PDA

View Full Version : ஒரு நிமிடக் கதை - 'செயல் வீரன்'



கலையரசி
28-02-2010, 01:03 PM
இன்னும் ஐம்பது ஆண்டுகளில் உலகளவில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் என்று எந்த நேரத்தில் படித்தேனோ தெரியவில்லை. அந்தக்கணம் முதல் நீரைச் சேமிக்க வேண்டும், துளிக்கூட விரயம் செய்யக் கூடாது என்ற எண்ணம் என்னுள் ஆழமாகப் பதிந்து விட்டது.

அளவுக்கதிகமாய்த் தண்ணீரைப் புழங்கும் மனைவியிடம் சிக்கனத்தின் அவசியத்தை வற்புறுத்தினேன்.

"ஏ அப்பா! அம்பது வருஷத்துக்கப்புறம் தானே? அதுக்குள்ளே நாமெல்லாம் போய்ச் சேர்ந்துடுவோம். இப்ப எதுக்கு அனாவசியமா அதப்பத்திக் கவலைப்படறீங்க? பேசாமப் போயி ஆக வேண்டிய வேலையைப் பாருங்க"
அவளது பதிலில் அலட்சியம் தெரிந்தது.

குளிக்கிறேன் என்ற பெயரில் மணிக்கணக்காக 'ஷவரில்' நின்று கொண்டு அட்டகாசம் செய்யும் எட்டாம் வகுப்பு படிக்கும் பையனைக் கடிந்து கொண்டேன்.

"நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்கப்பா. நாம அனுப்பின சந்திராயன், நிலாவில தண்ணியிருக்குன்னு கண்டுபிடிச்சிருக்காம்.
நாங்கள்லாம் நிலாவில போய்க் குடியேறிடுவோம்"
என்றான் பையன், என் கோபத்தைச் சற்றும் பொருட்படுத்தாமல்.

ஒரு வாளித்தண்ணீரில் கையை விட்டுக் கழுவிய மகளை,"குவளையில மொண்டு கழுவினா என்ன? ஒரு வாளித் தண்ணியையும் வீணாக்கிட்டியே" என்று சொல்லி லேசாக ஒரு தட்டுத் தட்டினேன். அவ்வளவு தான். அது தான் சாக்கு என்று பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அழுது கொண்டு அடம் பிடித்தாள் அவள்.

"உதவி செய்ய வாணாம்; உபத்திரவமாவது பண்ணாம இருக்கலாம்ல?" என்ற முணுமுணுப்புடன் என்னைப் பார்த்து முறைத்துவிட்டு பெண்ணைச் சமாதானம் செய்து பள்ளிக்கனுப்பும் வேலையில் ஈடுபட்டாள் மனைவி.

வீட்டில் தான் இப்படியென்றால் அலுவலகத்திலோ கேட்கவே வேண்டாம். கழிப்பறை பைப்பைச் சரியாக மூடாமல் வருவதால் தண்ணீர் வீணாக வழிந்து கொண்டிருப்பதைப் பற்றி சக ஊழியரிடம் பேசத் துவங்கினால் போதும்.

"அய்யய்யோ! இன்னிக்கு நான் மாட்டிக்கிட்டேனா? ஒனக்குப் புண்ணியமாப் போகும். என்னை விட்டுடுப்பா" என்று என்னைப் பார்த்து பெரிய கும்பிடு போட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். அவசரத் தொலைபேசி அழைப்பு வந்திருப்பதாகச் சொல்லி நழுவுவர் சிலர்.

"சரியான தண்ணி கிறுக்கு!" என்று என் முதுகுக்குப் பின்னால் அவர்கள் பேசிச் சிரிப்பதையறிந்த போது மனது வலித்தது.

என்ன மனிதர்கள் இவர்கள்? வாழ்வாதாரமாகிய நீரை நம் சந்ததிக்குச் சேமிக்க வேண்டும் என்று நான் நினைப்பது தவறா? ஏன் ஒருவர் கூட என் கருத்துக்குச் செவிமடுக்க மறுக்கிறார்கள்? யாருடைய உதவியும் இன்றி
என்னால் மட்டும் நீரை எப்படிச் சேமிக்க முடியும்?

இதே சிந்தனையால் பல நாட்கள் தூக்கம் வராமல் அவதிப்பட்டேன், கிராமத்திலுள்ள உறவினர் வீட்டுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கும் வரை.

அது ஓர் அழகிய கிராமம். அக்கிராமம் முழுக்க வெண்மை நிறத்தில் சிறு சிறு பூக்களைக் கொண்ட செடிகள் ஏராளமாக வளர்ந்து கிடந்தன. நான் போகும் வழியில் முதியவர் ஒருவர் அச்செடிகளை மண்வெட்டி
மூலம் வேரோடு பிடுங்குவதும், பின் அவற்றைச் சேகரித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரிப்பதுமாகயிருந்தார்.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நான் அவரை அணுகி அவர் செய்கையைப் பற்றி வினவினேன்.

"தாத்தா! நானும் ரொம்ப நேரமாக் கவனிச்சிக்கிட்டிருக்கேன். கொளுத்துற வெயிலில கால்ல செருப்பு கூடப் போடாம என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க? புல் பூண்டு புடுங்க இதுவா நேரம்?"

"இதுவா? . இது சாதாரண புல் பூண்டில்லை தம்பி. பார்த்தீனியம்னு பேர் கொண்ட விஷச் செடி. வெளியூர்லேயிருந்து யார் மூலமாவோ இது இங்க வந்து கிராம முழுக்கப் பரவ ஆரம்பிச்சிட்டுது. ஒரு காத்து அடிச்சாப் போதும். இந்தப் பூவில இருக்கிற இழையெல்லாம் பறந்து போயி எல்லா இடத்திலேயும் விழுந்து மொளைக்க ஆரம்பிச்சிடும். இது மனுஷாளு மேல பட்டா தோல் வியாதி, அலர்ஜியெல்லாம் வருமாம். ஆடு மாடுங்க இதைத் தின்னா மலட்டுத் தன்மை வந்திடுமாம். இதை வெட்டிக் குழி தோண்டி புதைச்சா மொளைக்க ஆரம்பிச்சிடும்னு தான்
மண்ணெண்ணெய் ஊத்தி எரிச்சிக்கிட்டிருக்கேன்."

"சரி தாத்தா! இந்தக் கிராமம் பூரா இந்தச் செடி பரவிக் கிடக்குது. இதைப் பத்தி இங்குள்ள ஜனங்க எல்லாருக்கும் தெரியும் தானே? மத்தவங்க யாருக்கும் இல்லாத அக்கறை உங்களுக்கு மட்டும் ஏன்? யாருமே உதவிக்கு வராம, இந்தத் தள்ளாத வயசில உங்களால மட்டும் எத்தனை செடியைப் புடுங்கிட முடியும்?"

"மத்தவங்க செய்றாங்க, செய்யலை. அதப்பத்தி எனக்குக் கவலையில்லை தம்பி. வெறும் பார்வையாளனா இருக்க நான் விரும்பலை. செயல் வீரனா இருக்கணும்னு ஆசைப்படறேன். என் ஆயுசு முடியறதுக்குள்ளே என்னால முடிஞ்ச மட்டும் இந்த விஷச் செடிகளை ஒழிச்சி இந்த மண்ணைக் காப்பாத்துவேன் தம்பி"
உற்சாகம் ததும்ப பதிலிறுத்தார் கிழவர்.

அம்முதியவரின் பதில் எனக்குப் புது தெம்பையும் உற்சாகத்தையும் அளித்தது. அன்று முதல் வெறும் பார்வையாளனாய் இல்லாமல் என்னால் முடிந்த வரை நீரைச் சேமிக்கும் செயல்களில் இறங்கத் தீர்மானித்து விட்டேன்.

உபதேசம்? - போயே போச்சு!

aren
28-02-2010, 01:19 PM
நல்ல கதை.

என் பாட்டி நான் சிறுவனாக இருந்தபோது சொன்ன வார்த்தையை நான் பலமுறை கையாண்டிருக்கிறேன். அந்த வார்த்தை இதுதான்:

உள் நாக்கு தேயறதைவிட உள்ளங்கால் தேஞ்சுடலாம்

மத்தவங்களை இதைச் செய் அதைச் செய் என்று சொல்றதைவிட அதை நாமே செய்துடலாம் என்பதே.

உங்கக் கதையில் அதே கருத்து வெளிப்படுவதை நான் காண்கிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள்.

பா.ராஜேஷ்
28-02-2010, 08:54 PM
அந்நியன் படத்தில் ஆம்புலன்ஸ் அழைக்கும் காட்சி நினைவிற்கு வருகிறது. மற்றவர்களை சொல்லாமல் தானே செய்தால் என்ன என்பது மிக நல்ல கருத்து. பாராட்டுக்கள்.

கீதம்
01-03-2010, 02:34 AM
ஒரு வேலையை நாமே முன்னின்று செய்யத் துவங்கினால் அதைப் பார்த்து பலரும் தானும் செய்ய முன்வருவார்கள். அதை விட்டுவிட்டு எல்லோருமே மேற்பார்வை செய்தால் இறங்கி வேலை செய்வது யார்?

நல்ல கருத்துள்ள கதை. பாராட்டுகள் கலையரசி அவர்களே.

சிவா.ஜி
01-03-2010, 09:00 AM
அருமையான கருத்தை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. இதை செய் அதை செய்யாதே என எப்போதும் சொல்லிக்கொண்டிருக்காமல் தானே செய்வது ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.

கோவையில் ஒரு பேருந்து நடத்துநர் தனி ஆளாய் லட்சக்கண*க்கான மரங்களை நட்டு ஒரு ரோல்மாடலாகத் திகழ்கிறார். இந்தக்கதையில் வரும் அந்தத் தாத்தாவும் எனக்கு அப்படியே தெரிகிறார்.

நல்ல சிந்தனை, நல்ல கதை. வாழ்த்துகள் கலையரசி அவர்களே.

பாரதி
01-03-2010, 12:09 PM
நடக்குமா, சாத்தியமா... என்றெல்லாம் எண்ணாமல் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை தளர்வின்றி செய்யும் அந்த முதிய இளைஞரின் முயற்சி போற்றத்தக்கது.

மழைநீர் சேகரிப்பு, எரிபொருள் சிக்கனம், மின்சார சிக்கனம், நெகிழி (பாலிதீன்) மறுப்பு.... இப்படி நாளைய உலகத்திற்கு நம்மால் இயன்றதை செய்யலாம்.

படிப்பினை ஊட்டும் கதையை படைத்தமைக்கு மனம் கனிந்த பாராட்டு.

கலையரசி
01-03-2010, 12:57 PM
[QUOTE=aren;457485]நல்ல கதை.

"என் பாட்டி நான் சிறுவனாக இருந்தபோது சொன்ன வார்த்தையை நான் பலமுறை கையாண்டிருக்கிறேன். அந்த வார்த்தை இதுதான்:

உள் நாக்கு தேயறதைவிட உள்ளங்கால் தேஞ்சுடலாம்"



அழகான பொன்மொழி ஒன்றை இன்று தான் தெரிந்து கொண்டேன்.
நன்றி ஆரென் அவர்களே!

கலையரசி
01-03-2010, 01:02 PM
நல்ல கதை.

என் பாட்டி நான் சிறுவனாக இருந்தபோது சொன்ன வார்த்தையை நான் பலமுறை கையாண்டிருக்கிறேன். அந்த வார்த்தை இதுதான்:

உள் நாக்கு தேயறதைவிட உள்ளங்கால் தேஞ்சுடலாம்

மத்தவங்களை இதைச் செய் அதைச் செய் என்று சொல்றதைவிட அதை நாமே செய்துடலாம் என்பதே.

உங்கக் கதையில் அதே கருத்து வெளிப்படுவதை நான் காண்கிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள்.


அந்நியன் படத்தில் ஆம்புலன்ஸ் அழைக்கும் காட்சி நினைவிற்கு வருகிறது. மற்றவர்களை சொல்லாமல் தானே செய்தால் என்ன என்பது மிக நல்ல கருத்து. பாராட்டுக்கள்.

ஆமாம் ராஜேஷ் அவர்களே! மற்றவர்க்கு உபதேசம் பண்ணி நேரத்தை வீணாக்காமல் நாமே காரியத்தில் இறங்கிவிடலாம்.

கலையரசி
01-03-2010, 01:03 PM
ஒரு வேலையை நாமே முன்னின்று செய்யத் துவங்கினால் அதைப் பார்த்து பலரும் தானும் செய்ய முன்வருவார்கள். அதை விட்டுவிட்டு எல்லோருமே மேற்பார்வை செய்தால் இறங்கி வேலை செய்வது யார்?

நல்ல கருத்துள்ள கதை. பாராட்டுகள் கலையரசி அவர்களே.

பாராட்டுக்கு நன்றி கீதம். நீங்கள் சொல்வது போல் நாம் செய்வதைப் பார்த்துச் சிலர் தாமும் உதவ முன்வருவர்.

கலையரசி
01-03-2010, 01:06 PM
அருமையான கருத்தை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. இதை செய் அதை செய்யாதே என எப்போதும் சொல்லிக்கொண்டிருக்காமல் தானே செய்வது ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.

கோவையில் ஒரு பேருந்து நடத்துநர் தனி ஆளாய் லட்சக்கண*க்கான மரங்களை நட்டு ஒரு ரோல்மாடலாகத் திகழ்கிறார். இந்தக்கதையில் வரும் அந்தத் தாத்தாவும் எனக்கு அப்படியே தெரிகிறார்.

நல்ல சிந்தனை, நல்ல கதை. வாழ்த்துகள் கலையரசி அவர்களே.

பாராட்டுக்கு நன்றி சிவா.ஜி அவர்களே! நீங்கள் குறிப்பிட்ட பேருந்து நடத்துநர் போல் பலரும் மரம் நட முற்பட்டால் நம் பூமி பசுஞ்சோலை ஆவது உறுதி.

கலையரசி
01-03-2010, 01:10 PM
நடக்குமா, சாத்தியமா... என்றெல்லாம் எண்ணாமல் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை தளர்வின்றி செய்யும் அந்த முதிய இளைஞரின் முயற்சி போற்றத்தக்கது.

மழைநீர் சேகரிப்பு, எரிபொருள் சிக்கனம், மின்சார சிக்கனம், நெகிழி (பாலிதீன்) மறுப்பு.... இப்படி நாளைய உலகத்திற்கு நம்மால் இயன்றதை செய்யலாம்.

படிப்பினை ஊட்டும் கதையை படைத்தமைக்கு மனம் கனிந்த பாராட்டு.

உங்கள் பாராட்டுக்கு நன்றி.
ஆம். இக்கதையைப் படைத்ததின் நோக்கமே ஒவ்வொருவரும் நாளைய உலகத்திற்கு அவர்களால் முடிந்த நல்ல செயல்களைச் செய்ய முன்வர வேண்டும் என்பதே.
(நெகிழி) பாலிதீனுக்கு இப்படியொரு அழகான வார்த்தை இருப்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன். நன்றி பாரதி அவர்களே!

அன்புரசிகன்
03-03-2010, 08:46 AM
செயல்வீரன் என்பதிலும் மனிதன் என்றே சொல்லலாம். 6வது அறிவினை சரிவர பயன்படுத்தாதவர்களை மனிதன் என்றே அழைக்க முடியாதே...

நல்லதொரு நீதியை புகட்டும் கதை. வாழ்த்துக்கள்.

கலையரசி
04-03-2010, 01:48 PM
செயல்வீரன் என்பதிலும் மனிதன் என்றே சொல்லலாம். 6வது அறிவினை சரிவர பயன்படுத்தாதவர்களை மனிதன் என்றே அழைக்க முடியாதே...

நல்லதொரு நீதியை புகட்டும் கதை. வாழ்த்துக்கள்.

நீங்கள் சொல்வது போல் மனிதன் என்று சொல்வது சரியானதே.
வாழ்த்துக்களுக்கு நன்றி அன்பு ரசிகன் அவர்களே!

அக்னி
04-03-2010, 02:00 PM
"நீ உன்னைத் திருத்திக்கொள்.., சமூகம் தானாகவே திர்ந்திவிடும்...”

நிதர்சனமான வரிகள்...

வீதியாற் செல்லுகையிற் குப்பையை வீசி எறிந்துமிருக்கின்றேன்.
எறிந்த கணத்தில், இனி இப்படிச் செய்யக்கூடாது எனத் தீர்மானித்தும் இருக்கின்றேன்.
எறிந்ததை எடுத்துப் போட்டிருந்தால், இந்தக் கதை என்னைப் பாதித்திருக்காது என நினைக்கின்றேன்.

இப்படிச் செய்தாற் தண்டனை என்றிருந்தாற் பயப்படும் நாம்,
இப்படிச் சட்டமாகும் முன்னர் அதையிட்டுச் சிந்திப்பதேயில்லை.

எல்லாமே சட்டமயமாதல் சாத்தியமற்றது.

ஒவ்வொரு மனிதனும் அடுத்த தலைமுறையையிட்டு கொஞ்சமேனும் சிந்தித்தால்,
இந்த அடிப்படை அவசியங்கள் வீண் விரயமாகா...

ஒரு தீவு கடலில் மூழ்கிக்கொண்டிருக்கின்றது என்றால்,
நான் வாழும் வரைக்கும் மூழ்காவிட்டால் எனக்குக் கவலையில்லை
என்ற மனப்பாங்கு, நிச்சயம் மனித மனங்களிலிருந்து அகன்று போகவேண்டும்...

கருத்துணர்த்தும் கதைக்கு எனது பாராட்டு...

கலையரசி
04-03-2010, 02:35 PM
எந்த ஒரு பதிவிற்குமே அழகிய சொற்றொடர்களில் நீங்கள் கொடுக்கும் கருத்தாழமிக்க பின்னூட்டம் என்னை மிகவும் கவர்கிறது.
உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி அக்னி அவர்களே!

Ravee
05-03-2010, 07:24 PM
உன்னால் முடியும் தம்பியில் வரும் அந்த சமையல்க்கார தாத்தா என் கண்ணுக்கு முன்னாள் வந்து போனார் கலையரசி .

கலையரசி
06-03-2010, 10:23 AM
மிக்க நன்றி ரவி அவர்களே!