PDA

View Full Version : ஏவல் நாய்களை ஏவிய கோழைகளே!!!



தாமரை
28-11-2008, 07:12 AM
வெறிபிடித்து
துப்பாக்கிகளாலும் குண்டுகளாலும்
சலைவா வழிய கடித்த
நீங்கள் ஏவிய நாய்கள்
பொந்துகளுக்குள் பதுங்கின..

வெறிநாய் கடித்தாலும்
வெறிபிடிக்காது எங்களுக்கு
காந்தீயத் தடுப்பூசி
கச்சிதமாய் வேலைசெய்யும்..

சோம்பி இருந்த கண்கள்
இனி விழித்தெழும்
அக்கம்பக்கங்களை இனி
அவசியம் நோக்கும்

வெட்டவெளியிலும் நெஞ்சுயர்த்தி நடப்போம்.
அன்பை அறத்தை உயர்த்திப் பிடிப்போம்

சிந்திய ரத்தங்கள் உரமாகும்
இந்தியன் ஒற்றுமை செழித்து வளரும்.
பேதங்கள் கொஞ்சம் பின்னே போகும்
வாதங்கள் இன்னும் பின்னே போகும்
எத்தனை அடி எங்களுக்கு விழுமோ
அத்தனை அடிகள் உயர்ந்து வளர்வோம்..

என்று மரணமென்ற கலக்கமுமில்லை.
எலிகளின் வாழ்க்கை எங்களுக்கில்லை
ஆண்மை என்பது ஆயுதங்களில் இல்லை
வீரம் என்பது வெற்றியில் இல்லை

நாட்டைக் காக்கும் வீரர்கூட்டம்
நாங்களும் காப்போம் முடிந்த மட்டும்

சீரிய நோக்கம் சிந்தனைத் தெளிவு
காரியச் சித்தம் கண்களில் கருணை
நேரிய நன்னடை நெஞ்சினில் தாய்மை
சூரியப் பார்வை செயல்களில் தூய்மை
உங்களில் இருப்பதை உருக்குலைவாக்கும்
எங்களில் இருப்பதே ஆண்மை வீரம்

ஒளியும் வளைகள் இல்லையெனப் போகும்
ஓடுதல் உங்கள் வாழ்க்கையென ஆகும்
புன்னகை மாறா முகங்கள் வாழும்
பூமியில் சமாதானம் பூத்துக் குலுங்கும்

தீபா
28-11-2008, 07:37 AM
அப்படிப்பட்ட காலத்திற்காகத்தானே காத்திருக்கிறோம்..

இனி எங்கும் குண்டுகளுக்குப் பதில் பூக்கள் முழங்குவதைக் காண்போம்,

அன்புடன்
தென்றல்

தாமரை
28-11-2008, 08:04 AM
இதில் பட்டியலிட்டதையெல்லாம் செய்துகொண்டிருந்தால் அந்த நாள் கண்டிப்பாக வரும் தென்றல்..

பூக்கள் மலர்ந்தால்தானே தென்றலுக்குப் பெருமை..சந்தோஷம் எல்லாம்.

சாம்பவி
28-11-2008, 08:25 AM
வெறிபிடித்து
துப்பாக்கிகளாலும் குண்டுகளாலும்
சலைவாய் வழிய கடித்த நாய்கள்
பொந்துகளுக்குள் பதுங்கின..



சலைவாய்.. ????
சலைவா???
என்ன இது தலைவா....!!!!

ஜொள்ளா... ????
உமிழ்நீர்.... ???

தாமரை
28-11-2008, 08:30 AM
சலைவாய்.. ????
சலைவா???
என்ன இது தலைவா....!!!!

ஜொள்ளா... ????
உமிழ்நீர்.... ???

சுட்டியமைக்கு நன்றி!

உமிழ்நீர் உண்பதை ஜீரணமாக்க உதவும்.
சலைவா வெறியிலும் பேராசையிலும் வழிவது..

எச்சில் எனவும் சொல்லலாம்

பாரதி
28-11-2008, 08:51 AM
நல்ல கவிதைக்கு பாராட்டு தாமரை.

இருந்தாலும் நீங்கள் நாய்களை அவமானப்படுத்தி இருக்க வேண்டியதில்லை. காரணம் இரு கால்களில் நடந்த அவைகளை மனித இனம் மட்டுமல்ல, விலங்கினம் உட்பட எந்த ஒரு ஜந்தும் மன்னிக்காது ; மறக்காது.

சமாதானப்பூக்கள் மலர எத்தனை உயிர்களை உரமாகத்தர வேண்டுமோ...தெரியவில்லையே...?

சாம்பவி
28-11-2008, 09:01 AM
சுட்டியமைக்கு நன்றி!

உமிழ்நீர் உண்பதை ஜீரணமாக்க உதவும்.
சலைவா வெறியிலும் பேராசையிலும் வழிவது..

எச்சில் எனவும் சொல்லலாம்

வெறியில் வழிந்தாலும்
நெறியில் "வழிந்தாலும்" ;)
நீர் உமிழும் நீர்...
உமிழ்நீரே......
முக்காலத்திற்கும் பொருந்தும்
வினைத் தொகையது.. =))
வினைத்தொகையானது.... !!!!


வழிவது
எச்சிலோ
உமிழ்நீரோ...
மொழிவது
தமிழாக இருக்கட்டுமே.... !!!!

அதெல்லாம் சரி...
நிலை மாறலாம்..
நிலை மாறலாமோ... !!!!!!!

தாமரை
28-11-2008, 09:14 AM
வெறியில் வழிந்தாலும்
நெறியில் "வழிந்தாலும்" ;)
நீர் உமிழும் நீர்...
உமிழ்நீரே......
முக்காலத்திற்கும் பொருந்தும்
வினைத் தொகையது.. =))
வினைத்தொகையானது.... !!!!


வழிவது
எச்சிலோ
உமிழ்நீரோ...
மொழிவது
தமிழாக இருக்கட்டுமே.... !!!!

அதெல்லாம் சரி...
நிலை மாறலாம்..
நிலை மாறலாமோ... !!!!!!!


வெறியில் வழியும் எச்சில்கள் உமிழப்படுவதில்லை. சொல்லப் போனால் எச்சில் உமிழ்வதற்காக படைக்கப் பட்டதில்லை. அவை ஜீரணத்திற்காக படைக்கப்பட்டவை. வாய்ச்சுத்தமில்லாததால் உமிழ்கிறோம். வெறிநோய் பிடித்தவர்களின் வாயில் வழியும் எச்சில் மூளையின் கட்டுப்பாட்டிலோ அல்லது விருப்பத்திலோ உமிழப்படுவதில்லை. அதனால்தான் அதை உபயோகிக்கத் தயக்கம்..

வன்முறை என்பது ரேபிஸ் போன்ற ஒரு கொடிய வெறிநோய். இந்த நோய் பிடித்தால் எச்சில் கட்டுப்பாடில்லாமல் வழியுமாம். உமிழப்படுவதில்லை.

எச்சில் என்று சொல்லக் கூட எனக்குத் தயக்கமாக இருக்கிறது. என் குழந்தைகள் உண்ட எச்சில் பழங்களைத் தின்ற எனக்கு.

மொழியை விட அந்த உணர்வு எனக்கு மிக முக்கியம் சாம்பவி.

சாம்பவி
28-11-2008, 11:48 AM
மொழியை விட அந்த உணர்வு எனக்கு மிக முக்கியம் சாம்பவி.

:OOOOOOOOOOO

உங்களின் அந்த உணர்வு மிக்க*
முதல் நான்கு வரிகள்..
கவிதையில் ஒட்டாமல்
போனது தான். சோகமே.... !!!!

Keelai Naadaan
28-11-2008, 02:45 PM
வெறிநாய் கடித்தாலும்
வெறிபிடிக்காது எங்களுக்கு
காந்தீயத் தடுப்பூசி
கச்சிதமாய் வேலைசெய்யும்..


அன்பை அறத்தை உயர்த்திப் பிடிப்போம்

சிந்திய ரத்தங்கள் உரமாகும்
இந்தியன் ஒற்றுமை செழித்து வளரும்.

எத்தனை அடி எங்களுக்கு விழுமோ
அத்தனை அடிகள் உயர்ந்து வளர்வோம்..

ஆண்மை என்பது ஆயுதங்களில் இல்லை
வீரம் என்பது வெற்றியில் இல்லை

நாட்டைக் காக்கும் வீரர்கூட்டம்
நாங்களும் காப்போம் முடிந்த மட்டும்

சீரிய நோக்கம் சிந்தனைத் தெளிவு
காரியச் சித்தம் கண்களில் கருணை
நேரிய நன்னடை நெஞ்சினில் தாய்மை
சூரியப் பார்வை செயல்களில் தூய்மை

ஒளியும் வளைகள் இல்லையெனப் போகும்
ஓடுதல் உங்கள் வாழ்க்கையென ஆகும்
புன்னகை மாறா முகங்கள் வாழும்
பூமியில் சமாதானம் பூத்துக் குலுங்கும்

இந்த வரிகள் பெரிதும் கவர்ந்தன.

மனமார்ந்த நன்றிகள்

அருள்
30-11-2008, 12:07 AM
இந்த நாள் என்று வரும்?

தாமரை
30-11-2008, 04:17 PM
சாம்பவி உங்கள் குழப்பம் புரிகிறது.

நான் யார் யாரைப் பற்றிப் பேசுகிறேன் யாரிடம் பேசுகிறேன் என்பது கவிதையில் வெளிப்படவில்லை,



மற்றபடி நான் பேசிக்கொண்டிருப்பது, அந்த தீவிரவாதிகளை தயார் செய்து அனுப்பி இந்தியாவை நிலை குலைய வைத்துவிடலாம் என்று நினைக்கும் கயவர்களிடம்..

வெறிபிடித்த நாய்களாக வந்தவர்கள் - சில நாட்களாக பதுங்கிக் கிடந்து கொலைகள் புரிந்த சில தீவிரவாதிகள்.. வேகமாக ஓடிவந்து கடித்த அந்த வெறிநாய்கள்.. ராணுவம் வந்தவுடன் ஓடிப் பதுங்கிக் கொண்டனர்

மதவெறி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பதாலேயே எங்கள் நாட்டில் இந்து-முஸ்லீம் கலவரம் வந்துவிடாது என்பதைச் சொல்லத்தான்.. வெறிநாய்கள் கடித்தாலும் எங்களுக்கு வெறிபிடிக்காது. ஏனென்றால். நாங்கள் காந்தீயம் என்ற தடுப்பூசி போட்டிருக்கிறோம். மதவெறி எங்களுக்கு பிடிக்காது எனச் சொல்லி இருக்கிறேன்.

இந்தியர்கள் இனி விழிப்புடன் இருப்போம். எங்கள் மனதில் பயத்தை உருவாக்க நினைக்கும் உங்கள் பாட்சா பலிக்காது,. நாங்கள் பயமின்றி எங்கள் நாட்டில் உலவுவோம். இன்னும் அதிகம் உழைப்போம். இன்னும் வேகமாய் நாட்டை முன்னேற்றுவோம்.. இது உன் தவறு இது அவன் தவறு என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்காமல்.. இதுதான் சரி இதெல்லாம் தவறு என வாதிட்டுக் கொண்டிருக்காமல் நாங்கள் உயர உயர வளர்ந்து கொண்டே இருப்போம்.

எங்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் மரணம் வரலாம். அதைப்பற்றி நாங்கள் அஞ்சப் போவதில்லை. பல நாடுகளிலும் காடுகளிலும் எலிகள் பொந்துகளில் வாழ்வதைப் போல நாங்கள் மறைந்து வாழப்போவதில்லை. ஆயுதங்களைக் கொண்டு மிரட்டுவது ஆண்மைத்தனம் இல்லை. இது போல சுதந்திரமாய் வாழத்துணிவதுதான் ஆண்மை. சும்மா 100 பேரை வீழ்த்திவிட்டோம் என்பது வீரம் இல்லை. அதை நேருக்கு நேர் நின்று நடத்திப் பாருங்கள். யார் வீரர் என்பது புரியும்.

நாட்டைக் காக்க எங்களிடம் மிகச் சிறந்த படை உண்டு. இனி நாங்களும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.

எங்களில் இருப்பது

சீரிய நோக்கம் சிந்தனைத் தெளிவு
காரியச் சித்தம் கண்களில் கருணை
நேரிய நன்னடை நெஞ்சினில் தாய்மை
சூரியப் பார்வை செயல்களில் தூய்மை

இதுதான் ஆண்மை... இது எங்களில் இருக்கிறது. இவை உங்களுக்குள் உள்ள வெறித்தனத்தைத் தூள் தூளாக்கும்.

உலகிற்கு இவையெல்லாம் புரியப் புரிய உங்களுக்கு அடைக்கலம் கொடுப்போரே உங்களை விரட்டி அடிப்பர். உங்களால் எங்கும் ஒளிய முடியாமல் போகும்.. ஒரு இடத்திலும் நிலையாக இருக்க முடியாமல் ஓடுவீர்கள் ஓடுவீர்கள்.. இருக்கக் கூட இடமில்லாமல் ஓடுவீர்கள்.

எதையும் நெஞ்சுரத்துடன் நேரிடையாகவும் புன்னகையோடும் நேர்கொள்ளும் நல்லவர்கள் வாழ்வார்கள். பூமியில் அதனால் சமாதானம் பூக்கும்.

நாம் என்ற வார்த்தை அதனால்தான் வெளிப்படவில்லை சாம்பவி. நாங்கள் வேறு.. நாம் என்பது வேறு..

நம்முடைய மக்களை நோக்கிச் சொல்வதாக இருந்தால் நாம் என்றுச் சொல்லி இருப்பேன்.

இப்போது தெளிவாக இருக்கும் என எண்ணுகிறேன்.

சாம்பவி
30-11-2008, 04:42 PM
சாம்பவி உங்கள் குழப்பம் புரிகிறது.

நான் யார் யாரைப் பற்றிப் பேசுகிறேன் யாரிடம் பேசுகிறேன் என்பது கவிதையில் வெளிப்படவில்லை,

நாம் என்ற வார்த்தை அதனால்தான் வெளிப்படவில்லை சாம்பவி. நாங்கள் வேறு.. நாம் என்பது வேறு..

நம்முடைய மக்களை நோக்கிச் சொல்வதாக இருந்தால் நாம் என்றுச் சொல்லி இருப்பேன்.

இப்போது தெளிவாக இருக்கும் என எண்ணுகிறேன்.


ஓவர் விளக்கம் ஒடம்புக்காகாதுங்கோ..... !!!
குழப்பம் பொருளில் இல்லை.....
சொல்லில்.... !!!!


ரொம்ப ரொம்பத் தெளிவா
குழப்பற ஒரு விஷயம் என்னன்னா...
நிலை..... !!!!




அதெல்லாம் சரி...
நிலை மாறலாம்..
நிலை மாறலாமோ... !!!!!!!

இந்த தன்மை... முன்னிலை... படர்க்கை
அப்படின்னு சொல்வாங்களே அது..... !!!!!

முதல் நான்கு வரிகள்ல ..
தீவிரவாத வெறிநாய்கள் பதுங்கின
அப்படின்னு படர்க்கைல தொடங்குகிற கவிதை....
கடைசி வரிகள்ல....
தொபுக்கடீர்னு முன்னிலைக்கு தாவுகிற
குழப்படியைத் தான்
நெஞ்சு பொறுக்குதில்லையே.... !!!!




Disclaimer: சொற்சிலம்பம் தவிர்த்து., வேறெந்த பகுதிகளிலும்..
அதிகமாக பொருட்சுவையில் தலையிடுவதில்லை ...... !!!!!

சாம்பவி
30-11-2008, 05:18 PM
ஏவல் நாய்களை ஏவிய கோழைகளே!!!

வெறிபிடித்து
துப்பாக்கிகளாலும் குண்டுகளாலும்
சலைவா வழிய கடித்த
நீங்கள் ஏவிய நாய்கள்
பொந்துகளுக்குள் பதுங்கின..



இத* ... இத*... இதைத் தான் எதிர்ப்பார்த்தேன்.....
ஹாட்ஸ் ஆஃப்.... மாமனாரே. !!!!

மதுரை மைந்தன்
30-11-2008, 06:30 PM
உங்கள் கவிதை அருமை. குண்டு மாரி பொழிந்து உயிர்களைக் குடித்த வெறி நாய்களுக்கு சில இந்திய எட்டப்பர்கள் உதவியிருப்பதாக செய்திகள வந்திருக் கின்றன. கண்ணுக்குத் தெரியாத அந்த எதிரிகளை விட கண்ணெதிரே நடமாடும் இத்தகைய எட்டப்பர்களிடம் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

விக்ரம்
30-11-2008, 07:05 PM
அருமையான கவிதை தாமரை.. ண்ணா

அருமை, அழகு போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி இதை ஒரு வியாபாரக் கவிதை வரிகளாக சொல்வதைக் காட்டிலும், வேறு ஏதாவது வார்த்தைகள் இருக்குமா என்று யோசித்துப் பார்க்கிறேன். என் புத்திக்கு எதுவும் வரவில்லை.

சாவு வீட்டில் ஒப்பாரி வைப்பவர்களைப் பார்த்து அழகாக (அ) அருமையாக ஒப்பாரி வைக்கிறார்கள் என்று சொல்ல முடியாது தானே. அதுபோல் தங்களது இந்தக் கவிதை வரிகளை அருமையான (அ) அழகான வரிகள் என்று சொல்ல இயலவில்லை.

என் மனதினுள் சென்று வெளியே வரத்துடித்துக் கொண்டிருக்கும், வார்த்தை என்னவென்பதை அறியும் சக்தி இருந்தால் நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்..

மீண்டும், மீண்டும் ஆகா, ஓஹோ, அருமை, அழகான போன்ற வார்த்தைகள் தான் வரத்துடிக்கின்றன. ஆனால் அதுவெல்லாம் சரியான வார்த்தைகளில்லை. வேறு ஏதோ ஒரு வார்த்தை தான் சொல்லணும். அது என்னான்னு தான் சொல்லத் தெரியவில்லை...

சரி என்னதான் சொல்ல வர்றீங்கனு மனசுக்குள்ள திட்டுவீங்க, அதனால சூப்பர்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்றேன்.

ஆனா இவனுக்கு நம்ம கவிதை புரிஞ்சுருக்குமானும் நீங்க யோசிப்பீங்க இல்ல???

தாமரை
01-12-2008, 03:32 AM
விக்ரம்,

முதல்ல நீங்கள் என்னை அண்ணா என்று அழைப்பது சரியா எனப் புரியவில்லை. (ஆதாரம் : தாமரை பதில்கள் :))

இது ஒப்பாரியோ முகாரியோ அல்லது அந்த நேரத்து உணர்வு வெளிப்பாடோ அல்ல.
இது ஒரு தடுப்பூசி,.. அவ்வளவுதான். கால அவசரத்தின் நிலை உணர்ந்தே வேகவேகமாக எழுதப்பட்டது. அவசர அவசரமாக பதியப்பட்டது. என்ன தலைப்பு என்று கூட சரியாக முடிவு செய்யாமல், இருந்த சில நிமிடங்களில் போர்க்கால நடவடிக்கையாக பதியப்பட்டது.

பலன்?

இருக்கிறது என்றுதான் நம்புகிறேன். மன்றத்தில் இது சம்பந்தமாய் வரும் பதிவுகள் இதற்கு ஆதாரம் காட்டும்.

இது இந்தியர்களுக்கு மட்டுமல்ல. இது போன்ற அழிவுத் தரகர்களால் பாதிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் சேர வேண்டும் என்ற அடிப்படை ஆசை உண்டு.

இந்த நிகழ்வை முன் வைத்து ஒரு டிசம்பர் ஆறோ, கோத்ராவோ வராமல்.. வெறிநோய் பீடிக்காமல் மக்கள் விழிப்புணர்ச்சியும், உறுதியும் கொண்டு வருங்காலத்தை மக்கள் தெளிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தெளிவைக் கொடுப்பது கவிஞன் என்றுச் சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரின் கடமையும் கூட. வெறும் உணர்ச்சிகளைத் தூண்டுவது அல்ல கவிஞனின் வேலை.

kavitha
01-12-2008, 05:12 AM
வெறிநாய் கடித்தாலும்
வெறிபிடிக்காது எங்களுக்கு
காந்தீயத் தடுப்பூசி
கச்சிதமாய் வேலைசெய்யும்..

ஆழமான வரிகள். மிக ரசித்தேன் சகோதரரே.
தேவையான சமயத்தில் தந்த கவிதைக்கு நன்றி

ஆதி
01-12-2008, 07:33 AM
காந்தியும் கர்த்தனும்
பூமியில்
இரத்தம் சிந்தியது
சமாதானம் பூக்கத்தான்

காந்திய பூமியில் நீங்கள்
இர்த்தம் சிந்தியது
சமாதானம் கெடுக்கதான் - நாட்டில்
சஞ்சலம் பூக்கத்தான்..

நெறிநூல் யாவும்
நிலையான பாதையை
நெஞ்சில் பதிக்கவே வந்தது..

நெறிநூல் பாதையில்
நெறிகெட்டு போனதால் உங்கள்
நெஞ்சில் ஈரம் குறைந்தது..

இந்திய பூமியில்
அந்திமம் மலர்த்த
சிந்திய குருதியை
சொந்த நிலத்திற்கு
செலவளித்திருந்தால்
உலக வரலாற்றில்
உயர்ந்திருப்பீர்கள்..

பிந்தைய தலைமுறை
பெருமிதத்தோடு உங்கள்
பெயர்களை உச்சரித்திருக்கும்..

வடியும் உதிரமும்
வளமான மூளையும்
அன்னை தேசம் செழிக்க செலவாகட்டும்
அண்டை தேசம் அழிக்க செலவிட வேண்டாம்..

விக்ரம்
01-12-2008, 10:58 AM
விக்ரம்,

முதல்ல நீங்கள் என்னை அண்ணா என்று அழைப்பது சரியா எனப் புரியவில்லை. (ஆதாரம் : தாமரை பதில்கள் :))

இது ஒப்பாரியோ முகாரியோ அல்லது அந்த நேரத்து உணர்வு வெளிப்பாடோ அல்ல.
இது ஒரு தடுப்பூசி,.. அவ்வளவுதான்.
தடுப்பூசி மிக அருமையான வார்த்தை தான். தடுப்பூசியைக் காட்டிலும் எஃபெக்டு உள்ள வேறு ஏதாவது வார்த்தை இருக்குமா என்று தான் என்னுடைய கடந்த பதிவைப் போடும்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தக் கவிதையை வடிக்கும்போது உங்கள் உள்ளுணர்வுக்குள் ஒரு எண்ணம் இருந்திருக்குமே, அந்த எண்ணத்திற்கு முன்னால் என்னுடைய சிரம், கரம் மற்றும் என்னவெல்லாம் இருக்கிறதோ, அதையெல்லாம் தாழ்த்தி வணங்க வேண்டுமென்று மட்டும் தோன்றியது.

இனிமேல் எனக்கெல்லாம் புரியுற மாதிரி எழுதாதீங்க, அப்புறம் நானெல்லாம் (கவிதை) இந்தப் பக்கம் வந்து, பின்னூட்டம் கொடுக்கற மாதிரி ஆயிடும், பாருங்க...

தாமரை
01-12-2008, 11:08 AM
நீங்கள் கவிதைகளைப் தொடர்ச்சியாகப் படிப்பதாயிருந்தால் போதும்..

பாப்பாப் பாடல்கள் எழுதக் கூடத்தயார். ;)

சிவா.ஜி
01-12-2008, 11:13 AM
கொல்லவேண்டும், வெட்டவேண்டும், பழிக்குப்பழி என பலவித எதிர்ப்புக்குரல்களுக்கிடையில்....அற்புதமான வித்தியாச வரிகள். வரிகளுக்குள் ஊடுருவியிருக்கும் உணர்வுகள் வலியோடு வைராக்கியத்தையும் தருகிறது.

நெகிழ்ந்தேன் தாமரை.

தாமரை
01-12-2008, 11:25 AM
காந்திக்கும் மற்றவர்களுக்கும் இருந்த மாபெரும் வித்தியாசமே அதுதானே சிவா.ஜி.

மற்றவர்கள் யாரையாவது திட்டுவார்கள்.. அழுவார்கள்.. கோபப்படுவார்கள்.. வன்முறையில் ஈடுபடுவார்கள். ஆயிரக்கணக்கான அறிவுரைகளை அள்ளி விடுவார்கள்.

நான் / நாம் என்ன செய்யவேண்டும் என யோசிப்பதே முதல் தாரக மந்திரம்.

மன உறுதியை விட வலிமை மிகுந்தது எதுவுமில்லை. இது இரண்டாம் மந்திரம்.

விழி.. எழு.. நட இது மூன்றாவது மந்திரம்.

எத்தனை முறை வீழ்ந்தாலும் மீண்டும் எழ இவை மூல மந்திரங்கள்..

விழுவது தோல்வியல்ல விழுந்து கிடப்பதுதான் தோல்வி..

விழாமல் இருப்பது புத்திசாலித்தனம்
விழும்பொழுதெல்லாம் எழ முடிவதுதான் வலிமை..

அடிப்பது வீரமில்லை..
அடிப்பவனையே வெட்கப்பட வைப்பது தான் வீரம்.

சிவா.ஜி
01-12-2008, 11:29 AM
மூல மந்திரங்கள்....அச்சிட்டு எப்போதும் அருகில் வைத்துக்கொள்வதோடு அகத்துக்குள்ளும் வைத்துக்கொள்ள வேண்டியவை. நன்றி தாமரை.

poornima
01-12-2008, 12:17 PM
தீயவை எல்லாம் நீண்ட நாள் நீடிக்காது..
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்..

ஆனால் தர்மம் மட்டுமே வெல்லும்

காலம் பதில் சொல்லும்

ஜெயாஸ்தா
01-12-2008, 01:47 PM
எத்தனை அடி எங்களுக்கு விழுமோ
அத்தனை அடிகள் உயர்ந்து வளர்வோம்..

என்று மரணமென்ற கலக்கமுமில்லை.
எலிகளின் வாழ்க்கை எங்களுக்கில்லை


கவிதையால் என்னெஞ்சு வலியும், வலிமையும் பெற்றது. உயிருள்ள வரிகள்... உருவாக்கியமைக்கு நன்றி.

அன்புரசிகன்
01-12-2008, 03:08 PM
1. சோம்பி இருந்த கண்கள்
இனி விழித்தெழும்
அக்கம்பக்கங்களை இனி
அவசியம் நோக்கும்

2. வெட்டவெளியிலும் நெஞ்சுயர்த்தி நடப்போம்.
அன்பை அறத்தை உயர்த்திப் பிடிப்போம்

இவை இரண்டும் எப்போதும் எல்லோருக்கும் தேவை... அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று...

தக்க நேரத்தில் வந்த பதிவு.. படிக்கும் போதே இனம் புரியாத ஒரு உணர்வு ஏற்படுகிறது... உங்கள் கவியின் உயிர்ப்பை உணர அதுவே போதும் என்று நினைக்கிறேன்.

anna
01-12-2008, 04:02 PM
அருமையான கவிதை படித்த நண்பருக்கு நன்றி.

எங்களின் இரத்தம் கண்டபின்
உங்களின் வெறி தணிந்ததா?
எங்களின் அளப்பரிய வளர்ச்சி
உங்களின் கண்ணை உறுத்துகிறதா?
எங்களின் சக்தி என்வென்று நினைத்தாய்
உங்களின் தீவிரவாதம் இதற்கு முன் தூசு
எங்களின் தேசம் காந்தீயம் கலந்தது
உங்களின் நோக்கம் இதற்கு முன் செல்லாது
எங்களின் ஒருமைப்பாடு இந்த உலகுக்கே முன்மாதிரி
உங்களின் துப்பாக்கியால் இதை சூறையாட முடியாது
எங்களின் மொழி,இனம் பலப்பல அதிலே ஒற்றுமை
உங்களின் மொழி,இனம் ஒன்று அதிலேயும் வேற்றுமை
எங்களிடம் மனிதநேயம்,அஹிம்சை,சகிப்புத்தன்மை
உங்களிடம் கொடூரம்,ஹிம்சை,வெறித்தனம்
நாங்கள் ஆறறிவுள்ள மனிதர்கள் மகாத்மா வழி வந்தவர்கள்
நீங்கள் அறிவே இல்லாத மிருகங்கள் உங்களுக்கு ஏதுவழி

நிரன்
01-12-2008, 04:53 PM
ஒளியும் வளைகள் இல்லையெனப் போகும்
ஓடுதல் உங்கள் வாழ்க்கையென ஆகும்
புன்னகை மாறா முகங்கள் வாழும்
பூமியில் சமாதானம் பூத்துக் குலுங்கும்

ரசிப்பு + ரசனை கலந்து படித்த வரிகள் மிக அருமையாக இருக்கிறது
ஆனால் மேலே கூறியிருப்பதுதான் எப்பொழுது பூக்குமோ!!!!!!

Mano.G.
02-12-2008, 12:36 AM
வயலில் களையெடுக்கும் பொழுது நல்ல பயிர்களும் பிடுங்கப்படுவது போல,
இந்த தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் எத்தனை எத்தனை நல்ல
பயிர்களை நாம் இழக்க போகிரோம் தெரியவில்லையே !!!

இருந்தாலும் அனுபவங்கள் நமக்கு படிப்பினை என்பது போல
ஓவ்வொரு சம்பவங்களும் நம்மை மேலும் விழிப்போடு இருக்க
ஆவன செய்யுமே,

ஒரு தோப்பை காப்பாற்ற சில செல்லரித்த மரங்களை அழிப்பது போல
ஒரு நாட்டை காப்பாற்ற சில துரோகிகளையும், புல்லுரிவிகளையும் அழிப்பதில்
குற்றமில்லை,

தாமரையின் இந்த கவிதை தக்க தருணத்தில் மனம் சஞ்சல பட்ட நேரத்தில்
உற்சாக மூட்டும் மருந்தாக அமைந்தது.

நன்று தாமரை


மனோ.ஜி

தாமரை
02-12-2008, 12:50 AM
ரசிப்பு + ரசனை கலந்து படித்த வரிகள் மிக அருமையாக இருக்கிறது
ஆனால் மேலே கூறியிருப்பதுதான் எப்பொழுது பூக்குமோ!!!!!!

ஒவ்வொரு படியாகத்தான் மேலே ஏற முடியும் நிரஞ்சன்.

நமது கவனமான அணுகுமுறையும் விழிப்புணர்வும் ஆரம்பம்.

நாம் உழைத்து நாட்டுப் பொருளாதாரத்தையும் நாட்டைக் காப்போரையும் காக்கத் தொடங்கினால் அவர்கள் இன்னும் முனைப்புடன் செயல்படுவார்கள்..

எது உண்மையான வாழும் வழி என அப்பாவிகளுக்குப் புரிய.. வளைகள் களையப்படும். மாயவலைகளும் கிழியும்.

புன்னகையோடு எதையும் எதிர்கொள்ளும் மனிதர்கள் அதிகமாக அதிகமாக சமாதானங்கள் பூக்கத் தொடங்கும்..

அது இல்லாவிட்டால் சண்டையே இல்லாவிட்டாலும் சமாதானம் இருக்காது.

மனிதர்கள் தனித்தனித் தீவுகளாகக் கிடப்பர்.

மேலும் மேலும் உற்சாகமாய் உழைப்போம்

அக்னி
02-12-2008, 10:40 AM
காலம் எதிர்பார்க்கும் காலமும்,
தேசம் எதிர்பார்க்கும் தேசமும்,
அமைதி...

வாருங்கள்... சேர்ந்தே வடம்பிடிப்போம்...
தடைகளைத் தாண்டி,
அமைதியான காலத்தையும்,
அமைதியான தேசத்தையும்,
அடைவோம்...

நம்மோடு சதியாளர்களும்
சேர்ந்தே வடம்பிடித்து வரலாம்...
அவர்களுக்கு அழிக்கத் தேவை சிறுபொழுது...
அவர்களை அறியத் தேவை முழுப்பொழுதும்...

தடம்புரட்ட
முனைப்போடு செயற்படும் சதிகளை,
விழிப்போடு செயற்பட்டு மிதித்துத்,
தடம்பதிப்போம்.

உணர்வோடும் உயிர்ப்போடும் இருப்போம்...
நாசத்தில் தேசத்தைக் காப்போம்...

வசீகரன்
02-12-2008, 01:48 PM
இன்னொரு நாட்டுப்பண் போன்று உள்ளது அண்ணாவின் கவிதை...
சீண்டி பார்க்கும் அயலானுக்கு... ஆப்பு வைக்க எவ்வளவு நேரமாகும்...!
சிரித்து பேசிக்கொண்டே முதுகில் குத்துகிறார்கள்...!
நாமும் பொறுத்து பொறுத்தே பழக்கபட்டு விட்டோம்...!