PDA

View Full Version : தினமணி தலையங்கம்: சுதந்திரம் பறிபோகிறது...?



பாரதி
27-02-2010, 11:34 PM
http://www.dinamani.com/Images/article/2010/2/27/editlogo.jpg



மத்திய அரசு ஏன், எதற்காக இப்படியெல்லாம் நடந்துகொள்கிறது? அப்படி என்னதான் நமது இந்திய அரசுக்கு நிர்பந்தம்? யாருடைய வற்புறுத்தலின் பேரில், யாருடைய நன்மையைக் கருதி இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து வருகிறது?- இதுபோன்ற கேள்விகளை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் எழுப்பியே தீரவேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த சில நாள்களாக நமது அரசின் சில செயல்பாடுகள் மக்களாட்சித் தத்துவத்துக்கும், தனிமனித சுதந்திரத்துக்கும் எதிரானதாக அமைந்திருப்பதை நம்மில் பலர் உணராமல் இருக்கிறோம். அதுமட்டுமல்ல, மிகவும் ரகசியமாக சில உடன்பாடுகள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. இந்தியாவின் வருங்காலத்தையே பாதிக்கும் இந்த உடன்பாடுகளுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தரப்பட்டிருப்பது நம்மிடமிருந்து மூடிமறைக்கப்பட்டிருக்கிறது.

விலைவாசி உயர்வு, நிதிநிலை அறிக்கைகள், இடைத்தேர்தல்கள் என்று அன்றாட அரசியல் நிகழ்வுகளை மட்டுமே மையப்படுத்திச் செயல்படும் நமது எதிர்க்கட்சிகளும் சரி, அவ்வப்போதைய பரபரப்புகளை விலைபேசி, தங்களது வாடிக்கையாளர்களையும் வாசகர்களையும் தேசத்தை எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்னைகளைப் பற்றிச் சிந்திக்கவே அனுமதிக்காமல் செயல்படும் ஊடகங்களும் சரி, மத்திய அரசின் முடிவுகளால் கேள்விக்குறியாகப்போகும் இந்திய விவசாயிகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலையே இல்லாமல் இருப்பது அதைவிட அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த வாரம் அமெரிக்காவுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை வெளியில் தெரியாதவண்ணம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அடுத்த மாதம் கையொப்பமிடப்பட இருக்கும் விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி விவசாய விரிவாக்கத்தில் தனியார்மயத்தைப் புகுத்துவதும் இந்திய வேளாண்மையில் அமெரிக்க விவசாயப் பன்னாட்டு நிறுவனங்கள் பங்குபெறுவதும் அனுமதிக்கப்பட இருக்கிறது.

அமெரிக்காவில் விவசாயம் என்பது வியாபாரம். இந்தியாவிலோ விவசாயம் என்பது வாழ்வாதாரம். இந்திய விவசாயி வியாபாரநோக்கில் தனது வயலில் உழுது பயிரிட்டு சாகுபடி செய்வதில்லை. தனது வயிற்றுப்பிழைப்புக்காக, வாழ்வாதாரமாக விவசாயத்தில் ஈடுபடுகிறார். இவரது விவசாயம் லாபநோக்கில் நடத்தப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி இந்த விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி லாபகரமாக விவசாயம் செய்ய வழிவகுப்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாகிவிட்ட நிலங்களில் பயிரிடுவதை யார் தடுக்க முடியும்? இந்திய-அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் கர்க்கில், மான்சாண்டோ போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்க வழிகோலப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் இவர்கள் உறுப்பினர்களானால் நேரடியாகவே அரசின் மீது தங்களது செல்வாக்கைச் செலுத்துவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

இத்துடன் முடிந்துவிட்டது என்று நினைத்துவிடாதீர்கள். ஒரு சர்வாதிகார ஆட்சியில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு ராட்சத சட்டத்தையும் இந்தப் பன்னாட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் நமது ஆட்சியாளர்களின் உதவியுடன் நம்மீது திணிக்க இருக்கிறார்கள். உயிரி தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம் ஒன்றை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நம்மை விடுங்கள். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர் கவலைப்படுகிறார்கள்?

முறையான சாட்சியம் அல்லது விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில் அல்லாமல் மரபணு மாற்ற விதைகள் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பற்றித் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது இந்தச் சட்டம் பாயும். இந்தச் சட்டமுன்வரைவின் 13(63) -வது பிரிவின்படி, புதிய அறிமுகங்களுக்கு எதிராகத் தக்க ஆதாரம் இல்லாமல் பிரசாரம் செய்பவர்கள் குறைந்தது 6 மாதம் முதல் ஓராண்டு சிறைத்தண்டனை பெறுவதுடன், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவார்கள்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித்தொழில்நுட்பவியல் துறையினரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்ட முன்வரைவின் 27(1) பிரிவின்படி, மரபணு மாற்றப்பட்ட பொருள்களின் ஆராய்ச்சி, அனுமதி போன்ற விஷயங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பார்வைக்கு உள்படுத்தப்படுவது மறுக்கப்படுகிறது. மேலும், மரபணு தொடர்பாக எந்தவொரு மாநிலத்தின் முடிவையும் நிராகரிக்கும் உரிமை உயிரித் தொழில்நுட்பவியல் துறையால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்கு இருக்கும் என்கிறது இந்தச் சட்ட முன்வரைவு.

இப்போதல்லவா தெரிகிறது ஏன் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விஷயத்தில் பின்வாங்கினார் என்பதும், தாற்காலிகமாகக் கைவிடப்பட்டது என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தார் என்பதும். இப்போதல்லவா தெரிகிறது, பிரதமர் மன்மோகன் சிங் ஏன் மரபணு மாற்றப்பட்ட பொருள்கள் மீதான முடிவு தாற்காலிகமானதுதான் என்று அறிவித்தார் என்பது.

இந்த ஆட்சியும் அரசும் யாருக்காக நடைபெறுகிறது? இவர்கள் இந்தியாவை என்னதான் செய்யக் கருதுகிறார்கள்? தனிமனித உரிமைக்கு, எதிர்ப்புக் குரல் எழுப்புவதற்கு இந்தியக் குடிமகனுக்கு உரிமை மறுக்கப்படும் அளவுக்கு நமது ஆட்சியாளர்களின் மரபணு மாற்றப்பட்ட அவலநிலையைக் கண்டு நமது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒருவருக்குக்கூட எதிர்ப்புக் குரல் எழுப்பத் துணிவில்லையா, இல்லை இவர்களும் விலைபேசப்பட்டு விட்டனரா?

பாரதியின் பாஞ்சாலி சபதம்தான் நினைவுக்கு வருகிறது. ""கோயில்பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல்போலும்... வாயில் காத்து நிற்போர் வீட்டை வைத்து இழத்தல்போலும்...

''சீச்சீ... சிறியர் செய்கை!

குணமதி
28-02-2010, 03:38 AM
இந்த அமைச்சர்களும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் எந்த நன்மை கருதி இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது புதிர்.

தேசப்பற்று, அது... இது... என்பதெல்லாம் அடுத்தவர்க்கு அறிவுரை கூறவே என்றுதானே தெரிகிறது.

மக்கள் விழிப்புற்று எழுந்து இவர்களைக் கேட்பது எப்போது?

செல்வா
28-02-2010, 06:19 AM
வேளாண்மைக்காகவோ
விளைநிலங்களுக்காகவோ
தண்ணீருக்காகவோ எந்த எதிர்காலத் திட்டமும் செய்யாத அரசின்
திட்டம் இப்போது தான் வெளியாகிறது..!

யாருக்கும் உண்மையில் எதிர்காலத் திட்டம் என்பதே கிடையாது.
ஐந்தாட்டுத் திட்டங்கள் அனைத்தும் சுதந்திர காலத்தோடு காலாவதியாகிவிட்டன...

எத்தனைதான் மெத்தப் படித்த பிரதமர்களும் அமைச்சர்களும் இருந்தாலும்
இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை போலிருக்கிறது.

அமரன்
28-02-2010, 09:12 AM
வியாபார நோக்குடனான வேளாண்மை.... நன்றாகத்தானே உள்ளது. நாடும் முன்னேறும்.. நாட்டின் அச்சாணிகளும் வளம் பெறும்.. ஒரே ஒரு திருத்தத்துடன் நடைமுறைப்படுத்தினால்.. வெளிநாட்டுக்கு காணிநிலத்தை விற்பதை விடுத்து வெளிநாட்டு தொழில்நுட்பத்தை வாங்கினால்..

சிவா.ஜி
28-02-2010, 09:24 AM
மத்திய அரசின் கேவலமான முகம் மீண்டும் மீண்டும் கிழிக்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களின் கனிமத் திருட்டை சட்டப்படி செய்ய பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்த விவகாரம், அருந்ததி ராயின் புத்தகத்தில் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

இப்போது விவசாய நிலத்தை அமெரிக்க நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் படு கேவல செய்கையும் தினமணித் தலையங்கத்தால் தெரிய வந்திருக்கிறது.

ஆட்சியாளர்களுக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ இதைப்பற்றி எந்தக் கவலையுமில்லை.

நாடு நாசமாய்ப் போனால் என்ன நாம் நன்றாக இருந்தால் போதும் என நினைக்கும் இவர்களை என்ன செய்வது......ஒன்றும் செய்ய முடியாது.

aren
28-02-2010, 09:40 AM
இதை எதிர்பார்த்ததுதான். எந்த விவசாயி தனக்குச் சொந்தமாக நிலம் வைத்திருக்கிறான். எல்லாம் இந்த அரசியல் வாதிகளின் கையில் அல்லது பெரும் பணக்காரர்களின் கைகளிலேயே உள்ளது.

இந்த மாதிரி நடந்தால் பெரிய கம்பெனிகள் முதலீடு செய்தால் இந்த ஏழைகளுக்கு வேலை கிடைத்து அதன் மூலம் ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது சாப்பிட முடியும்.

நீங்கள் இருக்கும் நிலங்கள் போய்விடும் என்கிறீர்கள். எனக்கென்னவோ இருக்கும் மீதி நிலங்களும் பாதுகாக்கப்படும் என்றே நினைக்கிறேன். இல்லையேல் இந்த அரசியல்வாதிகள் பிளாட் போட்டு விற்றுவிடுவார்கள்.

பணம் பலம் உள்ள கம்பெனிகளிடமிருந்து இந்த அரசியல்வாதிகள் பணம் பெறுவார்களேயொழிய இந்த நிலங்கள் நிலங்களாகவே இருக்கும்.

இது ஒரு நல்ல முன்னேற்றம் என்றே நான் நினைக்கிறேன்.

டெல்மாண்டோ போன்ற கம்பெனிகள் ஆப்பிரக்கா நாடுகள் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களுக்குச் சென்று அங்கே இருக்கும் மில்லியன் கணக்கான ஏழைகளுக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கிறது. தரிசாக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் இப்பொழுது பயிர் செய்யப்படுகிறது.

நான் இதை வரவேற்கிறேன்.

செல்வா
01-03-2010, 05:39 AM
வெளிநாட்டு நிறுவனங்கள் வேலை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை...

ஆனால் விளைச்சலும் அவர்களுக்குத் தான் சொந்தம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்

அந்த நிறுவனங்கள் தான் அரசுக்கும் தானியம் விற்கவேண்டும் எனும் போது

பெட்ரோலுக்கு விலை வைக்கும் தனியார் நிறுவனங்களின் கதை தெரியுமல்லவா?

ஆரம்பிக்கும் போதே சட்டம் போட்டு எதிர்ப்புகளை இல்லாமல் செய்ய நினைப்பவர்கள்....

உண்மையில் மக்கள் நலத்தை மனதில் கொண்டா இத்திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள்...

இது தவிர இன்னுமொரு முக்கியப் பிரச்சனை

அது தண்ணீர்.