PDA

View Full Version : சாயாவனம் - நாவல் பற்றிய குறிப்புகள்



கலையரசி
01-07-2010, 07:34 AM
சாகித்ய அகாடெமி விருது பெற்றுள்ள சா.கந்தசாமியின் ‘சாயாவனம்’ நாவலைச் சமீபத்தில் வாசித்தேன். மிகவும் அருமையான ஒரு நாவல். 1969 ஆம் ஆண்டில் தம் 25 ஆம் வயதில்(!) சா.கந்தசாமி இந்த நாவலை எழுதியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் சாயாவனம் எனும் கிராமத்தில் ஒரு புளியந்தோப்பை விலைக்கு வாங்கும் சிதம்பரம் எனும் இளைஞன், அந்தத் தோப்பையும் அதனையொட்டி வானம் தெரியாத அளவிற்கு மரஞ்செடி கொடிகள் வளர்ந்து நிழல் மண்டிக்கிடந்த காட்டையும் கொஞ்சங் கொஞ்சமாக வெட்டியும், வெட்ட முடியாதவற்றை தீயிட்டுப் பொசுக்கியும் அவ்வனத்தை வெட்ட வெளியாக்கி, அதில் கரும்பு ஆலை நிறுவுவதில் வெற்றி பெறுவதே கதை.

காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பதிப்பில் எழுத்தாளர் பாவண்ணன் மிக அருமையான முன்னுரை எழுதியுள்ளார். அவரது முன்னுரையிலிருந்து கொஞ்சம்:

”அழிவின் சித்திரத்தைத் துல்லியமான நிறங்களுடன் தீட்டிக் காட்டும் தமிழ்ப்படைப்பு ‘சாயாவனம்’.

மரங்களோடு பின்னிப் பிணைந்து வேர்கள் எங்கிருக்கின்றன எனக் கண்டறிய இயலாவண்ணம், அடர்ந்து வளர்ந்து செழித்திருக்கும் பலவகையான கொடிகளை அறுத்தல், தேனடையைக் கலைத்தல் என நாவலில் இடம் பெறும் ஒவ்வொரு காட்சியும் தன்னளவில் குறியீட்டுத் தன்மை கொண்டதாகவே உள்ளது.

இப்படி ஒரு தோப்பை அங்குல அங்குலமாக அழிக்கும் காட்சிகளை ஒரு படைப்பாளி தொகுத்து எழுத வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வியை முன் வைத்து யோசிக்கும் போது அதன் படிம எல்லைகளை நாம் பல நிலைகளில் விரிவாக்கிக் கொள்ள முடியும். சாயாவனம் ஒரு தோப்பு அல்ல, நம் நாடு, நம் மண் எனக் குறியீடாகப் பார்க்கும் போது, இந்த அழிவின் வலியை நம்மால் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும்.

சிதம்பரத்தின் வெற்றியையும் அகச்சரிவையும் இணைத்தே நாம் காண வேண்டியிருக்கிறது. வெற்றி என்னும் ஏணியில் ஒவ்வொரு படியாக ஏற ஏற, அவன் மனத்தளவில் ஒவ்வொரு படியாக இறங்கிச் சரிகிறான்.

நிழல் மண்டிய காட்டை அழிக்கத் தொடங்கிய முதல் நாளில், துணைக்கு ஆளின்றி தானே தொரட்டியை எடுத்து மரங்களைப் பற்றி ஏறியிருக்கும் கொடிகளையெல்லாம் இழுத்து வெட்டி வீசும் காட்சியில் ஒரு முக்கியமான சம்பவம் இடம் பெறுகிறது.

அவன் தொரட்டியை இழுத்த வேகத்தில், தழைகள் உதிர்கின்றன. பிறகு காட்டு மலர்கள் பொல பொலவெனக் கொட்டுகின்றன. இன்னும் இன்னுமென்று இழுக்க, மேற்கிளையில் இருந்த குருவிக் கூடொன்று சரிந்து விழுகிறது. ஒரு சின்னஞ்சிறு குருவியின் பரிதாபக் குரல், இடைவிடாது கேட்டபடியே இருக்கிறது.

தொடக்கத்தில் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. தன் வேலையிலேயே மூழ்கியவனாக இருக்கிறான். ஆனாலும் வேதனை மிகுந்த அக்குரலின் அழைப்பை வெகுநேரம் கேட்க இயலாமல் தொரட்டியை அப்படியே விட்டு விட்டு உடம்பெல்லாம் முட்கள் கீற உள்ளே செல்கிறான். இறக்கை முளைக்காத குஞ்சொன்று வெட்டுண்ட ஒரு கிளையின் நுனியில் செருகிக் கொண்டு கிடப்பதைப் பார்க்கிறான். அவன் கண்களில் நீர் திரண்டு நிற்கிறது.

உடம்பில் முள் கீறுவதையும் பொருட்படுத்தாமல் தலை குனிந்தபடியே வெளியே வந்து ஒரு மரத்தடியில் தலைகவிழ்ந்து உட்கார்கிறான். ஒருவகையான குற்ற உணர்வால் அவன் மனத்தில் வேதனை படர்கிறது. குருவிகளையொத்த பறவைகள் சுதந்திரமாகத் திரிந்து வாழக்கூடிய அதன் இருப்பிடத்தைத் தன் பேராசையால் கைப்பற்றிக் கொண்டதை நினைத்து அவன் மனம் ஒரு கணம் குழம்பித் தவிக்கிறது.

நாவலின் இறுதியில் இன்னொரு காட்சி இடம் பெறுகிறது. ஆலை தொடர்ந்து இயங்க, தொடர்ச்சியாகக் கரும்பு தேவைப்பட்டபடி இருக்கிறது. அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களில் பயிரிடப்பட்ட கரும்பையெல்லாம் அவனே கொள்முதல் செய்கிறான். அதற்காகவே வண்டிகள் இயக்கப்படுகின்றன.

ஒரு நாள் வெளியூரிலிருந்து கரும்புக்கட்டுகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு ஆற்றைக் கடந்து வரும் போது வெள்ளத்தின் இழுப்பில் அகப்பட்டு உயிர்விடும் இளைஞனின் மரணச்செய்தியை ஒரு தகவல் என்கிற அளவில் மட்டுமே அவன் உள்வாங்கிக் கொள்கிறான். அப்போது இரக்கமோ, குற்ற உணர்ச்சியோ எதுவுமற்ற உலர்ந்த மனத்தவனாக அவனைத் தகவமைத்து விடுகிறது காலம். மனத்தளவில் நிகழும் அகச்சரிவுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு”.

மனிதன் காடுகளை அழித்துச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு உண்டாக்கியதால் ஏற்பட்ட ஓசோனில் ஓட்டை, புவி வெப்பமயமாதல் போன்ற மோசமான பின் விளைவுகளை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். சுற்றுச்சூழல் பற்றி அதிகம் விழிப்புணர்வு இல்லாத அந்தக் காலத்தில் இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்நாவல், இன்றையச் சூழ்நிலையில் மிகுந்த முக்கியத் துவத்தைப் பெறுவதோடு, பொருத்தமான வாசிப்பு அனுபவத்தையும் தருகிறது.

சா.கந்தசாமியின் பேட்டிக்கு முத்துவேல், ஏற்கெனவே மன்றத்தில் இணைப்புக் கொடுத்துள்ளார். அது கீழே:-

http://www.tamilauthors.com/10/14.html

சிவா.ஜி
01-07-2010, 09:06 AM
நல்லதோர் நாவலைப் பற்றியும்...அதன் குறியீடுகளின் விளக்கத்தையும் பதிந்து, பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க கலையரசி. நாவலை வாங்கி வாசிக்க வேண்டும்.

ஆதி
01-07-2010, 10:24 AM
சாயாவனம் நாடகத்தை சிறுவயதில் பொதிகையில் பார்த்திருக்கேன்.. உணர்வுப்பூர்வமான கதை அது..

நாவல் வாங்கி படிக்க வேண்டும், இப்ப எல்லாம் வாசிப்புக்கு அதிகமாய் நேரம் ஒதுக்க இயல்வதில்லை, நிறைய படிக்க வேண்டும் ஆனால் பணி பளு, முழுக்க முழுக்க நேரத்தை ஆக்ரமித்துவிட்டது.. அந்த வகையில் நீங்க குடுத்துவச்சவங்க கலையரசி அக்கா..

பகிர்வுக்கு நன்றி..

பாரதி
01-07-2010, 11:11 AM
மன்றத்தில் புத்தகங்களைக் குறித்த பார்வை குறைவாகத்தான் இருக்கிறது. குறிக்கோளின் ஆரம்பத்தில் இருந்த நோக்கம் காலப்போக்கில் மாற்றத்தை அடைகிறது என்பதாக உங்கள் விமர்சனம் இருக்கிறதென எண்ணுகிறேன். திரு. கந்தசாமி அவர்களின் கதைகள் தமிழில் குறிப்பிடத்தக்க இடம் பெற்றவை. அவரது சில கதைகளை படித்ததுண்டு. ஆனால் அவற்றில் சாயாவனம் இல்லை. இப்போது படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. உங்கள் பார்வையை பதித்தமைக்கு நன்றி.

கீதம்
01-07-2010, 09:45 PM
நாவல் பற்றிய விமர்சனம் படிக்கத் தூண்டுகிறது. ஆனால் நான் இருக்குமிடத்தில் வாய்ப்பில்லாததால் மனம் ஏங்குகிறது. வய்ப்பு நேரும்போது கட்டாயம் படிப்பேன். பகிர்வுக்கு நன்றி, அக்கா.

பா.ராஜேஷ்
03-07-2010, 06:33 PM
பசுமையை அழித்து வெற்றி கண்டதாக பகல் கனவு காண்கிறான் மனிதன். உண்மையில் இயற்கையை அழிக்கையில் தமக்கு தாமே அழிவு தேடி கொள்கிறான். காலம்தான் இதை மனிதனுக்கு உணர்த்த வேண்டும்... நல்லதோர் பகிர்விற்கு நன்றி மேடம்.

கலையரசி
06-07-2010, 01:41 PM
நல்லதோர் நாவலைப் பற்றியும்...அதன் குறியீடுகளின் விளக்கத்தையும் பதிந்து, பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க கலையரசி. நாவலை வாங்கி வாசிக்க வேண்டும்.

மிகவும் நன்றி. நல்ல நாவலை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே சாயாவனம் பற்றி எழுதினேன்.

கலையரசி
06-07-2010, 01:47 PM
சாயாவனம் நாடகத்தை சிறுவயதில் பொதிகையில் பார்த்திருக்கேன்.. உணர்வுப்பூர்வமான கதை அது..

நாவல் வாங்கி படிக்க வேண்டும், இப்ப எல்லாம் வாசிப்புக்கு அதிகமாய் நேரம் ஒதுக்க இயல்வதில்லை, நிறைய படிக்க வேண்டும் ஆனால் பணி பளு, முழுக்க முழுக்க நேரத்தை ஆக்ரமித்துவிட்டது.. அந்த வகையில் நீங்க குடுத்துவச்சவங்க கலையரசி அக்கா..

பகிர்வுக்கு நன்றி..

எனக்கும் பணிச்சுமை & வீட்டு சமையல் வேலை இரண்டும் உண்டு. ஆனால் கிடைக்கும் கொஞ்ச நேர ஓய்வைக் கூட படிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்வேன். தொலைக்காட்சி பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லாததும் ஓய்வு நேரம் கிடைக்க ஒரு காரணம்.
பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி ஆதன்.

கலையரசி
06-07-2010, 01:59 PM
மன்றத்தில் புத்தகங்களைக் குறித்த பார்வை குறைவாகத்தான் இருக்கிறது. குறிக்கோளின் ஆரம்பத்தில் இருந்த நோக்கம் காலப்போக்கில் மாற்றத்தை அடைகிறது என்பதாக உங்கள் விமர்சனம் இருக்கிறதென எண்ணுகிறேன். பார்வையை பதித்தமைக்கு நன்றி.

இல்லை. சிதம்பரம் தான் நினைத்தபடியே அந்த வனத்தை அழித்துக் கரும்பு ஆலை நிறுவுவதில் வெற்றி பெறுகிறான். இயற்கை அவனுடன் தோற்று விட்டதாகத் தான் கதை முடிகிறது. ஆனால் உண்மையில் மனிதன் இயற்கையை வெல்வதாக நினைத்துத் தனக்குத் தானே குழி தோண்டிக் கொள்கிறான் என்பதைத் தான் குறியீடாக இந்தக் கதை உணர்த்துகிற*து. மனிதனின் இயற்கையுடன் இயைந்த வாழ்வே வெற்றி பெறும் என்பதை இன்று நாம் பல்வேறு சுற்றுச் சூழல் பாதிப்புகளால் உணர்கிறோம்.

ஆரம்ப காலத்தில் கரும்பு ஆலை போன்ற சிறிய தொழிற்சாலைகள் தோன்றிய போது குடிசைத் தொழில்களும், கைத்தொழில்களும் நசிந்தன. அதன் பின் பெரிய தொழில் நிறுவனங்கள் வந்த போது சின்ன ஆலைகள் மூடப்பட்டன. இப்போது பன்னாட்டு நிறுவனங்கள் வருகையால் உள் நாட்டு தொழில் நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.
இப்படி ஒன்றை அழித்து ஒன்று தோற்றம் கொள்கிறது. இதைத்தான் குறியீடாக இந்த நாவல் சுட்டிக் காட்டுகிறது.
மிக்க நன்றி பாரதி!

கலையரசி
06-07-2010, 02:02 PM
நாவல் பற்றிய விமர்சனம் படிக்கத் தூண்டுகிறது. ஆனால் நான் இருக்குமிடத்தில் வாய்ப்பில்லாததால் மனம் ஏங்குகிறது. வய்ப்பு நேரும்போது கட்டாயம் படிப்பேன். பகிர்வுக்கு நன்றி, அக்கா.

இந்தியா வரும் நாளில் அப்புத்தகத்தை உனக்குப் பரிசளிப்பேன் கீதம்! நன்றி கீதம்!

கலையரசி
06-07-2010, 02:07 PM
பசுமையை அழித்து வெற்றி கண்டதாக பகல் கனவு காண்கிறான் மனிதன். உண்மையில் இயற்கையை அழிக்கையில் தமக்கு தாமே அழிவு தேடி கொள்கிறான். காலம்தான் இதை மனிதனுக்கு உணர்த்த வேண்டும்... நல்லதோர் பகிர்விற்கு நன்றி மேடம்.

மிகவும் சரியான பின்னூட்டம். மிக்க நன்றி ராஜேஷ்!

கீதம்
06-07-2010, 11:43 PM
இந்தியா வரும் நாளில் அப்புத்தகத்தை உனக்குப் பரிசளிப்பேன் கீதம்!

உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி அக்கா.

shibly591
07-07-2010, 03:12 AM
நல்லதொரு நூல் பற்றிய தாங்களின் கட்டுரை அருமை..

பகிர்வுக்கு நன்றிகள்

கலையரசி
04-08-2010, 02:47 PM
நல்லதொரு நூல் பற்றிய தாங்களின் கட்டுரை அருமை..

பகிர்வுக்கு நன்றிகள்

நன்றி ஷிப்லி!

M.Rishan Shareef
05-08-2010, 01:03 AM
அன்பின் கலையரசி,

சாயாவனம் நாவல் அருமையான கருப்பொருளைக் கொண்டது. ஒரு விஷக் கிருமி உடலுக்குள் சென்று கொஞ்சம் கொஞ்சமாக உடல் முழுவதையுமே அரித்துவிடுவது போல, காட்டை அழிக்கவெனச் செல்லுமொருவன் முழு ஊரின் பசுமையையுமே அழித்துவிடுவதன் கதை.

நல்ல விமர்சனம். பாராட்டுக்கள் சகோதரி.

கலையரசி
09-08-2010, 01:23 PM
அன்பின் கலையரசி,

சாயாவனம் நாவல் அருமையான கருப்பொருளைக் கொண்டது. ஒரு விஷக் கிருமி உடலுக்குள் சென்று கொஞ்சம் கொஞ்சமாக உடல் முழுவதையுமே அரித்துவிடுவது போல, காட்டை அழிக்கவெனச் செல்லுமொருவன் முழு ஊரின் பசுமையையுமே அழித்துவிடுவதன் கதை.

நல்ல விமர்சனம். பாராட்டுக்கள் சகோதரி.

நாவலின் கருவை இரண்டே வரிகளில் மிகவும் அருமையாக விமர்சித்து விட்டீர்கள். பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
12-08-2010, 10:39 AM
நீ தந்தமையால் நானும் நூலைப் படிக்க வாய்ப்பு நேர்ந்தது. நன்றி, கலா.
சொ.ஞானசம்பந்தன்

"பொத்தனூர்"பிரபு
01-09-2010, 03:47 AM
படித்து முடித்த பொது மனசு என்ன செய்தது

////சிதம்பரத்தின் வெற்றியையும் அகச்சரிவையும் இணைத்தே நாம் காண வேண்டியிருக்கிறது. வெற்றி என்னும் ஏணியில் ஒவ்வொரு படியாக ஏற ஏற, அவன் மனத்தளவில் ஒவ்வொரு படியாக இறங்கிச் சரிகிறான். ///

ஆமாம்