PDA

View Full Version : மூன்றாம் நாள் வா.



த.ஜார்ஜ்
08-04-2009, 06:44 AM
நான் சதுப்புச் சகதியில்
புதைந்து கொண்டிருக்கிறேன்-இவள்
காதலிக்கச் சொல்லி கூப்பிடுகிறாள்.

என் வேதனைகளின் முகவரியே
தெரியவில்லை.
விலாசம் கேட்டு தொந்தரிக்கிறாள்.

நான் உறங்க விரும்பவில்லை.
தென்றலோடு கைகுலுக்கும்
ஒப்பந்தம் இப்போது வேண்டாம்.

கண்ணை மூடித் திறக்கும்
வர்க்க பாதங்களுக்கடியிலிருந்து
நான் நிமிரும் வரை
நந்தவன உடன்படிக்கை உயிர் பெறாது

உனக்குத் தெரியாது உன்னை சுற்றி இருக்கும்
அகழிகள் பற்றி...
ஆமாம் காதலியே..
என்னிடம் காதலை எதிர் பார்த்து
காத்திருக்காதே.
நான் சிலுவையில் அறையப்படுகிறேன்
ஆகவே
மூன்றாம் நாள் வா!