PDA

View Full Version : ஒருநிமிடக் கதை...."வலி"



சிவா.ஜி
04-03-2010, 12:00 PM
என் பள்ளித்தோழன் யுவராஜ், வித்தியாசமானவன். கப்பலேக் கவிழ்ந்தாலும் கவலைப்படமாட்டான். முகத்தில் எப்போதும் புன்னகையோடுதான் இருப்பான். நிறம் குறைவு, முகம் முழுதும் அம்மைத்தழும்புகள் ஆனாலும் எந்த தாழ்வுமனப்பான்மையுமில்லாமல்...எல்லோருடனும் இணைந்து பழகி, அனைவரையும் சந்தோஷப்படுத்துவான்.

ஒருமுறை நானும் அவனும் மோட்டார்பைக்கில் போகும்போது, சாலையில் சிந்தியிருந்த எண்ணையால் வழுக்கி வாகனத்தோடு விழுந்தோம். அவனது கால் வாகனத்துக்கடியில் சிக்கிக்கொண்டது. எனக்கு லேசான சிராய்ப்பு, உடனே ஓடிவந்து வாகனத்தைத் தூக்கி அவனை விடுவித்தேன். எழுந்து நிற்கமுடியாமல் தடுமாறினான். எலும்பு உடைந்திருக்கும். ஆனாலும், அவன் முகத்தில் வலிக்கான வேதனையின் சுவடே தெரியவில்லை.

"எலும்பு உடஞ்சிருக்கும் போலருக்குடா....ரொம்ப வலிக்குமே...ஆனா உன்னப்பாத்தா வலிக்கவேயில்லங்கற மாதிரி சிரிக்கிற....என்னடா நீ லூஸா?"

என்றதற்கு,

"போடா....போடா....என் உடம்புல இருக்கிற எல்லா பாகமும் என் மனசோட கட்டுப்பாட்டுலத்தான் இருக்கு. அந்த மனசு என் கட்டுப்பாட்டுல இருக்கு. அடிபட்ட பாகத்துக்கு வலின்னா என்னன்னு தெரியுமா....மனசு சொல்லித்தானே அது வலிக்குதுன்னு உணரமுடியும். ஆனா என் மனசை நான் ரொம்ப உறுதியா வெச்சிருக்கேன். வலியையே உணராத மாதிரி அதைப் பழக்கி வெச்சிருக்கேன்....அதாண்டா எனக்கு வலின்னா என்னன்னே தெரியல"

அவனை அன்று ஆச்சர்யத்துடன் பார்த்தேன். இன்றைக்கும் அவனை ஆச்சர்யத்துடன்தான் பார்க்கிறேன். ஆனால் வேறுவிதமான ஆச்சர்யத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனை இன்று சந்தித்தேன். தெருவோர தேநீர்க்கடையில் தேநீர்க் குடிக்க நின்றிருந்தோம். சூடானத் தேநீரை அவனுக்குக் கொடுக்கும் போது தவறி அவன் கையில் சிந்திவிட்டது. உடனே கையை உதறிக்கொண்டு ஓடி பக்கத்திலிருந்த குளிர்ந்த தண்னீரை அள்ளி ஊற்றிக்கொண்டான். எரிச்சலில் துடித்ததை என்னால் உணரமுடிந்தது.

"என்னடா யுவராஜ்...எந்த வலிக்குமே, கலங்காத நீ இந்தச் சின்ன சூட்டைத் தாங்கமுடியாம துடிக்கிற? என்னடா ஆச்சு உனக்கு?"

"என்னோட பலமே என் மனசுதான்டா...உடம்புல எந்த பாகத்துக்கு அடிபட்டாலும், வலியை உண*ரவிடாம பாத்துக்கிட்ட அந்த மனசையே ஒருத்தி உடைச்சிட்டாடா....அன்னையிலருந்து...இப்படித்தான்..."

"ஏண்டா....காதல் தோல்வியா..?"


"அப்படி சொல்ல முடியாதுடா.... ஆனா...என் மனசுக்குப் பிடிச்ச ஒரு பொண்னை நான் ரொம்ப நாளா...ஒருதலையாக் காதலிச்சுக்கிட்டிருந்தேன், அது அவளுக்கும் தெரியும், ஆனா ஒருமுறை அதை அவக்கிட்டயே நேர்ல சொன்னப்ப அவ சொன்ன வார்த்தைகள்தாண்டா என் மனசை உடைச்சிடுச்சி"

சற்று மௌனத்துக்குப் பிறகு,

"உனக்கெல்லாம் காதல் ஒரு கேடா....உன் மூஞ்சியை நீ கண்ணாடியில பாத்ததேயில்லையான்னு செருப்பால அடிச்சமாதிரி கேட்டுட்டுப் போயிட்டாடா....அன்னையிலேருந்து இன்னைக்கு வரைக்கும், என் மூஞ்சியை கண்ணாடியிலப் பாக்கும்போதெல்லாம் வலிக்குதுடா...செத்துப்போயிடலான்னு தோணுது"

"ச்சே....உன்னை எவ்வளவு உறுதியான மனசுக்காரன்னு நினைச்சிட்டிருந்தேன்....போடா.....சரி..இப்ப சொல்லு, உன் மூஞ்சி ரொம்ப அசிங்கம்ன்னு நீ நினைக்கிறியா?"

"நானே என்னைப் பத்தி எப்படிடா அப்படி நினைக்க முடியும்?"

"எஸ்...அதேதான். புத்தர் என்ன சொன்னார். ஒருத்தர் உன்னைப்பார்த்து திட்டும்போது, அதுக்கு நீ கோபப்பட்டா, அந்த வார்த்தை உனக்கு சொந்தமாயிடுதுன்னு அர்த்தம், நீ அதை ஏத்துக்கவேயில்லைன்னா...சொன்னவங்கக்கிட்டேயே அது இருக்கும். உன்னை ஒருத்தர் வேசிமகனே அப்படீன்னு சொன்னா, அதுக்கு நீ கோபப்பட்டா...உன்னோட தாய் தவறாவள்ன்னு அர்த்தம்...இல்லையா? அதுவே...அதைக் கண்டுக்காம, அதாவது அந்த வார்த்தையை ஏத்துக்கிட்டு, அதை உனக்கு சொந்தமாக்கிக்காம இருந்தா...அந்த வார்த்தைக்கு மதிப்பே இல்லை. அவ சொன்னதை நீ ஏண்டா ஏத்துக்கிட்ட. தூக்கி எறிஞ்சிடு. அது உனக்குச் சொந்தமானது இல்ல. அதை ஏன் சுமந்துக்கிட்டுத் திரியற? தூக்கித் தூரப்போடு"

முகமெல்லாம் பிரகாசமாய் என்னைப் பார்த்தவனின் கண்களில் எனக்குப் பழைய யுவராஜ் தெரிந்தான். திரும்பி நடக்கும்போது, அந்தக் கடை பெஞ்சில் முட்டியை பலமாய் இடித்துக்கொண்டான்...ஆனால்...அவன் முகத்தில்...அதே பழையப் புன்னகை.

அவனுடைய மனம்...மீண்டும் அவனின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.

அக்னி
04-03-2010, 12:19 PM
“குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.”

கல்வி என்பதை விட்டுப்பார்த்தால், இந்தக் கதைக்கு மிகவும் பொருத்தம்.

“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு”

இது நாம் செய்யக்கூடாதென்பதற்காகச் சொல்லப்பட்டதேயன்றி,
நாம் ஏங்கிக்கொண்டிருப்பதற்காகச் சொல்லப்பட்டதன்று.

உறுதி கொண்ட நெஞ்சத்திற்கு
வலிகள்
இன்னமும் வலிமை சேர்க்கும்.

காதலின் சக்தியும், நட்பின் இலக்கணமும் சொல்லும் இன்னுமொரு கதை.

என் இனிய பாராட்டு...

aren
04-03-2010, 12:53 PM
தாழ்வு மனப்பான்மை இல்லாமல் இருந்தாலே தானாகவே வெற்றி தன்னைத் தேடி வரும். உங்கள் கதையைப் படிப்பவர்கள் அதை கடைபிடித்தாலே போதும், வெற்றிதான்.

கலையரசி
04-03-2010, 01:43 PM
மன உறுதி இருந்தாலும் எந்த வலியையும் தாங்க முடியும் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். அக அழகைப் பார்க்காமல் முக அழகை மட்டுமே பார்த்து வரும் காதல் நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை.
நச்சென்று படைத்த விதம் நன்று. பாராட்டுக்கள்.

சிவா.ஜி
04-03-2010, 02:23 PM
மீண்டும் மீண்டும் அசத்துகிறீர்கள் அக்னி. அருமையான பின்னூட்டம். தேவையில்லாத ரணத்தை ஏன் உடன் சுமக்க வேண்டும், அதனால் ஏன் உறுதியிழக்க வேண்டும்? தூர எறிந்துவிட்டு உற்சாகமாய் நடக்க வேண்டுமென்பதையே சொல்ல விழைந்தேன்.

நன்றி அக்னி.

சிவா.ஜி
04-03-2010, 02:25 PM
நான் பணிபுரியும் இடத்திலும் பல இந்தியர்களைப் பார்க்கிறேன்....நிறைய தாழ்வுமனப்பான்மை, சின்னச் சின்ன சீண்டல்களுக்கும் துவண்டு போகிறார்கள். அது தேவையில்லை.

உறுதியோடு உற்சாகமாய் இருந்தாலே போதும்.

மிக்க நன்றி ஆரென்.

சிவா.ஜி
04-03-2010, 02:27 PM
ஆமாம் கலையரசி அவர்களே...முக அழகைப் பார்த்து வருவது காதலல்ல....அதை மட்டும் பார்ப்பவர்கள்...காதல் செய்யத் தகுதியானவர்கள் இல்லை. அதே சமயம், தன்னைக் காதலிக்காத ஒருத்தியின் வார்த்தையை பெரிதாக எண்ணித் தன்னிடமுள்ள நல்ல குணத்தை இழந்து நிற்கத் தேவையில்லை என்பதை சொன்னேன்.

மிக்க நன்றி கலையரசி அவர்களே.

பா.ராஜேஷ்
04-03-2010, 06:01 PM
உண்மைதான் அண்ணா! வெற்றி பெற தன்னம்பிக்கை மிக அவசியம். தாழ்வு மனப்பான்மை ஒருபோது முன்னேற உதாவது. அருமையான கதை, பாராட்டுக்கள்..

ஜனகன்
04-03-2010, 07:58 PM
உங்கள் நண்பனின் கதை, தன் நம்பிக்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
புத்தர் சொன்ன உபதேசம் நன்றாக இருந்தது.அருமையான கதை வாழ்த்துக்கள்.

இளசு
04-03-2010, 08:46 PM
நாம் சம்பந்தப்படாத, உள்வாங்காத, எதிர்பார்ப்பு வைக்காத செயல்கள், சொற்கள் ---
நமக்கு கோபம், துன்பம் தரா..


புத்தர் உபதேசத்தை பொருத்தமாய்ச் சொல்லி நண்பனைத் தடுத்தாட்கொண்ட உத்திக்கு சபாஷ் சிவா..

அக்னி, அசத்திவிட்டாய்.

மேற்கோள் என்ன நூலில் உள்ள பாடல்? வெகு பொருத்தம்!

அமரன்
04-03-2010, 08:52 PM
மனதில் உறுதி வேண்டும்.
அவசியமான எடுத்தாள்வு சிவா.

நேற்று
காதலி எறிந்த சொற்கல் மனவலி(யை) கொடுத்தது... மனவலி(மை) குறைத்தது..
இன்று
நண்பன் கொடுத்த கை மனவலி(யை) குறைத்தது... மனவலி(மை) கொடுத்தது..
நாளை........?

இருமுகத் தலைப்பை மிகவும் இரசித்தேன்!

செல்வா
04-03-2010, 09:52 PM
அக்னி அண்ணா அமரன் .... இவர்களுக்குப் பின் நான் சொல்ல என்ன இருக்கிறது.
வலியை வலிக்காமல்
சொன்ன வலிய கதை...
அருமை அண்ணா....

(வலி-இழு (மலையாளம்))

கீதம்
04-03-2010, 11:52 PM
அருமையான கருத்து. மனம் எப்போதும் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும் என்பதையும் நமக்குச் சொந்தமில்லாத தூற்றல்களை ஏற்பதும் புறக்கணிப்பதும் மனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும் என்பதையும் அழகிய கதை மூலம் எடுத்துரைத்த விதம் அருமை. பாராட்டுகள்.

சிவா.ஜி
05-03-2010, 04:54 AM
ரொம்ப நன்றி ராஜேஷ் மற்றும் ஜனகன்.

அமரன்
05-03-2010, 05:11 AM
நாம் சம்பந்தப்படாத, உள்வாங்காத, எதிர்பார்ப்பு வைக்காத செயல்கள், சொற்கள் ---
நமக்கு கோபம், துன்பம் தரா..


புத்தர் உபதேசத்தை பொருத்தமாய்ச் சொல்லி நண்பனைத் தடுத்தாட்கொண்ட உத்திக்கு சபாஷ் சிவா..

அக்னி, அசத்திவிட்டாய்.

மேற்கோள் என்ன நூலில் உள்ள பாடல்? வெகு பொருத்தம்!

நாலடியார்

சிவா.ஜி
05-03-2010, 05:16 AM
"நாம் சம்பந்தப்படாத, உள்வாங்காத, எதிர்பார்ப்பு வைக்காத செயல்கள், சொற்கள் ---
நமக்கு கோபம், துன்பம் தரா.."


மிக அருமை இளசு. உள்வாங்காதவை நமதல்ல....பின் எதற்கு வருத்தம்...!!

மிக்க நன்றி இளசு.

சிவா.ஜி
05-03-2010, 05:21 AM
மனவலி(மை) கொடுத்தது, குறைத்தது.....சொல்லியவிதம் அசத்தல் பாஸ்.

எழுதியவனுக்கே புதுக் கோணத்தைக் காட்டும் சிறந்த பின்னூட்டம்.

ரொம்ப ரொம்ப நன்றி அமரன்ஜி.

சிவா.ஜி
05-03-2010, 05:23 AM
வலிய கதைன்னா....நீங்க சொன்ன மலையாளத்துல பெரிய கதை.....ஹி...ஹி....சிறியகதையை பெரியக்கதையாக்கின செல்வாவுக்கு நன்றி.

சிவா.ஜி
05-03-2010, 05:26 AM
கருத்துள்ள பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கீதம் அவர்களே.

வானதிதேவி
05-03-2010, 02:54 PM
நண்பர்களின் நயமிக்க பாசபிணைப்பு என்றுமே வலியை எதிர்க்கும் வலிமை பெற்றது தான்.எளிமையான கதை அமைப்பு.அருமை அண்ணா.

Ravee
05-03-2010, 06:51 PM
தேநீர் கடையில் என் கையும் சுடப்பட்டதுண்டு சில முறை . ஆறுதலாய் உங்கள் பின்னுட்டங்கள் .

அன்புரசிகன்
05-03-2010, 09:03 PM
மனதின் வலிமையை கூறும் வல்லிய கதை. வாழ்த்துக்கள்...

சிவா.ஜி
06-03-2010, 03:08 PM
ரொம்ப நன்றிம்மா வானதிதேவி. நண்பன் என்பவன், தன் நண்பனின் வலியைப் பார்த்தும் பார்க்காமல் போக மாட்டான்.

சிவா.ஜி
06-03-2010, 03:09 PM
ரொம்ப நன்றி ரவி.

சிவா.ஜி
06-03-2010, 03:11 PM
ரொம்ப நன்றி அன்பு.

குமுதா
20-03-2010, 02:10 PM
ஒருத்தர் உன்னைப்பார்த்து திட்டும்போது, அதுக்கு நீ கோபப்பட்டா, அந்த வார்த்தை உனக்கு சொந்தமாயிடுதுன்னு அர்த்தம், நீ அதை ஏத்துக்கவேயில்லைன்னா...சொன்னவங்கக்கிட்டேயே அது இருக்கும். உன்னை ஒருத்தர் வேசிமகனே அப்படீன்னு சொன்னா, அதுக்கு நீ கோபப்பட்டா...உன்னோட தாய் தவறாவள்ன்னு அர்த்தம்...இல்லையா? அதுவே...அதைக் கண்டுக்காம, அதாவது அந்த வார்த்தையை ஏத்துக்கிட்டு, அதை உனக்கு சொந்தமாக்கிக்காம இருந்தா...அந்த வார்த்தைக்கு மதிப்பே இல்லை. அவ சொன்னதை நீ ஏண்டா ஏத்துக்கிட்ட. தூக்கி எறிஞ்சிடு. அது உனக்குச் சொந்தமானது இல்ல. அதை ஏன் சுமந்துக்கிட்டுத் திரியற? தூக்கித் தூரப்போடு"
வாழ்வுக்கு மிகவும் தேவையான, பயனுள்ள வார்த்தைகள். மிகவும் நன்று.

சிவா.ஜி
20-03-2010, 02:58 PM
மிக்க நன்றி குமுதா அவர்களே.