PDA

View Full Version : வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள்



M.Rishan Shareef
16-04-2010, 02:31 AM
வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள் (http://mrishanshareef.blogspot.com/2010/04/blog-post_15.html)

அவன் தன்
வேட்டைப்பற்களை மறைக்க
தேவதூதனையொத்தவொரு
அழகிய முகமூடியைத் தன்
அரக்க முகத்தில் மாட்டிக்கொண்ட
பின்னரான பொழுதொன்றில்தான்
அவள் அவனைப் பார்த்தாளெனினும்
ஒரு செங்கழுகின் சூட்சுமத்தோடலையும்
அவனது விஷப்பார்வையை அறிந்திட்டாளில்லை

அக்கழுகு
அழகிய பெண்களின் மாமிசப்பட்சி
அவர்தம் வாழ்வினைக் கொழுவி
உயிர் எஞ்சத் துண்டுகளாய்
வெட்டியெடுத்துச் சப்பிச் சிரிக்கும்
கோரங்களைக் கொண்டவை அதனது நாட்கள்

அவள்
செந்தாமரை மலரொத்தவொரு
தேவதைக்குப் பிறந்தவள்
ஏழ்மையெனும் சேற்றுக்குள்
வனப்பு நிறைக்க மலர்ந்தவள்
அன்பைத்தவிர்த்து ஏதொன்றும் அறியா
அப்பாவிப்பெண்ணக் கழுகின்
கூர்விழிகளுக்குள் விழுந்தவள்

சுவனக் கன்னியையொத்த
தூய்மையைக் கொண்டவளின்
கவனம் பிசகிய கணமொன்றிலவன்
கவரும் இரையுடனெறிந்த காதல் தூண்டிலின் முள்
மென்தொண்டையில் இலகுவாக இறங்கிற்று
என்றுமே உணர்ந்திராதவொரு
விபரீதக் குருதிச்சுவையை நா உணர்ந்திற்று

நேசத்தினைச் சொல்லிச் சொல்லி
அவளது சதைகளை அவ்விஷப்பட்சி
தின்றரித்து முடிந்தவேளையில்
வாழ்வில் காணாவொரு துயரத்தை
அவள் கண்கள் விடாதுசொரிந்திட
எந்நாள்பொழுதும் தீராப்பசியோடவன்
வேறொரு அழகியை ஈர்க்கச் சென்றான்
இயல்பை மறந்த நாட்கள் தொடர்ந்து வர
அவளது தேவதைப்பாடல்கள் சோரலாயின

ஆழி நடுவிலொரு ஒற்றைப்படகிலமர்ந்து
சூழ்ந்த தனிமைக்கும் துயருக்கும்
மீளப்பெறமுடியா இழப்புக்குமாக
வசந்தகாலத்து வனங்களின்
வண்ணத்துப்பூச்சிகளைத் தன்
அரணாக அவள் சூடிக் கொண்டாள்
இன்று
மீட்டமுடியாக் காலத்தின் வினைகளைத்
தம் இச்சையால் உணர்ந்த பல திமிங்கிலங்கள்
இடையறாது படகை
வட்டமிட்டுக் கொண்டேயிருக்கின்றன

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# வடக்குவாசல் - ஜனவரி, 2010 இதழ்
# தமிழ் எழுத்தாளர்கள்
# நவீன விருட்சம்
# வார்ப்பு

kulirthazhal
16-04-2010, 11:41 AM
அழகான வார்த்தைகள், நெருக்கமான வர்ணனை. ஒரு பெண் எழுதியதாய் தோன்றச்செய்யும் பாலுணர்வு.. சிறப்பு... தொடருங்கள்.......

இளசு
16-04-2010, 08:13 PM
''காதல்'' தோல்வி
கட்டாயக் கன்னி..

குழந்தைகள், ஆதரவற்றோர் பணியில் மூழ்கி வாழுங்காலம்..
இன்னும் இருக்கும் இளமை உண்ண இங்கும் ஒரு கூட்டம்..


களம் ஒரு வித கனம்..

சொன்ன விதம் மிக மிக அதிகக் கனம்.

சிலர் வித்தியாசமாய் எழுத முயல்வார்கள்.

உங்கள் இயல்பான எழுத்தே வித்தியாசமாய்..



பாராட்டுகள் ரிஷான்.

கீதம்
17-04-2010, 10:27 AM
பேதையின் அவலநிலையை படம்பிடித்துக் காட்டுகின்றன, கவிதை வரிகள். வண்ணத்துப்பூச்சி அரணை திமிங்கலங்களின் பசப்பு வார்த்தைகள் உடைத்துவிடக்கூடாதே என்று மனம் ஏங்குகிறது. பாராட்டுகள் ரிஷான் ஷெரீப் அவர்களே.

govindh
17-04-2010, 11:37 AM
"வசந்தகாலத்து வனங்களின்
வண்ணத்துப்பூச்சிகளைத் தன்
அரணாக அவள் சூடிக் கொண்டாள்...."

அவள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்...
கவி அருமை...பாராட்டுக்கள்...

M.Rishan Shareef
01-05-2010, 11:32 AM
அன்பின் குளிர் தழல்,

//அழகான வார்த்தைகள், நெருக்கமான வர்ணனை. ஒரு பெண் எழுதியதாய் தோன்றச்செய்யும் பாலுணர்வு.. சிறப்பு... தொடருங்கள்.......//

உங்கள் பெயர் அழகாக இருக்கிறது.
கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef
01-05-2010, 11:34 AM
அன்பின் இளசு,

//''காதல்'' தோல்வி
கட்டாயக் கன்னி..

குழந்தைகள், ஆதரவற்றோர் பணியில் மூழ்கி வாழுங்காலம்..
இன்னும் இருக்கும் இளமை உண்ண இங்கும் ஒரு கூட்டம்..

களம் ஒரு வித கனம்..

சொன்ன விதம் மிக மிக அதிகக் கனம்.

சிலர் வித்தியாசமாய் எழுத முயல்வார்கள்.

உங்கள் இயல்பான எழுத்தே வித்தியாசமாய்..

பாராட்டுகள் ரிஷான்.//

அழகான வரிகளில் தெளிவான கருத்து மகிழச் செய்கிறது.

கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef
01-05-2010, 11:38 AM
அன்பின் கீதம்,

//பேதையின் அவலநிலையை படம்பிடித்துக் காட்டுகின்றன, கவிதை வரிகள். வண்ணத்துப்பூச்சி அரணை திமிங்கலங்களின் பசப்பு வார்த்தைகள் உடைத்துவிடக்கூடாதே என்று மனம் ஏங்குகிறது. பாராட்டுகள் ரிஷான் ஷெரீப் அவர்களே.//

வண்ணத்துப் பூச்சிகளின் அரண் உடைபடாமல் காப்பது அவளிடமே தங்கியிருக்கிறது. திமிங்கிலங்களின் பசப்பு வார்த்தைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். :-(

அருமையான கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef
01-05-2010, 11:39 AM
அன்பின் கோவிந்த்,

//"வசந்தகாலத்து வனங்களின்
வண்ணத்துப்பூச்சிகளைத் தன்
அரணாக அவள் சூடிக் கொண்டாள்...."

அவள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்...
கவி அருமை...பாராட்டுக்கள்...//

உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும்.
கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !