PDA

View Full Version : பெயர் சொல்ல மாட்டேன் - வைரமுத்து



umakarthick
06-02-2009, 09:45 AM
அமர்களம் படத்தில் வரும் ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ & ‘மேகங்கள் எனைத் தொட்டுப்போனதுண்டு’ என்ற இரு பாடல்களும் வைரமுத்துவின் ‘தமிழுக்கு நிறம் உண்டு’ என்ற தொகுப்பில் இருக்கும் ‘கேள் மனமே கேள்’ & ‘பெயர் சொல்ல மாட்டேன்’ கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகளாகும். இவ்விரு கவிதைகளில் எனை மிகவும் கவர்ந்தது ‘பெயர் சொல்ல மாட்டேன்’.

பெயர் சொல்ல மாட்டேன்
———————————-

மேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு - சில
மின்னல்கள் எனை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு - மனம்
சில்லென்று சிலபொழுது சிலிர்ததுண்டு
மோகனமே உன்னைப்போல என்னையாரும் - என்
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என்நெஞ்சில் உன்னைப்போல - எரி
அமிலத்தை வீசியவர் எவரும் இல்லை

கண்மணியே உன்னைக்காண வைத்ததாலே - என்
கண்களுக்கு அபிஷேகம் நடத்துகின்றேன்
பொன்மகளே நீ போகும் பாதையெல்லாம் - தினம்
பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்
விண்வெளியின் மேலேறி உந்தன் பேரை - காதல்
வெறிகொண்டு கூவுதற்கு ஆசை கொண்டேன்
பெண்ணழகே உனைத்தாங்கி நிற்பதாலே - இந்தப்
பிரபஞ்சம் வாழ்கவென்று பாடுகின்றேன்

விதையோடு தொடங்குதடி விருட்சமெல்லாம் - துளி
விந்தோடு தொடங்குதடி உயிர்கள் எல்லாம்
சதையோடு தொடங்குதடி காமம் எல்லாம் - ஒரு
தாலாட்டில் தொடங்குதடி கீதமெல்லாம்
சிதையோடு தொடங்குதடி ஞானமெல்லாம் - சிறு
சிந்தனையில் தோன்றுதடி புரட்சியெல்லாம்
கதையோடு தோன்றுமடி இதிகாசங்கள் - உன்
கண்ணோடு தொடங்குதடி எனது பாடல்

உலகத்தின் காதலெல்லாம் ஒன்றே ஒன்றே - அது
உள்ளங்கள் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் முத்தமெல்லாம் ஒன்றே ஒன்றே - அது
உதடுகளில் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் உயிரெல்லாம் ஒன்றே ஒன்றே - அது
உடல்கள் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் சுகமெல்லாம் ஒன்றே ஒன்றே - என்
உத்தரவுக் கிணங்கிவிடு புரிந்து போகும்

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே - அடி
தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் - உன்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் - அது
தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?
எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் - அடி
எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையிலே பேசிக் கொண்டே - என்
இரவுகளைக் கவிதைகளாய் மொழிபெயர்த்தேன்


பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே - என்
பிரியத்தை அதனால்நான் குறைக்கமாட்டேன்
சரிந்துவிடும் அழகென்று தெரியும் பெண்ணே - என்
சந்தோஷக் கலைகளைநான் நிறுத்த மாட்டேன்
எரிந்துவிடும் உடலென்று தெரியும் பெண்ணே - என்
இளமைக்குத் தீயிட்டே எரிக்க மாட்டேன்
மரித்துவிடும் உறுப்பென்று தெரியும் பெண்ணே - என்
வாழ்வில் நான் ஒரு துளியும் இழக்கமாட்டேன்

கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றில் - என்
காதல்மனம் துண்டுதுண்டாய் உடையக் கண்டேன்
துண்டுதுண்டாய் உடைந்த மனத்துகளை எல்லாம் - அடி
தூயவளே உனக்குள்ளே தொலைத்து விட்டேன்
பொன்மகளே உனக்குள்ளே தொலைத்ததெல்லாம் - சுக
பூஜைகொள்ளும் நேரத்தில் தேடிப் பார்த்தேன்
கண்மணிஉன் கூந்தலுக்குள் கொஞ்சம் கண்டேன் - உன்
கால்விரலின் பிளவுகளில் மிச்சம் கண்டேன்

கோடிகோடி ஜீவன்கள் சுகித்த பின்னும் - இன்னும்
குறையாமல் வீசுதடி காற்றின் கூட்டம்
கோடிகோடி ஜீவன்கள் தாகம் தீர்த்தும் - துளி
குறைந்தொன்றும் போகவில்லை காதல் தீர்த்தம்
மூடிமூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் - மண்ணை
முட்டிமுட்டி முளைப்பதுதான் உயிரின் சாட்சி
ஓடிஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே - நாம்
உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி

- வைரமுத்து (தொகுப்பு - தமிழுக்கு நிறம் உண்டு)

தென்னாட்டு சிங்கம்
06-02-2009, 12:52 PM
வைரமுத்துவின் சில வைர வரிகளை பட்டைதீட்டி இங்கு ஜொலிக்க வைத்து தந்தமைக்கு மிக்க நன்றிகள்.. உமாகார்த்திக்..

tamizhan_chennai
11-02-2009, 12:07 PM
வைரமுத்துவின் பாடல் வரிகளை சுவைக்க தந்தமைக்கு
மிக்க நன்றி தோழரே...

umakarthick
30-03-2009, 02:03 PM
வந்தனம் நமக்கு பிடித்ததை பகிர்தலில் உள்ள சுகமே தனி தான் :)

மன்மதன்
30-03-2009, 02:55 PM
அருமையாக இருக்கிறது..
இரண்டு பாடலாக வைத்திருக்கலாம்..