PDA

View Full Version : முகம் அறியா முகங்கள்



மதி
16-11-2008, 01:48 PM
இன்றைய நாள் ஏனோ விசேஷமாய் தோன்றியது. மனதுக்குள் சின்ன குறுகுறுப்பு, கொஞ்சம் படபடப்பு. வாழ்வின் முக்கியமான நபரை சந்திக்கப் போகிறேன். அவர் ஆணா பெண்ணா. தெரியாது. ஆனால் இது வாழ்க்கையின் மிக முக்கியமான சந்திப்பு என்பது மட்டும் புரிந்தது.

இணையத்தில் உலவ ஆரம்பித்திருந்த புதிது அது. இணையத்தின் வழி உலக விஷயங்கள் அனைத்தும் தெரிந்து கொள்ளலாம் என்று கேள்விப்பட்டதிலிருந்து மனம் அதை ஒரு திரையாகவும் அதில் படங்கள் ஓடுவது போலவும் கற்பனை செய்து பார்த்தது. ஒருவழியாக நண்பன் ஒருவன் மூலம் இணையம் என்பது படங்கள் மட்டுமல்ல தளங்களும் கொண்டது என்று கொஞ்சம் கொஞ்சமாக புரிபட ஆரம்பித்தது. கல்லூரியில் படிக்கையில் அப்பா ஆசையாக கணினி வாங்கி கொடுத்த போது உலகத்தையே வென்றது போன்றதொரு உணர்வு. ஏனையோருக்கும் அப்படி தான் இருந்திருக்கும். அவ்வளவு பெருமிதம். இணைய இணைப்பு கொடுத்து அதில் உலாவ ஆரம்பித்த பிறகு மற்ற வேலைகள் மறந்தே போயின. காலை எழுந்ததும் இணையம். பின்பு மாலை கல்லூரி முடிந்தபின்பும் இணையம். வாழ்க்கை நண்பர்களுடன் அளவளாவுவது குறைந்து இணையத்தோடு உலாவது ஆனது. சரியாக சொல்ல வேண்டுமானால் இணைய அடிமை.

இப்படித் தான் ஒரு நாள் அரட்டை தளங்களுள் நுழைந்து உலாவிக் கொண்டிருந்த போது அந்த பெயர் கண்ணில் பட்டது. Inpersuit. வித்தியாசமாய் தெரியவே தனிச்செய்தி அனுப்பினேன்.

“வணக்கம். எதைத் தேடி தங்கள் பயணம்?”

பதில் உடனே வந்தது.

“வணக்கம். எதைத் தேடலாமென்று தான்…”

வழக்கமாக சரியான முறையில் பதில் வராது. தெளிவான பதில் வரவே உரையாடல் தொடர்ந்தது.

“எதைத் தேடலாமென்று தேடிக் கொண்டிருக்கிறீர்கள்..? அப்படி ஏதேனும் தொலைத்து விட்டீர்களா என்ன?”

“தொலைத்தால் மட்டும் தான் தேடுவார்களா? தொலைப்பதற்கும் ஏதாவது வேண்டுமல்லவா? அதனால் தொலைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறேன்…”

சுத்தம்.. என்ன எதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை. ஆனாலும் ஏதோ ஒன்று மட்டும் பேசச் சொல்லி வற்புறுத்துகிறது. மேலும் தொடர்ந்தேன்.

“தொலைக்கப் போகிறோம் என்று தெரிந்தபின்னும் எதற்காக தொலைந்து போய் தேடுகிறீர்கள்? தொலையாமலே தொலைக்காததை வைத்து நிம்மதியா இருக்கலாமே… தொலைந்துவிடும் என்று தெரிந்தும் தேடுவது அறியாமையல்லவா?”

“ஆம்.. ஆனாலும் தேட வேண்டுவது கட்டாயமாகுதே…!”

அடச்சே. இந்நேரம் பார்த்தா மின்சாரம் போய்த் தொலைய வேண்டும். சிறிது நேரம் மனதில் அந்த உரையாடல் அப்படியே இருந்தாலும் அடுத்தடுத்து வேற விஷயங்களில் கவனம் திரும்பியது. ஒரிரு மணிநேரத்திலேயே அந்த விஷயம் சுத்தமாய் மறந்துவிட்டிருந்தது.
கல்லூரிப் படிப்பெல்லாம் முடித்துவிட்டு வேலை கிடைத்து நகரத்திற்கு வந்து நண்பர்களுடன் தங்க ஆரம்பித்தாயிற்று. ஒரு காலத்தில் பிரமிப்பாய் தெரிந்த இணையம் பற்றி இப்போது கரைத்து குடித்திருந்தேன். இணையம் பற்றித் தெரியவில்லை என்று யார் சொன்னாலும் அவனை புழுவிற்கு சமானமாய் பார்க்கவும் ஆரம்பித்தாயிற்று. காலை எழுந்தவுடன் பல் கூட துலக்காமல் இணையத்தில் மேய வேண்டியது. ஏனோ இணையத்திற்கே ஆயுட்கால அடிமை போல.

மென்பொருள் தொழில் வேறு. தினமும் பதினாறிலிருந்து இருபது மணிநேரம் வேலை பார்க்க வேண்டியது. பணத்தை கத்தையாக கொடுத்தாலும் மனத்தை சக்கையாய் பிழிந்தனர். பல நாள் தலை பாரமாய் இருக்கும். ஏதோ இருண்டதொரு குகைக்குள் அடைப்பட்டுக் கொண்டு வெளிவர முடியாததை போல் மூச்சு முட்டும். ஆனாலும் வெளியில் பகட்டாய் உடை உடுத்தி பார்ப்போரிடம் சிரித்து சந்தோஷமாய் இருப்பது போல் நடித்து… ஆம். மிகச் சரியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நல்லவன் போல். வல்லவன் போல்.
தொடர்ச்சியாக பல இரவு வேலை பார்த்ததில் மனத்தின் அழுத்தம் அதிகமாகி மருத்துவரை பார்க்க நேரிட்டது. ‘கவலைப்பட ஒன்றுமில்லை’யென்றும் வழக்கமாக மென்பொருள் வல்லுநர்களுக்கு நேரிடுவது தான்’ என்றும் மிகச் சாதாரணமாய் சொல்லிவிட்டார். இந்த நரகத்திலிருந்து விடுதலை கிடைக்குமா? விடுதலை என்பதற்கு வேலையே இல்லை. இது நானாய் தேடிக் கொண்ட நரகம். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இருந்து தான் ஆக வேண்டும்.

ஒருவாரம் போல விடுப்பு எடுத்து ஊருக்கு வந்தேன். காற்றை புதிதாய் உணர்ந்தேன். ஏ.சியின் குளுமை இல்லை. ஆனால் மனதிலும் வெறுமை இல்லை. அம்மாவின் சாப்பாடு. ஒரு வாரம் வயிறார சாப்பிட முடிந்தது. ஒரு நாள் மாலை வேளையில் பொழுது போகாமல் இணையத்தில் (இது என்றும் விடாத கருப்பு) உலாவும் போது அதே பெயர். அப்போது தான் ஞாபகம் வந்தது. கடந்த மூன்று வருடங்களாய் எந்த அரட்டைத் தளத்தினுள்ளும் நுழைந்ததில்லை. ஆர்வம் உந்த செய்தி அனுப்பினேன்.

“நலமா?”

“நலம். நீண்ட நாட்களாகிவிட்டது நாம் உரையாடி”

“ஒரு முறை தானே உரையாடி இருக்கிறோம். அன்று மின்சாரம் தடைபட்டுவிட்டது.”

“நினைத்தேன்..”

“சரி.. உங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாமா?”

“என்னைப் பற்றி என்றால்..?”

“உங்கள் ஊர்..பேர்..முடிந்தால் சொல்லுங்கள். இல்லையேல் வேண்டாம்”

“தெரிந்து என்ன செய்ய போகிறீர்கள்”

“ஒன்றும் செய்யப் போவதில்லை. சும்மா தெரிந்து கொள்ளத் தான்”

“ஒன்றும் செய்யாததற்காக எதற்கு ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்.”

இந்த நபர் அவரே தான். ஆனால் ஆணா பெண்ணா. கண்டுபிடிக்க வேண்டுமே.

“அனைத்தும் தெரிந்து கொள்வது நல்லது தானே. கற்றாரை கற்றார் காமுறுவர்”

“கற்றபின் நிற்க அதற்குத் தக என்றும் சொல்லியிருக்கிறார்களே. தெரிந்து கொள்ள வேண்டியது யாருக்கேனும் பயனாய் இருக்க வேண்டும். ஒன்றும் செய்யாமலிருப்பதற்காக தெரிந்து கொள்ளுதல் நேரம் கொல்லுதல் தானே?”

அடச்சே… என்ன இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கிறேன். ஆனாலும் ஏதோ ஒரு உந்து சக்தி பதிலனுப்பியது.

“உங்களைப் பற்றித் தெரிந்தால் இணையத்தோழமை என்று கதை எழுதுவேன்.”

“தோழமை என்றால்..”

“நட்பு”

“நாம் நண்பர்களா? என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? எதுவும் தெரியாமல் தோழமை என்றால்”

ம்ம்….. திரும்ப திரும்ப மாட்டிக் கொள்கிறேனே.

“அதற்குத் தான். உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்றேன்.”

பேச்சு இப்படியாகத் தொடர்ந்தது. மெல்ல மெல்ல என்னையுமறியாமல் அதில் லயிக்கலானேன்.

பெயர் வித்யா என்றும் நான் பணிபுரியும் அதே ஊரில் தான் வசிப்பதாவும் சொன்னாள். அடுத்தடுத்த நாட்களில் எங்கள் உரையாடல்கள் தொடர்ந்தது. பல்வேறு சம்பவங்களைப் பற்றி. நாகரிகமான முறையில் தெளிவான நடையில் சுருக்கமாக. மனதில் இருந்த குழப்பங்களுக்கு அவள் தத்துவங்கள் மிகவும் தேவைப்பட்டது.
மனிதர்கள் உரையாடுவதே தெரிந்ததை திரும்ப தெரிந்து கொள்ளத் தான் என்றாள். ஏனோ சில காரணங்களால் எதைத் தேடிக் கொண்டிருக்கிறாள் என்பதை மட்டும் சொல்லவே இல்லை. நாட்கள் ஆக ஆக எங்கள் உரையாடல்கள் தீவிரமடைந்தன. பணியில் சேர்ந்த பின்பு அந்த மாற்றத்தை நன்கு உணர்ந்தேன். என் குறை சொல்லி புலம்பகூட நல்ல நட்பு என்னருகில் இல்லாததே காரணம் என்று புரிந்தது.

எதனாலோ அவளுடம் உரையாடும் போது மட்டும் நான் நானாய் இருக்கிறேன். ‘என்ன வாழ்க்கை இது’ என்ற எண்ணம் போய் ‘இது வாழ்க்கை’ ஆனது. சில நேரங்களில் யோசித்துப் பார்க்கையில் என் தனிமை தவிர அவளிடம் உரையாடும் போது மட்டும் தான் நான் நானாய் இருந்திருக்கிறேன் என்று தோன்றியது. நான் என்ற நானே கூட பொய்யான ஒரு முகமூடியாய் தோன்றிற்று. விரும்பியோ விரும்பாமலோ இது தான் சரி என்று இந்த சமுதாயம் தீர்மானித்ததை ஏற்றுக் கொண்டு விதவிதமான முகமூடிகள் அணிந்து கொண்டு வெளியில் நடமாடுகிறேன். உள்ளுக்குள் மட்டும் எது நானென்று பெருங்குழப்பம். குழப்பம் மட்டுமே வாழ்வின் மிச்ச சொச்சமோ. இதற்கெல்லாம் தீர்வாக அவள் உரையாடல். எதையும் எடுத்தெறிந்தாய் போல் பேச்சு. மறைக்காமல் தெளிவாய் தன் பலம் பலவீனம் அணிந்த தோரணை.

அமைதியாய் போய்க் கொண்டிருந்த உரையாடல்களில் சிகரம் வைத்தாற் போல ஒரு நாள் ‘நாம் சந்தித்தாலென்ன?’ என்றாள்.
இதுவரை ஒரே ஊரில் இருந்தாலும் என் மனம் அவளை சந்திக்க முற்பட்டதில்லை. ஏனோ தெரியவில்லை. சந்திப்பதற்கான தேவையும் ஏற்பட்டதில்லை. இப்போது அவளே கூப்பிடுகிறாள். போய் தான் பார்க்கலாமே.

இன்று தான் அவளை சந்திக்கப் போகிறேன். நீண்ட நாள் தோழமையை சந்திக்கப் போகிறோமென்று. பதட்டம்..படபடப்பு… இன்னதென்று என்று பிரிக்க முடியாத பலவகை உணர்ச்சிகள். ஒருவாறாய் கட்டுப் படுத்திக் கொண்டு குறிப்பிட்ட இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நடையில் துள்ளலா தள்ளாட்டமா? தெரியவில்லை. பரவசத்துடன் கோவிலில் குடியிருக்கும் அம்மனை தரிசிக்கப் போகும் பக்தனைப் போல. அந்த இடத்தின் வாசலை அடையும் போது அவள் சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது.
‘இளநீல வண்ண சுடிதார் அணிந்திருப்பேன். அந்தக் கடையின் முன் நின்றிருப்பேன். குதிரை வால் கொண்டை.’ அவள் அலைபேசி எண்ணைத் தரவில்லை.

மனத்தினில் ஆயிரம் கற்பனைகள். எப்படியிருப்பாள் என்று. பெரிதாய் இறுமாந்து நின்றிருந்த அந்த வணிக வளாகத்தின் முன் நிற்கையில் ஏனோ சின்னதாய் தோன்றினேன். மெலிதாய் சீட்டி அடித்தப்படி படிகளில் ஏறுகையில் கால் தடுக்கி தடுமாறினேன். உண்மையிலேயே தடுமாற்றமோ?

பார்த்து வைத்திருந்த பல ஒத்திகைகள் கண்முன்னே வந்துப் போயின. முதலில் என்ன பேச ஆரம்பிக்கலாம்? என்ன பேசலாம்? எங்கு போய் சாப்பிடலாம்? என்ன மாதிரி உடை அணிந்தால் பார்க்க நன்றாய் இருக்கும். எவ்வளவு கற்பனைகள் மனதினில்.

ஆயிரம் கைகள் சேர்ந்து அறைந்தாற் போல் ஒரு வலி. முகமூடி தொலைத்து தொடர்பு கொண்டவளைப் பார்க்க விதவிதமான முகமூடிகளை தேர்வு செய்கிறேன். இன்றோ பகட்டான உடை அணிந்து அவளைப் பார்க்க. உலகே என்னைச் சுற்றி நின்று கைக்கொட்டி சிரிப்பதாய் கூச்சமாயிருந்தது. குழப்பங்களிலிருந்து விடுபட்டு விட்டதாய் குழம்பிக் கொண்டிருக்கிறேன். எங்கேயோ தொலைந்து போன மனிதத்துள் நானும் ஒருவனாக…

நிமிர்ந்து பார்த்தேன். தூரத்தில் அவள் அடையாளம் சொன்ன கடை. கலங்கிய கண்களில் பிம்பமாய் பலர். எல்லோரும் நீல வண்ண ஆடை அணிந்தது போல் தோன்றியது. தெளிந்துவிட்டேனா குழம்புகிறேனா. தெரியவில்லை. எது தொலைத்தேன்? எதைத் தேடுகிறேன்? இன்னும் புரியவில்லை. தன்னிச்சையாக என் கால்கள் திரும்பி படியில் இறங்க ஆரம்பித்தது.

ரங்கராஜன்
16-11-2008, 02:08 PM
என்னங்க மதி பாத்தீங்களா? இல்லையா?, ஒரு சுவாரஸ்யமான நாவலில் கடைசி கடைசி பக்கம் கிழிந்து இருந்தால் எப்படி மனது அல்லோலப்படும் அப்படி இருக்கு!, ஓ சாரு, அதனால தான் கொஞ்ச நாளா ஆன்லைன்ல வரவில்லையா..... நடக்கட்டும் நடக்கட்டும்

மதி
16-11-2008, 02:29 PM
என்னங்க மதி பாத்தீங்களா? இல்லையா?, ஒரு சுவாரஸ்யமான நாவலில் கடைசி கடைசி பக்கம் கிழிந்து இருந்தால் எப்படி மனது அல்லோலப்படும் அப்படி இருக்கு!, ஓ சாரு, அதனால தான் கொஞ்ச நாளா ஆன்லைன்ல வரவில்லையா..... நடக்கட்டும் நடக்கட்டும்
முடிவு உங்கள் கையில்...
சாரு ஆன்லைன்ல வராததற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்...???

ரங்கராஜன்
16-11-2008, 02:37 PM
முடிவு உங்கள் கையில்...
சாரு ஆன்லைன்ல வராததற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்...???

நான் சொன்ன சாரு(ர்) அதாவது நீங்க

மதி
16-11-2008, 03:04 PM
அட..தப்பா புரிஞ்சுக்கிட்டேன்.. இந்தக் கதை எழுதி ரொம்ப நாளாச்சு... :)

அன்புரசிகன்
17-11-2008, 07:55 AM
தூரத்தில் அவள் அடையாளம் சொன்ன கடை. கலங்கிய கண்களில் பிம்பமாய் பலர். எல்லோரும் நீல வண்ண ஆடை அணிந்தது போல் தோன்றியது. தெளிந்துவிட்டேனா குழம்புகிறேனா. தெரியவில்லை. எது தொலைத்தேன்? எதைத் தேடுகிறேன்? இன்னும் புரியவில்லை. தன்னிச்சையாக என் கால்கள் திரும்பி படியில் இறங்க ஆரம்பித்தது.
புரியவில்லை ஐயனே... பலர் நின்றது அவனது பிரமையா அல்லது உண்மையாக பலர் நின்றனரா???

கண்மணி
17-11-2008, 08:26 AM
கதை! ? * :eek::rolleyes::cool::D:mini023:

அன்புரசிகன்
17-11-2008, 08:30 AM
கதை! ? * :eek::rolleyes::cool::D:mini023:

அப்ப இது ஒரு உண்மைச்சம்பவமா?

மதி
17-11-2008, 08:46 AM
கண்மணியக்கா... குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணிடுவீங்க போல. :eek::eek::eek:

மதி
17-11-2008, 08:48 AM
புரியவில்லை ஐயனே... பலர் நின்றது அவனது பிரமையா அல்லது உண்மையாக பலர் நின்றனரா???
புரிய ஆரம்பித்த குழப்பங்களினால் ஏற்பட்ட பிரமை என எடுத்துக் கொள்ளுங்களேன்...

அன்பு ரசிகரே....!

அன்புரசிகன்
17-11-2008, 09:06 AM
புரிய ஆரம்பித்த குழப்பங்களினால் ஏற்பட்ட பிரமை என எடுத்துக் கொள்ளுங்களேன்...

அன்பு ரசிகரே....!

ஏதோ விசு கதைக்கிறமாதிரியே கிடக்கு... :sport009:

சிவா.ஜி
17-11-2008, 09:43 AM
நல்ல கதை சொல்லியாக வளர்ந்து வருகிறீர்கள் மதி. எழுத்தில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. ஒரு சாதாரண சிறுகதையாக இதை நினைக்க முடியவில்லை. சிந்தனைகளை அசைத்துவிட்டது.

அதிலும் அந்த கடைசி பத்தி....வெல்டன் மதி. முகம் மறைத்த தோழமையை உறுதி செய்ய மீண்டும் ஒரு முக மறைத்தலையே துணக்கழைப்பதில் விருப்பமில்லாமல் அவன் இறங்கி நடந்தபோது என்னுள் உயர்ந்துவிட்டான். அவன் தேடலை அவன் விளங்கிக் கொள்ளத் தொடங்கிவிட்டான்.

மனமார்ந்த பாராட்டுக்கள் மதி. இன்னும் நிறைய எழுதுங்க.

சூரியன்
17-11-2008, 10:11 AM
எனக்கு புரிஞ்ச மாதிரி இருக்கு, ஆனா புரியல.

மதி
17-11-2008, 10:14 AM
நல்ல கதை சொல்லியாக வளர்ந்து வருகிறீர்கள் மதி. எழுத்தில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. ஒரு சாதாரண சிறுகதையாக இதை நினைக்க முடியவில்லை. சிந்தனைகளை அசைத்துவிட்டது.

அதிலும் அந்த கடைசி பத்தி....வெல்டன் மதி. முகம் மறைத்த தோழமையை உறுதி செய்ய மீண்டும் ஒரு முக மறைத்தலையே துணக்கழைப்பதில் விருப்பமில்லாமல் அவன் இறங்கி நடந்தபோது என்னுள் உயர்ந்துவிட்டான். அவன் தேடலை அவன் விளங்கிக் கொள்ளத் தொடங்கிவிட்டான்.

மனமார்ந்த பாராட்டுக்கள் மதி. இன்னும் நிறைய எழுதுங்க.
அப்பாடா... ரொம்ப நன்றிங்கண்ணா.... நீங்களாச்சும் புரிஞ்சதுன்னு சொன்னீங்களே...:D:eek::icon_b:

தாமரை
17-11-2008, 10:19 AM
தொலைத்துத் தேடவொரு சொந்தம் வேண்டும்
தேடுகிறேன் தினம்நான் தொலைந்து

தேடிய சொந்தம் கிட்டும் முன்னரே
தொலைத்து வந்தேன்எனை மறந்து

தொலைவதில் தேடிய சொந்தங்கள் தினம்
தேடலில் தொலைந்துவிட துறந்து

தேடலும் தொலையலும் தேடிய நாட்கள்
தேடுகிறேன் மனதுள் புகுந்து.

மதி
17-11-2008, 10:31 AM
தொலைத்துத் தேடவொரு சொந்தம் வேண்டும்
தேடுகிறேன் தினம்நான் தொலைந்து

தேடிய சொந்தம் கிட்டும் முன்னரே
தொலைத்து வந்தேன்எனை மறந்து

தொலைவதில் தேடிய சொந்தங்கள் தினம்
தேடலில் தொலைந்துவிட துறந்து

தேடலும் தொலையலும் தேடிய நாட்கள்
தேடுகிறேன் மனதுள் புகுந்து.
பழனிக்கே பஞ்சாமிர்தமா...
திருநெல்வேலிக்கே அல்வாவா...
இறுதியாக
மதிக்கே மிதியா...??

சுத்தமா புரியல.. :traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:

ரங்கராஜன்
17-11-2008, 10:56 AM
பழனிக்கே பஞ்சாமிர்தமா...
திருநெல்வேலிக்கே அல்வாவா...
இறுதியாக
மதிக்கே மிதியா...??

சுத்தமா புரியல.. :traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:

நைனா நா நனச்சேன் நீ சொல்லிட

தாமரை
17-11-2008, 11:29 AM
பழனிக்கே பஞ்சாமிர்தமா...
திருநெல்வேலிக்கே அல்வாவா...
இறுதியாக
மதிக்கே மிதியா...??

சுத்தமா புரியல.. :traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:

ஒத்துகிட்டதற்கு நன்றி மதி. :lachen001::lachen001:

ஆனால் அது மூர்த்திக்கு எப்படித் தெரிந்தது என்பதுதான் ஆச்சர்யம். :D:D:confused:

ஆதவா
17-11-2008, 11:50 AM
தேடலும் தொலையலும் தேடிய நாட்கள்
தேடுகிறேன் மனதுள் புகுந்து.

:icon_b::icon_b::icon_b:

பிரமாதம் மதி. மொக்கையா கவிதை எழுதறீங்க. சக்கையா கதை எழுதறீங்க... பின்னுறீங்க போங்க... (யார் தலைய?)

சரி, கடைசியில அந்தப் பொண்ணப் பார்த்தீங்களா இல்லையா? எப்படி இருந்தாங்க? நல்லா பேசினாங்களா? என்ன, ஒண்ணுமில்லையா? அவ்ளோதானா? முகம் அறியா முகங்கள் பார்ட் டூ ஏதாச்சும் இருக்கா?

அழகான நடை, நல்ல எண்ணவோட்டம், வார்த்தைகளை மாற்றி மாற்றி தத்துவார்த்த நடை, முடிவு என அனைத்தும் ஜூப்பர்..

அடுத்த கதை எழுதறப்போ வசனங்களுக்கு இடைவெளி விடுங்க.... ஒரே கொயப்பமா இருக்கு.....:rolleyes:

மதி
17-11-2008, 12:53 PM
:icon_b::icon_b::icon_b:

பிரமாதம் மதி. மொக்கையா கவிதை எழுதறீங்க. சக்கையா கதை எழுதறீங்க... பின்னுறீங்க போங்க... (யார் தலைய?)

சரி, கடைசியில அந்தப் பொண்ணப் பார்த்தீங்களா இல்லையா? எப்படி இருந்தாங்க? நல்லா பேசினாங்களா? என்ன, ஒண்ணுமில்லையா? அவ்ளோதானா? முகம் அறியா முகங்கள் பார்ட் டூ ஏதாச்சும் இருக்கா?

அழகான நடை, நல்ல எண்ணவோட்டம், வார்த்தைகளை மாற்றி மாற்றி தத்துவார்த்த நடை, முடிவு என அனைத்தும் ஜூப்பர்..

அடுத்த கதை எழுதறப்போ வசனங்களுக்கு இடைவெளி விடுங்க.... ஒரே கொயப்பமா இருக்கு.....:rolleyes:
அட.. ஆதவன் பாராட்டா...?? மிக்க நன்றிங்கண்ணா.....
முதலில் இது முழுக்க முழுக்க கற்பனையே.. அதனால அவங்கள நான் சந்திக்கவுமில்லை.. பேசவுமில்லை.. :)

இடைவெளி தானே.. விட்டுட்டா போச்சு..

மதி
17-11-2008, 12:57 PM
தாமரையிடம் உரையாடிய போது அவர் சொன்னது
"எந்தப் பொண்ணும் இந்த அளவுக்கு மொக்கையாக சாட் செய்ய மாட்டாள்.." ஒரு வேளை அவர் சொன்னது உண்மையாயிருப்பின் அந்த நபர் ஆணாய் கூட இருக்கலாம்.. :):)

Narathar
17-11-2008, 01:01 PM
மதி மிக அழகாக எழுதியிருக்கின்றீர்கள்......

"மித்ர் My Friend" திரைப்படத்தைப்போல
ஏதோ திருப்பம் வைக்கப்போரீங்கன்னு பார்த்தா
நீங்களே திரும்பிட்டீங்க
நல்ல திருப்பம்

வாழ்த்துக்கள்

மதி
17-11-2008, 01:05 PM
நாராயணா... என்ன நாரதரின் கடைக்கண் பார்வை என் திரியிலுமா...?? :D:D
தங்கள் வாழ்த்துக்கு நன்றி நாரதரே..!

ஓவியன்
17-11-2008, 01:36 PM
எந்தவொரு தேடலுக்கும் இலக்கு அவசியம், எதனைத் தேடுகிறோம் எனத் தெளிவில்லாது தேடினால், தேடலென்ற பணியே வாழ்க்கையாகிவிடும்...

முடிவில் தேடித் தேடி, நாமே தொலைந்து விடுவோம்...

வித்தியாசமான கருவினைக் கோர்த்து, புதிய பரிணாமத்தில் நடை போட்ட மதியின் அழகான பதிவுக்கு என் வாழ்த்துக்களும்..

மதி
17-11-2008, 01:48 PM
அழகாய் கதைக்கருவினை விளக்கிய ஓவியருக்கு நன்றி..

கககபோ... :D

சுகந்தப்ரீதன்
24-11-2008, 09:42 AM
தாமரையிடம் உரையாடிய போது அவர் சொன்னது
"எந்தப் பொண்ணும் இந்த அளவுக்கு மொக்கையாக சாட் செய்ய மாட்டாள்.." ஒரு வேளை அவர் சொன்னது உண்மையாயிருப்பின் அந்த நபர் ஆணாய் கூட இருக்கலாம்.. :):)ஆமாம்.. ஆமாம்.. அது தாமரையாய் இருக்கவும் வாய்ப்பிருக்கு..!!:confused:

மதி உங்களோட கதையின் ஆரம்பத்தில் தாமரை அண்ணாவுடனான உங்க அனுபவத்தை சொல்லுறீங்களோன்னு நினைச்சேன்.. ஏன்னா இப்படியெல்லாம் தேடறதுக்கு அவரு ஒருத்தராலதான் முடியும் எனக்கு தெரிஞ்சி...:sprachlos020:

ஆனா போக போக கதையோட ஆழம் ரொம்ப அதிகமா ஆயிட்டுது.. உண்மையில இதை நீங்கதான் எழுதினீங்களான்னு எனக்கு சந்தேகமாக்கூட இருக்கு.. அந்த அளவுக்கு பக்குவபட்ட ஒருமனித தேடலை பற்றிய பயணம் போல இருக்கு.. கதையில் வரும் நாயகனின் எண்ண ஓட்டங்கள்...!!

சிவா அண்ணா சொன்ன மாதிரி உங்கள் எழுத்தில் மெருகுக்கூடி இருப்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.. சும்மா புகழுறன்னு நினைக்காதிங்க.. உங்க மொக்கை கதையெல்லாம் படிச்சதனாலத்தான் இதை உறுதியா சொல்லுறேன்...!! வாழ்த்துக்கள் மதி.. தொடரட்டும் முன்னேற்றம்..:icon_b:

மதி
24-11-2008, 10:52 AM
ரொம்ப நன்றி சு.பி. இது நான் எழுதினதுன்னு உங்களுக்குத் தோணலியா..??
:(

சுகந்தப்ரீதன்
24-11-2008, 10:56 AM
இது நான் எழுதினதுன்னு உங்களுக்குத் தோணலியா..??
:(அச்சச்சோ..நான் அப்படி சொல்லவில்லை.. உங்க கதையான்னு எல்லோரையும் ஆச்சரியப்பட வச்சிருக்கீங்கன்னு சொல்ல வந்தேன்..!!:icon_b:

மதி
24-11-2008, 11:32 AM
அச்சச்சோ..நான் அப்படி சொல்லவில்லை.. உங்க கதையான்னு எல்லோரையும் ஆச்சரியப்பட வச்சிருக்கீங்கன்னு சொல்ல வந்தேன்..!!:icon_b:
நான் என்னங்க பண்றது...
அதுவா வருது...ஹிஹி:D:D:D

அமரன்
27-11-2008, 07:59 AM
அவள் நிச்சயமாக பெண்ணாக இருக்கமாட்டாள் என்று நானும் நம்புகிறேன். அதே வேளை அவள் பெண்ணென தனைச் சொல்லி இருக்காவிட்டால் நாயகன் தேடல் இருந்திருக்காது. மதியின் கதை சக்கை என்று சொன்ன ஆதவா சொல்லி இருக்கார் - சாறை தாமரை அண்ணா எடுத்து தந்ததாலோ..

பாராட்டுகள்.

மதி
27-11-2008, 08:08 AM
நானும் அப்படித் தான் நம்புகிறேன் அமரன்..
யாராயிருந்தா என்ன...? குழப்பமும் தெளிதலும் குழப்பங்களின் இருவேறு நிலை தானே தவிர முழுக்க முழுக்க குழப்பங்களிலிருந்து தெளிவதில்லை என்பதான கருத்தாக.. தான் இது எனக்குப் படுகிறது.. ஹிஹி

அமரன்
27-11-2008, 08:09 AM
நானும் அப்படித் தான் நம்புகிறேன் அமரன்..
யாராயிருந்தா என்ன...? குழப்பமும் தெளிதலும் குழப்பங்களின் இருவேறு நிலை தானே தவிர முழுக்க முழுக்க குழப்பங்களிலிருந்து தெளிவதில்லை என்பதான கருத்தாக.. தான் இது எனக்குப் படுகிறது.. ஹிஹி

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் மதி.
"சாரு ஆன்லைனில் வரலை"ன்னு மூர்த்தி சொன்னதில் இருந்த "சாரு"வை நீங்க "சாரு"வாக நினைச்சீங்க.

தாமரை
27-11-2008, 08:12 AM
சாரு-ஆன்லைன் - எழுத்தாளர் சாருநிவேதிதா பக்கம். நம்ம தங்கவேல்தானே பராமரித்து வருகிறார்.

மறந்திருந்தா ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

சாரு-ஆன்லைனில் வராவிட்டால் அதற்குக் காரணம் தங்கவேல். மதியல்ல.