PDA

View Full Version : விதைகள் (25-சிறுகதை)



ரங்கராஜன்
11-01-2009, 02:11 AM
விதைகள் (சிறுகதை)

வருங்காலத்தில் பிரபலமாகப்போகும் தொழிநுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட பாதாள அறையில் சிலர் கூட்டமாக எதிரில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியை வெறுப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தனர், காரணம்? அதில் நாட்டின் அதிபர் காரசாரமாக பேசிக் கொண்டு இருந்தார்

“மக்களே நாம் இந்த மண்ணில் பிறந்தது வாழ்வதற்க்கு தான், சந்தோஷமாக வாழ்வதற்க்கு. ஆனால் நாம் அனைவரும் **** திவிரவாத இயக்கத்தால் தினம் தினம் கொல்லப்படுகிறோம். இதே போல எத்தனை ஆண்டுகள், எத்தனை உயிர்கள், எத்தனை குடும்பங்கள். இயக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் மனிதர்களே இல்லை. அவர்களின் கோரிக்கைகள் அர்த்தமற்றது, உரிமையில்லாதது. மக்களே உயிர் என்பது எல்லோருக்கும் ஒன்று தான். அது நம்ம உயிராக இருந்தாலும் சரி அல்லது அந்த தீவிரவாதிகளின் உயிராக இருந்தாலும் சரி. நான் அந்த இயக்கத்தின் தலைவனை பார்த்து கேட்கிறேன் “உன்னுடைய படையில் உன்னையே நம்பி இருக்கும் அப்பாவி மக்களை மனித வெடிகுண்டாக ஆக்கி, அப்பாவி மக்களையும், ராணுவ வீரர்களை கொன்று குவிக்கிறாயே. ஏன் நீ மனித வெடிகுண்டாக மாற வேண்டியது தானே, அல்லது உன்னுடைய வாரிசுகளை மனித வெடிகுண்டாக மாற்ற வேண்டியது தானே?. எனக்கு நன்றாக தெரியும் நீ மாட்டாய் என்று, ஏனென்றால் உன்னுடைய உண்மையான தொண்டர்களை நீ அதற்க்காக தானே வைத்து இருக்காய். உன்னுடைய இயக்கத்தில் இருக்கும் அப்பாவிகளுக்கு கூடிய விரைவில் உன்னுடைய சுயநலம் தெரியவரும். (சிறிது நேரம் அமைதியாக இருந்தவராக) நாங்கள் எப்பொழுதும் இந்த பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலமாக தான் தீர்க்க விரும்பறோம்.
வன்முறையை என்றுமே இந்த அரசு ஆதரிக்காது. தீவிரவாத இயக்கத்தில் இருக்கும் மக்கள் மனம் திருந்தி வாழ இந்த அரசு சந்தர்ப்பம் தருகிறது, நீங்கள் அனைவரும் உங்களின் இயக்கத்தில் இருந்து உயிரை விடாதீர்கள். அரசு உங்களுக்காக மறுவாழ்வு திட்டம் அமைத்து தரும், அரசு வேலையும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். வாழ்க மக்களாட்சி”

என்று வீர வசனம் பேசிவிட்டு அதிபர் தன்னுடைய அறைக்குள் சென்றார். அவரை தொடர்ந்து வந்த உயர்மட்ட அதிகாரிகள் எல்லாம் அவரிடம் வந்து கையை குலுக்கினர்.

“அருமையான ஸ்பீச் சார்” அதிகாரி 1.

“உங்களின் இந்த பேச்சு அவர்களின் இயக்கத்தில் கண்டிப்பாக ஒரு குழப்பத்தை உண்டு பண்ணும் சார்” அதிகார் 2

அதிபரும் புன்சிரிப்புடன் “ஆமா எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தாச்சு, ஆனால் அவர்களை அசைக்க முடியவில்லை. அவர்கள் மிக கடினமானவர்கள், அவர்களை முதலில் மனதளவில் உடைக்க வேண்டும், அப்புறம் அவர்களின் நம்பிக்கைகளை, இயக்கத்தின் மீதுள்ள பற்றை, அப்புறம் கடைசியாக மொத்தமாக அவர்களையும்” என்று சிரித்தார்.

பாதாள அறையில் இயக்கத்தின் தலைவர் மற்றும் தலைவரின் வலது கரம், இடது கரம், மூளை, முதுகெலுப்பு, இதயம் என்று அனைவரும் இருந்தனர். அதிபரின் பேச்சை கேட்டதும் அவர்களின் முகத்தில் கட்டுக்கடங்காத கோபம் வந்தது, அதில் ஒருவர்

“வேசி மகன், வன்முறையை ஆதரிக்க மாட்டோம் என்று கூறிவிட்டு இரவோடு இரவாக குண்டு போடறான்” என்றார் கோபமாக.

“நம்மள உடைக்க நமக்குள்ளவே சண்டையை உண்டு பண்ண பார்கிறான், பொட்டை” என்று அவரவர்கள் கோபத்தை அசிங்கமான வார்த்தைகளின் துணையுடன் பேசினார்கள். அதை அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டு இருந்த தலைவர்.

“எல்லாரும் போய் கொஞ்ச நேரம் ஒய்வு எடுங்கள், அப்புறம் விவாதிக்கலாம்” என்றார்.

கூட்டமும் அமைதியாக கலைந்தது, உள் அறையில் இதை எல்லாத்தையும் பொறுமையாக கவனித்துக் கொண்டு இருந்த தலைவரின் 15 வயது மகள் வெளியே வந்தாள். தலைவர் அமைதியாக தலையில் கைவைத்த படி சாய்ந்துக் கொண்டு இருந்தார்.

“அப்பா, தலைவலிக்குதாப்பா” என்று அவரின் தலையை வருடி விட்டாள்.

அவரை அறியாமல் அவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரின் மகள்

“என்னப்பா எதுக்கு அழுவறீங்க, எங்களின் ஒரே தைரியம் நீங்க மட்டும் தானே நீங்களே அழுதா நாங்கள் என்ன செய்வோம்” என்று அவளும் உடன் அழ ஆரம்பித்தாள்.

தலைவர் தன்னுடைய கண்களை துடைத்துக் கொண்டு “இல்லமா அவங்க சொன்னது போல நான் ஒரு சுயநலவாதிதானோ என்று எனக்கே சந்தேகமாக இருக்குமா. இந்த இயக்கத்தில் உள்ள எல்லோரும் என்னுடைய சொந்தமாக தான் நான் நினைகிறேன். ஒவ்வொரு முறையும் என்னுடைய சொந்தங்களை நான் இழக்கும் பொழுதும் நான் எனக்குள் மடிகிறேன். (கனத்த மெளனம் நிலவுகிறது) வயதில் எனக்கு இருந்த தைரியம் வயது ஆனப்பின் இல்லம்மா.... (கனத்த மெளனம் நிலவுகிறது), ஆனால் என்னுடைய லட்சியத்தை அடைய நான் மற்றவர்களை காவு கொடுத்து அடைகிறேன் என்று நினைக்கும் பொழுது நான் ஒரு
சுயநலவாதியா? என்று மனம் குமுறுது” என்றார் கண்ணீருடன்.

”எப்பப்பா இந்த சண்டை முடியும்”

சிரித்துக் கொண்டு “ஒன்னு நான் சாவணும், இல்ல அதிபர் போர்வையில் இருக்கும் அந்த யமன் சாவணும்”

“அப்பா நீங்க கவலப்படாதீங்கப்பா, இந்த முறை நான் மனிதவெடி குண்டாக போறேன்” என்றாள் தீர்மானமாக. தலைவர் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தார்.

இரண்டு நாள் கழித்து காலை 10.00 மணி ராணுவ அமைச்சரின் வீட்டின் முன், அவரின் வருகைக்காக உடல் முழுவதும் வெடிகுண்டுகளுடன் நின்றுக் கொண்டு இருந்தாள் அவள். அந்த சமயம் குடும்பத்துடன் விளையாடிக் கொண்டு போகும் குழந்தைகள், கல்லூரி பேருந்தில் சம வயதுடைய ஆண்களிடம் விளையாடிக் கொண்டு போகும் இவளின் வயதை உடைய பெண்கள், இருசக்கர வாகனத்தில் போகும் அன்னியோன்னிய காதல் ஜோடிகள் என்று அனைவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்து பெருமூச்சு விட்டாள்.

“அடுத்த ஜென்மத்திலாவது இந்த மாதிரி ஒரு வாழ்க்கையை நாம் அனுபவிக்க வேண்டும்” என்று தனக்குள் கூறிக்கொண்டாள் இருந்தாலும் அவள் மனது ஆயிரம் ஆயிரம் கேள்விகள் கேட்டது, பதிலும் சொன்னது, குழம்பினாள், சுதாரித்தாள், மறுபடியும் குழம்பினாள். ராணுவ அமைச்சர் வீட்டை விட்டு வெளியே புடை சூழ வந்தார். இவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக அவரை அணுகினாள். மெய்காப்பாளர்கள் அவளை தடுத்தார்கள் இவள் அமைச்சரை நோக்கி கத்தினாள்

“ஐயா உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும், உங்க உயிர் சம்மந்தபட்ட விஷயம்” என்றது அனைவரும் அவளையே பார்த்தார்கள். அவள் மையமாக நடந்து அவரின் அருகில் சென்றாள்.

“ஐயா நான் ஒரு மனித வெடிகுண்டு (அனைவரும் தூர நகர்ந்தார்கள், மெய்காப்பாளர்களையும் சேர்த்து), ஆனால் எனக்கு சாக பிடிக்கவில்லை, நான் வாழ நினைக்கிறேன்” என்றாள் தீர்க்கமாக.

விஷயம் காட்டு தீ போல பரவியது அறை மணி நேரத்தில் நாட்டில் உள்ள மொத்த ஊடகத்துறையே அங்கு கூடி விட்டது. பாம் டிஃப்யூஸர்கள் எல்லாம் வந்து இருந்தனர். அமைச்சர்களும் அதிபருடன் அவசர கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அதிபர் “ஆஹா அருமையான ஒரு உளி கிடைத்து இருக்கு, இதை வைத்தே எப்படி அந்த மலையை உடைக்கிறேன் பார், கூப்பிடு எல்லா ஃப்ரஸ்ஸயும்” என்றார் சந்தோஷமாக.

வெடிகுண்டுகளை எல்லாம் கலைந்த நிலையில் இருந்த அவளை நோக்கி ஒவ்வொரு கேமராவும் வைக்கப்பட்டது, மைக்கை பிடித்த அதிபர்

“மக்களே நான் அன்று அளித்த பேட்டியின் முதல் வெற்றி இந்த சிறுமி, இவள் தான் முதல் இன்னும் இன்னும் பல மக்கள் நம்முடன் வந்து சேருவார்கள். இது ஒரு தொடக்கம் மட்டுமே, இப்பொழுது இந்த சாதனைச் சிறுமி பேசுவாள்” என்று அவளை அன்புடன் தோள் மீது கை வைத்து அழைத்து வந்தார், மைக்கின் முன் அவளை நிறுத்தி

“பேசுடா கண்ணா, அந்த இயக்கத்தின் அயோக்கிய தனத்தை பேசு மக்களுக்கு புரியட்டும்” என்றார் அவளின் கையை பிடித்துக் கொண்டு நின்றார்.

அவள் எந்த சலனமும் முகத்தில் காட்டாமல் மைக்கின் முன் நின்று

“உங்களுக்கு எல்லாம் இது அதிர்ச்சியாக இருக்கும், இதைவிட அதிர்ச்சியான செய்தி சொல்கிறேன். நான் தான் இயக்க தலைவரின் மகள். (அனைவரின் முகத்திலும் ஆச்சர்யம்) அதிபர் ஐயா கூறியது போல அந்த இயக்கத்தில் உள்ளவர்கள் மனிதர்கள் கிடையாது, உண்மைதான் அவர்கள் அனைவரும் விதைகள் சாக சாக முளைப்போம், என்னையும் சேர்த்து தான்” என்று தன்னுடைய உடலின் உள் அறுவை சிகிச்சையின் மூலம் வைக்கப்பட்டிருந்த பாமின் பட்டனை மார்புக்கு நடுவில் அமுக்கினாள்.

“டமார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”

சுகந்தப்ரீதன்
11-01-2009, 07:06 AM
மிக எளிதாய் உங்கள் கதைகளின் மூலம் நீங்கள் சொல்லவந்த கருத்தை சொல்லிவிடுகிறீர்கள் மூர்த்தி.. எல்லோராலும் இது முடிவதில்லை.. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்..!!

அந்த பெண்ணின் இறுதி உரையில், " உலகம் முழுதும் எந்த அதிபரின் மகனோ மகளோ இராணுவத்தில் முன்னின்று போரிடுவதில்லை.. ஆனால் நான் அந்த இயக்க தலைவரின் மகள்..." என்று ஆரம்பித்திருந்தால் அதன் ஆழம் இன்னும் அதிகமாக வெளிப்படுட்டிருக்குமே மூர்த்தி..?!

Mano.G.
11-01-2009, 10:12 AM
ரிவர்ஸ் சைக்காலஜி பயன் படுத்தி இயக்க தலைவரும் தலைவரின் மகளும் தங்கள் மேல், தங்கள் இயக்கத்தின் மேல் தூவப்பட்ட களங்கத்தை முறியடித்த விதம் கதையின் கிளைமாக்ஸ்,

வாழ்த்துக்கள் தம்பி

ரங்கராஜன்
11-01-2009, 02:00 PM
மிக எளிதாய் உங்கள் கதைகளின் மூலம் நீங்கள் சொல்லவந்த கருத்தை சொல்லிவிடுகிறீர்கள் மூர்த்தி.. எல்லோராலும் இது முடிவதில்லை.. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்..!!

அந்த பெண்ணின் இறுதி உரையில், " உலகம் முழுதும் எந்த அதிபரின் மகனோ மகளோ இராணுவத்தில் முன்னின்று போரிடுவதில்லை.. ஆனால் நான் அந்த இயக்க தலைவரின் மகள்..." என்று ஆரம்பித்திருந்தால் அதன் ஆழம் இன்னும் அதிகமாக வெளிப்படுட்டிருக்குமே மூர்த்தி..?!

நன்றி ப்ரீதன்
உங்களின் வார்த்தைகளுக்கு, நீங்கள் கூறியது போல நான் போட வேண்டும் என்று தான் நினைத்தேன், ஆனால் ஒரு சிறு வேறுபாட்டினால் விட்டுவிட்டேன், அதிபரும் அவரின் ஆர்மியும் கடமைக்காக எதிர்கிறார்கள் அவர்கள் இறந்தால் அரசு சலுகைகள் அனைத்தும் கிடைக்கும், ஆனால் இயக்கத்தில் இருந்தவர்கள்
லட்சியத்திற்காக இறக்கிறார்கள், இவர்கள் இறந்தால் உடல் கூட இவர்களின் குடும்பங்களுக்கு கிடைப்பது இல்லை. உண்மையான லட்சியத்திற்கு உழைப்பவர்கள் விளம்பரம் தேட மாட்டார்கள், பேசுவும் மாட்டார்கள். நன்றி.

ரங்கராஜன்
11-01-2009, 02:03 PM
ரிவர்ஸ் சைக்காலஜி பயன் படுத்தி இயக்க தலைவரும் தலைவரின் மகளும் தங்கள் மேல், தங்கள் இயக்கத்தின் மேல் தூவப்பட்ட களங்கத்தை முறியடித்த விதம் கதையின் கிளைமாக்ஸ்,

வாழ்த்துக்கள் தம்பி


நன்றி மனோ அண்ணா,
தொடர்ந்து உங்களின் விமர்சனத்தினால் என்னை உயர்த்துங்கள். நன்றி.

அமரன்
12-01-2009, 09:30 AM
கதையல்ல நிஜம்.
உயிரைக் காத்துக்கொள்ள ஓடுபவனுக்கு உயிரைக்கொல்ல துரத்துபவனை விட வேகம் அதிகம்.
உயிரைக் காக்க போராடுபவனுக்கு உயிரை போக்க போராடுபவனை விட நெஞ்சுரம் அதிகம்.
இதைவிட வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை.
மனமார்ந்த பாராட்டுகள் மூர்த்தி.

நிழலுக்கு உயிரில் நரா கொடுத்த படமொன்றுக்கு எழுத நினைத்த கவிதை.

பூவாகிப் பிஞ்சாகி காயாகிக் கனியாகி
விதையாக வீழ்ந்தவன்
மரமாக முளைத்து கைகளை நீட்டுகிறான்.
தயவுசெய்து கை கொடுங்கள்
அவன் கனவுகள் நிஜமாகட்டும்!

சுதந்திர வேட்கை வீரர்களுக்காக..

ரங்கராஜன்
12-01-2009, 10:50 AM
கதையல்ல நிஜம்.
இதைவிட வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை.
மனமார்ந்த பாராட்டுகள் மூர்த்தி.

..

நன்றி அமரன்
இந்த வார்த்தையை நான் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை, இருந்தாலும் உங்களின் விமர்சனத்திற்க்கு நன்றி.

சசிதரன்
12-01-2009, 01:35 PM
கதையை ஸ்வாரஸ்யமாக கொண்டு சென்று நல்ல திருப்பத்துடன் முடித்திருக்கிறீர்கள் மூர்த்தி... ரசித்தேன்...:)

erode
13-01-2009, 10:19 AM
கதை மிகவும் அருமையா இருக்கு
ஆனால் கதையில் வரும் குழந்தை மனித குண்டு பாத்திரம் வேண்டாம் , குழந்தைகள் குழந்தைகளா இருக்கட்டும்

Mathu
13-01-2009, 08:43 PM
மூர்த்தி உங்கள் ஒவ்வொரு கதையிலும் ஏதவதொரு சிறந்த கருத்து இருக்கும்.

இப்படி ஒரு ஆழமான கதை நான் எதிர்பார்க்காதது,
இதற்கு சரியான கருத்து அமரன் இடம் இருந்து கிடைத்திருக்கிறது,
நன்றி மூர்த்தி, அமரன்

Keelai Naadaan
14-01-2009, 05:57 AM
அதிபரின் உரையும், தீவிரவாத தலைவரின் உணர்வும், அவருடைய மகளின் திடமான முடிவும்...
மிக அருமையாய் கொடுத்திருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்

kugan
12-02-2009, 07:55 AM
நல்ல விதைகள் விருட்சமாவது நன்மைக்கே

samuthraselvam
13-02-2009, 04:49 AM
நல்ல உணர்ச்சி மிகுந்த கதை. நாட்டில் எல்லா அரசியல்வாதிகளுமே இப்படித்தான். நாட்டுக்கு நல்லது செய்கிறேன் என்று பொதுமக்களுக்கு பிடிக்காததை மட்டுமே செய்பவர்களும் உள்ளார்கள். கதையில் வரும் சிறுமிக்கு 15 வயதிலேயே இவ்வளவு வீரம் என்றால் பெரிய பெண்ணான பிறகு எவ்வளவு வீரம் இருந்திருக்கும். அவளை வாழவிட்டிருக்கலாம். பாசதிற்க்காகவும் தேசத்திற்காகவும் உயிரைக்கூட கொடுக்கலாம். முடிவு அருமை. பாராட்டுகள் அண்ணா......

இளசு
25-02-2009, 08:47 PM
25-வது சிறுகதைக்கு சிறப்பு ( வெள்ளிவிழா) வாழ்த்துகள்... தக்ஸ்!

எழுதும் வேகம்... நிரந்தரத் தரம் - வியக்க வைக்கிறது!

சுஜாதா எனும் மானசீக குரு நிச்சயம் மகிழ்வார்!


மனமாறிய மனித வெடிகுண்டு இளம்பெண் - நான் அறிந்த உண்மைச் சம்பவம்..

அதற்கு முன்னும் பின்னும் நிஜங்கலந்த கற்பனை சேர்த்து
நேர்த்தியாய் ஒரு விறுவிறு சிறுகதை..

விரைவில் பொன்விழா ( 50வது சிறுகதை) வாழ்த்து வழங்க வருவேன்!