PDA

View Full Version : தினமணி தலையங்கம்: கிணறு வெட்ட பூதம்



சிவா.ஜி
16-06-2010, 03:21 PM
விஞ்ஞான வளர்ச்சி, மனிதனின் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதுடன், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சிந்தித்துக்கூடப் பார்த்திராத சாதனைகளைப் படைத்திருக்கிறது. வளர்ச்சி என்கிற பெயரிலும், நாகரிகம் என்கிற போர்வையிலும், 21-ம் நூற்றாண்டு மனிதன் படைத்திருக்கும் சாதனைகள் அளப்பரியது, சந்தேகம் இல்லை.

ஆனால், விஞ்ஞான வளர்ச்சியும், நவநாகரிக உலகின் மாற்றமும், சமீபகாலமாக இயற்கையைச் சீண்டி விளையாட முற்படுகின்றனவோ என்று தோன்றுகிறது. இயற்கையின் சீற்றங்கள் தன்னை வென்றுவிட நினைக்கும் மனிதகுலத்தின்மீது மட்டும் தாக்குதல் நடத்தினால் பரவாயில்லை. இந்த உலகில் வாழும் இதர அப்பாவி உயிரினங்களையும் அல்லவா பழிவாங்கி விடுகிறது. அதுதான் வேதனையளிக்கிறது.

வளர்ச்சி அடைந்த நாடுகள், தங்களது வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காகப் பல கண்டுபிடிப்புகளை விஞ்ஞானத்தின் உதவியுடன் மேற்கொண்டு அதன் பயனையும் அனுபவிப்பதில் தவறில்லை. ஆனால், அவர்களது முயற்சிகளுக்குச் சம்பந்தா சம்பந்தம் இல்லாத பின்தங்கிய நாடுகள் பலியாவது என்பது என்ன நியாயம்? ஆப்பிரிக்கக் கடற்கரைகள் இதுபோல அடிக்கடி எண்ணெய்க் கசிவுகளால் அவதிப்படுவது வழக்கமாகிவிட்டது. கடந்த 30 ஆண்டுகளில் நைஜீரிய நாட்டுக் கடற்கரைகள் 9,000 தடவைகள் இந்தப் பேராபத்தை எதிர்கொண்டிருக்கின்றன. வெள்ளைக்கார நாடுகளில் வாழும் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய கறுப்பர் இனமக்களின் வாழ்வாதாரங்கள் பரிசோதனைக் களனாகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி மெக்சிகோ வளைகுடாவில் பிபி (ஆட) எரிசக்தி நிறுவனத்தின் ஆழ்கடல் துளை இயந்திரம், எண்ணெய்க் கிணறு ஏதாவது கிடைக்கிறதா என்பதற்காகத் துளையிடும்போது, கடலுக்கு அடியில் இருந்த எண்ணெய்க் கிணறு ஒன்று வெடித்துச் சிதறியது. உள்ளே இருந்து கச்சா எண்ணெய் பீச்சி அடிக்கத் தொடங்கிவிட்டது. ஆழ்கடலில் நடந்த இந்த விபரீதத்தால் கடலெல்லாம் பிசுபிசுவென்று கச்சா எண்ணெய்.

ஏறத்தாழ 60 நாள்களாகியும் இன்னும் அந்த வெடித்துச் சிதறிய எண்ணெய்க் கிணற்றை முழுமையாக மூடி, கச்சா எண்ணெய்க் கசிவைத் தடுத்து நிறுத்த முடியாமல் தவிக்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். கிணறு வெட்டப்போய் பூதம் கிளம்பிய கதையாகி விட்டிருக்கிறது பிபி நிறுவனத்தின் எண்ணெய்க் கிணற்றுப் பேராசை!

நாளொன்றுக்கு பத்து லட்சம் கேலன்கள் கச்சா எண்ணெய் அந்தக் கிணற்றிலிருந்து கடலில் கலந்து கொண்டிருக்கிறது. கடந்த முறை 1979-ல் இதே மெக்சிகோ வளைகுடாவில், எண்ணெய்க் கிணற்றைக் கண்டுபிடிக்க நடந்த ஆழ்கடல் துளையிடும் முயற்சியால் ஒரு கிணறு வெடித்துச் சிதறியதில் ஏறத்தாழ 140 மில்லியன் கேலன்கள் எண்ணெய் கடலில் கலந்ததாகத் தெரிகிறது. எண்ணெய் வெளியேறுவதைத் தடுக்கப் பத்து மாதங்கள் பிடித்தன என்று கூறுகிறார்கள்.

இதனால் அந்த நிறுவனத்துக்கு ஏற்படும் நஷ்டம், மக்களுக்கு ஏற்படும் அவதி போன்றவை எல்லாம்கூட இரண்டாம்பட்சம். கடல்வாழ் உயிரினங்களும், கடல்சார்ந்த பறவை இனங்களும் படும் அவதி இதயத்தைப் பிழிகிறது. கடல் மட்டத்துக்கு 1,500 மீட்டர் கீழே வெடித்துச் சிதறியிருக்கும் அந்த எண்ணெய்க் கிணற்றிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் கச்சா எண்ணெய் கடல்மீது படர்ந்து, கரைநோக்கி நகர்ந்து, ஒரு கச்சா எண்ணெய்க் கம்பளமே விரிந்துவிட்டிருக்கிறது.

கடலில் வாழும் டால்பின் மீன்களின் கண்களில் எண்ணெய் படர்ந்து முதலில் அவற்றைக் குருடாக்குகிறது. மீன்களும் ஏனைய கடல்வாழ் பிராணிகளும் கண்களை மூடித்திறக்க முடியாமல் போவதுடன், இந்த எண்ணெயிலிருந்து வெளிப்படும் நெடியால் அந்த நுண்ணிய பிராணிகளின் நுரையீரல்களும் தாக்கப்பட்டு மடிகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் மடிந்துபோன டால்பின்களின் எண்ணிக்கையே கணக்கிலடங்காது என்றால், இதர மீன்கள், நண்டுகள் போன்ற கடல்வாழ் பிராணிகள் எந்த அளவுக்குப் பலியாகி இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.

பெலிகன் என்கிற பறவை, அமெரிக்கக் கடற்கரை ஓரங்களில் மிகவும் அதிகமாகக் காணப்படுபவை. இவை கடலில் வாழும் மீன்களை உண்டு உயிர் வாழ்பவை. எண்ணெய்ப் படலம் இந்தப் பறவைகளைப் படுத்தும் பாடு சொல்லி மாளாது. கடற்கரை ஓரமாக இருக்கும் சதுப்பு நிலங்களில் உள்ள புல்களில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை இந்தப் பெலிகன் பறவைகள். அங்கே எல்லாம் கச்சா எண்ணெய் படர்ந்திருப்பது தெரியாமல் வந்து அமர்ந்துவிடும் பெலிகன் பறவைகளின் இறகுகளில் எண்ணெய் அப்பிக்கொண்டு விடுகின்றன. பிறகு பறக்கவும் முடியாமல், நகரவும் தெரியாமல் பரிதவித்து உயிரை விட்டிருக்கும் பெலிகன் பறவைகள் ஆயிரம் ஆயிரம் என்கிறது மெக்சிகோவிலிருந்து வரும் செய்திகள்.

கடற்கரையிலிருந்து ஒரு சில மைல்கள் தூரத்துக்கு எண்ணெய்ப் படலம் கடலில் காணப்படுகிறது. இதை எதிர்கொள்ள அரசு நடத்தும் முயற்சிகள் எதுவும் பலித்ததாகத் தெரியவில்லை. சில நூறு பெலிகன் பறவைகளைக் காப்பாற்றியதுதான் அதிகபட்ச சாதனை என்று சொல்ல வேண்டும். அமெரிக்கா இதுவரை சந்தித்த மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.

எங்கேயோ நடக்கிறது, நமக்கென்ன கவலை என்று நாம் இருந்துவிட முடியாது. அடுத்தவர்களின் அனுபவத்திலிருந்து படிப்பவன்தான் அறிவாளி. அதீத விஞ்ஞான வளர்ச்சியும், கட்டமைப்பு வசதிகளும் மேலோட்டமாகப் பார்த்தால் பிரமிப்பையும், மகிழ்ச்சியையும் தருமே தவிர, விபத்துகள், சோதனைகள் என்று ஏற்படும்போது அதன் விளைவுகள் விவரிக்க முடியாத வேதனைகளாகவும் இருக்கும் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

ஒருபுறம், மனித சமுதாயத்தின் வருங்காலத்தையே பூண்டோடு அழிக்கவல்ல அணுசக்தியுடன் விளையாடி, நமது பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள விழைகிறோம். இன்னொருபுறம், நாளும் அதிகரித்துவரும் பெட்ரோலியத் தேவைகளுக்காக ஆழ்கடலில் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டி விடைகாண முயல்கிறோம்.

முதலில், நமது பேராசைத் தேவைகளுக்காக அளவுக்கு அதிகமான முயற்சிகளை மேற்கொண்டு அலைவதை நிறுத்த வேண்டும். மனித இனம் தனது எரிசக்தித் தேவைகளை எப்படிக் குறைத்துக் கொள்வது என்பதை ஆராய்ந்து செயல்படத் துணியாவிட்டால், நாமும் டால்பின்கள் மற்றும் பெலிகன்கள் படும் அவஸ்தைக்குத் தயாராக வேண்டியிருக்கும். நாமாக இல்லையென்றால், நமது சந்ததியினர் அந்தத் துன்பத்தைச் சந்திக்க நேரிடும்.

விஞ்ஞானம் இதற்கும் ஒரு விடை கண்டுபிடிக்கும் என்று அசட்டுத்தனமாக நம்பிக்கொண்டு மேலும் மேலும் ஆபத்தின் தீவிரத்தை அதிகரிப்பதைவிட, விஞ்ஞானத்தை நமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதுடன் நிறுத்திவிட்டு, இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க முயல்வதுதான் புத்திசாலித்தனம். சுகங்களை நாம் அனுபவித்துவிட்டு நாளைய சந்ததியினரை விபரீதங்களுக்கு உள்படுத்த நமக்கு உரிமையில்லை!

நன்றி...தினமணி

பாரதி
16-06-2010, 03:28 PM
பகிர்ந்தமைக்கு நன்றி சிவா.
துளையிடும் சமயத்தில் செலவை மிச்சம் செய்யும் பொருட்டு பி.பி. நிறுவனம் மேற்கொண்ட சில செயல்கள்தான் இவ்வளவுக்கும் காரணம் என்றும் சில தளங்களில் செய்திகள் வந்திருக்கின்றன. பொதுவாக எல்லா நாடுகளும் "அவனை நிறுத்தச்சொல்; நான் நிறுத்துகிறேன்" என்ற பாணியில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. நாளைய உலகைப் பற்றி கவலைப்படுவதை விட இன்றைய தினம் பையை நிரப்புவது எப்படி என்ற நிலையில் செயல்படும் நிறுவனங்களின் மனப்பாங்கும் அதை ஒன்றும் கேட்காத அரசுகளும் இருக்கும் வரை இப்படியே வேதனையை சொல்லி புலம்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

சிவா.ஜி
16-06-2010, 03:45 PM
உண்மைதான் பாரதி. நான் பணிபுரியும் நிறுவனமான செவ்ரானும் அப்படித்தான் நடந்துகொள்கிறது. தற்சமயம் நாங்கள் பணியும் நீர்ம எரிவாயு தயாரிப்பு ஆலைக்காக அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இடம்...நைகர் என்ற நதி கடலில் கலக்கும் பிரதேசம். ஆயிரக்கணக்கான முதலைகளைக் கொன்று, இந்த இடத்தை மணலால் நிரப்பி மேடாக்கியிருக்கிறார்கள்.

இங்குக் கிடைக்கும் அபரிதமான எரிவாயுவுக்காக இயற்கையை....சீரழித்துக்கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது...!!!

மதி
16-06-2010, 03:55 PM
உண்மை தான்.. இதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுசூழல் பற்றி விழிப்புணர்வு வேண்டும். ஆனால் ஒருத்தரை ஒருத்தர் குற்றம் குறை சொல்வது மட்ட்ம் நடக்கிறது...

செல்வா
16-06-2010, 06:01 PM
என்னத்த சொல்ல....
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது பாட்டு தான் ஞாபகம் வருது.

இயற்கை மீதான வாழ்வை பள்ளியிலிருந்து வளர்க்கணும்.

இரஷ்யாவில் கோடைவிடுமுறையில் குழந்தைகளை பள்ளிக்கு வரச்சொல்லி விவசாயம் கற்றுக் கொடுக்கிறார்கள்.
பூச்செடிகள் வளர்ப்பதிலிருந்து காய்கறிகள் பயிரிடுவது வரை.
இது எல்ல குழந்தைகளுக்கும் கட்டாயம்.

விவசாயத்தையே அடிப்படையாகக் கொண்ட நமது நாட்டில்.
விவசாயம்னா... அது என்ன சாப்ட்வேரா ஹார்டுவேரானு கேக்கும் நிலை சீக்கிரம் வரும் போலருக்கு.

govindh
16-06-2010, 07:02 PM
சுற்றுசூழல் பற்றி விழிப்புணர்வு வேண்டும்.
இயற்கையைக் காத்தால்...
இன்னல்களைக் களையலாம்...!

பகிர்வுக்கு நன்றி...

அன்புரசிகன்
17-06-2010, 04:28 AM
பல ஓட்டைகள் வெளிவருகின்றன. நேற்று தொலைக்காட்சியில் பார்த்தது. ஏதோ பாதுகாப்பு விவகாரங்களுக்காக அவர்கள் அச்சிட்டு வெளியிட்ட அறிக்கையில் 5 வருடத்திற்கு முன் காலமாகிவிட்ட ஒருவரின் பெயர் மற்றும் தொலைபேசி விபரங்கள் இருந்தனவாம். நாம கொப்பி பேஸ்ட் செய்யுறோம் என்றால் அவங்களும் செய்யுறாங்கப்பா...

சிவா.ஜி
17-06-2010, 05:28 AM
எவ்வளவுப் பெரிய ஓட்டைகள் இருந்தாலும்...உலகின் கண்களிலிருந்து மறைத்துவிடும் சாமர்த்தியம் இந்த அசுரக் கம்பெனிகளுக்கு உண்டு அன்பு. சுற்றுச்சூழலைப் பற்றியோ, மற்றும் உள்ளவர்கள் பற்றியோ இவர்களுக்கு அக்கறையில்லை.

இய*ற்கை...அதிக*நாள் பொறுத்திருக்காது.

அமரன்
17-06-2010, 05:38 AM
உலகம் போற போக்கைப் பார்த்தால் டிங்கிரி டிங்காலே...

யாகா விடினும் இயற்கை காக்க..

nambi
17-06-2010, 05:57 AM
வளர்ச்சி அடைந்த நாடுகள், தங்களது வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காகப் பல கண்டுபிடிப்புகளை விஞ்ஞானத்தின் உதவியுடன் மேற்கொண்டு அதன் பயனையும் அனுபவிப்பதில் தவறில்லை. ஆனால், அவர்களது முயற்சிகளுக்குச் சம்பந்தா சம்பந்தம் இல்லாத பின்தங்கிய நாடுகள் பலியாவது என்பது என்ன நியாயம்? ஆப்பிரிக்கக் கடற்கரைகள் இதுபோல அடிக்கடி எண்ணெய்க் கசிவுகளால் அவதிப்படுவது வழக்கமாகிவிட்டது. கடந்த 30 ஆண்டுகளில் நைஜீரிய நாட்டுக் கடற்கரைகள் 9,000 தடவைகள் இந்தப் பேராபத்தை எதிர்கொண்டிருக்கின்றன. வெள்ளைக்கார நாடுகளில் வாழும் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய கறுப்பர் இனமக்களின் வாழ்வாதாரங்கள் பரிசோதனைக் களனாகின்றன.

நன்றி...தினமணி


இதைத்தான் ஏகாத்திபத்திய நாடுகள் வெகுகாலமாக செய்து கொண்டு வருவது.....இது அந்த நாடுகளின் ஏகாதிபத்திய மனப்பான்மையைத்தான் காட்டுகின்றது. தன்சுயநலத்திற்காக எந்த நாட்டையும் அழிப்பது...இந்த ஏகாதிபத்திய நாடுகள் தான் இப்போது பஞ்சாயத்து நாடுகளாக வலம் வந்து கொண்டிருப்பது. பகிர்வுக்கு நன்றி சிவா!

ஸ்ரீதர்
17-06-2010, 07:21 AM
என்னதான் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வளர்ந்தாலும் , இயற்கை என்னும் பிரம்மாண்டத்தின் முன்னாலும் அதன் சக்தியின் முன்னாலும் மனிதன் நிற்க முடியாது என்பது என் எண்ணம்.

இயற்கையை வெல்லும் முயற்சி ஒவ்வொன்றிலும் அதை சீண்டிப்பார்க்கும் மனிதனின் முயற்சி தோல்வியிலேயே முடியும்

அதிலும் அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள் செய்யும் தவறுகள் உலகத்தையே அச்சுறுத்தினாலும் , அதை எதிர்த்து கேள்வி கேட்க மற்ற நாடுகள் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.

உலக நாடுகளின் தாதா அமெரிக்க என்பதால்தான் இந்த நிலைமை.

சிவா.ஜி
17-06-2010, 01:03 PM
உண்மைதான் ஸ்ரீதர். அமெரிக்கா எதை செய்தாலும் ஆமாஞ்சாமி போடும் நாடுகள்தான் அதிகம்...நம் இந்தியா..காலிலேயே விழுந்துவிடும்.

ஆனால்....ராட்டிணத்தின் எந்தப் பெட்டியும் எப்போதும் உச்சத்திலேயே இருக்காது.