PDA

View Full Version : பேரன்பின் தேவதை வருகை



M.Rishan Shareef
02-02-2010, 04:25 AM
பேரன்பின் தேவதை வருகை (http://mrishanshareef.blogspot.com/2009/12/blog-post.html)

பிரபஞ்ச வெளியெங்கும்
சுகந்தம் நிறைக்கும்
அழகிய பூவொன்றை
வசந்தநாளொன்றில் எதிர்கொள்ள
தன்
பரப்பெங்கிலும் பாசம் நிரப்பி
நெடுநாளாகக் காத்திருந்ததோர்
பச்சை இல்லம்

மெதுவாக நகர்கையில்
பெருஞ்சலனத்தில்
சிதறச் செய்த கரும்பாறைகள்
மேலிருந்த சினமோர் யுகமாய்த் தொடர்ந்தும்
தன் பழஞ்சுவடுகளில் நலம் விசாரிக்கும்
எளிய நாணல்களை
மீளவும் காணவந்தது
நீர்த்தாமரை

விரிசல்கள் கண்ட மண்சுவர்
மழையின் சாரலை
தரையெங்கும் விசிறும்
ஓட்டுக் கூரை சிறிய வீடு
தொடரும்
புராதன இருளின் ஆட்சி மறைக்க
தன் கீற்றுக்களைப் பரப்பி
பரிபூரணத்தை எடுத்துவந்தது
பேரன்பின் தேவதை

மெல்லிய வண்ணத்துப் பூச்சியென
பொக்கிஷங்களைச் சுமந்து வந்த தன்
சிறகுகளைச் சிறிதேனும்
இளைப்பாறவிடாமல்
வந்தது என்றுமழியாப் புன்னகையோடு
யாவர்க்கும் மகிழ்வைத் தரும்
மந்திரங்களை உதிர்த்தது
பின்னர்
தவறவிட்ட விலைமதிக்கமுடியாதவொன்றை
தேடிச் செல்வது போல
மிகத் துரிதமாகத் தன் நிலம் நாடி
தொன்ம பயிர்நிலங்கள் தாண்டி
மீண்டும் பறந்தது

ஆத்மாக்களனைத்திற்கும்
இனி வாழப்போதுமான
சுவாசத்தை விட்டுச் சென்ற
அத் தூய காற்றினூடே
அந்தகாரத்தைப் பரப்பி
தைத்திருந்த கருங்குடையை திரும்பவும்
விரித்தது மழை இரவு

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

@ அன்புச் சகோதரி ஃபஹீமா ஜஹானின் வருகை ( 03-11-2009)

நன்றி
# சொல்வனம் இதழ் 13 (27-11-2009)

சிவா.ஜி
02-02-2010, 04:38 AM
இப்படியான கனத்த கவிதைகள் ஏனோ எனக்கு விளங்கிக்கொள்ள முடிவதில்லை. வாசிக்கும்போது மிக நன்றாக இருக்கிறது. ஆனால் கவிதை எதைப் பற்றியது என தெளிவாக என்னால் விளங்கிக்கொள்ள முடியாததால்....

குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. ஆனால் வரிகளில் இருக்கும் ஒழுங்கும், கனமும் மிக அருமை. வாழ்த்துகள் ரிஷான்.

சுகந்தப்ரீதன்
04-02-2010, 11:14 AM
பேரன்பின் தேவதை வருகையில்தான் இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கிறது இப்பூமியில் உயிரினங்களின் நீட்சியும் மனித வாழ்வின் வளர்ச்சியும்..!!

ஏகாந்தத்தை எளிதாக கையாண்டிருக்கிறீர்கள் கவிதையில்... வாழ்த்துக்கள் ரிஷான்..!!

M.Rishan Shareef
09-02-2010, 07:08 AM
அன்பின் சிவா.ஜி,

//இப்படியான கனத்த கவிதைகள் ஏனோ எனக்கு விளங்கிக்கொள்ள முடிவதில்லை. வாசிக்கும்போது மிக நன்றாக இருக்கிறது. ஆனால் கவிதை எதைப் பற்றியது என தெளிவாக என்னால் விளங்கிக்கொள்ள முடியாததால்....//

இந்தக் கவிதை எனது வீட்டுக்கு வருகை தந்த எனது சகோதரியின் வருகையைப் பற்றியது. :)

//குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. ஆனால் வரிகளில் இருக்கும் ஒழுங்கும், கனமும் மிக அருமை. வாழ்த்துகள் ரிஷான். //

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef
09-02-2010, 07:09 AM
அன்பின் சுகந்தப்ரீதன்,

//பேரன்பின் தேவதை வருகையில்தான் இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கிறது இப்பூமியில் உயிரினங்களின் நீட்சியும் மனித வாழ்வின் வளர்ச்சியும்..!!

ஏகாந்தத்தை எளிதாக கையாண்டிருக்கிறீர்கள் கவிதையில்... வாழ்த்துக்கள் ரிஷான்..!! //

அழகான நிதர்சனமான கருத்து.
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !