கீதம்
04-05-2010, 01:12 AM
"பரமு வந்தாச்சி"
யாரோ குரல் கொடுக்க, அமராவதி குடியிருப்பின் அத்தனைப் பெண்களும் கையில் ஒரு பிளாஸ்டிக் கூடையுடன் வெளியில் வந்து காய்கறி வண்டியைச் சூழ்ந்தனர். காய்கறி வாங்கும் சாக்கில் அன்றாடம் சிறு அரட்டை அரங்கம் நடந்தேறுவது ஒரு வாடிக்கையான செயல்.
"என்ன ராதா, உங்க வீட்டுக்காரர் மும்பையிலேர்ந்து என்ன வாங்கிட்டு வந்தார்?"
"என்ன, வழக்கம்போல வெறுங்கைதான்! அது சரி,மாமி, உங்க மருமகளுக்கு எப்ப சீமந்தம்?"
"இன்னும் தேதி முடிவாகலை. மாசம் இருக்கில்லே?"
"ரத்னா! கலையிலேயே உங்க வீட்டில கச்சேரி போலயிருக்கு. எங்க வீடு வரைக்கும் கேட்டுது?"
"என்ன பண்றது, மாமி? கொஞ்சம் லேட்டாயிடுச்சாம். அதுக்கு அப்படிக் கூப்பாடு போடறார். நானும் பதிலுக்கு கத்திட்டேன். கோபமா போயிருக்கார்."
"அப்போ சாயந்திரம் மல்லியப்பூவோடதான் வருவார்னு சொல்லு!"
எல்லோரும் சிரித்தனர்.
சரளா மற்றவர்களுக்கு இடம் விட்டு விலகி நின்றிருந்தாள்.
"சரளா, நீ காய் வாங்கலையா?"
"நீங்க எல்லாரும் எடுங்க, நான் அப்புறமா எடுத்துக்கறேன்"
"அதானே! உனக்கென்ன, புருஷனா? பிள்ளையா? எங்களை மாதிரி நேரத்துக்கு வகைவகையாய் சோறு குழம்பு ஆக்கிப்போட? அப்பா எதைப் போட்டாலும் சாப்பிடப்போறார். உனக்கென்ன அவசரம்? நீ பொறுமையாவே வாங்கு!"
வாய்ப்பேச்சு ஒருபுறமிருந்தாலும், கை கவனமாக காய்கறிகளைப் பொறுக்கிக்கொண்டு இருந்தது.
"ஏம்ப்பா, பரமு, வெண்டைக்காயெல்லாம் முத்தலா இருக்கு? நல்லதெல்லாம் எங்கேயாவது வித்திட்டு கடைசியில முத்தலும், சொத்தையுமா கொண்டுவந்து எங்க தலையில கட்டு!"
சரளாவுக்கு சுரீரென்றது. தானும் இந்த முற்றல் வெண்டைக்காய் போலத்தானே என்றொரு நினைவு வந்தது. கொள்வாரின்றிக் கொட்டிக்கிடக்கும் முற்றல் வெண்டைக்காய்களைக்கூட சற்று விலை குறைத்துக்கொடுத்தாலோ இலவசமாகக் கொடுத்தாலோ கொள்வதற்கு ஆளிருக்கிறது. தன் போன்ற முதிர்கன்னிகளின் நிலையோ......நேர் எதிர். வயது ஏற ஏற வரதட்சணையும் ஏறிக்கொண்டல்லவா போகிறது?
இவளுக்குக் கீழே பிறந்திருந்தாலும், அழகென்ற சிபாரிசால் தங்கைகள் இருவருக்கும் இவளுக்கு முன்னதாகவே இல்வாழ்க்கை என்னும் நல்வாழ்க்கை அமைந்து, தாய்மையை உடலிலும், மனதிலும் சுமக்க, இவள் மட்டும் இன்னமும் அந்தத்தாய்மையை மனதில் மட்டும் சுமந்தபடி காத்திருக்கிறாள்.
அண்ணன்கள் இருவர் இருந்தாலும் பெயருக்குதான். அவ்வப்போது வந்து தங்கையும் தந்தையும் உயிரோடு இருக்கின்றனரா என்று பார்த்துவிட்டுப்போவதுடன் கடமை முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஏதோ அவள் அப்பாவுக்கு ஓய்வூதியம் வருவதாலேயே அண்ணன்களிடம் கையேந்தும் நிலை அவருக்கு வரவில்லை. அவளுக்கும்தான்!
சரளா ஆச்சரியப்படும் விஷயம் ஒன்றுதான். அவள் அப்பா அடர்கருப்பு, பருமன், குள்ளம், போதாக்குறைக்கு எடுப்பான முன்பற்கள்! அம்மாவோ கோதுமை நிறம். களையான முகமும், உயரமும் அதற்கேற்றாற்போல் உடல்வாகும் கொண்டு ஒரு தேவதை போல் காட்சியளிப்பாள்.
கொள்ளை அழகான அம்மா எப்படி இப்படி சற்றும் பொருத்தமில்லாத அப்பாவைத் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தாள்? ஆமாம்! அந்தக்காலத்தில் யார் அவள் சம்மதத்தைக் கேட்டிருக்கப்போகிறார்கள்? மத்திய அரசுப்பணி ஒன்று போதாதா எல்லாக்குறைகளையும் மறைப்பதற்கு? இருந்தபோதும் அம்மா அவரோடு அந்நியோன்னிய வாழ்க்கை வாழ்ந்ததாகவே தெரிகிறது.
வரிசையாய் ஐந்து குழந்தைகள்! அண்ணன்களும் தங்கைகளும் அம்மாவின் சாயலில் அவதரித்திருக்க, இவள் மட்டும் அச்சு அசலாய் அப்படியே அப்பாவின் மறு அவதாரமெனப் பிறந்திருக்கிறாள்.
சிறுவயது முதலே அண்ணன் தங்கைகளின் உதாசீனம் தாழ்வுமனப்பான்மைக்குத் தூபமிட, ஒரு குறுகிய வட்டத்துக்குள் தன்னைத்தானே சிறைபடுத்திக்கொண்டாள்.மற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான சரளா, பள்ளிப்படிப்பையும் முழுதாய் முடிக்க இயலாதவளானாள். மற்றக்குறைகளோடு படிப்பின்மையும் சேர்ந்துவிட, சரளாவின் வாழ்வில் திருமணம் என்பது கனவாகவே போனது. மற்றவர்களுக்கு எந்தத்தடையும் இன்றி திருமணம் முடிந்துவிட, இவள் விஷயத்தில் எல்லா முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராயின.
சரளாவுக்குத் திருமணம் நடைபெறச் சாத்தியமே இல்லை என்று ஒருகட்டத்தில் உணர்ந்தபோது அம்மா மிகவும் உடைந்துபோனாள். மனவேதனையால் கொஞ்சங்கொஞ்சமாய் உருக்குலைந்த அவள் நோயோடு போராடித் தோற்றுப்போனள்.
அம்மா போனபிறகு அப்பா நடைப்பிணமாகிவிட்டார். நாளெல்லாம் தன்முன் வளையவரும் சரளாவைப் பார்த்துப் பார்த்து கலங்கினார். தான் ஏதோ குற்றம் புரிந்ததைப்போல் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டுக் கதறினார். சரளா அவரைத் தேற்ற இயலாமல் தவித்தாள்.
"காய் வேணாமா?"
பரமுவின் குரல் அவள் நினைவுகளைக் கலைத்தது.
அனைவரும் போய்விட்டிருந்தனர். சரளா தலைகுனிந்தவாறே,
"பரங்கிக்கீத்து ஒண்ணு குடுங்க!" என்றாள்.
"நான் சொன்னதை யோசித்துப் பாத்தியா?" அவன் கிசுகிசுத்தான்.
"ம்?" திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் என்ன சொல்வதென்று புரியாமல் மெளனித்தாள். ஒரு வாரமாய் இவள் சம்மதத்துக்காகக் காத்திருக்கிறான். தன்னையும் ஒருவன் துரத்தித் துரத்திக் காதலிப்பானா? அவளால் நம்பமுடியவில்லை. ஆனால்....இதோ.....எதிரிலேயே நிற்கிறானே!
"எங்க அப்பாகிட்டே வந்து பேசுங்க!"
"நீ முதலில் சொல்லு! அப்புறம் உங்கப்பாகிட்டே பேசுறேன்!"
"சரி!"
"சரின்னா என்ன அர்த்தம்?" அவன் புருவங்களை உயர்த்தினான்.
"சரின்னா……...நீங்க சொன்னது சரின்னு அர்த்தம்!" பெரும் பிரயத்தனத்துடன் சொல்லிமுடித்தாள்.
பரமு உதட்டு விளிம்புக்கு ஓடிவந்த புன்னகையை கஷ்டப்பட்டு உள்ளுக்குத் தள்ளினான்.
"ரொம்ப சந்தோஷம்! இன்னைக்கு சாயந்திரம் உங்கப்பாவை வேம்புலியம்மன் கோயிலுக்கு கூட்டிவா! நானும் எங்கப்பாவோடு வரேன்!"
"ம்"
அவன் ஆர்வம் பேச்சில் தெரிந்தது. பரங்கிக்கீற்றை கைகளைப் பிடித்துக் கொடுத்தான்.
சரளா புதுவித அனுபவங்கண்டாள். உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததுபோல் உணர்ந்தாள். கண்கள் இருட்டுவதுபோல் இருந்தது. கால்கள் தள்ளாட வீட்டுக்குள் வந்தவளுக்கு எல்லாம் கனவோ என்று சந்தேகம் வர, இந்த சுகம் கனவிலாவது நீடிக்கட்டும் என்று நினைத்துக்கொண்டாள்.
முடிந்துபோய்விட்டது என்று நினைத்திருந்த தன் கதைக்கு புதியதொரு அத்தியாயமா? இது சாத்தியம்தானா? அவனை நம்பலாமா? நல்லெண்ணம் இல்லாவிடில் அவள் அப்பாவுடன் பேசமுனைவானா?
உழைத்து உரமேறியிருந்த அந்தக் கருத்த தேகத்துக்குள் இப்படியொரு கனிவான காதல் மனம் இருப்பது போனவாரம் வரை அவளுக்கும் தெரியாதுதான். அவனது வசீகரிக்கும் பார்வையும், பளீரென்ற புன்சிரிப்பும் அவளை நிலைகுலையச் செய்தது என்னவோ உண்மைதான் என்றாலும் அவளது வட்டம் அவளை வெளியேறவிடாமல் தடுத்தது. அவனோ, தன் கரங்களை நீட்டி அவளை அந்த வட்டத்தினின்று வெளியே வரச்சொல்லி அழைக்கிறான். கரம் பற்றலாமா? கூடாதா?
அப்பாவிடம் இது பற்றிப்பேசத் தயக்கமாயிருந்தது. இந்த வயதில் வெட்கம் பொருந்தாததுபோல் தோன்றியது. எத்தனை வயதானால் என்ன? பெண் பெண்தானே? ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு அப்பாவிடம் பரமுவைப் பற்றிப்பேசினாள்.
அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது, அமைதியாகக் கேட்டுக்கொண்டார். சரளாவுக்கு வியப்பாயிருந்தது. இந்த விஷயம் கேட்டால் அப்பா இன்ப அதிர்ச்சி அடைவார் என்ற எதிர்பார்ப்பில் அவர் முகத்தையே ஆராய்ந்தவளுக்கு, அதிர்ச்சியைத் தந்தது, அப்பாவின் கேள்வி.
"அவன் என்ன ஜாதியோ?"
ஏமாற்றத்தாலும் அவமானத்தாலும் அவளது கரிய முகம் மேலும் கறுக்க, அவள் அவரை ஒரு புழுவைப்போல் பார்த்தாள். அவரோ, எதையுமே கவனியாதவர்போல் இயல்பாய் இருக்க எண்ணி, செய்தித்தாளில் முகம் மறைத்துக்கொண்டார்.
யாரோ குரல் கொடுக்க, அமராவதி குடியிருப்பின் அத்தனைப் பெண்களும் கையில் ஒரு பிளாஸ்டிக் கூடையுடன் வெளியில் வந்து காய்கறி வண்டியைச் சூழ்ந்தனர். காய்கறி வாங்கும் சாக்கில் அன்றாடம் சிறு அரட்டை அரங்கம் நடந்தேறுவது ஒரு வாடிக்கையான செயல்.
"என்ன ராதா, உங்க வீட்டுக்காரர் மும்பையிலேர்ந்து என்ன வாங்கிட்டு வந்தார்?"
"என்ன, வழக்கம்போல வெறுங்கைதான்! அது சரி,மாமி, உங்க மருமகளுக்கு எப்ப சீமந்தம்?"
"இன்னும் தேதி முடிவாகலை. மாசம் இருக்கில்லே?"
"ரத்னா! கலையிலேயே உங்க வீட்டில கச்சேரி போலயிருக்கு. எங்க வீடு வரைக்கும் கேட்டுது?"
"என்ன பண்றது, மாமி? கொஞ்சம் லேட்டாயிடுச்சாம். அதுக்கு அப்படிக் கூப்பாடு போடறார். நானும் பதிலுக்கு கத்திட்டேன். கோபமா போயிருக்கார்."
"அப்போ சாயந்திரம் மல்லியப்பூவோடதான் வருவார்னு சொல்லு!"
எல்லோரும் சிரித்தனர்.
சரளா மற்றவர்களுக்கு இடம் விட்டு விலகி நின்றிருந்தாள்.
"சரளா, நீ காய் வாங்கலையா?"
"நீங்க எல்லாரும் எடுங்க, நான் அப்புறமா எடுத்துக்கறேன்"
"அதானே! உனக்கென்ன, புருஷனா? பிள்ளையா? எங்களை மாதிரி நேரத்துக்கு வகைவகையாய் சோறு குழம்பு ஆக்கிப்போட? அப்பா எதைப் போட்டாலும் சாப்பிடப்போறார். உனக்கென்ன அவசரம்? நீ பொறுமையாவே வாங்கு!"
வாய்ப்பேச்சு ஒருபுறமிருந்தாலும், கை கவனமாக காய்கறிகளைப் பொறுக்கிக்கொண்டு இருந்தது.
"ஏம்ப்பா, பரமு, வெண்டைக்காயெல்லாம் முத்தலா இருக்கு? நல்லதெல்லாம் எங்கேயாவது வித்திட்டு கடைசியில முத்தலும், சொத்தையுமா கொண்டுவந்து எங்க தலையில கட்டு!"
சரளாவுக்கு சுரீரென்றது. தானும் இந்த முற்றல் வெண்டைக்காய் போலத்தானே என்றொரு நினைவு வந்தது. கொள்வாரின்றிக் கொட்டிக்கிடக்கும் முற்றல் வெண்டைக்காய்களைக்கூட சற்று விலை குறைத்துக்கொடுத்தாலோ இலவசமாகக் கொடுத்தாலோ கொள்வதற்கு ஆளிருக்கிறது. தன் போன்ற முதிர்கன்னிகளின் நிலையோ......நேர் எதிர். வயது ஏற ஏற வரதட்சணையும் ஏறிக்கொண்டல்லவா போகிறது?
இவளுக்குக் கீழே பிறந்திருந்தாலும், அழகென்ற சிபாரிசால் தங்கைகள் இருவருக்கும் இவளுக்கு முன்னதாகவே இல்வாழ்க்கை என்னும் நல்வாழ்க்கை அமைந்து, தாய்மையை உடலிலும், மனதிலும் சுமக்க, இவள் மட்டும் இன்னமும் அந்தத்தாய்மையை மனதில் மட்டும் சுமந்தபடி காத்திருக்கிறாள்.
அண்ணன்கள் இருவர் இருந்தாலும் பெயருக்குதான். அவ்வப்போது வந்து தங்கையும் தந்தையும் உயிரோடு இருக்கின்றனரா என்று பார்த்துவிட்டுப்போவதுடன் கடமை முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஏதோ அவள் அப்பாவுக்கு ஓய்வூதியம் வருவதாலேயே அண்ணன்களிடம் கையேந்தும் நிலை அவருக்கு வரவில்லை. அவளுக்கும்தான்!
சரளா ஆச்சரியப்படும் விஷயம் ஒன்றுதான். அவள் அப்பா அடர்கருப்பு, பருமன், குள்ளம், போதாக்குறைக்கு எடுப்பான முன்பற்கள்! அம்மாவோ கோதுமை நிறம். களையான முகமும், உயரமும் அதற்கேற்றாற்போல் உடல்வாகும் கொண்டு ஒரு தேவதை போல் காட்சியளிப்பாள்.
கொள்ளை அழகான அம்மா எப்படி இப்படி சற்றும் பொருத்தமில்லாத அப்பாவைத் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தாள்? ஆமாம்! அந்தக்காலத்தில் யார் அவள் சம்மதத்தைக் கேட்டிருக்கப்போகிறார்கள்? மத்திய அரசுப்பணி ஒன்று போதாதா எல்லாக்குறைகளையும் மறைப்பதற்கு? இருந்தபோதும் அம்மா அவரோடு அந்நியோன்னிய வாழ்க்கை வாழ்ந்ததாகவே தெரிகிறது.
வரிசையாய் ஐந்து குழந்தைகள்! அண்ணன்களும் தங்கைகளும் அம்மாவின் சாயலில் அவதரித்திருக்க, இவள் மட்டும் அச்சு அசலாய் அப்படியே அப்பாவின் மறு அவதாரமெனப் பிறந்திருக்கிறாள்.
சிறுவயது முதலே அண்ணன் தங்கைகளின் உதாசீனம் தாழ்வுமனப்பான்மைக்குத் தூபமிட, ஒரு குறுகிய வட்டத்துக்குள் தன்னைத்தானே சிறைபடுத்திக்கொண்டாள்.மற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான சரளா, பள்ளிப்படிப்பையும் முழுதாய் முடிக்க இயலாதவளானாள். மற்றக்குறைகளோடு படிப்பின்மையும் சேர்ந்துவிட, சரளாவின் வாழ்வில் திருமணம் என்பது கனவாகவே போனது. மற்றவர்களுக்கு எந்தத்தடையும் இன்றி திருமணம் முடிந்துவிட, இவள் விஷயத்தில் எல்லா முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராயின.
சரளாவுக்குத் திருமணம் நடைபெறச் சாத்தியமே இல்லை என்று ஒருகட்டத்தில் உணர்ந்தபோது அம்மா மிகவும் உடைந்துபோனாள். மனவேதனையால் கொஞ்சங்கொஞ்சமாய் உருக்குலைந்த அவள் நோயோடு போராடித் தோற்றுப்போனள்.
அம்மா போனபிறகு அப்பா நடைப்பிணமாகிவிட்டார். நாளெல்லாம் தன்முன் வளையவரும் சரளாவைப் பார்த்துப் பார்த்து கலங்கினார். தான் ஏதோ குற்றம் புரிந்ததைப்போல் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டுக் கதறினார். சரளா அவரைத் தேற்ற இயலாமல் தவித்தாள்.
"காய் வேணாமா?"
பரமுவின் குரல் அவள் நினைவுகளைக் கலைத்தது.
அனைவரும் போய்விட்டிருந்தனர். சரளா தலைகுனிந்தவாறே,
"பரங்கிக்கீத்து ஒண்ணு குடுங்க!" என்றாள்.
"நான் சொன்னதை யோசித்துப் பாத்தியா?" அவன் கிசுகிசுத்தான்.
"ம்?" திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் என்ன சொல்வதென்று புரியாமல் மெளனித்தாள். ஒரு வாரமாய் இவள் சம்மதத்துக்காகக் காத்திருக்கிறான். தன்னையும் ஒருவன் துரத்தித் துரத்திக் காதலிப்பானா? அவளால் நம்பமுடியவில்லை. ஆனால்....இதோ.....எதிரிலேயே நிற்கிறானே!
"எங்க அப்பாகிட்டே வந்து பேசுங்க!"
"நீ முதலில் சொல்லு! அப்புறம் உங்கப்பாகிட்டே பேசுறேன்!"
"சரி!"
"சரின்னா என்ன அர்த்தம்?" அவன் புருவங்களை உயர்த்தினான்.
"சரின்னா……...நீங்க சொன்னது சரின்னு அர்த்தம்!" பெரும் பிரயத்தனத்துடன் சொல்லிமுடித்தாள்.
பரமு உதட்டு விளிம்புக்கு ஓடிவந்த புன்னகையை கஷ்டப்பட்டு உள்ளுக்குத் தள்ளினான்.
"ரொம்ப சந்தோஷம்! இன்னைக்கு சாயந்திரம் உங்கப்பாவை வேம்புலியம்மன் கோயிலுக்கு கூட்டிவா! நானும் எங்கப்பாவோடு வரேன்!"
"ம்"
அவன் ஆர்வம் பேச்சில் தெரிந்தது. பரங்கிக்கீற்றை கைகளைப் பிடித்துக் கொடுத்தான்.
சரளா புதுவித அனுபவங்கண்டாள். உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததுபோல் உணர்ந்தாள். கண்கள் இருட்டுவதுபோல் இருந்தது. கால்கள் தள்ளாட வீட்டுக்குள் வந்தவளுக்கு எல்லாம் கனவோ என்று சந்தேகம் வர, இந்த சுகம் கனவிலாவது நீடிக்கட்டும் என்று நினைத்துக்கொண்டாள்.
முடிந்துபோய்விட்டது என்று நினைத்திருந்த தன் கதைக்கு புதியதொரு அத்தியாயமா? இது சாத்தியம்தானா? அவனை நம்பலாமா? நல்லெண்ணம் இல்லாவிடில் அவள் அப்பாவுடன் பேசமுனைவானா?
உழைத்து உரமேறியிருந்த அந்தக் கருத்த தேகத்துக்குள் இப்படியொரு கனிவான காதல் மனம் இருப்பது போனவாரம் வரை அவளுக்கும் தெரியாதுதான். அவனது வசீகரிக்கும் பார்வையும், பளீரென்ற புன்சிரிப்பும் அவளை நிலைகுலையச் செய்தது என்னவோ உண்மைதான் என்றாலும் அவளது வட்டம் அவளை வெளியேறவிடாமல் தடுத்தது. அவனோ, தன் கரங்களை நீட்டி அவளை அந்த வட்டத்தினின்று வெளியே வரச்சொல்லி அழைக்கிறான். கரம் பற்றலாமா? கூடாதா?
அப்பாவிடம் இது பற்றிப்பேசத் தயக்கமாயிருந்தது. இந்த வயதில் வெட்கம் பொருந்தாததுபோல் தோன்றியது. எத்தனை வயதானால் என்ன? பெண் பெண்தானே? ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு அப்பாவிடம் பரமுவைப் பற்றிப்பேசினாள்.
அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது, அமைதியாகக் கேட்டுக்கொண்டார். சரளாவுக்கு வியப்பாயிருந்தது. இந்த விஷயம் கேட்டால் அப்பா இன்ப அதிர்ச்சி அடைவார் என்ற எதிர்பார்ப்பில் அவர் முகத்தையே ஆராய்ந்தவளுக்கு, அதிர்ச்சியைத் தந்தது, அப்பாவின் கேள்வி.
"அவன் என்ன ஜாதியோ?"
ஏமாற்றத்தாலும் அவமானத்தாலும் அவளது கரிய முகம் மேலும் கறுக்க, அவள் அவரை ஒரு புழுவைப்போல் பார்த்தாள். அவரோ, எதையுமே கவனியாதவர்போல் இயல்பாய் இருக்க எண்ணி, செய்தித்தாளில் முகம் மறைத்துக்கொண்டார்.