PDA

View Full Version : செல்வி



umakarthick
30-12-2008, 12:16 PM
செல்வி இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருந்தா, காரணம் அவங்க அப்பா இன்னைக்கு ஆட்டோ வாங்க போறாரு, ஆமா பெட்டிக்கடையில் வருமானம் இல்லைன்னு , பாங்குல லோன் வாங்கி ஆட்டோ வாங்க போறாரு.

'இனிமே தினமும் என்ன ஆட்டோல ஸ்கூலுக்கு கொண்டு போய் விடுவியாப்பா?'
என செல்விக் கேட்டதுக்கு , 'ஆமாம்மா , ஆட்டோக்கு பேரு கூட உன் பேரு தான்னு' சொன்னாரு அப்பா.


சாயங்காலம் வீட்டு வாசல்ல ஆட்டோ நிக்கும் , எப்போடா சாய்ங்காலம் ஆகும் ,எப்போ தான் ஆட்டோவா பார்க்க போறோமோ ன்னு ஆர்வமா இருந்துச்சு செல்விக்கு. அவ பிரண்ட்ஸ் எல்லார்கிட்டேயும் சொல்லிட்டா விஷயத்த, அவ பிரண்ட்ஸை எல்லாம் ஆட்டோல ரவுண்டு கூட்டு போவான்னு சொன்னாதால எல்லாரும் காத்துக்கிட்டு இருந்தாங்க மணியடிக்குறதுக்கு.


4 மணிக்கு மணியடிச்ச உடனே செல்வி பைக்கட்ட(பை) தூக்கிட்டு ஓடினா , பின்னாடியே சுடலைமாடி, இ.குமாரு, குமரேசன், மாரியம்மா எல்லாரும் ஓடி வந்தாங்க, ஸ்கூல்ல இருந்த 10 நிமிசம் அவ வீடு. தூரத்துலேயே அவ ஆட்டோவா பார்த்துட்டா, மாலையெல்லாம் போட்டு பொட்டு வச்சிருந்தது.


ஆர்வமா பக்கத்துல போய் பார்த்தப்போ அதுல அவ பேரு இல்ல ,புகழ்பெரும் நடிகர் அஜய்யின் பேரும் , அவரு போட்டோவும் ஒட்டியிருந்தது..





பின்குறிப்பு: இதற்கு மேல் இந்த கதையில் எழுத ஒண்ணுமே இல்லை, தொடருவும் விரும்ப வில்லை

ரங்கராஜன்
30-12-2008, 03:24 PM
நல்ல இருக்குங்க, அதற்க்கு அப்புறம் செல்வியின் மனம் எவ்வளவு வருத்தப்பட்டு இருக்கும். குழந்தைகள் வாழ்க்கையில் ஏமாற்றங்கள் சகஜம் தான், ஆனால் ஏமாற்றமே வாழ்க்கையாக இருந்தால்?????????????????????. தொடருங்கள்.

நிரன்
30-12-2008, 04:00 PM
உங்கள் படைப்பை இன்றுதான் கண்டேன்
இக்கதையையும் படித்தேன்.. நன்றாக உள்ளது

சிறு குழந்தையின் மனதில் ஆசையை வளர்த்த பெற்றோர்களே
அதை நிறைவேற்றாமலும் அதன் விளைவைப்பற்றியும்
சிந்திக்க மறந்து விடுகின்றனர் இதனால் அப்படிப்பட்ட
குழந்தைகள் மன உழைச்சலுக்கும் ஆளாகின்றனர்
இப்படி்ப்பட்ட பெற்றோர் அதனைக் கவனத்தில் கொள்வதே
இல்லை.

என்றாலும் எனக்கு ஒரு சந்தேகம் இக் கதையில் வந்த ஆட்டோ
அச்சிறுமியின் அப்பாவுடையதா?
இல்லையெனின் வேறு யாருடைய ஆட்டோவையாவது பார்த்து விட்டு
செல்வி அதனை தவறாக புரிந்து கொண்டு விட்டாளா?

நன்றாக உள்ளது கதை தொடரலாம் தானே!!!!!

மதுரை மைந்தன்
30-12-2008, 06:55 PM
உங்கள் கதையைப் படித்தேன். சினிமா மோகம் எப்படி கண்ணை மறைத்து பெற்ற குழந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போகிறது என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

umakarthick
31-12-2008, 09:58 AM
@நிரஞ்சஞ்சன், மதுரை மைந்தன்- சினிமா மோகத்தை சொல்ல நினைத்து இப்படி எழுதினேன்..அது அவள் அப்பாவுடைய ஆட்டோ தான்

வேலை பழுவால், மற்றும் எல்லாம் தளங்களையும் தடை செய்து விட்டதால் வர இயல வில்லை ..ஆர்வமு காதலும் அதிகம் தமிழ் மேல் ஆனால் நேரமும் வாய்ப்புகளும் குறைவு ..இனிமேல் தினமும் அட்டெண்டென்ஸ் தான்

@daks- என்ன செய்யுறது இதை சினிமாதனமாக இல்லாமல் இயல்பாக எழுத முயற்சித்தேன்..இந்த கதையை சம்பிரதாயமாக முடித்திருந்தால் 100 ல் ஒன்றாகியிருக்கும் :)

Keelai Naadaan
01-01-2009, 06:56 AM
ஆர்வமா பக்கத்துல போய் பார்த்தப்போ அதுல அவ பேரு இல்ல ,புகழ்பெரும் நடிகர் அஜய்யின் பேரும் , அவரு போட்டோவும் ஒட்டியிருந்தது..

பின்குறிப்பு: இதற்கு மேல் இந்த கதையில் எழுத ஒண்ணுமே இல்லை, தொடருவும் விரும்ப வில்லை

ஆம்... இதற்கு மேல் இதில் எழுத ஒன்றுமே இல்லை. தொடர வேண்டிய அவசியமும் இல்லை.
சொல்ல வந்ததை மனதில் பதியும் படி சொல்லிவிட்டீர்கள்

ஓட்டப்பந்தயத்தில் எல்லைக்கோட்டை தொடும் வரை ஓடினால் போதுமே. அதற்கு மேலும் ஓட வேண்டியதில்லை.

வாழ்த்துக்கள்:icon_b:

shibly591
01-01-2009, 07:35 AM
செல்வி....

நாமும் அவ்வப்போது செல்வியாக்கப்படுகிறோம்..பெற்றோரால் நண்பனால் சக ஊழியனால் நமது மேலாளரால் பக்கத்து வீட்டுக்காரனால் காதலியால் யாரே முகம் தெரியா ஒருவனால் பண் கண்டக்டரினால்...இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் நாமும் செல்வியாக்கப்படுகிறோம்..ஒரு சின்ன விசயம்..நாமும் அவ்வப்பபோது பலரை செல்வியாக்குகிறோம்..

நல்ல கதை..

தொடருங்கள் நண்பரே

வாழ்த்துக்கள்

பாரதி
01-01-2009, 12:16 PM
நல்ல கதைக்கு பாராட்டுக்கள் கார்த்திக்.

மதி
02-01-2009, 01:46 AM
ஏமாற்றங்களும் அதன் பாதிப்புகளும் அளவிடமுடியாதவை. நல்லதொரு கதை தந்தமைக்கு பாராட்டுக்கள் கார்த்திக்

பென்ஸ்
02-01-2009, 10:26 PM
ஆனந்த விகடனில் வரும் ஒரு பக்க கதைகளுக்கு நான் ரசிகன்... சொல்ல வந்ததை கச்சிதமாக சொல்லிவிட்டு, முடிவை வாசகர்கள் கைக்கு விட்டு விடுவார்கள்... அந்த வகையில் இது சிறப்பான கதை கார்த்திக்.

நிறைய எழுதுங்கள்...

இளசு
03-01-2009, 06:18 AM
கதைக்கரு,சொன்ன விதம், இயல்பான நடை - எல்லாமே அருமை!
பாராட்டுகள் கார்ர்த்திக்!

கீழைநாடனின் பந்தய எல்லை, ஷிப்லியின் எல்லாரும் ஒவ்வொரு வேளையில் செல்வி -
அழகிய விமர்சனங்கள். ரசித்தேன்!

கா.ரமேஷ்
03-01-2009, 06:27 AM
நிறைய செல்விகள் ஏக்கங்களில் மட்டுமே வாழ்கின்றனர்....
எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும்.....
அருமையான கதை...வாழ்த்துக்கள் தோழரே....!

அமரன்
10-01-2009, 10:17 AM
ஏங்க உமாகார்த்திக். ஒருவேளை செல்வின் அப்பா நாள்வாடகைக்கு ஆட்டோ எடுத்திருப்பாரோ..

கதை ஏற்படுத்திய சலனம் அடங்க பல நாழிகை ஆகிறது.

கீழைநாடான், ஷில்பி பின்னூட்டங்கள் கதைக்கு சலங்கை.

பாராட்டுகள்!

umakarthick
16-01-2009, 09:46 AM
//ஓட்டப்பந்தயத்தில் எல்லைக்கோட்டை தொடும் வரை ஓடினால் போதுமே. அதற்கு
மேலும் ஓட வேண்டியதில்லை.- அருமையாக சொன்னீர்கள் நண்பரே :))


ஏங்க உமாகார்த்திக். ஒருவேளை செல்வின் அப்பா நாள்வாடகைக்கு ஆட்டோ எடுத்திருப்பாரோ..
//
இல்லைங்க அவரு சொந்தமாத்தான் வாங்கினாரு...செல்விக்காக நீங்க யோசிக்குறீங்க ஆனால் நான் இங்கே சொல்ல நினைத்தது அவள் அப்பாவின் சினிமா மோகத்தை தான்


//ஆனந்த விகடனில் வரும் ஒரு பக்க கதைகளுக்கு நான் ரசிகன்... சொல்ல வந்ததை கச்சிதமாக சொல்லிவிட்டு, முடிவை வாசகர்கள் கைக்கு விட்டு விடுவார்கள்... அந்த வகையில் இது சிறப்பான கதை கார்த்திக்.- விகடனுக்கு இதை அனுப்பினால் கண்டிப்பாக பிரசுரமாகாது ஒரு வேளை குங்குமத்தில் ஆகலாம்..குங்குமத்திற்கு நாம் என்ன அனுப்பினாலும் பிரசுரமாகும்