PDA

View Full Version : புத்தம் புது பூமி..!!(தொடர்கதை)-நிறைவுற்றது



சிவா.ஜி
01-03-2009, 11:38 PM
அத்தியாயம்-1


தலைநகரத்திலிருக்கும் தன் வீட்டின் பால்கனியில் இருந்த அந்தப் பொத்தானை அழுத்த....பால்கனி அப்படியே மடங்கி பரவலாகி வெளியே நீ.............ண்டதும்,கையில் வைத்திருந்த அல்ட்ரா லைட் நேரடி சாட்டிலைட் தொடர்பு சாதனத்தை இயக்கி,

“ரேவா....நீ லேண்டிங் ஆக ஹெலிபேட் ரெடி. இன்னும் எத்தனை செகண்டுல லேண்ட் ஆவே?”

என்று கேட்ட ஷாபோவுக்கு 24 வயது. இன்னும் கொஞ்ச வினாடியில் வந்திறங்கப்போகும் ரேவாவுக்கும் அஃதே. இருவரும் ஏரோநாட்டிக்கல் படிக்கிறார்கள்.அதிக செலவில் டி.என்.ஏ திருத்தத்தில் கிடைத்த கவர்சியான உருவம். அவர்கள் படிக்கும் கல்லூரி பூமியிலிருந்து 180 கிலோமீட்டர்கள் உயரத்தில் அமைந்திருக்கும் ஸ்பேஸ் சிட்டியில் இருக்கிறது. தினமும் ரேவா வந்துதான் ஷாபோவைக் கூட்டிக்கொண்டு போவான். அதிகபட்சம் 30 வினாடிகளில் கல்லூரியை அடைந்துவிடுவார்கள்.

இந்தப் பயணநேரமே அதிகமென்று இன்னும் மேம்பட்ட ஸ்பேஸ் கேப்ஸ்யூலை வாங்கிதரும்படி தன் தந்தையை நச்சரித்துக்கொண்டிருக்கும் ரேவாவின் அப்பா அரசாங்கத்தின் மிகப்பெரிய அதிகாரி. நாடுகள் அனைத்தும் இனைந்து ஒரே உலகமாகிவிட்ட யுனைடெட் கண்ட்ரீஸ் ஆஃப் எர்த்-ன் ஏகபோக அரசாங்கத்தின் சக்தி வாய்ந்த பொறுப்பிலிருக்கும் அதிகாரி.

சத்தமேயில்லாமல் வந்திறங்கிய ரேவாவின் வானூர்தியின் தானியங்கிக் கதவு திறந்ததும் தன் பாக்கெட்டாப்புடன்( இரண்டு பேனாக்கள். ஒன்று ஒளிஉமிழ்ந்தால் திரையாகவும், மற்றொன்று ஒளிஉமிழ்ந்தால் விசைப்பலகையாகவும் செயல்படும்)வாகனமேறினான். ஏறும்போது குனிந்து பார்த்தான் ஆயிரத்து ஒன்றாவது மாடியிலிருப்பவரின் வானூர்தி புறப்பட்டுப்போவதைப் பார்த்தான்.அவர் வீட்டில் வேலை செய்யும் பெண் ஸிந்தெடிக் ரோபாவா அல்லது அசலா என்பதை இன்றுவரை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தொட்டால் மென்மையாக இருக்கிறது. ஆனால் அது உயர்தர ஸிந்தெடிக்கில் சாத்தியம்தான்.அந்தக்காலம் போல வெட்கமெல்லாம் இப்போது கிடையாது.அவளுக்குத் தெரியாமல் லேசாக தோலை சுரண்டி சோதித்துப்பார்த்துவிடவேண்டியதுதான். இருக்கட்டும் கூடிய சீக்கிரம் கண்டுபிடித்துவிடலாமென்று நினைத்த இவனிருப்பது 1254ஆவது மாடி. வசதி கூடியவர்கள்தான் கட்டிடத்தின் மேற்புற மாடிகளை வாங்க முடியும்.

500 மாடிகளுக்கு கீழிருப்பவர்கள் சொந்த வானூர்திகளை உபயோகிக்கத் தடையுள்ளது. அவர்களுக்கு தரை மார்க்கம்தான்.வெகுவாக பெருகிவிட்ட ஜனத்தொகையால் போக்குவரத்து நெரிசல் அதிகம்.அதற்காக மட்டுமல்ல.. குளோபல் வார்மிங்கால் கடல் மட்டம் உயர்ந்து பல நாடுகளின் பல பகுதிகள் இப்போது தண்ணீருக்குள். இடப்பற்றாக்குறை.குறைந்த இடத்தில் அதிகம் பேர் வாழவேண்டும். அதனால் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வான்வெளியில். ஆகாய விமானங்களின் பாதைகளுக்கு மேலே இன்னும் உயரத்தில் அமைத்திருந்தார்கள்.

அந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் கீழ்மட்ட ஊழியர்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் அவர்கள் பிள்ளைகள் அனைவருக்கும் பொதுவான அரசாங்க வானூர்திகள் உண்டு. அதில்தான் அவர்கள் பயணிக்க வேண்டும்.

இந்த விவரிப்புகள் முடிவதற்குள் ரேவாவும், ஷாபோவும் வின்வெளி நகரத்தை அடைந்துவிட்டார்கள். அவர்கள் வகுப்பு முடிந்து வருவதற்குள் அடுத்த ப்ளாக்கில் இருக்கும் லஷியைப் பார்த்துவிடலாம். லஷி 18 வயது புயல். உடன் படிக்கும் பையன்களுடன் இதுவரை லூனாஸ் வின்வெளி காட்டேஜுக்குப் போகாமல் தண்ணிக்காட்டிக்கொண்டிருந்தாள்.பழைய பரம்பரை பாதுகாப்புணர்வு இவளின் ஏதோ ஒரு டி.என்.ஏ வில் எழுதப்பட்டுவிட்டது போலிருக்கிறது. ஷாபோவின் மேல் மட்டும் ஒரு ஈர்ப்பு.ஷாபோவின் வகுப்புத்தோழிதான். இன்று ஒரு முக்கிய வேலைக்காக விடுமுறை எடுத்திருந்தாள்.

நாம் சந்திக்கும் இந்த நிமிடம் 2050 ஆம் ஆண்டின் மெகா ஹிட்டான ஸ்ரேவானின் அல்டிமேட் இசையை மைக்ரோ டிஜிட்டல் துல்லியத்தில் கேட்டுக்கொண்டிருந்தாள். இன்னும் சற்று நேரத்தில் அவளது தாத்தாவை தலைநகரின் மைய மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திலிருந்து கூட்டிக்கொண்டு வர கிளம்பவேண்டும். 20 வருடங்களுக்கு முன் தன் ஐம்பதாவது வயதில் தன் உடலைப் பாதுகாக்க அந்த ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைத்திருந்தார்.

2030ஆம் ஆண்டு மருத்துவத்துறையில் ஏற்பட்ட மகத்தான புரட்சி இது. வளர்ந்துவிட்ட எதிர்கால உலகில் மீண்டும் பிறந்து நிறையநாள் வாழ விருப்பமுள்ளவர்களை உயிருடன் உறையச் செய்து மீண்டும் அவர்கள் விரும்பும் வருடம் உயிர்ப்பித்துக்கொடுக்கும் சாத்தியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மிக அதிகப் பொருட்செலவு ஏற்படும் காரியம் என்பதால் மிகப்பெரிய பணக்காரர்களே அதை செய்ய முடிந்தது.அப்படி தன் உடலை பாதுகாத்தவர்களில் ஒருவர்தான் லஷியின் தாத்தா. 20 வருடம் கழித்து அதே ஐம்பது வயதானவராய் இன்று திரும்பப்போகிறார்.

தான் பார்த்தேயிராத தாத்தாவைப் பார்க்கும் ஆவலில் லஷி குதூகலமாயிருந்தாள்.

அக்னி
02-03-2009, 12:33 AM
வியப்பு... வியப்பு... வியப்பு...

நம் சிவா.ஜியின் எழுத்துக்களின் வளர்ச்சி, இத்தனை வேகமாக இருப்பது பெரும் இன்பம்.

மதிப்பிற்குரிய எழுத்தாளர் சுஜாதா அவர்களின் புதுக் கதையோ என எண்ணும் வகையில் விரிகின்றது கதைக் கம்பளம்.

நடந்து வர நான் தயாராகிவிட்டேன்.

நடப்பதால் நான் பெருமை கொள்கின்றேன்.

கதையப்பற்றி அடுத்ததாகப் பதிவிடுகின்றேன்.

சிவா.ஜிக்குப் பாராட்டுக்களும்.., மென்மேலும் சிறப்புற வாழ்த்துகளும்...

தாமரை
02-03-2009, 01:16 AM
அக்னி, பாராட்டறீங்களா? இல்லை வாரரீங்களா?

தாமரை
02-03-2009, 01:29 AM
விஞ்ஞானக் கதைகளின் அடிப்படையே விவரணங்கள்தான்.

கயிறளவு கதைக்கு கிணறளவு விஷயங்கள் சொல்ல வேண்டும்..

அறிவியல் நவீன வாசகனை திருப்தி படுத்துவது மிக மிக கடினம்... காரணம் கதைகளை ஆரம்ப பிரம்மாண்டத்தில் இருந்து இறுதி வரை மலைப்பு நீங்காமல் அடுத்தடுத்து அடுக்கிக் கொண்டே போகவேண்டி இருக்கும்...

உதாரணமா, 2010 ல இர்ந்து 2040 போவதற்குள் வளர்ச்சியின் வேகம் பாருங்க.. 1010 லிருந்து 2010 வரை அதாவது ஆயிரம் ஆண்டு வளர்ச்சி 40 வருடங்களில் காட்டறீங்க...

போகப் போக மாற்றத்தின் வேகம் அதிகரிக்கும் என்பது இயற்கை தத்துவம். அதனால் நீங்கள் எடுத்துகிட்டிருக்கும் களத்தில நாளுக்கு நாள் மாற்றங்கள் இருக்கும்... அதை எப்படி கையாளுகிறீர்கள் என்பதில்தான் உங்களின் திறமையும் கதையின் உயிர்ப்பும் இருக்கும்...

40 வருஷத்தில இவ்வளவு வளர்ச்ச்சி காட்டினா இவ்வளவு கஷ்டம் இருக்கும்னு தெரியாம போச்சே அப்படின்னு புலம்பாம, சமர்த்தா படிக்கறவங்க வாய்க்குள்ள ஈ போய் வர்ரது அவங்களுக்கு தெரியாத அளவு சுவாரஷ்யமா கதை சொல்வீங்களாம்.

அன்புரசிகன்
02-03-2009, 02:00 AM
மண்டை விறைக்குது... தாமரை அண்ணா சொன்னமாதிரி வாய்க்குள் ஈ போகாதது தான் குறை. அதுக்குள்ள முடிச்சிடுங்க... :D

ரங்கராஜன்
02-03-2009, 04:46 AM
நல்லா இருக்கு சிவா அண்ணா, அனைவரும் தங்களின் கருத்தை சொல்லும் பொழுது, நானும் என்னுடைய கருத்தை சொல்கிறேன் அதுவும் நீங்கள் என்பதால் (தப்பாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்பதால்).

விஞ்ஞான கதைகள் தாமரை அண்ணா சொல்வது போல வாசகர்களை திருப்திபடுத்துவது கடினம். காரணங்கள்

1. இதை படிப்பவர்களுக்கு அறிவியல் ஆர்வம் இருக்க வேண்டும், முக்கியமாக சொல்பவர்களுக்கு.

2. படிப்பவர்களுக்கு கற்பனை திறன் இருக்க வேண்டும்.

3. அறிவியலின் அற்புதங்களை இப்பொழுது வரும் ஆங்கில படங்களின் வழியாக நிறைய நிறைய பார்த்து விட்டோம்.

4. அசாத்தியமான விஷயங்கள் எல்லாம் அசால்டாக அறிவியல் கதைகளில் நடந்து விடும், பிரமிப்பு குறைந்து விடும்.

5. அறிவியல் கதைகளை எல்லாராலும் யூகித்து விடலாம்.

கவனிக்கப்பட வேண்டியவைகள்.

1. கதை யூகிக்க முடிந்தாலும், அதில் நகர்த்தப்படும் திரைகதையை யூகிப்பது கடினம். திரைக்கதையில் கவனம் செலுத்த வேண்டும், முக்கியமாக காட்சி விவரிப்பு.

2. அறிவியல் கதைகள் என்றாலே அசுர இயந்திரம், அனாவசிய உயிர் சேதம் என்று அலுத்த நமக்கு, வருங்காலத்தில் மனோதத்துவரீதியாக மனிதனின் மாற்றங்கள், பாசப்போராட்டம், கலாச்சார அழிவுகள், உருவாகப்போகும் சட்டதிட்டங்கள் பற்றி எழுதினீர்கள் என்றால் சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும், மற்ற விஞ்ஞான கதைகளில் இருந்தும் வித்தியாசப்படும்.

இந்த மாதிரி என் சிறு அறிவுக்கு தெரிந்தது கொஞ்சம். இவை எல்லாம் கலைந்து எழுதினால் விஞ்ஞான சிறுகதை வெற்றி பெரும்.

உங்களின் முதல் அத்தியாயம் அருமை சூப்பர், நான் மேலே சொன்ன எல்லா தகவல்களும் பொதுப்படையாக சொன்னது. அதுக்கு உங்க கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உங்களுடைய திரைக்கதை அபாரம், கொஞ்சம் மனோதத்துவரீதியாக இருந்தால் சுவாரஸ்யமாக இருக்கும், பின் வரும் பகுதிகளில் அவை இருக்கும் என்று நம்புகிறேன், நன்றி அண்ணா விஞ்ஞான கதைகள் எழுத தனி தைரியம் வேண்டும், அதற்காகவே உங்களுக்கு ஒரு பாராட்டுகள், சபாஷ்.

சிவா.ஜி
02-03-2009, 04:24 PM
தாமரை மற்றும் தக்ஸின் கருத்துக்கள் மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. அதிலும் தாமரை சொன்ன அந்த 1000 வருட வளர்ச்சி பிற்காலத்தில் பத்து வருட வளர்ச்சியாக இருக்கும் என்ற கருத்து மிக உண்மை. அதற்குத் தகுந்தாற்போல கதையில் விவரணங்கள் இருக்க வேண்டும். ஏனோதானோ என்று எழுதிவிட முடியாது.

அதனால்தான் என்னுடைய இந்தக் கதையை மெதுவாகத்தான் சொல்லப்போகிறேன். எனக்குள் விவாதித்துக்கொண்டு, தெரியாததைத் தெரிந்துகொண்டு எழுதப்போகிறேன். அதுமட்டுமல்லாமல் இதை நீண்ட தொடர்கதையாய் கொடுக்காமல் சொற்ப அத்தியாயங்களிலேயே முடித்துவிடுவேன். ஏனென்றால் இதைப் போன்ற கதைகளில் இது எனது முதல் முயற்சி. அதனால் அகலக்கால் வைக்காமல் கவனமாக இருக்க உத்தேசித்திருக்கிறேன்.

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.

அக்னி
02-03-2009, 08:38 PM
அக்னி, பாராட்டறீங்களா? இல்லை வாரரீங்களா?
அண்ணா என்ன இப்பிடிக் கேக்கறீங்க...

நிச்சயமாக எனது வியப்புத்தான்.
முதற்காரணம்,
இக்கதை எதிர்காலத்தை மையப்படுத்தித் தொடங்கியமையே...

சிவா.ஜி ஏற்கனவே தந்த தொடர்கதைகள், நிகழ்காலகட்டத்தை மையமாகக் கொண்டவை.
கதைக்குத் தேவைப்படும் நுட்பங்களைத் தெரிந்து பிரயோகிக்க வழிவகைகள் பரவலாக உள்ளன.

ஆனால்,
இந்த எதிர்காலத் தொடர் கதைக்கு, கற்பனாசக்தி அதிகம் தேவை.
அது சாத்தியப்படக்கூடிய கற்பனையாக வெளிப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
புரியத்தக்க வகையில் அமையவேண்டியது மிக அவசியம்.

அந்த வகையில், முதல் அத்தியாயம் என்னைப் பொறுத்தவரையில் சிறப்பாக அமைந்துள்ளது.

யுனைடெட் கண்ட்ரீஸ் ஆஃப் எர்த், பாக்கெட்டாப் போன்ற சொற்பிரயோகங்கள்,
ஸ்பேஸ் சிட்டி, டி.என்.ஏ திருத்தங்கள், உயிர் உறைவு போன்றவை,
வெகுவாகக் கவர்வதோடு, இயல்பாகவும் இயைபாகவும் உள்ளன.

இன்றைய பிரச்சினைகளையும், ஆராய்ச்சி முன்னெடுப்புக்களையும், இந்த எதிர்காலக்கதையில் நிகழ்வுகளாக்கிய திறன், பாராட்டுக்குரியது.

அடுத்த அத்தியாயத்தின் புதுமைகளுக்காகப் பொறுமையோடு காத்திருக்கின்றேன்.

இளசு
02-03-2009, 09:48 PM
பாராட்டுகள் சிவா..

திறனாய்வுப்புலி என் தம்பி அக்னி சொன்னதை வழிமொழிகிறேன் -

உலகம் ஒரே தேசம்.. 1000 மாடிகள்.. விண்வெளியில் கல்லூரிகள்/காட்டேஜ்..
அப்போதும் இசை, பெண் மீது ஈர்ப்பு, பெண்ணின் தற்காப்புணர்வு
என கலக்கலான அடித்தளம்..

20 ஆண்டுகள் உறைந்த தாத்தா முக்கிய திருப்பம் அளிப்பார் என நினைக்கிறேன்..

வாழ்த்துகள் சிவா.. சிறப்பாய் தொடர்ந்து முடிக்க!

சிவா.ஜி
02-03-2009, 10:59 PM
திறனாய்வுப்புலி அக்னிக்கும், ஊக்க டானிக் இளசுவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. தாமரை மற்றும் மூர்த்தியின் பின்னூட்டத்தால் சிறிது அச்சமேற்பட்டது என்னவோ உண்மைதான். அது சிறப்பாகக் கொடுக்கவேண்டுமே என்ற அச்சம். உங்களின் இந்த ஊக்கம் என்னை உற்சாகப்படுத்தியுள்ளது.

நிச்சயம் உங்களனைவருக்கும் பிடிக்கும் வகையில் இந்தக் கதையைத் தருவேனென்ற நம்பிக்கை இருக்கிறது.

மதி
02-03-2009, 11:52 PM
நேற்றே படிக்க மறந்துவிட்டேன். எடுத்த எல்லா கதைக் களத்திலேயும் அண்ணா கலக்குவார். அதே போல் இதிலேயும் அவர் கலக்குவார் என நம்புகிறேன்.

ஆரம்ப விவரணைகளே அசத்தல். கண்முன் காட்சிப்படுத்தும் வண்ணம் எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து வருகிறோம்.

samuthraselvam
03-03-2009, 04:34 AM
அறிவியல் கதை அபாரமாக இருக்கிறது..

ஒரு தலைப்பில் கதை சொல்ல வேண்டும் என்றால் அதைப் பற்றி முழுமையாக தெரிந்து இருக்க வேண்டும்.
ஆனால் படிப்பவர்களுக்கு அப்படி அல்ல..
கதைகளிலே என்னை மிகவும் கவர்த்த கதைகள் என்றாலே அது அறிவியல் + திகில் கதைகள்தான்.. ஆனால் அறிவியலில் இந்த அளவுக்கு ஒன்றுமே தெரியாது.. படிப்பதில் மிகவும் ஆர்வம். இது போன்ற கதைகளை படித்து என்னை போன்றவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

எப்படி உங்களால் மட்டும் எல்லா விதத்திலும் கலக்க முடிகிறது?
அதிகமாக சிந்திக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அது ஏன் என்று உங்களுக்கே தெரியும்..

வாழ்த்துக்கள் அண்ணா..

அமரன்
03-03-2009, 07:30 AM
உங்களை நினைத்து பெருமையும் பொறாமையும் அடைகிறேன் சிவா. எந்தக் களமானாலும் அசாத்தியதிறமையுடன் சிறப்பாக ஆடுகின்றீர்கள். இந்தக் களத்தை இன்னும் ஏன் தொடவில்லை என்று நினைத்ததுண்டு. தொட்டு விட்டீர்கள். நிச்சயம் துலங்கும். உங்கள் உழைப்பு, திறமை அப்படி.

இந்தக் கதையப் படிப்பதன் மூலம் எனக்கு கற்பனாசக்தி, அறிவியல் ஆர்வம் போன்றன அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

தாமரை
03-03-2009, 07:53 AM
எல்லோரும் ஏன் சிவாஜியை இப்படி இக்கட்டில் தள்ளறீங்க..

உங்க எதிர்பார்ப்புகள் உங்க மனசுக்குள்ளயே இருக்கட்டும். பாவம் அவரு..

யாராச்சும் எதிர்பார்ப்பைக் காட்டிட்டாங்கன்னா அதுக்காக இன்னும் ஓவரா யோசிக்க ஆரம்பிச்சிடுவாரு..

அப்புறம் பின் விளைவு என்னான்னு தெரியுமில்ல? (முன் விளைவு உண்டாக சான்ஸே இல்லை.)

அன்புரசிகன்
03-03-2009, 07:55 AM
யாராச்சும் எதிர்பார்ப்பைக் காட்டிட்டாங்கன்னா அதுக்காக இன்னும் ஓவரா யோசிக்க ஆரம்பிச்சிடுவாரு..

அப்புறம் பின் விள்வு என்னான்னு தெரியுமில்ல? (முன் விளைவு உண்டாக சான்ஸே இல்லை.)
பி்ன்விளைவுக்கு சான்ஸே இல்ல... இருந்தா தானே விளைவு வர. அங்க என்ன 8ம் பிறையே இருக்குது? இருப்பதே பௌர்ணமி. இதுக்கு மேல வளர மாட்டாது. ;)

அமரன்
03-03-2009, 08:00 AM
அப்புறம் பின் விளைவு என்னான்னு தெரியுமில்ல? (முன் விளைவு உண்டாக சான்ஸே இல்லை.)
ஹஹ்ஹா...
நேற்றும் யோசித்தேன் "சிங்கத்தின் பிடரியை சீப்பெடுத்து சீவுறியா" என்று சிவா பன்ஞ் டயலாக் பேசலாமா என்று. முடியும் என்று நிரூபணம் ஆகியுள்ளது.

தாமரை
03-03-2009, 08:39 AM
வியப்பு... வியப்பு... வியப்பு...

நம் சிவா.ஜியின் எழுத்துக்களின் வளர்ச்சி, இத்தனை வேகமாக இருப்பது பெரும் இன்பம்.

மதிப்பிற்குரிய எழுத்தாளர் சுஜாதா அவர்களின் புதுக் கதையோ என எண்ணும் வகையில் விரிகின்றது கதைக் கம்பளம்.

நடந்து வர நான் தயாராகிவிட்டேன்.

நடப்பதால் நான் பெருமை கொள்கின்றேன்.

கதையப்பற்றி அடுத்ததாகப் பதிவிடுகின்றேன்.

சிவா.ஜிக்குப் பாராட்டுக்களும்.., மென்மேலும் சிறப்புற வாழ்த்துகளும்...


எப்படி வாரறீங்க என்று படம் போட்டு விளக்கறேன்.

நம் சிவா.ஜியின் எழுத்துக்களின் வளர்ச்சி, இத்தனை வேகமாக இருப்பது பெரும் இன்பம்.

என்னவோ சிவா.ஜி த்டீர்னு ஒரு நல்ல கதை எழுதின மாதிரி சொல்றாரு பாருங்க.. சிவா.ஜி யின் எழுத்துக்கள் ஏற்கனவே நாம அண்ணாந்து ஆவென்று வாய்பிளந்து பார்க்கிற மாதிரி வளர்ந்தாச்சு அக்னி.. இது திடீர் வளர்ச்சியில்லை... :D :D :D


மதிப்பிற்குரிய எழுத்தாளர் சுஜாதா அவர்களின் புதுக் கதையோ என எண்ணும் வகையில் விரிகின்றது கதைக் கம்பளம்.

நடந்து வர நான் தயாராகிவிட்டேன்.

கதை பறக்கும் கம்பளமாம். இவர் கூடவே நடந்து வருவாராம். அதாவது கதை ரொம்ப ஸ்லோவா போகுதுன்னு சொல்றார்...

இப்ப சொல்லுங்க.. அக்னி பாராட்டினாரா?

ரங்கராஜன்
03-03-2009, 09:46 AM
ஆரம்பிச்சுட்டார் நம்ம தாமரை அண்ணா அவரின் வில்லத்தனங்களை............

செல்வா
03-03-2009, 11:10 AM
மதிப்பிற்குரிய எழுத்தாளர் சுஜாதா அவர்களின் புதுக் கதையோ என எண்ணும் வகையில் விரிகின்றது கதைக் கம்பளம்.

நடந்து வர நான் தயாராகிவிட்டேன்.

கதை பறக்கும் கம்பளமாம். இவர் கூடவே நடந்து வருவாராம். அதாவது கதை ரொம்ப ஸ்லோவா போகுதுன்னு சொல்றார்...

இப்ப சொல்லுங்க.. அக்னி பாராட்டினாரா?
விரிகின்றது என்பதை பறக்கின்றது என்று எப்படிப் பொருள் கொள்ள முடியும் அண்ணா..... சிறகு விரிக்கின்றது என்று சொல்லும் போது பறக்கின்றது என்று கொள்ளலாம்... கம்பளம் விரிகின்றது எனும் போது? பறக்கின்றது என்று எப்படிச் சொல்ல முடியும்.

அக்னி
03-03-2009, 11:12 AM
என்னே ஒரு வில்லத்தனம்... :sauer028::sauer028::sauer028:

செல்வரே இது நல்லாயில்ல... ஆனா, நல்லாயிருக்கே...

நான் கேட்க நினைத்ததை செல்வா கேட்டுட்டாரு... இதுக்கும் ஏதாச்சும் பதில் வச்சிருப்பீகளே...

தாமரை
03-03-2009, 11:30 AM
விரிகின்றது என்பதை பறக்கின்றது என்று எப்படிப் பொருள் கொள்ள முடியும் அண்ணா..... சிறகு விரிக்கின்றது என்று சொல்லும் போது பறக்கின்றது என்று கொள்ளலாம்... கம்பளம் விரிகின்றது எனும் போது? பறக்கின்றது என்று எப்படிச் சொல்ல முடியும்.

சாதாரணக் கம்பளத்தை யாராவது விரிக்கணும். ஆனால் இங்க கம்பள விரிகின்றது கதைக் கம்பளம் என்று சொல்லி இருக்கார். தானே விரிகிற கம்பளம் என்ன கம்பளம்? மாயக்கம்பளம்தானே.. எனக்குத் தெரிஞ்ச மாயக்கம்பளம் பறக்கும் கம்பளம்தான். (ஒரு ஒற்றெழுத்தில கூட இப்படி பிசைவமில்ல)

கதைக் கம்பளம் விரிந்தால் ஒண்ணு அதில இவர் உட்காரணும் இல்லைன்னா சும்மா இருக்கணும். இவர் என்ன சொல்றார்?

நடந்து வர நான் தயாராகிவிட்டேன்.

அப்படி என்கிறார். உடன் வர நான் தயாராகி விட்டேன் என்று சொல்லி இருக்கலாம். நடந்து வர என்றால்?

கதைக்கம்பளம் ஒரு இடத்தில் மட்டும் இருக்கிறது என்றால் இவர் நடக்க வேண்டிய அவசியம் என்ன? அதனால கதை கம்பளம் நகருகிறது என தெளிவா தெரியுது.

பொதுவா கதையின் வேகத்தில் நானும் உடன் வருகிறேன்னு தான் சொல்வாங்க...

நான் நடந்து வருகிறேன் என்றால் நான் மெதுவா படிச்சுக்கிறேன் நீங்க பாட்டுக்கு எழுதுங்க என்று எடுத்துக் கொள்வதா அல்லது...

நான் நடந்தே உங்க கூட வருகிறேன் என்று எடுத்துக் கொள்வதா?

அங்க என்னன்னா சிவா.ஜி 180 கி.மீ தூரம் போக 1 நிமிஷம் ஆகுதே, வேற வண்டி வாங்கணும்னு கதையில எழுதறார். இவர் நான் கதை கூடவே நடந்து வர்ரேங்கறார்.. குசும்புதானே

நடப்பதால் நான் பெருமை கொள்கிறேன். என்று வேற சொல்றார்.

உங்கள் கதைக் கம்பளத்தில் அமர்ந்து விண்ணில் பறக்க விரும்புகிறேன் என்றுதான் நார்மலா மக்கள் சொல்வாங்க.. கதை நம்மை வெவ்வேறு காலங்களுக்கு, உலகங்களுக்கு சுமந்து சொல்கிறது என்பதுதான் உண்மையும் கூட,

ஆனால் கம்பளம் விரிஞ்சா விரியட்டும் நான் நடந்து வர்ரதைத்தான் பெருமையா நினைக்கிறேன் என்றால்.?

கதைக் கம்பளம் யாருக்காக விரிகிறது?

இன்னும் சந்தேகம் கேட்டா டோட்டல் டேமேஜ்தான் :D:D:D:D

சிவா.ஜி
03-03-2009, 01:57 PM
அட ஆண்டவா...தாமரைக்கிட்ட மாட்டியாச்சா. ம்..நடக்கட்டும்.

அறிஞர்
03-03-2009, 02:43 PM
வாழ்த்துக்கள் சிவா.ஜி.
வித்தியாசமான கருத்தை கையில் எடுத்துள்ளீர்கள்..
தாமரை, தக்ஸ் கையில் மாட்டுவதை எளிதாக எடுத்து பயணப்படுங்கள்.
சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
03-03-2009, 04:07 PM
மதி, அமரன் மற்றும் தங்கை லீலுமா அனைவருக்கும் என்னுடன் பயணித்து வருவதற்காக மனமார்ந்த நன்றிகள்.

அமரன் நானும் இதன் மூலமாக இன்னும் கற்றுக்கொள்ளவே விரும்புகிறேன். முதல் முயற்சிக்கு உங்கள் ஆதரவு எனக்கு ஊக்கமளிக்கிறது.

சிவா.ஜி
03-03-2009, 06:13 PM
அத்தியாயம்-2

அந்த அறை தலைநகரத்திலிருந்த மைய மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் இரண்டாவது தளத்தில் இருந்தது. சற்றே அதிகக் குளிரூட்டப்படிருந்தது. அறையின் மத்தியில் இருந்த படுக்கையில் லஷியின் தாத்தா படுத்திருந்தார். அவரைச் சுற்றி மருத்துவர்கள் நின்றிருந்தார்கள். தாத்தாவின் தலையிலிருந்தும், இதயத்தின் மேற்புறமிருந்தும் ஃபைபர் ஆப்டிக் கம்பிகள் அவருக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு சாதனங்களுடன் இணைக்கப்பட்டிருந்தது.

20 வருடங்களுக்கு முன் தன் உடலை ஒப்படைக்க வந்த தாத்தா....இன்னும் என்ன தாத்தா...விஸ்வநாதன் என்ற அழகான பெயரையே பயன்படுத்தலாம். சரி...ஒப்படைக்க வந்த விஸ்வநாதனை மயக்கதிலாழ்த்தி, அவரது மூளையின் நியூரான்களோடு மெல்லிய கம்பிகளை இணைத்து அவரது அந்த நேரத்து நேனோசெகண்டின் நினைவுகளை பதிந்திருந்தார்கள். பின்னர் அவரது மூளையை உறக்க நிலைக்கு கொண்டு போயிருந்தார்கள்.

தற்சமயம், அந்தப் பதியப்பட்ட நினைவுகளுடன் மிக மிக குறைந்த மின்சாரத்தையும் அதே நியூரான்களில் செலுத்தி நிரடியதும், மூளை தன் இருபது வருட உறக்கத்தைக் கலைத்துக்கொண்டு சோம்பல் முறித்தது. சற்று நேரத்தில் அனைத்து நியுரான்களும் விழித்துக்கொள்ள, அங்கிருந்து ஒரு கட்டளை இதயத்துக்குச் சென்றது. அந்தக்கட்டளைக்குக் கீழ் படிந்து ஆகட்டும் எஜமானரே என தன் ரத்த உந்து செயலை தொடங்கியது இதயம். இந்த செயலைத் தொடங்குமுன் மருத்துவர்கள் விஸ்வநாதனின் உடலை சாதாரண மனித உடலின் வெட்பத்துக்கு மாற்றியிருந்ததால் இரத்தம் உறைநிலையிலிருந்து ஓடும் நிலைக்கு வந்துவிட்டிருந்தது.

ஆரம்பத்தில் ஒரு லப்புக்கும், அடுத்த டப்புக்கும் இடைவெளி அதிகமாக இருந்தது. போகப்போக சீரான உந்துதல் ஆரம்பித்ததும் உடலெங்கும் புது ரத்தம் பாய்ந்தது.(முதன்முதலில் காதல் வயப்படும்போது பாயுமே அப்படி) மெள்ள விரல்களில் அசைவுகள் தோன்றின. கண்கள் உள்ளுக்குள் உருளத்தொடங்கின. உதடு பழையகாலத்து சினிமாக்கதாநாயகிகளைப்போல அசையத்தொடங்கியது. இதயத்துடிப்பை அளக்கும் கருவியின் திரையில் எண்ணிக்கைகள் கூடிக்கொண்டிருந்தன. 72-ஐ எட்டியதும் வலதுகை மெல்ல மேலுயர்ந்தது.

திரையையே பார்த்துக்கொண்டிருந்த மருத்துவர்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டார்கள்...ஆனால் அது நிலைக்கவில்லை. எண்ணிக்கை 72-ஐ தாண்டிப்போய்க்கொண்டிருந்தது. 74...75...76....77...82-ஐ எட்டியதும் விபரீதமுணர்ந்து உடனடியாக அந்த ஊசியை அவரது கையின் ரத்த நாளங்களில் குத்தி மருந்தை செலுத்தினர். சற்று நேரத்துக்கெல்லாம்...82....81...80.......72ல் வந்து நின்றது. அனைவரும் ஆசுவாசமானார்கள். விஸ்வநாதன் கண்திறக்க காத்திருந்தார்கள்.

அவர் கண் திறப்பதற்குள் அந்த அறையை ஒட்டியிருந்த மற்றொரு அறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு வருவோம். அதை அறை என்று சொல்ல முடியாது. நீண்ட கூடம். மூன்று வரிசைகளாக கண்ணாடிப் பெட்டிகள் ஒரு வரிசைக்கு 20 என்ற கணக்கில் வைக்கப்பட்டிருந்தது. அறை மைனஸ் டிகிரியில் வெடவெடத்தது. ஒவ்வொரு உடலிலிருந்தும் வெளிவந்த மெல்லிய கம்பிகள் அந்தக்கூடத்தின் மூலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு மின்னணு சாதனத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.

அங்கிருந்த உடல்கள் அனைத்தும் விஸ்வநாதனைப்போல எழுப்பப்படுவதற்காகக் காத்துக்கொண்டிருந்தன. அவற்றின் மேலேயே அவை எழுப்பப்படவேண்டிய வருடம் குறிக்கப்பட்டிருந்தது. அவற்றில் இந்த வருடம் எழுப்படப்போகும் உடல்கள் நான்கு. அந்த நான்கில் இரண்டு உடல்களைப்பற்றி நமக்குக் கவலையில்லை. மற்ற இரண்டு உடல்கள்தான் நான்காவது அத்தியாயத்தில் ஏற்படப்போகும் பிரச்சனைக்கு காரணமாய் இருக்கப்போகிறவை.தற்சமயம் அவை உறைந்தே இருக்கட்டும். விஸ்வநாதன் கண்விழித்துவிட்டார்.

தலையில் ஒரு காதிலிருந்து அடுத்த காதுவரை அரை வட்டக் கோடு போட்டு அதற்குள் இருந்தவற்றை காலம் களைந்துவிட்டிருந்தது.மெள்ள படுக்கையில் எழுந்து அமர்ந்தார். லேசான தடுமாற்றம் தெரிந்தது.

மருத்துவர்கள் கேட்ட,

‘மிஸ்டர் விஸ்வநாதன் உங்களால் எங்களைப் பார்க்க முடிகிறதா? சுற்றி நடப்பதை உணர முடிகிறதா?”

என்ற கேள்விக்கு, பலவீனமானக் குரலில்,

“முடிகிறது”

என்று சொன்னவரின் குரலில் நடுக்கம் இருந்தது.

மருத்துவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கைகுலுக்கிக்கொண்டார்கள். ஏற்கனவே சோதனைகளில் வெற்றி பெற்றிருந்தாலும், வியாபார ரீதியாக உறையவைக்கப்பட்டவர்களில் இவர்தான் முதலாய் எழுப்பப்பட்டவர் என்பதால் அவர்களுக்கு தேர்வில் தேர்வாகிவிட்டதைப்போன்ற சந்தோஷம். அடுத்து விஸ்வநாதனை சில சோதனைகள் செய்து, தடுப்பூசிகள் போட்டு, கனத்த ஆடைகளால் பொதிந்து வெளியேக் கொண்டு வந்தார்கள்.

லஷியும் அவளின் பெற்றோரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார்கள். லஷியின் அப்பா மிக ஆர்வமாக இருந்தார்.விஸ்வநாதன் உறையும்போது இவருக்கு 26 வயது, அப்பாவுக்கு 50 வயது. ஆனால் இப்போது இவருக்கு 46 அப்பாவுக்கோ அதே 50. த்ரில்லாக இருந்தது.

கண்களில் கறுப்புக்கண்னாடி அணிந்து, வெள்ளையுடை அணிந்த மருத்துவர்கள் குழு புடை சூழ விஸ்வநாதன் நடந்து வருவதைப் பார்த்தால் அந்தக்கால அரசியல்வாதியின் நடைப்பயணம் போல இருந்தது. லஷி பரபரப்பானாள். அவளுடைய பெற்றோரும் உடலில் ஒரு பரவசத்துடனிருந்தனர். லஷியின் அப்பா ராகவன் தன் தந்தை தன்னை நெருங்குவதற்குள் ஆர்வம் தாங்காமல் ஒரு குழந்தையைப்போல ஓடிச்சென்று விஸ்வநாதனின் கைகளைப் பிடிக்க முயன்றார்.மருத்துவர்கள் அவரை தடை செய்தனர்.

“அவரைத் தொடவேண்டாம். அவருக்கான பிரத்தியேக வாகனம் வாசலில் காத்துக்கொண்டிருக்கிறது. அவருடன் எங்கள் குழுவிலிருந்து சிலர் வந்து உங்கள் வீட்டில் சில ஏற்பாடுகளை செய்துவிட்ட பிறகு அவருடன் பழகலாம். இப்போதைக்கு பேசலாம்”

என்றதும்,

“அப்பா”

என்றார்.

“ராகவா”

என பெரியவர் சொன்னதும் அந்தக் குரல் மாற்றத்தை ராகவன் உணர்ந்தார். அவர் முக மாற்றம் கண்ட தலைமை மருத்துவர்,

“ டோண்ட் வொர்ரி. இன்னும் சில நாட்களில் அவரின் பழையக் குரலில் பேசுவார்.”

என்றார். அதற்குள்,

“தாத்தா”

“மாமா”

என்று அழைத்த தன் பேத்தியையும் மருமகளையும் பார்த்த விஸ்வநாதனின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கின.

“உங்க பேத்திப்பா...லஷி”

ராகவன் சொன்னதும், அவளைத் தொடப்போனவரையும் தடுத்து வாகனத்துக்கு கூட்டிக்கொண்டு போனார்கள்.

ராகவன் குடும்பமும் பின்தொடர்ந்தது.


கல்லூரி விட்டு வந்த ரேவாவும், ஷாபோவும் வீட்டுக்கு வராமல் தன் நண்பனான மிலாவைக்கூட்டிக்கொண்டு, தலைநகரத்திலிருந்து சற்றுத் தள்ளி 6000 கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஒரு சிற்றூருக்குப் போனார்கள்.

அங்கு மிலாவின் வயது முதிர்ந்த தாத்தா தன் பண்ணைவீட்டில் தனியாய் வசிக்கிறார். எப்போதும் இயற்கை உணவையே உண்டுவந்ததால் 90 வயதிலும் ஆரோக்கியமாக இருந்தார். அவரை சந்திப்பது இவர்களுக்கு மிக சந்தோஷம். அவரது வீட்டில் அவரால் சேகரிக்கப்பட்ட பழைய குறுந்தகடுகளும், புத்தகங்களும் இருந்தன. அவற்றைப் பார்த்து தாங்கள் வாழும் இந்த புத்தம்புது பூமியின் பழைய வரலாறை அறிந்து கொள்வதில் அத்தனை ஆர்வம் அவர்களுக்கு.தனது வானூர்தியை அநாயசமாக ஓட்டிக்கொண்டு வந்த ரேவா,

“மிலா...உன் தாத்தாவிடம் சொல்லிவிட்டாயல்லவா நம் வருகையைப் பற்றி.”

“அப்போதே அவருடைய கணினிக்கு செய்தி அனுப்பிவிட்டேன். அது அவர் பண்ணையில் எங்கிருந்தாலும் தனது ஏவலாளான மிக்கி ரோபோவை அனுப்பி தெரிவித்துவிடும். படு ஸ்மார்ட்...ஆனாலும் நிறைய அதட்டுகிறது”

“அதட்டாமல் பின்னே என்ன செய்யும். ஒவ்வொருமுறையும் நீ வாங்கிக்கொண்டு போகும் செயற்கை திண்பண்டங்களை தாத்தாவுக்கு கொடுத்து சாப்பிடச் சொல்லி அன்பாய் வற்புறுத்துகிறாயே. அவரது நலனில் அக்கறைக் காட்டும் அந்தக் கணினி அதட்டாமல் என்ன செய்யும்”

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கீழே அந்த வீடு தென்படத்தொடங்கியது. சுற்றிலும் மரங்களுடன் அழகான வீடு. இப்படி ஒரே ஆளுக்கு இவ்வளவு இடத்துடன் வீடு வைத்துக்கொள்ளும் உரிமையை ஒரு சிலருக்கே அரசாங்கம் அளித்திருந்தது. மிலாவின் தாத்தா அந்தக்காலத்திலேயே ராணுவத்தில் பெரிய பதவியில் இருந்தவர், இப்போதும் இந்த அரசாங்கத்துக்கு ஏதேனும் ஆலோசனை தேவைப்பட்டால் இவரிடம்தான் அதிகாரிகள் வருவார்கள்.

தரையிறங்கிய வானூர்தியிலிருந்து வெளிப்பட்டு வந்த மூவரையும் வரவேற்க தாத்தா முன்னாள் கர்னல் தொரப்பா காத்துக்கொண்டிருந்தார் கவலையுடன்.

தொடரும்

சிவா.ஜி
03-03-2009, 06:15 PM
வாழ்த்துக்கள் சிவா.ஜி.
வித்தியாசமான கருத்தை கையில் எடுத்துள்ளீர்கள்..
தாமரை, தக்ஸ் கையில் மாட்டுவதை எளிதாக எடுத்து பயணப்படுங்கள்.
சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி அறிஞர். உங்களின் ஊக்கம் எனக்கு உற்சாகத்தையளிக்கிறது.

subashinii
03-03-2009, 07:38 PM
அறிவியல் கதைகள் என்றாலே தனி ஆர்வமுண்டு.. அழகாக எழுதுகிறீர்கள்.. சிவாஜி அண்ணா... வாழ்த்துக்கள்.

அறிஞர்
03-03-2009, 07:47 PM
போகப்போக சீரான உந்துதல் ஆரம்பித்ததும் உடலெங்கும் புது ரத்தம் பாய்ந்தது.(முதன்முதலில் காதல் வயப்படும்போது பாயுமே அப்படி) மெள்ள விரல்களில் அசைவுகள் தோன்றின. கண்கள் உள்ளுக்குள் உருளத்தொடங்கின. உதடு பழையகாலத்து சினிமாக்கதாநாயகிகளைப்போல அசையத்தொடங்கியது.

இப்போது இவருக்கு 46 அப்பாவுக்கோ அதே 50. த்ரில்லாக இருந்தது.


அங்கு மிலாவின் வயது முதிர்ந்த தாத்தா தன் பண்ணைவீட்டில் தனியாய் வசிக்கிறார். எப்போதும் இயற்கை உணவையே உண்டுவந்ததால் 90 வயதிலும் ஆரோக்கியமாக இருந்தார்.

“அதட்டாமல் பின்னே என்ன செய்யும். ஒவ்வொருமுறையும் நீ வாங்கிக்கொண்டு போகும் செயற்கை திண்பண்டங்களை தாத்தாவுக்கு கொடுத்து சாப்பிடச் சொல்லி அன்பாய் வற்புறுத்துகிறாயே. அவரது நலனில் அக்கறைக் காட்டும் அந்தக் கணினி அதட்டாமல் என்ன செய்யும்”
தொடரும்
கலக்குறீங்க.. சிவா.ஜி.
ஒருபக்கம் காதல் இரத்தம், சினிமா நாயகிகள்; அப்பாக்கு 50 பையனுக்கு 46.
மற்றொரு பக்கம் இயற்கை உணவு உண்ணும் தாத்தா..
நவரச கலவை போன்று.. எல்லா ரகமும் கொடுத்து கலக்குகிறீர்கள்.

சிவா.ஜி
03-03-2009, 09:22 PM
அறிவியல் கதைகள் என்றாலே தனி ஆர்வமுண்டு.. அழகாக எழுதுகிறீர்கள்.. சிவாஜி அண்ணா... வாழ்த்துக்கள்.

உங்கள் ஆர்வத்தை குறைக்காமல் எழுத முயற்சிக்கிறேன் தங்கையே. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிம்மா.

சிவா.ஜி
03-03-2009, 09:24 PM
கலக்குறீங்க.. சிவா.ஜி.
ஒருபக்கம் காதல் இரத்தம், சினிமா நாயகிகள்; அப்பாக்கு 50 பையனுக்கு 46.
மற்றொரு பக்கம் இயற்கை உணவு உண்ணும் தாத்தா..
நவரச கலவை போன்று.. எல்லா ரகமும் கொடுத்து கலக்குகிறீர்கள்.

உங்கள் ஊக்கத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அறிஞர். மனமார்ந்த நன்றி.

சிவா.ஜி
07-03-2009, 06:18 PM
அத்தியாயம்-3


வீட்டுக்கு கூட்டிக்கொண்டுவரப்பட்ட விஸ்வநாதன் தனியறையில் படுக்கவைக்கப்பட்டார். அடுத்த நாற்பத்தியெட்டு மணிநேரத்துக்கு அவரைக் கண்கானிப்பது அவசியமென்று சொன்ன மருத்துவர் குழு அந்த அறையில் நான்கு மூலைகளிலும் துல்லியமான படத்தை அளிக்கும் கேமராக்களை பொருத்தினார்கள். அவருக்கு ஏதாவது மாற்றமேற்பட்டாலோ, அவஸ்தை உண்டானாலோ உடனுக்குடன் மருத்துவமனையில் தெரியுமாறு அவை அமைக்கப்பட்டன. அவரது உடலில் இணைக்கப்பட்ட மின் கம்பிகளின் வழியாக உடல் மாற்றங்களை கண்கானிக்கும் கருவி பொருத்தப்பட்டு, அதுவும் மருத்துவமனையுடன் நேரடி தொடர்பு கொள்ளுமாறு வசதிகள் செய்யப்பட்டன.

இவையெல்லாம் செய்யப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் லஷி தன் அம்மாவிடம் தாத்தாவைபற்றி தொணதொணவென்று கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“ஏம்மா தாத்தாவின் தலை வித்தியாசமாக இருக்கிறது?”

“அதுக்குப் பேர் வழுக்கை. உங்க தலைமுறைக்கு அது தெரியாது. 20 வருடங்களுக்கு முன்புவரை உலக அளவில் தீர்க்கமுடியாத பிரச்சனையாக இருந்தது. இப்போதுதான் நவீன மருத்துவம் தலைமுடி உதிர்தலை இல்லாமலேயே செய்துவிட்டதே.”

அந்த தொணதொணப்பில் பதில் கிடைத்தது இந்தக் கேள்விக்கு மட்டும் தான். மற்ற கேள்விகளுக்கெல்லாம் லஷியின் அம்மா...

“தாத்தாக்கிட்டயே கேட்டுக்கோ உன் கேள்விகளை...என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்”

என்று சொல்லிவிட்டார்.

வெளியில் வந்த மருத்துவக்குழுவின் தலைமை மருத்துவர்,

“மிஸ்டர் ராகவன், உங்கள் தந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். ஆனால் 20 வருடகால உறைநிலையால் சற்றே பலகீனமாக இருக்கிறார். இன்னும் இரண்டு நாட்களில் சாதாரண நிலைக்கு வந்துவிடுவார். நீங்கள் ஆர்வக்கோளாறில் அவருக்கு இந்த 20 வருட நிகழ்வுகளை ஒரேயடியாய் சொல்லி அவரது மூளைக்கு பாரத்தை ஏற்றிவிடாதீர்கள். நீங்கள் போய் பார்க்கலாம். நாங்கள் கிளம்புகிறோம். மருத்துவ மனையிலிருந்து இங்கு கொண்டுவந்ததற்கான மற்றும் எல்லா ஏற்பாடுகளுக்கான கட்டணங்களை எங்கள் மருத்துவமனை அக்கவுண்டுக்கு உடனடியாக செலுத்திவிடுங்கள்”

அவர்கள் போனதும் மூவரும் உள்ளே போனார்கள்.

அனைவரையும் பார்த்த விஸ்வநாதனுக்கு மீண்டும் கண்கள் கலங்கின. ஆசையோடு பேத்தியின் கைகளைப் பிடித்துக்கொண்டார். லஷியைப் பார்த்து,

“லஷி தானே உன் பெயர்?”

“ஆமா தாத்தா”

“ராகவா...உன் மகளை நல்லபடியாக வளர்த்திருக்கிறாய். அறிவியலில் இந்த பூமி எத்தனையோ உயரங்களைத் தொட்டுவிட்டது. பார்...20 வருடங்களாக ஒரு உயிரை உறையவைத்து மீண்டும் எழுப்பி உங்கள் முன் நிறுத்தியிருக்கிறது. ஆனாலும் குடும்பம், உறவுகள் என்று எதுவும் மாறவில்லையே....சந்தோஷமாக இருக்கிறது”

“அப்பா...நீங்கள் சொன்னவை அனைத்தும் நீங்கள் உறைநிலைக்குப்போனபிறகு வந்த பத்துவருடங்களில் மிக மோசமான நிலைக்குப் போய்விட்டிருந்தது...” சொல்லிக்கொண்டிருந்த ராகவனை இடைமறித்து, லஷி,

“எங்கள் புத்தம் புது பூமி உருவான பிறகு, தலைமை அரசாங்கத்தின் கொள்கைகளில் மிக முக்கியமானது மக்களிடையே பாசவுணர்வுகளைப் பெருக்க வேண்டுமென்பதுதான். அதற்காக அரசாங்கமே பல குழுக்களை அமைத்து அனைவருக்கும் ஆலோசனை அளித்தார்கள். அரசாங்கத்தின் இயல் இசை பிரிவினர் பாசத்தையும், அன்பையும், மனிதநேயத்தையும் காட்டும் பல நிகழ்ச்சிகளை உலகமெங்கும் தொடர்ந்து நடத்திக்காட்டினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் பாடத்திட்டத்திலேயே இவற்றைப்பற்றி சிறப்பு பாடங்கள் உள்ளன. அதில் தேர்வாகாதவர்கள் மேற்கொண்டு படிக்க இயலாது”


விஸ்வநாதன் ஆச்சர்யத்துடனும் ஆனந்தத்துடனும் பேத்தி சொல்வதைக் கேட்டார். மகனைக் கட்டி அணைத்துக்கொண்டார். காலில் விழுந்து ஆசி வாங்கிய மருமகளை அன்போடு பார்த்தார்.



தொரப்பாவின் கவலையான முகத்தைப் பார்த்ததும் மூன்று பேருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.மிலா

“என்ன தாத்தா...ஏன் கவலையாக இருக்கிறீர்கள்?”

ரேவாவும், ஷாபோவும் கூட இதையேக் கேட்டதும், அவர்களை தன் பின்னால் வருமாறு சைகைக் காட்டிவிட்டு அவரது பிரத்தியேக அறைக்குள் நுழைந்தார். நுழைந்தவர் மேசையின் மேலிருந்த அந்த குறுந்தட்டு இயக்கும் சாதனத்தைக் காட்டி,

“இன்று காலையிலிருந்து இது வேலை செய்யவில்லை. நீங்களெல்லாம் மிக ஆவலாக வருவீர்களே எப்படி உங்களால் அந்த குறுந்தட்டிலிருக்கும் படங்களைப் பார்க்கமுடியுமென்ற கவலைதான்”

ஷாபோ,

“ஹ..இதற்கா கவலைபடுகிறீர்கள். இதோ ஒரு நொடியில் சரிபண்ணிவிடுகிறேன்”

என்றதும்,

“இது உங்கள் தலைமுறை நவீன சாதனம் இல்லை ஷாபோ...அந்தக்காலத்து ஜப்பான் சாதனம். இதற்கு எந்த மாற்று பொருள்களும் இப்போது கிடைக்காது. என்னிடமுள்ள குறுந்தகடுகளோ இப்போதுள்ள நவீன சாதனங்களில் இயங்காது என்ன செய்வது”

“அதற்குத்தான் அப்போதே சொன்னேன். இவற்றையெல்லாம் இந்த மாஸ் ஸ்டோரேஜ் டிஸ்க்கில் மாற்றிவிடலாமென்று. நீங்கள்தான் அது...என்னவோ அன்று ஒரு படத்தில் காட்டினீர்களே....ஹாங்....எஸ் அந்த கறுப்புத்தட்டுபோல இருக்கும் இசைத்தட்டு...அதில் கேட்டால்தான் இசையை ரசிக்கமுடிகிறது என்று அந்தப் படத்தில் ஒருவர் சொல்லுவாரே அதே போல நேரடியாக இந்தக் குறுந்தகட்டை இயக்கிப் பார்த்தால்தான் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டீர்கள்..சரி விடுங்கள். நம்மக் கணினி எதற்கு இருக்கிறது அதைக் கேட்டுவிடுவோம்”

என்று சொன்ன மிலா கணினிக்கு முன்னால் சென்று அமர்ந்து விசைப்பலகையைத் தட்டினான். கட்டளைகள் கிடைத்ததும், அது வலையைத்தேடி அந்த சாதனத்துக்கான வரைபடத்தை எடுத்துக்கொடுத்தது. மூவரும் அதைப் பிரித்து பழுதைக் களைந்து மீண்டும் இயக்க...இயங்கியது.

தாத்தா...சந்தோஷமாக சிரித்தார்.

அன்று அவர்கள் பார்த்த யுத்தக் காட்சிகள் அவர்களை மிகக் கஷ்டப்படுத்திவிட்டது.

“ஏன் தாத்தா...இப்படி இருந்திருக்கிறார்கள்? இத்தனை லட்சம் மக்களைக்கொன்று என்ன சாதித்துவிட்டார்கள்? அதனால்தான் நமது இந்த பூமியில் யுத்தமே இல்லை.”

என்ற ரேவாவைப் பார்த்து,

“நானும் ராணுவத்திலிருந்து இப்படிப்பட்ட அழிவுகளைச் செய்தவன்தான். இப்போது நினைக்கும் போது அது என்னை உறுத்துகிறது. ஆனால் சில நாட்டின் தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் எந்த உறுத்தலுமில்லாமல் அப்பாவி பொதுமக்களைக் தங்களின் தனிப்பட்ட வெறியால் கொன்று குவித்தார்கள்.”

“ச்சே எப்படிப்பட்ட அரக்கர்கள் அவர்கள். நல்லவேளை அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்.”

என்ற ஷாபோவிடம்,

“இல்லை ஷாபோ...அவர்களில் மிகக்கொடுமையானவர்களான இரண்டு பேர் தங்கள் உடல்களை உறையவைத்துள்ளார்கள். இந்த வருடம் அவர்களை எழுப்பப்போவதாக அரசாங்க அதிகாரிகள் எனக்குத் தெரிவித்தார்கள். அவர்களை நினைத்தால் எனக்கு மிகக்கவலையாக இருக்கிறது”

“ அய்யோ...அப்படியா தாத்தா...நீங்கள் கவலைப் படுமளவுக்கு அவர்கள் என்ன செய்வார்கள்?”

“மிலா...அவர்கள் ரத்தவெறிபிடித்தவர்கள். அவர்கள் உடல்கள் உறையவைக்கப்பட்டபோது உலகமெங்கும் போராக இருந்தது. அதில் இந்த இருவருக்கும் பெரும்பங்கு இருந்தது. இப்போது மீண்டும் வந்துவிட்டால்....நினைக்கவே அச்சமாக இருக்கிறது. எந்த தந்திரமாவது செய்து அரசாங்கத்தை தங்கள் வசமாக்கிக்கொள்வார்கள். பின்னர் யுத்தமே இல்லாத இந்த பூமியில் மீண்டும் யுத்தங்கள் வரும்...ரத்த ஆறு ஓடும்”

தாத்தாவின் உடல் நடுங்கியது.

“தாத்தா....யார் அவர்கள்?”

மூன்றுபேரும் ஒருசேரக் கேட்டார்கள்.

“பழையகாலத்தின் ஒரு நாடான அமெரிக்காவின் அதிபர் லார்ஜ் குஷ் மற்றும் இலங்கையின் அதிபராக இருந்த காஜ லக்ஷே தான் அந்த மகாபாவிகள். அவர்கள் மீண்டும் வரவேகூடாது. அதிலும் அந்த காஜ லக்*ஷே ஒரு இனத்தையே இல்லாமலாக்கிவிடவேண்டுமென்ற வெறியில் பல உயிர்களை குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள் என்றுகூடப் பார்க்காமல் கொல்லச்சொன்னவன். ஆனாலும் அந்த இனத்தை அவனால் அழிக்கமுடியவில்லை. இன்றும் ஒரு உயர்ந்த இனமாக அவர்கள் இருந்துவருகிறார்கள். ஆனால் இனி அந்த இருவரும் உயிரோடு வந்துவிட்டால்.....வரக்கூடாது...வரவேக்கூடாது”

சொன்ன தாத்தாவிடம் இப்போது நடுக்கத்துக்கு பதில் ஒரு ஆவேசம் தெரிந்தது.


தொடரும்

தாமரை
08-03-2009, 12:23 AM
கடைசி சிலவரிகள் படிச்சதும் சர சரன்னு உடம்பெல்லாம் இரத்தம் சூடாகி ஓடுதே..

இரண்டாம் பாகத் தொய்வு மூணாம் பாகத்தில ஏறிடுச்சி...

samuthraselvam
09-03-2009, 03:30 AM
மூன்றாம் பக்கத்தில் உணர்ச்சியை தூண்டும் மந்திரம் உள்ளது. கதையில் கூட அவர்கள் இருவரும் உயிர் பெறக்கூடாது. நான்காம் பாகம் சிறப்படைய வாழ்த்துக்கள் அண்ணா...!

அன்புரசிகன்
09-03-2009, 04:56 AM
என்னமா நகர்த்துறீங்கள்... அசத்தலோ அசத்தல். இப்படிக்கதைகள் நான் இதுவரை வாசித்தது இல்லை. தற்காலங்களின் எண்ணங்களை பிரதிபலித்து எதிர்கால எதிர்வுகூறல்களை வடிக்கிறீர்கள். தொடருங்கள் அண்ணா...


இவையெல்லாம் செய்யப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் லஷி தன் அம்மாவிடம் தாத்தாவைபற்றி தொணதொணவென்று கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“ஏம்மா தாத்தாவின் தலை வித்தியாசமாக இருக்கிறது?”

“அதுக்குப் பேர் வழுக்கை. உங்க தலைமுறைக்கு அது தெரியாது. 20 வருடங்களுக்கு முன்புவரை உலக அளவில் தீர்க்கமுடியாத பிரச்சனையாக இருந்தது. இப்போதுதான் நவீன மருத்துவம் தலைமுடி உதிர்தலை இல்லாமலேயே செய்துவிட்டதே.”

பக்கா எதிர்வுகூறல்.......... (எதி்ர்கால நிஜங்களில் இதுவும் ஒன்றோ???? :D:lachen001:)

தாமரை
09-03-2009, 05:36 AM
கதை அற்புதமான வாய்ப்புகளை கொண்டுள்ளது. 1960 களில் பிறந்த ஒரு இராணுவ அதிகாரி.(சிவா.ஜி??). 1980 களில் பிறந்த ஒருவர்(தக்ஸ்..??). 2000 மேல் பிறந்த ஒருவர்(அனிருத்??) 2020க்கு மேல் பிறந்த சிலர்.. 2030 க்கு மேல் பிறந்த சிலர்

இன்றைய அரசியல் வியாதிகள்.. (??) இப்படி பலதரப்பட்ட பாத்திரங்கள்..

புத்தம் புதிய பூமி உருவான கதையும்.. அதற்கு வந்தச் சோதனையை எப்படிச் சமாளித்தார்கள் என்பதையும் படிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறேன்..

சிவா.ஜி
09-03-2009, 02:57 PM
தங்கை லீலுமா, அன்பு மற்றும் தாமரை அனைவரின் பின்னூட்டங்கள் எனக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கிறது. சொற்ப அத்தியாயங்களிலேயே முடித்துவிடாலாமென எண்ணிக்கொண்டிருந்தவனை தாமரையின் பின்னூட்டம் இன்னும் சிந்திக்க வைத்திருக்கிறது.

முயற்சி செய்கிறேன். அனைவரும் துணையாக இருக்கையில் முடியுமென்று நினைக்கிறேன். மிக்க நன்றி.

அக்னி
09-03-2009, 03:50 PM
மிக அருமையான யோசனைகள் பதிவுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கதையின் காலகட்டத்திலிருந்து, புத்தம் புது பூமி உருவான காலகட்டத்திற்குப் பின்நகர்ந்து,
புத்தம் புது பூமியில் நிகழப்போகின்ற விபரீதங்கள், அவற்றிற்கான முறியடிப்புக்கள் வரைக்கும் முன்நகர்ந்து சென்றால்,
அற்புதமான ஒரு நாவல் கிடைத்துவிடும்.

சிவா.ஜி, சில அத்தியாயங்களோடு முடித்துவிடும் எண்ணத்தை மாற்றிவிடுங்கள்.

*****
வழுக்கைக்குத் தீர்வு கண்டுவிட்டாலும், வழுக்கை தீர்ந்துவிடாது போலிருக்கே.
சிவா.ஜியின் நாவல் சொல்லுவது போல, உயிரை உறையவைத்து உயிர்ப்பிக்க வைக்க முடியுமானால்,
ஆங்காங்கே வழுக்கைத் தலைகள் மீண்டும் தென்படத் தொடங்கிவிடுமே.

அப்போ இந்தப் பிரச்சினைக்கு முடிவே இல்லையா...

*****
அற்புதமாகக் காட்சிகள் கண்முன்னே விரிகின்றன.
தொடரட்டும் அற்புத அத்தியாயங்கள்...

சிவா.ஜி
09-03-2009, 03:59 PM
உங்கள் யோசனையும் நன்றாகத்தான் இருக்கிறது அக்னி. ஆனால் என்னால் முடியுமா என்று மலைப்பாக உள்ளது. அகலக்கால் வைத்து பின் ஏடாகூடமாகிவிடப்போகிறதோ என அச்சம் உண்டாகிறது.

முடிந்தவரை முயற்சிக்கிறேன். உதவிக்கு தாமரையும், தக்ஸும் இருக்கிறார்கள். பார்ப்போம். மிக்க நன்றி அக்னி.

அக்னி
09-03-2009, 04:04 PM
உடனடியாக நாவலை முடித்துவைக்க வேண்டும் என்று எந்தவிதக் கட்டுப்படுகளுமில்லையே.
அதனால், தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளலாமே.

ஆனால், மிக முக்கியமாக,
உங்கள் கருவைக் குலைத்துவிடாதீர்கள். அதனை ஒட்டியே விரிவுபடுத்துங்கள்.

ஒரு காலத்தில் இன்னுமொரு ‘இயந்திரன்’ ஆகலாம் ‘புத்தம் புது பூமி’யும்...

அன்புரசிகன்
09-03-2009, 04:18 PM
ஒரு காலத்தில் இன்னுமொரு ‘இயந்திரன்’ ஆகலாம் ‘புத்தம் புது பூமி’யும்...


அதே அதே... நம்ம அண்ணனுக்கும் சற்று பின்ணனி இருந்துவிட்டால் அவரும் ஒரு திரைக்கதை ஆசிரியராகிவிடலாம். சற்று அதிர்ஷ்டம் எட்டிப்பார்க்கவேண்டும். வாழ்த்துக்கள் சிவா அண்ணா...

தாமரை
09-03-2009, 04:32 PM
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=357558&postcount=1709

புதியதோர் உலகம் செய்வோம்... என் கையொப்பமாக இருந்தது, அதன் பிண்ணனி இதுதான்.. மனித சிந்தனையை மாற்றணும். எல்லைக் கோடுகளை அழித்து மனிதன் மனித பயமில்லாமல் வாழணும்...

ஹி ஹி இதுக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தமிருக்கே!!!

அக்னி
09-03-2009, 04:42 PM
ஆக,
நீண்டநாளாக அமரன் என்னைப்போட்டுக் குழப்பிய ஒரு விடயம்,
அதுதான், தாமரை அண்ணாவின் “புதியதோர் உலகம் செய்வோம்...” கையெழுத்து விளக்கம்,
இதுதானா...

“இதிலிருந்து என்ன விளங்கிக் கொண்டாய்” என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்.

சிவா.ஜி
09-03-2009, 05:15 PM
தாமரையோட பதிவிலிருந்து நிறைய டிப்ஸ் கிடைக்குது(டிப்ஸ் கொடுக்கலாமா வேண்டாமான்னு விவாதம் ஆரம்பிச்சுடப்போகுது...ஹி...ஹி..)

என்னுடைய தேடலின் பரப்பை இன்னும் அதிகமாக்கனும். இந்தக் கதை முடிஞ்சப்பிறகு என் தலை, இருக்கிற கொஞ்சநஞ்சத்தையும் இழக்கப்போவது உறுதி.

ஆதவா
10-03-2009, 09:34 AM
அக்னியைப் போன்றே நானும் வியக்கிறேன்

அப்படியே காட்சிகள் விரிகின்றன..... எதிர்காலத்தில் இப்படியெல்லாம் நடக்குமோ என்று புருவங்கள் விரிகின்றன.

ஸ்பேஸ் ஸிட்டி,
பாக்கெட்டாப்,
ஸிந்தெடிக் ரோபோ
நீண்ட அடுக்கு மாடிகள்
விண்வெளி நகரங்கள், இத்யாதி இத்யாதி...

என்று ஒருபுறம் விஞ்ஞான வளர்ச்சிக்குண்டான சாத்தியக்கூறுகளை அடுக்க, இன்னொருபக்கம்

ஜனத்தொகை பெருக்கம்,
ஒருங்கிணைந்த நாடுகள்
தண்ணீருக்குள் நாடுகள் என்று சமுதாய சூழ்நிலை ஏற்ற இறக்கங்களைப் பட்டியலிட...

வியப்புக்கு அளவே இல்லாமல் போகிறது.

(உங்க மூளை ஏதாவது ப்ரோட்டான் மூலக்கூறுகளால் தயாரிக்கப்பட்டதா??)

ரெண்டாவது பாகம் எங்கே??? ஓடு ஆதவா ஓடு!!

ஆதவா
10-03-2009, 09:51 AM
அஹாஅ.... அந்த முதியவர்.... (அவரை முதியவர்னு சொல்றதா இல்லை புதியவர்னு சொல்றதா?? புது பிறப்பாச்சே?) எழுப்பப்படும் விதம் டாப்/// பல தகவல்கள் மேம்போக்காக இல்லாமல் ஓரளவு இப்படித்தான் நடக்கும் என்று யூகித்து எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. 2050 என்பதால்... மருத்துவர்களின் ஆராய்ச்சி, முதல் வியாபார வெற்றி, அச்சம் என்று சரியாக கணித்துள்ளிர்கள்.. (இதே 2300, 2450 என்றால், அநாயசமாக செய்துவிடுவார்கள் என்று சொல்லிவிடலாம்...)

நல்லவேளை... அவர் தமிழ் சினிமா அவ்வளவாக பார்க்கமாட்டார்னு நினைக்கிறேன்.. இல்லாட்டி நான் எங்க இருக்கேன்னு கேட்டிருப்பார்... ஹ்ஜி ஹிஹி

மிலாவின் தாத்தா, பண்ணைவீடு, மிக்கி ரோபோ என்று மீண்டும் ஒரு சுற்று.....

கவலையா??? அடுத்தது என்ன///// எங்கே மூன்றாம் பாகம்???

ஓடு ஓடு!!

ஆதவா
10-03-2009, 10:00 AM
மூன்றாம் பாகத்தின் ஆரம்பத்தில் சிரித்தே விட்டேன்.. (ஏன் எதுக்கெல்லாம் கேட்காதீங்க.) என் நண்பர் வந்து பார்த்துவிட்டு, ஏண்டா பைத்தியமாட்டம் சிரிக்கிற என்று கேட்டுவிட்டு செல்கிறார்.

அப்படியே சரசரவென டாப் கியரில் செல்கிறது... இப்படியெல்லாம் பூமி இருந்திருந்தால் என்று (பேர்)ஆசைப்படவைக்கிறீர்கள்... குறிப்பாக, அன்பு போதிக்கும் பாடங்கள்... ஹிம்சைகள் ஒழிந்து அஹிம்சைகள் மட்டுமே புகட்டப்படும் காலங்கள்!!!! நினைத்தாலே இன்பம்.

தொரப்பா என்றதும் நமக்கு தெலுங்கு நாடுதான் கவனத்திற்கு வந்தது.. அந்த குறுந்தகடு விஷயமும் பக்கா.... இப்பவும் கூட கேஸட்களையும் VCR களையும் ரசிப்பவர்கள் இருப்பது போல.....

லார்ஜ் குஷ் (எத்தனை லார்ஜ்?)
காஜ லக்ஷே

ஆகிய இருவரின் பெயரும் எடுத்தவிதமும் கலக்கல்...

இருவரும் உயிரோடு வரப்போகிறார்களா??? ஆஹா.... அடுத்தது என்ன?? சீக்கிரம் எழுதுங்க அடுத்த பாகம்...

மதி
10-03-2009, 12:01 PM
அடுத்து.. அடுத்து.. அடுத்து....?????
இரண்டாம் பாக இறுதியில் இருந்த அந்த மர்மம் இப்போது அவிழ்க்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக எழுப்பப்படப்போகும் அந்த இருவரும் இறக்கப் போகின்றார்கள் என்பது தெரியும். ஆனால் எப்போ... எப்படி..?

தங்களின் அறிவியல் சம்பந்தமான கற்பனாசக்தி வியக்க வைக்கிறது சிவாண்ணா.. சொல்லும் விஷயங்கள் அப்படியே கண்முன் விரிகிறது... தொடருங்கோ....

சிவா.ஜி
10-03-2009, 04:46 PM
மூன்று பாகத்துக்கும் மூன்று பின்னூட்டமிட்டு என்ன பரவசத்திலாழ்த்திவிட்டீர்கள் ஆதவா. எல்லாம் உங்களின் கதைகளைப் படித்துதான் நானும் ஏதாவது முயற்சி செய்யலாமே என்று தொடங்கியிருக்கிறேன். உங்கள் எலக்ட்ராவின் பிறப்பு எனக்கு முதல் இன்ஸ்பிரேஷன். அடுத்தது மதியின் கதை மற்றும் தக்ஸின் கதை. இவையெல்லாம்தான் என்னையும் தூண்டியது.

எதிர்பார்ப்புகளை பொய்யாக்காமல் கூடியவரை முயற்சிக்கிறேன். உற்சாகப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஆதவா.

சிவா.ஜி
10-03-2009, 04:49 PM
அடுத்து.. அடுத்து.. அடுத்து....?????
இரண்டாம் பாக இறுதியில் இருந்த அந்த மர்மம் இப்போது அவிழ்க்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக எழுப்பப்படப்போகும் அந்த இருவரும் இறக்கப் போகின்றார்கள் என்பது தெரியும். ஆனால் எப்போ... எப்படி..?

தங்களின் அறிவியல் சம்பந்தமான கற்பனாசக்தி வியக்க வைக்கிறது சிவாண்ணா.. சொல்லும் விஷயங்கள் அப்படியே கண்முன் விரிகிறது... தொடருங்கோ....

ரொம்ப நன்றி மதி. ஆனா எனக்கெல்லாம் முன்னோடிகள் நீங்கள். உங்களிடமிருந்து பெற்றதை வைத்து நானும் ஏதோ ஜல்லியடிக்கிறேன்.

நீங்களனைவரும் இருக்கும் தைரியத்தில் தொடர்கிறேன். நன்றி மதி.

இளசு
10-03-2009, 07:24 PM
கையைக் கொடுங்கள் சிவா....
சிறப்பு பாராட்டுகள்..

மருத்துவம், கணினி, பண்பாட்டு மாற்றங்கள், அரசியல் நடப்புகள் என
பரந்த ஆழ்ந்த அறிவும்,
நல்லதை எண்ணி விழைந்து எழுச்சியுறும் பெரிய மனதின் கற்பனை வளமும்

கைகோர்த்து வரையும் கதையோவியம்..

பயனுள்ள அழகுகள் குறைவு..
இக்கதை அபூர்வ மருந்து மலர்!

வாழ்த்துகள்!

மதுரை மைந்தன்
10-03-2009, 07:56 PM
கதையில் புதுமையும் இல்லை அறிவியலும் இல்லை. எனக்கு பெருத்த ஏமாற்றமே. நன்றாக எழத முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
10-03-2009, 08:35 PM
பயனுள்ள அழகுகள் குறைவு..
இக்கதை அபூர்வ மருந்து மலர்!

வாழ்த்துகள்!

உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி இளசு. மருத்துவம்...அதைத் தொடத்தயங்கினேன். சரி பிற்காலத்தில் நடக்கப்போவதுதானே என கொஞ்சமாய் ஏதோ எழுதியிருக்கிறேன்.

வழக்கம்போல உங்கள் ஊக்கம் எனக்கு மேலும் உற்சாகத்தையளிக்கிறது. மிக்க நன்றி.

சிவா.ஜி
10-03-2009, 08:38 PM
கதையில் புதுமையும் இல்லை அறிவியலும் இல்லை. எனக்கு பெருத்த ஏமாற்றமே. நன்றாக எழத முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

மிக மிக உண்மை மதுரைமைந்தன் அவர்களே. இந்தக்கதையில் எந்தபுதுமையும் இல்லை. அறிவியலும் இல்லை. நான் இதை விஞ்ஞானக்கதை என்று பிரகடணப்படுத்தவில்லையே...பின் இதில் அறிவியலைத் தேடினால் எப்படி கிடைக்கும்?

அதேபோல யாரும் சொல்லாத புதுமையை சொல்ல நானென்ன சுஜாதாவா? ஒரு சாதாரண எழுத்துக்காரன். உங்களைப்போன்றோர் என் கதையை வாசிப்பதே எனக்குப் பெருமை. இன்னும் நன்றாக எழுத முயற்சிக்கிறேன். உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
10-03-2009, 10:44 PM
அத்தியாயம்-4


லார்ஜ்குஷ் மற்றும் காஜலக்ஷேவின் நாடுகளிலிருந்து இரண்டு குழுக்கள் தலைநகரத்துக்கு வந்திறங்கியிருந்தார்கள். தங்கள் தலைவர்களை வரவேற்று அழைத்து செல்ல. இன்னும் ஒரு வாரத்தில் இருவரும் உறைநிலையிலிருந்து உயிரோடு வரப்போகிறார்கள். இரண்டு குழுக்களுமே கொஞ்சம் பிசகானவை. ஏராளமான ரத்தத்தைப் பார்த்தவர்கள். மிக நீண்டகாலமாக பார்க்காதவர்கள். மீண்டும் பார்க்கத் துடிப்பவர்கள்.

ரகசிய ஆலோசனை செய்ய அவர்கள் திறந்தவெளி மைதானத்தை தேர்ந்தெடுத்ததிலிருந்தே தெரிகிறது எவ்வளவு நரித்தனமானவர்களென்று. அரசாங்கப் பாதுகாப்புக்காக எல்லா இடங்களிலும் ஒட்டுக்கேட்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை எப்போதும் இயங்காது. குறிப்பிட்ட தடை செய்யப்பட்ட, அரசாங்கத்துக்கோ, அல்லது மனித இனத்துக்கோ எதிராக பேசப்படும் பல வார்த்தைகளைத் தொகுத்து அதனுள் ஏற்றியிருந்தார்கள். அப்படிப்பட்ட வார்த்தைகள் பேசப்படும்போது மட்டும் செயல்படத்தொடங்கும்.

அதனைத் தெரிந்துகொண்டுதான் எந்தவிதமான கருவிகளும் இல்லாத மைதானத்தில் கூடிப்பேசினார்கள்.அவர்கள் பேச்சில் ஒரு மாபெரும் மாற்றத்துக்காக காத்துக்கொண்டிருந்தார்கள் என்பது தெரிந்தது. அதற்கான சரியான தலைமையை எதிர்பார்த்திருந்தார்கள். அந்த தலைமை கிடைத்ததும் அவர்களின் செயல்பாடுகள் தொடங்கும். அதில் இரக்கம் என்பதோ...மனிதம் என்பதோ சற்றும் இருக்காது. இந்த அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட ரசாயண ஆயுதங்களை மறைவாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவை பிரயோகிக்கப்பட்டால் மக்கள் கூட்டம் கூட்டமாக செத்துவிழுவார்கள். அதைத்தான் அவர்களும் விரும்பினார்கள்.

கூட்டம் கலைந்து அவர்கள் எழுந்துபோனபிறகு அந்த இடத்தில் பிணவாடை வீசிற்று.


அந்த விளையாட்டு மைதானத்தில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்தார்கள். இடப்பற்றாக்குறை இருந்தும் விளையாட்டுக்காக அத்தனை பெரிய அரங்கத்தை அமைத்திருந்தார்கள். ஆனாலும் அதையும் பல்நோக்கு வியாபார அங்காடிகளும், அலுவலகங்களும் உள்ள கட்டிடமாகவே அமைத்திருந்தார்கள்.அங்கே நடந்துகொண்டிருக்கும் சடுகுடு விளையாட்டை மக்கள் ஆரவாரத்துடன் ரசித்துக்கொண்டிருந்தார்கள். நேரத்தை விழுங்கும் கிரிக்கெட் ஆட்டம் தடைசெய்யப்பட்டிருந்தது. மிகப்பரபரப்பான ஆட்டமான சடுகுடு எல்லோருக்கும் பிடித்திருந்தது. உலக விளையாட்டாக எதனை தெரிவு செய்யலாமெனக் கருத்துக்கணிப்பு செய்தபோது ஏராளமான வாக்குகளைப் பெற்று சடுகுடு முதலிடத்தைப் பெற்றதால் அதையே உலக விளையாட்டாய் தேர்ந்தெடுத்தார்கள்.

அனைவரின் கைகளிலும் இளநீர்பாணம் இருந்தது. கோக் வகையறாக்கள் அறவே நிறுத்தப்பட்டிருந்தது. புகையிலை விளைச்சல் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. புகைபிடிக்கும் வழக்கம் சுத்தமாக இல்லாமலிருந்தது.
அதனால் மாசுபடாத காற்றை சுவாசித்துக்கொண்டு ஆட்டத்தை ரசித்தார்கள்.

தொரப்பாவின் பண்ணை வீட்டிலிருந்து திரும்பிய மறுநாள் ரேவா, ஷாபோ, மிலா மூவரும் விளையாட்டரங்கத்துக்கு வந்திருந்தார்கள். உற்சாகக்கூச்சலோடு அவர்களும் ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருக்கும்போது ஷாபோ லஷியைப் பார்த்தான். அவளுக்கு அருகில் புதிதாய் ஒரு பெரியவர் தலையில் தொப்பியுடன் இருப்பதை ஆச்சர்யத்துடன் பார்த்தான். ரேவாவுக்கும், மிலாவுக்கும் காட்டினான்.

அருகே சென்றார்கள்.

‘ஹாய் லஷி..எப்படி இருக்கிறாய்?”

“நலம் ஷாபோ. எப்படியிருக்கிறாய் ரேவா...இதுயார் உங்கள் நண்பனா?”

மிலாவைக் காட்டிக்கேட்டாள்.

“ஆமாம். இவன் மிலா. வேறு கல்லூரியில் படிக்கிறான். ரசாயனத்துறை. அதுயார் புதிதாக ஒரு பெரியவர் தலையில் தொப்பியுடன்?”

ஷாபோவின் கேள்விக்கு லஷி பதிலளிக்குமுன் விளையாட்டைக்காண வீட்டிலிருந்து புறப்படும்போது ராகவன் விஸ்வநாதனிடம் சொன்னதை சொல்லவேண்டும்.

“அப்பா இந்த தொப்பியை அணிந்துகொள்ளுங்கள். இல்லையென்றால் அனைவரும் உங்களை வித்தியாசமாகப் பார்ப்பார்கள். இன்னும் ஒரு வாரத்துக்கு உங்களுக்கு வேறு எந்த சிகிச்சையும் அளிக்கக்கூடாது என மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒருவாரம் கழிந்ததும் உங்களுக்கு சிகிச்சையளித்து வழுக்கை இல்லாமல் செய்துவிடலாம். இப்போதைக்கு இதை அணிந்துகொள்ளுங்கள்”

என்று சொன்னதால் விஸ்வநாதன் தொப்பியுடன் வந்திருந்தார். இனி லஷியின் பதில்....

“ஓ.....அவரா. என் தாத்தா. அப்பாவின் அப்பா. சமீபத்தில்தான் உறைநிலையிலிருந்து வெளிவந்தார். உலக விளையாட்டாய் சடுகுடு இருப்பதைக் கேள்விப்பட்டதும் ஆச்சர்யமாகி உடனே பார்க்கவேண்டுமென எங்களோடு வந்துவிட்டார்.”

“ஓ...இவர்தான் அந்த முதல் உயிர்தெழுந்த மனிதரா? மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறாரே?”

“ அவருக்கு வயது 50. ஆரோக்கியமாக இல்லாமல் எப்படியிருப்பார்?”

“அட அப்பாவுக்கு 50 மகனுக்கு....?”

“நாற்பத்தியாறு”

“வேடிக்கையாக இருக்கிறது. ஆச்சர்யமாகவும் இருக்கிறது”


ஆச்சர்யமாய் மூன்றுபேரும் அவரைப் பார்த்தனர். இவர்கள் அவரையே பார்ப்பதைக் கவனித்ததும் அவரே அருகில் வந்துவிட்டார்.

“லஷி உன் நண்பர்களா?”

“ஆமாம் தாத்தா. இவன் ஷாபோ, ரேவா...இருவரும் என் வகுப்புத்தோழர்கள். இது மிலா இவர்களின் நண்பன்”

கைக்குலுக்கினார். இளைஞர்கள் வித்தியாசத்தை உணர்ந்தார்கள். விஸ்வநாதன் புன்முறுவலுடன்,

“இன்னும் சில நாட்களில் இந்த சொரசொரப்பு சரியாகிவிடும். 20 வருடமாக உறைந்த உடலல்லவா?”

தங்களின் சின்ன முகமாற்றத்திலேயே அவர்கள் நினைத்ததை யூகித்துவிட்ட தாத்தாவை அவர்களுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. அவர் செய்யப்போகும் உதவியால்தான் இவர்கள் மிகப்பெரிய ஒரு காரியத்தை சாதிக்கப்போகிறார்கள் என்பது அப்போது அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.

லஷி குடும்பதினரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தங்கள் இருக்கைக்கு திரும்பும் வழியில் தங்கள் குடியிருப்பின் ஆயிரமாவது தளத்தின் குடித்தனக்காரர் அந்தப்பெண்ணுடன் அமர்ந்திருந்ததைப் பார்த்தான் ஷாபோ. சரியான சந்தர்ப்பம்...இப்போதே அவள் பெண்ணா இல்லையா என்று சோதித்துப் பார்த்துவிடவேண்டும். அவசரமாக அவன் நகர்ந்து செல்லும் திசையைப் பார்த்த ரேவா தனக்குள் சிரித்துக்கொண்டான்.

“ம்...நீண்டநாள் சந்தேகம். சோதித்துவிட்டு வரட்டும்.” என மனதுக்குள் நினைத்துக்கொண்டு மிலாவை அழைத்துக்கொண்டு இருக்கைக்கு திரும்பினான்.

சற்றுநேரத்தில் திரும்பவந்த ஷாபோ கட்டைவிரலைக் கவிழ்த்துக்காட்டினான்.

“என்னடா ஆச்சு?”

“ மிக உயர்தர ரோபோடா ரேவா அது. பெண்ணில்லை”

என்ன பேசிக்கொள்கிறார்களென்று மிலாவுக்கு விளங்காமல் விழித்தான். அவனுக்கு விளக்கிவிட்டு ஷாபோவைக் கேட்டான் ரேவா...

“எப்படி தெரிந்தது?”

“தோளில் கையைப் போட்டேன். லேசாகக்கிள்ளினேன். எந்த உணர்ச்சியுமில்லை. அது ரோபோதான். ஆனால் ரோபோவை எதற்கு உடன் அழைத்துவந்திருக்கிறார். அதற்கென்ன சடுகுடு புரியுமா?”

“அவரது தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்காக இருக்கும்”

“இருக்கலாம்”

என்று சொன்ன ஷாபோவை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அந்த ரோபோ 'களுக்'என்று சிரித்தாள்.

“நீ கிள்ளியபோது அதைப் பொறுத்துக்கொள்ள எத்தனைக் கஷ்டப்படவேண்டியிருந்தது தெரியுமா? இன்னும் கொஞ்சநாள் குழப்பத்திலிரு. ஒருநாள் நானே உன்னிடம் வருகிறேன்” மனதுக்குள் சொல்லிக்கொண்டாள் கனி.


அடுத்தநாள் மிலாவுக்கு தாத்தா தொரப்பாவிடமிருந்து தன்னை வந்து உடனே சந்திக்கும்படி செய்தி வந்தது. தனது யூனிவர்ஸல் கம்யூனிக்கேட்டரை இயக்கி ஷாபோவையும், ரேவாவையும் அழைத்து செய்தியை சொன்னான். வகுப்பிலிருப்பதால் மாலை போகலாமென முடிவு செய்தார்கள்.


தொடரும்

ஆதவா
11-03-2009, 01:55 AM
நான்காம் பாகத்தில் முதல் பாதி சமூகம் சார்ந்தது இரண்டாவது பாதி மீண்டும் விஞ்ஞானத்தினுள்..

ரகசிய ஆலோசனைக்கு திறந்தவெளி மைதானம்
இளநீர் பானம்

கருவிகளில் பதிக்கப்பட்ட மொழிதான் பிரச்சனையேஎ!!! ஏன்னா, நம்மவர்கள் இந்தமாதிரி பிரச்சனைகளைப் பேசுவதற்காகவே மொழியைக் கண்டுபிடிப்பார்கள்.... (எஸ்ராவின் ஒரு கதையில் ஒரு குடும்பம் மொழியைக் கண்டுபிடிக்கும். பிறகு அதை நன்கு உபயோகப்படுத்தும்.. அதனாள் வரும் விளைவுகளை அழகாகச் சொல்லியிருப்பார்.)

சொட்டை போக்க, தொப்பி,

எல்லாவற்றையும் விட, அந்த குறும்புப் பெண் கனி!!!

இந்த அத்தியாயம் எதிர்பார்ப்போடு முடியவில்லை.. ஆனாலும் கதையின் அடுத்த அத்தியாயம் எதிர்பார்த்து!!!

ஆதவன்.

மதி
11-03-2009, 04:50 AM
அதே அதே... :)

samuthraselvam
12-03-2009, 03:43 AM
இந்த பாகமும் நன்றாக உள்ளது. அடுத்த பாகம் இன்னும் விறுவிறுப்பாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா...!

சிவா.ஜி
16-03-2009, 07:01 AM
அத்தியாயம்-5


தொரப்பா...ஆழ்ந்த யோசனையிலிருந்தார். பத்துவருடங்களுக்கு முன் நிகழ்ந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தார்.

கடல்மட்டம் உயர்ந்து பல நிலப்பிரதேசங்கள் நீருக்குள் போய்விட உலகம் சுருங்கியது. அந்த சமயத்தில்தான் பல்வேறு நாட்டின் நல்ல தலைவர்களுக்கு ஒரு எண்ணம் ஒருசேர தோன்றியது. great minds thinks alike என்பதைப்போல உயர்ந்தவர்களின் சிந்தனை ஒரே மாதிரியாக இருந்ததில் ஆச்சர்யமில்லை. சுருக்கப்பட்ட இந்த உலகத்தை நாம் அனைவரும் ஒன்று என்ற எண்ணத்தின் மூலம் இன்னும் சுருக்க நினைத்தார்கள்.

முதல் கட்டமாக அனைவரும் ஒருவரையொருவர் தொடர்புகொண்டு கூடிப்பேசினார்கள். தங்களுக்குள் விவாதித்து சாதக பாதகங்களை அலசி ஒரு திட்டத்தை தயார் செய்தார்கள். அவர்கள் சிந்தனையில் உருவானதுதான் யுனைட்டெட் கண்ட்ரீஸ் ஆஃப் எர்த். ஒருங்கிணைக்கப்பட்ட உலகம். புத்தம் புது பூமி.

அதன் ஆரம்பமாக தாங்களின் நாடுகளை முதலில் இணைத்தார்கள். ஒரு குழுவாய் ஆட்சி செய்தார்கள். அவர்களுக்கு தொல்லைக் கொடுத்தவர்களை ஆரம்பத்தில் சற்றே கடுமையாக கவனிக்க வேண்டியதாக இருந்தது.
அதை ஒரு அறுவை சிகிச்சையாகத்தான் அவர்கள் நினைத்தார்கள். ஒன்றாக இணைய மறுத்த நாட்டின் தலைவர்களை வழிக்கு கொண்டுவர முதலில் அவர்கள் நாடியது அந்தந்த நாட்டின் ராணுவத்தளபதிகளைத்தான்.

அவர்களை சம்மதிக்கவைத்ததும் ராணுவப்புரட்சியை ஏற்படுத்தி நாட்டைக் கைப்பற்றினார்கள். பின்னர் ஏற்கனவே இனைந்திருந்த நாடுகளுடன் அவற்றையும் இணைத்தார்கள். ஏறக்குறைய சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவில் சமஸ்தானங்களை ஒருங்கிணைத்ததைப்போல.

அனைத்து நாடுகளும் இணைந்ததும் அரசாங்கக்குழுவை அமைத்தார்கள். அந்தக்குழுவினர் ஏகமனதாகத் தேர்ந்தெடுத்த தலைவர்தான் தற்போதைய உலகத்தலைவர் மில்லர். அதிபுத்திசாலி. மிகப்படித்தவர். அதைவிடவும் மிகப்படைத்தவர். அவரது தன்னம்பிக்கையூட்டும் கட்டுரைகள் பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்க மருந்து. அவரின் தேர்ந்தெடுப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முன்னாலிருந்த முக்கியப் பிரச்சனை எரிபொருள். தொடர்ந்த யுத்தங்களாலும், பெருகிவிட்ட வாகனங்களாலும் கச்சா எண்னையை அசுரத்தனமாக உறிஞ்சி எடுத்து தீர்த்துவிட்டார்கள். கைவசமிருக்கும் எண்ணையை வைத்துக்கொண்டு இன்னும் ஆறுமாதங்கள்தான் ஓட்ட முடியும் என்ற நிலை வந்தபோது மாற்று பொருளுக்கு தீர்வுகாணவேண்டியது அவசியம் மட்டுமல்லாது அவசரமாகவும் ஆகிவிட்டது.

அந்த சமயத்தில்தான் ஜெர்மனியின் ஒரு அறிவியலார் மிக சக்திவாய்ந்த மின்கொள்கலனை உருவாக்கினார். அதாவது ஒரு மின்கொள்கலனை ஒரு பிரம்மாண்ட கட்டிடத்தின் அளவுவரைக்கூட உருவாக்கி, அதில் மின்சாரத்தை சேமித்துவைத்து ஒரு நகரத்துக்கே விநியோகிக்க முடியும். இந்த சாத்தியக்கூறு தெரிந்ததுமே அடுத்ததாக மின்னலின் சக்தியை சேமிக்க முடியுமா என ஆராய்ந்து அதிலும் வெற்றியடைந்தார்கள். உலகம் முழுவதும் எல்லா நகரங்களிலும் ராட்சச மின்கொள்கலன்கள் உருவாக்கப்பட்டு மின்னலிலிருந்து பெற்ற அபரிமிதமான சக்தியை அதில் சேமித்து மின் விநியோகம் செய்ததில் எரிபொருள் தேவை முழுதுமாகத் தீர்க்கப்பட்டது.

முன்பெல்லாம் பிளாஸ்டிக் கழிவாக இருந்தது. இப்போது கழிவுகளே பிளாஸ்டிக் ஆகிக்கொண்டிருக்கிறது. கழிவுகளை சில ரசாயண செயலுக்கு உட்படுத்தி அதனை பெட்ரோலியப் பொருட்களாக மாற்றினார்கள். இப்படி பல புதுமைகள் நிகழ்ந்தன. ஒருங்கிணைக்கப்பட்ட ஆராய்ச்சிக்கூடங்கள் ஒரு பக்கம் விரிவான பல்துறை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தன. இந்த நாட்டின் மூளை அந்த நாட்டுக்கு உபயோகப்படுகிறது, இந்த நாட்டின் வளம் மற்ற நாட்டுக்குப் போகிறது என்ற எந்த பாகுபாடுகளுமே இல்லாத உலகமாக ஒரு கூரைக்கு கீழ் இயங்கியதில் அபார வளர்ச்சியடைந்தது.

அப்படி உருவாக்கப்பட்ட இந்த பூமிக்கு படுபாவிகள் இருவரால் ஆபத்து வரவிருக்கிறது. எப்படியாவது அவர்களை உயிருடன் வரவிடக்கூடாது, அவர்கள் வந்தால் அவர்களைப்போல பலரை உருவாக்குவார்கள். போரில்லா நிம்மதியான வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும். எனவே அவர்களை வரவிடக்கூடாது என தனக்குள் எண்ணிக்கொண்ட தொரப்பா வின்னூர்தி வந்து நிற்பதை அறிந்து வெளியே வந்தார். மூன்றுபேரையும் அழைத்துக்கொண்டு உள்ளே வந்தவர் அந்த புகைப்படங்களை அவர்களுக்குக் காட்டினார்.

“இதோ இவன் தான் லார்ஜ்குஷ், இது காஜலக்*ஷே. இன்னும் சில நாட்களில் இவர்களை எழுப்பப்போகிறார்கள். நமது ஒருங்கிணைக்கப்பட்ட பூமியின் தற்போதைய தலைவர் அறிவை வளர்த்துக்கொண்ட அளவுக்கு அரசியலை வளர்த்துக்கொள்ளவில்லை. இந்த இருவரும் ஏதாவது தந்திரத்தை செய்து அவரை பதவியிறக்கம் செய்துவிடுவார்கள்”

“தாத்தா அப்படியென்றால் அவர்கள் அந்த மருத்துவமனையிலிருந்து வெளியே வரவேக்கூடாது இல்லையா?”

“மிகச் சரியாய் சொன்னாய் மிலா. அந்த மருத்துவமனைக்குள் எப்படியாவது நுழைந்து அந்த இருவரையும் நிரந்தர உறக்கத்துள் ஆழ்த்திவிட வேண்டும். நீங்கள் மூவரும்தான் அதை செய்யப்போகிறீர்கள்”

“எப்படி தாத்தா? அவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு அதிதீவிர பாதுகாப்பு இருக்கிறதே. அதன் வாசலில் இருக்கும் லேசர் ஸ்கேனரை தாண்டி போகவேண்டுமானால் அங்கீகரிக்கப்பட்டவர்களால் மட்டுமே முடியும்”

“நீ சொல்வது சரிதான் ஷாபோ. அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்கவேண்டும். அதற்காகத்தானே உங்களை இங்கே வரச் சொன்னேன்”

“முதலில் மருத்துவமனைக்குள் போகவேண்டும். அது முடியும். ஆனால் அந்த அறையிருக்கும் தளத்துக்குப் போக சரியான காரணம் தேவைப்படுமே”

“யோசிக்கலாம்....”

அப்போது ஷாபோவின் யுனிவர்ஸல் கம்யூனிக்கேட்டர் சினுங்கியது. அதன் ஒரு பொத்தானை அழுத்தியதும் அதிலிருந்து வெளிப்பட்ட ஒளிக்கதிர் வெட்டவெளியில் திரையாக விரிந்தது. அந்த திரையில் லஷி தெரிந்தாள். முகத்தில் லேசான பதட்டம் தெரிந்தது. அவளைப்போலவே இவனும் அவளுக்குத் தெரிந்ததும் பேசத்தொடங்கினாள்.

“வணக்கம் ஷாபோ. இப்போது எங்கேயிருக்கிறாய்?”

“வணக்கம் லஷி. மிலாவின் தாத்தாவின் பண்ணைவீட்டில் இருக்கிறோம்”

“உடனே எங்கள் வீட்டுக்கு வரமுடியுமா? எங்கள் தாத்தா உன்னையும் உன் நண்பர்களையும் பார்க்க விரும்புகிறார். ஏதோ முக்கியமான விஷயத்தைப் பற்றி பேச வேண்டுமாம்”

‘அப்படியா...இன்னும் அரை மணியில் அங்கேயிருப்போம்.”

“சரி வாருங்கள்”

தொடர்பு அறுந்ததும், ஷாபோ ரேவாவையும், மிலாவையும் பார்த்தான். உரையாடலை அவர்களும் கேட்டுக்கொண்டிருந்ததால், தாத்தாவைப் பார்த்து,

“ஏதோ முக்கியமான விஷயம் போலிருக்கிறது தாத்தா. எனக்கென்னவோ நாம் ஈடுபட்டிருக்கும் இதே விஷயத்தைதான் அவர் பேசப்போகிறார் என்று உள்ளுணர்வு சொல்கிறது”

என்று சொன்ன ஷாபோவைப் பார்த்து,

“எப்படி அப்படியொரு எண்ணம் உனக்குத் தோன்றுகிறது?”

“தெரியவில்லை. ஏதோ அப்படி தோன்றுகிறது”

“சரி அப்படியானால் உடனே புறப்படுங்கள். நீ நினைத்ததைப்போல என்றால் உடனே என் திரைக்கு வாருங்கள்”


தொடரும்

அன்புரசிகன்
16-03-2009, 07:48 AM
அசத்தோ அசத்தென்று அசத்துறீங்கள்.... அடுத்த பாகத்தினை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

மதி
16-03-2009, 09:13 AM
நானும்... காத்திருப்போர் பட்டியலில்.

சிவா.ஜி
16-03-2009, 10:07 AM
அன்பு, மதி ரொம்ப நன்றி. ஆனா இன்னும் ரெண்டு மாசத்துக்கு நான் அடிக்கடி மன்றம் வரமுடியாது. ப்ரோஜெக்ட் முடியும் நிலையில இருக்கறதால நிறை வேலை. அதிக நேரம் கணினியில இருக்க முடியாது. நேரம் கிடைக்கும்போது முயற்சி செய்கிறேன்.

மே மாசத்துலருந்து கடலுக்கு நடுவுலதான் வேலை. அங்கே இணையம் இல்லை. அதுதான் கவலையாக இருக்கிறது. பார்ப்போம்.

பாரதி
08-04-2009, 05:07 AM
நானும்... காத்திருப்போர் பட்டியலில்.
நானும்தான்.....!

சிவா.ஜி
08-04-2009, 06:11 PM
இல்லை பாரதி இந்தக்கதையை நான் தொடரப்போவதில்லை. ஏனோ மனது சரியில்லை. தொடர்ந்து எழுத மனம் வரவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்.

பாரதி
08-04-2009, 06:29 PM
உடன் பதிலளித்தமைக்கு நன்றி சிவா.

மன்னிப்பெல்லாம் மன்றத்தில் எதற்கு? தயவு செய்து நீக்கி விடுங்கள். படைப்பதென்பது படைப்பாளிக்கே உள்ள உரிமை. அது போன்றே நிறுத்துவதென்பதும்.

உங்கள் உணர்வை மதிக்கிறேன். நன்றி.

Hega
07-02-2012, 08:08 PM
இந்தகதை இங்கே தொடராமல் போனதேன் சிவா அண்ணா.:smilie_abcfra:

சிவா.ஜி
16-02-2012, 07:52 PM
சில கசப்புகளால்தான் தங்கையே. இனி தொடருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

செல்வா
17-02-2012, 05:29 AM
கண்டிப்பாகத் தொடரவேண்டும் இது தம்பியின் அன்புக் கட்டளை :)

Hega
18-02-2012, 11:45 AM
சில கசப்புகளால்தான் தங்கையே. இனி தொடருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.


ஏட்டியை எட்ட வைத்து விட்டு கதையை தொடருங்கள் சிவா அண்ணா

சிவா.ஜி
18-02-2012, 01:47 PM
கூடிய விரைவில் தொடருவேன் செல்வா மற்றும் தங்கையே.

அக்னி
18-02-2012, 06:47 PM
யோவ் சிவா.ஜி அண்ணா...

இங்கே குறிப்பிடாவிட்டாலும் இத்தொடரை வாசித்த அனைவருமே இது தொடரும் என்றே எதிர்பார்க்கின்றனர். அது நேர், மறை கருத்துடைய எல்லோருக்கும் பொருந்தும்.

அதான் வேலைக்கு வந்தாச்சில்ல. அப்புறமென்ன... தொடரைத் தொடர வேண்டியதுதானே...

சிவா.ஜி
19-02-2012, 06:53 PM
கொஞ்சம் அவகாசம் கொடுங்கப்பா....தொடர்கிறேன்.

(அதென்ன யோவ்.....பயமாயிருக்கில்ல அக்னி)

அக்னி
19-02-2012, 07:09 PM
(அதென்ன யோவ்.....பயமாயிருக்கில்ல அக்னி)
அதுக்காகத்தான் பெயருக்குப் பின்னால அண்ணா போட்டிருக்கமில்ல... :mad:

சிவா.ஜி
19-02-2012, 07:13 PM
அதுசரி......ரொம்ப மரியாதை.....எத்தனைப்பேர் கிளம்பியிருக்கீங்க இப்படி.....தேவுடா...!!!

செல்வா
20-02-2012, 05:04 AM
அதுசரி......ரொம்ப மரியாதை.....எத்தனைப்பேர் கிளம்பியிருக்கீங்க இப்படி.....தேவுடா...!!!

இப்போதைக்கு அக்னி மட்டும் தான்...
தேவைப்பட்டா நாங்களும் சேந்துக்கறதா இருக்கோம்.

மதி
20-02-2012, 06:52 AM
சீக்கிரம் ஆரம்பிங்கண்ணா..!!!

சிவா.ஜி
26-02-2012, 05:55 PM
அத்தியாயம்-6

லஷியின் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், லஷி ரேவாவா,,ஷாபோ, மிலா மூவரையும் நேரே அவள் தாத்தாவிடம் அழைத்துக்கொண்டு போனாள். அவர் சற்று பதட்டத்துடன் காணப்பட்டார். இவர்களைப் பார்த்ததும்,

“வாங்க உங்களுக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன். இன்றைய செய்தியில் அந்தத் தகவலைக் கேட்டு பதறிப்போய் இருக்கிறேன்.....லஷி உங்களைப் பற்றி சொன்னாள். மிலாவின் தாத்தா தொரப்பாவைப் பற்றியும் சொன்னாள். நல்ல மனிதர்கள் நல்ல சிந்தனைகள்.....நடக்கப்போகும் விபரீதத்தைத் தடுக்க உங்களால் முடியும்”

சற்றே நிறுத்தி, அவர்களின் முகம் பார்த்தார்..


ஷாபோ சின்ன புன்முறுவலுடன் ரேவாவையும், மிலாவையும் பார்த்தான்....

“சொல்லுங்க சார். எங்கள் தாத்தா கவலைப் பட்ட அதே விஷயம்தான் எனும்போது.....அதை தடுக்க எங்களால் முடிந்தவைகளைச் செய்வோம்”

“மிக்க நல்லது மிலா, இன்னும் சில நாட்களில் உயிர்த்தெழப்போகும் அந்த பாவிகள்...இனி இவ்வுலகத்தில் நடமாடக்கூடாது. எனக்குக் கிடைத்த இந்தக் கட்டாய ஓய்வில், என் உறக்கக் காலத்தில் நடந்தவைகள் அனைத்தையும் படித்தும், கேட்டும் அறிந்துகொண்டேன். அற்புதமான உலகமாய் இருக்கிறது. மனிதாபிமானம் மிக்க ஆட்சியாளர்கள், சுறுசுறுப்பும், நல்ல சிந்தனையையும் கொண்டவர்களாய் மக்கள்....இவையனைத்துக்குமே ஆபத்து அந்த இருவரால்.....எனவே அவர்கள் எழவேக் கூடாது”

“இதையேத்தான் தொரப்பா தாத்தாவும் சொன்னார். அந்தப் படக்காட்சிகளையும் காண்பித்தார். பார்த்தோம். எங்கள் தலைமுறைக்கு அந்த கொடூரம் அதீதம். இப்போது நீங்களும் அதையே சொல்வதிலிருந்து...அந்தக் கொடூர நிகழ்வுகளைப் பார்த்து நெஞ்சம் பதைத்தவர்கள் என்பது தெரிகிறது. நாங்கள் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்....மூத்த தலைமுறையின் வழிகாட்டுதலில் இளைய தலைமுறையினர் செயலாக்கிக் காட்டுகிறோம்”

ஷாபோ சொல்லி முடித்தவுடன், கட்டிலிலிருந்து எழுந்து, மூவரையும் ஒருசேர அணைத்துக்கொண்டார்.

“தாத்தா நானும் உங்களுடன் இணைகிறேன். என்ன செய்ய வேண்டுமென்பதை மட்டும் சொல்லுங்கள்”

லஷியை புன்முறுவலுடன் பார்த்தார்.

“மகிழ்ச்சி லஷி. உன் பங்கும் இருக்கும். நான் முதலில் தொரப்பாவை சந்திக்க வேண்டும் என்னை அழைத்துச் செல்லுங்கள்”

“இன்றேவா....?”

ரேவாக் கேட்டதும்,

“இப்போதே”

உற்சாகமாய் தயாரானார்.

தொரப்பா சொன்னதைப்போல திரையில் அவர் முகம் பார்த்து தகவல் சொல்லப்பட்டதால்....இவர்கள் இறங்கும்போது....அந்த இடத்துக்கே வந்துக் காத்திருந்தார். முகத்தில் சந்தோஷமிருந்தது. லஷியின் தாத்தாவைக் கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அனைவரும் பண்னை வீட்டுக்குள் சென்றதும், ரோபோவின் கையில் தயாராய் இருந்தது இயற்கை உணவு சிற்றுண்டி. அதை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்த லஷியின் தாத்தாவைப் பார்த்து....

“என் வேலையாள், என் பாதுகாவலன்.....என் பேச்சுத் துணை இவன். பெயர் மிக்கி .என் நலத்துக்காகாத உணவைத் தரும் என் பேரனையே சில சமயம் அதட்டுவான்....எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சாப்பிடும் உங்களுக்கு இந்த உணவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. சாப்பிடுங்கள்”

சிற்றுண்டி நேரம் முடிந்ததும், அனைவரும் திட்டத்தை அலச தயாரானார்கள். தொண்டையைக் கனைத்துக்கொண்டு முதலாவதாய் கர்னல் தொரப்பா,

“அந்த உடல்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைவதுதான் நமது முதல் முயற்சி.....உட்சபட்ச பாதுகாப்புக் கருவி பொருத்திய அறைக்கதவு. அதனுள் நுழையும் அனுமதி வெகு சிலருக்கே. அதுவும் மேம்படுத்தப்பட்ட பயோ மெட்ரிக் முறையில் வடிவமைக்கப்பட்டது.. அதனை மீறி எப்படி நுழைவது?”

தனது ராணுவத் திட்டமிடலின் அனுபவத்தை தன் பேச்சில் காண்பித்தார்.

“அது அடுத்தது.....முதலில் அந்த மருத்துவமனைக்குள் எந்த சந்தேகமும் வாராமல்...சில மணிநேரம் தங்கியிருக்க வேண்டுமே அதற்கு என்ன செய்வது?”

லஷியின் கருத்துக்கு,

“பலே என் பேத்தி என்பதை நிரூபித்துவிட்டாய் லஷி. அதற்குத்தான் நான் இருக்கிறேனே. அந்த மருத்துவமனையின் உபயோகிப்பாளரல்லவா நான்....மெதுவாய் இவ்வுலகத்துடன் இணைந்து வாழ தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கும் என் உடலுக்கு எந்த அசுகம் வந்தாலும், அதை இலவசமாய் சரியாக்கிக் கொடுப்பதுதானே அந்த மருத்துவமனைக்கும் எனக்குமான ஒப்பந்தம்”

“அதற்காக....நன்றாக இருக்கும் நீங்கள் அசுகப்படுவதா....அதனால் விபரீதமாய் ஏதாவது நிகழ்ந்துவிட்டால்....”

லஷியின் அக்கறை அவளது கவலையான பேச்சில் தெரிந்தது.

லேசான புன்முறுவலுடன் தொரப்பா....

“கவலைப்படாதே லஷி, உன் தாத்தாவுக்கு அசுகமும் ஏற்படும் ஆனால், ஆபத்தை விளைவிக்காது....அப்படியானதொரு அசுகம்தான் வயிறுக்கோளாறு...”

என்றதும்,

“வயிற்றுக்கோளாறா.....புரியவில்லையே...”

லஷியின் தாத்தாவின் கேள்விக்கு,

“உங்களை இன்னும் சில நாட்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த உணவைத்தானே உண்ணச் சொல்லியிருக்கிறார்கள்.....அதை மீறுங்கள்....வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாத உணவை சாப்பிடுங்கள்....”

என்று சொன்னவரைப் பார்த்து,

“அது ஆபத்தை விளைவித்துவிட்டால்....”

என்ற ஷாபுவின் கேள்விக்கு....

“அதுதான் முன்பே சொன்னேனே....ஆபத்தை விளைவிக்காத....ஆனால் அசுகத்தை அளிக்கும் உணவு ஒன்று இருக்கிறதே...”

“என்னது அது?”

“இப்போது இருக்கும் இளைஞர்கள் விரும்பி உண்ணுகிறீர்களே...பிஸ்ஸாவையும், பர்கரையும் இணைத்து உருவாக்கிய புதிய பிஸாகர் அந்த வேலையை செய்யும்...ஹா...ஹா....”

அவரது சிரிப்பு அனைவருக்கும் தொத்திக்கொண்டது..



தொடரும்......

அக்னி
27-02-2012, 06:50 AM
நீங்க தொடங்கீட்டீங்க...
ஆனா, நான் முதல்ல இருந்து வரணும். நம்ம ஞாபகசக்திக்கு அவ்ளோ பவர். :cool:

தொடர்வதற்கு மிக்க நன்றி பாஸ்...

சிவா.ஜி
27-02-2012, 05:06 PM
அத்தியாயம்-7

அவர்களின் திட்டமிடுதல் நடந்துகொண்டிருந்த அந்த நாளுக்கு முந்தைய நாள், இந்தியா என்ற நாடிருந்த அந்தப் பகுதியின் தென் பகுதியில், தமிழ்நாடு என்று முன்னாளில் அழைக்கப்பட்ட அந்தப் பிரதேசத்தில்...114 வயதில் இன்னும் உயிர் வாழும் வயது மூத்த ஒரு தாத்தா....இந்த வயதிலும்...ஏதோ ஒரு அதிகாரம் தனக்குக் கிடைக்காதா....மீண்டும் அந்த பாராட்டுவிழாக்கள் தொடராதா என அன்றாடம் ஒரு வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தார்.

காஜலக்*ஷேவின் உயிர்த்தெழல் ஊடகங்களில் அறிவிக்கப்பட்டவுடன், மகிழ்ந்தார். அதை ஒரு சாதாரண பெட்டிச் செய்தி அளவுக்குத்தான் ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. ஆனால்....தொரப்பாவுக்கும், லஷியின் தாத்தாவுக்கும் அது எப்படி முக்கிய செய்தியாயிற்றோ அதைப்போலவே....ஆனால் வேறுபட்ட நோக்கத்துடன் இவருக்கும் முக்கிய செய்தியாயிற்று. உடனே தன் கொள்ளுப் பேரன்களிடம் சொல்லி அவர்களது தொலைக்காட்சியில் ஒரு அறிவிப்பை வெளியிடச் சொன்னார்... அவர்களும் அன்று இரவே,

“புது உலக தொலைக்காட்சிகளிலேயேஏஏஏஏஏ....முதன்ன்ன்ன்ன்ன்ன்முறையாக...ஒரு உண்ணாவிரதத்தை நேரடி ஒளிபரப்பாய் உங்கள் நெப்டியூன் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்...நாளை காலை 11 மணிக்கு நமது பிரதேசத்தின் முன்னாள் முதல்வர், காஜலக்*ஷேவின் உயிர்த்தெழலைக் கண்டித்து பிரமாண்ட உண்ணாவிரதம் இருக்கிறார்...காணத்தவறாதீர்கள்...”

என்று அறிவித்தார்கள்.

சென்னை என்று முன்பு அழைக்கப்பட்டுக்கொண்டிருந்த அந்த மாபெரும் நகரம்...தற்போது உள்ளேறியக் கடலால் சுருங்கி, தனது மணல் மேவியக் கடற்கரையைத் தொலைத்துவிட்டிருந்தது. அதனால்..அவருக்குப் பழக்கமானக் கடற்கரை இல்லாததால், வெகு சில பழைய மிச்சங்களில், மாறுபாட்டுக்கு உட்படுத்தாமல், அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் முன்னாள் இந்தியப் பிரதமரின் நினைவிடத்தில் தனது உண்ணாவிரதத்தை அரங்கேற்ற தாத்தா முடிவுசெய்தார்.

பழைய நினைவு மாறாமல், மறக்காமல் இரண்டு காற்றுக் குளிர்விப்பான்களோடு....தவறிவிட்ட மனைவியில்லாமல், இணைவியுடன் தன் பறக்கும் நாற்காலியில் அந்த இடத்துக்கு அவர் வந்து சேர்ந்தபோது காலை பதினொரு மணி. காசுகொடுத்துக் கூட்டம் சேர்க்க இயலாத நிலையில்...உயர்தர சிந்தெடிக் ரோபோக்கள் பலவற்றை வாடகைக்கு எடுத்து, வாழ்க, வாழ்க எனக் கோஷம் போடும்படியாய் அதன் மின்ணனு மூளைக்குள் ஒரு நிரலை பதித்துக் கூட்டிக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார்கள். உண்ணாவிரதம் தொடங்கிய ஒன்றரை மணி நேரத்துக்குள், அவரது கொள்ளுப் பேரன்களில் ஒருவர் அவரது காதில் வந்து எதையோ சொன்னவுடன், தன் சட்டையில் சொருகி வைத்திருந்த கம்பியில்லா ஒலிவாங்கி மூலம்,

“எனது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மதிப்பளித்து, புது உலகின் அதிபர், அந்தக் காஜலக்*ஷேவை உயிர்த்தெழ வைப்பதில்லை என உறுதி கொடுத்ததால்....என் இணைவி கொடுக்கும் இந்த கம்பங்கூழைக் குடித்து என் விரதத்தை முடிக்கிறேன்...எந்தக் காலத்திலும் என் இனத்துக்குப் போராட நான் பின் வாங்க மாட்டேன் எனச் சொல்லிக்கொள்வதில் பெருமைப் படுகிறேன்.”

அவர் பேசியது...கம்பியில்லா ஒலிபெருக்கி மூலம் கேட்டது. அந்தப் பகுதியில் சாலைப் போக்குவரத்து தடை செய்திருந்ததால்....உயரெழும்பி பறந்துகொண்டிருந்த தங்கள் வாகனத்திலிருந்தவர்கள் மட்டும், ஒரு மைக்ரோ விநாடி நேரம் எட்டிப் பார்த்துவிட்டுப் பறந்தார்கள்.


மருத்துவமனையில் சேர ஒரு வாய்ப்பை பிஸாகர் மூலம் உருவாக்கியபிறகு, அந்த அறைக்குள் நுழையும் வழியைப் பற்றிய ஆலோசனைகள் தொடர்ந்தன..

“அந்த அறைக்குள் நுழையும் அதிகாரம் இருக்கும் யாரையாவது நமது திட்டத்துக்குள் கொண்டு வந்தால் வேலை சுலபமாகிவிடும் அல்லவா”

ஷாபோவின் கருத்துக்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்த தொரப்பா...

“இல்லை ஷாபோ...எந்தவிதத்திலும் இதில் நம் குழுவைத்தவிர பிறரை நுழைக்கக்கூடாது. தேவையற்ற பிரச்சனைகள் வரும். உங்கள் மின்னணு அறிவை வைத்து ஏதேனும் செய்ய முடியுமா பாருங்கள்....”

“தாத்தா உள்ளே நுழைய நான் உங்கள் காலத்து யுக்தியைக் கையாளப்போகிறேன்..”

ஷாபோவைப்பார்த்து அவர் சொன்னதும், அதற்கு மிலாவின் பதிலாய்.மேற்கண்ட வாக்கியம் வந்ததும்,

“என்ன...எங்கள் காலத்து யுக்தியா...சொல்...சொல்...”

தொரப்பாவும், லஷியின் தாத்தாவும் ஆர்வமானார்கள். லஷியும், ரேவா, ஷாபு மூவரும் ஆச்சர்யத்துடன் மிலாவைப் பார்த்தார்கள்...

“ எல்லாம் நீங்கள் போட்டுக்காட்டிய பழைய இந்தியப்படங்களைப் பார்த்ததால் தோன்றியதுதான்...”

தொரப்பா சிரித்துக்கொண்டே...

“சொல் மிலா....அந்த இந்தியத் திரைப்படங்கள் அப்படியென்ன சொல்லிக்கொடுத்தது என்று...”

அவன் சொன்னதைக் கேட்டதும், அதுவே சரியாய் இருக்குமென்பதை சில கருத்துப்ப பரிமாற்றங்களுக்குப் பிறகு அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

“அந்த அறைக்குள் கண்கானிப்புக் கேமராக்கள் இருக்குமே அதை என்ன செய்வது?”

லஷியின் தாத்தாக் கேட்டதும்,

“அதைப்பற்றிக் கவலைப் படாதீர்கள் தாத்தா...அவற்றை தற்காலிகமாக செயலிழக்கவைக்க எங்களால் முடியும்”

என்று லஷி சொன்னாள்.

அதன் பிறகு உறங்கிக் கொண்டிருக்கும் அந்த இருவரையும் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி பல விவாதங்களுக்குப் பிறகு ரேவா சொன்ன யோசனையை செயல்படுத்த முடிவெடுத்தனர்.

லஷியின் தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன் அங்கே சென்று அந்த அறைக்குள் யார் யார் எப்போது போய் வருகிறார்கள் என்று ஷாபோவும், ரேவாவும் நோட்டமிட்டு வர நியமிக்கப்பட்டார்கள்..

அந்தக் கொடூரர்களை உயிருடன் எழுப்பக்கூடாது என இங்கே இவர்கள் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த அதே நேரத்தில், அவர்கள் இரண்டுபேரும் உயிர்த்தெழுவதில் ஆர்வமுள்ளவர்கள் அதற்குப் பிறகான நடவடிக்கைகளைப் பற்றி ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார்கள்.

அதிலும் குறிப்பாக காஜலக்*ஷேவின் ஆதரவாளர்கள்..பயங்கரமான ஒரு திட்டத்தை செயல்படுத்த யோசித்துக்கொண்டிருந்தார்கள். தற்போதைய அதிபரைக் கொன்றுவிட்டு, தாங்கள் பயிற்சியளித்து வைத்திருக்கும், மறைத்து வைத்திருக்கும் படையைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிப்பதுதான் அந்தத் திட்டம். அந்தக் குழுவில் இருந்தவர்கள் அனைவருமே 60 சொச்ச வயதுக்காரர்களாய் இருந்தார்கள். மூளைக்குள் விஷம் ஊற்றப்பட்டிருந்தது.

மதங்களில்லா இந்த பூமியில்...மதம்பிடித்தவர்களாய் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். தங்களின் மறைவு வாழ்க்கைக்கு இந்தக் காலத்தின் நவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அது மட்டுமின்றி, அவர்கள் நாட்டில் இயற்கையாய் இருக்கும் காடுகளை அழிந்துவிடாமல் பாதுகாக்க அரசாங்கம் அவற்றுக்குள் மனித நடமாட்டத்தைத் தடை செய்திருந்தது. அந்தக் காடுகளின் மேல் விமானங்களோ மற்ற பறக்கும் வாகனங்களோ பறக்கத் தடை இருந்தது. விலங்குகளின் அமைதியான வாழ்க்கையை தொந்தரவு செய்யாமலிருக்க தங்களின் இராணுவ வீரர்களையே அதனுள் அனுமதிக்காத அளவுக்கு நல்ல அரசாங்கம். ஆனால்...அந்த நல்லத்தன்மையை உபயோகப்படுத்திக்கொண்ட இந்தக் கள்ளக்கூட்டம்....வெளி உலகுக்குத் தெரியாமல்...ஒரு அழித்தொழிப்புப் படையை வளர்த்து வந்தது.

தங்களின் திட்டம் மிகச் சரியாய் செயல்படுமளவுக்கு அதைத் தீட்டி முடித்துவிட்டதானத் திருப்தியுடன் அந்த அரக்கனின் உயிர்த்தெழலுக்காய் காத்திருந்தார்கள்...மனித ரத்தம் ருசிக்கும் ஆவலுடன்....

லார்ஜ்குஷ்ஷின் ஆதரவாளர்களுக்கு வேறு திட்டமிருந்தது. ஆட்சியைப் பிடிப்பதல்ல அவர்களது நோக்கம்....அபரிமிதமான இந்த விஞ்ஞான வளர்ச்சியில், குள்ளநரித்தனமான வியாபாரிகள் யாருமில்லை. அதனால்...வியாபார உலகில் தனியொருவராய் யாரும் கோலோச்ச முடியவில்லை. ஆனால் லார்ஜ்குஷ் என்ற நரி...அதனை உடைத்தெறியுமென்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. பொருளாதார அதிகாரத்தை தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கலாமென நம்பிக்கையோடு இருந்தார்கள்.

அன்று அனைத்திலும் மூக்கை நுழைத்து நாட்டாமை செய்த அமெரிக்கா என்ற நாட்டைப்போல...தங்கள் நிறுவனத்தையே ஆதிக்க சக்தியாக மாற்ற ஆவலுடன் இருக்கிறார்கள்....


தொடரும்......

Hega
27-02-2012, 09:22 PM
புத்தம் புதிய பூமிக்காக உறைந்திருப்போர் எழுவார்களா.. தாத்தா, பேரர்களின் கூட்டு முயற்சி வெற்றி பெறுமான்னு பிட்சாகர் சாப்பிட்டுகொண்டே காத்திருக்கேனாக்கும்.


ஹாஸ்பிடலுக்குள் நுழைய தாத்தா எடுக்கும் முயற்சியால் அவர் உடல் நிலையில் மாற்றம் வருமா எனபதை அறியவும் ஆவல் கூடுது..

அடுத்து தொடருங்கள்....

அக்னி
28-02-2012, 09:53 AM
சுகம் என்பதன் எதிர்ப்பதம் அசுகம் போல... எனக்குப் புதுச்சொல்...

தொடர்ந்து வாழும் தொரப்பாவும், இடைவெளி விட்டு வாழும் விஸ்வநாதனும், இளைஞர்களுடன் இணைந்து புதிய உலகத்திற்கு வரவிருக்கும் ஆபத்தை எப்படி நீக்கப்போகின்றனரோ...

ஆனால், உலகின் பழையவிரு கொடூரர்களும் மீண்டும் உயிர்பெற்று, நாசம் விளைவிக்கும் செயற்பாடுகளைச் செய்கையில், இந்தக் கூட்டணியால் முறியடிக்கப்படும் என்றே என் உள்ளுணர்வு கூறுகின்றது. பார்க்கலாம்.

எப்படியோ வரப்போகும் ஆபத்து, பழைய உலகத்தின் கொடூர வழிமுறைகளில் வரும் என்பதை உணர்வதால் வரும் கலக்கத்தை,
அதனை முறியடிக்க, நல்லவர்கள் கட்சியிலும் இரு பழையவர் இருக்கின்றனரே என்பது கொஞ்சம் ஆற்றுகின்றது.

நோய் நொடியில்லா, போரில்லா உலகம் கற்பனையில் அழகாய் இருக்கின்றது.

கதையில் இன்னும் சூடு பிடிக்காத கனி, லஷி இருவரின் எதிர்காலக் காதல் எப்படியிருக்கும் என்பதை அறியும் ஆவல் அதீதமாய் எழுகின்றது.

தொடருங்கோ... தொடருங்கோ...

தாமரை
28-02-2012, 10:24 AM
வாங்க சிவாஜி அடுத்த பாகம் போடுங்க...:)

சிவா.ஜி
28-02-2012, 03:47 PM
அத்தியாயம் 8

இந்தியாவின் தென்கோடித் தாத்தாவின் அந்த ஒன்றரை மணி நேர நாடகத்தை ஊடகங்களில் வாசித்துவிட்டு தலையில் அடித்துக்கொண்டார் லஷியின் தாத்தா.

“இவர் வேறு சும்மா இருக்காமல்....அந்த ஆளை முக்கியமானவனாகக் காட்டிவிட்டார். இதனால் அந்த உடல்கள் இருக்கும் அறையின் பாதுகாப்பு மேலும் கூட்டப்பட்டுவிடுமோ எனக் கவலையாய் இருக்கிறது லஷி.”

“கவலைப் படாதீர்கள் தாத்தா....எப்படியும் அந்த அறைக்குள்தான் உடல்கள் இருக்கப்போகின்றன. வெளியே மேலும் ஓரடுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டாலும், மிலாவின் யோசனையோடு அதை சமாளித்துக்கொள்ளலாம்.”

“ஆமாம் லஷி, அந்தப் பையனின் தாத்தாவைப் போலவே அவனும் புத்திசாலி...கூடவே நல்லவனும்”

“உங்களைப் போலவே நானும் இருப்பதைப்போல...”

குறும்போடு புன்னகைத்துக் கொண்டே சொன்ன லஷியைப் பார்த்து லேசாக சிரித்துவிட்டு,

“சந்தேகமென்ன...ஆனால் லஷி, நாம் நேற்று தொரப்பா அவர்களின் பண்ணைத் தோட்டத்தில் உருவாக்கியத் திட்டம் குறித்து உன்னுடைய அப்பா அம்மாவுக்குக் கூடத் தெரியக்கூடாது...”

“சரி தாத்தா....ஷாபுவும் ரேவாவும் இந்நேரம் மருத்துவமனைக்குள் நுழைந்திருப்பார்கள்...என்னுடைய ட்ராக்கரில் ஏதாவது சிக்னல் தெரிகிறதா எனப் பார்க்கிறேன்”

எனச் சொல்லிவிட்டு அந்த மருத்துவமனையின் வரைபடத்தை பதிவேற்றிய ட்ராக்கரை உயிர்ப்பித்தாள். ஷாபுவும், ரேவாவும் தங்கள் உடலில் வைத்திருக்கும் அலைகடத்திகள், இரண்டு புள்ளிகள் ஒன்றாய் நகர்வதைக் காட்டியது. ‘ஏன் இவர்கள் ஒன்றாகவே போகிறார்கள்’ என அவள் நினைத்துக்கொண்டிருக்கும்போதே இரண்டு புள்ளிகளும்,,,,எதிரெதிர் திசையில் பிரிந்து பயணித்தன.

மருத்துவமனையின் அந்த தளம் சற்றே அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பைக் கொண்டிருந்தது. உயிர்தெழக் காத்திருக்கும் கூடத்தின் பக்கத்து அறை...உயித்தெழ வைப்பதற்கும், அதற்குப் பக்கத்து அறை அப்படி எழுந்தவர்களுக்கு ஏதேனும் பிரச்சனையென்றால் சிகிச்சையளிப்பதற்கும் பயன்பட்டது. அதனால்....அந்தத் தளத்திற்கு யாரும் சரியானக் காரணமில்லால் போக முடியாது.

ஒன்றாகவே வந்த ஷாபுவுக்கும், ரேவாவுக்கும் இப்போது அதுதான் பிரச்சனை. எப்படி அங்கே போவது...?? சாபு ஒரு யோசனை சொன்னான்.

“ரேவா நீ பாதை தெரியாமல் அங்கே போனதைப்போல போய்விடு...அப்படியே யாராவதுக் கேட்டால்...வேறு ஏதாவது பகுதியின்....”

அவனை முழுதும் கூறவிடாமல்...

”கவலைப்படாதே நான் சமாளித்துக் கொள்கிறேன். என் அப்பாவின் பெயர் எனக்குச் சில சலுகையைப் பெற்றுத்தருமென்று நம்புகிறேன். நீ கீழ்தளத்தில் காத்திரு இதோ வந்துவிடுகிறேன்.”

லஷியின் ட்ராக்கரில் இரு புள்ளிகளும் தனித்தனியாய் பிரிந்துபோன அதே நேரம் இந்த உரையாடல் நிகழ்ந்து....

ஷாபுவிடம் மேற்கண்டவாறு சொல்லிவிட்டு கிளம்பிய ரேவா...வாசலில் காவலுக்கு இருந்த ஆயுதமேந்தியக் காவலரைப் பார்த்து சற்றே தயங்கினான்.....காத்திருந்தான். இவனது அதிர்ஷ்டமா...இல்லை காவலரின் அவசரமா தெரியவில்லை....இயற்கை உபாதைக்கு ஒதுங்கினார் அவர். இத்தனைப் பாதுகாப்பிருக்கும் இடத்துக்கு யார் வரப்போகிறார்கள்...ஐந்து நிமிடம்தானே என அவர் நினைத்திருக்கலாம். அந்த இடைவெளியில் வராந்தாவுக்குள் நுழைந்த ரேவா மூன்று அறைகளையும்...வேகமாய் நோட்டமிட்டான். கதவுகள் எந்த திசையில், திறக்கின்றன என அவைகளின் அமைப்பை, முக்கியமாய் அந்த உடல்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையைப் பார்த்து தெரிந்துகொண்டான். வேகமாய் திரும்பியவனை முறைத்துக்கொண்டு நின்றார் அந்த காவலதிகாரி.

இவ்வளவு சீக்கிரமாய் முடித்து விட்டாரே....இவர் கடமையுணர்ச்சிக்கு அளவேயில்லையா...நினைத்துக்கொண்டே...போலியான பதட்டத்தை வரவழைத்துக்கொண்டு,

“நான் தேடி வந்த இடம் இது இல்லை....என்னவோ இந்த இடத்தைப் பார்த்தாலே ஒரு அச்சம் ஏற்படுகிறது....நான் சரியான இடத்துக்குப் போக உங்களால் உதவ முடியுமா?”

என பவ்யமாய்க் கேட்டதும், அந்தக் காவலதிகாரியின் இறுகிய முகம் இளகியது. ரேவா சொன்ன இடத்துக்கு வழி சொல்லி அனுப்பினார்.

நேரே கீழ்தளத்துக்கு வந்தவன் ஷாபுவை அழைத்துக்கொண்டு வேகமாய் வெளியேறி தன் வாகனத்தில் அமர்ந்து பறந்தான். லஷியின் வீட்டுக்குப் போனார்கள். பார்த்ததை சொன்னார்கள். லஷியின் தாத்தா உடனேக் கிளம்பி,

“வாருங்கள் தொரப்பா அவர்கள் பண்ணைக்குப் போவோம்”

பண்ணைவீட்டில் அவர்கள் திட்டம் இறுதிவடிவம் பெற்றது. நாளையே லஷியின் தாத்தா பிஸாகரை சாப்பிடுவது என முடிவானது. லஷியும், ஷாபுவும், கண்காணிப்புக் கேமராவை செயலிழக்க வைக்கும் கருவியை தயார் படுத்தினார்கள். மிலா....லஷியிடம் அவள் என்ன செய்ய வேண்டுமெனத் தெளிவாய் சொன்னான்.

அடுத்தநாள் லஷியின் தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....அவரைப் பார்க்கப்போன....லஷியும், ஷாபுவும்...மிலாவும் உடனடியாக தங்கள் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை அங்கு உருவாகியிருந்தது.

தொடரும்....

சிவா.ஜி
28-02-2012, 03:49 PM
நன்றி தாமரை.

மதி
29-02-2012, 03:18 AM
மொத்தமாய் திரும்ப படித்தேன்.. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? தெரப்பாவின் திட்டங்கள் பலித்ததா?

செல்வா
29-02-2012, 11:44 AM
மீண்டும் தொடர்ந்ததற்கு நன்றி அண்ணா...! (இடையில் ஏதோ கல் இடறுகிறதே?)
மீண்டும் ஒரு முறை முழுதும் வாசித்தால் தான்.. என்னால் கதையோட்டத்துடன் பயணிக்க முடியும்.
விரைவில் வாசித்து விட்டு வருகிறேன்.

சிவா.ஜி
04-03-2012, 07:47 PM
அத்தியாயம்-9

லஷியின் தாத்தா விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமத்திக்கப்படும் நாளைக்கு முதல் நாளே தொரப்பாவும் அவர்களுடன் தலைநகரம் வந்துவிட்டார். மிலாவின் வீட்டில் தங்கியிருந்தார். தவறாமல் நடைப்பயிற்சி செய்யும் அவர் அன்று மாலையும், மிக்கியைக் கூட்டிக்கொண்டு அருகிலிருந்த பூங்காவுக்குப் போனார். தனது அரைமணிநேர நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு களைப்பாய் பூங்காவிலிருந்த இருக்கையில் அமர்ந்தார். மிக்கி அவருக்கு மூலிகைச் சாறு கொடுத்தது. குடித்துக்கொண்டிருக்கும்போதே...சற்று தூரத்தில் குப்பைக் காதிதம் ஒன்று தரையில் விழுந்திருப்பதைப் பார்த்தார் தொரப்பா.

இந்தப் புத்தம் புது பூமியில் யாரும் பொது இடத்தில் குப்பையைப் போடுவதில்லை...பிறகு எப்படி இந்தக் குப்பை என யோசித்தவாறே...மிக்கியை அழைத்து அந்தக் குப்பையை எடுத்து அருகிலிருக்கும் தொட்டியில் போடுமாறு பணித்தார். விசுவாச வேலைக்காரனாய் அதை எடுக்க மிக்கி நகர்ந்தது. குனிந்துக் குப்பையை எடுத்த மிக்கி அருகில் கூட்டமாய் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பவர்களின் பேச்சிலிருந்து சில வார்த்தைகளைக் கேட்டது.

தன் நினைவகத்தில் பதிவு செய்யப்பட்ட சில வார்த்தைகளை அது ஒத்துப்போனதால்..சற்று தாமதித்தது. மாலை விழுந்துவிட்ட நேரமாதலால்...சற்றே மங்கலான வெளிச்சத்தில் அதன் சென்ஸார்களால் பிம்பத்தை தெளிவாய் பதிவு செய்துகொள்ள முடியவில்லை. தன்னிச்சையாய் அதன் இருளூடுரு அலைக்கற்றைகளை உயிர்ப்பித்தன. முகங்கள் தெளிவாய்த் தெரிந்தது. சில முகங்கள்...மிக்கியை தொந்தரவு செய்தன. அவற்றைப் படங்களாய் பதிவாக்கிக்கொண்டது. கூடவே அவர்களின் பேச்சையும் பதிவு செய்துகொண்டது. கூட்டத்திலிருந்தவர்களில் ஒருவர் சட்டென்று நிமிர்ந்து மிக்கியைப் பார்த்தார். அது ரோபோ என்பதைத் தெரிந்துகொண்டு மீண்டும் பேச்சில் ஈடுபட்டாலும், அரசாங்கத்தின் உளவாளியாய் இருக்கக்கூடுமோ என சந்தேகம் எழுந்து மீண்டும் நிமிர்ந்து பார்க்க....மிக்கி கையில் குப்பையுடன் குப்பைத் தொட்டியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

அந்தக் கூட்டம்...நாளை எழுப்படப்போகும் காஜலக்*ஷேவை வரவேற்க வந்திருந்தக் கூட்டம். அதனால்தான் அந்த ஒருவருக்கு இப்படிப்பட்ட சந்தேகம் எழுந்தது. ஆனால்...மிக மேன்மையான தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருந்த மிக்கி..அந்தப் பார்வையின் அர்த்தத்தையும், முக மாறுதல்களின் நோக்கத்தையும் தனக்குள் பதிவுசெய்யப்பட்டிருந்த ட்ரிலியன் கணக்கான தகவல்களின் உதவியால்...ஒரு சில நேனோ விணாடிகளில் உணர்ந்து கொண்டது. சந்தேகத்தை ஏற்படுத்தாமல்....குப்பையை எடுத்துக்கொண்டு போய்..தொட்டியில் போட்டுவிட்டு..தொரப்பாவிடம் சென்றது. அதுவரை அதன் நடவடிக்கையைக் கவனித்துக்கொண்டிருந்த அந்தக் கூட்டத்தின் சந்தேகப்புள்ளி...அது ஒரு குப்பைப் பொறுக்கிப்போடும் ரோபோ என அலட்சியமாய் சிரித்துக்கொண்டே தங்கள் ஆலோசனைக்குள் மீண்டும் இறங்கினார்.

தொரப்பாவை நெருங்கியதும்,

“ஏன் மிக்கி தாமதம்...என்ன செய்துகொண்டிருந்தாய் அங்கு..?”

என்ற தொரப்பாவின் கேள்விக்கு...தனது வயிற்றில் பதிந்திருந்த திரையை உயிர்ப்பித்துக் காட்டியது. அந்த நேரத்தில் தொரப்பாவுக்கு எதுவும் சரியாய் விளங்கவில்லை. ஆனாலும், தன் விசுவாசமிக்க மிக்கி...எதையோ தனக்குக் காட்ட எடுத்து வந்திருக்கிறது என புரிந்துகொண்டார்.

“சரி நட. வீட்டுக்குப் போய் பார்த்துக்கொள்ளலாம். முதலில் அந்தத் திரையை அணை. அந்தக் காலத்து பயாஸ்கோப்பு பார்ப்பதைப்போல உள்ளது...”

சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு, தன் கைகளை ஊன்றி மெள்ள எழுந்த தொரப்பாவை தன் இயந்திரத் தலையை ஒரு பக்கமாய் சாய்த்து வித்தியாசமாய்ப் பார்த்து...அவர் சொன்ன ‘பயாஸ்கோப்’பை தனது நினைவகத்தில் தேடத் தொடங்கியது.

“வா...வா...நீ தேடினாலும் அந்த வார்த்தை உனக்குக் கிடைக்காது....எங்கள் காலத்திலேயே வழக்கொழிந்துவிட்ட சில வார்த்தைகளில் இதுவும் ஒன்று...நட”

முன்னால் நடந்தவரைத் தொடர்ந்தது மிக்கி...தொரப்பாவின் நுண்ணோக்கை அதிசயித்தபடி....

மருத்துவமனையில்....உடல்கள் வைக்கப்படிருந்த அறையிருந்த கருவியொன்று தவறாய் இயங்கியதால்...அதனுள் மூன்று பேர் கொண்ட குழு அதனை சரி செய்ய நுழைந்திருந்தது. பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலருடன், மேலும் இரண்டுபேர் நிற்க வைக்கப்பட்டார்கள். விஸ்வநாதன் அவர்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் அப்போது லஷியும், ஷாபோவும், மிலாவும் இருந்தார்கள். காலையிலேயே அவரை மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, கோளாறைக் கண்டுபிடித்து, மருந்து கொடுத்திருந்தார்கள். இன்னும் இரண்டு மணிநேரம் அவர் கவனிப்பில் இருக்க வேண்டுமென்றும் அதன் பிறகு மீண்டும் பரிசோதித்துவிட்டு அவரை வீட்டுக்கு அனுப்பிவிடுவதாகவும் சொல்லியிருந்தார்கள்.

அதனால் சற்று பதட்டமானார்கள் நால்வரும்.

“இரண்டு மணி நேரத்தில் நம் வேலையை முடிக்க வேண்டும் ஆனால்...இந்த நேரம் பார்த்து அந்த அறைக்குள் போக முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது....என்ன செய்யலாம்?”

விஸ்வநாதனின் கவலையான கேள்விக்கு,

“கவலைப் படாதீங்க தாத்தா...அந்தக் கருவியை..மிக விரைவில் சரியாக்கிவிடுவார்கள். அதன் பிறகு ஒருமணி நேரம் கழித்து அதன் இயக்கத்தை ஆய்வு செய்ய ஒருவர் உள்ளே போவார் அந்த நேரம் நமக்குப் போதும்”

ரேவா சொன்னதும் வியந்து,

“உனக்கு எப்படி இந்த விவரங்கள் கிடைத்தன...?”

“ஒட்டுக் கேட்கும் கருவியொன்றை அந்த அறைக்குப் பக்கத்து அறையின் சுவரில் ஒட்ட வைத்திருக்கிறேன். அது சுவர் தாண்டியும் கேட்கும். உள்ளே அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன்”

சொல்லிக்கொண்டே தன் காதுகளிலிருந்து மிகச் சிறிய ஒலிப்பானை வெளியில் எடுத்துக் காட்டினான்.

“ஹா...ஹா...புது உலகத்தின் தொழில்நுட்ப இளைஞர்கள்..”

வெளியே சத்தம் கேட்டது. ஷாபோ கதவருகில் சென்று பார்த்தான். அந்த மூவரும் அந்த அறையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர்...இல்லை ஒண்றா...ஒருத்தியா....ஷாபோவின் அடுக்குமாடிக் குடியிருப்பின் 500ஆவது தளத்து ரோபோ பெண்.....தான் கிள்ளிப்பார்த்து சோதித்த ரோபோ...

ஷாபோ பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவனைக் கடந்தவர்களிலிருந்து அந்தக் களுக் சத்தம் கேட்டது. ஒரு பெண்ணின் குறும்புச் சிரிப்பு.

ஷாபோ ஆச்சர்யப்பட்டான்...நிஜப்பெண்ணின் சிரிப்பைப் போலவே இருக்கிறதே....நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவள்...அது....அவனை நோக்கி .வந்தாள்....வந்தது..

தொடரும்

சிவா.ஜி
08-03-2012, 10:06 PM
அத்தியாயம்-10

வீட்டுக்கு வந்ததும் தொரப்பா பொதி இருக்கையில் அமர்ந்து சாய்ந்ததும், மிக்கி அவருக்கு ஒரு தூவாலையை கொண்டு வந்து கொடுத்தது. சிரித்துக்கொண்டே அதை வாங்கி முகத்தைத் துடைத்துக்கொண்டவர்,

“மிக்கி இப்போது காட்டு...நீ என்ன பார்த்தாய்...என்னக் கேட்டாய் என”

வயிற்றுத் திரை ஒளிரத்தொடங்கி காட்சிகள் விரியத் துவங்கின....தொரப்பா கண்களைக்கூர்மையாக்கிக்கொண்டார்.....கூர்மையான விழிகள்...பார்த்ததின் பாதிப்பில் விரிந்தன. குறிப்பிட்டக் காட்சியில்,

“மிக்கி நிறுத்து...” எனக் கிட்டத்தட்ட கத்தினார். மிக்கி நிறுத்தியபின் திரையில் தெரிந்த உருவத்தை இன்னும் சற்றுத் தெளிவாக்கிக் காட்டச் சொன்னார். உற்றுப் பார்த்துவிட்டுக் கண்களை மூடிக்கொண்டு தலையை இருக்கையில் சாய்த்தார்.

“அவர்கள் பேச்சை மட்டும் சற்று சப்தம் கூட்டி ஒலிக்க வை மிக்கி”

உடனே செய்தது. அதில் அவர் கேட்ட வார்த்தை....’ஆழ ஊடுருவும் படையணி’ 2004ல் இலங்கை இராணுவம் உருவாக்கிய சிங்கள அரக்கர்களின் படை....

ஆ.....மீண்டும் உருவாகிறதா....இந்தப் புதுப் படையணி எந்த இனத்தை அழிக்கப் போகிறது....?”

மனதுக்குள் சொல்லிக்கொண்ட தொரப்பா...மிக்கியை அருகில் அழைத்து அணைத்துக்கொண்டார்.

“மிக்கி...எத்தனைப் பெரியக் காரியம் செய்திருக்கிறாய் தெரியுமா? அந்த இராட்சதன் அழிந்தால் மட்டும் போதாது....இவர்களும் கூண்டோடு அழிக்கப்படவேண்டியவர்களே....இருக்கட்டும்....முதலில் அந்தப் பணியை முடிப்போம்....பிறகு இவர்களைக் கவனித்துக்கொள்ளலாம். நீ உடனடியாய் இந்தப் படங்களின் தெளிவான பிரதிகளை அச்சிட்டுக் கொடு”

மிக்கி தன்னை அச்சு இயந்திரத்துடன் இணைத்துக்கொள்ள அறைக்குள் போனது.


தன்னை நோக்கி வந்த அந்த ரோபோப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்த ஷாபோவின் முன்னால் வந்து...

“நீங்கள் அன்று என்னை விளையாட்டரங்கத்தில் கிள்ளியபோது அந்த வலியைப் பொறுத்துக்கொள்ள எத்தனைக் கஷ்டப்பட்டேன் தெரியுமா. நான் கனி. ரோபோவல்ல. இந்த மருத்துமனையில் இருக்கும் உயர்தர மின்னணுக் கருவிகளைப் பழுது பார்க்கும் நிறுவனத்தில் தொழில்நுட்ப பொறியாளராய் இருக்கிறேன். சரி...அவர்கள் போகிறார்கள்...நாம் வீட்டில் சந்திப்போம்”

எனச் சொல்லிவிட்டு அவன் பதிலுக்குக் கூட காத்திருக்காமல்...வேகமாய் திரும்பி விரைந்து மறைந்துவிட்டாள்.

ஷாபோ..ஆச்சர்யத்தில் அசந்து நின்றிருந்தான்....அப்போது நான் சந்தேகப்பட்டது சரிதான்...என நினைக்கும்போதே....அட...இவளுக்கு அந்த அறைக்குள் போவதற்கான அனுமதி இருக்கிறதே இவளை ஏன் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது.....தொரப்பா தாத்தா பயப்படுவதைப்போல இவள் ஆபத்தானவளாய் நிச்சயம் இருக்க மாட்டாள்...அவள் வெளியேறுமுன் சென்று பார்க்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டே வேகமாக அவள் போன திசையில் நடந்தான். தேடினான்....சுற்றுமுற்றும் பார்த்தான்....மாயமாகிவிட்டிருந்தாள்.

சோர்வுடன் திரும்பிவந்த ஷாபோவை வியப்புடன் பார்த்த மூவரும் கேள்வியை எழுப்புமுன் நடந்ததைச் சொன்னான்.

“நன்றாகத் தெரிந்த பெண்ணா?”

விஸ்வநாதனின் கேள்விக்கு,

“எங்கள் குடியிருப்பில்தான் இருக்கிறாள். மத்தியதரக் குடும்பம். நல்லவர்கள். அவளுடைய அப்பா ஏதோ அரசாங்கத் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். என்னைப் பார்க்கும்போதெல்லாம் சிநேகமாய் சிரிப்பார்”

“இது போதுமா அவளை நம்புவதற்கு இல்லை வேறு ஏதாவதுக் காரணம் இருக்கிறதா?”

லஷியின் கேள்வியில் தொக்கி நின்றக் கோபம் ஷாபோவுக்கு சிரிப்பை வரவழைத்தது.

“இல்லை வேறு எந்தக் காரணமும் இல்லை”

“நல்லது. இருந்தாலும் தொரப்பா தாத்தா சொன்னதைப்போல இதில் வேறு யாரையும் நுழைக்க வேண்டாம் என்ன தாத்தா நான் சொல்வது சரிதானே?”

“இப்போது அதற்கெல்லாம் நேரமில்லை...அப்படியே இருந்தாலும்...அவளுக்கு எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லி, புரியவைத்து....ம்ஹீம்...வேண்டாம் ஷாபோ...நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி செயல்படுத்துவோம்”

ஷாபோ சரியெனத் தலையாட்டினான்.

“லஷி கண்காணிப்புக் கேமராவைக் கட்டுப்படுத்தும் கருவியை தயார் நிலையில் வைத்துக்கொள். நல்ல வேளையாக இந்த தளத்தின் இடது பக்கம்தான் மருந்தகம் உள்ளது. தாத்தாவுக்கு மருந்து வாங்குவதைப்போல நீ அந்தப் பக்கம் போய்விடு...உள்ளே போனவர் கதவு திறந்து வெளி வரும்போது நீ அந்தப் பக்கத்திலிருந்து வரவேண்டும்...ஷாபோ வலது பக்கம் நின்றிருப்பான்...அவன் அங்கு நிற்பதைக் கவனிக்காமலிருக்க...நான் இந்தப் பக்கம் நின்றுகொண்டிருக்கும் காவலரை திசைதிருப்புகிறேன்...சரியா?”

ஒரு மணி நேரம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில்..சரி செய்யப்பட்ட கருவியின் நலத்தை சரி பார்க்க....அதை சரியாக்கிய மூவரில் இருவர் மட்டும் வந்துகொண்டிருந்தார்கள்.

அதில் ஒருத்தி கனி.

தொடரும்

சிவா.ஜி
02-04-2012, 08:16 PM
அத்தியாயம்-11

புது உலகத்தின் தலைநகரிலிருக்கும் தலைமை அலுவலகம். மிக சுத்தமாய் மிக நேர்த்தியாய் இருந்தது. நவீன ரக ஆயுதமேந்தியக் காவலாளிகள் பெயருக்கு சிலரே காவலுக்கு இருந்தார்கள். அதிபரை எந்த பொதுமக்களும் எந்தவித இடையூறுமின்றி எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்ற அறிவிப்பு இருந்தது. முதல்தளத்திலிருந்த அதிபரின் அறையில் இருந்த அவரது பிரமாண்ட மேசை + கணினி திரையின் மேல் ஒரு அறிக்கை இருந்தது. அது உளவுத்துறையின் அறிக்கை. இலங்கைக் காடுகளுக்கு மேல் பறந்த கண்காணிப்பு செயற்கைக்கோள் எடுத்த சில படங்களும், உளவுத்துறை அதிகாரியின் சில சந்தேகங்களும் அதனுள் இருந்தன.

பொதுமக்களுடன் கலந்துரையாடல் முடிந்து தன் இருக்கைக்கு வந்தவரின் பார்வையில் அது பட்டது. உறையின் மேல் உளவுத்துறை என சிவப்பு எழுத்தில் அச்சடிக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும், அதிபரின் அடர்ந்த புருவங்கள் இணைந்து முடிச்சிட்டன. எடுத்துப் பிரித்தார். படித்தார். படங்களைப் பார்த்தார். யோசனையோடு இருக்கையில் அமர்ந்தார். அந்த அறிக்கையின் வரிகள் மனதில் ஓடியது....

“மதிப்பிற்குரிய அதிபருக்கு(மாண்புமிகு என்ற வார்த்தை ஆசிரியர்களுக்கும், அறிஞர்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமென அரசாங்க ஆணையிருந்தது) நமது கண்காணிப்பு செயற்கைக் கோள்கள் எடுத்தனுப்பிய படங்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாய் அவ்வப்போது எடுக்கப்பட்டப் படங்கள். இலங்கைக் காடுகள் அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. காட்டுக்குள் நுழைய தடையுள்ளது. ஆனால் இந்தப் படங்களில் கூட்டமாய் சில உருவங்கள் காட்டுக்குள் இருப்பது தெரிகிறது. அவை விலங்குக் கூட்டமாய் இருக்கலாம் என இதுநாள்வரை நினைத்திருந்தோம்.

ஆனால்...சில உலோகங்களும் தென்படுவதால் சந்தேகம் எழுந்துள்ளது. அந்தக் காட்டுக்குள் நமது ராணுவத்தின் ஒரு படைப்பிரிவை அனுப்பி சோதிக்கலாமென நினைக்கிறேன். விலங்குகளுக்கு தொந்தரவில்லாமல் இதனை நமது படையினர் செய்வார்கள். தங்கள் அனுமதிக்காக காத்திருக்கிறோம்.

தங்கள் உண்மையுள்ள...”

உலோகங்களென்றால்....ஆயுதங்களா...? பாதுகாக்கப்பட்டக் காடுகளாயிற்றே.... இருக்கும் கொஞ்ச நிலப்பகுதிகளில் கான்க்ரீட் ஆக்ரமிக்காத இயற்கை வளம் இதைப்போன்ற சில பகுதிகளில்தானே இருக்கிறது. வளர்ந்த விஞ்ஞானம் எதை உருவாக்கினாலும்...சுத்தமானக் காற்றை உருவாக்குவது...இந்த அடர்ந்த மரங்கள்தானே....இதற்குள் ராணுவத்தை அனுப்புவதா.....

மிக யோசித்தார். மேசைத் திரையை உயிர்ப்பித்தார். படுக்கைவாட்டிலிருந்த திரை அந்தரத்தில் ஒளிர்ந்தது. உளவுத்துறை அதிகாரியை அழைத்தார். அவரது முகம் திரையில் தெரிந்ததும் வணக்கம் சொன்னார். பதில் வணக்கம் கிடைத்ததும்,

“உங்கள் அறிக்கையை பார்த்தேன். இந்த உலகத்தில் மனிதர்களின் பாதுகாப்பு எத்தனை முக்கியமோ...அதைவிட சற்று அதிக முக்கியம் மரங்களின் பாதுகாப்பு. நகர மனிதர்களுக்கு உள்ள அதே உரிமை காட்டு விலங்குகளுக்கும் உண்டு. அவற்றை எப்படி தொந்தரவு செய்வது? கொஞ்சம் பொறுங்கள். சந்தேகத்தின் பேரில் உடனடி நடவடிக்கை இப்போதைக்கு வேண்டாம். செயற்கைக் கோளின் புகைப்படக் கருவியின் துல்லியத்தை இன்னும் சற்றுக் கூட்டுங்கள். மீண்டும் புகைப்படம் எடுக்கப்படட்டும்....தெளிவானால் நடவடிக்கையை தொடங்கலாம்...இது எனது எண்ணம்...உங்களுடைய எண்ணத்தைக் கூறுங்கள்”

“ஐயா, பாதுகாவலர்களுக்கே ஆபத்திருந்தால்....பாதுகாக்கப்படுபவைகளுக்கு எப்படி பாதுகாப்புக் கொடுக்க முடியும்? அங்கு அரசுக்கு விரோதமாய் ஏதேனும் இருந்தால் அதை அழிப்பதல்லவா நல்லது. இருந்தாலும் உங்கள் யோசனைப்படி மீண்டும் தெளிவான புகைப்படங்கள் எடுக்க ஏற்பாடு செய்கிறேன்...பிறகு செயலில் இறங்கலாம்.”

“நல்லது. நன்றி. வணக்கம்.

தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மருத்துவமனையில் விஸ்வநாதனின் அறை வாசலில் நின்றுகொண்டிருந்த ஷாபோ...அந்த இருவரையும் பார்த்தான். கனியைப் பார்த்ததும் ஆச்சர்யப்பட்டான். தேடும்போது கிடைக்கவில்லை....தானாய் இப்போது வருகிறாள்... அடடா...அவளை மட்டும் நம் குழுவோடு இணைத்திருந்தால்...நமது வேலை சுலபமாகியிருக்குமே....விஸ்வநாதன் தாத்தா சொன்னதைப்போல அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. அவர்கள் உள்ளே நுழைந்து தங்கள் பணியை முடித்துவிட்டு திரும்ப வருவதற்குள் அந்தக் கதவருகே போய் நின்றுவிட வேண்டும்.

நினைத்துக்கொண்டே பின்னால் திரும்பி,

“ரேவா...கருவியை பரிசோதிக்க அவர்கள் வருகிறார்கள். ஆனால் இந்தமுறை கூட யாரும் பாதுகாவலர்கள் இல்லை. இருவரில் ஒருத்தி கனி. ஒட்டுக் கேட்கும் கருவி உயிருடன் இருக்கிறதல்லவா...ஒலிப்பானைக் காதில் பொருத்திக்கொள்...அவர்கள் வேலையை முடித்துவிட்டு திரும்பும் சமயம் நான் கதவருகேயும், நீ காவலதிகாரி அருகேயும் சென்றுவிடவேண்டும். லஷி நீ இப்போதே புறப்படு..கையில் மருந்து சீட்டை மறக்காதே...இந்தா இந்த ஒலிப்பானை உன் காதில் பொருத்திக்கொள்...இந்த ஒலிவாங்கியயை உன் சட்டைக் காலரில் பொருத்திக்கொள். நாம் பேசிக் கொள்ளலாம். நான் சொன்னதும் நீ மருந்தோடு வந்துவிடு...பின் ஏற்கனவே திட்டமிட்டபடி உன் நாடகத்தை அரங்கேற்று மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்”

என்று ஷாபோ நீளமாய், தெளிவாய் சொன்னதும், லஷி புறப்பட்டாள்

“லஷி ஒரு நிமிடம்...அந்த இருவரும் உள்ளே போனதும்..அங்கிருக்கும் கண்காணிப்புக் கேமராவை உன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடு. அந்த சில நொடிகளின் அசைபடத்தை அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு தெரியுமாறு அமைத்துவிடு. பிறகு உன் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துவிடு”

என ரேவா சொன்னதும்,

“சரி ரேவா...நினைவிருக்கிறது..இதோ இந்தக் குட்டிக் கைப்பையில்தான் அந்தக் கருவி இருக்கிறது. நான் கிளம்புகிறேன்...ஷாபோ எச்சரிக்கை...அந்த உயிர்பெறப்போகும் உடலின் மூச்சை நிறுத்தும் பொருளை மறக்காமல் எடுத்து வைத்துக்கொள் உனக்கு கிடைக்கும் நேரம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே”

“சரி லஷி”

அந்த இருவரும் உடல்கள் இருக்கும் அறையின் கதவைத் திறந்து உள்ளே நுழையும் சமயத்தில் அவர்களைக் கடந்தாள் லஷி.

உள்ளே நுழையுமுன்..ஒரு விநாடி கனி அவளைத் திரும்பிப்பார்த்தாள்...

ரேவா காதுகளை உன்னிப்பாக்கினான். ஷாபோ தன் சட்டைப்பையைத் தொட்டுப்பார்த்துக்கொண்டான்.

விஸ்வநாதன் படுக்கையில் அமர்ந்துகொண்டே அவர்களைப் பார்த்துக் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினார்.

தொடரும்....

சிவா.ஜி
02-04-2012, 08:17 PM
அத்தியாயம்-12

மிலாவுக்கும் தொரப்பாவுக்கும் இருப்புக் கொள்ளவில்லை. மருத்துவமனைக்குள் அலைபேசி அனுமதியில்லை என்பதால்....இவர்களால் அங்கிருப்பவர்களைத் தொடர்புகொள்ள இயலவில்லை. ஆனால் லஷி உபயோகித்த அதே ட்ராக்கரின் உதவியால் அவர்களின் நடமாட்டத்தை புள்ளிகளாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஷாபோவும், ரேவாவும் இப்போதும் விஸ்வநாதன் அறையிலேயே இருப்பதை அந்தப் புள்ளிகள் காட்டியது

“என்ன மிலா...என்ன ஆச்சு...ஏதாவது பிரச்சனையா? நீ வேண்டுமானால் போய் பார்த்து வருகிறாயா?”

“வேண்டாம் தாத்தா. எப்படியும்...அவர்களே சமாளித்து காரியத்தைக் கச்சிதமாக முடித்துவிடுவார்கள்”

“இந்த இரண்டு பேருமே உயிர்த்தெழ முடியாமைக்கு யாரோதான் காரணம் என யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதால்தான் இத்தனைத் திட்டமும். இயல்பாய் அவர்களின் மருத்துவத் துறை கோளாறுதானென அவர்கள் நினைக்க வேண்டும்...”

“ஆமாம் தாத்தா. நமது திட்டமும் மிகத் தெளிவாக இருக்கிறது. இடையில் அவர்களில் யாராவது பிடிபட்டாலும், நோக்கம் என்னவென்று அரசாங்கத்தால் அனுமானிக்க முடியாது. ஏனென்றால்....அந்த இருவரையும் யாராவதுக் கொல்லக்கூடுமென்ற எண்ணமே துளியும் இங்கு யாரிடமும் இருக்காது...அதனால்...கவலைப் படாதீர்கள்...இருங்கள் இதோ இரு புள்ளிகளும் நகர்கிறது...பார்ப்போம்...”

“ஷாபோ...அவர்கள் புறப்படத் தயாராகிவிட்டார்கள் உடனே லஷிக்குத் தகவல் கொடுத்துவிட்டு நீ கதவருகே போ. நான் அந்தக் காவலரிடம் போகிறேன். ஜாக்கிரதை”

அவசரமாய் சொல்லிவிட்டு ரேவா புறப்பட்டான்.

ஷாபோவும் லஷிக்குத் தகவல் சொல்லிவிட்டு புறப்பட்டான். கதவருகே சென்று நின்றுகொண்டு திரும்பிப்பார்த்தான். பாதுக்காப்புக்காய் தளத்தின் தொடக்கத்தில் அமர்ந்திருந்த காவலரின் மேசையின் முன்னால் நின்று அவரது பார்வையிலிருந்து ஷாபோவை மறைத்துக்கொண்டிருந்தான் ரேவா.

லஷி கை நிறைய மருந்துகளுடன்..எதிர்பக்கமாய் வந்தாள். கதவு திறந்தது...முதலில் வெளியே வந்தவன்..ஷாபோவின் பக்கம் திரும்புவதற்குள்...லஷி தன் கையிலிருந்த மருந்துகளுடன் தடாலென்று தரையில் விழுந்தாள். அறையிலிருந்து வெளிவந்தவனும், அவனுக்குப் பின்னாலேயே வந்த கனியும் சட்டென்று ஓடிச் சென்று அவள் எழ உதவினார்கள்.

கிடைத்த மிகச் சிறிய இடைவெளியில் ஷாபோ கதவுக்குள் தன்னை நுழைத்து அறைக்குள் போயேவிட்டான். கதவு மூடிக்கொண்டது. உள்ளே நுழைந்தவுடன் அந்த தூக்கலான சில்லிப்பை உடனே உணர்ந்தான். அங்கு வைக்கப்பட்டிருந்த உடல்கள் பற்றிய விவரங்கள் ஒரு அட்டவனையாய் கதவுக்கு அருகிலேயே தொங்கிக்கொண்டிருந்தது. அவசரமாய் அந்த இருவரின் பெயரையும் தேடினான். கிடைத்தது.

இரண்டாவது வரிசையில் நான்காவதும், நான்காம் வரிசையில் ஐந்தாவதுமாய் இருந்தன. முதலில் இரண்டாம் வரிசைக்குப் போனான். அதுதான் காஜலக்*ஷேவின் உடல். இரண்டாவது உடலை ஒன்றும் செய்ய நேரம் கிடைக்காவிட்டாலும்...இந்த உடலை மட்டும் எந்தக் காரணம் கொண்டும் விடக்கூடாது...என நினைத்ததால்...அவசரமாய் அதனருகே சென்றான். உறக்கத்திலிருப்பதைப்போலவும், உயிரற்ற சவம் போலவும் இருவாறாகவும் தெரிந்த அந்த உடலைப் பார்த்ததும், தான் வீடியோவில் கண்ட கொடூரக் காட்சிகள் அவன் நினைவுக்கு வந்து ஆத்திரமேற்படுத்தியது.

இருந்தும் நிதானமிழக்காமல் தன் சட்டைப் பையிலிருந்து அந்தப் பொருளை எடுத்து கையில் வைத்துக்கொண்டு....

“சாகப்போகும் சவமே...உனக்கு இறுதி மரியாதையை பழங்கால இந்திய முறைப்படி செய்கிறேன். செத்துப்போ...ஒரு இனத்தையே அழிக்க நினைத்த உனக்கு....இன்னும் கொடூர மரணமே தேவை...ஆனால்...இதுவே போதும்...உயிரோடு இருந்திருந்தால்...உலக நீதிமன்றம் உன்னைத் தூக்கிலிட்டிருக்குமென்று பயந்து உன் உடலை நவீன விஞ்ஞானத்திடம் ஒப்படைத்தாய்....ஆனால் இந்த நவீன உலகின் இளைஞனால்தான் நீ சாக வேண்டுமென்பது விதி ”

அடுத்த உடலுக்கும் அதே மரியாதையை செய்துவிட்டு வேகமாய்க் கதவருகே வந்தான்.

கீழே விழுந்த லஷியை கைத்தாங்கலாய்த் தூக்கிவிட்ட அந்த இரண்டு பேரும்,

“பார்த்துவரக்கூடாதா....பார் மருந்தெல்லாம் கொட்டிவிட்டது. இரு அவற்றை எடுக்க நாங்களும் உதவி செய்கிறோம்”

என்று சொன்னவர்களிடம்,

“மிக்க நன்றி...நானே எடுத்துக்கொள்கிறேன். உங்கள் உதவிக்கு மீண்டும் நன்றி”

என லஷி சொன்னவுடன் அவர்கள் சென்றுவிட்டார்கள். இதற்குள் ரேவா அங்கிருந்து வந்து லஷிக்கு உதவினான். இருவரும் வேகமாய் விஸ்வநாதனின் அறைக்கு வந்தார்கள்.

“ரேவா எப்படியோ நவீனமும், பழமையும் கலந்து காரியத்தைக் கச்சிதமாய் முடித்துவிட்டோம்...”

“லஷி ஷாபோ அறைக்குள் நுழைந்துவிட்டான். நான்கு நிமிடங்கள் ஆகிவிட்டது. இன்னும் ஒரு நிமிடத்துக்குள் அவன் வெளியே வரவேண்டும்...இல்லையென்றால் கண்காணிப்புக் கேமரா அவனைக் காட்டிக்கொடுத்துவிடும்...கலக்கமாய் இருக்கிறது..”

“கவலைப்படாதே...வந்துவிடுவான்...அங்கிருக்கும் ஒரு பொத்தானை அழுத்தினால்...கதவு திறந்துகொள்ளும்...இதோ வந்துவிடுவான்....நீ மீண்டும் சென்று அந்தக் காவலரை திசைத் திருப்பு இல்லையென்றால் அவர், அவன் அந்த அறையிலிருந்து வெளியே வருவதைப் பார்த்துவிடுவார்”

“அவரைப் பற்றி கவலைப் படாதே லஷி...என் தந்தையின் பெயரைச் சொன்னதும் என் மீது அவருக்கு மிகுந்த அபிமானம் ஏற்பட்டுவிட்டது. நான் இப்போதே போகிறேன்”

“என்னம்மா லஷி....ஷாபோவை இன்னும் காணவில்லையே....எனக்கும் பதட்டமாய் இருக்கிறது”

“வந்துவிடுவான் தாத்தா...அமைதியாய் இருங்கள்” எனச் சொன்னாலும், அவளுக்குள்ளும் அச்சம் பரவிக்கொண்டிருந்தது...அதே சமயம் அவளது காதில் மாட்டியிருந்த ஒலிப்பானில் ஷாபோவின் குரல் கேட்டது...

“லஷி...நான் வேலையை முடித்துவிட்டேன்...”

அவன் பேசி முடிப்பதற்குள்..

“பிறகு இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாய் அங்கு?”

என்றவளிடம்,

“ஒரு சிக்கல்......கதவைத் திறக்க முடியவில்லை....”

லஷி அதிர்ந்தாள்....

தொடரும்.....

சிவா.ஜி
02-04-2012, 08:18 PM
அத்தியாயம்-13

ஷாபோ சொன்னதைக் கேட்டதும் லஷி அதிர்ச்சியுடன்,

“என்ன....என்ன சொல்கிறாய்....அங்கிருக்கும் ஒரு பொத்தானை அழுத்தினால் கதவு திறக்குமென்றாயே”

“ஆமாம் சொன்னேன் உள்ளே நுழைய மட்டும்தானே அனுமதி தேவை வெளியே வருவதற்குத் தேவைப்படாதே என தவறாய்க் கணித்துவிட்டேன்....அனுமதியுள்ள ஒருவர்தான் திறக்க வேண்டும்...அல்லது வெளியிலிருந்து யாராவது திறக்க வேண்டும்”

“அய்யோ....ஐந்து நிமிடம் முடிய இன்னும் 20 நொடிகள்தானே இருக்கிறது...கேமரா உன்னைப் பார்த்துவிடுமே...”

“கவலைப்படாதே லஷி...அதன் பார்வைக்குப் பின்னால் இருக்கிறேன். அதனால் இப்போதைக்குப் பிரச்சனையில்லை....அதற்குள் ஏதாவது செய்தாக வேண்டும்....யோசி...”

“என்னம்மா...என்ன ஆச்சு...கதவைத் திறக்க முடியவில்லையா...அடக் கடவுளே...இப்போது என்ன செய்வது...”

“பதட்டப்படாதீர்கள் தாத்தா....நான் ரேவாவை அழைக்கிறேன்...அவனிடம் ஏதாவது யோசனை இருக்கும்.”

என்று சொல்லிவிட்டு வேகமாய் வெளியேப் போய்...ரேவாவை அழைத்து வந்தாள். நிலைமையைக் கேட்டதும்...ரேவாவும் அதிர்ந்தான்.

“இன்னும் 50 நிமிடங்களில் தாத்தாவைப் பரிசோதிக்க மருத்துவர்கள் வந்துவிடுவார்களே...அதன் பிறகு நாம் அனைவருமே இந்த மருத்துவமனையை விட்டு வெளியேற வேண்டியிருக்குமே.....அதுவுமில்லாமல்..லஷியும் நாங்களும் இருப்பதால்தான் லஷியின் அப்பாவும், அம்மாவும் வேலைக்குப் போயிருக்கிறார்கள். தாத்தாவை இங்கிருந்து விடுவித்ததும்...அவர்களும் வந்து சேர்ந்தே அழைத்துப் போகலாமென்று சொல்லியிருக்கிறார்கள். அவர்களும் வந்துவிடுவார்கள். சிக்கலாகிவிடும்....அதற்குள் நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.....ஆ....ஆமாம்...கனி....அவள் நமக்கு உதவ முடியும். இதோ வருகிறேன்”

சொல்லிவிட்டு வெகு வேகமாய் வெளியேறி வாசலிருக்கும் கூடத்துக்கு வந்தான். அதற்குள் தன் வேலையை முடித்துவிட்டதற்கான அறிக்கையைக் கொடுத்துவிட்டு கனி புறப்பட்டு வாசலருகே சென்று கொண்டிருந்தாள். விரைவை இன்னும் கூட்டி அவளையடைந்து தோளைத் தொட்டான்.

விஸ்வநாதனின் அறையில் கனி அமைதியாய் நின்றுகொண்டிருந்தாள். விஸ்வநாதனும், லஷியும், ரேவாவும் சுருக்கமாய்...அதே சமயம் தெளிவாய் உண்மையைச் சொன்னார்கள்.

“என் அப்பாவும் இவர்களைப் பற்றி சொல்லியிருக்கிறார். அவரும் ஆத்திரப்படுவார். சரி ஒரு நல்ல விஷயம் நடக்க நானும் உதவினேன் என்ற திருப்தி எனக்கிருக்கும். நான் போகிறேன். ஆனால் ஷாபோவையும் கூட்டிக்கொண்டு வெளியே வரும்போது...”

“உங்களை யாரும் கவனிக்காமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்...”

ரேவாவும், லஷியும் ஒருசேர சொன்னதைக் கேட்டு கனி புன்னகைத்தாள். மூவரும் அறையை விட்டு வெளியே வந்தார்கள். லஷி அங்கேயே நிறக ரேவா பாதுகாப்பு அதிகாரியின் அருகே போனான். கனி சென்று அந்தக் கதவைத் திறந்தாள். கனியைப் பார்த்த ஷாபோ ஆச்சர்யம் காட்டினான்.

“ஆச்சர்யப்பட நேரமில்லை உடனே என்னுடன் வாருங்கள்..”

அவர்கள் வெளியே வந்தபோது தளத்தின் நுழைவாசலில் ரேவா மட்டுமே நின்று கொண்டிருந்தான். லஷியையும், அந்தப் பாதுகாப்பு அதிகாரியையும் காணவில்லை. வேகமாய் வந்து விஸ்வநாதனின் அறைக்குள் நுழைந்தார்கள்.

விஸ்வநாதன் சட்டென்று கட்டிலைவிட்டு எழுந்து வந்து ஷாபோவைக் கட்டியணைத்துக்கொண்டார்.

“கொஞ்ச நேரத்தில் எங்களின் இரத்த ஓட்டத்தை எக்குத் தப்பாய் எகிற வைத்துவிட்டாயே....போகட்டும்...போன காரியம் நல்லபடியாய் முடிந்ததில் மிக மிக சந்தோஷம்”

“எனக்கும் அப்படியே தாத்தா...”

ஷாபோவோடு சேர்ந்து...இன்னும் இரண்டு குரல்களும் ஒலித்தன. ரேவாவும், லஷியும் புன்னகையுடன் வந்தார்கள்....தனித்தனியே ஷாபோவைக் கட்டிப் பிடித்து தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள்.

இப்பொது அனைவரின் பார்வையும்...அத்தனையும் சின்னப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டு அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்த கனியின் மேல் விழுந்தது.

லஷி ஓடிச் சென்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு நெகிழ்வோடு பார்த்தாள். கனி அவளது கையை மென்மையாய் அழுத்தினாள்.

தொரப்பாவும் மிலாவும்...தவிப்பிலிருந்தார்கள். புள்ளிகளின் இப்படியுமப்படியுமான அசைவு அவர்களைப் பரபரப்புக்குள்ளாக்கியது. அந்த உடல்கள் இருந்த அறைக்குள் ஒரு புள்ளி நீண்ட நேரமாய் இருப்பதைப் பார்த்தவுடன்...பதட்டம் அதிகமானது. அடுத்த புள்ளியின் அங்கிங்கான அலைதலுக்குப் பிறகு அந்த அறையிலிருந்த புள்ளி நகர்ந்து...விஸ்வநாதனின் அறைக்கு வந்ததும்தான் பெருமூச்சு விட்டார்கள்.

அன்று மதியம் அனைவரும் விஸ்வநாதன் வீட்டில் அவரது தனியறையில் கூடினார்கள்.

“இந்த வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டது....இனி அடுத்த வேலையை...நாளை மறுநாள் தொடங்க வேண்டும்.....அதற்கு ரேவாவின் உதவி வேண்டும்”

தொரப்பா சொன்னதும்...

“என்னுடைய உதவியா....சொல்லுங்கள் தாத்தா....”

“சரியாகச் சொன்னால்...உன் தந்தையின் உதவி தேவைப்படும்...”

அனைவரும் ஒரு நொடி...அமைதியானார்கள்.

தொடரும்

சிவா.ஜி
02-04-2012, 08:19 PM
அத்தியாயம்-14

விஸ்வநாதன் எழுப்பட்டப்பிறகு மேலும் இருவர் எழுப்பப்பட்டுவிட்ட நிலையில் இந்த நான்காவது எழுப்பலை அத்தனை கடினமாய் அந்த மருத்துவர்குழு நினைக்கவில்லை. காஜலக்*ஷேவின் உடலை(இப்போது அது வெறும் உடல்தான் என அறியாமலேயே) எழுப்பட்டப்போகும் அறைக்குக் கொண்டு வந்தார்கள். படுக்கையில் கிடத்தி, தங்கள் மருத்துவ உபகரணங்களால் அலங்கரித்தார்கள். தலையில் கிரீடம் போன்ற ஒரு சாதனம்...தனது ஆக்டோபஸ் கரங்களை அலைபாயவிட்டிருந்தது. இதயத்தின் மேல் ஒட்ட வைக்கப்பட்ட மின்தொடர்புக் கம்பி இன்னொரு கருவியுடன் இணைக்கப்பட்டது. மூக்கையும் வாயையும் ஒரு காற்றுக்கவசம் பொத்தியது.

எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, மீண்டும் சரிபார்க்கப்பட்டது. எல்லாம் தயார் என்ற நிலையில் உறைந்த மூளையின் நியூரான்கள் மின் தொடுதல் மூலம் நிரடப்பட்டன. மூளை விழித்துக்கொண்டது....இதயம் தன் துடிப்பைத் தொடங்கியது....ஆனால்...சில நொடிகளிலேயே...அது நொண்டியடித்தது. அந்த உடலுக்குத் தேவையான் உயிர்மூச்சு...ஆக்ஸிஜன்...கிடைக்கவில்லை. நாசி எத்தனை முயன்றும் காற்றை உள்ளிழுக்க முடியவில்லை. இந்தப் புது உலகத்தின் சுத்தமானக் காற்றுக்கு இந்த உடல் அருகதையில்லை என முடிவுசெய்துவிட்டதைப்போல...சுத்தமாய்க் காற்றை சுவாசிக்க முடியவில்லை. உடல் துடித்தது. இதயம் தவித்தது.

ஆனால் அது காற்றுக்காகப் போராடுகிறது என்பதை மருத்துவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆக்ஸிஜன் சிலிண்டரை சோதித்தார்கள். சரியாய் இருந்தது. நாடியின் எண்ணிக்கையை திரையில் பார்த்தார்கள்...32....31....30....என இறங்கிக்கொண்டே இருந்தது. இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை...பரபரத்தார்கள். இதயத்தின் மீது பலம் கொண்டமட்டும் அழுத்தினார்கள்...இளகுமா அந்த இதயம்....அதுதான் பாறாங்கல்லாயிற்றே. எத்தனை முயற்சித்தும் சில நொடிகளில் அது தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. மருத்துவப்பூர்வமாய் மரித்துவிட்டது அந்த உடல்.

மருத்துவக்குழு ஆயாசமாய் அமர்ந்துவிட்டார்கள். அவர்கள் எதிர்பார்க்காதது. அலங்கரித்த உபரணங்களை அவிழ்த்தார்கள். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

பரிசோதனையை மேற்கொள்ளும் மருத்துவர் தனது 63ஆவது பிறந்தநாளை சமீபத்தில்தான் கொண்டாடியிருந்தார். பிரேதத்தின் முகத்தைப் பார்த்தார். கைமுஷ்டி தானாய் இறுகியது. ரத்தத்தின் வெப்பம் சில டிகிரிகள் எகிறின. தனது இருபது பிராயங்களில், மருத்துவக் கல்லூரி மாணவராய் இருந்தபோது..நண்பர்களுடன் சேர்ந்து எரித்த உருவபொம்மை நினைவுக்கு வந்தது. இந்த முகம் மறக்கக்கூடியதா...கோபத்தைத் தணித்துக்கொண்டு தன் கடமையில் இறங்கினார்.

உள்ளுறுப்புகள் தனித்தனியாய் அறுத்து சோதித்தார்....மற்ற உறுப்புகளில் எந்த அறிகுறியும் தெரியவில்லை. நுரையீரலைப் பார்த்ததும் தெரிந்துவிட்டது...அதற்குத் தேவையான காற்றின் கழுத்து நெரிக்கப்பட்டிருக்கிறதென்று. மூச்சுப்பாதையைப் பரிசோதித்தார். மூக்கின் துவாரங்களைப் பரிசோதித்தபோது...அதனுள் ஏதோ பொருள் அடைக்கப்படிருந்தது தெரிந்தது. இரு துவாரங்களிலும் சிறிய பஞ்சு உருண்டைகள் வெகு உள்ளுக்குள் நுழைத்து அடைக்கப்பட்டிருந்ததை வெளியே எடுத்தார். யோசித்தார்....யாரோ இவன் எழக்கூடாது என நினைத்திருக்கிறார்கள்....யாராய் இருந்தாலும் நல்லவர்கள், புத்திசாலிகள்...ஆனால் வேறு யாராவது பிரேதத்தைப் பரிசோதனை செய்திருந்தால்..இந்நேரம் மிகப்பெரிய களேபரமாகியிருக்கும். ஆனால் இவனின் ஊழ்வினை...என்னிடம் வந்துவிட்டான்... இந்த இறப்பு பத்தோடு பதினொன்றாய் போகட்டும்...அந்தப் பஞ்சு உருண்டைகளை குப்பைத்தொட்டியில் வீசினார்.

எல்லாம் சரியாய் இருந்தும் ஏன் இறந்தது இந்த உடல் எனத் தெளிவான முடிவுகிடைக்கவில்லை என அறிக்கை எழுதினார். உதவியாளர்கள் அழைக்கப்பட்டார்கள்...மொத்தத்தையும் மூட்டையாய்க் கட்டினார்கள். யுத்தத்தில் சிதறிய உடலை அள்ளிக் கட்டியதைப்போல...

மருத்துவக் குழுவினர், இது ஒரு எதிர்பாராத நிகழ்வு என வருத்தத்துடன் அறிக்கை எழுதினார்கள். தங்களது மொத்த மருத்துவ உபகரணங்களையும் மறு சோதனை செய்யவேண்டுமென பரிந்துரைத்தார்கள்.

ஒரு கொடுங்கோலனின் உயிர்த்தெழும் ஆசை...ஒரேயடியாய் அழிந்துவிட்டது.

தங்கள் தலைவரை வரவேற்க உற்சாகமாய் வந்தக் கூட்டத்தின் கைகளில் மூட்டையைக் கொடுத்ததும் ஸ்தம்பித்தனர். பல ஆண்டுகளாய் போட்ட திட்டம் இந்த எதிர்பாராத நிகழ்வால் நிலைகுலைந்து போனதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்தார்கள். சற்று உணர்ச்சிவயப்பட்டு அத்துமீறியதால்...நிர்வாகத்தினரின் புகாரின் அடிப்படையில் ஒரு காவலர் படை அந்தக் கூட்டத்தை அள்ளிக்கொண்டு போய் செல்லுலர் சிறையிலடைத்தது.

“எங்கள் தலைவருக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு நீதி கேட்டுதானே வாக்குவாதம் செய்தோம்....இதற்காகவா எங்களை சிறையில் அடைக்கிறீர்கள்....இது புது உலகத்தின் நியதி கிடையாதே...எங்களுக்கு எங்கள் வழக்கறிஞரை உடனே பார்க்க வேண்டும்”

சிறையில் அடைக்கப்பட்டக் கூட்டத்தின் பிரதிநிதியாய் ஒருவர் இரைந்ததும், ஒரு அதிகாரி முன்னால் வந்து,

“இந்த சிறைப்பிடிப்பு உங்கள் தகறாருக்காக இல்லை.....நீங்கள் செய்ய நினைத்த தகாத காரியத்துக்காக. காத்திருங்கள்...எங்கள் மேலதிகாரி வருவார். கேட்க வேண்டியதைக் கேட்டுக் கொடுக்க வேண்டியதைக் கொடுப்பார்”

என்று சொன்னதும் அந்தக் கூட்டத்தினரின் முகங்கள் அணுக்கதிர் அறைந்ததைப்போல வெளுத்தன.


தொரப்பாவின் பேச்சைக் கேட்டதும் குழப்பத்துடன் அமைதியானவர்களில், ரேவா உடனே...

“தாத்தா என்னுடைய அப்பாவுக்கு இதெல்லாம் தெரியக்கூடாது எனச் சொன்னீர்களே இப்போது எப்படி அவரிடம்....”

“ஆம் சொன்னேன். அது இதுவரை நடந்ததைப் பற்றி. அது தெரியவும் வேண்டாம், இனி நடக்க இருந்த ஒரு பயங்கரத்தை நிகழ்த்த முடியாத சிலரை முடக்கவும், என்றென்றைக்குமாய் அந்தக் கூட்டத்தை சிறையில் அடைக்கவும் உன் தந்தையின் உதவி தேவைப்படுகிறது”

மீண்டும் அவரது குழப்பமான பேச்சால் தெளிவுகிடைக்காத முகத்துடன் அவரை ஏறிட்டு நோக்கியவர்களைப் பார்த்து...

“சரி தெளிவாய் சொல்கிறேன். இதோ இந்தப் புகைப்படங்களைப் பாருங்கள். இதோ இருக்கிறானே இவன் அந்தக் காஜ லக்*ஷேவின் படைத்தளபதிகளில் ஒருவனாய் இருந்தவன். இன அழிப்பில் பெரும்பங்கு கொண்டவன். கொலை செய்வதை வெகு இன்பமாய் அனுபவித்து செய்தவன். இவனும் இவன் கூட்டத்தாரும் நாளை எழுப்பப்படவிருக்கும் காஜலக்ஷேவை வரவேற்க இப்போது தலைநகரம் வந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்கள் செய்ய நினைத்திருக்கும் திட்டம்....”

அனைத்தையும் விளக்கினார். அனைவரும் தெளிவானார்கள். கூடவே அதிகமாய் ஆத்திரமானார்கள்.

“கூண்டோடு பிடிக்க வேண்டும்...ஒருவரையும் விடக்கூடாது...”

விஸ்வநாதனின் குரலில் வெறுப்பு தூக்கலாய்த் தெரிந்தது.

“சரி தாத்தா...இப்போதே என் அப்பாவை சந்திக்கப் போகலாமா?”

“போகலாம்....ஆனால்..இந்தப் புகைப்படங்களையும், அவர்கள் பேசியப் பேச்சுக்களையும் பற்றி மட்டுமே சொல்லி ஆபத்தைப் புரியவைப்போம். நாம் செய்த காரியத்தைப் பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம். புறப்படுங்கள்”

மாலை ஆகிவிட்டிருந்ததாலும், வீட்டில் பார்த்துப் பேசுவதுதான் சிறந்தது என நினைத்ததாலும்...அந்த சந்திப்பு ரேவாவின் வீட்டில் நிகழ்ந்தது. அறிமுகப்படலம் முடிந்ததுமே..தொரப்பாவையும், விஸ்வநாதனையும் மிகுந்த மரியாதையுடன் கை குலுக்கினார் ரேவாவின் அப்பா.

“சொல்லுங்கள்...இத்தனைப்பேர் என் வீட்டுக்கு வந்திருக்கிறீர்களென்றால் ஏதோ முக்கியமாய் என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள் எனத் தெரிகிறது...சொல்லுங்கள் என்ன வேண்டும்?”

“ஆமாம் எதிர்பார்க்கிறோம்....உங்கள் மூலமாய்...நமது அரசாங்கத்தின் அவசர நடவடிக்கையை...”

தொரப்பா சொன்னதும்,

“அவசர நடவடிக்கையா....விளக்கமாய் சொல்லுங்கள்”

சொன்னார்கள்....

தொடரும்....

சிவா.ஜி
02-04-2012, 08:20 PM
அத்தியாயம்-15

ரேவாவின் அப்பா விளக்கமாய் சொல்லச் சொல்லிக் கேட்டதும் பெரியவர்கள் இருவரும் விளக்கினார்கள். இளைஞர்கள் அமைதியாய் இருந்தார்கள்.

அனைத்தையும் கேட்ட ரேவாவின் அப்பா ஜகன்...

“அதிர்ச்சியளிக்கும் செய்தி...கூடவே உடனடிச் செயல் தேவைப்படும் செய்தி. சரி நாளை உயிர்த்தெழப்போகும் தங்கள் தலைவரை அழைத்துச் செல்ல அவர்கள் மருத்துவமனைக்கு வருவார்கள். அத்தனைப் பேரையும் கொத்தோடு பிடித்து சிறையில் அடைத்து கேட்க வேண்டிய முறையில் கேட்டால் அனைத்தையும் ஒப்பிப்பார்கள். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். அதே போல அந்த காஜ லக்ஷேவும் அரசாங்கக் காவலில் வைக்கப்படுவார்...அதையும் நான் பார்த்துக்கொள்கிறேன்...”

இதைச் சொன்னதும்...அங்கிருந்தவர்கள் மனதுக்குள் ஒரு நமுட்டுச் சிரிப்பை உற்பத்தி செய்து உள்ளுக்குள் விழுங்கிக்கொண்டார்கள்.’உயிர்பறவை கூண்டைவிட்டுப் பறந்துபோனபின்...உடலை காவலில் வைக்கப்போகிறீர்களா....வேடிக்கை..’

அடுத்தநாள் மருத்துவமனையில் நிகழ்ந்த காஜலக்*ஷேவின் உயிர்த்தெழாமை...ஜகனுக்கு அதிர்ச்சியை அளித்து...ஆறுதலையும் அளித்தது. அவரது கட்டளைப்படி அந்தக் கூட்டத்தினர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். மேலதிகாரி ஒருவர் அவர்களை ‘விசாரித்து’ காட்டில் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பவர்களைப் பற்றியும், நாட்டில் பரவியிருப்பவர்களைப் பற்றியும் பூரணமாய் தெரிந்துகொண்டார்.

அந்தக்கூட்டத்தினரைக் கொண்டே, காட்டிலிருக்கும் படையை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைத்தார்கள். அந்த இடம் சமவெளியாய் இருந்தது...அந்த சமவெளியை சுற்றி அடர்ந்த மரங்கள் இருந்தது. அந்த மரங்களுக்குப் பின்னால் ராணுவப்படை கைகளில் சக்திவாய்ந்த துப்பாக்கிகளுடன் மறைந்திருந்தது. கையில் ஆயுதங்களுடன்...தங்கள் தலைவர்களை சந்திக்க காட்டைவிட்டு வெளியே வந்த ஊடுருவும் படையினர்...கூண்டோடு தாக்கப்பட்டனர். அவர்களோடு அந்த தலைவர்களும் அழிக்கப்பட்டனர்.

அழிக்கப்பட்டவர்களின் உடல்களை சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த இராணுவத்தின் அந்தப் படைப்பிரிவின் தலைவரிடம் அவரது அடுத்த நிலை அதிகாரி,

“நமது தரப்பில் எந்த சேதங்களுமின்றி வெற்றிகரமாய் அனைவரையும் அழித்துவிட்டோம்...”

‘ஆமாம்...அழித்துவிட்டோம்...ஒரேயொரு வருத்தம்தான்...”

“என்ன ஐயா?”

துப்பாக்கிச் சூடு நடக்கும்போது காட்டிலிருந்து எட்டிப்பார்த்த காட்டுப்பன்றி ஒன்று மிக பயந்துப்போனது...அதை பயமுறுத்திவிட்டோமே என்பதுதான்...வருத்தம்....ஹா...ஹா...”

அவரது சிரிப்பில் அனைவரும் கலந்துகொண்டார்கள்.

நாட்டுக்குள் பரவலாய் சிதறிக்கிடந்த அந்தக் கூட்டத்தினரையும் லாவகமாய் வேட்டையாடிவிட்டார்கள் புது உலகத்தின் உளவுப்படையினர். இந்த அனுபவம் கொடுத்தப் பாடத்தில்...இன்னும் இந்த உலகத்தில் மிச்சமிருக்கும்...தீவிரவாத எச்சங்களை தேடித்துருவத் தொடங்கிவிட்டார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் மறைவில் இயங்கிவந்த அப்படிப்பட்டக் குழுக்களை அழிக்கும் பணி உலக மக்களின் தினசரி வாழ்க்கையை பாதிக்காதவாறு வெகு எச்சரிக்கையாய்....ரகசியமாய் மேற்கொள்ளப்பட்டது.

லஷியின் குடும்பம், ரேவாவின் குடும்பம், மிலாவின் குடும்பம், கனியின் குடும்பம்...மிக நெருங்கிவிட்டிருந்தார்கள். தாங்கள் மேற்கொண்ட பணி நல்லவிதமாய் முடிந்ததைக் கொண்டாட, அனைவரும் ஒரு விடுமுறை நாளில் பூமியிலிருந்து பல மைல்கள் உயரத்திலிருந்த நெஃப்டான் விண்வெளி பொழுதுபோக்குப் பூங்காவுக்கு சென்றார்கள்.

ஷாபோவை அறையிலிருந்து அழைத்து வர கனியின் தோளைத் தொட்ட ரேவாவுக்குள் அந்த கணம் ஏற்பட்ட ரசாயன மாற்றம்....நிலாவுக்குள்ளும் ஏற்பட்டதும்....அது வளர்ந்ததும்....விளைவாய் இருவரும் கண்களால் கவிதை பாடத்தொடங்கியதும்.....அந்த இன்பச் சுற்றுலாவிலிருந்த எல்லாக் குடும்பங்களுக்கும் தெரிந்தது. லஷியும் ஷாபோவும் கூட கீதமிசைக்கத் தொடங்கியிருந்தார்கள். மிலாவுக்குத்தான் இன்னும் எந்த நிலாவும் கிடைக்காமல் தனது யூனிவர்சல் கம்யூனிக்கேட்டரில் பல்லாங்குழி விளையாடிக்கொண்டிருந்தான்.


முற்றும்....

(பின் குறிப்பு: லார்ஜ் குஷ்.....உயிர்த்தெழ இயலாமல் போனதும், அவரது பிரேத பரிசோதனை வேறு ஒரு மருத்துவரால் செய்யப்பட்டு, அவருடைய மூக்கிலிருந்தும் பஞ்சு கண்டெடுக்கப்பட்டு....அதற்குப் பிறகான உயிர்த்தெழல் நிகழ்வுக்கு முன் கட்டாயம் மூக்கை சோதிக்க வேண்டுமென மருத்துவக் குழு தீர்மானித்ததும், லார்ஜ் குஷ்ஷின் மரணம்...அரசாங்கத்தால் எதிர்பாரா நிகழ்வாய் அறிவிக்கப்பட்டதும்....இனி எழுப்பப்படப்போகும் உடல்களின் நதிமூலம் ஆராயப்பட்ட பிறகே அவர்களை எழுப்ப வேண்டுமென்ற விதி உருவாக்கப்பட்டதும்.....இந்தக் கதையின் கிளை நிகழ்வுகள்)

சிவா.ஜி
02-04-2012, 08:21 PM
மன்றத்தில் கதை ஆரம்பித்து முடிக்காமல் விடக்கூடாது என்பதற்காகவே இந்தக் கதையை தொடர்ந்து முடித்தேன்.

நன்றி..

மதி
03-04-2012, 01:00 AM
உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். என்னைப்போல் இல்லாமல் ஆரம்பித்த கதையை முடித்தே ஆகவேண்டும் என்ற வைராக்கியத்துக்காக.

கலைவேந்தன்
04-04-2012, 04:58 AM
முழுவதும் வாசித்து மகிழ்வுபெற்றேன் சிவா.. விறுவிறுப்பு குறையாமல் மிக அழகாய் கதையைக் கொண்டு சென்று எங்களை வியப்பின் விளிம்புக்கு கொண்டு சென்ற கதை.

பாராட்டுகள் சிவா.

சிவா.ஜி
08-04-2012, 07:19 PM
மிக்க நன்றி நண்பா. உழைப்புக்கான பலன் கிடைத்ததாய்...மிக மகிழ்கிறேன்.

கீதம்
06-08-2012, 01:13 PM
முன்பு ஒரு பகுதி மட்டுமே வாசித்ததில், ஆழமான கரு புலப்பட, அவகாசமில்லாக் காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டு, என் மனக்கிடப்பிலும் மன்றக்கிடங்கிலும் பதுங்கியிருந்த கதையை இன்று விடுவதில்லை என்று ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிட்டேன்.

முதல் பகுதி முதல் இறுதிவரை விறுவிறுப்புக் குறையாத எழுத்து. விஞ்ஞான வளர்ச்சியடைந்த நாளைய உலகம் என்பதே ஒரு கனவாய் இருக்க, அதிலும் கற்பனை புகுத்தி, ஏராளமான அறிவியல் நுட்பங்களையும், அசரவைக்கும் தீரச்செயல்களையும் அநாயாசமாய்க் காட்டியுள்ளீர்கள்.

படிக்கப் படிக்க புத்தம்புது பூமியொன்று நம் மனதிலும் சிருஷ்டிக்கப்படுவது விந்தை. நம் சந்ததிக்கேனும் இப்படியொரு எதிர்காலம் அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்னும் ஏக்கத்தையும் உண்டாக்கியது உங்கள் கற்பனை பூமி.

ஊடே அரசியல் பண்ணும் மூத்த அரசியல்வாதியின் பாத்திரச் செருகல் மூலம் நகைச்சுவைக்கும் பஞ்சம் வைக்கவில்லை. மிகவும் ரசித்துப் படித்தேன், மீண்டும் இதுபோன்ற விறுவிறுப்பான தொடர்கதைகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த பாராட்டுகள் அண்ணா.

jayanth
07-08-2012, 08:29 PM
பிரமிக்க வைத்தது நண்பா...!!!
மீண்டும் ஒருமுறை படிக்கவேண்டும்...!!!

சிவா.ஜி
09-08-2012, 01:12 PM
ரொம்ப நன்றிம்மா. இதை எழுத ஆரம்பித்தபோது இருந்த உற்சாகம் சில தேவையற்ற தடங்கல்களால் பெரிதும் வற்றிவிட்டது. அதனாலேயே என்னால் தொடர முடியாமல் போய்விட்டது. ஆனால்...தொடங்கியதை முடிக்காமல் விடக்கூடாது என்பதால் முடித்தேன். உண்மையாய் சொல்ல வேண்டுமானால்...நான் எழுத நினைத்த அளவுக்கு என்னால் எழுத முடியவில்லை. என்னைப் பொருத்தவரை...எனக்கு இந்தக் கதையில் நிறைவில்லை.

உங்களைப் போன்ற அற்புதமான எழுத்தாளுமையுள்ள எழுத்தாளரால் பாராட்டப்படும்போது மனது சந்தோஷிக்கிறது. மீண்டும் நன்றிம்மா கீதம்.

சிவா.ஜி
09-08-2012, 01:13 PM
ரொம்ப ரொம்ப நன்றி நண்பா. புதைந்திருந்த பூமியை வெளிக்கொண்டுவந்த தங்கைக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.