த பிளேணுல ஏறி பாத்துடனும்டா .....

வானத்தை பார்த்து நடந்தவன் கிழே கிடந்த கல்லில் தடுக்க .... கால்கட்டைவிரல் நகம் அடிபட்டு ரத்தம் கொட்டத்துவங்கியது . வலி உச்சந்தலை வரை விரஎன்று ஏறியது

தூத்தேரி .. நாலு கேட்ட வார்த்தைகளை சொல்லி அந்த கல்லை தூக்கி எறிந்தான் .

ஏண்டா சின்னவனே ... சகுனமே சரியில்லையே ... திரும்பிடுவோமா , சின்ன மணி அவன் முகத்தையும் காலையும் மாறி மாறி பார்த்து முனங்கியது .

காயத்தின் மேல் காறித் துப்பினான். கையில் கொஞ்சம் மண்ணெடுத்து அதன் மேல் போட்டு கால் விரல்களை சொடுக்கிவிட்டான் .

இதெல்லாம் ஒரு காயமாடா .... ஊதி தள்ளிட்டு போய்கிட்டே இருப்போம் ... மணி முன்னாள் நடக்க சின்னமணி தயங்கி தயங்கி பின்னால் சென்றது .

மன்னர் கல்லூரி திருப்பத்தில் கல்மண்டபம் அருகே மணி அமர்ந்து கோயிலுக்கு போகும் வண்டிகளை நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தான் . உச்சிப்பொழுது ஆகியும் ஒன்றும் சரியாகவில்லை . ஒன்றும் தேற வில்லை என்ற வெறுப்பு ஒருபுறம் , காயத்தின் வலி ஒருபுறம் மணியின் பொறுமை போய்க்கொண்டு இருந்தது .

சின்னவனே இன்னக்கு காசு பாக்காம வீட்டுக்கு போக கூடாது அடுத்து எந்த வண்டி வந்தாலும் போட்ருவ வேண்டியதுதான் . சாலை அருகே இருந்த புளியமரத்தின் பின் மறைவாக நின்று இடுப்பில் இருந்த துண்டை வாயோடு சேர்த்து கட்டிக்கொண்டான்.

சாலை திருப்பத்தில் ஒரு வண்டி வரும் சத்தம் ... அவன் கவனம் முழுவதும் வண்டியின் மேல் ... புதிதாய் திருமணமான ஜோடி . வெயிலில் கழுத்தில் கைகளில் மஞ்சள் நிறம் “ டால் “அடித்தது. சரியான வேட்டை ...
மணியின் வாய் முனுமுனுக்க ... அவன் கால் விரலில் இருந்து ரத்தம் வடிந்து ஓடிக்கொண்டு இருந்தது.

சின்னமணி அட்டாக் மணி கூவ ....................

அவன் கால்களே பார்த்துக்கொண்டு இருந்த சின்னமணி ஒரு நிமிடம் தாமதமாக தாவியது .

சனியனே என்ற பைக்காரன் பதறிப்போய் ஒரு கட் அடித்து நேராக ஓட்ட சின்னமணி பாய்ந்த வேகத்தில் சாலையின் நடுவில்....

எதிர்புறம் இருந்து வந்த மணல் லாரியின் முன் சக்கரம் அதன் பின் காலில் ஏற .... ஊளை இட்ட சின்னமணி மணியை பார்த்தவாறே முன் கால்களால் தவழ்ந்து வர பார்த்து சுதாரிக்கும் முன்பே அடுத்து வந்த பின் சக்கரம் அதன் உடலை தரையோடு தரையாக நசுக்கி சென்றது.

அந்த நேரத்தில் எழும்பிய ஒரு ஓலம் அது மணியின் குரலா .... இல்லை சின்ன மணியின் குரலா .....யாருக்கும் தெரியாது . ஒரு நொடிப்பொழுதில் நடந்த அவலம் மணியின் கண்கள் முன் .

ஐயோ ஐயோ .. சின்னவனே நானே உன்ன கொன்னுடேனேடா...... மணி நடுரோட்டில் படுத்து புலம்பிக்கொண்டு இருந்தான். கூலம் ஆகிப்போன சதைகளையும் ரத்தத்தையும் வாரி வாரி மேலே பூசிக்கொண்டான் .

டேய் போய்ட்டியே டா...... போய்ட்டியே டா

“ வாங்கடா வாங்க....... எம்மேலையும் ஏத்திட்டு போங்க.... வாங்கடா.... வாங்க “என்று ரோட்டில் போன வாகனங்களை பார்த்து கத்திக்கொண்டு இருந்தான்.

யே புள்ள ... சொர்ணம் உன் கடையில கேடப்பானே அந்த மணிப்பய மன்னர் காலேசு பக்கம் ரோட்டுல ரத்த களரியா கேடக்கானம் போய் பாரு....யாரோ சாப்பாட்டுக்கடை வாசலில் நின்று சொல்லிப்போனார்கள் .

சொர்ணம் போன போது அங்கே சின்னமணியின் நைந்துபோன தோலும் ரத்தமும் மட்டுமே அங்கே இருந்தது.

ஐயோ ஐயோ என்ன ஆச்சுன்னு தெரியலையே , என்று புலம்ப

ஏம்மா அது உன் சொந்தக்கார பயலா , நாய் மேல யாரோ லாரிய எத்திடாங்க போல.... இவன் கிறுக்கன் மாதிரி போற வர வண்டி மேல எல்லாம் கல்லைக்கொண்டு எறிஞ்சா ......சும்மா இருப்பாங்களா ... போலிசு ஸ்டேசனுக்கு கூட்டி போய்டாங்க . போய் திருப்பரங்குன்றம் ஸ்டேசன்ல போய் பாரு ... செலவுக்கு காசு இருக்க ஸ்டேசன் போற கவனம் ....

சாலை அருகே நின்று இருந்த பெரியவர் சொல்ல சொர்ணம் ஓட்டமும் நடையுமாய் ஸ்டேசன் வந்து சேர்ந்தாள்.

Ravee
29-07-2010, 03:30 PM
கதை சூடுபிடிக்க ஆரம்பிக்க முன்னர் தொடரும் போட்டுவிட்டீர்கள். ஆரம்பமே அமர்க்களமாக இருக்கின்றது. ஒரு அருமையான கதை கிடைக்கப்போகின்றது மன்றத்தவர்களுக்கு அடுத்த பாகத்தை கொஞ்சம் பெரிதாக எழுதுங்கள் ரவி காத்திருக்கின்றேன்.

நன்றி வியாசன் , பாராட்டுவதில் இன்று "அ" வரிசை நண்பர்களை முந்திக்கொண்டீர்கள்.



புது வேட்டைக்கார் கதை. கதாபாத்திரங்களை உங்கள் வர்ணணை மூலம் மனக்கண்ணில் கொண்டுவரமுடிகிறது. அழகான ஆரம்பம். தொடருங்கள்.

அன்பு ரசிகரின் மனதை தொட்டுவிட்டால் வெற்றிதான் ... நன்றி நண்பரே


மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது நண்பா.. நல்ல ஒரு தொடர்கதைக்கு அடித்தளம் அமைத்து விடீர்கள்.. தொடர்ந்தது எழுதுங்கள்

நன்றி நண்பரே ....:lachen001:


நல்ல ஆரம்பம்.. விறுவிறுப்பாக போகின்றது.. ஆண்டுகளுக்கு முன் பார்த்த வாழ்ந்த திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகள் கண்முன் வந்து போனது. தொடருங்கள்... அடுத்த பாகம் எதிர்நோக்கி..

நன்றி மதி , நீங்க நம்ம ஊர்க்காரரா சொல்லவே இல்லை அடுத்து விஜயம் செய்யும் போது தகவல் சொல்லுங்கள் அவசியம் சந்திப்போம்.


நல்ல விறுவிறுப்பு, பார்க்க காவல்காரன் உண்மையில் திருடன் :eek: அவனுடன் ஒரு நாய்:sprachlos020:, சபலக்காரர்கள் இலக்கு:sprachlos020:. எத்தனை சுவாரசியம்? இன்னும் பல திருப்பங்களை எதிர்பர்க்கிறேன்
தொடருங்கள் அன்பரே :cool:

நன்றி நண்பரே ....:lachen001:


'சின்ன மணி..'.
நல்ல விறுவிறுப்பு...
தொடருங்கள் நண்பரே.

நன்றி நண்பரே ....:lachen001:



பாராட்டுகள், ரவி அவர்களே. தொடர்கதைக் குழுவில் நீங்களும் ஐக்கியமாகிவிட்டீர்களா? பலே...பலே!

கதையின் ஆரம்பமே விறுவிறுப்புடன் நகர்கிறது. வெகுநாட்களுக்குப் பிறகு உங்கள் எழுத்தைக் காண்கிறேன். தொடர், நீங்கள் நினைத்த பாதையில் பயணித்து நல்லவிதமாய் நிறைவுற என் வாழ்த்துகள்.

ஆமாம் கீதம் கத்தார் சென்றதால் மன்றத்தையும் உங்கள் கதைகளையும் மிகவும் இழந்தேன் கடந்த இரண்டு மாதமாக. இன்னும் சரியாக இங்குள்ள பணிகளும் முடியவில்லை. முடிந்தவரை உயிரோட்டமாக கதையினை கொடுக்க முயற்சி செய்கிறேன் நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு .

மதி
29-07-2010, 03:38 PM
அடுத்த பாகமும் விறுவிறுப்பாக சென்றது.. சம்பவங்கள் கண்முன்னே நடப்பது போல் இருந்தது சிறப்பு.. அதுக்குள்ளாக சின்னமணியின் மரணம்... மனதை பிசைகிறது. வசனங்கள் யதார்த்தம்.

நான் மதுரையில் சில காலம் பணிபுரிந்தேன். அப்போ சுற்றியது.. எப்போதாவது மதுரைப்பக்கம் வந்தால் சந்திப்போம்..

Ravee
29-07-2010, 04:07 PM
அடுத்த பாகமும் விறுவிறுப்பாக சென்றது.. சம்பவங்கள் கண்முன்னே நடப்பது போல் இருந்தது சிறப்பு.. அதுக்குள்ளாக சின்னமணியின் மரணம்... மனதை பிசைகிறது. வசனங்கள் யதார்த்தம்.

நான் மதுரையில் சில காலம் பணிபுரிந்தேன். அப்போ சுற்றியது.. எப்போதாவது மதுரைப்பக்கம் வந்தால் சந்திப்போம்..

கண்டிப்பாக சந்திப்போம் மதி. இப்போது சில நாட்களாக இணைய நண்பர்களை அதிகம் சந்தித்து வருகிறேன். அது என்னவோ உறவுகளை சந்திப்பதை விட உணர்வுகளை புரிந்த முகம் தெரியாத நண்பர்களை காணும் போது பல நாள் பழகிய உணர்வுகளே வருகிறது. கண்டிப்பாக நம் சந்திப்பிலும் அது நிகழும் என்று நம்புகிறேன். :)

பாலன்
29-07-2010, 04:20 PM
உலகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் அன்புக்கும் அங்கீகாரத்துக்கும்தான் ஏங்கி தவிக்கின்றன அன்பதை அழுத்தமாய் உணர்த்தும் வகையில் அமைந்த கதைகளம். வாழ்த்துக்கள் திரு.ரவி.

Ravee
29-07-2010, 06:34 PM
ஹிட்லரின் உள்ளுக்குள் அழகான ஒரு ஓவியன் குடி இருந்தான் . ஆனால் சர்வாதிகாரி ஹிடலருக்கு கிடைத்த மரியாதையும் கவுரவமும் , ஓவியன் ஹிட்லருக்கு கிடைத்து இருந்தால் ஒருவேளை அவன் மாற ஒரு சந்தர்ப்பம் கிடைத்து இருக்கும். சிலரின் விதியை மீறிய பாசமும் அன்பும் கிடைக்கும் போது மனிதராகி போகிறார்கள்..

அன்புரசிகன்
30-07-2010, 12:25 AM
ம். திருடனும் சகுனம் பார்க்கிறானா.... தொடருங்கள்.

வியாசன்
30-07-2010, 01:03 AM
புதிய திருப்பம் அடுத்து என்ன சொல்லப்போகின்றீர்கள் என்ன எதிர்பார்ப்பு. சொர்ணம் காவல் நிலையத்திலிருந்து மணியை அழைத்து வருவாளா? அதன்போது கதையில் புதிய திருப்பம் ஏற்படுமா?

Ravee
30-07-2010, 01:10 AM
புதிய திருப்பம் அடுத்து என்ன சொல்லப்போகின்றீர்கள் என்ன எதிர்பார்ப்பு. சொர்ணம் காவல் நிலையத்திலிருந்து மணியை அழைத்து வருவாளா? அதன்போது கதையில் புதிய திருப்பம் ஏற்படுமா?

ம்ம் மணியின் வாழ்வில் திருப்பம் வர மணிக்கு மணி கட்ட வேண்டிய வேலை . போலீசிடம் மாட்டி கொண்டானே ... பொறுங்கள் .... பொறுப்பு சிலபேருக்கு வர வாழ்க்கையை சில நேரம் புரட்டி தானே போட வேண்டி வருகிறது .

Ravee
30-07-2010, 01:14 AM
ம். திருடனும் சகுனம் பார்க்கிறானா.... தொடருங்கள்.

அட அய்யாவே இப்ப எல்லாம் சகுனம் பார்க்கும் போது திருடன் பார்க்க மாட்டானா ? ,

அட விடுங்க பொது இடத்தில அரசியல் பேச வேணாம் .....:lachen001:

கீதம்
30-07-2010, 01:35 AM
சம்பவக்கோர்வை அற்புதம். சின்னமணியின் இழப்பு என்னையும் பாதித்தது. அடுத்தது என்ன என்று ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் கதை அமைந்துள்ளது சிறப்பு. பாராட்டுகள் ரவி அவர்களே.

கலையரசி
30-07-2010, 02:02 PM
கத்தாருக்கு சென்ற வேலை நல்லபடி முடிந்து விட்டதா?
இன்று தான் படித்தேன் ரவி. விறுவிறுப்புடன் சுவாரசியமாகவும் கொண்டு செல்கிறீர்கள். மணியின் ஒரே துணையான சின்ன மணியின் சாவு மனதைப் பாதித்தது. தொடருங்கள். நல்லதொரு தொடர் கதை முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

Ravee
30-07-2010, 02:08 PM
பாகம் 3


சின்னமணி

http://farm4.static.flickr.com/3603/3354122797_e4bcef8d76.jpg





யாருமா என்ன வேணும் ... வாசலில் இருந்த கான்ஸ்டபிள் விறைப்பாக கேட்க,

அய்யா ... மணின்னு ஒருத்தரு இங்க கூட்டிவந்தாங்கன்னு சொன்னாங்க ...அதா கூட்டி போகலாம்ன்னு வந்தேன் .

ஏன் அவரு காணா போயிட்டாரா கண்டுபுடிச்சி கொண்டுவந்தான்களா.... ம்ம் என்ன மப்பு இருந்தா தண்ணிய போட்டு பய புள்ள ரோட்டில ஆட்டம் காம்பிச்சி இருப்பான் .... அவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு வரிகளோ...
கான்ஸ்டபிள் வார்த்தைக்கு வார்த்தை நையாண்டியாய் கேக்க சொர்ணம் தலை குனிந்து நின்றாள்.

" நீ யாருமா " ....... உறவா ....எஸ். ஐ கேட்டார் .

அய்யா , நான் வசந்தம் காலனியில கடை போட்டு இருக்கேன் சாமி , அந்த பய சென்னைல இருந்து அய்யர் வீட்டுக்கு வேலைக்கு வந்தவன் . ஆயி அப்பன் ஏதும் கிடையாது . என் கடையில தான் சோறு தண்ணி குடிக்கும் . தண்ணி போட்டா கூட அய்யர் வீடு மாடியில போய் படுத்துடும் . யாருக்கும் காலனியில ஒரு தொல்ல இருக்காது. அந்த நாய் மேல உசிர வச்சு இருந்தது . அது அடிபட்டு போனதால இப்படி கோவப்பட்டு இருந்து இருக்கும் .... மன்னிச்சுடுங்க சாமி .

ஓ , தொரை கோவப்பட்டா போற வர வண்டி மேல எல்லாம் கல்ல கொண்டு எறிவாக... ஊர்காரனுங்க அடிவாங்கிட்டு போகனுமா . பாக்க நல்ல சண்டி மாடு மாதிரி இருக்கான் , அய்யா இவனை சும்மா விடக்கூடாது . ரெண்டு கேசு போட்டு ஒரு மூணு மாசம் உள்ள வச்சா சரியா போகும் ... கான்ஸ்டபிள் எடுத்து கொடுத்தான் .

சாமி அப்படி ஏதும் செய்துபோடாதிங்க ... பாவம் நாளைக்கு ஜெயிலுக்கு போய்ட்டு வந்தவனுக்கு யாரு பொண்ணு கொடுப்பா. பய வாழ்க்க பாழா போய்டும் சாமி.

ஓ வீட்டில பொண்ணு கூட வச்சி இருக்கியா மாப்பிளைக்கு ... அதான் இந்த தாங்கு தாங்குறீயாக்கும்.
சரி ஒரு ஆயிரம் ரூபாய கட்டிட்டு உன் மாப்பிளைய கூட்டிட்டு போ . எல்லோரும் சிரிக்க.... சொர்ணம் தலை குனிந்து நின்றாள்

அய்யா அம்ம்புட்டு காசு ஏன் கையில இல்ல சாமி .

சரி விடு அப்ப ஒரு மூணு மாசம் பெரிய மாமியார் வீட்டுக்கு போய்ட்டு உன் வீட்டுக்கு வரட்டும் .

அய்யா இவன் மேல அந்த பஸ்சுல பிக் பாக்கெட் கேசு , சங்கிலி அறுப்பு ஏதாவது நாலு கேசு போட்டு நம்ப பைல முடிப்போமே ... ஏட்டு அவர் பங்குக்கு சொல்ல .

விடுங்கப்பா போயும் போயும் ஒரு பொட்டபுள்ள கிட்ட வம்பு வளத்துகிட்டு ... இந்தா பாருமா கேசு ஒண்ணும் போடலை நாலு தட்டு தட்டி வச்சி இருக்கோம் , ஏட்டு கிட்ட ஒரு ஐநூறு ரூபா கொடுத்துட்டு அந்த பயல கூட்டிட்டு போ. அடுத்த முறை இது போல சிக்குனா குடல உருவி புடுவேன் பார்த்துக்கோ . ஆளும் பாக்குறதுக்கு லேசு பட்டவனா தெரியலை , பெரிய ஊமை குசும்பனாத்தான் தெரியுது , ஒரு தடவ ஸ்டேசன் படி ஏறிட்டா வாழ்க்க முழுசும் அட்டம சனிதான் . நல்ல புத்தி சொல்லி வை . மறுபடியும் இவன புடிச்சா உடம்ப உறிச்சி உப்பு கருவாடாக்கிடுவேன் ..... முறைப்பாக சொன்னார் எஸ். ஐ.

எஸ். ஐ நகர்ந்த உடன் இந்தா புள்ள ... இந்தா பாரு பயபுள்ள நாய் ரத்தத்தை எல்லாம் பூசிகிட்டு கெடந்தான் . நாத்தம் தாங்கல .... போட்ட அடியில மயக்கம் வேற போட்டானா ..... என் சட்டை எல்லாம் கொடுத்து டீ வாங்கி கொடுத்தேன் .என்ன தனியா கவனிச்சுட்டு போ.... கான்ஸ்டபிள் காதில் கிசு கிசுத்தான்.

கையில காசு நூறு ரூபாதான் கொண்டுவந்தேன் ... வீட்டுக்கு போய்தான் எடுத்துவரனும் .கொஞ்சம் பய மொகத்த பாத்துட்டு போறேன் சாமி ... சொர்ணம் கெஞ்சினாள்.

சரி சரி பார்த்துட்டு போ சத்தம் ஏதும் போடக்கூடாது ... ஏட்டு உத்தரவிட உள்ளே லாக்அப்க்கு சொர்ணம் அழைத்து செல்லப்பட்டாள்.

அங்கே முக்கால் நிர்வாணமாக முடங்கி கிடந்தான் மணி வாய் ஏதோ குளறிக்கொண்டே இருந்தது.

கலையரசி
30-07-2010, 02:14 PM
காவல் துறையினரின் கிண்டல் பேச்சு படு யதார்த்தம். ஆனால் எனக்கொரு சந்தேகம் ரவி. ஏற்கெனவே பத்துத் தடவைகளுக்கு மேல் வழிப்பறி கொள்ளை நடத்தியவனைப் பற்றி இதுவரை காவல் துறைக்கு எந்தத் தகவலுமே கிடைக்காமலா இருக்கும்?

Ravee
30-07-2010, 02:18 PM
கத்தாருக்கு சென்ற வேலை நல்லபடி முடிந்து விட்டதா?
இன்று தான் படித்தேன் ரவி. விறுவிறுப்புடன் சுவாரசியமாகவும் கொண்டு செல்கிறீர்கள். மணியின் ஒரே துணையான சின்ன மணியின் சாவு மனதைப் பாதித்தது. தொடருங்கள். நல்லதொரு தொடர் கதை முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

கலை அக்கா எல்லாம் நல்லபடியா முடிந்தது . உங்கள் ஷோ கேசில் பதக்கங்களின் அணிவகுப்பை பார்த்தேன் .ரொம்ப சந்தோசம் .

Ravee
30-07-2010, 02:27 PM
காவல் துறையினரின் கிண்டல் பேச்சு படு யதார்த்தம். ஆனால் எனக்கொரு சந்தேகம் ரவி. ஏற்கெனவே பத்துத் தடவைகளுக்கு மேல் வழிப்பறி கொள்ளை நடத்தியவனைப் பற்றி இதுவரை காவல் துறைக்கு எந்தத் தகவலுமே கிடைக்காமலா இருக்கும்?

மணி தப்பு செய்யும் ஆட்களாக பார்த்துதான் கொள்ளை அடிப்பதாக சொல்லி இருக்கிறேன் . திருடனுக்கு தேள் கொட்டியது போல அவர்கள் போலிஸ் உதவியை நாடுவது இல்லை . உண்மையில் அழகர் கோயில் , திருப்பரங்குன்றம் , திருச்செந்தூர் இவைகள் எல்லாம் கள்ளகாதலுக்கு ஒதுங்கும் பகுதிகளாக போய்விட்டது . இது போல இங்கே பல கொள்ளைகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதை அந்த பகுதி போலிஸ்காரர்களும் கண்டுகொள்வதில்லை. தேவையான வருமானம் பின்கதவின் வழி வருவதால் . :icon_p:

வியாசன்
30-07-2010, 07:40 PM
காவல்துறையின் செயற்பாட்டை தத்துருபமாக சொல்லியிருக்கின்றீர்கள். சொர்ணம் மணியை மீட்பாளா? அல்லது பொய்கேசில் சிறை செல்லப்போகின்றானா? ரவி விரைவாக அடுத்த பாகத்தை தாருங்கள்

கீதம்
31-07-2010, 12:38 AM
காவல்நிலைய உரையாடல்கள் வெகு யதார்த்தம். கதையின் பாதையை முன்பே தீர்மானித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கதையின் தலைப்பு 'சின்னமணி' ஆனால் இரண்டாம் அத்தியாயத்திலேயே அநியாயமாய் சின்னமணியின் மரணம். இனி கதைபோகும் போக்கை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

அமரன்
31-07-2010, 12:39 PM
கதை முடிஞ்சுதா ரவி.

நீதி தோற்கலாம். நியாயம் தோற்காது.

மணி உதாரணம்.

பாராட்டுகள்

ஆதவா
31-07-2010, 01:39 PM
கதை முடிந்துவிட்டதா? எனக்கேனோ அப்படி தெரியலையே,
வசனங்களை மேற்கோள் குறிக்குள் அடக்கி எழுதுங்கள் ரவீ. சற்று மாறுபட்டு தெரியும்.

ஒரு முரடன், அவனது பாசம், சற்று அழுத்தமாக வெளிப்படவில்லையென்றாலும் கதையின் வசனங்கள் எதார்த்தமாகத்தான் இருக்கிறது.

தொடருங்கள் ரவீ

Ravee
31-07-2010, 11:59 PM
பாகம் 4

சின்னமணி - பாவமன்னிப்பு






http://farm3.static.flickr.com/2123/1601633828_3716d5315f.jpg


மறுநாள் காலை சொர்ணம் போலிஸ் ஸ்டேசன் மாமுல் எல்லாம் கட்டி முடிக்க ஒருவழியாக மணியை விட்டனர். மணி பித்து பிடித்தவன் போல முனங்கி கொண்டே இருந்தான் .

ஏண்டா செத்து போன , இப்படி போய்ட்டியே , என் கண்ணு முன்னால செத்து போய்ட்டியே , என்னோட பேராசைக்கு உன்ன காவு கொடுத்துடேனே , ஐயோ இனிமேல எப்படி தூங்குவேன் , என் கண்ணு முன்னால நீ கடைசியா என்ன பாத்ததும் , கதறி போனதும் தானே கண்ணுக்குள்ள நிக்குது .
நான் பண்ண பாவத்தில பெரிய பாவம் இது ... சின்னவனே போய்ட்டியேடா ....

" சரிடா விடு ரோட்டுல வந்தது ரோட்டிலேயே முடிஞ்சி போச்சு சும்மா அதையே நெனச்சி பொளம்பாத...எப்படி இருந்தாலும் ஒருநா போற உசிருதானே எல்லாம்" சொர்ணம் சமாதானம் சொன்னாலும் மணி அடங்கவில்லை.

கடை வாசலில் பெஞ்சை எடுத்து போட்டு அவனை அங்கேயே படுக்க வைத்தாள்.

மணிக்கு மதியம் காய்ச்சல் அதிகம் ஆனது. பக்கத்தில இருந்த டாக்டரை கூட்டி வந்து வைத்தியம் பார்த்தாள்.

"அது ஒன்னும் இல்லமா , அதிர்ச்சியில மனசு நெனச்சதேயே சுத்தி சுத்தி வரும் நல்லா தூங்கி எந்திரிச்சா சரியா போகும் . இந்த மருந்த வாங்கி வந்து கொடு. ராப்பொழுது நல்லா தூங்கட்டும் . சாப்பிட கேட்டா கொடு தப்பில்லை" ... டாக்டர் கிளம்பினார் .

சொர்ணம் அன்றும் கடை போடாவில்லை. வாடிக்கை ஆட்கள் எல்லாம் வந்து கேட்டு போனார்கள் .கடைசியாய் கறிகாய் போடும் கிழவி வந்தாள். எப்போதும் ஒரு மணி நேரம் பேசிவிட்டு போகும் கிழவி இத்தனை நடந்து இருக்க கிளம்புமா என்ன.

" எ புள்ள சொர்ணம் என்ன இந்த கிறுக்குபய இங்க வந்து படுத்துருக்கான் , தண்ணி ஏதும் போட்டு இருக்கானா " ... மெல்ல இழுத்தாள்.

அதை காதில் வாங்காமல் சொர்ணம் கேட்டால் .... " என்ன ஆயா வியாபாரம் முடிஞ்சதா , மிச்சம் மீதி காய் இருக்கா ? நாளிக்கவது கடை போடணும் " .

" அது எல்லாம் இருக்கட்டும் , இவன ஏன் இங்க வந்து கிடத்தி இருக்க " .

சத்தம் கேட்க மணி எழுந்தான் ,தலை லேசா சுத்த மீண்டும் படுத்துக்கொண்டான். ஆனால் அவர்கள் பேசியது மட்டும் காதில் விழுந்தது.

" ஏண்டி கிறுக்கு புள்ள , ஏற்கனவே உன்னையும் இவனையும் பத்தி சேத்து வச்சி காலனியில பேச்சா இருக்கு . இன்னும் இவனையும் இங்க வந்து வச்சுக்கோ ... ரொம்ப நல்லா இருக்கும் ... உன் நல்லதுக்குத்தான் சொல்லுறேன் கேட்டா கேளு விட்டா விடு " .

" இந்தா பாரு கிழவி , ஊரு பேசுறதுக்கு பயந்தவ இல்ல இந்த சொர்ணம் ... என்ன மலடின்னு தள்ளிவச்சிட்டு இன்னொருத்திய கட்டிட்டு போனானே அந்தபாவி பயல ஊர் கேட்டுச்சா , இதையே சொல்லி சொல்லி மருகி மருகி செத்தாலே என் ஆத்தா அப்போ ஐயோ பாவம் இந்த சொர்ணம் தனியா இருந்து கஷ்டபடுவாளே இவளுக்கு ஒரு வாழ்க்கை கொடுப்போம்ன்னு எந்த பயலுகலாவது வந்தானுன்களா ??? இப்ப எங்க இருந்து வந்து கேப்பானுங்க ? பொட்டச்சி மானம் ரோசம் பெருசுன்னு அரை வயித்து கஞ்சி குடிச்சாலும் என் உழைப்புள குடிச்சிக்கிட்டு இருக்கேன் " .

" அந்த பயலுக்கும் ஆயி அப்பன் கிடையாது . அம்பளைபுள்ள , ஆளும் வாட்ட சாட்டமா இருக்கானா ஏதோ பொறுக்கித்தனமா வளந்துட்டான் . ஆனா ஒண்ணு சொல்லுறேன் என் கடைக்கு முதநாள் தண்ணி கேட்டு வந்தான் ... அன்னியில இருந்து இப்ப வரை ஒண்ணு என் கண்ணை பார்த்து பேசுவான் , இல்ல கால பார்த்து பேசுவான் . மாற பார்த்து பேசுற சாதி இல்ல அவன் . பத்து வயசு சின்னவனா இருந்தா அவன் என் புள்ளயாட்டம். தப்பா பேசுற ஆம்பிள, பொம்பிள எல்லாத்தையும் வரச்சொல்லு. ஒவ்வொருத்தர் வீட்டு வண்டவாளத்தையும் தண்டவாளத்தில ஏத்துறேன் ".

சொர்ணம் படபடவென பொரிந்து தள்ளிவிட்டாள் . கேட்டுக்கொண்டு இருந்த மணியின் கண்களில் கண்ணீர் ஆறு போல ஓடிக்கொண்டு இருந்தது. தாயி இப்படியே ஒவ்வொருத்தருக்கும் நான் கடன்காரனா போய்ட்டு இருக்கேனே . உன் வீட்டுக்கடனை எப்பத்தா அடைபேன் தெரியலியே .

கிழவி பேசிவிட்டு போக , வானத்தை பார்த்துக்கொண்டு இருந்த மணியை அப்போதுதான் பார்த்தாள் சொர்ணம் . " டேய் மணி எப்ப நீ எந்திரிச்ச , ஒரு கோரல் கொடுத்து இருக்கலாம்தானே , பசிக்குதா தோசை ஊத்தி தரவா , வெறும் வயித்தில படுக்காதடா ".

" சரி, ஆத்தா ஊத்தி தா " ... சொல்லும் போதே குரல் தளுதளுத்தது .

உள்ளே போகப்போன சொர்ணம் ஒருநிமிடம் நின்று பார்த்தாள் .

" என்ன புதுசா கூப்பிடுற ... எப்பவும் சொர்ணம்ன்னு சொல்லுற வாயி எங்க போச்சு . ஆயிரம் ரூபாய் கட்டி போலீசுகிட்ட இருந்து கொண்டுவந்தா ஆத்தா ஆயிட முடியுமா என்ன ... கிழவிகிட்ட பேசிட்டு இருந்ததை கேட்டுட்டு அசட்டுத்தனமா ஏதாவது சொல்லாத " ...

" ஊரு சிரிக்கும். பாரு சொர்ணத்துக்கு எம்புட்டு பெரிய புள்ளைன்னு " ... சொர்ணம் கொஞ்சம் கூட தன வருத்தத்தை வார்த்தைகளில் காட்டிக்கொள்ளவில்லை.

" என் ஆத்தா இவ்வளவு நல்லவ இல்ல ... உன்ன போல நல்லவ வயித்துல பொறந்து இருந்தா நான் இப்படி சீரழிஞ்சி போய் இருக்க மாட்டேன் . சின்ன வயசுலேயே பாக்க கூடாதெல்லாம் பார்த்து கேட்க கூடாதை எல்லாம் கேட்டு மைனர் ஜெயிலு ... அடிதடி , பொறுக்கித்தனம் எல்லாம் செய்துட்டு இருந்தவன் நான் " ... அழுகை அவன் பேச்சை தடை செய்ய , புதிதாய் தான் கேட்கும் சங்கதி கேட்டு சொர்ணம் அப்படியே உக்காந்து விட்டாள்.

" என் ஆத்தா ஒண்ணும் நல்லவ இல்ல ... நான் பொறந்த கொஞ்ச நாளுலேயே என் அப்பன் இந்த கொழந்த எனக்கு பொறந்தவன் இல்லன்னு எழுதி வச்சிட்டு தூக்கு மாட்டி செத்து போய்ட்டான் . அப்புறம் என் ஆத்தாவை எங்க அப்பா வீட்டிலையும் சேர்த்துக்களை, எங்க ஆத்தா வீட்டு பக்கமும் துரத்திடாகலாம் . அப்புறம் எனனவச்சி பஸ்ஸ்டாண்டு , ரயில்வேஸ்டேசன்னு பிச்சை எடுத்துச்சாம் என் ஆத்தா " .

" கொஞ்சம் விவரம் தெரிஞ்சி வளர்ந்த போது சேரியில எங்க குடிசைக்கு பேரே வேற . என்ன சின்ன வயசுலேயே டீ கடைக்கு வேலைக்கு போட்டுருச்சி . தினம் கிளாசு கழுவி கொடுத்தா அஞ்சு ரூபா கொடுப்பாங்க . ராப்பொழுது என்ன ஆத்தா வீட்டுக்குள்ள சேர்க்காது . விவரம் தெரியும் போது கண்ட ஆம்பிளைகள் எல்லாம் வந்து போவானுங்க .. கூட்டுக்கார பசங்க என்னையும் அம்மாவையும் அசிங்கமா பேசும் போது சண்டைக்கு போவேன் , வீட்டுக்கு வந்து போன ஆம்பிளைகளை கண்டா கல்லை கொண்டு எறிவேன், பிடிபட்டா அடிபட்டு வருவேன் . ஏன்னு ஆத்தா கேக்காது . அதுவும் சேர்ந்து நாலு அடி அடிக்கும் " .

" வெறுத்து போய் ஒருநாள் குடிசைக்கு வந்து இருந்த கறிக்கடைகாரன் பைய திருடிட்டு ஓடி வந்துட்டேன். உள்ளே ஆடு பிடிக்க கணிசமா தொகை வச்சு இருந்தான். கிடச்ச ரயில் ஏறி ஊர் விட்டு ஊர் வந்தேன் . கையில இருந்த காசு முழுசும் காலியான பின்னே சின்ன சின்ன திருட்டு ... ரயில்வே போலீசில் பிடிபட்டு மைனர் ஜெயில் . அப்புறம் கொஞ்சம் வேலை பழகி ஒழுங்கா இருப்போம்ன்னு இருந்தேன் . சம்பளம் கேட்ட இடத்தில தகராறு .. அடிச்சி போட்டு காசை எடுத்தேன். இருந்த காசில கௌரவமா ஒரு மேன்சனில ரூம் போட்டு வேலைக்கு போறது மாதிரி நல்லவன் வேஷம் போட்டேன். ஆனா சத்தம் காட்டாமா வெளி ஊருகள்ள போய் இடம் மாத்தி இடம் திருட்டு, அடிதடின்னு சம்பாதிக்க ஆரம்பிச்சேன். நான் இருக்குற இடத்தில நல்ல பேரு இருக்கும் ஆனா நிஜத்தில ரெட்டை வாழ்க்கை ".

" என் உண்மை கதை தெரிஞ்சது சில பேருதான் . அதுல நம்ம காலனி அய்யரும் ஒருத்தர். இப்பவும் அவர் வீட்டுல இருதவன மிரட்டி காலி பண்ணத்தான் வந்தேன். அது முடிஞ்சது . அய்யரு வேற ஆளுக்கு வீட்ட பேசிட்டு இருக்காரு. அது முடிஞ்சதும் அய்யரு எனக்கு ஒரு லட்சம் ரூபா தாறதா பேச்சு . நான் போட்டது எல்லாம் ரெட்டை வேஷம் ஆத்தா ... என்னை மன்னிச்சுரு " .

சொர்ணம் பேச்சே இல்லாமல் இருந்தாள்.

"அட பாவி உன்கிட்ட இருந்த ஒரே ஒரு நல்ல குணத்த வச்சி தப்பா புரிஞ்சிகிட்டேனோ . தலை வலிக்குது சாமி , மிச்ச கதைய காலையில பேசிக்குவோம் . இப்ப தூங்கு . உன் பாரத்தை எந்தலையில இறக்கிட்ட , இனிமேல நான் எப்படி தூங்கப்போறேனோ " .

இரவு ஒரு மணி வரை தூக்கம் வராமல் புரண்ட சொர்ணம் , வாசலில் எட்டி பார்த்தாள். அங்கே மணி இல்லை .

Ravee
01-08-2010, 12:24 AM
இறுதிபாகம்


சின்னமணி - மறுபிறப்பு



http://murugan.org/temples/parankundram_gopuram-2.jpg





மறுநாள் காலை எழுந்து , வாசல் தொளித்து கோலம் போடும் போதும் அய்யர் வீட்டை பார்த்தாள். மணி இருந்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை . வேகமாக அடுப்பை பற்ற வைத்து சமையல் வேலைகளை ஆரம்பித்த போது வாசலில் நிழல் ஆடியது . திரும்பி பார்த்தாள். மணி கையில் ஒரு பழைய தகரப்பெட்டியுடன் .

என்னடா கொட்டுறதை எல்லாம் கொட்டிட்டு ஊருக்கு கிளம்பிட்டியா . அப்ப ஆத்தான்னு கூப்பிடதேல்லாம் சும்மாதானா ...குத்தலாக சொர்ணம் கேட்க... அந்த இருபத்தி எட்டு வயது , வேலமரம் வெட்டி போட்டது போல அவள் காலில் விழுந்தது . ஆத்தா அப்படி சொல்லாத உன் வாயாலே ... இந்த களவாணி பயல இன்னும் நம்புறியா நீ . இங்க பாரு நான் இங்கிட்டு வந்தும் சும்மா இல்ல. கை அரிக்கும் போது எல்லாம் களவாடி இருக்கேன் . சின்னமணிய ஏவி விட்டு மிரண்டு கிடக்குற பயலுவகிட்ட அடிச்சது தான் இதெல்லாம் . ஆனா அடிச்சவனுங்க எவனும் யோக்கியம் இல்லைன்னு தான் அப்ப நெனச்சேன் . இப்பத்தான் புரியுது அவங்க யோக்கியதை பத்தி பேச எனக்கு என்ன யோக்கியதை இருக்கு.

பெட்டியை மணி திறக்க , சொர்ணம் வாய் அடைத்து போனாள். சுமார் ஒரு நூத்தி ஐம்பது பவுன் நகை இருக்கும்.

ஏண்டா இப்ப என்ன செய்யப்போற ...

ஆத்தா சாவுன்னா என்னன்னு கண்ணால பார்த்துட்டேன்.... சின்னவனுக்காவது கதறி அழ நான் இருந்தேன் . அதே நா போயிருந்தா ஒரு நாதி இருந்து இருக்காது . ஏதோ ஒரு தெரு நாய் தண்ணிய போட்டு திமிரா செத்துப்போச்சுன்னு அனாதை பொணமா அள்ளிக்கொண்டு போட்டு இருப்பானுங்க . சின்னமணி எனக்கு கண்ணத்தெறந்த சாமி . அட அடிச்சி புடுங்கி அனுபவிக்க வழி இல்லாம பொட்டியில புதைச்சு வச்சு வாழுறது ஒரு வாழ்வான்னு அவன் சாவு என்ன கேட்டுச்சி . சத்தியமா சொல்லுறேன் , போலிசு என் பழைய ஜாதகம் எல்லாம் பொரட்டி பார்த்திடும் , இதோட இந்த மணி வாழ்க்கை முடிஞ்சதுன்னு நெனச்சேன் ,

எங்க ஆத்தா, நீ வந்து மறு வாழ்வு கொடுத்துருக்க . நீ இல்லாட்டி நான் .................... செத்து போய் இருப்பேன் .

கிழவி கிட்ட நீ பேசிட்டு இருந்த பாரு , அந்த ஒரே நல்லதனத்தால உன் மனசுல நா உன் புள்ள மாதிரி இருக்கேன்னா ..... சத்தியமா சொல்லுறேன் நான் இனி ஆயிசு முழுசும் நல்லவனா மாறி உன் காலடியிலேயே கிடைக்கணும் . எங்க ஆத்தாளுக்கு காவக்காரனா, வேலைக்காரனா இருக்கணும் . இப்ப என் கையில இருக்குற நகை எல்லாத்தையும் கொண்டு போய் ஸ்டேசனில கொடுத்து என் தப்ப சொல்லி அவுக என்ன தண்டனைதாராகளோ அதை வாங்கி அனுபவிச்சிட்டு ஒரு மனுசனா உன் முன்னால வரேன் .

மணி அவள் முகம் பார்க்காமல் பெட்டியுடன் கிளம்பினான் . கடையை விட்டு ஒரு நூறு அடி நடந்த பிறகு " நில்லுடா " என்று சொர்ணம் கத்தினாள்.

அந்த குரலை மீறி மணியால் நடக்க முடியவில்லை.

கொண்டாடா , அவன் கையில் இருந்த பெட்டிய வெடுக்கென்னு புடுங்கி கொண்டு போனாள் சொர்ணம் . ஜெயிலுக்கு போறதுன்னா என்னன்னு தெரியுமா , தப்பு பண்ணவன் திருந்தனும்ன்னுதான் . திருந்துனவனுக்கு நல்லவனா வாழ வாழ்க்கை கொடுக்கணும் . எந்த போலீசுகிட்ட போகப்போற ... என் முருகன விட பெரிய போலிசு யாருடா இருக்கா வா அவன்கிட்ட போவோம் , சாமி கடவுளே இத்தன காலம் வாழத்தெரியாம வாழ்ந்துட்டேன் இனிமே எனக்கு ஒரு நல்ல வழி காமின்னு அவன் கால்ல போய் விழுவோம் .

ஏண்டா இவனுக்குப்போய் இப்படி நாயா பேயா அலையுறோம்ன்னு நெனச்சப்ப தெரியல. ஒவ்வொரு போரப்புளையும் ஒரு அர்த்தம் இருக்குடா . சின்னமணி இருக்கானே அவன் வாழும் போது ஒண்ணும் பெரிசா சாதிக்கலை. ஆனா சாகும் போது ஒரு மிருகத்தை மனுசனா மாத்திட்டு போயிருக்கான். அவன் சாதிச்சதில பத்துல ஒரு பங்கு நாம சாதிக்க வேணாம் .. வாழ்ந்து காட்டனும்டா . நீ பண்ண தப்ப எல்லாம் தலைய சுத்தி போடு. புதுசா ஒரு வாழ்க்கைய தொடங்கு . மனுசனா வாழ்ந்து காட்டு. ...

சொல்லிக்கொண்டே அந்த அந்த பெட்டியில் இருந்த நகைகளை அள்ளி ஒரு மஞ்சள் துணிப்பையில் அள்ளிப் போட்டாள்., அவன் கையை பிடித்துக்கொண்டு தரதரவென கோவிலுக்கு இழுத்துப்போனாள் . அடி வாரத்தில் முடிக்காணிக்கை கொடுத்து அர்ச்சனை தட்டோட முருகன் சந்நிதியில் நின்ற போது அர்ச்சகர் கேட்டார் ....

யாரு பேருக்கு அர்ச்சனை..................

இவனுக்குத்தான் சாமி .....பேரு சின்னமணி.... செத்துப்போய் , மறுபொழப்பு பொழச்சு வந்து இருக்கான் மனுசனா. இனி வாழ்க்கை முழுசும் எல்லா சுகத்தோட நல்ல புத்தியோட இருக்க .... சாமி பாதத்தில வச்சு தாங்க என்று அர்ச்சனை தட்டையும் காப்பு கயிறையும் தந்தாள் .

கொடிமரம் சுத்தி வந்து சன்னதியில் விழுந்து கும்பிட்டு எழுந்தவுடன் சொர்ணம் சொன்னாள். இந்தா பாருடா ரெண்டு நாளுக்கு முன்ன செத்து போனது மணி . இனி உன் பேரு சின்னமணி . செத்தாதான் மனுஷனுக்கு மறுபிறப்பு இல்ல. உன் தப்ப நெனச்சி திருந்தினாலே அதுவும் மறு பொறப்புத்தான்.

இதை நெனப்பில வச்சிக்கிட்டு இந்தா நீ பண்ண பாவத்த எல்லாம் முருகன் கிட்ட சேர்த்துடு . இத கொண்டு போய் போலீசுல கொடுத்தா உன் பொடனியில போட்டு இன்னும் உன் வாழ்க்கையை சீரழிச்சி புடுவானுங்க .

அவள் கொடுத்த மஞ்சள்பையை அந்த பாவ மூட்டையை அப்படியே உண்டியலில் போட்டான் மணி ...

இல்லை இல்லை புதிதாய் பிறந்த சின்னமணி.

Ravee
01-08-2010, 12:28 AM
கதை முடிஞ்சுதா ரவி.




கதை முடிந்துவிட்டதா? எனக்கேனோ அப்படி தெரியலையே,.

தொடருங்கள் ரவீ


ஆஹா அலுவலுக்கு கிளம்பும் அவசரத்தில் தொடரும் போட மறந்துட்டேன் .....

Ravee
01-08-2010, 12:36 AM
காவல்துறையின் செயற்பாட்டை தத்துருபமாக சொல்லியிருக்கின்றீர்கள். சொர்ணம் மணியை மீட்பாளா? அல்லது பொய்கேசில் சிறை செல்லப்போகின்றானா? ரவி விரைவாக அடுத்த பாகத்தை தாருங்கள்


காவல்நிலைய உரையாடல்கள் வெகு யதார்த்தம். கதையின் பாதையை முன்பே தீர்மானித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கதையின் தலைப்பு 'சின்னமணி' ஆனால் இரண்டாம் அத்தியாயத்திலேயே அநியாயமாய் சின்னமணியின் மரணம். இனி கதைபோகும் போக்கை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

வியாசன் கீதம் உங்க ரெண்டு பேருக்கும் கதை முடிவு திருப்தியா ?

அது என்னவோ வியாசன் ஒரு போலிசயாவது நல்லமாதிரி எழுத மனசு வர மாட்டேங்குது. ரவுடி பயல் கூட திருந்தலாம் போல இவங்க திருந்துறது ... கெளதம் மேனன் படம் பார்த்து திருப்தி பட்டுக்க வேண்டியதுதான்.... :p

கீதம்
01-08-2010, 01:04 AM
கதையின் முடிவு நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை. எப்படியும் போலிஸ் மோப்பம் பிடித்துவிடுவார்கள் என்று ஒரு இடத்தில் மணியே சொல்வது போலுள்ளது. அப்படிக் கண்டுபிடித்தால் திருந்திவிட்ட மணியை போலிஸ் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுமா?

எப்படியும் திருடிய பொருட்கள் உரியவரிடம் சேர்க்கப்படப்போவதில்லை. இதன்மூலம் மணி செய்த தவறுக்கு பிராயச்சித்தம் எப்படிக்கிடைக்கும்?

இதுபோன்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. ஆனால் மணியைக் காவல்துறையினர் கண்டுபிடிக்காவிடில் இனி அவனுக்கு ஒரு புதியவாழ்க்கை அமைவது உறுதி.

மனதுக்கு திருப்தி தரும் விதத்தில் கதை முடிவு அமைந்திருப்பதில் மகிழ்ச்சியே. சம்பவக் கோர்வையிலும், மணி மனம் மாறிய காரணம் அழுத்தமாகச் சொல்லப்பட்டவிதத்திலும் கதைக்கு வெற்றியே. பாராட்டுகள், ரவி அவர்களே.

Ravee
01-08-2010, 01:24 AM
கதையின் முடிவு நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை. எப்படியும் போலிஸ் மோப்பம் பிடித்துவிடுவார்கள் என்று ஒரு இடத்தில் மணியே சொல்வது போலுள்ளது. அப்படிக் கண்டுபிடித்தால் திருந்திவிட்ட மணியை போலிஸ் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுமா?

எப்படியும் திருடிய பொருட்கள் உரியவரிடம் சேர்க்கப்படப்போவதில்லை. இதன்மூலம் மணி செய்த தவறுக்கு பிராயச்சித்தம் எப்படிக்கிடைக்கும்?

இதுபோன்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. ஆனால் மணியைக் காவல்துறையினர் கண்டுபிடிக்காவிடில் இனி அவனுக்கு ஒரு புதியவாழ்க்கை அமைவது உறுதி.

மனதுக்கு திருப்தி தரும் விதத்தில் கதை முடிவு அமைந்திருப்பதில் மகிழ்ச்சியே. சம்பவக் கோர்வையிலும், மணி மனம் மாறிய காரணம் அழுத்தமாகச் சொல்லப்பட்டவிதத்திலும் கதைக்கு வெற்றியே. பாராட்டுகள், ரவி அவர்களே.

நீ எதை இழந்தாயோ அதுவும் இங்கிருந்து எடுக்கப்பட்டதே

நீ எதை கொடுத்தாயோ அதுவும் இங்கிருந்து கொடுக்கப்பட்டதே

எனவே தனக்கு சொந்தம் இல்லாத பொருளை எல்லோருக்கும் பொதுவான கடவுள் உண்டியலில் சேர்த்தாக குறிப்பிட்டு உள்ளேன் .

கிறிஸ்துவத்தில் எனக்கு பிடித்த விஷயம் பாவமன்னிப்பு . ஒரு திருந்திய மனிதன் பாவமன்னிப்பு பெற்ற பின் குற்ற உணர்ச்சி இல்லாமல் அடுத்த காரியங்களை செய்யலாம் . பாவத்தின் சம்பளம் அடுத்த பிறவியில் வரும் போது வரட்டும்.

மணி மறுமுறை காவல் துறையிடம் சிக்கினாலும் என்ன பெரிதாக நடக்கும் ஆயிரம் பெற்ற இடத்தில் ஐந்தாயிரத்திற்கு பேரம் பேசுவார்கள் . மேலும் சாட்சி என்று ஒன்று வேண்டுமே . மணியின் மனசாட்சி வருந்தியதை விட பெரிய தண்டனையை யாராலும் கொடுக்க முடியாது என்பதே என் கருத்து .

மதி
01-08-2010, 03:43 AM
சின்னமணி போய் சின்னமணி வந்தான். சம்பவங்களும் வசனங்களும் எதார்த்தம். மனம் மாறும் காட்சி அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது..

திருந்திய மணி இனியாவது நல்ல வாழ்க்கை வாழட்டும்..

வாழ்த்துகள் ரவீண்ணே

வியாசன்
01-08-2010, 07:35 AM
எனக்கொன்னவோ அந்த நகைகளை உண்டியலில் போடாமல் விட்டிருக்கலாம் போல் தோன்றுகின்றது. அந்த பணத்தை கொண்டு பல அநாதைகளை வாழவைத்திருக்க முடியும். இப்படி முடித்திருந்தால் ஆரம்பத்தில் நீங்கள் இணைத்திருந்த படத்துக்கும் கதைக்கும் பொருத்தமாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. மணி சின்னமணி ஆகியது நன்றாக உள்ளது.
ரவி அண்மையில் சென்னை வந்திருந்தபோது ஒரு பொலிஸ்காரர் அநியாயத்துக்கு நல்லவராக இருக்கின்றார். விமானநிலையத்தில் பயணபையுடன் சென்றபோது அவர் சொன்னார் எங்களுக்கு யார் யார் என்ன கொண்டு வருவார்கள் என்று தெரியும் நீங்கள் போங்கள் சார் என்றார். இந்திய பணம் மாற்ற சென்றபோது அவர் சொன்னார் இங்கெல்லாம் மாற்றவேண்டாம். அநியாயமாக கொடுப்பார்கள். நான் ஆட்டோவுக்கு கொடுக்க பணமில்லை என்றபோது சிறியதொகையாக மாற்றுங்கள் என்று புத்திமதி சொன்னார்.

மாறிய மணிக்கு இல்லை சின்னமணிக்கு வாழ்த்துக்கள் ஒரு தாயும் கிடைத்துவிட்டாள். இதில் சொர்ணத்துக்குதான் சிறிது ஏமாற்றம் போல் தெரிகிறது.
பொருத்தமான படங்கள் வாழ்த்துக்கள் மணி ஐயோ ரவி

அன்புரசிகன்
01-08-2010, 12:40 PM
சின்னமணியால் திருந்தினானா இல்லை சொர்ணத்தின் பாச பேச்சினால் மாறினானா என தெரியவில்லை. ஆனால் கதை சுபமாக முடிந்தது. முதலாவது பாகம் மிக விறுவிறுப்பாக ஆரம்பித்தது. கதை பெரிதாக போகும் என எதிர்பார்த்தால் தடால் என்று சுபம் போட்டு முடித்துவிட்டீர்கள்.

வாழ்த்துக்கள்.

Ravee
02-08-2010, 09:00 AM
சின்னமணியால் திருந்தினானா இல்லை சொர்ணத்தின் பாச பேச்சினால் மாறினானா என தெரியவில்லை. ஆனால் கதை சுபமாக முடிந்தது. முதலாவது பாகம் மிக விறுவிறுப்பாக ஆரம்பித்தது. கதை பெரிதாக போகும் என எதிர்பார்த்தால் தடால் என்று சுபம் போட்டு முடித்துவிட்டீர்கள்.

வாழ்த்துக்கள்.

ஐயோ அன்பு தொடர்கதைங்கிறது பிரசவம் மாதிரி , எப்படா இறக்கி வைப்போம் என்று ஆகி விட்டது . கொஞ்சம் கதையை வளர்த்தால் வேறுபக்கம் போய்விடுமோ என்று பயமாகி விட்டது . பிறகு அதிகமா தமிழ் படம் பார்த்த பாதிப்பு சுபமா முடிச்சுட்டேன்.

Ravee
02-08-2010, 09:08 AM
எனக்கொன்னவோ அந்த நகைகளை உண்டியலில் போடாமல் விட்டிருக்கலாம் போல் தோன்றுகின்றது. அந்த பணத்தை கொண்டு பல அநாதைகளை வாழவைத்திருக்க முடியும். இப்படி முடித்திருந்தால் ஆரம்பத்தில் நீங்கள் இணைத்திருந்த படத்துக்கும் கதைக்கும் பொருத்தமாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. மணி சின்னமணி ஆகியது நன்றாக உள்ளது.
ரவி அண்மையில் சென்னை வந்திருந்தபோது ஒரு பொலிஸ்காரர் அநியாயத்துக்கு நல்லவராக இருக்கின்றார். விமானநிலையத்தில் பயணபையுடன் சென்றபோது அவர் சொன்னார் எங்களுக்கு யார் யார் என்ன கொண்டு வருவார்கள் என்று தெரியும் நீங்கள் போங்கள் சார் என்றார். இந்திய பணம் மாற்ற சென்றபோது அவர் சொன்னார் இங்கெல்லாம் மாற்றவேண்டாம். அநியாயமாக கொடுப்பார்கள். நான் ஆட்டோவுக்கு கொடுக்க பணமில்லை என்றபோது சிறியதொகையாக மாற்றுங்கள் என்று புத்திமதி சொன்னார்.

மாறிய மணிக்கு இல்லை சின்னமணிக்கு வாழ்த்துக்கள் ஒரு தாயும் கிடைத்துவிட்டாள். இதில் சொர்ணத்துக்குதான் சிறிது ஏமாற்றம் போல் தெரிகிறது.
பொருத்தமான படங்கள் வாழ்த்துக்கள் மணி ஐயோ ரவி

வியாசன் , எனக்கு தெரிஞ்சி ஒரு எஸ் ஐ இருந்தார் , பல்லை கடித்து எட்டு வருஷம் சர்விஸ் பண்ணார் , பாவம் நல்லவரால அதுக்கு மேல தாக்கு பிடிக்க முடியலை . இப்போ அயனாவரத்தில் ஓட்டல் நடத்துறார் . நாலு பேருக்கு காசு வாங்கிட்டு நல்ல சாப்பாடு போட்டாலும் புண்ணியம் என்று .
ம்ம் சொர்ணத்துக்கும் உங்கள மாதிரி ஒரு நல்லவர் வாழ்வு கொடுக்காமலா போய்டுவார் , கவலைபடாதிங்க சின்னமணி ....ச்சே ச்சே வியாசன் ........ :lachen001: :lachen001: :lachen001:

Ravee
02-08-2010, 09:12 AM
சின்னமணி போய் சின்னமணி வந்தான். சம்பவங்களும் வசனங்களும் எதார்த்தம். மனம் மாறும் காட்சி அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது..

திருந்திய மணி இனியாவது நல்ல வாழ்க்கை வாழட்டும்..

வாழ்த்துகள் ரவீண்ணே

ஆஹா அங்க கடிச்சி இங்க கடிச்சி இப்ப என்னையும் கடிக்க வந்துட்டாரு ,
மன்றத்துல யாரவாது காப்பாத்துங்க ப்ளீஸ் ................ :violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010:

மதி
02-08-2010, 11:20 AM
ஆஹா அங்க கடிச்சி இங்க கடிச்சி இப்ப என்னையும் கடிக்க வந்துட்டாரு ,
மன்றத்துல யாரவாது காப்பாத்துங்க ப்ளீஸ் ................ :violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010:
அண்ணா வேணாம்னா..மாமா??

Ravee
03-08-2010, 06:01 AM
அண்ணா வேணாம்னா..மாமா??

:medium-smiley-100::medium-smiley-045::medium-smiley-100:

வியாசன்
03-08-2010, 08:29 AM
அண்ணா வேணாம்னா..மாமா??


மதி இதை எல்லோருக்கு முன்னாடியும் சொல்வதா? ரவிமாமா அழுகின்றார் :lachen001: :lachen001: :lachen001:

மதி
03-08-2010, 08:34 AM
:medium-smiley-100::medium-smiley-045::medium-smiley-100:
:D:D:D:D

இடுக்கண் வருங்கால் நகுக..



மதி இதை எல்லோருக்கு முன்னாடியும் சொல்வதா? ரவிமாமா அழுகின்றார் :lachen001: :lachen001: :lachen001:
:lachen001::lachen001::lachen001::lachen001:

Ravee
03-08-2010, 06:10 PM
:medium-smiley-065::medium-smiley-065::medium-smiley-065:
:D:D:D:D


இடுக்கண் வருங்கால் நகுக..

:medium-smiley-065::medium-smiley-065::medium-smiley-065:

பாரதி
05-08-2010, 10:40 AM
இயல்பான வசனங்களுடன் படிப்பினை தரும் ஒரு கதை.
நன்றாக இருந்தது நண்பரே.

Ravee
05-08-2010, 03:10 PM
இயல்பான வசனங்களுடன் படிப்பினை தரும் ஒரு கதை.
நன்றாக இருந்தது நண்பரே.

உங்கள் கருத்துக்கு நன்றி பாரதி ....:)

ஆதவா
05-08-2010, 03:22 PM
சிறப்பாக இருக்கிறது.. இருந்தாலும் நடைமுறைக்கு ஒவ்வாத முடிவுதான். சிலசமயம் ஏன் இருக்கக்கூடாது என்றும் தோன்றும் முடிவு,.

பிராணிகளுக்கும் மனிதனுக்கும் இடையிலான தொடர்புமுறை அன்பு எனும் மொழியால்தானே... அதன் ஏக்கமும் பாசமும் நம்மில் நுழைந்து மனதைக் குழைத்து நம்மை நமக்கே உணர்த்துவன. சின்னமணியின் இறப்பு, மணியெனும் மனிதனின் பிறப்பு!!

வாழ்த்துக்கள் ரவீ!

Ravee
05-08-2010, 04:11 PM
வாழ்த்துக்கள் ரவீ!


சிறப்பாக இருக்கிறது.. இருந்தாலும் நடைமுறைக்கு ஒவ்வாத முடிவுதான். சிலசமயம் ஏன் இருக்கக்கூடாது என்றும் தோன்றும் முடிவு.

ஆதங்கம்தான் என் கதை ஆதவா. சின்ன வயதில் நான் பார்த்த ஒரு பெண்ணின் மறுவடிவம்தான் சொர்ணம்.

இட்லிகடை நடத்திவந்த கிழவி கஷ்டப்பட்டு தன மகளை கல்யாணம் செய்து கொடுக்க மூன்று வருடத்தில் பிள்ளை இல்லை என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். அவன் வேறு ஒரு கல்யாணம் செய்த பின்தான் தெரிந்து குறை அவனிடத்தில் என்று. ஆனால் அந்த அக்கா கடைசிவரை மறுகல்யாணம் செய்யாமல் தனியாகவே கடை நடத்தினார். ஆனால் அந்த சந்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் அத்தனை உதவி செய்வார். ஒரு பெண் தாயுள்ளத்தோடு நடந்துகொண்டால் அவருடன் பழகுபவர்கள் அவரை தாயாகத்தான் பார்ப்பார்கள் .