PDA

View Full Version : தனக்குப் பிறந்த போது...!



குணமதி
01-03-2010, 12:24 PM
தனக்குப் பிறந்த போது...!


மூக்காம்பிகை வணங்க
முனைப்பாகப் போய் வருவார்!

திருவேற் காட்டில்
திரும்பத் திரும்ப வழிபடுவார்!

சமையம் கிடைக்கும் போதெல்லாம்
சமயபுரம் போய் வருவார்!

காஞ்சியில் விசாலாட்சியைக்
காணாமல் வரமாட்டார்!

மலையனூர் விழாவிற்கு
மறக்காமல் போய்வருவார்!

மாதத்தில் இருமுறை
மாங்காட்டில் வழிபாடு!

பாளையத் தம்மனுக்குப்
படி கட்டி மகிழ்ந்திடுவார்!

அவர்க்குப் பிறந்தது
பெண் குழந்தை என்றவுடன்...

"பொட்டையைப் பெற்றாயா
போடி சிறுக்கி" எனத்...

தன்துணையைத் திட்டுகின்ற
தறுதலையை என்னென்பீர்?

அக்னி
01-03-2010, 01:23 PM
பால் குடித்த தாயும்,
கூடி வாழும் மனைவியும்
பெண்ணாய்த் தெரியாமல்,
பிறந்த குழந்தை மட்டும்
பெண்ணாய்த் தெரிகையில்,
இந்தத் தெய்வங்களெல்லாம்
அவர்களுக்குப் பெண்ணாய்த்
தெரியாததில் (கவிதையிலுள்ள அனைவரும் பெண் தெய்வங்கள் தானே)
வியப்பில்லைதான்...

இன்று இந்நிலை அருகிவிட்டாலும்,
முழுவதுமாய் அற்றுப்போகவேண்டும்.

நல்லதொரு கவிதை.
பாராட்டுக்கள் குணமதி அவர்களுக்கு...

சிவா.ஜி
01-03-2010, 01:53 PM
கடவுள் வரம்தரும், பெண்குழந்தை செலவுவைக்கும் என பேதம் பிரித்துப் பார்க்கும் தறுதலையாய் இருப்பார். அக்னி சொன்னதைப்போல, தன் தாயும், மனைவியும் பெண்கள்தானே என்ற எண்ணம் இல்லாதவர்.

நல்லாக் கேட்டிருக்கீங்க. வாழ்த்துகள் குணமதி.

(சமயம் 'சமையம்' ஆனதைக் கொஞ்சம் சரிபார்த்துவிடுங்கள்)

muthuvel
01-03-2010, 02:25 PM
அவனை பெற்றவளும் ,
அவனுடன் படுத்தவளும் பெண்ணாக ,
அவனுக்கு பிறந்த பெண் மட்டும் மண்ணிலே

அக்னி
01-03-2010, 02:36 PM
முத்துவேல் அவர்களே...
சில வார்த்தைகளைத் தவிர்ப்பதுதான் தமிழில் மரியாதைக்குகந்தது.

மனைவிக்கான ஸ்தானம், உடலுறவுக்காக மட்டும் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கும் வரிகளை உங்கள் பதிவிலிருந்து நீக்கிவிடக் கோருகின்றேன்.

தங்கள் புரிதலை அன்புடன் எதிர்பார்க்கின்றேன்.

சிவா.ஜி
01-03-2010, 02:41 PM
அவனோடு வாழ்பவளும் எனச் சொன்னால் நன்றாக இருக்கும்.

குணமதி
01-03-2010, 02:43 PM
பால் குடித்த தாயும்,
கூடி வாழும் மனைவியும்
பெண்ணாய்த் தெரியாமல்,
பிறந்த குழந்தை மட்டும்
பெண்ணாய்த் தெரிகையில்,
இந்தத் தெய்வங்களெல்லாம்
அவர்களுக்குப் பெண்ணாய்த்
தெரியாததில் (கவிதையிலுள்ள அனைவரும் பெண் தெய்வங்கள் தானே)
வியப்பில்லைதான்...

இன்று இந்நிலை அருகிவிட்டாலும்,
முழுவதுமாய் அற்றுப்போகவேண்டும்.

நல்லதொரு கவிதை.
பாராட்டுக்கள் குணமதி அவர்களுக்கு...

குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் 'பெண் தெய்வங்க'ளே!

கருத்துக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அக்னி அவர்களே.

குணமதி
01-03-2010, 02:57 PM
நன்றி சிவா.

சமயம் என்பதை மதத்தைக் குறிப்பதற்கும், சமையம் என்பதைக் காலம், நேரம் என்பதைக் குறிபதற்கும் மொழிவல்லார் பயன்படுத்துகின்றனர்.

காலம் நேரத்தைக் குறிக்கச் சமயம் என்று எழுதுதலும் பிழையன்று;
பொதுவுடைமை என்பதைப் பொதுவுடமை என்றும், புடைவை என்பதைப் புடவை என்று எழுதுவதைப்போல!

எனவேதான், 'சமையம்' என்று எழுதினேன்; அது பிழையன்று.

குணமதி
01-03-2010, 03:10 PM
முத்துவேல்,

உங்கள் கருத்திற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

மன்றத்தின் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்போம்.

தக்கவாறு திருத்திவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி.

அக்னி
01-03-2010, 03:13 PM
சில சமயங்களில் எனக்கு இந்தச் சந்தேகம் வருவதுண்டு.

சமயம், விடயம், புடவை, கட்டடம்...
இப்படியான சொற்களில் சிறுகுழப்பம் இருந்து கொண்டேயிருப்பதுண்டு.

இது(கட்டடம்)பற்றி பாரதி அண்ணாவின் திரியொன்றிலும்
விளக்கம் கேட்டிருந்த ஞாபகம்.

இவை தொடர்பாக விளக்கத் திரி ஒன்றைக் கொளுத்திப் போடுங்களேன்...

சிவா.ஜி
01-03-2010, 03:17 PM
ஒரு சொல்லுக்கு பல பொருள் இருப்பதைப்போல சமயம் என்ற சொல்லுக்கும் மதம், பொழுது என அர்த்தமிருப்பதில் தவறில்லையே. அதற்காக இதுவரை புழக்கத்திலில்லாத சமையம் என உபயோகிப்பது ஏன். சமையலை சமயல் எனச் சொல்ல முடியுமா?

குணமதி
01-03-2010, 03:34 PM
ஒரு சொல்லுக்கு பல பொருள் இருப்பதைப்போல சமயம் என்ற சொல்லுக்கும் மதம், பொழுது என அர்த்தமிருப்பதில் தவறில்லையே. அதற்காக இதுவரை புழக்கத்திலில்லாத சமையம் என உபயோகிப்பது ஏன். சமையலை சமயல் எனச் சொல்ல முடியுமா?

மன்னிக்க வேண்டும்!

புடைவை என்பதைப் புடவை என்கிறோம்; இப்போது புடவை என்று எழுதுவதால், புடைவை என்று எழுதுவதே பிழை என்று ஆகாதே!
நாம் எழுதும்போது அவரவர் விரும்பும் வகையில் சொற்களைக் கையாள்கிறோம்.

சமையலைச் சமயல் என்று நான் கூறமாட்டேன்.

இந்தச் சொற்களைத்தான் எழுதவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே!
இதைப் பெரிதாக எண்ண வேண்டியதில்லை என்றே கருதுகிறேன்.

சிவா.ஜி
01-03-2010, 03:39 PM
சரி குணமதி அவர்களே. புழக்கத்தில்லையே எனத் தெளிவு பெறத்தான் கேட்டேன். மற்றபடி சரி தவறு எனச் சொல்லவில்லை.