PDA

View Full Version : ஒரு பல்லின் கதை



கலையரசி
09-04-2010, 11:50 AM
சிறு வயதில் விளையாடும்போது வாசல்படியில் தடுக்கி விழுந்ததால், என் முன் பல்லின் கீழ்புறம் சிறிது உடைந்துவிட்டது. நல்லவேளையாக, கன்னாபின்னாவென்று உடையாமல் சிறு செதிலாக உடைந்திருப்பதால், முகத்திற்கு விகாரமாயில்லை என அம்மாவிற்குத் திருப்தி. ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல, அந்தப் பல்லின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாகக் கறுப்பாகிக் கொண்டே வந்ததறிந்து அம்மாவுக்குக் கவலை. ஏற்கெனவே அரியலூர் ரயில் விபத்தில் அடிபட்டது மாதிரி, மூக்கில்லாமல் நாக்கில்லாமல் பிறந்திருக்கும் பெண்ணின் முன்பல்லுக்கும் கேடு வந்ததென்றால், எந்த அம்மாவால் கவலைப்படாமல் இருக்கமுடியும்?

"ஏங்க! இவளுக்கு முன் பல் வர வரக் கறுப்பாவுது. அதனால அந்த மாங்கொட்டைத் தலையன்கிட்ட ஒரு முறை அழைச்சிட்டுப் போயிட்டு வாங்களேன்".

எங்கள் ஊர் பல் டாக்டருக்கு அம்மா வைத்த பெயர்தான் மாங்கொட்டைத் தலையன். முன் மண்டை முழுக்க வழுக்கையாயும், பின் மண்டையின் ஓரம், கொஞ்சம் சிலுப்பி விடப்பட்ட முடியோடும் இருந்த அவரைப் பார்த்த போது அம்மா வைத்த பெயர் மிகவும் பொருத்தமாகவே இருப்பதாகப் பட்டது!

‘ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்பார்களே, அது போல எங்களூருக்கு இவர்தாம் ஒரே பல் டாக்டர். பல்லில் எந்தக் கோளாறு என்றாலும் இவரிடமே போக வேண்டிய கட்டாயம்.

அம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க, அப்பா அவரிடம் என்னை அழைத்துப் போனார். அரை மணி நேரம் என் பல்லைப் பல கோணங்களில் ஆராய்ந்தவர், முடிவில் அந்தத் துயரந் தரும் அறிவிப்பினை வெளியிட்டார்.

"உங்கள் பல் செத்துவிட்டது; அதனால் தான் அது கறுப்பாகி வருகிறது," என்பதுதான் அந்த அறிவிப்பு.

என் பல்லின் சாவுச் செய்தி கேட்டு நான் அதிர்ந்து போய் நிற்க, "உடனே சிகிச்சை செய்யாவிட்டால், பக்கத்துப் பற்களும் விரைவில் ஒவ்வொன்றாக உயிரை விட்டு, இப்பல்லைப் போல் கறுப்பாகி விடும்," என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.

இச்செய்தி கேட்டு அப்பாவும் கலக்கமடைய, "பயப்படத் தேவையில்லை. தொடர்ச்சியா ஒருமாசம் என்கிட்ட சிகிச்சை எடுத்துக்கிட்டா, ஒங்க பெண்ணோட மத்தப் பற்களைச் சாவிலிருந்து என்னால காப்பாத்திட முடியும்; இந்தக் கறுப்புப் பல் மேலேயும் வெள்ளையா ஒரு கேப் போட்டுட்டா, பார்க்கிறவங்களுக்கு வித்தியாசமாத் தெரியாது " என்று உறுதியளித்தார்.

அத்தருணத்தில், எனது பற்களை இரட்சிக்க வந்த தேவ தூதனாக(!), என் கண்களுக்கு அவர் காட்சியளித்தார்.

அன்று முதல் தினமும் அப்பாவுடன் அவரிடம் போய்ப் பல்லைக் காட்டிவிட்டு (சிகிச்சைக்குத்தாங்க!) மொய் அழுதுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன்.

ஈறுகளில் அவர் செய்த அறுவை சிகிச்சை காரணமாக, முகம் வீங்கி, கண், மூக்கு எல்லாம் வெளியில் தெரியாமல் ஒரு வாரம் புதையுண்டு போயின. ஒரு வாரங் கழித்து வீக்கம் முழுவதுமாக குறைந்த பிறகு, என் கறுப்புப் பல் வெள்ளையாவதற்கான சிகிச்சை துவக்கப்பட்டது.

அன்று என் பல்லை உடைக்க(!) அவர் எடுத்து வந்த சுத்தியல் வடிவ ஆயுதத்தைப் பார்த்துப் பயந்து விட்டேன்.

"பயப்படாதீங்க! உங்க ஒரிஜினல் பல்லை முழுசும் எடுத்துட்டு, வேற பல்லை வைச்சா அவ்வளவு உறுதியாயிருக்காது. அதனால அதைப் பாதியா ஒடச்சிட்டு, அது மேல ஒரு கேப் போட்டுடுவேன். அது உங்க ஒரிஜினல் பல் மாதிரியே ஸ்டிராங்காயிருக்கும்".

பல்லில் சுத்தியலை வைத்துத் தட்ட, விண் விண்ணென்று வலி உயிர் போனது.

"வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்தா பேசுற, பல்லை உடைச்சிடுவேன்," என்று அம்மா அடிக்கடி திட்டுவது ஞாபகத்துக்கு வந்தது!

பழங்காலத்தில் பல்லை உடைப்பது ஒரு தண்டனையாக இருந்திருக்குமோ?

ஒரு கட்டத்தில் வலி பொறுக்க முடியாமல் டாக்டரின் கையைப் பிடித்துத் தள்ளிவிட்டேன்.

"அது உயிரில்லாத பல்தானே? வலிக்காதே!" என்றார் டாக்டர் ஐயத்துடன்.

பக்கத்திலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துப் பல்லைப் பார்த்தேன்.
கறுப்புப் பல்லின் பக்கத்துப் பல்லில் லேசாக கீறல் விழுந்து இரத்தம் வந்து கொண்டிருந்தது.

இவ்வளவு நேரம் உடைக்க வேண்டிய பல்லை விட்டுவிட்டுப் பக்கத்துப் பல்லை உடைத்துக் கொண்டிருக்கிறார் என்பதையறிந்து கோபமாக முறைத்தேன்.

"சாரி, கை தவறிப் பக்கத்துப் பல்லுல பட்டுடுச்சு போலேயிருக்கு" என்று நெளிந்தார் டாக்டர்.

ஒரு வழியாகப் பல்லைப் பாதியாகக் குறைத்தவர், பல் செட் ஒன்றை என் பல்லில் பொறுத்தி அளவெடுத்தார்.

"இன்னும் ஒரு வாரத்தில் கேப் ரெடியாயிடும். வந்து பொருத்திக்கலாம்"

எனக்கோ அளவிட முடியா மகிழ்ச்சி. இனிமேல் என் முக அழகை(?) இந்தக் கறுப்புப் பல் கெடுக்காது.

ஒரு வாரங் கழித்துப் பல்லைப் பொருத்தியவர், கண்ணாடியை என்னிடம் கொடுத்து, "இது எப்படி இருக்கு?" என்றார் ரஜினி ஸ்டைலில்.

கண்ணாடியில் பார்த்த போது, என் கறுப்புப் பல், இளஞ் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.

"என்ன டாக்டர்? பல் வெள்ளையாயில்லாம, சிவப்பு கலர்ல இருக்கு?" என்றேன் ஏமாற்றம் கலந்த கோபத்துடன்.

"அதுவா? பல் ரொம்பவும் வெள்ளையாயிருந்தா பாக்கிறவங்களுக்கு 'ஆர்டிபிஷியல்'னு உடனே தெரிஞ்சிடும். 'நேச்சுரலா' தெரியணும்னா, கலர் இப்படித்தான் இருக்கணும்" என்று பல்லின் நிறத்துக்குப் புது விளக்கம் கொடுத்தார் டாக்டர். அந்த விளக்கத்தைக் கேட்டவுடன், அவரது வழுக்கை மண்டையில் ஒரே போடாகப் போடலாமா என ஆத்திரம் வந்தது.

இப்போது என்னைப் பார்ப்பவர்கள், "உங்கப் பல்லுல இரத்தம் வருது" என்று சொல்கிறார்கள்.

எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை, பொய்ப் பல், அதைப் பொருத்தக் கட்டணம் என்று ஆயிரக்கணக்கில் தண்டச் செலவு செய்து நொந்து போயிருந்த என் தந்தையை நினைத்து, என் கறுப்புப் பல் இரத்தக் கண்ணீர் சிந்துகிறதோ?


(நிலாச்சாரலில் எழுதியது)

KAMAKSHE
09-04-2010, 12:12 PM
எனக்கு உடனுக்குடன் விமர்சனம் தருகிறீர்கள். நான் தான் தங்களின் இந்தக் கதைக்கு முதல் விமர்சகி..!! அருமையா நையாண்டி செய்கிறீர்கள். மிக நன்றாக எழுதியுள்ளீர்கள் கலையரசி. தங்களின் 'திருப்புமுனை' யும் அருமை.

govindh
09-04-2010, 05:20 PM
பல் படுத்தும் பாடு....சொல்லி மாளாது...!
"வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்தா பேசுற, பல்லை உடைச்சிடுவேன்," என்று அம்மா அடிக்கடி திட்டுவது ஞாபகத்துக்கு வந்தது!
ரசித்து படித்தேன்...

இளசு
09-04-2010, 08:04 PM
ஹ்ஹ்ஹா...

பல்தெரிய சிரித்தேன் கலையரசி..

பல்லைக்காட்டி ( சிகிச்சைக்காகத்தான்)
பல்லின் சாவுச்சேதி
அரியலூர் விபத்தில் அடிபட்ட முகம்
செத்தபல்லுக்குக் பக்கத்துப்பல்
புதையுண்ட ஒரு வாரம்
கறுப்புப் பல்லின் சிவப்புக்கண்ணீர்


--- எத்தனை இடங்களில் தெறித்தேன் எனச் சொல்வது கடினம்..
-- எண்ணிக்கை தெரியாத குற்றம்???


பாராட்டுகள்.

நிலாச்சாரல் வெளியீட்டிற்கு கூடுதல் வாழ்த்துகள்.

செல்வா
09-04-2010, 08:27 PM
நகைச்சுவைக் கதையாக வெளியேத் தெரிந்தாலும்
கதையின் ஊடாகத் தெரியும் சோகமே இந்தக் கதையின் தரத்தை உயர்த்திப் பிடிக்கிறது.

இக்கதையின் சொல்லாட்சியில் பல இடங்களில் வியந்தேன்.

அரியலூர் இரயில் விபத்து
மாங்கொட்டைத் தலையன் -
(குற்றாலக் குறவஞ்சியில் (சரிதானா ஆதன்?) ஒரு பண்ணைக்காரர் பற்றிய வர்ணனை வரும்).
ஞாபகம் வந்த அம்மாவின் திட்டு...

எல்லாவற்றிற்கும் மேலாக இத்தனை வளர்ச்சியில் நாடு வந்தபின்னும் சரியான முறையான மருத்துவ வசதி இல்லாத மருத்துவ வசதி இருந்தும் தங்களை நவீனப்படுத்திக்கொள்ளாத கிராம மருத்துவர்களின் நினைவு வராமலில்லை...

அருமையான கதை
வாழ்த்துக்கள் கலை.

gvchandran
09-04-2010, 11:49 PM
10 வரி கருத்து பதிக்கலாம்னு பார்த்தா ஒரு பல் தடுக்குது

சோம்பல் தான்

கீதம்
10-04-2010, 04:19 AM
சிரிப்பு வரவழைத்தாலும், செல்வா அவர்கள் சொன்னதுபோல் முறையான சிகிச்சை பெற இயலாத கிராம மக்களின் அவலநிலை நினைவுக்கு வரவே செய்தது. சொந்த அனுபவமோ, இரவல் அனுபவமோ, ஏதோ ஒரு அனுபவத்திலிருந்துதான் இந்தக்கதை பிறந்திருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். நகைச்சுவை சொட்டச் சொட்டக் கதை தந்தவிதம் அருமை. தொடருங்கள் உங்கள் கலாட்டாக்கதைகளை.

கலையரசி
10-04-2010, 10:21 AM
எனக்கு உடனுக்குடன் விமர்சனம் தருகிறீர்கள். நான் தான் தங்களின் இந்தக் கதைக்கு முதல் விமர்சகி..!! அருமையா நையாண்டி செய்கிறீர்கள். மிக நன்றாக எழுதியுள்ளீர்கள் கலையரசி. தங்களின் 'திருப்புமுனை' யும் அருமை.

கதையின் முதல் விமர்சகி என்பதால் உங்களது பாராட்டுக்கு ஸ்பெஷல்
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் காமாட்சி!

கலையரசி
10-04-2010, 10:23 AM
பல் படுத்தும் பாடு....சொல்லி மாளாது...!
"வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்தா பேசுற, பல்லை உடைச்சிடுவேன்," என்று அம்மா அடிக்கடி திட்டுவது ஞாபகத்துக்கு வந்தது!
ரசித்து படித்தேன்...

ரசித்துப் படித்தமைக்கு நன்றி கோவிந்த்!

கலையரசி
10-04-2010, 10:25 AM
ஹ்ஹ்ஹா...

பல்தெரிய சிரித்தேன் கலையரசி..

பல்லைக்காட்டி ( சிகிச்சைக்காகத்தான்)
பல்லின் சாவுச்சேதி
அரியலூர் விபத்தில் அடிபட்ட முகம்
செத்தபல்லுக்குக் பக்கத்துப்பல்
புதையுண்ட ஒரு வாரம்
கறுப்புப் பல்லின் சிவப்புக்கண்ணீர்


--- எத்தனை இடங்களில் தெறித்தேன் எனச் சொல்வது கடினம்..
-- எண்ணிக்கை தெரியாத குற்றம்???


பாராட்டுகள்.

நிலாச்சாரல் வெளியீட்டிற்கு கூடுதல் வாழ்த்துகள்.

தாங்கள் ரசித்த இடங்களை குறிப்பிட்டுச் சொல்லி பாராட்டியமைக்கு என் மனம் மார்ந்த் நன்றி இளசு அவர்களே!

கலையரசி
10-04-2010, 10:29 AM
நகைச்சுவைக் கதையாக வெளியேத் தெரிந்தாலும்
கதையின் ஊடாகத் தெரியும் சோகமே இந்தக் கதையின் தரத்தை உயர்த்திப் பிடிக்கிறது.

இக்கதையின் சொல்லாட்சியில் பல இடங்களில் வியந்தேன்.

அரியலூர் இரயில் விபத்து
மாங்கொட்டைத் தலையன் -
(குற்றாலக் குறவஞ்சியில் (சரிதானா ஆதன்?) ஒரு பண்ணைக்காரர் பற்றிய வர்ணனை வரும்).
ஞாபகம் வந்த அம்மாவின் திட்டு...

எல்லாவற்றிற்கும் மேலாக இத்தனை வளர்ச்சியில் நாடு வந்தபின்னும் சரியான முறையான மருத்துவ வசதி இல்லாத மருத்துவ வசதி இருந்தும் தங்களை நவீனப்படுத்திக்கொள்ளாத கிராம மருத்துவர்களின் நினைவு வராமலில்லை...

அருமையான கதை
வாழ்த்துக்கள் கலை.
உண்மை தான் செல்வா அவர்களே! இந்தக் கதையில் வரும் நாயகி போல் எத்தனை பேர் சரியான மருத்துவ வசதி கிடைக்காமல் பணத்தைக் கொட்டி அழுது விட்டுப் புலம்பிக் கொண்டிருக்கிறார்களோ!
உங்களது வாழ்த்துக்குச் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிக்கிறேன்.

கலையரசி
10-04-2010, 10:33 AM
[QUOTE=gvchandran;466094]10 வரி கருத்து பதிக்கலாம்னு பார்த்தா ஒரு பல் தடுக்குது



இந்தக் கதை நாயகியிடம் கேட்டு அந்தப் பல் மருத்துவரின் முகவரி வாங்கித் தருகிறேன். தடுக்கும் அந்தப் பல்லுக்கு அவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டால் 'எல்லாம்' சரியாகிவிடும். சரியா சந்திரன்?

கலையரசி
10-04-2010, 10:34 AM
நகைச்சுவை சொட்டச் சொட்டக் கதை தந்தவிதம் அருமை. தொடருங்கள் உங்கள் கலாட்டாக்கதைகளை.[/QUOTE]

மிக்க நன்றி கீதம்!

அமரன்
10-04-2010, 11:25 AM
சரளம் கதையில் பழக்கப்பட்ட பாதையாகப் பயணிக்கிறது.
சாரள விழிகளூடு குளுமை தரும் காற்றாய்க் கதையும்..
முடிவில் சில பல சமூகங்கள் நினைவில் வந்து புழுங்கத் துவங்குகிறது.

விழுந்த பல்லைப் பக்குவப்படுத்தி ஏதேதோ சொல்லி கூரை மேல் எறிந்தும் குழி தோண்டிப் புதைத்தும் வரும் நாணம்மிகு மக்களின் பார்வையில் இந்தக் கதை கனபரிமாணம்.

கொட்டட்டும் இதே போல் பல்கதைகள்.

பாராட்டுகிறேன் கலையரசி!

கலையரசி
11-04-2010, 04:53 AM
சரளம் கதையில் பழக்கப்பட்ட பாதையாகப் பயணிக்கிறது.
சாரள விழிகளூடு குளுமை தரும் காற்றாய்க் கதையும்..
முடிவில் சில பல சமூகங்கள் நினைவில் வந்து புழுங்கத் துவங்குகிறது.

விழுந்த பல்லைப் பக்குவப்படுத்தி ஏதேதோ சொல்லி கூரை மேல் எறிந்தும் குழி தோண்டிப் புதைத்தும் வரும் நாணம்மிகு மக்களின் பார்வையில் இந்தக் கதை கனபரிமாணம்.

கொட்டட்டும் இதே போல் பல்கதைகள்.

பாராட்டுகிறேன் கலையரசி!
பாராட்டுக்கு மிக்க நன்றி அம்ரன் அவர்களே!

பா.ராஜேஷ்
11-04-2010, 05:37 PM
வழக்கம் போலவே ரசனைக்குரிய முறையில் மிக நன்றாக படைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்

Akila.R.D
12-04-2010, 04:39 AM
நானும் சிறு வயதில் வாரத்துக்கு ஒரு முறை பல் டாக்டரிடம் சென்றவள் தான்... அப்போது கேப் போடும் வசதி இல்லாததால் எங்கள் டாக்டர் எல்ல பல்லையும் பிடிங்கி விட்டார்..

எனக்கு இந்தக்கதை படித்ததும் நான் டாக்டரிடம் பட்ட துன்பங்கள் நினைவுக்கு வந்து விட்டது...

வாழ்த்துக்கள் கலையரசி...

aren
12-04-2010, 08:49 AM
தப்பித் தவறி இவர்களிடம் சென்றுவிட்டால் நம்முடைய சக்கையை பிழிந்துவிட்டுத்தான் விடுவார்கள்.

ஐயோ பாவம், ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள்.

நல்ல கதை. இன்னும் எழுதுங்கள்.

கலையரசி
12-04-2010, 01:50 PM
வழக்கம் போலவே ரசனைக்குரிய முறையில் மிக நன்றாக படைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்

பாராட்டுக்கு மிகவும் நன்றி ராஜேஷ் அவர்களே!

கலையரசி
12-04-2010, 01:52 PM
நானும் சிறு வயதில் வாரத்துக்கு ஒரு முறை பல் டாக்டரிடம் சென்றவள் தான்... அப்போது கேப் போடும் வசதி இல்லாததால் எங்கள் டாக்டர் எல்ல பல்லையும் பிடிங்கி விட்டார்..

எனக்கு இந்தக்கதை படித்ததும் நான் டாக்டரிடம் பட்ட துன்பங்கள் நினைவுக்கு வந்து விட்டது...

வாழ்த்துக்கள் கலையரசி...

ஒரு பல்லுக்கே இவ்வளவு கஷ்டம் என்றால், எல்லாப்பற்களையும் பிடுங்கும் வரை நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள்?
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அகிலா.

கலையரசி
12-04-2010, 01:52 PM
தப்பித் தவறி இவர்களிடம் சென்றுவிட்டால் நம்முடைய சக்கையை பிழிந்துவிட்டுத்தான் விடுவார்கள்.

ஐயோ பாவம், ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள்.

நல்ல கதை. இன்னும் எழுதுங்கள்.

மிக்க நன்றி ஆரென் அவர்களே!