PDA

View Full Version : வாழ்கிறேன்?



இளசு
03-11-2008, 08:32 PM
வாழ்கிறேன்?



கண்டவை நிறைய -- நோக்கியது?
கேட்டவை அதிகம் --- மடுத்தது?
தொட்டவை அநேகம் -- உணர்ந்தது?


புசித்தவை ஏராளம் - ருசித்தது?
சுவாசிப்பது எப்போதும் - நுகர்ந்தது?
பேசியவை தாராளம் - எண்ணியது?


நகர்ந்தது பலகாதம் - பயணித்தது?
படித்தது பலவேதம் - இருத்தியது?
இருந்தது பலவருடம் - வாழ்ந்தது?

பாரதி
04-11-2008, 12:43 AM
ஆஹா..... அண்ணனின் கவிதை...!!!! மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் தூறல் பொழிய வேண்டும்.

ஆம் அண்ணா.. நீங்கள் கண்ட அவை நிறைய! அங்கு குழுமியிருந்த அறிஞர்கள் அனைவரும் உங்களுரை கேட்கும் போது, உங்களை ஆச்சரியத்துடன் நோக்கினரே, அதைத்தானே கூறுகிறீர்கள்?

அதே போல பிற அறிஞர்கள் மொழிய நீங்கள் கேட்ட அவையும் அதிகம்தான். இராமன் கூற பரதன் கேட்க, பரதன் கூற இராமன் கேட்க.. என்பதைப் போல நீங்கள் செவிமடுத்ததை நினைவூட்டுகிறீர்களோ?

நீங்கள் தொட்டு பிணி நீக்கிய மனிதர்களின் நிம்மதியைக்கண்டு, மகிழ்ச்சி என்ற உணர்வு ஏற்பட்டதை உணர்ந்ததை விளம்புகிறீர்களா அண்ணா..?

பசிக்கும் போது நமக்கு ருசி தெரியாதே..? எனினும் பசிக்காமல் இருக்கும் போதும் புசிக்க வேண்டும்; அதன் இனிமையை ருசிக்க வேண்டும் என்ற ஆவலில் விளைந்த கவிதை வரிகளோ?

மூச்சைத்திணற வைக்கும் அசுத்த உலகில், சுவாசிப்பதை விட மூச்சடக்கி தியானம் இருக்கலாம்; மனிதத்தை நுகரும் வரை.

நினைத்ததைப் பேசி விட்டு, பின் அதையெண்ணி எண்ணி வருத்தப்படும் மானிட இயல்பு, அவ்வளவு எளிதாக மாறக்கூடியதா என்ன?

முயல் போல ஓடாமல், ஆமையாய் நகர்ந்து அடுத்த மைல்கல்லை அடைய வேண்டும் என்ற அரிச்சுவடிப்பாடம் அனைவருக்கும் தேவைதான்.

பல வேதம் படித்ததாய் வீணாய் வாதம் புரியும் பகல் கனவுக் குருடர்களுக்கு அன்பேசிவம் என்ற ஒருசொல் வேதம் என்று போய்சேரும்?

இருந்தவை விநாடிகளாக, நிமிடங்களாக, மணித்துளிகளாக, நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக இல்லை - அவை சரித்திரமாக மாற வேண்டும். என்றும் மெய்ப்புகழுடன் நீடூழி வாழ வேண்டும்.

ஆதவா
04-11-2008, 07:07 AM
இது தேடல் வகை கவிதை அண்ணா. சரியான தேடல் இல்லாமல் இருப்பது.

ஒவ்வொரு நிகழ்விலும் நுண்மையை உணர்தலும் அதன்படி நடத்தலுமான தேடலுக்கு உகந்த கவியிது. ஒவ்வொரு செயலிலும் ஓர் உட்செயல் உண்டு என்பதை உணரவேண்டும். நிகழ்ச்சிகளை மேலோட்டமாகப் பார்த்துப் பழகிப் போனதனால்தான் இங்கே பிரச்சனையே! வாழ்க்கைப் பாதைக்கு ஒரு முடிவுண்டு. அம்முடிவுக்குள் முழுவதுமாய் மூழ்கித் திளைக்க முடியுமா என்றால் பலரால் முடிவதில்லை. ஏன்? நோக்கியதைவிட பார்த்தவை ஏராளம்... அனுபவங்கள் எல்லாமே ஆழப்புதைந்த நிகழ்வுகள் அல்லாமல் மேலோட்டமாக..

கேள்விக்குறிக்குப் பின்னே விடையோ அல்லது தீர்வோ இருக்கவேண்டும். கேள்விகள்தாம் ஒவ்வொரு படிக்கும் அடுத்த படி. விடைகள் எங்கிருந்து வேண்டுமெனினும் வரலாம். உங்கள் கேள்விக்கு விடை அவ்விடயத்திலிருந்தே வரவேண்டும். புசிப்பது முதல் புணர்வது வரை ஒவ்வொரு அசைவுகளையும் நுட்பமாய் உணரவேண்டும். அவை அவை அச்செயல்களிலேயே பொதிந்து கிடக்கிறது இல்லையா அண்ணா?

வள்ளுவர் "எண்ணித் துணிக கருமம்" என்பார்.

எண்ண இயலா கருமம் எனில் துணிவென்ன துணிவு? துணிவெண்ணி கருமம் துணிய செய்தென்ன பலன்?

இருந்தது பலவருடம் - வாழ்ந்தது?

சிலருக்கு இருக்க மட்டுமே முடிகிறது அண்ணா..

வாழ்வை கலையாக ரசிப்பவர்களுக்கு அதன்பின் ருசிப்பவர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணமாகட்டும்...............

வாழ்த்த வயதின்றி
ஆதவன்.

சிவா.ஜி
04-11-2008, 08:19 AM
வாசித்தது பல..........என்னில்
வசித்தது சில....

இளசுவின் வரிகள், வசிப்பதில் முதல். வாழ்த்துகள்.

Mano.G.
04-11-2008, 08:44 AM
இளவலுக்கு வாழ்த்துக்கள்

தேடல் கவிதை

நோக்கியது -கண்டவை நிறைய
செவிமெடுத்தது - கேட்டவை அதிகம்
உணர்ந்தது - தொட்டவை அதிகம்

ருசித்தது - புசித்தவை ஏராளம்
நுகர்ந்தது - சுவசிப்பது எப்போதும்
எண்ணியது - பேசியவை தாராளம்
பயணித்தது - நகர்ந்தது பலகாதம்

இருத்தியது - படித்தது பலவேதம்
வாழ்ந்தது -இருந்தது பலவருடம்

சாதித்தது - ?????????
சாதிக்கபோவது -.....................

aren
04-11-2008, 10:40 AM
இந்தக்கவிதையைப் படித்தவுடன் ஒரு மலரும் நினைவுகள் நிகழ்ச்சியைக் கண்டதுபோல் இருக்கிறது.

அனைத்து நினைவுகளிலும் பற்பல விஷயங்கள் மனதில் இன்றும் அலைபோட்டுக்கொண்டேயிருக்கும். சிலவற்றை நினைத்தவுடனேயே மனது பட்டாம்பூச்சிபோல படபடக்கும்.

அருமையான கவிதை.

தொடருங்கள் இளசு. இன்னும் வேண்டும் எங்களுக்கு!!!!


நன்றி வணக்கம்
ஆரென்

சாம்பவி
04-11-2008, 01:56 PM
கண்டவை நிறைய -- நோக்கியது?
கேட்டவை அதிகம் --- மடுத்தது?
தொட்டவை அநேகம் -- உணர்ந்தது?


புசித்தவை ஏராளம் - ருசித்தது?
சுவாசிப்பது எப்போதும் - நுகர்ந்தது?
பேசியவை தாராளம் - எண்ணியது?


நகர்ந்தது பலகாதம் - பயணித்தது?
படித்தது பலவேதம் - இருத்தியது?
இருந்தது பலவருடம் - வாழ்ந்தது?

Join Date: 31 Mar 2003
Posts: 14,690


நோக்கியது
மடுத்தது
உணர்ந்தது
ருசித்தது
நுகர்த்தது
எண்ணியது
பயணித்து
இருத்தியது
எல்லாமும்
வாழ்கின்றனவே..
கையேடுகளாய்...
காலச் சுவடுகளாய்....
மன்றப் பதிவுகளாய்... !!!!

மொத்தமாய் பதினாங்காயிரத்து
அறுநூற்றுச் சொச்சம்
அனைத்துமே
நூற்றுக்கு நூறு ஸ்வச்சம்... !
ஆனாலும் ஐயா..,
இத்தேடுதல் தங்களின்
அடக்கத்தின் உச்சம்.... !!!!

shibly591
05-11-2008, 04:31 AM
அருமை
அருமை
அருமை...

வாழ்வது எதற்கென்று தெரியாமல் வாழ்பவர்களே மண்ணில் இன்று அதிகம்...

மிகச்சில வரிகள் மிகப்பெரிய ஞானோதயம்..

வாழ்த்துக்கள் அண்ணா..

தொடருங்கள் இன்னும் ஏராளம்

பென்ஸ்
10-11-2008, 03:51 AM
கேள்வி குறிகளை கொடுத்து மனதை குடைய செய்து விட்டீர்கள் இளசு....

நேரக சொல்ல வந்த்ததை சொல்லும் போது , தொடர்ந்து அதற்கு பதில் சொல்லுவது எளிது...

இது மனதின் "உள்" தொடும் கேள்விகள்....

ஆனால்.... கடலின் அலையில் நீந்தும் போது அலையின் மேல் பகுதியும், கீழ் பகுதியும் அதிகமாய் என்னை "கலக்கியது" போல்.. இவை அனைத்தும்...

வாழ்கிறேன்....!!!!!!
வாழ?

ஓவியன்
10-11-2008, 08:58 AM
ஒரு கலைஞனின் மூலதனமே எதிலும் திருப்தியடையா தேடல் கொண்ட மனம்தானே அண்ணா..!!
இங்கே, நான் உங்களை ஒரு கலைஞனாகக் காண்கிறேன்,
பல கற்களைச் சிற்பமாக்கிய கலைஞனாகக் காண்கிறேம்....

சிற்பிக்கு திருப்தி இல்லை,
தொடர்கிறது தேடல்....

விளைவு மன்றமெங்கும் சிற்பங்கள்...
அந்த சிற்பங்கள் சொல்லிக் கொண்டிருக்கும்
நீங்கள் கண்டவை, கேட்டவை, தொட்டவை முதலானவற்றை...

தொடரட்டுமண்ணா இந்த உன்னத தேடல்..!!

Keelai Naadaan
10-11-2008, 11:22 AM
Join Date: 31 Mar 2003
Posts: 14,690


நோக்கியது
மடுத்தது
உணர்ந்தது
ருசித்தது
நுகர்த்தது
எண்ணியது
பயணித்து
இருத்தியது
எல்லாமும்
வாழ்கின்றனவே..
கையேடுகளாய்...
காலச் சுவடுகளாய்....
மன்றப் பதிவுகளாய்... !!!!

மொத்தமாய் பதினாங்காயிரத்து
அறுநூற்றுச் சொச்சம்
அனைத்துமே
நூற்றுக்கு நூறு ஸ்வச்சம்... !
ஆனாலும் ஐயா..,
இத்தேடுதல் தங்களின்
அடக்கத்தின் உச்சம்.... !!!!

சாம்பவி அவர்கள் சொன்னதையே நானும் சொல்ல விரும்புகிறேன்.
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

மன்மதன்
10-11-2008, 01:27 PM
வாழ்க்கையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல்
அல்லாடும் மனித மனங்களில் அடிக்கடி கேட்கும்
எதிரொலி...

இருக்கும் நேரம்
போதவில்லை - என்பர் சிலர்
இருக்கும் நேரம்
போகவில்லை - என்பர் சிலர்..

முதல் ரக கவிதை இது.
பாராட்டுகள் இளசு அண்ணா..