PDA

View Full Version : இருப்புக்கு மீள்தல் - 01



M.Rishan Shareef
18-06-2009, 07:15 AM
இருப்புக்கு மீள்தல் - 01

மரணம்... நான் மயக்கமுற்றுக் கிடந்தவேளையிலும் என் அருகிலேயே விழித்தபடி பார்த்திருந்திருக்கிறது என்பதனைப் பின்னர்தான் அறிந்தேன். இரத்த நாளங்களெங்கிலும் அப்பொழுதுதான் அருந்திய உணவிற்குள் ஒளிந்திருந்த விஷம் வேகமாகப் பரவியபடி இருக்கையில் அருகில் யாருமற்ற சூழலில் தனித்து, மயக்கமுற்றுக் கிடப்பதென்பது கூற்றுவனைத் தோளிலமர்த்திப் பார்த்திருக்கச் செய்வதன்றி வேறென்ன? நான் அப்படித்தான் கிடந்திருந்திருக்கிறேன். புறச்சூழல் நிசப்தத்தை, செவிகளில் மெதுமெதுவாக ஏற்ற, மயங்கிச் சரிந்திருக்கிறேன். விழி சொருகும் இறுதிக் கணத்தில் என்ன நினைத்தேனென இன்னும் ஞாபகத்திலில்லை.

இன்னும் உணவருந்திய பகல்பொழுது நினைவிலிருக்கிறது. பிறகுதான் மயங்கியிருக்கிறேன். விடுமுறை நாளில் அலுவலக வேலைக்கென வந்து ஏறத்தாழ நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக உள்ளே தனித்த நிலையில் விழுந்துகிடந்தேனென என்னை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற சக அலுவலகர் பின்னர் சொன்னார். அங்கு உடனடியாக அவசர சிகிச்சைப்பிரிவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட பொழுது அவரிடம் சில கையெழுத்துக்கள் வாங்கிக்கொண்டு, வெளியே காத்திருக்கச் சொன்னார்களாம். காத்திருந்த பொழுதில் அவரிடமிருந்து ஆரம்பித்திருக்கிறது எனக்கான முதல் பிரார்த்தனை.

ஊர் நண்பர்கள், சக ஊழியர்கள் பதறித்துடித்து ஓடிவந்து காத்திருந்தும், மயங்கிப் பின் முப்பத்தாறு மணித்தியாலங்களுக்கு முன்பதாக நான் கண்விழிக்கவில்லை. இருபத்துநான்கு மணித்தியாலங்கள் தாண்டியும் விழிப்பு வராமல் போகவே வைத்தியர்கள் எனது அபாயநிலையை வீட்டுக்கு அறிவிக்கும்படி சொல்லிவிட்டார்களாம். யாரிடமும் எனது வீட்டுத் தொலைபேசி எண் இல்லை. என்னோடு சேர்ந்து வீழ்ந்து உடைந்து சிதறிப் போன கைத்தொலைபேசியும் அலுவலகத்தில் எனதிருக்கையருகில் அப்படியே கிடக்கும். அதுபோலவே அங்கங்கே உறைந்து போய் எல்லோரும் எனது விழிகள் திறக்கக் காத்துக் கிடந்தார்கள். சக அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஈரானியச் சகோதரி, அவரதும் எனதும் நண்பர்களுக்கெல்லாம் நான் நோயுற்ற செய்தியை அனுப்பி எனக்காகப் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார் எனப் பின்னர் அறிந்தேன்.

ஒன்றரை நாட்கள் கடத்தி நான் விழித்துப் பார்த்தபொழுது வேறொரு உலகத்தில் இருக்கிறேனோ என்ற நினைவினைத் தோற்றுவிக்கும்படி என்னைச் சுற்றிலும் ஏராளமான மருந்து, மருத்துவ உபகரணங்கள் வாடிக் கிடந்த என்னுடலில் இணைக்கப்பட்டிருந்தன. அணிந்திருந்த ஆடை மாற்றப்பட்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஓயாது சேர்ந்தடித்து நொறுக்கியதைப் போன்றதொரு சோர்வையும் வலியையும் என்னில் உணர்ந்தேன். என் நிலையைக் கண்காணிக்கவென எப்பொழுதும் கூடவே இருக்கும்படி நியமிக்கப்பட்ட ஒரு மருத்துவத்தாதி என்னிலேற்பட்ட சிறு சலனத்துக்கு முகம் முழுதும் மகிழ்வோடு அருகினில் ஓடி வந்து கன்னத்தில் இலேசாகத் தட்டி முழுதும் விழிக்கும்படி செய்தாள். பகலா, இரவா எனத் தெரியாதபடி விழித்தேன். எங்கிருக்கிறேன் எனத் தெரியாமல் விழித்தேன். எனக்கு என்ன ஆனதெனப் புரியாமல் விழித்தேன். அவ்வளவு நேரமும் காத்திருந்த கூற்றுவன் என் உயிர் வாங்கிப் போகும் உத்தேசமற்று நகர்ந்துபோனதை அறியாது விழித்தேன். ஏன் விழித்தேன்? ஏன் இவ்வுலகை மீளவும் பார்த்தேன் ?

(தொடரும்)

- எம்.ரிஷான் ஷெரீப்.
நன்றி - விகடன்.