PDA

View Full Version : 'தமிழ்மணம்' திரட்டியின் எதிர்ப்பு!



குணமதி
18-03-2010, 01:01 PM
தமிழ்நாட்டரசு நடத்தவிருக்கும் செம்மொழி மாநாட்டின் போது, தமிழ் எழுத்து மாற்றம் அறிவிப்பு செய்யப்படக்கூடும் என்று எதிர் பார்க்கின்றனர்.

தமிழ்நாட்டரசின் முதல்வரை அணுக்கமாகத் தொடர்பு கொண்டுள்ள ஒரு முன்னாள் துணைவேந்தர் இதற்கென பெருமுயற்சி எடுத்து வருவதாகக் கூறுகின்றனர்.

இந்நிலையில், இம்மாற்றம் தமிழுக்கும் தமிழருக்கும் கேடு செய்யும் என்று விளக்கிப் பரவலாகப் பல்வேறு தமிழ் அறிர்களும் பல தமிழ் அமைப்புகளும் எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றன.

தமிழ்மணம் திரட்டியும் மாற்றத்தை எதிர்த்து எழுதியுள்ளது. பல வலைப்பதிவர்களும் பின்னூட்டத்தில் திமிழ்மணத்தின் கருத்தை வரவேற்றுள்ளனர்.

தமிழ்மணத்தின் அறிவிப்பிலிருந்து சிலபகுதிகளைக்கீழே காண்க :

தமிழ் மொழியில் உள்ள வரிவடிவங்களில் இகர, ஈகார, உகர, ஊகார வடிவங்களில் சீர்மையை கொண்டு வரப் போவதாக தமிழறிஞர்கள் சிலர் பேசி வருகின்றனர். இவர்கள் மிகவும் சிறுபான்மையினர்; ஆனால், அதிகாரத்தில் உள்ளவர்கள். வரும் சூன் மாதம் கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் வேலைத்திட்டங்களைத் தமிழ்ச்சமுதாயத்தின் மேல் திணிக்க முனைகின்றனர்.

இவர்கள் அறிவித்துள்ள சீர்மை தமிழ் எழுத்துகளில் 72 எழுத்துக்களில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும், நான்கு புதிய வரி வடிவங்கள் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிகிறது.

வா.செ.குழந்தைசாமி வெளியிட்டுள்ள சீர்மைக் கட்டுரைகளில் இருந்து இதனை அறிய முடிகிறது. இது தமிழ்மொழிக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாகும். பல தமிழ் அறிஞர்கள் இந்த முயற்சிக்கு எதிரான தங்கள் ஆணித்தரமான கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள். இவர்களுடன் தமிழ்மணமும் தன்னை இணைத்துக் கொள்கிறது.

சுமார் 72 எழுத்துக்களுக்கு மாற்றம் என்பது சீர்மையோ, சீர்திருத்தமோ அல்ல. மிகப் பெரிய மாற்றம். குறுகிய கால இடைவெளியில் எக் காலத்திலும் தமிழ் மொழி இவ்வாறு மாற்றப்பட வில்லை. தந்தை பெரியார் ஒரு சில எழுத்துக்களை மட்டுமே அச்சுத் தொழிலுக்கு ஏற்றவாறு மாற்றினார். அதுவும் புதிய வரி வடிவங்கள் எதையும் பெரியார் புகுத்தவில்லை. வழக்கில் இருந்த வரி வடிங்களைக் கொண்டே சில எழுத்துக்களில் சீர்மையை பெரியார் கொண்டு வந்தார். ஆனால் இன்றைய இணையம், கணினி யுகத்தில் இத்தகைய எந்த மாற்றமும் தமிழுக்குத் தேவை இல்லை. இன்று இணையத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் சில தெற்காசிய மொழிகளில் ஒன்றாக தமிழும் உள்ளது. கணினி பயன்பாட்டிலும் பலப் பிரச்சனைகளை களைந்து தமிழ் பயன்பாடு ஒரு சுமூகமான நிலையை எட்டி உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இந்தச் சீர்மை தேவை தானா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.

சீர்மையால் விளையும் கேடுகள்

இந்த எழுத்துச் சீர்மை ஏற்படுத்தப் பட்டால் தற்பொழுது வெளியாகி உள்ள எண்ணற்ற புத்தகங்கள் பயனற்றதாகி விடும். புதிய புத்தகங்களை வெளியிட வேண்டும். பல இணையத்தளங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் மறுபடியும் மாற்றப்பட வேண்டும். தற்பொழுது வழக்கில் உள்ள தமிழ் எதிர்காலத்தில் கல்வெட்டு தமிழ் போன்றதாகி விடும். வெகு இயல்பாக உள்ள தமிழ் பயன்பாடு பெருங்குழப்பத்திற்கு உள்ளாகும். தமிழின் பயன்பாடு வளர்ச்சியில் இருந்து தேக்க நிலையை அடையும்.

இத்தகைய ஒரு சீர்மை அவசியம் தானா என்ற கேள்வியை நாம் அனைவரும் எழுப்ப வேண்டும்.

தமிழ் மொழிக்கு இந்த சீர்மையால் நேரும் கேட்டினைத் தடுத்து நிறுத்தத் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்யத் தமிழ்மணம் முடிவு செய்திருக்கிறது. இதில் பதிவர்களின் ஆதரவினையும் தமிழ்மணம் வேண்டுகிறது.

இது குறித்த விரிவான வாசிப்பிற்குச் சில கட்டுரைகளைத் தமிழ்மணம் பரிந்துரை செய்கிறது

சுப.நற்குணன் - தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா?
நாக.இளங்கோவன் - எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள்
முனைவர் மு.இளங்கோவன் - தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா?
மணி மு. மணிவண்ணன் - எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கை
முனைவர். பெரியண்ணன் சந்திரசேகரன் - Tamil Script Reform: Its Vacuity Next to The Chinese Script

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி

தமிழ்மணம் நிர்வாகக் குழு சார்பாக:

எழுத்துச்சீர்திருத்தத்தை எதிர்த்து
சொர்ணம் சங்கர்,
இரா. செல்வராஜ்,
இரமணீதரன்,
தங்கமணி,
சுந்தரவடிவேல்,
இளங்கோ,
தமிழ் சசி,
பாலாஜி பாரி