PDA

View Full Version : ♔. யார் இந்த கடல் கொள்ளைக்காரர்கள் ?



ராஜா
25-11-2008, 07:27 AM
உலகின் மேற்கு பகுதியையும் கிழக்கு பகுதியையும் இணைக்கும் மிக முக்கிய கடல் வழிப் பாதையான ஏடன் கடல் பகுதியில் சோமாலிய நாட்டைச் சேர்ந்த கடற் கொள்ளையர்கள் பல கப்பல்களை கொள்ளையடித்தும் கடத்தியும் பன்னாட்டு கப்பல் போக்குவரத்து கம்பெனிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே.

மிகப் பழங்காலத்திலேயே அரேபியா கடல் பகுதியில் மிகப் பெரும் கொள்ளைகள் நடை பெற்றதாக சரித்திரக் குறிப்புகள் உள்ளன. பண்டைய சரித்திரத்தின் அடிப்படையில் எழுதப் பட்ட புகழ் பெற்ற நவீனமான கல்கியின் "பொன்னியின் செல்வன்" படித்திருக்கிறீர்களா? அதில் கூட இவர்களைப் பற்றி சில குறிப்புகள் (மூர்க்கமான புதிய வகை அரேபியா கடல் கொள்ளைக்காரர்கள்) உள்ளன. அருள்மொழி செல்வன் உத்தம சோழரை பதவியில் அமர்த்தி விட்டு இந்த கொள்ளை கும்பலை அடக்க செல்ல விரும்புவதாக ஒரு குறிப்பு கூட இருக்கும். இந்தியாவின் மேற்கு கடலோரம் இருக்கும் "வெல்ல முடியாத கடற் கோட்டையை" கட்டியவர்கள் கூட இந்த சொமாலியரே. கொள்ளை அடிக்கும் தொழில் இவர்கள் ஜீன்களிலேயே இருக்கும் போலிருக்கிறது.

சோமாலியா வடகிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒரு ஏழை நாடு. இங்கு சரியான ஆட்சிமுறை அமையாததும் தொடரும் உள்நாட்டு குழப்பங்களும், எதிஒபியா- சோமாலியா சண்டையும், சோமாலியாவின் பூகோள ரீதியான நிலவமைப்பும் கடற் கொள்ளைகாரர்கள் உருவாகவும் வளரவும் முக்கிய காரணங்கள். ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் (சூயஸ் கால்வாய்) முக்கிய வழியாக ஏடன் கடல் இருப்பதால், இந்த கடல் வழியாக தினசரி ஏராளமான கப்பல்கள் பிரயானிக்கின்றன. சோமாலியா அரசின் கட்டுப்பாடு இந்த நாட்டைச் சார்ந்த கடல் பகுதியில் குறைவாக இருப்பதால், கடற் கொள்ளையர்களுக்கு நல்ல வசதியாக போய் விட்டது.

இந்த கொள்ளைகாரர்கள் பெரும்பாலும் 20 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள். இவர்கள் மூன்று வகையாக உள்ளனர். கடல் பற்றி நன்கு தெரிந்து கொண்டு கடற் கொள்ளையர்களின் கண்களாக இயங்கும் உள்ளூர் மீனவர்கள், உடல் பலத்தை காட்டும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் இவர்களை இயக்கும் மூளைகளான அதி நவீன தொழிற் நுட்ப வல்லுனர்கள். ஒரு முக்கிய விஷயம். இவர்கள் பல குழுக்களாக பிரிந்து கொள்ளையடித்தாலும் தமக்குள்ளே சண்டைகள் இட்டு கொள்ளுவதில்லை. என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். Pirates of Caribbean படம் பார்த்துள்ளீர்களா? (பார்க்க வில்லையென்றால் நிச்சயம் பாருங்கள். ஜாலியான படம் ) அதில் உள்ளது போல் தமக்குள்ளே சில சட்டதிட்டங்கள் எல்லாம் கூட வைத்திருப்பார்கள் போல.

மேலும் ஒரு வேடிக்கையான தகவல். இவர்கள் வறுமை நாடான சோமாலியாவில் மிக ஆடம்பர வாழ்கை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்து கூட உண்டு. சமூகத்தின் பெரிய மனிதர்களாக இவர்கள் கருதப் படுகின்றனர். (நம் நாட்டில் கூட சில சமூக கொள்ளையர்களுக்கு மிக பெரிய அந்தஸ்து உண்டுதானே?) இந்த கொள்ளையில் கிடைக்கும் பணத்தை கொண்டு அங்குள்ள தொழில் அதிபர்களுக்கு இவர்கள் கடன் கூட கொடுக்கிறார்கள். (இது மட்டுமே திவால் ஆகாத வெளி நாட்டு வங்கி).

இவர்களை அடக்க உலக நாடுகள் (குறிப்பாக நேடோ நாடுகள்) எவ்வளவோ முயற்சி செய்தும் பலிக்கவில்லை. உலக நாடுகளின் கடற்படைகள் இவர்களை துரத்தும் போதெல்லாம், தப்பி சென்று சோமாலியா கடல் எல்லைக்குள் இவர்கள் நுழைந்து விடுவதால் இவர்களை முழுமையாக அடக்க முடிய வில்லை. இதற்காக, ஜுன் 2008 இல் ஐ.நாவில் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. இதன் அடிப்படையில் சோமாலிய கடல் எல்லைக்குள்ளும் உலக நாடுகளின் கடற்படைகள் இவர்களை துரத்தி செல்ல முடியும். ஆனால் இதற்கு பிறகும் கூட, இவர்களை முழுமையாக ஒழித்துக் கட்டுவது சிரமமான காரியமாகவே இருக்கிறது. 2008 இல் மட்டுமே 92 முறை கடல் தாக்குதல்கள் நடத்தி உள்ள இவர்கள் 36 முறை கப்பல்களை கடத்தி சென்றுள்ளனர். இவற்றில் இன்னும் 17 கப்பல்கள் மீட்கப் படாமல் உள்ளன. சமீபத்தில் கூட, உலகின் மிகப் பெரிய எண்ணெய் கப்பலொன்றை (Sirius Star) இவர்கள் கடத்தி சென்று உள்ளனர்.

இந்தியா கூட ஒன்பதாவது நாடாக ஒரு போர்க்கப்பலை இங்கே நிலை நிறுத்தி உள்ளது. காரணம், இந்த கடல் பாதை வழியே தினமும் ஏராளமான இந்திய சரக்குக் கப்பல்கள் பயணம் செய்கின்றன. மேலும் வெளி நாட்டுக் கப்பல்களில் கூட ஏரளாமான இந்திய மாலுமிகள் பணியாற்றுகின்றனர். நமது கடற் படை இந்த கடல் பகுதியில் மிகச் சிறப்பாக செயல் புரிந்து வருகிறது. இந்தியக் கப்பல்களுக்கு மட்டுமன்றி வேறு நாட்டு கப்பல்களுக்கும் சிறந்த பாதுகாப்பு அளிக்கப் படுகிறது. இந்தியக் கடற்படைக்கும் இந்த கொள்ளையருக்கும் சமீபத்தில் கூட ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு சிறு படகை கப்பலின் மீது வேகமாக மோதி விட்டு பின்னர் கப்பலிலிருந்து தாக்குதல் நடத்துவது இவர்களது பாணி. இதை திறம்பட முறியடித்த நமது கடற்படை கொள்ளையர்களின் கப்பலை மூழ்கடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இவர்களை முழுமையாக அடக்க ஒரு "பொன்னியின் செல்வன்" வருவானா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

Posted by Venkateshan.G

Narathar
25-11-2008, 07:47 AM
அருமையான பகிர்வு!

இலண்டனில் அகதியாகவுள்ள சில சோமாலியர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு இருந்தது... உண்மையான அன்பையும் ஆதரவையும் அவர்களிடத்தில் கண்டேன். அவர்கள் பழகும், பேசும் விதம் மிகவும் அருமையானது.

ஆனால் அவர்களுக்கு இந்த சமூக அமைப்பு மீது, அதுவும் வெள்ளையர்கள் மீது ஒரு தீராத உளவியல் கோபம் ஒன்று உண்டு. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்... அதுவும், அவர்களது சூழ்நிலையும்தான் அவர்களை கொள்ளைக்காரர்களால்க மாற்றிவிடுகின்றது என்று நான் நினைக்கின்றேன்.

ராஜா
25-11-2008, 07:58 AM
சோமாலியாவில் கொள்ளைக்காரர்கள் உருவானதற்கு காரணம் என்று கீழ்க்கண்டவற்றை கட்டுரையாளர் விவரிக்கிறார்..


சோமாலியா, அரசு இல்லாத தேசம். தட்டிக் கேட்க ஆள் இல்லையென்றால் யாரும் எது வேண்டுமானாலும் செய்யலாம். தொன்னூறுகளில் சோமாலிய பிரச்சினையை தீர்க்கப் போகிறேன் சொல்லி விட்டு சென்ற "உலக பொலிஸ்காரனான" அமெரிக்கா கடைசியில் எதுவுமே செய்ய முடியாமல் அவமானத்துடன் வீடு திரும்பியது. அதற்குப் பிறகு ஆயுதக் குழுக்களின் அதிகாரப் போட்டி காரணமாக, இது வரை நிலையான அரசாங்கம் ஏற்பட இல்லை. வடக்கு பகுதி மாநிலம் மட்டும், தமக்குள் இணக்கப்பாடு கண்டு தனியாட்சி நடத்துகின்றது. "சோமாலிலாந்து" என்றழைக்கப்படும் இந்த தனி நாட்டை உலகில் யாரும் அங்கீகரிக்கவில்லை.

பிற சோமாலிய பகுதிகள் தமக்கு தெரிந்த வகையில் தப்பிப் பிழைக்கின்றன. வியாபாரிகள் தமது பாதுகாப்புக்காக சிறு ஆயுதக் குழுவை பராமரிக்க வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் தொழில் புரியும் சோமாலியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பும் பணம் தவிர, வேறெந்த உலக நாட்டு உதவியும் இல்லை. சோமாலியா மிக நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது. இருப்பினும் மீனவர்கள் வேலையின்றி கஷ்டப்படுகின்றனர். மீன்பிடிக்க கடலில் சென்றால், மீன்கள் கிடைப்பதில்லை. எல்லா மீன்களையும் பிறநாட்டு மீன்பிடி கப்பல்கள் வந்து அள்ளிக் கொண்டு போகின்றன. தனக்கென அரசாங்கமே இல்லாத சோமாலிய மீனவர்களால் இந்த அட்டூழியத்தை கைகட்டி பார்த்துக் கொண்டிருக்க தான் முடியும். அவ்வாறு தொழில் இழந்த மீனவர்கள் தான், இப்போது கடற்கொள்ளைக்காரர்களாக மாறியுள்ளனர். அப்போது ஏனென்று கேட்க வராத சர்வதேச நாடுகள், இப்போது மட்டும் கடற்கொள்ளையை கண்டிக்கிறார்களாம். இதுவன்றோ சர்வதேச நீதி!

சோமாலிய மக்களின் பிரச்சினை கடற்கொள்ளையல்ல. அவர்களின் கடலில் நடக்கும் சட்டவிரோத மீன்பிடி மட்டும் ஒரேயொரு பிரச்சினையல்ல. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் கப்பல்கள், அந்த நாடுகளில் அணு உலைகள் வெளியேற்றும் கழிவுகளையும், பிற இரசாயன நச்சுக் கழிவுகளையும் கொண்டு வந்து திருட்டுத்தனமாக கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இந்த நச்சுக் கழிவுகள் சோமாலிய கடற்கரையை மாசுபடுத்துகின்றன. இதனால் மக்களுக்கு புற்றுநோய் உட்பட, முன்பு ஒருபோதும் வராத புதிய புதிய நோய்கள் தோன்றுகின்றன. இதையெல்லாம் உலகில் யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமான கப்பல்கள் கடத்தப்படும் போது மட்டும், முக்கிய செய்தியாக சொல்லும் ஊடகங்கள் எதுவும் சோமாலிய மக்கள் கடந்த பத்தாண்டுகளாக பட்டு வரும் துன்பம் பற்றி எடுத்தச் சொல்லவில்லை. இதனை வாசிக்கும் உங்களில் பலர் இந்த செய்தியை இப்போது தான் கேள்விப் படுகிறீர்கள்.

1998 ம் ஆண்டு வெளிவந்த Famiglia Cristiana என்ற பத்திரிகை இத்தாலி நச்சுக்கழிவுகளை சோமாலியாவில் தொடர்ந்து கொட்டிவரும் நாடுகளில் ஒன்று என்று தெரிவித்துள்ளது. இத்தாலி சோமாலியாவின் முன்னாள் காலனியாதிக்க நாடு என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. 1992 ம் ஆண்டு இத்தாலியும் ஒரு உறுப்பினராக கைச்சாத்திட்ட "பாசல் ஒப்பந்தம்", அணு, நச்சுக் கழிவுகளை பிறிதொரு உறுப்பு நாடுகளிலோ அல்லது உறுப்பினரல்லாத நாட்டிலோ கொண்டு போய் கொட்டுவதை தடை செய்கின்றது. அணு நச்சுக் கழிவுகளை ஐரோப்பாவில் பாதுகாப்பாக ஒரு இடத்தில் அடக்கம் செய்வதற்கு, தொன் ஒன்றிற்கு ஆயிரம் டாலர் செலவாகின்றது. ஆனால் அதனை சோமாலியாவில் கொண்டு வந்து கொட்டுவதற்கோ தொன்னிற்கு வெறும் இரண்டரை டாலர்கள் தான் செலவாகின்றது! அண்மையில் கடத்தப்பட்ட உக்ரைனிய ஆயுதக்கப்பலை விடுவிக்க பேரம் பேசி கிடைத்த மில்லியன் கணக்கான பணத்தை, சோமாலியாவின் கடற்கரையை தூய்மைப்படுத்த பயன்படுத்தப் போவதாக கடற்கொள்ளையர் தெரிவித்துள்ளனர்.

Posted by Venkateshan.G

arun
25-11-2008, 02:18 PM
இவர்களை நல்லவர்கள் என்று சொல்வதா? கெட்டவர்கள் என்று சொல்வதா?

mukilan
25-11-2008, 02:34 PM
நாணயத்தின் இரு பக்கங்கள். வியத்தகு தகவல்கள். தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி ராஜா அண்ணா.

ராஜா
17-12-2008, 06:11 AM
நன்றி முகிலன்..!

lolluvathiyar
17-12-2008, 10:02 AM
சோமாலியர்கலுக்கு கடல் கொள்ளையை தவிர வேறு வழி இல்லை. சோத்துக்கு வழி இல்லாமல் செத்து கொன்டு இருக்கின்றனர். அவர்களை சட்டம் ஒன்னும் செய்ய முடியாது சட்டத்துக்கு பயபடும் சூல் நிலையில் அவர்கள் இல்லை. அந்த நாட்டில் இப்ப சட்டமும் இல்லை. கொள்ளையர்களின் தலைவர்கள் தான் செல்வந்தர்களாக இருக்கிறார்கள் கொள்ளையர்கள் குடும்பம் ஏழையாகவே இருக்கிறது.


சோமாலிய பிரச்சினையை தீர்க்கப் போகிறேன் சொல்லி விட்டு சென்ற "உலக பொலிஸ்காரனான" அமெரிக்கா கடைசியில் எதுவுமே செய்ய முடியாமல் அவமானத்துடன் வீடு திரும்பியது.

அது சாதர்ன அவமான அல்ல, பெருத்த அவமானம். அங்கு அமெரிக்கர்கள் செய்த ஆட்டுழியம் கொஞ்சம் நஞ்சமல்ல. 1 அமெரிக்க வீரனை கொல்ல 100 சொமாலிய மக்கள் சாக தயாராக இருந்தனர். மக்கள் என்றால் பென்கள் குழந்தைகள் கூட அடக்கம். சோமாலிய மக்களுக்கு அமெரிக்கர்கள் மீது அவ்வளவு கடுப்பு. அங்கே சென்ற உலக நாட்டு படைகள் அனைத்தையும் வெறுத்தாலும் இந்திய ரானுவத்தை மட்டும் சோமாலியர்கள் என்று வெறுக்க மாட்டார்கள். இந்திய ரானுவம் மட்டும் மக்களிடையே தைரியமாக புலங்கும். அன்புக்கு யாருமே கட்டுபடுவார்கள் அல்லவா

minmini
17-12-2008, 11:55 AM
கடல் கொல்லையர்களுக்கு கூட சரித்திரமா?
நல்ல தகவல்
பகிர்வுக்கு நன்றி

நேற்றுக்கூட கடல் கொள்ளையர்களைப்பற்றிய ஒரு படத்தை டீவீயில் பார்த்தேன்

Mathu
09-01-2009, 08:44 AM
இவர்களை பற்றிய செய்தி வரும்போதெல்லாம் என் நினைவுக்கு வருவது பாரதி தான்.

தனி ஒருவர்க்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அளித்திடுவோம்

என்று அன்று சொன்னான், இந்த மக்களை பார்த்தால் தெரியும் வறுமை என்றால் என்ன என்று.
உலகை கெஞ்சி கெஞ்சி பார்த்தவர்கள் இப்போ தடி எடுத்து புறப்பட்டிடு இருக்கிறார்கள் தண்டலுக்கு.

இது உலகின் பாராமுகம் இருக்கும் அத்தனை இனங்களிலும் எதிர்காலத்தில் ஏற்பட கூடிய ஒன்று.

நேசம்
10-01-2009, 07:21 AM
கொள்ளையர்களாக ஆக்கப்பட்டனர்.அதற்கு உலகமாயக்குதலும் ஒரு காரணம் என்று நினைக்கிறென்.தகவலுக்கு நன்றி றாஜாண்ணா

ஷண்முகம்
10-01-2009, 01:24 PM
என்ன இருந்தாலும் கொள்ளையரை வல்லவர் என்று ஏற்க முடியவில்லை.

பகுருதீன்
14-01-2009, 09:03 AM
நம்ம பெரீய அண்ணன் அமெரிக்ககிட்டதான் உலகத்தையே கண்காணிக்கிற திறமை இருக்கே அவர் கொஞ்சம் கவனிக்க கூடாதா

அய்யா
14-01-2009, 02:49 PM
இன்றும் கடற்கொள்ளையர்கள் இந்தியர்களைக் கடத்திய செய்தி வெளியாகியுள்ளது.