PDA

View Full Version : கரப்பான் பூச்சி வார்த்தைகள்



ஆதி
12-01-2009, 12:28 PM
மெல்லிய மேனியின்
உள்ளிருந்து ஒரு பயம்
ஆபாய அதிர்வுகளை
அனுப்பிக் கொண்டிருந்தாலும்
உன் வற்புறுத்தலுக்கு மடங்கி
வர சம்மதித்தேன்..

வீட்டில் வெவ்வேறு பொய்யுரைத்து
ஊருக்கு தெரியாமல் துப்பட்டாவில்
முகம் மறைத்து
புறப்பட்டேன் உன்னுடன்..

வெயில் ததும்மும் சாலையில்
வேகம் குறையாமல் வாகனத்தை நீ முடுக்க
தேகம் பிரியாமல் நானுன்னை பிணைக்க – இன்ப
போகம் தளராமல் பயணித்தோம்

மனித நகர் விலகி
தனிமை நகர் நுகர்ந்தோம்
மணிக்கணக்கு தெரியாமல்
இனிக்க இனிக்க இன்பமுண்டோம்..

கண்ணாமூச்சி விளையாடினோம்
களைக்கும் வரை ஓடிப்பிடித்தோம்
என்னென்னவோ பேசிக்களித்தோம்
எண்ணியவை எல்லாம் செய்தோம்..

கோயில் சிலை மார்புகளையும்
குணமிழிந்து பார்க்கும்
கொடுங்காம பூனைகள்
குறுக்கிட்டன நமக்குள்

பட்டாம் பூச்சியாய்
பறந்திருந்த என்னை, விரலடைத்து
நிறம் பூசிய சிறகை பிய்தெறிந்து
சுவைக்க என்னுடலை
சவைத்து உண்ட மூர்க்கதனங்களை
நீயும் பார்த்துதானிருந்தாய்
எதிர்க்க துணிவின்றி..

கூட்டி குவித்து
குப்பையாய் என்னை வாரி
மீண்டும் வீட்டில் வீசி சென்றுவிட்டாய்..


அடுத்த மணி அடிக்கவிடாமல்
எடுப்பாய் என் அழைப்புகளை
சமீபங்களில் கடைசிவரை
அடித்தாலும் பதிலில்லை..


உன் நண்பர்கள் வழியே
அணுமதி பெற்று
அலுவலகம் வந்தேன்
உன்னை காண..

ஆறுதலாய் உன் தோள்களில் சாய்ந்து
அழுதென் பச்சை துயரங்களை எல்லாம்
சருகாக உகுக்க வேண்டும்
என்றெண்ணி வந்த என்னை
பந்திக்குப்பின் எறியும் இலையாய்
சந்திப்பில் நீ பார்த்தாய்..

“என்னை பார்க்க வேண்டும் என்றாயாமே ?”
“என்ன விஷயம் ?”
“எதுவும் உதவி வேண்டுமா ?” என்று
அந்நியனாய் அசைந்தன உன் இதழ்கள்


“பணமேதும் தேவையென்றாலும்
தயங்காமல் கூறு” என்று
கரப்பான் பூச்சியாய் ஊறிய வார்த்தைகள்
உண்டாக்கியது
உன்மீது அருவருப்பை..

“உன்னை காதலித்ததற்கு
அந்த காமுகர்களுக்கு
ஆசை நாயகியாய் இருந்திருக்கலாம்”
என்று அலறத்தோன்றியது எனக்கு

இளசு
21-01-2009, 11:17 PM
மனக்களங்கங்கள் மறைத்து கோபுரமேறுவோர் ஒருபுறம்..
உடல் மட்டுமே மிருகக்கறை பட்டதால் உதறப்படுவோர் மறுபுறம்..

வன்முறையால் உடல் கறைப்பட்ட யாருமே
சமூகத் தராசுக்கு அப்பாற்பட்டவர்கள்..

உணராதவன் காதலன் அல்லன்..
(அன்று அவன் நல்ல காவலனும் அல்லன்..)

தலைமுழுகி புதுவாழ்வு வாழ நாயகிக்கு வாழ்த்துகள்..!

ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள் ஒரு நாவலில் சொல்வதை
ஒரு சிறு கவிக்கதையில் சொன்ன ஆதிக்கு வாழ்த்துகள்!


( கவிதையில் சில சொற்பிழைகள்... சுவை தடுக்கும் சிறுபிழைகள்..
களைய என் பரிந்துரை..)

ஓவியன்
24-01-2009, 05:26 AM
ஒரு வகையில் கவிதையின் நாயகி பிழைத்துக் கொண்டாளென்றே கொள்ளலாம், மனதில் இத்தனை அழுக்கானவனை தன் துணைவனாகக் கொள்ளாமல்...

இளசு அண்ணா கூறியது போல்,
நல்ல காதலனும், காவலனும் இல்லாதவன்
அவளுடன் இருந்தென்ன, இல்லாமலிருந்தென்ன..

பாராட்டுக்கள் ஆதி..!!