PDA

View Full Version : ஆடையின்மை



ஆதவா
16-12-2008, 05:27 AM
நிர்வாணம்


பொழுது புகுந்த மோனக்கிறுக்கால்
ஒளித்திரள் பட்டுத் தெறித்த
பகலாகத்
துடித்துக் கொண்டிருந்தேன்

நெடுமலையில் ஊறிக் கசிந்த
மணற்த் திட்டினைப்போல்
என்னை விட்டு நழுவிக் கொண்டிருந்தது
நிர்வாணம்

நுரைகுமிழிகளைத் தொட்டுடைக்கும்
விளையாட்டில், பருவம் வென்றது
எப் பணயமுமின்றி
தோற்றோடியது நிர்வாணம்

நெய் தகழியில் உலாத்தும் தும்பியென
நெடுநாட்கள் ஒவ்வொன்றாய்
ஆடையின்மையின் நினைவுகள்
இழுத்துச் சென்றன

நிர்வாணம் என்பது
சட்டெனத் தோன்றி மறையும்
துருவாசன் கோபங்கள்
நில்லாமை அதன் பாவம்
அப்பட்டம் அதன் குற்றம்

வெயிலெறிந்த முட்கதிர்களைப்
பொடித்தனுப்பும் படலம் போல
இடை நழுவா கச்சையொன்று
இன்றென்னை மெய்காத்து நிற்கிறது
அது
காத்தலெனும் தொழிலினூடே
அழித்தலும் செய்துகொண்டிருக்கிறது.

ஆடைத் திணிப்பெனும் ஏகாதிபத்தியத்தில்
இருமனக் குழப்பங்களுக்கிடையே
தங்கித் தவித்து
இறுதி வரையிலும் இழுத்துக் கொண்டிருந்த
நிர்வாணத்தின் இறுதிமூச்சடக்கி
கவிந்து கிடந்த
மணற் தாழியில் அடைத்து
முன்னிருட்டு அகலும் முன்
மூர்க்கமாய் எரிந்துவிட்டேன்

இனியொருபொழுதும்
அதைத் தழுவிப்
பொதுவில் செல்லுதலில்லை
எனும் பொருமலுடன்....

சிவா.ஜி
16-12-2008, 06:32 AM
ரொம்பப்பெரிய விஷயத்தை சொல்லியிருக்கீங்க ஆதவா. நிர்வாணம் காத்தலோடு அழித்தலும் செய்கிறது என்று சொன்னீர்களே அது அசத்தல்.

உடலுக்கு ஆடை, மனதுக்கு ஆடை என இரு வேறு பரிணாமங்களில் பயணிக்கிறது கவிதை. என்னால் உணர்ந்து கொள்ள முடிந்ததை மட்டும் மனதில் வாங்கி இடும் பின்னூட்டம். நாகரா மிக அருமையான விளக்கத்தைக் கொடுப்பார் இந்தக் கவிதைக்கு.

வாழ்த்துக்கள் ஆதவா.

(முழுதாகக் கவிதைகளைப் புரிந்துகொள்ளும் ஞானம் எப்போதுதான் வருமோ....?)

ஆதவா
16-12-2008, 08:57 AM
ரொம்பப்பெரிய விஷயத்தை சொல்லியிருக்கீங்க ஆதவா. நிர்வாணம் காத்தலோடு அழித்தலும் செய்கிறது என்று சொன்னீர்களே அது அசத்தல்.

உடலுக்கு ஆடை, மனதுக்கு ஆடை என இரு வேறு பரிணாமங்களில் பயணிக்கிறது கவிதை. என்னால் உணர்ந்து கொள்ள முடிந்ததை மட்டும் மனதில் வாங்கி இடும் பின்னூட்டம். நாகரா மிக அருமையான விளக்கத்தைக் கொடுப்பார் இந்தக் கவிதைக்கு.

வாழ்த்துக்கள் ஆதவா.

(முழுதாகக் கவிதைகளைப் புரிந்துகொள்ளும் ஞானம் எப்போதுதான் வருமோ....?)

மிக்க நன்றி சிவா.ஜி அண்ணா.. ஆடைகளின் மீதெழுந்த வெறுப்பே இக்கவிதைக்கான ஊற்று. நிர்வாணத்தை நேசிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டு என்ன செய்வதென்றே தெரியாமல் கவிதை எழுதியிருக்கிறேன்....

மிக்க நன்றி அண்ணா...

gans5001
16-12-2008, 11:23 AM
நிர்வாணம்



நுரைகுமிழிகளைத் தொட்டுடைக்கும்
விளையாட்டில், பருவம் வென்றது
எப் பணயமுமின்றி
தோற்றோடியது நிர்வாணம்


மிக நல்ல வரிகள்.

கள்ளம் தெரியாத உள்ளம் இருக்கையில் நிர்வாணம் புரிவதில்லை. மனதில் கள்ளம் புகுந்தபின்பு பார்க்கும் அனைத்திலும் ஆடையைக் களைந்து நிர்வாணம் தேடும் கண்கள்.

மனம் ஒரு குரங்கு.

ஆதவா
16-12-2008, 11:30 AM
மிக நல்ல வரிகள்.

கள்ளம் தெரியாத உள்ளம் இருக்கையில் நிர்வாணம் புரிவதில்லை. மனதில் கள்ளம் புகுந்தபின்பு பார்க்கும் அனைத்திலும் ஆடையைக் களைந்து நிர்வாணம் தேடும் கண்கள்.

மனம் ஒரு குரங்கு.

மிக்க நன்றி கன்ஸ்.. உங்களைப் போன்ற விமர்சனத் தில்கத்திடம் பாராட்டுப் பெறுவது என்னைப் போன்றவர்களுக்கு ஊக்கமாத்திரை..

உங்களது இருவரிகளில் பொதிந்திருக்கும் கருத்து கண்டு வியப்புற்றேன்..

நன்றி

நிரன்
16-12-2008, 11:40 AM
நன்றாக உள்ளது கவி... வித்தியாசமாகவும் உள்ளது..:icon_b:



ஆதிவாசிகளாக இருந்தால் இலை குழை மீதுள்ள வெறுப்பை காட்டியிருப்பீங்களா ஆது......:D

நாங்கள் அக்காலத்தை அணுபவிக்கா விட்டாலும் பழைய வரலாற்றை புரட்டும் பொளுது இந் நவீன உலகை விட சிறந்ததாகவே இருக்கும் என்று என்னுகிறேன்;)

தமிழ்தாசன்
16-12-2008, 12:50 PM
மெல்லென மேனிதடவிக்காற்று
சில்லென தோனியேறிப்போனது. அற்றைக்காலம்.
நில்லென நிறுத்தியதோ இக்கவிக்காலம்.
கல்லென நிற்பதும் தகுமோ உணர்வுகொள் காயமே!

வில்லென வளைந்திடாமல் போவதே உடற்பாகமோ?
சொல்லென யார் கேட்டும் புரியாது! ஆடைமேல் கோபமோ?
பல்லின வாழ்விதில் பல பண்பியல் கொள்ளுதல் இதுவோ?
வல்லினம் தமிழினில் ஓரழகு!
மெல்லினம தமிழினில் பாரழகு!
இடையினம் இதுதான் தமிழிலும் நூறழகு!

பாராட்டு..
ஆதவா!

ஆதவா
16-12-2008, 01:13 PM
நன்றாக உள்ளது கவி... வித்தியாசமாகவும் உள்ளது..:icon_b:

ஆதிவாசிகளாக இருந்தால் இலை குழை மீதுள்ள வெறுப்பை காட்டியிருப்பீங்களா ஆது......:D

நாங்கள் அக்காலத்தை அணுபவிக்கா விட்டாலும் பழைய வரலாற்றை புரட்டும் பொளுது இந் நவீன உலகை விட சிறந்ததாகவே இருக்கும் என்று என்னுகிறேன்;)

ஹாஹா.... அதுவும் ஒரு மறைப்பு தானே!! கண்ஸ் சொன்னது போல.. ஆடை புகுந்த பின்னரர நிர்வாணம் அபத்தமானது.... :)

நன்றி நிரஞ்சன்



மெல்லென மேனிதடவிக்காற்று
சில்லென தோனியேறிப்போனது. அற்றைக்காலம்.
நில்லென நிறுத்தியதோ இக்கவிக்காலம்.
கல்லென நிற்பதும் தகுமோ உணர்வுகொள் காயமே!

வில்லென வளைந்திடாமல் போவதே உடற்பாகமோ?
சொல்லென யார் கேட்டும் புரியாது! ஆடைமேல் கோபமோ?
பல்லின வாழ்விதில் பல பண்பியல் கொள்ளுதல் இதுவோ?
வல்லினம் தமிழினில் ஓரழகு!
மெல்லினம தமிழினில் பாரழகு!
இடையினம் இதுதான் தமிழிலும் நூறழகு!

பாராட்டு..
ஆதவா!

ஆஹா..... என்னே தமிழழகு!!

உடையினத்தின் மீதுள்ள பொருமல் உங்கள்
நடையினத்தில் தவழ்ந்து சென்றது.... :)

உங்கள் பதிவுகள் என்னைக் கொள்ளை கொள்கின்றன. :icon_b:

அன்புடன்
ஆதவன்.

சசிதரன்
21-12-2008, 04:00 AM
மிக அருமையான வரிகள் நண்பர் ஆதவா அவர்களே...

//நிர்வாணம் என்பது
சட்டெனத் தோன்றி மறையும்
துருவாசன் கோபங்கள்
நில்லாமை அதன் பாவம்
அப்பட்டம் அதன் குற்றம்//

நல்ல வரிகள்... அருமை...

Keelai Naadaan
21-12-2008, 06:02 AM
கவிதை மிக அருமை ஆதவன்.

நிர்வாணத்தை நேசிக்கலாம்
ஆனால் நாம் நேசிக்கும் விதமாக எல்லாம் வசிக்க முடியாது.