PDA

View Full Version : பேராண்மை – திரை விமர்சனம்



Honeytamil
17-10-2009, 01:24 PM
http://i36.tinypic.com/2uh9zmb.jpg

கோட்டாவில் படித்து பாரஸ்ட் ரேஞ்ச் ஆபீஸராய் உயர்ந்து நிற்கும் துருவனும், ஐந்து என்.சி.சி கேடட் பெண்களும் சேர்ந்து நம் நாட்டின் பசுமை புரட்சிக்காக அரசு ஏவ இருகும் ராக்கெட்டை அழிக்க வரும் வெளிநாட்டு கூலிப்படையின் முயற்சியை தடுப்பதே கதை.

மேம்போக்காக பார்த்தால் ஏதோ பாண்டஸி வகையை போல தெரிந்தாலும் படம் முழுக்க இயக்குனரின் உழைப்பு, உழைப்பு, உழைப்பு.. ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. என்.சி.சி பயிற்சிக்காக வரும் ஒரு காலேஜ் குரூப் வந்து சேர, அங்கே பயிற்சியாளராக வருகிறார் துருவன் எனும் ஆபீஸர். அவர் பழங்குடியினர் கோட்டாவில் சீட் வாங்கி, படித்து முன்னேறியவர். ஊருக்குள் வரும் முன்னரே பழங்குடியினராக பார்த்த ஒருவனை தங்களது பயிற்சியாளராய் ஏற்க மறுக்கும் ரவுடி பெண்களான ஐந்து பேர். அவரை துரத்த நினைத்து இந்த மாணவிகள் செய்யும் முயற்சிகள் எல்லாம் பாதி வெற்றியும், தோல்வியுமாய் முடிய, அதில் ஒரு பெண் ஒரு தலையாய் அவரை காதலிக்கவே ஆரம்பிக்கிறார்.

ஒரு கட்டத்தில் கடைசி நாளாக இது வரை மக்கள் நடமாட்டமே இல்லாத காட்டு பகுதிகுள் ஒரு நாள் பயிற்சிக்கு ஐந்து பேரை செலக்ட் செய்து துருவன் செல்ல, அடாவடி ஐந்து பெண்கள் அவனை பிரச்சனைக்குள்ளாக்க, முயற்சிக்கும் வேளையில் ஆள் நடமாட்டமே இல்லாத காடுகளில் நடமாட்டத்தை பார்க்கும் ஒரு பெண் துருவனிடம் சொல்ல அன்னிய சக்திகளில் சதி திட்டத்தை முறியடிக்க, ஐந்து பெண்களுடன் போராட்டத்தில் இறங்குகிறான் துருவன் , அவன் ஜெயித்தானா, அந்த பெண்கள் அவனுக்கு உதவினார்களா..? என்பது வெள்ளிதிரையில்.

ஜெயம் ரவிக்கு வாழ்நாளில் இது மாதிரி ஒரு கேரக்டர் அமைவது மிக கடினம். கமலஹாசனுக்கு பிற்கு கோவணத்துடன் ஒரு நீள காட்சியில் வலம் வருகிறார். பயிற்சியாளராய் அவரின் பாடி லேங்குவேஜ், சண்டை காட்சிகளில் அவர் காட்டும் வேகம், பெண்களிடம் அவரின் அதட்டல் உருட்டல் செல்லுபடியாகாமல் திண்டாடும் போது காட்டும் பொறுமை. அவரின் ப்ளான் எக்ஸிகியூஷன் போன்றவற்றில் காட்டும் நிதானம், ஆக்*ஷன் காட்சிகளிலும், மரம், மலையில் ஏறும் காட்சிகளில் அங்கேயே வாழ்ந்தவர் போல் காட்டும் லாவகம், ரவி உங்கள் உழைப்புக்கு ஒரு சல்யூட்.

அவரின் உயர் அதிகாரியாய் வரும் பொன்வண்ணன் கேரக்டரும் அருமை. மலைஜாதியிலிருந்து ஒருவர் இந்த நிலைக்கு வந்ததை ஒவ்வொரு முறை பேசும் போதும், மட்டம் தட்டியே பேசுவதும், அவனின் வளர்ச்சி பொறுக்காமல், அவனை ஒரு காம கொடூரன் ரேஞ்சில் பில்ட்ப் செய்து அவனை கொல்ல ஆர்டர் வாங்குவதும், கடைசியில் வீர பராக்கிரம விருதை அவர் வாங்குவதும். படம் முழுக்க, இயக்குனர் தான் சொல்ல நினைக்கும் கருத்துகளை எல்லாம் இவரின் கேரக்டர் மூலமே சொல்லியிருப்பது அருமை.

ஐந்து பெண்களும் ஆரம்ப காட்சிகளில் அடிக்கும் லூட்டிகளுக்கும் இணையாய் காட்டில் அவர்கள் துருவனுடன் செய்யும் சாகசங்களில் அவர்களின் முழு ஒத்துழைப்பு தெரிகிறது. ஐந்து பெண்கள் இருந்தாலும் அடர் காட்டை போலவே ஒரு இறுக்கம் படம் ம்ழுவதும் இருக்கிறது. ஒருதலையாய் துவனின் மீது காதல் வயப்படும் சரண்யாவை தவிர. ஏதோ வந்தோம், ஆடினோம், பாடினோம் என்றில்லாத கேரக்டர்கள்.

அந்த அமெரிக்க வில்லன் 70mm சைஸ் உடம்பை வைத்து கொண்டு பயமுறுத்துவதை தவிர, வேறேதும் பெரிதாய் செய்யவில்லை. டெர்மினேட்டர் பட ஹீரோவாம் மெஷின் போலவே படம் முழுவதும் வருகிறார்.

படத்தின் கேமராமேன் சதீஷ்குமாருக்கு சுற்றி போடுங்கள்.. அடர்காடுகளுக்குள் ஓடுகிறார், தாவுகிறார், நடக்கிறார், பாய்கிறார், தண்ணீரில் நடக்கிறார். நம் கண் முன்னே காட்சிபடுத்தியிருக்கிற உணர்வே இல்லாத வகையில் காட்டையும், அருவியையும், ஏரியையும், விரித்திருக்கிறார். இடைவேளையின் போது ஒரு காட்சியில், ஒரே ஷாட்டில் ஒரு மலையில் இருக்கும் கதாநாயக, ஹீரோயின்களிலிருந்து கிளம்பும் கேமரா, அப்படியே பயணித்து கீழே இருக்கும் வில்லன் இடத்தையும், அங்கேயிருந்து அவர்கள் போக இருக்கும் இடத்தையும், ராக்கெட் தளத்தையும் காட்டி இடைவேளை போடும் போது எழுந்து நின்று கைதட்ட வேண்டும் போலிருந்தது.. படம் முழுக்க இவரின் ஆளுமை அதிகம் என்றால் அது மிகையில்லை.

வித்யாசாகரின் பிண்ணனி இசை சுமார் ரகம் தான். பாடல்கள் படத்தில் பெரிதாய் பிரஸ்தாபிக்க படவில்லை என்றாலும், முதல் பாடல் பரவாயில்லை ரகம், காட்டில் மாண்டேஜில் பாடப்படும் பாடலில் வைரமுத்துவின் ஆளுமை.

பாராட்ட பட வேண்டிய இன்னொருவர் ஆர்ட் டைரக்டர். காட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு என்ன ஆர்ட் டைரக்டர் என்று கேட்பவர்களுக்கு படத்தின் உபயோக படுத்தபட்டிருக்கும் அனைத்து தளவாடங்களும் அவர்கள் அமைத்ததுதான் தத்ரூபம்.

இயக்குனர் ஜனநாதன் தன்னுடய் கம்யூனிச கருத்துகளை எல்லாம் படம் பூராவும் ஏதாவது கொரு கேரக்டர் மூலம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லிவிடுகிறார். பெண்களுக்குள் பேசிக் கொள்ளும் வசனங்களில் இளமை துள்ளல். படத்தில் இவரது உழைப்பு மிக அதிகம். ஜெயம் ரவியுடன் பெண்கள் காட்டில் மாட்டியவுடன் அவரின் மூலம் காட்டின் நிகழ்வுகளை வசனங்களாய் அவர் சொல்ல, சொல்ல, கொஞ்சம், கொஞ்சமாய் நாமும் அவருடன் பயணிக்க ஆரம்பிக்கிறோம். அதே போல் அவர் எதிரிகளை எதிரி கொள்லும் முயற்சிகளை, அந்த பெண்களுக்கு சொல்லும் போது, சின்ன சின்னதாய் எவ்வளவு விஷயங்களை அவர் சொல்லி கொண்டே போகிறார், யானை சாணம், மரத்தின் கிளைகளை ஒடிக்கும் காரணம், சட்டை துணி மெல்லியதய் கேட்டு அதை அடையாளமாய் கட்டும் யுக்திக்கான் காரணம், போகும் வழியை படத்தில் கேரக்டர்கள் ம்றந்தாலும் நாம் மறக்க மாட்டோம் போலிருக்கிறது. அவ்வளவு தூரம் நம்மை பிரிபேர் செய்து கூட்டி போகிறார்..

இவ்வளவு தூரம் உழைத்தவர் திரைக்கதையில் அந்த ஐந்து பெண்களுக்கான கேரக்டர்களை கொஞ்சம் கவனித்திருந்தால் இன்னும் நம்பகத்தன்மை வ்ந்திருக்க கூடும். என்னதான் என்.சி.சியில் அவர்கள் இருந்தாலும, பட்டின காலேஜ் ஸ்டூடண்டுகள் தான். அவர்கள் திடீரென காட்டுக்குள் தனியே அலைய ஆசைப்படுவதும், திடீரென நாட்டுக்கு பிரச்ச்னை என்றதும் உயிரை பணயம் வைத்து ராணுவ தளவாடங்களை துருவன் சொல்லி கொடுத்த உடனேயே லாவகமாய் பயன் படுத்துவதும், சாட்டிலைட் ஏவுகணைகளை அனாயாசமாக கையாள்வதும், வந்திருக்கும் வில்லன்கள் எந்த நாட்டுகாரர்கள், என்ன காரணத்திற்காக நம் ராக்டெட் திட்டத்தை முறியடிக்க நினைக்கிறார்கள் என்று சொல்வதற்கு பதிலாய் கூலிப்படை, அந்நிய சக்தி என்று சொல்வதும் கதையின் மீதான நம்பகத்தந்மையை குறைந்து ஒரு சாதாரண பேண்டஸி சப்ஜெக்டாய் போய்விடுகிறது. என்பதுதான் வருத்தம்

இந்த படத்தில் உழைத்த அனைவரின் உழைப்பிற்காக ஒரு ராயல் சல்யூட்

பேராண்மை – வீர்யம்

வில்லு, ஏகன் போன்ற மொக்கை படங்களை எடுத்து சுட்டுக் கொண்ட ஐங்கரனுக்கு இதிலாவது ஒரு லைட் அடிக்கிறாதோ இலையோ.? அட்லீஸ்ட் ஒரு நல்ல படத்தை எடுத்த திருப்தியாவது அவர்களுக்கு கிடைத்திருக்கும்.

நன்றி : ஷங்கர்

சிவா.ஜி
17-10-2009, 02:03 PM
தீபாளிக்கு வெளிவந்த படங்களில் பார்க்கும்படியான ஒரு படமும் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. அருமையான விமர்சனம். படத்திற்காக உழைத்தவர்களுக்காகவாவது ஒருமுறை திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும்.

பகிர்வுக்கு நன்றி தேன்தமிழ்.

aren
17-10-2009, 02:25 PM
படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

Ravee
17-10-2009, 07:59 PM
இது அதிகாலையின் அமைதியில் என்ற ரஷ்ய கதையின் தாக்கம். திரைகதை கதைகளம் மாற்றி அமைக்கபட்டு இருந்தாலும் மையம் என்னவோ அதுதான். ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்த கமாண்டர் முறையான கல்வி அறிவு இல்லாமல் படிப்படியாக முன்னேரியவனின் கீழ் நகரத்தை சேர்ந்த ஐந்து பெண் சிப்பாய்கள் பணிக்கு வந்து செய்யும் குறும்புகள் பின்னர் ஜெர்மனியர்களை உளவு காண சென்று படும் வேதனைகள் கதை படிக்கும் நம் கண்கள் கலங்கி விடும் .
இறுதியில் நாயகன் மட்டுமே உயிர் பிழைப்பான். அந்த வீர நங்கைகளுக்கு நாம் வணக்கம் சொல்லும் விதம் கதை இருக்கும்.

அருள்
18-10-2009, 05:43 AM
அட இந்த வாரம் பார்ப்போம். ஆதவன் தான் ஏமாற்றம். இதாவது ?????????

aren
18-10-2009, 06:21 AM
தேனிசை அவர்களே, இன்னொரு தளத்திலிருந்து அப்படியே விமர்சனங்களை எடுத்துப் போடாமல் நீங்களே படத்தைப் பார்த்து உங்கள் கருத்துக்களை இங்கே அளித்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அடுத்த படத்தின் விமர்சனம் உங்கள் கைப்பட எழுதியதாக இருந்தால் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம்.

மன்மதன்
19-10-2009, 03:14 PM
விமர்சனம் கண்டிப்பாக ஜெயம் ரவிக்கு சந்தோசத்தை கொடுக்கும். இது மாதிரியான ஒரு வித்தியாசமான நல்ல கேரக்டரைத்தான் தேடிக்கொண்டிருந்தார். ப்டமும் வெற்றி பெற்றுவிட்டால் இரட்டிப்பு மகிழ்ச்சியே..

அழகான விமர்சனம் .. ஆறுதலான விமர்சனமும் கூட..

ஜனநாதன் படங்களில் வீரியம் இருக்கும்.. படம் வெற்றியடைய வாழ்த்துகள்..

poornima
19-10-2009, 03:25 PM
அன்பு தீந்தமிழ் (தேன் தமிழ் என்பதை இப்படி சொல்லியிருக்கிறேன் :-)

அழகான திரைப்பார்வை உங்களுடையது. இந்தப் படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால் இதைப் படித்ததும் பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

படத்தைப் பார்த்து வந்து என் சிநேகிதியின் கருத்தொன்றையும் இங்கு பதிவு செய்கிறேன்.

இன்னாத்துக்கு கோடிக்கணக்கா தீவிரவாதிங்களை ஒழிக்க அரசு செலவழிச்சுக்கிட்டிருக்குன்னு புரியல.. பேசாம இந்த ரவிய கூப்பிட்டு கையில ராக்கெட் லாஞ்சர கொடுத்தா எல்லா பிரச்னையும் சரியாய்டும்ல :-)

aren
19-10-2009, 03:45 PM
இன்னாத்துக்கு கோடிக்கணக்கா தீவிரவாதிங்களை ஒழிக்க அரசு செலவழிச்சுக்கிட்டிருக்குன்னு புரியல.. பேசாம இந்த ரவிய கூப்பிட்டு கையில ராக்கெட் லாஞ்சர கொடுத்தா எல்லா பிரச்னையும் சரியாய்டும்ல :-)

இதுவும் நல்ல ஐடியாவாகத்தான் தெரியுது. ஏனுங்க, நம்ம சிதம்பரம் அய்யாகிட்ட ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இந்த கருத்தைச் சொன்னால் என்ன.

இளந்தமிழ்ச்செல்வன்
02-11-2009, 09:23 PM
இதுவும் நல்ல ஐடியாவாகத்தான் தெரியுது. ஏனுங்க, நம்ம சிதம்பரம் அய்யாகிட்ட ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இந்த கருத்தைச் சொன்னால் என்ன.

சீக்கிரம் கூப்பிடுங்க..... சிவகங்கையில சீட்டு பிடிக்க பட்ட கஷ்டத்துக்கு பலனாவது கிடைக்கட்டும் அவருக்கு.