PDA

View Full Version : என் தனிமை பற்றிய புகார்கள்



அகத்தியன்
24-10-2008, 05:40 PM
இன்றும் தொடங்கிற்று
இதயத்தின் கூக்குரல்..
என் தனிமை பற்றி புகார் செய்யவென..

யாரும் இல்லா ஒரு வெளியில்.
நான் தொடர்ந்து வசிக்க,
ஓர் இலையின் உதிர்விலும்
என்னுள் திணுக்கிடல்கள்..

கைகோர்த்துச்செல்லும் ஜோடிகளின் மீதான
என் தனிமையின் சாபங்கள்
இன்னும் என் தெருக்களில் இறைந்து கிடக்கின்றன.

தொலைதூர அழைப்புகளில் மட்டும்
ஓடி ஒளிந்து கொள்ளும் என் தனிமைகள்...
மீண்டும் பல்லிளித்தவாறு
என்னிடம் தொற்றிக்கொள்ள..
அதனை சுமந்தே திரிகின்றேன்
ஒரு பொதி போல

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
24-10-2008, 06:19 PM
வரிகளின் சொக்கிப் போனேன்அகத்தியா. வாழ்த்துக்கள்.

shibly591
24-10-2008, 07:26 PM
நீங்கள் தனிமையில் படும் அவஸ்தைகள் புரிகிறது நண்பரே..

கவலை வேண்டாம்..காலம் கை கூடும் விரைவில்..

வாழ்த்துக்கள்

இளசு
24-10-2008, 07:35 PM
தனிமை..

அலாதியான ஒருவகை பீடிப்பு..

அதன் அடிமனப் பாதிப்பு..

இதை இத்தனை அழகாய்ச் சொல்ல அகத்தியனால் முடிந்திருக்கிறது..

பாராட்டுகள் அகத்தியன்..


மனிதன் ஒரு சமூக மிருகம்..
தனிமை மனிதத்தின் சோதனைச்சாலை!

அமரன்
25-10-2008, 08:36 AM
சின்ன வயசில் இரவில் தனியாக வெளியே போகப் பயம்.

நொடித் துணிவில் போய்விட்டால் காற்றெழுப்பும் அரவமும் அரவம் கண்ட பயத்தை தரும்.

கொஞ்சம் வளர்ந்த பிறகு போகப் பயமில்லை.

பயமுதல்களை நுகர்ந்த பிறகு வெளியே போனால் வெருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்க்கதைதான்.

வளர்ந்து விட்டேன் என்ற எண்ணம் படர்ந்த பின்பு எதுவும் துச்சம். தனிமை அப்பப்போ தலை விரித்து மயமுறுத்தும்.

அத்தகைய தனிமைகள் மிருகங்கொல்லியாக உருவெடுக்கும் சாத்தியம் உண்டு. மிருகமாக்கும் சாத்தியமும் உண்டு.

அகத்தியனைத் தனிமை வாட்டுவது ஜோடி இல்லாததால் என்று நினைக்க வைக்கிறன இந்த வரிகள்.



கைகோர்த்துச்செல்லும் ஜோடிகளின் மீதான
என் தனிமையின் சாபங்கள்
இன்னும் என் தெருக்களில் இறைந்து கிடக்கின்றன.

ஜோடி இருந்தும் வாடும் பறவைகளின் நிலையை ஒரு கணம் கண்முன் நிறுத்தின இவ்வலிகள்.

எனது கனவுகள்
என்னவர்கள் கனவுகளென
எண்ணற்றவற்றில்
தொலைந்து போன என்னை
எனக்கு மீட்டுத் தருவன
தனிமைத் தருணங்களே!

பாராட்டுகள் அகத்தியன்.

அகத்தியன்
29-10-2008, 05:44 AM
நன்றி அமரா,

இளசுவின் வார்த்தைகள் மிக்க வலிமை. நன்றி ஐயா..

சுனைத்.. உமக்கு இப்படி ஒன்றும் நேரவில்லையா ;) ;) ;)?

சிவா.ஜி
29-10-2008, 05:51 AM
தனிமை மிகக்கொடுமை....அதே சமயம் மிக இனிமையும்கூட. சுயகழிவிரக்கம் தோன்றி துவைத்து எடுக்கும், சிலநேரம்...ஏகாந்தம் கற்பனைகளை பிரசவிக்க செவிலியாய் உதவும்.

அழகான வரிகளில் தங்கள் தனிமையை சொல்ல வரிகளைத் தந்ததும் அதே தனிமைதானே அகத்தியன்? பாராட்டுக்கள்.

Narathar
29-10-2008, 05:53 AM
ஓர் இலையின் உதிர்விலும்
என்னுள் திணுக்கிடல்கள்..




உங்கள் தனிமையை
வடித்திருக்கும் விதம் அருமை,
வாழ்த்துக்கள்! -தனிமைக்காகவல்ல ;)
கவிதைக்காக.........

வசீகரன்
30-10-2008, 05:01 AM
எல்லாம் சிவ மயம் எமக்கு எல்லாம் பய மயம்...!
நல்ல வரிகளில் நல்ல கவிதை தந்திருக்கிறீர்கள்
அகத்தியன் பாராட்டுக்கள்...!

poornima
30-10-2008, 07:11 AM
அகத்தியன்.. எளிமையான வார்த்தைகளின்றி
கொஞ்சம் படிமம் வைத்து செதுக்கியிருந்தீர்கள் என்றால்
இந்த தலைப்புக்கேற்ற மிக அருமையான கவிதை ஒன்றை
இந்த மன்றம் பெற்றிருக்கலாம் என்ற சிறுகுறை
ஒன்று எனக்குத் தோன்றுகிறது..

தவறாக எண்ண வேண்டாம்.. கவிதையின் தலைப்பு கனமான
விஷயத்தை உள்ளடக்கியிருக்கும் அளவுக்கு கவிதையின்
வார்த்தைகள் எளிமையாகப் போனதால் பலமற்று
போகிறது வடிவம்..

//தொலைதூர அழைப்புகளில் மட்டும்
ஓடி ஒளிந்து கொள்ளும் என் தனிமைகள்...
மீண்டும் பல்லிளித்தவாறு
என்னிடம் தொற்றிக்கொள்ள..
அதனை சுமந்தே திரிகின்றேன்
ஒரு பொதி போல
//

நிறைய நேரங்களில் இதை நான் அனுபவத்திருப்பதால்
இந்த கவிதையை பொறுத்தவரை நானும் நீங்களும் ஒரே
நேர்க்கோட்டில் பயணிப்பதாய் உணர்கிறேன்..

இதை இந்த கவிதையின் வெற்றியாகவும் கொள்ளலாம்