PDA

View Full Version : அந்தக் காலம்



சொ.ஞானசம்பந்தன்
28-06-2010, 02:07 AM
அந்தக் காலம் என்பதற்கு வரையறை எதுவுமில்லை. 2000 ஆண்டுக்கு முற்பட்டதும் அந்தக் காலந்தான். நூறு ஆண்டிற்கு முந்தியதும் அந்தக் காலமே. நான் குறிப்பிடுவது என் 6 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தை. (1932-1942)

அப்போது தமிழர்கள் சாதி வாரியாகப் பிரிந்து வாழ்ந்தார்கள். (அந்த வாழ்க்கை முறை எப்போது தொடங்கியதோ தெரியாது). ஊர்களில் அக்ரஹாரம், செட்டித்தெரு, வெள்ளாழத்தெரு (வேளாளர் தெரு), கம்மாளர் வீதி, கொசத் (குயவர்) தெரு, வலைத் (வலையர்) தெரு, எடத் (இடையர்) தெரு என்று அவரவர் வாழும் பகுதிகள் பெயர் பெற்றிருந்தன. பலரும் கலந்து வாழ்ந்த பொதுத் தெருக்களும் உண்டு.

சிறுவர்கள் தங்கள் பகுதியில்தான் விளையாட வேண்டும். பள்ளிகளில் எந்த வேறுபாடும் அறியாமல் பழகி நண்பர்களாகிக் கூடி விளையாடுகிற பிள்ளைகளுள் சிலர், விலக்கப்பட்ட கனியை உண்பதற்கு ஏவாள் ஆசைப்பட்டது போல, வேறு தெருக்கூட்டாளிகளுடன் விளையாட ஆர்வங்கொண்டு அவர்களின் தெருவுக்கு எப்போதாவது போவதுண்டு. அப்போது மிக்க எச்சரிக்கை தேவை! நமது வீதிப் பெரியவர் யாராவது கடைகண்ணிக்குப் போகவோ வேறு காரணமாகவோ அங்கு வந்தால் அவரது கூர்மையான பருந்துப் பார்வையில் சிக்காமல் ஒளிந்துகொண்டு தப்பிக்கவேண்டும். விளையாட்டு மும்முரத்தில் பெரும்பாலும் அஜாக்கிரதையாய்த்தான் இருந்துவிடுவோம். அவர் தவறாமல் நம்மைக் கவனித்து அடையாளங்கண்டு, "டேய்! நீ வீரப்பிள்ளை மகனாச்சே! இங்கே வந்திருக்கியா? ஒங்க அப்பாகிட்டே சொல்றேன்" அன்று முன்னறிவிப்பு கொடுத்து முடிக்குமுன்பே நாம் எடுக்கிற ஓட்டம் வீடு வந்துதான் நிற்கும்.

சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவர் என்பதை அவர் நிரூபித்தே தீர்வார். தாம் துப்பறிந்து கண்டுபிடித்த விஷயத்தை அன்றைய தினமே, சூட்டோடு சூடாய், மெனக்கெட்டு, அக்கறையுடன், மெய் வருத்தம் பாராமல், வீடு தேடிவந்து சொல்லிவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பார். அதன் விளைவால் செமத்தியான அடி விழும் என்பது சர்வ நிச்சயம்.

சாதிப் பெயரால்தான் மக்கள் ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டார்கள்.

"நமஸ்காரம், பத்தரே, சவுக்கியமா இருக்கீங்களா?"

"இருக்கேன், முதலியாரே, ஒங்க புண்ணியத்திலே."

"கடவுள் புண்ணியம்னு சொல்லுங்க"

என்பது அந்தக் காலத்து வழக்கமான நலம் விசாரிப்பு.

"செட்டியார் எப்ப கடை தொறப்பார்?", "ஒடையாரிடமிருந்து தகவலே இல்லை", "ஒங்களைத் தேடிக்கொண்டு புள்ளே வந்தார்" என்றுதான் எல்லாரும் பேசிக்கொண்டனர். "எந்தப் புள்ளே?" என்று சில சமயம் கேட்க நேரும். அப்போதுதான், "துரைசாமி பிள்ளை" என்று பெயரைச் சேர்த்துச் சொல்ல வேண்டியிருக்கும். யாவர்க்கும் மேல் சாதியாரான பிராமணர்களைப் பற்றி, "அய்யர் வந்தார், அய்யங்கார் வரவில்லை" என்று படர்க்கையில் கூறலாமே ஒழிய, நேரில் பேசும்போது, 'சாமி' என்றுதான் விளிக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க அரும்பாடு பட்டவர்கள் நாயுடு, நாயக்கர், முதலியார் என்றுதான் பேசினார்கள், ஏடுகளில் எழுதினார்கள். பி. வரதராஜுலு, ஈ.வே.ராமசாமி, திரு.வி.கல்யாணசுந்தரம் என்று யாரும் கூறவில்லை.

முன்பின் தெரியாதவர்களின் சாதியை அறிந்துதான் பழகினார்கள். "நீங்கள் எந்த சாதி?" என்றோ "நீங்கள் எந்த வர்ணம்?" என்றோ கேட்பது அநாகரிகமாய்த் தோன்றவில்லை. நான் இன்ன சாதி எனப் பதிலளிக்கவும் கூச்சமில்லை.

திருமணம் முதலிய விசேஷங்களுக்குப் பெரும்பாலும் சொந்த சாதிக்காரர்களையும் சிற்சில மேல் வகுப்பாரையும் அழைப்பார்கள். நிகழ்ச்சிகளுக்குப் போகிற மேல் சாதியார் அங்கே உண்ணமாட்டார்கள்; எதுவும் பருகவும் மாட்டார்கள்.

எங்காவது தொலைதூரம் நடந்து வியர்த்து விறுவிறுத்துப் போன நிலைமையில் தாகத்தால் தவிக்கும்போது வழியிலுள்ள வீடுகளில் தண்ணீர் வாங்கிக் குடிக்கலாம் என்று சாதி பேதம் இன்னமும் மனத்தில் வேரூன்றாத பருவத்துச் சிறுவர்கள் சொன்னால் பெரியவர்கள் தவறாமல் சொல்லும் பதில் :

"அவங்க என்ன சாதியோ? அங்கெல்லாம் தண்ணி கேக்கக்கூடாது" என்பதுதான்.

உயிர் போனாலும் போகலாம், உயர் சாதித் தன்மைக்குக் களங்கம் வரலாமோ?!

(ஒரு நாள் அண்டை வீட்டுப் பையன் என்னிடம், "ஒங்க ஆத்தா இன்னைக்கு எங்க வூட்டுலே காப்பி குடிச்சாங்க" என்று சொன்னபோது, "இது ஒரு சேதியா? இதை வந்து சொல்கிறானே!" என்று வியந்தேன். பின்புதான் தெரிந்துகொண்டேன் நாங்கள் அவர்களை விட மேல்வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று.)

மிக்க கீழ் சாதியார் குடிக்க நீர் கேட்டால், வாயருகே இரு கைகளையும் சேர்த்து அவர்கள் குழியாய்க் குவித்துக் கொள்ள, அந்தக் குழியில் தண்ணீரை ஊற்ற வேண்டும். அவர்களைக் காட்டிலும் ஓரளவு சாதியால் மேம்பட்டவர்களாயின் பித்தளைச் சொம்பிலே நீர் தந்து அவர்கள் எச்சில் படாமல் தூக்கிக் குடித்து விட்டுக் கீழே வைத்த பாத்திரத்தின் மீது கொஞ்சம் நீர் தெளித்துப் புனிதமாக்கித்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்!

உணவகம் நடத்துவது பிராமணர்களின் ஏகபோக உரிமை. (மற்ற சாதியார் நடத்தினால் யார் போவார் சாப்பிட?) நடேசய்யர் ஓட்டல், ராமய்யர் காப்பி கிளப், காளியாக்குடி அய்யர் ஓட்டல் என்று பெயர் வைத்திருப்பார்கள். பொதுவான பெயராக ஆரிய பவன், நடராஜ விலாஸ் என்றெல்லாம் இருந்தால் "பிராமணாள் ஓட்டல்" என்கிற கூடுதல் தகவலை விளம்பரப்பலகை தெரிவிக்கும். எல்லா உணவு விடுதிகளிலும் "பிராமணர்கள் சாப்பிடும் இடம்" என்றெழுதி வைத்துள்ள மறைவிடத்தில் அவர்கள் மட்டும் நுழைவார்கள். அவர்கள் சாப்பிடுவதை பிற சாதியார் பார்க்கக் கூடாது என்பது எழுதப் படாத சட்டம். (பிராமணர்-கள்-சாப்பிடுமிடம் என்று சிலர் கிண்டல் செய்வதுண்டு!)

பலகாரமோ, சோறோ வாழையிலையில் பரிமாறப்படும். பரிமாறுகிறவர்களிடம், "சாமி, எனக்கு ரெண்டு இட்லி குடுங்க!", "எனக்குக் காப்பி கொண்டாங்க, சாமி!" என்று கேட்கவேண்டும். உண்ட பின்பு எச்சில் இலையை நாமே மடக்கி எடுத்துப் போய் அதற்கான தொட்டியில் போட்டுவிட்டுக் கை கழுவிக் கொள்ளவேண்டும். வெண்கல டம்ளர்களில் வழங்கும் காப்பியை வாயிற்படாமல் தூக்கிக் குடிக்க வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும்.

சாதிப் பிரிவினைகளை எதிர்த்து முற்போக்குச் சிந்தனையாளர்கள் மேடைகளில் பேசினார்கள்: ஏடுகளில் எழுதினார்கள். "நான் கவுண்டர், நான் மூப்பனார் என்றெல்லாம் சொல்லாதீர்கள். தமிழன் என்று கூறுங்கள்" என்று அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்,

“தமிழனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா” என்று பாடினார்.

"தமிழ் நாடு தமிழருக்கே" என்ற முழக்கம் ஒரு புறம் எழுந்தது. தமிழன், தமிழச்சி என்ற புதிய சொற்கள் பேச்சுப் புழக்கத்துக்கு வந்தன. மனதில் சாதியெண்ணம் நிறைந்திருந்தாலும் வெளிப்படையாய் அதைக் காட்டிக்கொள்ளும் வழக்கம் சிறிது சிறிதாய்க் குறையலாயிற்று. பெயருக்குப் பின்னால் சாதி குறிக்கும் சொல்லைச் சேர்த்து எழுதும் நடைமுறை மறையத் தொடங்கிற்று.

(நிலாச்சாரலில் 5/10/09 இல் வெளிவந்த என் கட்டுரை.)

மதி
28-06-2010, 04:47 AM
இப்போது அந்தக்காலம் மாதிரி இல்லையென்றாலும்... ஆங்காங்கே இருக்கத் தான் செய்கிறது.. நல்ல்தொரு கட்டுரைக்கு நன்றி..

அன்புரசிகன்
28-06-2010, 05:31 AM
இந்தியா பற்றி தெரியாததால் இதுபற்றி கருத்திட முடியாது. ஆனால் நம்மூரில் ஓரளவு மலையேறிவிட்டது. ஆனால் இல்லை என்று சொல்வதற்கில்லை. திருமணம் என்று வந்தால் இவற்றை பார்க்கத்தான் செய்கிறார்கள். ஆனால் சாப்பிடுவது தண்ணீரருந்துவது இவற்றிற்கெல்லாம் பார்ப்பதில்லை. (சுருக்கச்சொன்னால் incomming ற்கு தடையில்லை. out going தடை) :D

வாழ்த்துக்கள் ஐயா..

சிவா.ஜி
28-06-2010, 06:08 AM
இந்தக் காலக்கட்டத்திலிருந்து மக்களை மீட்டெடுக்கத்தானே பெரியாரும்...மற்ற* பெரியோர்களும் பாடுபட்டார்கள்...ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம் கண்டு வந்த தமிழ் சமுதாயம்...திரும்பவும் அந்த சாதி சகதியில் வீழ்ந்தது...சமீபத்தில்தானே. அதும் மரம் வெட்டும் கும்பலும், மாநாடு நடத்தும் கும்பலும்...ஓட்டுக்காக...திரும்பவும் அந்த சாதிப்பேயை எழுப்பிவிட்டிருக்கிறார்கள்.

உண்மை சொல்லும் பதிவு....கடந்தகால நடைமுறைகளை புதிய தலைமுறை அறிந்துகொள்ள உதவியாய் இருக்கும்பதிவு. பகிர்வுக்கு நன்றி சொ.ஞா ஐயா.

விகடன்
29-06-2010, 11:25 AM
நான் சிறிதாக எந்தேசத்தில் திரிந்த காலத்தில் அங்கும் சாதிப்பாகுபாடு இருந்ததுதான். ஆனால் இந்தளவிற்கு கொடூரமாக இல்லை. எல்லாம் மனதளவில் வைத்திருப்பார்கள். வெளியே சொல்லிக் காண்பிக்கமாட்டார்கள். செய்யும் அனைத்து செயற்பாடுகளிலும் அதன் பிரதிபலிப்பு இருந்திருந்தது.

இடையில் ஏற்பட்ட இடம்பெயர்வுகளாலும், கல்வியின் வளர்ச்சியாலும் இப்போது நன்றாக நலிந்துவிட்டதென்று சொல்லலாம். இப்போதெல்லாம் இந்தப்பிரிவினை திருமண சம்பந்தப் பேச்சுக்களின்போது மட்டுமே காணக்கூடியதாக இருக்கிறது.


அழகான அந்தக்காலத்தின் மீட்பு ஐயா.

பா.ராஜேஷ்
29-06-2010, 01:58 PM
நல்லதொரு கட்டுரை. பதிவிற்கு நன்றி அய்யா... நம்மூரில் மட்டும் இவ்வளவு விகாரமாய் போனதற்கான காரணம் தெரியவில்லை... இன்னும் வட மாநிலத்தவரும் மற்ற மாநிலத்தவர்களும் தங்களது உப பெயரை (சர் நேம்) கொண்டிருக்கையில் தமிழருக்கு மட்டும் மாற்ற வேண்டிய காட்டாயம் ஏற்பட்டது நல்லதா, கெட்டதா ,,?? தெரியவில்லை...

இளசு
29-06-2010, 09:13 PM
அக்காலச் சமூகத்தின் ஆவணப்பதிவு.

மிக்க நன்றி அய்யா.


வெளிச்செயல்களில் பேச்சில் கொஞ்சம் விலகி வந்திருக்கிறோம் - இந்த 70 ஆண்டுகளில்..


இன்னும் போகவேண்டும் வெகுதூரம்.

சிவா சொன்ன அரசியல் வியாதிகள் பாதிப்பு நின்றால்
அடுத்த 60 ஆண்டுகளில் சாதீ வெம்மை இன்னும் குறையும்..

பாரதி
01-07-2010, 07:15 AM
அரசியலுக்கும் அரசு வேலைவாய்ப்புக்கும் மட்டும் இன்னும் சாதி தேவை.... இதுதான் பலரின் இன்றைய நிலைப்பாடு.
அந்தக்காலத்தின் நன்மையை மட்டும் கருத்தில் கொண்டு பார்த்தால்....பெருமூச்சு மட்டுமே மிஞ்சுகிறது ஐயா. பகிர்ந்தமைக்கு நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
01-07-2010, 07:23 AM
இப்போது அந்தக்காலம் மாதிரி இல்லையென்றாலும்... ஆங்காங்கே இருக்கத் தான் செய்கிறது.. நல்ல்தொரு கட்டுரைக்கு நன்றி..

மனமுவந்த நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
01-07-2010, 07:25 AM
அரசியலுக்கும் அரசு வேலைவாய்ப்புக்கும் மட்டும் இன்னும் சாதி தேவை.... இதுதான் பலரின் இன்றைய நிலைப்பாடு.
அந்தக்காலத்தின் நன்மையை மட்டும் கருத்தில் கொண்டு பார்த்தால்....பெருமூச்சு மட்டுமே மிஞ்சுகிறது ஐயா. பகிர்ந்தமைக்கு நன்றி.

விமர்சனத்துக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
01-07-2010, 07:32 AM
[QUOTE=இளசு;477707]அக்காலச் சமூகத்தின் ஆவணப்பதிவு.

மிக்க நன்றி அய்யா.




இன்னும் போகவேண்டும் வெகுதூரம்.



உங்கள் கருத்து சரி. வெகு தொலைவு தான்.

சொ.ஞானசம்பந்தன்
01-07-2010, 07:35 AM
நல்லதொரு கட்டுரை. பதிவிற்கு நன்றி அய்யா... . இன்னும் வட மாநிலத்தவரும் மற்ற மாநிலத்தவர்களும் தங்களது உப பெயரை (சர் நேம்) கொண்டிருக்கையில் தமிழருக்கு மட்டும் மாற்ற வேண்டிய காட்டாயம் ஏற்பட்டது நல்லதா, கெட்டதா ,,?? தெரியவில்லை...

நல்லது தான்.

சொ.ஞானசம்பந்தன்
01-07-2010, 07:41 AM
நான் சிறிதாக எந்தேசத்தில் திரிந்த காலத்தில் அங்கும் சாதிப்பாகுபாடு இருந்ததுதான். ஆனால் இந்தளவிற்கு கொடூரமாக இல்லை. எல்லாம் மனதளவில் வைத்திருப்பார்கள்.

இடையில் ஏற்பட்ட இடம்பெயர்வுகளாலும், கல்வியின் வளர்ச்சியாலும் இப்போது நன்றாக நலிந்துவிட்டதென்று சொல்லலாம். இப்போதெல்லாம் இந்தப்பிரிவினை திருமண சம்பந்தப் பேச்சுக்களின்போது மட்டுமே காணக்கூடியதாக இருக்கிறது.


அழகான அந்தக்காலத்தின் மீட்பு ஐயா.
பார்ப்பன ஆதிக்கம் இந்தியா முழுதும் நிறைந்திருந்தது.
. இலங்கையில் இல்லை.

சொ.ஞானசம்பந்தன்
01-07-2010, 07:43 AM
இந்தக் காலக்கட்டத்திலிருந்து மக்களை மீட்டெடுக்கத்தானே பெரியாரும்...மற்ற* பெரியோர்களும் பாடுபட்டார்கள்...ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம் கண்டு வந்த தமிழ் சமுதாயம்...திரும்பவும் அந்த சாதி சகதியில் வீழ்ந்தது...சமீபத்தில்தானே. அதும் மரம் வெட்டும் கும்பலும், மாநாடு நடத்தும் கும்பலும்...ஓட்டுக்காக...திரும்பவும் அந்த சாதிப்பேயை எழுப்பிவிட்டிருக்கிறார்கள்.

உண்மை சொல்லும் பதிவு....கடந்தகால நடைமுறைகளை புதிய தலைமுறை அறிந்துகொள்ள உதவியாய் இருக்கும்பதிவு. பகிர்வுக்கு நன்றி சொ.ஞா ஐயா.

பொருத்தமான கருத்து. நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
01-07-2010, 07:48 AM
இந்தியா பற்றி தெரியாததால் இதுபற்றி கருத்திட முடியாது. ஆனால் நம்மூரில் ஓரளவு மலையேறிவிட்டது. ஆனால் இல்லை என்று சொல்வதற்கில்லை. திருமணம் என்று வந்தால் இவற்றை பார்க்கத்தான் செய்கிறார்கள். ஆனால் சாப்பிடுவது தண்ணீரருந்துவது இவற்றிற்கெல்லாம் பார்ப்பதில்லை. (சுருக்கச்சொன்னால் incomming ற்கு தடையில்லை. out going தடை) :D

வாழ்த்துக்கள் ஐயா..

இலங்கை நிலைமையை அறியச் செய்ததற்கும் பின்னூட்டத்திற்கும் மிகுந்த நன்றி.

த.ஜார்ஜ்
02-07-2010, 04:35 PM
நன்கு படித்தவர்களிடம் அதிகமாகவே ஜாதீய உணர்வு இருப்பதை இப்போதும் காணமுடிகிறது நண்பா.

அமரன்
02-07-2010, 09:21 PM
எங்களுரில் இந்த முறை இருந்தது.

ஒவ்வொரு குறிச்சியாகவும், ஒழுங்கைகளாகவும் சாதி வாழ்ந்தது. எங்களை ஆமி ஊரை விட்டுக் கலைச்ச பிறகு அந்தச் சாதிகள் எங்க போச்சுன்னே தெரியல.

புது ஊரிலும் பழகிய ஆக்கள் எங்களூர்ச் சாதியை உயிர்ப்பிக்க நினைச்சாலும் எமையாளும் அமைப்பு அந்த நினைப்பை முளைக்கவே விடவில்லை.

இப்ப வெளிநாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக தலை எடுக்க ஆரம்பித்து விட்டது. கீழ்ச்சாதி எனச் சொல்லி பொதுச்சேவைப் பொறுப்பைக் கொடுக்க எதிர்க்கும் கும்பலுடன் பலமான மோதலும் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.



அன்பு சொன்ன மாதிரி கல்யாணப் பேச்சில் சாதி நிலையாகவும் உறுதியாகவும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பெரியார் சொன்னாராம்.. ‘ஆணும் பெண்ணும் இணையும் மணவாழ்க்கை எல்லாமே கலப்புத் திருமணம்தான். சாதி அழித்து வாழும் வாழ்க்கை சீர்திருத்தக் கல்யாணம்’... எனக்கென்னவோ இதுதான் சாதி அழிய நல்ல தீர்வாகப் படுகிறது.

அந்த்தக் காலத்தில்தான் நானும் வாழ்ந்திருக்கிறேன் எனும் போது என்னத்தை சொல்றது...

நன்றி அய்யா!

சொ.ஞானசம்பந்தன்
03-07-2010, 05:58 AM
நன்கு படித்தவர்களிடம் அதிகமாகவே ஜாதீய உணர்வு இருப்பதை இப்போதும் காணமுடிகிறது நண்பா.

ஆம். அது 2000 ஆண்டுப் பாறை.

சொ.ஞானசம்பந்தன்
03-07-2010, 06:03 AM
எங்களுரில் இந்த முறை இருந்தது.


இப்ப வெளிநாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக தலை எடுக்க ஆரம்பித்து விட்டது. கீழ்ச்சாதி எனச் சொல்லி பொதுச்சேவைப் பொறுப்பைக் கொடுக்க எதிர்க்கும் கும்பலுடன் பலமான மோதலும் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.




அந்த்தக் காலத்தில்தான் நானும் வாழ்ந்திருக்கிறேன் எனும் போது என்னத்தை சொல்றது...

நன்றி அய்யா!
சாதியை அறவே அழிப்பது கடினம்.பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.