PDA

View Full Version : கவிதையின் வெற்றியும் போலி சாமியாரும்.....



jawid_raiz
02-12-2009, 03:27 AM
எல்லோருக்கும் பொதுவான மனக்குமுறல்களை பட்டைப்போட்டு திட்டப்படுத்தி கூறி வெற்றிபெறும் ஒரு போலி சாமியாரின் வெற்றிக்கும் ஒரு கவிதையின் வெற்றிக்கும் மிகுந்த வித்தியாசமில்லை என்றே நான் சொல்வேன்.

கோபம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒரு உணர்வு; கோபத்தை கட்டுபடுத்த வேண்டும் என்ற ஆர்வம் எல்லோருக்கும் இருக்கிறது. "எனக்கு கோபம் வருவதே இல்லை" என்று யாராவது கூற முடியுமா? இருப்பினும் "உங்களுக்கு கோபம் வருவது அதிகம், உங்கள் கோபத்தினால் உங்கள் வாழ்வில் நீங்கள் நிறைய விபரீதங்களை சந்திக்க நேரிடும் என்று கூறுகையில் "கோபம் விபரீதமானது" என்ற அறிவுடைமை தோற்றுப்போய் "என்னைப் பற்றி என் முகத்தை பார்த்தே சரியாக சொல்கிறார்" என்று சாமியாரை கடவுளாய் பார்க்கின்றான் சாதாரண மனிதன்.

இதே போல தான் ஒரு கவிதையின் வெற்றியும்...


ரசிகன் மனதில் ஏதோ ஒரு மூலையில் வார்த்தை வடிவம் பெற முடியாமல் முடங்கிப்போய் இருக்கும் கற்பனைகளை ஒரு கவிஞன் வார்த்தை வடிவில் தரும் போது ரசிகன் மனதில் முடங்கிப்போயிருந்த எண்ணங்கள் குதித்து எழுகிறது. கவிதையும் வெற்றி பெறுகிறது.


காதலியை இன்னொருவன் கைப்பிடித்த பின்பும் தன் மனதில் காதலின் வேர்களை தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு காதலனுக்கு வைரமுத்துவின் "இலையில் தங்கிய துளிகள்" தேசிய கீதமாவதில் ஐயம் ஏதுமில்லை.

"கடைசி விடைசொல்ல
ஜன்னல் கம்பிகளில் உன்
கண்கள் தேடிய போது

கார்க்கதவு சாத்த வந்த கணவன் சொன்னான்
'நீங்களே இவளுக்குத்
தாலி கட்டியிருக்கலாம்"

உண்மைக்கும் இந்த வரிகளுக்கும் தூரம் அதிகம் என்றாலும் தோற்றுப்போன ஒரு காதலனுக்கு எதிர்பார்ப்பு கலந்த ஆறுதல் சொல்லும் இந்த வரிகளில் இளைஞன் உசும்பிப்போகும் போது வெற்றிபெறுகிறதுகவிதை.


.

ஜனகன்
02-12-2009, 06:46 AM
கவிதையின் வெற்றிக்கும், போலிச்சாமிக்கும் உள்ள ஒற்றுமையை, நல்ல ஒரு உதரனம்காட்டிஎழுதியுள்ளீர்கள்.அதன் கருத்தும் நன்றாக அமைந்துள்ளது.மேலும் எழுதுங்கள் jawid_raiz.

ஆதி
02-12-2009, 07:24 AM
இதுதான் அந்த முழுக்கவிதை...

*இலையில் தங்கிய துளிகள்*


காலப் பெருவெளியில்
சில பத்தாண்டுகள் கரைந்து கழிந்தபின்
மீண்டும் கண்டுசெல்ல வருகிறேன் உன்
காதல் திருமுகம்


அவ்வண்ணமே பொலியுமா
பூமலிந்த பொன்முகம்?


உன் கிராமம் நெருங்க நெருங்க
மார்புக் கூட்டில் உயிர்வேகுதடி


நகரா மரங்கள் நகர்வதாகவும்
நகரும் வாகனம் நிலைகொண்டதாகவும்
நீளப்பொய் சொல்கிறது நெடுஞ்சாலை


கலாபம்கட்டி ஆடுகின்றன
நிறைவேறாத கனவுகள்


பட்டுப் பாவாடையின் காற்றடிப்போடு
பணிவில் திமிர்காட்டும் பார்வைகளோடு
முளைத்தும் முளையா முன்மலர்களைச்
சண்டையிட்டு முட்டும் ஜடைஒதுக்கி
சலங்கை கட்டிய மான்குட்டியாய்
தரைதோயாத கலர்மேகமாய்
வீதிமரங்களின் பூகள் திறந்து
ஒட்டுமொத்த நாணத்தை உருண்டை திரட்டி என்மேலெறிந்து
நீ என்னைக் கடந்த காலம் -
தெருவெல்லாம் கார்த்திகைதான்!
மனசெல்லாம் மார்கழிதான்!


ஏழோ எட்டோ இருக்குமா
பழகி வந்த ஆண்டுகளும்
பகிர்ந்து கொண்ட வார்த்தைகளும்?
இன்றேனும் பேசு பெண்ணே!


"வாங்க!"


ஆண்டுகள் தோண்டிய அதேகுரல்
ஆனால் நீமட்டும் நீயில்லை


வீதியெல்லாம் வர்ணங்கள்
விசிறியடித்த அவள் எங்கே?


மழையூறிய ஓவியமாய்ச்
சாயம் போன நீ எங்கே?


காலம் தன் சவுக்கைப்
பூக்கள் மீது சொடுக்காமலிருக்கலாம்


மீண்டும்
வார்த்தைகள் தொலைந்த மொழிகளாய்
நீயும் நானும்


பூச்சரமிட்ட புகைப்படம் சொல்லியது
உன் அம்மாவின் மரணம்


சரத்தின் சருகு சொல்லியது
உன் பொருளாதாரம்


புகைப்படத்திலும் சிரிக்கத்தெரியாமல்
பாவமாய் உன்னிரு பிள்ளைகள்


தேநீர் தந்தாய்
பட்டுவிடக் கூடாதென்ற உன் அச்சத்திலும்
தொட்டுவிடக் கூடாதென்ற என் நடுக்கத்திலும்
சிக்கிய கோப்பை சிறிதே தள்ளாடியது


மௌனம் திரட்டிப் பழங்கதை பேசி
வெள்ளையடிக்காத சுவரில் பல்லி பார்த்து
ஓரக் கண்களால் உயிர்தடவி


இனிமேலும் இங்கிருப்பின்
கண்ணீரோடு உண்மையும்
கொட்டிவிடும் என்றஞ்சிக்
கும்பிட்டு வெளியேறி


கடைசி விடை சொல்ல
ஜன்னல் கம்பிகளில் உன்
கண்கள் தேடியபொது


கார்க்கதவு சத்தந்த கணவன் சொன்னான் :
" நீங்களே அவளுக்குத்
தாலி கட்டியிருக்கலாம்"


உன்போல் பெண்மக்கள்
ஊர்உலகில் எத்தனையோ
காதலுற்ற சேதியினை
காதலர்க்குச் சொல்லாமல்
கணவர்க்குச் சொன்னவர்கள்.


- வைரமுத்து


----------------

கடைசி மூன்று பத்திகள் காதலித்த ஒவ்வொருவரின் மனதின் ரணத்துக்கும் சிறிது நேர ஆறுதலாகும்.. தனிமையின் தகிப்புகள் அந்த வரிகளின் தோள்களில் சாய்ந்து கொஞ்சம் ஏக்கம் தீர்க்கும்.. வாழ்த்துக்கள் ஜாவித்..