PDA

View Full Version : சாமியார்.சாமி!யார்?



நாகரா
08-03-2010, 07:39 AM
ஆசாமி சாமியார்க்கு முற்றுப்புள்ளி வைத்து
ஆசனம் நெஞ்சில் அன்பின் ஆச்சரியம் உணரச்
சாமி! யார்? என்ற கேள்விக் கொக்கி நிமிர
ஆகாகா! முதுகுத் தண்டில் அருளின் மின்சாரம்!!!!!!!!!!!

படத்தில் சிரித்தே நின்மெய் அரிப்பார்தம்
மடத்தில் இழுத்தே அழிப்பார்
(மடம் = மடமை மற்றும் ஆசிரமம்; நின்மெய் அரிப்பார் = உனதுண்மையை அரிப்பார், உனது சூக்கும உடம்பில் கொக்கி போட்டு சத்தி திருடுவார்)

கொக்கி போட்டுச் சத்தியைத் திருடுங்
கள்ளர் தாம்பொய்ச் சாமியார்
(கொக்கி = கண்ணுக்குப் புலப்படாச் சூக்குமக் குழாய்கள்)

இறந்தார் போல்மாலை போட்டே படத்திலேறித்
துறந்தார் போல்நடிப்பார் கள்வர்

வாலைத் தாயை உணரார் காம
நோயைத் தீரார் சாமியார்

இருள்வாய் தாண்டி இருதயத் தேறி
அருள்வாய் காணார் சாமியார்
(இருள்வாய் = மார்படி, சூர்ய சக்கரம்; அருள்வாய் = அமுத கலசம், இருதயமேல் வாய், தொண்டையடி, தைமஸ் சுரப்பி)

கதவெனும் இருள்வாய் திற!பேய்க் காற்று
வரும்!பொய்ம் மருள்வாய் விழு!
(இதுவே நித்யானந்தாவின் போதனை; பேய்க்காற்று = அசுத்த ஆவிகள்; இருள்வாய் = மார்படி, சூர்ய சக்கரம்; பொய்ம்மருள் வாய் விழு = திரிகுண மாயைக் குழியில் விழு)

தங்கத்தில் சிம்மாசனம் பொய்ச்சாமி யார்க்கு
நெஞ்சந்தான் நல்லாசனம் சாமிக்கு

வெள்ளைப் பட்டை நெற்றி முழுக்க
கள்ள மனத்தை மறைக்க

தேகங் காவியால் மூடுவாய் கருமனப்
பாவி நீசாமி யா

தவவேடம் போட்டே ஊரை ஏமாற்றும்
அவச்சாமி யாரோ சாமி

தவமோனத் துள்ளே தேகமெய் யகத்தில்
சிவமான அன்பே சாமி

புலித்தோ லெதற்குத் தவத்தே அமரப்
புவிமேல் பசுபோல் திரி
(பசுபோல் திரி = அமைதியின் வடிவமாய் உலவு)

சிவா.ஜி
08-03-2010, 08:28 AM
சாமியார்....யார்....சாமி....யார்...என உங்களுக்கே உரிய தத்துவ வரிகளில் அளித்துள்ள ஞானக் கவிதைக்கு வாழ்த்துக்கள் நாகரா அவர்களே.

Narathar
08-03-2010, 08:40 AM
அருமையான கவிதை.............

பேசாமல் இக்கவிதையை நீங்கள் நிழலுக்கு உயிர் பகுதியில் பதித்திருக்கலாம்!!!

நாகரா
08-03-2010, 10:40 AM
சாமியார்....யார்....சாமி....யார்...என உங்களுக்கே உரிய தத்துவ வரிகளில் அளித்துள்ள ஞானக் கவிதைக்கு வாழ்த்துக்கள் நாகரா அவர்களே.
உம் வாழ்த்துக்களுக்கு நன்றி திரு. சிவா

சிவாசாமி யாரென்றே சாமியார் அறிவாரோ
மாசிலாத நெஞ்சிலவர் அன்பே

நாகரா
08-03-2010, 10:42 AM
அருமையான கவிதை.............

பேசாமல் இக்கவிதையை நீங்கள் நிழலுக்கு உயிர் பகுதியில் பதித்திருக்கலாம்!!!
நன்றி திரு. நாரதர், அப்பகுதியிலும் இன்னொரு கவிதை பதித்திருக்கிறேன்

நாகரா
08-03-2010, 10:46 AM
கருமனம் மேலே வெண்மை பூசிக்
குருவென நடிக்குஞ் சாமியார்

இருவிழி யாலே வசியஞ் செய்துநின்
திருவிழி மூடுஞ் சாமியார்

அருள்வாய் மொழியா வசியப் பேச்சால்
இருள்வாய் திறக்குஞ் சாமியார்
(அருள்வாய் மொழியா = இருதயம் பேசும் அன்பு அல்லாத, இருள்வாய் = மரணப் படுகுழி)

இன்பக்கவி
08-03-2010, 01:07 PM
நல்லா இருக்கு கவிதை..
சாமியார் யார்???
சாமியை தவிர யாரும் நிஜம் இல்லை...:)

நாகரா
08-03-2010, 01:31 PM
உம் பின்னூட்டத்துக்கு நன்றி இன்பக்கவி

சாமியே நிஜமுன் ஆவியாய் இருக்கச்
சாமியார் தேடியேன் ஓட்டம்

இளசு
08-03-2010, 05:48 PM
தமிழ்வேள்வியும் ஞானக்கேள்வியும் கலவிக்களிநடனம் புரியும் கவிதை..

வாழ்த்துகிறேன் நாகரா அவர்களே..

நாகரா
09-03-2010, 03:25 AM
உம் வாழ்த்துக்களுக்கு நன்றி திரு. இளசு

அக்னி
09-03-2010, 06:51 AM
ஞாலத்தில் பிறந்தவரெல்லாம்
ஞானமுடையவரே...

அஞ் ஞானம் கொண்டு
அஞ்ஞானம் ஆக்கும்
பொய்ஞ்ஞானிகளா சித்தர்கள்...???

அஞ்ஞானம் நம்பி
அஞ்ஞானிகளாகும் நாமே
சித்தம் இழந்தவர்கள்...

விஞ்ஞானம் தேவையில்லை
பொய்ஞ்ஞானம் காண...
உன் ஞானமே போதும்,
மெய்ஞ்ஞானம் அறிய, உணர, உய்ய...

நாகரா அவர்களின் கவிதை என்னையும் அப்படி எழுதிப்பார் எனத் தூண்டியது.
சரி தவறு பற்றிக் கவலைகொள்ளாதவன் நான்.
முயற்சித்தேன். அருகிலும் வர முடியவில்லை. வந்ததைக் கிறுக்கிவிட்டேன்.
தவறுகள் சொல்லித் தருக, திருத்துக...

நாகரா அவர்களுக்குப் பாராட்டும், நன்றியும்...

நாகரா
09-03-2010, 10:11 AM
ஞாலத்தில் பிறந்தவரெல்லாம்
ஞானமுடையவரே...

"என்றென்றும் என் நிறைவாய் விளங்கும் பேரறிவு, ஒவ்வொன்றிலும் பூரணமாய்ப் பொருந்தியிருக்கிறது" என்று வள்ளலார் எனக்கு அருளிய குரு மந்திரத்தை திரு. அக்னியின் திருவாசகம் எனக்கு நினைவூட்டுகிறது


அஞ் ஞானம் கொண்டு
அஞ்ஞானம் ஆக்கும்
பொய்ஞ்ஞானிகளா சித்தர்கள்...???

வார்த்தை விளையாட்டில் ஆன கேள்வியில் மெய்ஞ்ஞான வாசம்


அஞ்ஞானம் நம்பி
அஞ்ஞானிகளாகும் நாமே
சித்தம் இழந்தவர்கள்...

ஆம்


விஞ்ஞானம் தேவையில்லை
பொய்ஞ்ஞானம் காண...
உன் ஞானமே போதும்,
மெய்ஞ்ஞானம் அறிய, உணர, உய்ய...

ஆம், "ஞான்" அறிந்து உணர உய்யத் தடையேது! இந்த "நான்" என்னும் "ஞான்" விட்டு, வெறும் ஆள் பின்னே ஓடுவது தேவையோ?


நாகரா அவர்களின் கவிதை என்னையும் அப்படி எழுதிப்பார் எனத் தூண்டியது.
சரி தவறு பற்றிக் கவலைகொள்ளாதவன் நான்.
முயற்சித்தேன். அருகிலும் வர முடியவில்லை. வந்ததைக் கிறுக்கிவிட்டேன்.
தவறுகள் சொல்லித் தருக, திருத்துக...

இது உமது தன்னடக்கத்தின் பிரதிபலிப்பு!


நாகரா அவர்களுக்குப் பாராட்டும், நன்றியும்...
நன்றி திரு. அக்னி

வஞ்சமிலா அன்பெனுமோர் சாமியுளார் நெஞ்சினிலே
வன்மனமோ மெய்யுணரா தலையும்

நாகரா
09-03-2010, 10:33 AM
சாமி!யார்? ஆசாமி நின்னுளே ஆசானாய்த்
தாமுளார் ஆ!சாமி! அன்பே

சாமி!யார்? ஆசிரம மெய்யுளே இருதயமே
பீடமாய் ஆளுமவர் அன்பே
(ஆசிரம மெய் = உண்மை நெறி விளங்கும் உடம்பாகிய ஆசிரமத்தில்)

சாமி!யார்? ஆசன நெஞ்சுளே ஆடம்பரம்
ஏதுமிலார் ஈசனார் அன்பே

சாமி!யார்? தேகமெய்ம் மடத்துளே நெஞ்சபீடத்
தேறினார் ஞானவான் அன்பே

நாகரா
11-03-2010, 10:27 AM
சாமி!யார்? யாமே எனத்தம் பொய்யுரு
காட்டியே ஏய்ப்பார் சாமியார்

சாமி!யார்? உருவினில் அடங்கா அன்பெனுஞ்
சாமியாம். இருதயத் தடங்கு

சாமி!யார்? படத்தினில் பிடிபடார் மெய்க்கடத்துள்
ஆவியார். அகந்தனில் படி

சாமி!யார்? சமயச் சடங்கெனும் ஆரவாரம்
நேசியார். அமலர் எளியர்

நாகரா
12-03-2010, 03:38 AM
சாமி!யார்? மனத்துக்கண் மாசிலார் நிலத்துக்கண்
நேசமே உருவாய்த்திரி வார்.

சாமி!யார்? பேத பாவம் பாரா
ஈரநெஞ் சினார்உத் தமர்.

சாமி!யார்? தேகவாசம் பூமியில் ஆனபோதும்
தூயதாம் மெய்ம்மையை வாழ்பவர்

அக்னி
12-03-2010, 06:27 AM
பாராட்டுக்கு நன்றி மதிப்பின் நாகரா அவர்களே...

சாமியார் வாழவேண்டிய வாழக்கூடாத வழிகளை ஈரடிகளிற் பொதிந்து பொதிந்து தருகின்றீர்கள்.

உங்கள் மொழியாளுகை எப்போதும் எனக்கு வியப்பைத் தருமொன்று.

உங்கள் கவிகளுக்குப் பின்னூட்டமிட எங்கிருந்தோ ஒரு தயக்கம் வந்து ஒட்டிக்கொள்கின்றது.

நாகரா
12-03-2010, 10:04 AM
அன்பதன் ஈரமே அக்னியாய் மூலத்தே
குண்டலி நாகம் எழுப்பும்
(மூலம் = முதுகடி, மூலாதார சக்கரம், அக்னி = அகத்தவக் கனல், குண்டலி நாகம் = நம் ஒவ்வொருவரிலும் potential energy ஆகப் பொதிந்திருக்கும் சற்குரு தத்துவம்)

உமது பின்னூட்டங்களும் என்னில் பிரமிப்பை ஏற்படுத்தாமல் போனதில்லை, தயக்கம் தவிர்த்து உம் மனதுக்குப் பட்டதைத் தாராளமாகத் தெரிவியுங்கள் திரு. அக்னி, பரஸ்பரம் பகிர்தலில் தான் நேசங் கனிகிறது, ஞானம் விரிகிறது, என் கருத்துக்களில் ஏதேனுந் தவறாகப் பட்டால், சுட்டிக் காட்டவும் உமக்கு முழு உரிமை இருக்கிறது.

சாமி!யார்? கேள்விக்கு முடிவான பதிலாய்த்
தாழுடை அன்புக்குள் மூழ்கு

நாகரா
12-03-2010, 10:34 AM
சாமி!யார்? ஆதி மூல நாத
ஜோதியாய் தேகத் தாடுவார்
(ஆதி மூலம் = First Source; நாதம் = ஓங்கார ஒலி தத்துவம், ஆதி வார்த்தை, The Word; ஜோதி = அக நெறி ஒளி தத்துவம்; தேகத் தாடுவார் = நாத ஜோதி இழைந்தோடும் வாசி மூச்சாய் மெய்யுடம்பு உயிர்க்க ஆடுவார்)

சாமி!யார்? தராதரம் பாராப் பராபரத்
தாயுமாந் தந்தை யார்
(தராதரம் பாரா = உய்ர்ந்தது தாழ்ந்தது என்று வேறுபடுத்திப் பாராத, யாவையும் சரிசமமாய், சமரசமாய்ப் பார்க்கும்)

சாமி!யார்? சுத்த சமரச நோக்கினார்
யாவுமே உய்ய அகத்துளார்