PDA

View Full Version : பின்னங்கால் வடு



M.Rishan Shareef
18-06-2009, 07:08 AM
பின்னங்கால் வடு (http://mrishanshareef.blogspot.com/2009/06/blog-post_15.html)

உதிர்ந்த சருகு போலாகிவிட்ட
அப்பாவுக்கு முந்தியவர்கள்
எப்பொழுதோ நட்டுச் சென்ற
முற்றத்து மாமரம்
அகன்ற நிழலைப் பரப்பி
மாம்பிஞ்சுகளை
பூக்களைப் பழங்களை வீழ்த்தும்

தண்டின் தடித்த பரப்பிலோர் நாள்
என் பெயர் செதுக்கினார் அப்பா
தடவிப்பார்க்கிறேன்
கசிந்து காய்ந்த தழும்பின்
நெருடலும் அப்பாவுமாக
விரல்களில் உறைகிறது நினைவுகள்

இறுதியாக அவர் மடியிலமர்த்திச்
சொல்லித்தந்திட்ட வேளையில்
விரிந்திருந்த அரிச்சுவடியின்
எழுத்துகள் ஒவ்வொன்றிலும்
நகர்ந்த என் பிஞ்சுச் சுட்டுவிரலின் அழுத்தத்தில்
நகக்கண்ணில் வெள்ளை பூத்தது
எழுத்துக்கள் குறித்துநின்ற
விலங்குகளுக்கும் கூட
உயிரிருந்திருக்கும் அப்பொழுது

வீட்டின் கொல்லையில்
அகன்ற பெருங்கூட்டுக்குள்
அழகிய பூமைனா வளர்ந்தது
விழி சூழ்ந்த மஞ்சள் கீற்று
மென்சதை மூடித்திறக்கும் கருமணிகள் உருள
நாற்சூழலுக்கும் கேட்கும் படி
தன் சொண்டுகளிலிருந்து
எப்பொழுதுமேதேனும்
வார்த்தைகளை வழியவிட்டுக் கொண்டிருக்கும்
அதுதான் முதலில் அலறியது
கப்பம் கேட்டு
ஆயுதங்கள் நுழையக் கண்டு

பீதியில் நடுங்கிப்
பதைபதைத்து நாங்கள்
ஒளிந்திருந்த தளத்துள்
பலத்த அரவங்களோடு
அப் பேய்கள் நுழைந்திற்று
ஏதும் சொல்ல வாயெழாக் கணம்
கோரமாயிருந்தவற்றின் அகலத்திறந்த
வாயிலிருந்து கடுஞ்சொற்களும்
துப்பாக்கிகளில் சன்னங்களும் உதிரக்கண்டு
மேலுமச்சத்தில் விதிர்விதித்து
மூர்ச்சையுற்றுப் போனேன்

விழித்துப் பார்க்கையில்
பிணமாகியிருந்தார் அப்பா
ஊனமாகியிருந்தேன் நான்
அம்மாவும் அக்காவும்
எங்கெனத் தெரியவில்லை
இன்றுவரை

குறி பிசகிய
துப்பாக்கி ரவை விட்டுச் சென்ற
ஒற்றைக்காலின் சாம்பல் வடு
அப்பா,அம்மா,அக்கா,சுற்றம் குறித்த நினைவுகளை
இனி வரும் நாட்களிலும்
ஏந்தி வரக்கூடும்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி - புகலி
மனிதம் - ஏப்ரல் இதழ்

அமரன்
18-06-2009, 01:04 PM
எல்லாரையும் குளுத்தும் வெள்ளை
எங்களை எரியவைக்கும்.

எல்லாருக்கும் களிப்பூட்டும் இரவுமடி
எங்களுக்கு கழியவைக்கும்.

பசியெடுத்து வந்த பசு
கழனிப்பானைக்குள் தலைவிட்ட சத்தமும்
நெஞ்சத்துள் இடிமுழக்கும்.

கடந்து வந்தாலும்
இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிற்ன
ஏதேதோ நினைவுகள்
மாம்பிசினைப் போல...

அந்தகாலம் இனி
அடிக்கடி வந்து இடிக்கும்
வருங்காலத்தில்..

உடல் தகனித்து உயிர் தனித்தாலும் அழுகுரல் மட்டும் கரைந்து போய்விடாது. அத்துனை அனுபவம். அதன் ஒரு விள்ளளின் தடயம் இந்தக்கவி. கவிஞர் என்னைவிடக் கொடுத்து வைத்தவர். எனக்கு வீடுமில்லை. முற்றமுமில்லை. தெருவும் இல்லை ஈழத்தில்.

M.Rishan Shareef
25-06-2009, 05:57 AM
அன்பின் அமரன்,

//எல்லாரையும் குளுத்தும் வெள்ளை
எங்களை எரியவைக்கும்.

எல்லாருக்கும் களிப்பூட்டும் இரவுமடி
எங்களுக்கு கழியவைக்கும்.

பசியெடுத்து வந்த பசு
கழனிப்பானைக்குள் தலைவிட்ட சத்தமும்
நெஞ்சத்துள் இடிமுழக்கும்.

கடந்து வந்தாலும்
இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிற்ன
ஏதேதோ நினைவுகள்
மாம்பிசினைப் போல...

அந்தகாலம் இனி
அடிக்கடி வந்து இடிக்கும்
வருங்காலத்தில்.. //

நிச்சயமாக நண்பரே !
நாமே விரும்பாப் பட்சத்திலும் திரும்பும் திசைகள்தோறும் காணும் வடுக்களையெல்லாம் காலம் நினைவூட்டும். :(

//உடல் தகனித்து உயிர் தனித்தாலும் அழுகுரல் மட்டும் கரைந்து போய்விடாது. அத்துனை அனுபவம். அதன் ஒரு விள்ளளின் தடயம் இந்தக்கவி. கவிஞர் என்னைவிடக் கொடுத்து வைத்தவர். எனக்கு வீடுமில்லை. முற்றமுமில்லை. தெருவும் இல்லை ஈழத்தில்.//

எதுவுமில்லாவிட்டாலும் சொந்தங்கள் இருக்கிறோம் நண்பரே.
வாருங்கள்..காத்திருக்கிறேன் !

கருத்துக்கு நன்றி அன்பு நண்பரே !

கா.ரமேஷ்
25-06-2009, 06:37 AM
வலிகள் உணரும்போது வீரியம் தெரியும்.. உங்கள் வரிகளிலும் அந்த வீரியம் இருக்கிறது.வாழ்க்கை திரும்பவேண்டும் வேண்டுகிறோம் கடவுளிடம்...

M.Rishan Shareef
25-06-2009, 06:47 AM
அன்பின் கா.ரமேஷ்,

//வலிகள் உணரும்போது வீரியம் தெரியும்.. உங்கள் வரிகளிலும் அந்த வீரியம் இருக்கிறது.வாழ்க்கை திரும்பவேண்டும் வேண்டுகிறோம் கடவுளிடம்...//

உங்கள் பிரார்த்தனைகள் பலிக்கட்டும்.
கருத்துக்கு நன்றி நண்பரே !

இளசு
25-06-2009, 09:13 PM
ஹெலிகாப்டர் ஒலி கேட்டாலே இதயம் அதிர்ந்து ஒடுங்கும் அளவு
புதைந்துவிட்ட அச்சம்... அயல்தேசம் வந்து ஆண்டுகள் கடந்தும்...

மனதிலும் உடலிலும் மாறாத் தழும்புகளை ஏந்தி மருகும்
அத்தனை உறவுகளுக்கும் என் புரிந்துணர்வு அர்ப்பணம்..



ரிஷானின் கவிதைச் சிற்பத்துக்கு என் வீரவணக்கம்!

பாரதி
26-06-2009, 12:32 PM
புறமுதுகிடாமல் பட்ட வடுதானே இது!

இப்போதைய உலகில் சமாதனம் என்ற வார்த்தையே வழக்கொழிந்து விடும் போல இருக்கிறது.

வடுக்களை தடுக்காமல் பொறுக்கி எடுத்த எழுத்துகளால்
மனதில் தடம் பதித்த கவிதை - காலம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை காலாகாலத்திற்கும் கண்முன்னே காட்டும் கவிதை.
பாராட்டுகிறேன் நண்பரே.

M.Rishan Shareef
28-06-2009, 07:39 AM
அன்பின் இளசு,

//ஹெலிகாப்டர் ஒலி கேட்டாலே இதயம் அதிர்ந்து ஒடுங்கும் அளவு
புதைந்துவிட்ட அச்சம்... அயல்தேசம் வந்து ஆண்டுகள் கடந்தும்...

மனதிலும் உடலிலும் மாறாத் தழும்புகளை ஏந்தி மருகும்
அத்தனை உறவுகளுக்கும் என் புரிந்துணர்வு அர்ப்பணம்..

ரிஷானின் கவிதைச் சிற்பத்துக்கு என் வீரவணக்கம்!//

எப்பொழுதும் ஆறாத் தழும்புகளைக் காலம் தந்துவிட்டது நண்பரே. உண்மையான ஆயுதப் பொருட்களை எடுத்துவிளையாடி வளர்ந்த குழந்தைகளை நான் கண்டிருக்கிறேன். அவர்களது ஒவ்வொரு வளர்ச்சியின் போதும் காலம் அதன் விளைவுகளை மறக்கடிக்குமா? அவர்களது மனப்புண்களை ஆற்றுமா? மறக்கடிக்கவேண்டுமெனவும் ஆற்றவேண்டுமெனவும் பிரார்த்திப்போம்.

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef
28-06-2009, 07:41 AM
அன்பின் பாரதி,

//புறமுதுகிடாமல் பட்ட வடுதானே இது!

இப்போதைய உலகில் சமாதனம் என்ற வார்த்தையே வழக்கொழிந்து விடும் போல இருக்கிறது.

வடுக்களை தடுக்காமல் பொறுக்கி எடுத்த எழுத்துகளால்
மனதில் தடம் பதித்த கவிதை - காலம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை காலாகாலத்திற்கும் கண்முன்னே காட்டும் கவிதை.
பாராட்டுகிறேன் நண்பரே. //

சமாதானம் எனும் வார்த்தை அரசியல் நாடகங்களுக்கே அதிகம் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றது. உண்மையான சமாதானம் கிட்டுவதே இல்லை.

கருத்துக்கு நன்றி நண்பரே !