PDA

View Full Version : மாயக்கரை - [சிறுகதை]



DREAMER
09-05-2010, 08:37 AM
http://lh4.ggpht.com/_LdvdJNXtIx8/S-JLKfuYrwI/AAAAAAAAAck/k8Z_riCaDDA/Mayakkarai_Wrapper.jpg

ஜனநடமாட்டம் நிரம்பியிருந்த அந்த கல்யாண ஹாலுக்குள், ஒரே இரைச்சலாய் ஏதேதோ சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால், இந்த இரைச்சலிலும் இசைத்துப் பாடத்தெரிந்த எங்களது ‘சுபராஜகீதம் ஆர்கெஸ்ட்ரா’ குழுவினர், அசத்தலாய் இளையாராஜாவின் இன்னிசையை பாடிக்கொண்டிருந்தனர். நானும் இந்த ஆர்கெஸ்ட்ராவைச் சேர்ந்தவன்தான். பெயர் மாயக்கண்ணன். எனது வேலை, புல்லாங்குழல் இசைப்பது... கொஞ்சம் பாப்புலரான இந்த ஆர்க்கெஸ்ட்ரா குழுவில் சேர என் திறமை மட்டும் காரணமல்ல, என் கண்பார்வையின்மையும் ஒரு முக்கியக் காரணம். இந்த ஆர்கெஸ்ட்ராவின் ஓனர், T. கிருஷ்ணகுமார், அவருக்கு என் போன்ற மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறை அதிகம். என்போன்றவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று உண்மையில் நினைப்பவர்.

அனுதாபம் காட்டாமல் அன்பு செலுத்துவதில் வல்லவர். இன்று அவர் புண்ணியத்தில் என் பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மையில் இவரும் வாய்ப்பளிக்காமலிருந்திருந்தால், ஏதாவது ட்ரெயினிலோ அல்லது ரயில்வே ப்ளாட்ஃபாரத்திலோ புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்திருப்பேன்.

இதோ, இன்றைய ரிசப்ஷனின் கடைசிப் பாடலை ஆர்கெஸ்ட்ராவின் பிரத்யேக பாடகர் ஒருவர் பாடிக்கொண்டிருக்கிறார்.

'குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா.. குக்கூ.. குக்கூ.. குக்கூ..'

இந்த பாடலில் பெரும்பாலான பகுதி புல்லாங்குழல் கூடவே வந்துக்கொண்டிருக்கும். எனவே என் பகுதியை ரசித்து வாசித்தேன்...

என் வாசிப்புக்கு அடுத்தவர் எப்படி ரசிக்கிறார்கள் என்று என்னால் பார்க்க முடியாவிட்டாலும், உணர முடியும். வாசிக்கும்போது, அந்த பேரிரைச்சலிலும், ஒரு அமைதி நிலவும், அப்படி அமைதி தெரிந்தால், ரசிக்கிறார்கள் என்று அர்த்தம். இப்போது அந்த அமைதியை என்னால் உணர முடிந்தது. உற்சாகம் பிறந்தது.

கைத்தட்டலுடன் பாடல் முடிந்தது.

ரசித்து கேட்ட மக்கள் அனைவருக்கும் நன்றி கூறி எங்களது ஆர்கெஸ்ட்ரா குழுவினர் மண்டபத்திலிருந்து கிளம்ப ஆயத்தமாகிக்கொண்டிருந்தோம். மேடையிலிருந்து இறங்கும்போது, ஒரு சிலர் கைகொடுத்தனர், ஆணா, பெண்ணா என்று அறியமுடியாது அத்தனை ஸ்பரிசத்துக்கும், மனமார நன்றிகள் சொல்லிக்கொண்டு இறங்கும்போது, தவறி விழுந்தேன். நிறைய கைகள் என்னைத் தாங்கிப்பிடித்து, தூக்கி நிறுத்தியது.

ஆர்கெஸ்ட்ரா ஓனர் பதறி வந்து விசாரித்தார்...

'என்ன மாயா..? என்னாச்சு..?'

'தெரியாம விழுந்துட்டேன் சார்..?' என்றேன்.

'அட என்னப்பா... அடி ஏதும் இல்லியே..?'

'இல்லைங்க..?' என்றேன்.

'சரி, டேய், மாயாவை பத்திரமா கூட்டிட்டு போய் வண்டியில ஏத்துங்க... நான் போய் பேமண்ட் பாத்துட்டு வந்துர்றேன்... இன்னும் 15 நிமிஷத்துல எல்லா சாமானையும் ஏத்தி, வண்டி ரெடியா இருக்கணும்... சரியா..?' என்று மிரட்ட, ஆளுக்கொரு வேலையாய் அனைவரும் இறங்கி செய்தனர். என்னை இரண்டு பக்கமும் இரண்டு பேர் சூழ்ந்து பிடித்துக் கொண்டு பத்திரமாக அழைத்து சென்றனர்.

எனக்கு சந்தோஷமாக இருந்தது. இப்படி ஒரு கூட்டத்தில் நாம் வந்து சேர்ந்தது, நான் என்றோ செய்த புண்ணியம்தான் என்று பெருமிதப்பட்டுக்கொண்டே போய் வண்டியில் ஏறி அமர்ந்தேன்.

விடிவதற்குள் ஊர்திரும்ப வேண்டும். நாளை மாலையும் கச்சேரி உண்டு, ஏதோ கோவிலில் என்று நினைக்கிறேன்.

சொன்னபடி 15 நிமிடத்தில் ஓனர் வண்டிக்கு வந்து சேர்ந்தார். எங்கள் அனைவருக்கும் சம்பளக் கவர் கொடுத்தார்.

எனக்கான கவர் கொடுத்தார். அதில் கணம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. கண்டிப்பாக நான் வழக்கமாக வாங்கும் பணத்தைவிட, இந்தமுறை அதிகம் கொடுத்திருக்கிறார் என்று புரிந்தது.

வண்டி கிளப்பச்சொல்லிவிட்டு, ஓனர் தனது காரில் கிளம்பச்சென்றார். எங்கள் வண்டியும் கிளம்பியது.

இரவு ஏற்கனவே மணி 11ஐத் தாண்டிவிட்டதாக மண்டபத்தில் ட்ரம்மர் ஜோசப் சொன்னார். இப்போது எப்படியும் 12.30 இருக்கும் என்று தோன்றியது.

'டேய் ஜேசுதாஸ் வாய்ஸ் வழக்கமா ரிஷிதானே பாடுவான் இன்னிக்கு என்ன 'கல்யாண தேன்னிலா...' என்னை பாடச்சொல்லிட்டே..' என்று மணி என்ற பாடகர் ஒருவர் புலம்பிக்கொண்டிருந்தார்.

'இல்லண்ணா, மாஸ்டர்தான், இன்னிக்கி கொஞ்சம் சேன்ஞ் பண்ணி பாடச்சொன்னார்..'

'உடனே அவர்மேல பழியைப்போட்டுடு..'

'நெஜம்மா சொன்னாருண்ணா..?'

'பொய் சொல்லாத... எப்போ சொன்னாரு..?'


'ஹஸிலி ஃபிஸிலி பாட்டு போயிட்டிருக்கும்போது...'

இப்படி நண்பர்கள் வண்டியில் பேசிக்கொண்டு வர... இந்த செல்ல சண்டைகளைக் கேட்டபடி நான் அப்படியே தூங்கிப்போனேன்.

முழிப்பு வந்தபோது, வண்டி அமைதியாக போய்க்கொண்டிருந்தது. குறட்டைசத்தங்கள் மட்டும் விதவிதமாய் கேட்டுக்கொண்டிருக்க... நான் எப்படியும், 2 மணி நேரம் தூங்கியிருப்பேன் என்று தோன்றியது.

வண்டி திடீரென்று அங்குமிங்கும் வளைந்து நெளிந்து சடன் ப்ரேக் அடிக்கபட்டு நின்றது...

நான் பதறினேன்... 'என்ன டிரைவரண்ணே..? என்னாச்சு வண்டி S போடுது..?'

'ஒண்ணுமில்லப்பா... கொஞ்சமா கண்ணசந்துட்டேன்..'

'என்னங்கண்ணே..?' என்றேன் கொஞ்சலான மிரட்டலுடன்.

'இரு... வண்டிய ஒரு ஓரமா போடுறேன்... கொஞ்ச நேரம் தூங்குனாத்தான் வேலைக்காகும்... நானும் ஊருக்கு போய் தூங்கிக்கலாம்னு பாத்தா... பிரச்சினையாயிடும்போலருக்கு...'

'வேண்டாண்ணே... கொஞ்ச நேரம் தூங்கணும்போல இருந்துச்சுன்னா தூங்கிடுங்க..' என்றேன்.

வண்டியை ஓரமாக எங்கோ போய் நிறுத்திவிட்டார். மீண்டும் பயங்கர அமைதி... நானும் தூங்க முயற்சித்தேன். ஆனால், தூக்கம் வரவில்லை...

வண்டியை விட்டு இறங்கினேன்...

சில்லென்ற காற்று, இதமாக வீசியது. தூரத்தில் அலைகள் சத்தம்... ஏதோ கடற்கரை சாலையில் பயணப்பட்டிருக்கிறோம் என்பது புரிந்தது.

யாரையாவது எழுப்பிக்கொண்டு, கடல்வரை செல்வோமா என்று தோன்றியது. யாரை எழுப்புவது என்று யோசித்துப் பார்க்க, அனைவரும் தூங்கிக்கொண்டிருப்பதை நினைத்ததும்... வேண்டாம்... யாரையும் எழுப்ப வேண்டாம்... நாமே செல்வோம். என்று எனது புல்லாங்குழல் வைத்திருக்கும் ஜோல்னாப் பையை எடுத்து மாட்டிக்கொண்டு, அலைகள் சத்தம் வந்த திசையை நோக்கி, செருப்பை மாட்டாமல், வெறும் காலில் நடந்தேன்.

சற்று தூரத்தில், சில்லென்ற மணல் என் கால்களில் படர்ந்தது...

சிலிர்த்தது...

இன்னும் நடக்க நடக்க, அலைகளின் சத்தம் அருகே கேட்டுக்கொண்டே வந்தது. உள்ளுக்குள் பரவசம் பாய்ந்தது.

திடீரென்று காலில் கடல்நீர் பட்டதும் மீண்டும் சிலிர்த்துப்போனேன்....

'ஹ்ஹ்ஹா....' என்று சிரித்துக்கொண்டேன்.

ஒரு 5 நிமிடம் அப்படியே நின்றேன்... கடலை அனுபவித்தேன்.

ஒரு பத்தடி பின்னால் வந்து மணலில் அமர்ந்தேன். கண்முன் தெரியும் காட்சி எப்படியிருக்கும் என்று யூகிக்க முயன்றேன்... நான் பிறவியிலிருந்தே கண்தெரியாதவன் என்பதால், காட்சிக்கு வடிவம் கொடுக்க முடியவில்லை.. எப்படியெல்லாமோ இருக்கும் என்று மட்டும் தோன்றியது.

மண்டபத்தில் சிலர் இன்று பௌர்ணமி என்று பேசிக்கொண்டார்கள், அப்படியென்றால் நிலா பெரியதாய் வானில் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சரி எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும். பையிலிருந்து புல்லாங்குழல் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.

அமைதியான கடற்கரையில் நானும்.... தனிமையும்... எனது புல்லாங்குழலும்...

அந்த இசை.... அலை சத்தத்ததின் பின்னனி இசையோடு சேர்ந்து ஒரு ரம்யமான சூழலை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

என்ன பாட்டு வாசிப்பது என்று குழம்பிக்கொண்டிருந்த நேரம், என்னையுமறியாமல், என்னுள்ளிருந்து, ஒரு தனியான ராகம், இதுவரை நான் மனதளவிலும், சேர்த்துவைக்காத ஒரு புது மெட்டு வெளிவந்துக் கொண்டிருந்தது. எப்படி... ஏன்... என்று தெரியாமல் அந்த கடற்கரையோரம் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன்.

போதும் நிறுத்தினேன். அலைகளின் சத்தம், இன்னும் கொஞ்சம் வாசியேன் என்று என்னிடம் கெஞ்சி கேட்பது போல் தோன்றவே... மீண்டும் வாசித்தேன்.

மீண்டும் அதே பரவசம். இந்தமுறை வாசித்துக்கொண்டிருக்கும்போது, யாரோ என் பின்னால் வந்து நிற்பதை என்னால் உணர முடிந்தது. வாசிப்பதை நிறுத்திவிட்டு திரும்பினேன்...

'யாரது..?' என்று கேட்டேன்... அமைதி

'யாராவது இருக்கீங்களா..' என்று மீண்டும் கேட்டபடி கைகளால் துழாவிப் பார்க்க ஏதோ ஒன்று தட்டுப்பட்டது.. பதறியடித்த கைகளை பின்னுக்கிழுத்துக்கொண்டேன்...

'கேக்கறேன்ல..? யாரது..?' என்று கேட்க...

'ப்ப்ப்ர்ர்ர்ப்ப்ப்ர்ர்ர்' என்று குதிரை கணைக்கும் சத்தம் கேட்டது...

குதிரையா..? மீண்டும் கைகளை நீட்டி, ஆம்.. இம்முறை குதிரையின் முகத்தை தொட்டேன்... தடவிக்கொடுத்தேன்...

அதுவும் வாஞ்சையாக் என்மீது முகம் உரசியது...

'என்னடா... என்ன இந்த நேரத்துல இங்க வந்திருக்க... என் பாட்டு கேட்க வந்தியா..' என்று அதனுடன் பேசினேன்...

'ப்ப்ப்ர்ர்ர்ப்ப்ப்ர்ர்ர்' என்று மீண்டும் கணைத்துக் காட்டியது...

எனக்கு அந்த குதிரை மீது ஏறவேண்டும்போல் ஆசையாக இருந்தது. தடவித்தடவி முதுகையடைந்தேன். குதிரை நல்ல உயரம். கட்டுமஸ்தான தேகம். நல்ல ஜாதிக்குதிரை போல் தோன்றியது.

ஒரே எம்பு எட்டி குதித்து அந்த குதிரை மீது ஏறி அமர்ந்தேன். மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டேன்.

குதிரை ஓடாமல், மெல்ல நடந்துசென்றது. என்னை நம் ஆட்கள் தேடுவார்களே என்று எனக்குள் ஒரு சின்ன பயம் தோன்றியது. ஆனாலும் இந்த ரம்யமான சூழலை விட்டுவிட்டு திரும்ப மனம் வரவில்லை...

நான் குதிரை மீது அமர்ந்தபடியே எனது புல்லாங்குழலை எடுத்து எனக்குள் பிரவாகமெடுத்து ஓடும் இசையை புல்லாங்குழல் ஓட்டைகளில் வழியாக வடித்தெடுத்துக்கொண்டிருந்தேன்.

குதிரை மெல்ல நடக்க நடக்க... அலைகள் சத்தம் அதிகமாகியது. அலைகள் சத்தத்திற்கேற்றபடி நானும் எனது இசையில் வேகம் கொடுத்தேன். இப்போது, அலைகள் சத்தம் என் முதுகுப்பக்கம் கேட்டது. குதிரை மேலும் நடந்துபோய்க்கொண்டிருக்க... அலைகள் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக்கொண்டே வந்து... ரொம்பவும் தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்தது. குதிரை நின்றது. நான் இசைப்பதை நிறுத்தினேன்.

இறங்கினேன்... குனிந்து தொட்டுப்பார்க்க, ஈரமான பாறைகள் புலப்பட்டது.

'ஏய்... என்னை எங்கே கொண்டுவந்திருக்கே நீ..' என்று குதிரையிடம் கேட்டேன்... அது முகத்தை மட்டும் என் கைகளில் படும்படி ஆட்டியது.

'என்னடா..? என்ன இடம் இது..' என்று மீண்டும் குதிரையிடம் கேட்டபடி முன்னேறினேன். இடத்தை தொட்டுத்தொட்டுப் பார்க்க, ஒரு கல்வெட்டு போன்ற பாறை தட்டுப்பட்டது. அதை தடவிப்பார்க்க அதில் ஏதோ எழுதியிருந்தது...

தடவிப்பார்த்து படிக்க நான் ஏற்கனவே பழகியிருந்ததால்.... படிக்க முயன்றேன்...

'ஆ..ஜா...னு..ப..வ... வி...ர....பு...த்...தி....ர....ஞ....சு....வே..ழ...வ..ம்...ச...' என்று ஏதோ நீண்டுக்கொண்டே போக, என்னால் மேற்கொண்டு படிக்கமுடியவில்லை...

'என்ன இடம்ப்பா... இது..?' என்று குதிரையைப் பார்த்து கேட்க...

'இது என் இடம்தான்... பயப்படாதீரும்..' என்று திடீரென்று ஒரு பதில் குரல் வந்தது...

'யாருங்க... அது..?'

'நான்தான்... இது என் இடந்தான்..'

'நான்தான்னா... நீங்க யாருங்க... உங்க பேரு... என்ன..?'

'வேழவளவன்..'

'பேரு நல்லாயிருக்குங்க... என் பேரு மாயக்கண்ணன்..' என்றேன்.

'பொருத்தமான பேருய்யா...உம்ம பேரு..'

'நன்றிங்க..'

'நல்லா இசைக்கிறீரு... அதான்... சீலன்-ஐ விட்டு உம்ம கூட்டியாரச்சொன்னேன்.'

'சீலன் யாருங்க..'

'நீர் ஏறி வந்தீரே..'

'குதிரையா..?'

'ஆமாம்..'

'குதிரைக்கு நல்ல பேருங்க...'

'ஹாஹ்ஹா... கொஞ்சம் எனக்கோசம் இசையுமேன்... கேட்டுக்குறேன்..'

'வாசிக்கிறேன்... எனக்கு என்ன கொடுப்பீங்க..?' என்றேன் உரிமையோடு.

'ஹாஹ்ஹா... என்ன வேணும் உமக்கு..?'

'சும்மாதாங்கய்யா கேட்டேன்.. கம்பீரமான குரல்ல, அன்பா கேட்டீங்கள்ல.. அதுக்காகவே இசைக்கிறேங்க..' என்று கூறி மீண்டும் புல்லாங்குழல் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். இம்முறை எனது சொந்த மெட்டுக்களுக்கு பதிலாக, இளையராஜாவின் பாடலை ரசனையோடு வாசித்தேன்.

சுமார் 15 நிமிடமாக வாசித்து முடிக்க, நிறுத்தினேன்.

'ஐயா... ரொம்ப நாளாச்சுய்யா இந்தமாதிரி ஒரு இசையைக்கேட்டு.... உமக்கு நான் ஏதாவது கொடுக்கணும்...' என்று அவர் பேசிக்கொண்டிருக்க, எனக்கு பின்னாலிருந்து குரல் கேட்டது...

'மாயக்கண்ணன்..?... மாயக்கண்ணன்...? மாயா..?' இது எனது குழுவின் மணி என்ற பாடகரின் குரல்தான், கூடவே ஏதோ மோட்டர் படகு ஓடும் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது.

'நான் இங்கதான் இருக்கேன்...’ என்று கத்திவிட்டு, மீண்டும் அந்த வேழவளவனிடம் திரும்பி ‘ஐயா... என்னை என் நண்பருங்க தேடுறாங்க... நான் போய்ட்டுவரேங்க... எனக்கு பரிசெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..' என்று கூறிவிட்டு திரும்பி நடந்துக்கொண்டிருக்க...

'மாயக்கண்ணன்.. அப்படியே இருங்க... நடக்காதீங்க...' என்று என் நண்பரின் குரல் கட்டளையாக கேட்டது...

'ஏன்..? என்னாச்சு...?' என்று பதிலுக்கு கேட்டேன். ஆனால், மோட்டார் சத்தத்தில் அது அவருக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.... அவர் மீண்டும், 'மாயக்கண்ணன் முன்ன ஒரு அடிகூட எடுத்துவைக்காதீங்க... தண்ணியிருக்கு' என்று சத்தம் போட்டார்...

'தண்ணியா..?' நான் குழம்பினேன்... அப்படியே நின்றிருந்தேன்...

மோட்டார் சத்தம் என்னை நெருங்கும் சத்தம் கேட்டது... அருகில் வந்து அடங்கியது..

'என்ன மாயக்கண்ணன், சொல்லாமக்கொள்ளாம இப்படித்தான் கடலுக்குள்ள இறங்கி இப்படி பாறைமேல வந்து உக்காந்து புல்லாங்குழல் வாசிப்பீங்களா.. நீச்சல் தெரியுமா உங்களுக்கு..?' என்று கேள்விமேல் கேள்வி அடுக்கிக்கொண்டே போனார்...

'என்ன சொல்றீங்க... நான் எங்க நீந்திவந்தேன்... நான் பாட்டுக்கு, கரையில உக்காந்து புல்லாங்குழல் வாசிச்சிட்டு இருந்தேன். ஒரு குதிரை வந்தது... அதுல ஏறி உக்கார, அது இங்க கொண்டாந்து விட்டுருச்சு... ஆனா, தண்ணியில இறங்கவேயில்லியே..' என்று கூறினேன்... படகு கரைபக்கம் திரும்பி போய்க்கொண்டிருந்தது. படகுக்காரன் பேச்சை ஆரம்பித்தான்...

'என்னங்க சொல்றீங்க... நீங்க எங்க இருந்தீங்க தெரியுமா.. கடலுக்குள்ள கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தூரத்துல தெரியிற பாறையில நின்னுட்டிருந்தீங்க..' அதெப்படி தண்ணியில நனையாம அவ்வளவு தூரம்... சரி... அதுவும்... குதிரைமேல உக்காந்துபோயிருந்தாலும்... நனையாம எப்படி..?' என்று படகு ஓட்டியபடி குழம்பிக்கொண்டிருந்தான்..

'என்ன மாயக்கண்ணன், நாங்கள்லாம் பயந்துட்டோம். உங்களை காணாம, இந்த லோக்கல் மீனவரோட உதவியோட உங்களை தேடிக்கிட்டிருந்தோம். நல்ல வேளை, உங்க புல்லாங்குழல் இசையை கேட்டுத்தான் நீங்க இப்படி கடலுக்குள்ள நின்னுட்டிருக்கிறது தெரிஞ்சுது.. உடனே இவரோட படகை எடுத்துக்கிட்டு உள்ளே வந்துட்டேன். ஆனா, நீங்க எப்படி டிரஸ்நனையாம..?' என்று அவரும் குழம்பிக்கொண்டிருந்தார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை... அப்படியென்றால் அந்த வேழவளவன் யார்... அந்த சீலன் என்கிற குதிரை யார்... அந்த கல்வெட்டு என்ன... என்று யோசித்துக் குழம்பிக்கொண்டிருந்தேன்.

அந்த மீனவரிடம்... 'நான் நின்னுட்டிருந்த பாறை ஏதும் விசேஷங்களா..? அங்க என்ன இருக்கு..?' என்றேன்

'அதுவா... அந்த பாறையில ஒரு சமாதிக்கோவில் இருக்கு.. யாரோ ராஜாவோட காலத்து சமாதிக்கோவிலாம்.. அப்போ, கடல் அலை ரொம்ப உள்ள இருந்துச்சாம்... அதனால அது கடற்கரை சமாதிக்கோவிலா கட்டியிருந்தாங்களாம். எங்கப்பாரு சொல்வாரு... இறந்துப்போற நம்ம தலைவருங்களுக்கு கரையோரம் சமாதி கட்ற மாதிரி அந்த காலத்துல யாரோ ராசாவுக்கு கட்டியிருக்காங்க... அங்கப்போய் நின்னுக்கிட்டு... என்னங்க நீங்க..' என்று கூற எனக்கு புரிந்துப்போயிற்று...

என் இசையை ஒரு இறந்துப்போன ஒரு ராஜாவின் ஆன்மா கேட்டதை நினைத்து பெருமை படுவதா, இல்லை, பயப்படுவதா என்று தெரியவில்லை... மீண்டும் வண்டிக்கு வந்தடைந்தேன். ஃபோனில் ஓனருக்கு ஒருவர் தகவல் சொல்லிக்கொண்டிருந்தார்... அனைவரும் நலம் விசாரித்து முடித்து, டிரைவரும் தெம்பாக எழுந்து பேசிக்கொண்டிருக்க... மீண்டும் வண்டி கிளம்பியது...

எனக்கு நடந்த நிகழ்வுகளை நினைத்துக் கொண்டிருக்க.. நன்றாக தூக்கம் சொக்கிக்கொண்டு வந்தது...

தூங்கிப்போனேன்.

கனவில் அந்த ராஜா... சொன்ன வார்த்தைகள் வந்துப்போனது...

'அருமையான இசை...! உமக்கு பரிசு நிச்சயம் உண்டு..'

தூக்கம் கலைந்தது... ஊர் நெருங்கிவிட்டதை டிராஃபிக் சத்தங்களும், டீசல் வாசனையும் உணர்த்திக்கொண்டிருந்தது.... தூக்கம் கலைந்தாலும், வண்டியின் உலுக்கலில் கண்கள் திறக்க மனம் வராமல் தூங்குவதாக நடித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு கட்டத்துக்குமேல் நடிப்பு அலுப்புதட்டவே, மெல்ல கண்களைத் திறந்தேன்.

முதல்முறையாக ஏதோ ஒரு உணர்வு.... கண்கள் கூசியது... கண்களிலிருந்து ஒருவிதமான எரிச்சலால் நீர் வழிந்தது... துடைத்துக்கொண்டு மீண்டும் பார்க்க முயன்றபோது... மீண்டும் ஒரு புது உணர்வு....

'உமக்கு பரிசு நிச்சயம் உண்டு..' என்று காதில் கேட்டது...

கண்களை கசக்கிக்கொண்டு, அகலமாய் கண்கள் திறந்துப்பார்த்தேன்.

முதல் முறையாக உலகம் தெரிந்தது..!


- நிறைவு -

சிவா.ஜி
09-05-2010, 09:15 AM
நல்லக் கதையோட்டம். வித்தியாசமான கரு. பேன்டஸிக் கதையைப் போல இருந்தாலும், வாசிக்க நன்றாக இருக்கிறது. மறைந்த மன்னரின் ஆவி..தந்த பரிசு....சிறப்பான பரிசு. நம்பமுடியாத முடிவென்றாலும்....இதைப்போன்றக் கதைகளில் ஒத்துக்கொள்ளலாம்.

நான்கூட பரிசென்றால் மாயக்கண்ணன் இசைத்த புதிய மெட்டுதான் ஹிட் ஆகி அவனுக்கு புதுவாழ்வு கிடைக்கப்போகிறதோ என நினைத்தேன். அனால் முடிவை வித்தியாசமாய் கொடுத்துவிட்டீர்கள்.

சிறந்த எழுத்து நடைக்குப் பாராட்டுக்கள் ஹரீஷ்.

செல்வா
09-05-2010, 03:56 PM
நல்ல கதையோட்டம் ...

தேர்ந்த எழுத்து நடை...

மன்றத்திற்கு இன்னுமொரு தேர்ந்த கதைசொல்லி கிடைத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு...

தொடர்ந்து எழுதுங்கள்.. நானும் அவருக்கு ஏதோ பெரிய வாய்ப்பு கிடைக்கப் போவதாகத்தான் நினைத்தேன் ஆனால் முடிவை மாற்றி விட்டீர்கள். அருமை...

தொடர்ந்து எழுதுங்கள்.

பா.ராஜேஷ்
09-05-2010, 05:12 PM
மாயக் கண்ணனுடன் பயணித்த உணர்வு. மிக அருமையாய் எழுதி உள்ளீர்கள் இயக்குனரே. பாராட்டுக்கள் !!!

கலையரசி
09-05-2010, 05:32 PM
கொஞ்ச நேரம் யதார்த்த உலகில் இருந்து விடுபட்டு ஆவியுலகில் மாயக்கண்ணனுடன் சஞ்சாரித்தது போன்ற ஓர் உணர்வு. சிவா.ஜி அவர்கள் கூறியது போல் நம்ப முடியாத முடிவு என்றாலும் நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தரும் கதை.
பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

மதி
10-05-2010, 03:25 AM
அழகான கதையோட்டம்... நல்ல வர்ணனை.. எதிர்பாராத முடிவு...
வாழ்த்துக்கள் ஹரீஷ்.

DREAMER
10-05-2010, 03:58 AM
நன்றி சிவா.ஜி, எழுத்து நடையையும், முடிவையும் பாராட்டியமைக்கு மிக்க நன்றி... உங்கள் ஆதரவு தொடர்ந்து தேவை...

நன்றி செல்வா, கதையோட்டத்தை ரசித்து பாராட்டியமைக்கு... ஆஹா, மன்றத்தில் என்னையும் கதைசொல்லியாக வாழ்த்தியதற்கு மிக்க நன்றி! கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன்.

நன்றி பா.ராஜேஷ், மாயக்கண்ணனுடன் பயணித்ததற்கும், பாராட்டுக்களுக்கும்... மிக்க நன்றி!

நன்றி கலையரசி, யதார்த்த உலகை மறந்து கதை படித்தமைக்கு மிக்க நன்றி! கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன்.

நன்றி மதி, கதையோட்டம், வர்ணனையையும், முடிவையும் பாராட்டியமைக்கு மிக்க நன்றி!

-
DREAMER

Mano.G.
10-05-2010, 08:44 AM
பார்வையற்ற இசை கலைஞர்,
எதோ கல்யாண கச்சேரி,
வண்டி பயணம்,
மயிரிலையில் விபத்து தவிர்ப்பு,
கலைப்பு ஓய்வு,

பௌர்ணமி கடற்கரை,
புல்லாங்குழல் இசை

சடாரனெ கற்பனை குதிரை
எதோ கற்பனையுலகில்
இராஜா அவர்தம் குதிரை

இசை விருந்துக்கு
எதிர்பராத பரிசு.

ஆகா அருமை
சுவாரசியமான கதை

மேலும் தொடருங்கள்
கற்பனையாளரே

வாழ்த்துக்கள்

மனோ.ஜி

sarcharan
10-05-2010, 10:46 AM
நல்ல கதை.. அமானுஷ்யமோ வேறே ஏதோ முடிவு ரசிக்கும் படியாய் இருந்தது..

கீதம்
10-05-2010, 12:12 PM
உங்கள் கற்பனைக்குதிரை என்னை எங்கோ அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் இங்கு கொண்டுவந்து விட்டது. தேர்ந்த எழுத்து நடை! தடங்கலற்ற கதையோட்டம்! பாராட்டுகள்! தொடர்ந்து எழுதுங்கள்!

DREAMER
10-05-2010, 05:12 PM
மன்ற ஆலோசகர் Mano. G அவர்களே,
கதையை படித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி... 'கற்பனையாளரே' என்று அழைத்ததற்கும் மிக்க நன்றி..!

கதையையும் படித்து வாழ்த்திய sarcharan நண்பருக்கு மிக்க நன்றி..!

கற்பனைக்குதிரையில் சவாரி செய்து திரும்பி பாராட்டிய நல்ல உள்ளம் கீதம் அவர்களுக்கு நன்றி..!

-
DREAMER

govindh
10-05-2010, 10:45 PM
மாயக்கரை...அற்புதமான கரை / கதை...
மாயக்கண்ணனை கைப் பிடித்து அழைத்து செல்வதைப் போல.... படிப்பவர்களையும் பக்குவமாக பயணிக்க வைத்து.... வெளிச்சத்தை
காண்பித்து விட்டீர்கள்...

"தூக்கம் கலைந்தது... ஊர் நெருங்கிவிட்டதை டிராஃபிக் சத்தங்களும், டீசல் வாசனையும் உணர்த்திக்கொண்டிருந்தது.... " -
அவர்கள் காதுகாளாலும்...மூக்காலும் தான் பார்க்கிறார்கள்...

ஒவ்வொரு வரிகளிலும் ....உணர்வுகளை கச்சிதமாக அமைத்திருக்கிறீர்கள்...
மீண்டும்...மீண்டும்...படித்தேன்...
மிக்க நன்றி...பாராட்டுக்கள்...!

DREAMER
11-05-2010, 04:49 AM
நன்றி கோவிந்த்,
ஒவ்வொரு வரியையும் உணர்ந்து படித்திருக்கிறீர்கள்... எழுத்தை இந்தளவுக்கு ரசித்தது, சந்தோஷமாய் இருக்கிறது. உங்கள் வாழ்த்துக்கு என் வந்தனங்கள். மிக்க நன்றி!

-
DREAMER

xavier_raja
11-05-2010, 09:04 AM
excellent...marvellous... brilliant... நல்ல ஒரு கருத்தாழமிக்க கற்பனை கதையை படைத்த உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்...

DREAMER
11-05-2010, 06:57 PM
மிக்க நன்றி Xavier ராஜா அவர்களே,
கதையை படித்து ரசித்து பாராட்டியதற்கு என் வந்தனங்கள்..!

-
DREAMER

அமரன்
11-05-2010, 08:15 PM
மாயக்கரை...அற்புதமான கரை / கதை...
மாயக்கண்ணனை கைப் பிடித்து அழைத்து செல்வதைப் போல.... படிப்பவர்களையும் பக்குவமாக பயணிக்க வைத்து.... வெளிச்சத்தை
காண்பித்து விட்டீர்கள்...

"தூக்கம் கலைந்தது... ஊர் நெருங்கிவிட்டதை டிராஃபிக் சத்தங்களும், டீசல் வாசனையும் உணர்த்திக்கொண்டிருந்தது.... " -
அவர்கள் காதுகாளாலும்...மூக்காலும் தான் பார்க்கிறார்கள்...

ஒவ்வொரு வரிகளிலும் ....உணர்வுகளை கச்சிதமாக அமைத்திருக்கிறீர்கள்...
மீண்டும்...மீண்டும்...படித்தேன்...
மிக்க நன்றி...பாராட்டுக்கள்...!

நல்ல விமர்சனம்..

பார்வைப் புலனற்றவர்கள் ஏனைய நான்கு புலன்களாலும் பார்க்கிறார்கள். அதையும் தாண்டி ஆறாவது புலனான ஆத்மார்த்தம் மூலமாகப் பார்க்கத் துவங்குப் போது கண்கள் கூசுவதும், நெஞ்சம் கூசுவதும் ஏன்... முழுதுமே கூசுவதும் கண நேரமானாலும் கனதியான நேரம்தான்.

கவித்துவம் மிக்க கதை கனவனே!

இயக்குனர் முயற்சியாளர் என்பது கதையில் தெறிக்கிறது.

கற்பனையையும் தாண்டு மன ஆழம் புகுந்து அடிவேர் வரை பேசும், உறவாடும் மாயக்குணம் இசைக்கு உண்டு. அந்த வகையில் மாயக்கண்ணன் மயக்குகிறான்.

பாராட்டுகிறேன் நண்பனே!

DREAMER
12-05-2010, 05:52 PM
நன்றி அமரன் அவர்களே...
மன்றத்தில் நான் இயற்றிய கதைகளுக்கு, மன்ற நண்பர்கள் நல்ல ஆழமான விமர்சனத்தையும், அற்புதமான ஊக்கத்தையும் கொடுத்து உதவி வருவது மிகவும் மகிழ்ச்சியளிப்பதோடு, மேலும் பல கதைகளை எழுத ஆவல் ஏற்படுத்துகிறது. மன்ற நண்பர்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள் பல சமர்ப்பிக்கிறேன்.

-
DREAMEr