PDA

View Full Version : உதிர்ப்பில் ஓர் உயிர்ப்பு



கீதம்
27-02-2010, 10:49 PM
இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தது மரம்;
எள்ளி நகையாடினேன்,
'இப்படி எல்லாவற்றையும் உதிர்க்கிறாயே,
உனக்கு வெட்கமில்லையா?' என்று!

இறுமாப்புடன் மரம் பேசியது,

'என்னிடமிருந்து உதிரும் எதற்காகவும்
நான் வெட்கப்படுவதுமில்லை;
வருத்தப்படுவதுமில்லை!
கோடையிலும், கடும்பனிப் பொழிவிலும்
நீரெனக்குக் கிடைக்காதென்று
ஊருக்கு முன்னே உணர்ந்து
உதிர்க்கிறேன் என் இலைகளை!

மீண்டும் உதிப்பேன் பின்வரும் நாட்களில்!
இது, என்னை நானே தற்காக்கும் முயற்சி!
சாதாரண நாட்களில் கூட
சருகுகளை உதிர்ப்பேன்;
சத்தமின்றி நித்தம் துளிர்க்கும்
சிறுதளிர்கள் அவ்விடத்தில்!
இது, என் வாழ்க்கைச் சுழற்சி!'

'ஆ'வென வாய் பிளந்தேன்.
தொடர்ந்தது மரம்,

'இன்னும் கேள்!
உதிர்ப்பேன் என் மலர்களை......
அவை பூத்துக் குலுங்கிய
வசந்தத்தின் முடிவில்!
அதற்காக எனக்குக் கவலையில்லை;
ஏனெனில்,
பூ உதிர்ந்தால்தானே பிஞ்சு வெளிப்படும்!
இது, என் வாழ்க்கைத் தத்துவம்!'

'அப்படியா?' அதிசயித்தேன் நான்!

'அது மட்டுமன்று;
உதிர்ப்பேன் என் பிஞ்சுகளை!'

'என்ன, பிஞ்சுகளையுமா?'

'ஆம், வாழ்வின் நோக்கம் அறியாமல்
பிஞ்சிலே பழுத்த அந்த வெம்பல்களை
உதிர்க்கவே செய்வேன்;
இது, என் வளமான வாழ்வின் யுக்தி!'

'அவ்வளவுதானா?'

'இல்லை; இன்னும் முடியவில்லை; கேள்!
உதிர்ப்பேன் என் முதிர்ந்த கனிகளை!
முற்றியவை மண்ணில் விழுந்தால்தானே
மற்றும் பல விருட்சங்கள் தோன்றி
என்றும் என் பெயர் சொல்லி
என் இனத்தை வாழ்விக்கும்;
இது, என் வாழ்க்கைச் சூத்திரம்!

என்னிலிருந்து உதிர்பவை எவையும்
என்னை வெறுப்பதில்லை; அறிவாயா?
என் ஆணி வேருக்கு அவை யாவும்
அடியுரமாகிப்போகும் அதிசயம் காண்!

உதிர்ப்பதால் உயிர் வாழ்கிறேன்;
உதிர்ப்பவற்றால் உயிர் வாழ்கிறேன்;
உதிர்த்து உயிர்ப்பிக்கிறேன்!'

'இத்தனையும் உதிர்ப்பதால் உனக்கு
எத்தனை நன்மையுண்டு!
எனக்கு நன்மை வேண்டின்,
எதையுதிர்ப்பேன் நான்?'

'அதையும் நானறிவேன், கேள்!
நீ உதிர்க்க வேண்டியவை,
சோம்பலும், சுயநலமும்!
உதிர்க்கக் கூடாதவை,
மானமும், மனித நேயமும்!'

'புரிந்தது, நண்பனே!
புத்தனுக்கோர் போதிமரம் போல்
புத்துயிர் பெற்றேன் உன்னிடத்தில்!
புறப்பட்டுவிட்டேன் இப்போதே,
புதியதோர் வாழ்க்கை வாழ!'

'சற்றே நில்!'
தடுத்தது மரம்!

'முக்கியமாக நீ உதிர்க்கவேண்டிய ஒன்றை
உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன்;
போகிறபோக்கில் உன் இதழ்விரித்து
சிறுபுன்னகை ஒன்றை உதிர்த்துப் பார்!

ஒன்றல்ல; இரண்டல்ல;
ஓராயிரம் நல்லிதயங்கள்
உன் நலம் நாடும் நட்பாகும்!'

இலையுதிர்த்த கிளைகளை அசைத்து
விடை கொடுத்த மரத்துக்கு
நன்றி தெரிவித்தேன்,
மென்புன்னகை உதிர்த்து!

(நிலாச்சாரலில் வெளிவந்த என் கவிதை)

இன்பக்கவி
28-02-2010, 03:35 AM
நன்றிகள் கீதம்...
உதிர்ப்பில் ஒரு தத்துவம் போல இருக்கு..
அழகா எழுதி இருகின்றீர்கள்..
பிஞ்சில் பழுத்தவற்றை உதிர்க்கும் இடம் நல்லா இருக்கு...
அருமை:icon_b::icon_b::icon_b:

குணமதி
28-02-2010, 03:44 AM
***********
'அதையும் நானறிவேன், கேள்!
நீ உதிர்க்க வேண்டியவை,
சோம்பலும், சுயநலமும்!
உதிர்க்கக் கூடாதவை,
மானமும், மனித நேயமும்!'

************************

நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

கலையரசி
28-02-2010, 04:19 AM
உதிர்ப்பதால் உயிர் வாழ்கிறேன்;
உதிர்ப்பவற்றால் உயிர் வாழ்கிறேன்;
உதிர்த்து உயிர்ப்பிக்கிறேன்!'
வாழ்க்கையின் தத்துவத்தை இந்த மூன்று வரிகளில் அடக்கி விட்டீர்கள். மிகவும் நன்று கீதம்! வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
28-02-2010, 05:01 AM
ஆறறிவு மனிதனுக்கு, ஓரறிவு மரம் உரைத்த 'கீதோ'பதேசம்.

உதிர்ப்பதால் இழப்பில்லை....இறப்பில்லை...

உதிர்க்க வேண்டியவைகளை, உதிர்க்க வேண்டிய நேரத்தில் உதிர்த்து வாழ்ந்தால்...எத்தனை உன்னதமென்ற உண்மை உரைக்கும் கவிதை.

மிக அழகான கருத்துக்களை வெகு எளிமையாய், வெகு அருமையாய் சொல்லிவிட்டீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள் கீதம் அவர்களே.

கீதம்
28-02-2010, 06:02 AM
நன்றிகள் கீதம்...
உதிர்ப்பில் ஒரு தத்துவம் போல இருக்கு..
அழகா எழுதி இருகின்றீர்கள்..
பிஞ்சில் பழுத்தவற்றை உதிர்க்கும் இடம் நல்லா இருக்கு...
அருமை:icon_b::icon_b::icon_b:

உங்கள் ரசனைக்கு மிக்க நன்றி இன்பக்கவி அவர்களே.

கீதம்
28-02-2010, 06:03 AM
***********
'அதையும் நானறிவேன், கேள்!
நீ உதிர்க்க வேண்டியவை,
சோம்பலும், சுயநலமும்!
உதிர்க்கக் கூடாதவை,
மானமும், மனித நேயமும்!'

************************

நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

மிக்க நன்றி குணமதி அவர்களே.

கீதம்
28-02-2010, 06:04 AM
உதிர்ப்பதால் உயிர் வாழ்கிறேன்;
உதிர்ப்பவற்றால் உயிர் வாழ்கிறேன்;
உதிர்த்து உயிர்ப்பிக்கிறேன்!'
வாழ்க்கையின் தத்துவத்தை இந்த மூன்று வரிகளில் அடக்கி விட்டீர்கள். மிகவும் நன்று கீதம்! வாழ்த்துக்கள்.

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கலையரசி அவர்களே.

செல்வா
28-02-2010, 06:07 AM
'முக்கியமாக நீ உதிர்க்கவேண்டிய ஒன்றை
உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன்;
போகிறபோக்கில் உன் இதழ்விரித்து
சிறுபுன்னகை ஒன்றை உதிர்த்துப் பார்!


எனைக் கவர்ந்த வரிகள்..

அருமை கீதம்... கீதம்.

கீதம்
28-02-2010, 06:08 AM
ஆறறிவு மனிதனுக்கு, ஓரறிவு மரம் உரைத்த 'கீதோ'பதேசம்.

உதிர்ப்பதால் இழப்பில்லை....இறப்பில்லை...

உதிர்க்க வேண்டியவைகளை, உதிர்க்க வேண்டிய நேரத்தில் உதிர்த்து வாழ்ந்தால்...எத்தனை உன்னதமென்ற உண்மை உரைக்கும் கவிதை.

மிக அழகான கருத்துக்களை வெகு எளிமையாய், வெகு அருமையாய் சொல்லிவிட்டீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள் கீதம் அவர்களே.

உங்கள் விமர்சனம் கண்டு மகிழ்கிறேன். பாராட்டுக்கு நன்றி சிவா.ஜி அவர்களே.

கீதம்
28-02-2010, 08:24 AM
எனைக் கவர்ந்த வரிகள்..

அருமை கீதம்... கீதம்.

சட்டென்று பரவும் கொட்டாவி போலொரு
ஒட்டுவாரொட்டி நோய்தானோ,
இந்தப் புன்னகையும்?
பார்த்தவுடனேயே பற்றிக்கொள்கிறதே
இறுகிய இதழ்களிலும்!

இப்போதுதான் உங்கள் பின்னூட்டம் கண்டேன். பாராட்டுக்கு நன்றி செல்வா அவர்களே.

Akila.R.D
01-03-2010, 04:31 AM
வாழ்வின் நோக்கம் அறியாமல்
பிஞ்சிலே பழுத்த அந்த வெம்பல்களை
உதிர்க்கவே செய்வேன்

அருமையான வரிகள்...

வாழ்த்துக்கள்...

அக்னி
01-03-2010, 07:17 AM
ஆழ்ந்த கருத்தாடலும் அழகான சொல்லாடலும் நிறைந்த கவிதை.

உதிர்ந்து போவன தேவையற்றவை,
அல்ல...
அவை,
ஏதோவொரு தேவையைச்
சொல்லிச் செல்கின்றன...

உதிர்வுகள்,
உயிர்ப்பின் முதலடி...

அருமையாகச் சொல்கின்றது கவிதை.
கீதம் அவர்களுக்குப் பாராட்டுக்கள் பல...

அக்னி
01-03-2010, 07:29 AM
உதிர்ப்பதால் இழப்பில்லை....இறப்பில்லை...

உண்மைதான்.
ஆனால், நாம் விரும்பாமற் தானே உதிர்வது,
இழப்புத்தானே...

இல்லையா சிவா.ஜி... ;)



உதிர்வுகள்,
உயிர்ப்பின் முதலடி...

இதனை எழுதும்போது, இன்னுமொன்று சேர்ந்து வந்தது.
அதனை அங்கே எழுதினால் அது காமெடி பீஸ் ஆகிடும் என்பதால்,
இங்கே...

உதிர்வுகள்
உயிர்ப்பின் முதலடி...
இது பொய்யானால்,
அதுதான் உன்
தலைமுடி...
:cool:

இந்த உதிர்வுப் பிரச்சினை பெரிய பிரச்சினையாவே போயிடுத்து.

முடியின் உதிர்வில்,
உதிக்கின்றது வழுக்கை...

இப்பிடித் திருப்திப்பட முடியலயே... :frown:

கீதம்
01-03-2010, 09:00 AM
வாழ்வின் நோக்கம் அறியாமல்
பிஞ்சிலே பழுத்த அந்த வெம்பல்களை
உதிர்க்கவே செய்வேன்

அருமையான வரிகள்...

வாழ்த்துக்கள்...

பாராட்டுக்கு நன்றி அகிலா அவர்களே.

கீதம்
01-03-2010, 09:02 AM
ஆழ்ந்த கருத்தாடலும் அழகான சொல்லாடலும் நிறைந்த கவிதை.

உதிர்ந்து போவன தேவையற்றவை,
அல்ல...
அவை,
ஏதோவொரு தேவையைச்
சொல்லிச் செல்கின்றன...

உதிர்வுகள்,
உயிர்ப்பின் முதலடி...

அருமையாகச் சொல்கின்றது கவிதை.
கீதம் அவர்களுக்குப் பாராட்டுக்கள் பல...

பின்னூட்ட அலசலுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அக்னி அவர்களே.

கீதம்
01-03-2010, 09:07 AM
உண்மைதான்.
ஆனால், நாம் விரும்பாமற் தானே உதிர்வது,
இழப்புத்தானே...

இல்லையா சிவா.ஜி... ;)


இதனை எழுதும்போது, இன்னொமொன்று சேர்ந்து வந்தது.
அதனை அங்கே எழுதினால் அது காமெடி பீஸ் ஆகிடும் என்பதால்,
இங்கே...

உதிர்வுகள்
உயிர்ப்பின் முதலடி...
இது பொய்யானால்,
அதுதான் உன்
தலைமுடி...
:cool:

இந்த உதிர்வுப் பிரச்சினை பெரிய பிரச்சினையாவே போயிடுத்து.

முடியின் உதிர்வில்,
உதிக்கின்றது வழுக்கை...

இப்பிடித் திருப்திப்பட முடியலயே... :frown:

ஐயோ! என் கவிதையை வைத்து சிவா.ஜி அவர்களுக்கு ஆப்பா?

ஏன் எல்லோரும் ஆ ஊ என்றால் சிவா.ஜி அவர்களின் தலையிலேயே கை (கண்?) வைக்கிறீர்கள்?

பாவம். விட்டுவிடுங்களேன். (நான் என் கவிதையில் மறைமுகமாகவும் எதுவும் குறிப்பிடவில்லையே!:fragend005:)

அக்னி
01-03-2010, 09:15 AM
கவிதையில் ஒன்றைச் சொல்லாமற் சொல்லியுள்ளீர்கள்.
பின்னூட்டத்தைப் பதிவு செய்துவிட்டு,
தொடருந்திலிருந்து இறங்கி அலுவலகம் நடந்து வருகையில் அசைபோட வைத்திருந்தது உங்கள் கவிதை.
(இதனைச் சொல்லக் காரணம், இந்தக் கவிதை எந்தளவிற்கு நினைவில் நின்றது என்பதைச் சொல்லுவதற்காகவே...)

உதிர்வுகளும் உயிர்ப்புக்களும்
மரம்போல மனிதனுக்குள்ளும்...

உங்கள் கவிதை சொன்னதுபோல,

மனிதனுக்குள்
தேவையானவையும் தேவையற்றவையும்
ஒருங்கே...

ஆனால்,
எதுவுமே தானாகவே உதிர்ந்து போவதில்லை.
நாமாகத்தான் உதிரவைக்க வேண்டும்.

அடையாளம் கண்டு,
தேவையற்றதை உதிர்ப்பதிற்தான்,
மனித வாழ்வின்
உயிர்ப்பே அடங்கியுள்ளது.

அதுவாகவே
உதிர்ந்துபோகும் என
அலட்சியமாய் வாழ்ந்தால்,
வாழ்வில் உயிர்ப்பே வராது...
உயிர்பெற்றுவாழ்ந்ததற்கும்
அர்த்தமேயில்லை...

மீண்டும் பாராட்டுக்கள்...

அக்னி
01-03-2010, 09:23 AM
ஐயோ! என் கவிதையை வைத்து சிவா.ஜி அவர்களுக்கு ஆப்பா?

ஏன் எல்லோரும் ஆ ஊ என்றால் சிவா.ஜி அவர்களின் தலையிலேயே கை (கண்?) வைக்கிறீர்கள்?

பாவம். விட்டுவிடுங்களேன். (நான் என் கவிதையில் மறைமுகமாகவும் எதுவும் குறிப்பிடவில்லையே!:fragend005:)
எனக்குப் புரியலை...
நான் சிவா.ஜி யின் பின்னூட்டத்திற்குப் பின்னூட்டம் மட்டும்தான் போட்டேன். :icon_ush:

சிவா.ஜி யின் முடிக்கும் அந்தப் பின்னூட்டத்திற்கும் முடிச்சுப் போட்டது தாங்கள்தானே... ;)

இதகுள் ஏன் என்னையும் இழுத்துச் சிண்டு முடிந்துவிடுகின்றீர்கள்...:sauer028:

சிவா.ஜி இந்தச் சிண்டு முடிவதற்கெல்லாம் ஆளில்லை... :p
தெரிஞ்சுக்கோங்க...

இளசு
01-03-2010, 09:16 PM
பாராட்டுகள் கீதம்...


மிக அழகான சொற்கட்டுடன்
மிக அருமையான அறிவியலைச் சொல்லி
இறுதியில் மனவியல், வாழ்வியலை அலசி

மிக உயர்ந்த எல்லைகளைத் தொட்டுச் செல்கிறது கவிதை..


உதிர்ப்பதா ஒளிர்வதா புன்னகைப்பூ?

விகடனில் இந்த வாரம் நாவிஷ் செந்தில்குமார் எழுதிய புன்னகைத் திருவிழா
கவிதையை சட்டென எண்ண வைத்தது இறுதிப் பகுதி..


---------------------

உதிர்தல், உதிர்த்தல் - அக்னியில் அலசல் அபாரம்!

சிவா.ஜி
02-03-2010, 05:26 AM
உதிர்ப்பதால் இழப்பில்லை, இறப்பில்லை மரங்களுக்கு....

கெட்டதை உதிர்ப்பதால், இழப்பில்லை மனிதருக்கு, இறப்பில்லை மனிதத்துக்கு...

அக்னி, நீங்க சொன்ன மாதிரி, உதிர்க்க வேண்டியதை உதிர்த்தல் நல்லது. தானே உதிர்தல்..(எனக்கு நேர்ந்ததைப் போல...ஹி..ஹி..) தடுக்க இயலாத பொல்லாதது.(பின்ன தானா உதிர்ந்துட்டு...இப்ப கீதம் அவர்கள் சொன்ன மாதிரி ஆ...ஊன்னா....என் தலையில கையை வெக்க வாய்ப்பு கொடுத்துடிச்சே... என்னோட பேர் ராசியோ என்னவோ....எல்லாரும் தலையில கை வெக்கறாங்க)

balanagesh
02-03-2010, 05:38 AM
மிக மிக மிக அருமையான கவிதை....

எளிமையான கவிதை வரிகள் இருந்தாலும், அதன் நளினம் குறையவில்லை... மேம்மையான கருத்துக்கள்... மிக ஆழமான உண்மைகள்... மொத்தத்தில் ஒன்றுமில்லாதது என்று நினைத்துக் கொண்டிருந்த உதிர்த்தல், உலகமே அறிந்து கொள்ளவேண்டிய உண்மைகளை சொல்லகூடியது என்று உணர்த்தியுள்ளீர்கள்...

நிறைய எழுதுங்கள் கீதம்... எங்களுக்காக...

கீதம்
04-03-2010, 11:37 PM
பாராட்டுகள் கீதம்...


மிக அழகான சொற்கட்டுடன்
மிக அருமையான அறிவியலைச் சொல்லி
இறுதியில் மனவியல், வாழ்வியலை அலசி

மிக உயர்ந்த எல்லைகளைத் தொட்டுச் செல்கிறது கவிதை..


உதிர்ப்பதா ஒளிர்வதா புன்னகைப்பூ?

விகடனில் இந்த வாரம் நாவிஷ் செந்தில்குமார் எழுதிய புன்னகைத் திருவிழா
கவிதையை சட்டென எண்ண வைத்தது இறுதிப் பகுதி..


---------------------

உதிர்தல், உதிர்த்தல் - அக்னியில் அலசல் அபாரம்!

வழக்கம்போலவே ஆழ்ந்த, அலசி ஆராய்ந்த அழகுப் பின்னூட்டம். மிக்க நன்றி இளசு அவர்களே.

கீதம்
04-03-2010, 11:38 PM
மிக மிக மிக அருமையான கவிதை....

எளிமையான கவிதை வரிகள் இருந்தாலும், அதன் நளினம் குறையவில்லை... மேம்மையான கருத்துக்கள்... மிக ஆழமான உண்மைகள்... மொத்தத்தில் ஒன்றுமில்லாதது என்று நினைத்துக் கொண்டிருந்த உதிர்த்தல், உலகமே அறிந்து கொள்ளவேண்டிய உண்மைகளை சொல்லகூடியது என்று உணர்த்தியுள்ளீர்கள்...

நிறைய எழுதுங்கள் கீதம்... எங்களுக்காக...

பாராட்டுக்கு மிக்க நன்றி பாலா அவர்களே. நிச்சயமாய் நிறைய எழுதுவேன்.

கா.ரமேஷ்
05-03-2010, 12:13 PM
//'முக்கியமாக நீ உதிர்க்கவேண்டிய ஒன்றை
உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன்;
போகிறபோக்கில் உன் இதழ்விரித்து
சிறுபுன்னகை ஒன்றை உதிர்த்துப் பார்!
///

மனதை கவர்ந்த வரிகள்....

வாழ்த்துக்கள் கீதம்...

கீதம்
07-03-2010, 10:05 AM
//'முக்கியமாக நீ உதிர்க்கவேண்டிய ஒன்றை
உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன்;
போகிறபோக்கில் உன் இதழ்விரித்து
சிறுபுன்னகை ஒன்றை உதிர்த்துப் பார்!
///

மனதை கவர்ந்த வரிகள்....

வாழ்த்துக்கள் கீதம்...

நன்றி கா.ரமேஷ் அவர்களே.

Ravee
10-03-2010, 06:33 PM
'முக்கியமாக நீ உதிர்க்கவேண்டிய ஒன்றை
உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன்;
போகிறபோக்கில் உன் இதழ்விரித்து
சிறுபுன்னகை ஒன்றை உதிர்த்துப் பார்!

எத்தனையோ போராட்டத்திலும் என் வாழ்வின் பாதையை மாற்றிச் செல்ல வைத்தது இந்த புன்னகை தான். இயற்கையை உன்னிப்பாய் ரசிக்கும் உங்கள் உள்ளம் உங்கள் உடலை விட எப்போதும் இளமையாய் இருக்கும் . ரசிகன் வாழ்த்துவதில்லை . ரசிகன் ரசிப்பான் . இந்த ரசிகனும் .

அமரன்
10-03-2010, 08:24 PM
வெறுஞ் சருகுகள் என்று சொல்பவை கூட உரமாகும். அதே போல் நாம் உதிர்த்த தேவையற்றவை கூட உதவக்கூடும் எமக்கு.

புன்னகையை உதிர்க்கக் கூடாது. புன்னகை உதிர வேண்டும்.

நல்ல கவிதை கீதம்.

கீதம்
13-03-2010, 09:00 PM
'முக்கியமாக நீ உதிர்க்கவேண்டிய ஒன்றை
உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன்;
போகிறபோக்கில் உன் இதழ்விரித்து
சிறுபுன்னகை ஒன்றை உதிர்த்துப் பார்!

எத்தனையோ போராட்டத்திலும் என் வாழ்வின் பாதையை மாற்றிச் செல்ல வைத்தது இந்த புன்னகை தான். இயற்கையை உன்னிப்பாய் ரசிக்கும் உங்கள் உள்ளம் உங்கள் உடலை விட எப்போதும் இளமையாய் இருக்கும் . ரசிகன் வாழ்த்துவதில்லை . ரசிகன் ரசிப்பான் . இந்த ரசிகனும் .

உங்கள் ரசனைக்கு என் மனங்கனிந்த நன்றிகள் பல, ரவீ அவர்களே.

கீதம்
13-03-2010, 09:01 PM
வெறுஞ் சருகுகள் என்று சொல்பவை கூட உரமாகும். அதே போல் நாம் உதிர்த்த தேவையற்றவை கூட உதவக்கூடும் எமக்கு.

புன்னகையை உதிர்க்கக் கூடாது. புன்னகை உதிர வேண்டும்.

நல்ல கவிதை கீதம்.

பாராட்டுக்கு மிக்க நன்றி அமரன் அவர்களே.