PDA

View Full Version : நான் ஒரு பட்டிக்காட்டான்.



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
09-10-2008, 09:01 AM
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

மயிரில் மையிட்டு
உயிரில் பொய்யிட்டு வைக்கும்
நாகரீக ஊனப்புத்தி உன் புத்தியென்றால்
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

மூடிக் கிடத்தல்களை விட
ஆடிக் கழித்தல்களில் அரங்கத்தோடு சேர்த்து
அங்கங்களுமதிரும் அரைகுறை அம்மண
அந்நிய கலாச்சார ஒத்தூதி நீயென்றால்
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

வடித்துத் தீர்த்துக் களைத்த
இல்லாதார் வியர்வையுறிஞ்சி
உன் பித்தட்டிட்டு நிரப்பும்
உயிர் பேணா உயர் ஜாதி நீயென்றால்
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

உன் ஒத்தார்களுக்கு உச்சங்களும்
பின் மத்தார்களுக்கு மிச்சங்களுமெனும்
மூர்க்க முதலாளி ஜாதி நீயென்றால்
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

வெண் பால் சுரக்கும் தாய் முலை விட்டு
வன் கள் வடியும் அந்நிய முலை தேடியோடும்
அறிவு கெட்ட அந்நிய ஆதரவன் நீயென்றால்
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே
இறந்தும் போகிறேன் பட்டிக்காட்டானாகவே.

சுகந்தப்ரீதன்
09-10-2008, 12:17 PM
வீரியம் கலந்த எள்ளல்நடைக் கவிதையை வெகுநாட்களுக்கு பிறகு கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி..!! கடைசி இருவரியில் உணர்ச்சியையும் உறுதியையும் ஒருசேர வெளிப்படுத்திய விதம் அருமை.. வாழ்த்துக்கள் நண்பரே... தொடருங்கள்..!!

Keelai Naadaan
09-10-2008, 03:53 PM
நல்ல கவிதை. பாராட்டுக்கள்.
பட்டிக்காட்டானாய் அமைதியான வாழ்வு வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
பட்டிக்காட்டு மனிதர்களிடம் பரிமாறப்படும் தமிழ் வார்த்தைகளும் தமிழில் உறவுகளை அழைப்பதும் கூட பட்டணத்தில் குறைந்து விட்டது.

poo
11-10-2008, 06:19 AM
சுயம் தொலைக்காத ஒரு உச்ச கோபம்...மிச்சமென்ன இருக்கிறது பாராட்டுவதைட் தவிர்த்து?!..

வாழ்த்துக்கள் நண்பரே.. நிறைய எழுதுங்கள்!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
11-10-2008, 09:30 AM
வாழ்த்திய நெஞ்சங்களுக்கு மிக்க நன்றி.

இளசு
17-10-2008, 08:24 PM
தகிக்கும் சுயமரியாதைக் கனல் தெறிக்கிறது..

வாழ்த்துகள் ஜூனைத்!

ராஜா
18-10-2008, 04:55 AM
ஒரு கவிதை சிறப்பானதென்று கொள்ள பல தகுதிகள் இருக்கலாம்..

எனக்கு தெரிந்தவரை..

அக்கவிதையைப் படித்தபிறகு... "அட.. ஆமாய்யா..!" என்ற எண்ணம் மிக வேண்டும்.

"எவ்வளவு அழகாச் சொல்லியிருக்காருப்பா..!" என்ற வியப்பு நிலவ வேண்டும்.

முதல் பதிவில் தம்பி கிஷோர் சொல்லியிருப்பதைப் போல, "அப்படிப் போடு..!" என்று வாய்விட்டு பாராட்டு வரவேண்டும்.

உங்கள் கவிதை நல்ல கவிதை சுனைத்.. பாராட்டுகளும், வாழ்த்துகளும்..!

Narathar
18-10-2008, 09:19 AM
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே
இறந்தும் போகிறேன் பட்டிக்காட்டானாகவே.

மனதில் ஆணித்தரமாக பதியும்படி எழுதியிருக்கின்றீர்கள் ஜுனைத்! வாழ்த்துக்கள்

பல சந்தர்ப்பங்களில் என் மனவோட்டத்தில் ஓடிய எண்ணங்களை உங்கள் கவிதையாக பார்ப்பதில் மிக்க மகிழ்கின்றேன்.....

நாகரீக மோகம் கொண்டலையும் மெலைத்தேய நாடுகளில் வாழும் நம்மவர்களை பார்க்கையில் இப்படி தோன்றியிருக்கின்ரது எனக்கு

shibly591
20-10-2008, 10:26 AM
சுனைத்..

உங்கள் படைப்பு அழகாக இருக்கிறது..

வாழ்த்துக்கள்..

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
21-10-2008, 06:35 AM
தாமதமான நன்றிக்கு என்னை மன்னிக்கவும். தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தோழர்களே. இந்த அளவிற்கு கவிதை பாதையை நான் கடந்து வந்திருப்பதற்கான முழு காரணமமும் தங்களின் பின்னூட்டத்தையே சாரும்.

அமரன்
21-10-2008, 09:24 AM
பட்டிக்காட்டின் வேரில் பூத்தது பட்டிணம். நாகரிகமும் இதுக்கு விலக்கல்ல.

கோவணம் கட்டிய விவசாயி,
ரவிக்கை போடாமல் சேலை கட்டிய பெண்சாதி,
அபாய ஆடைகளுடன் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது,
வானம் பொய்த்ததால் (இது கூடப் பொய்தானே) ஊர்பெயர்ந்த குடிகள்,
சேறும் சகதியும் ஒட்டடையும் எண்ணெயுமாக மயிருக்கு மையிட்ட மாந்தர் (பொது இடத்தில் மயிரென்று சொல்ல முடியாதளவுக்கு மையிட்டோம்),
தனக்கு எடுத்து வெச்ச பிறகு மத்தவங்களுக்கு கொடுத்தது,..

பொது இடத்தில் வைத்துக் குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார் இப்பவும் உண்டு.
பார்வைகள்தான் மாறிப்போச்சு. அதுதான் நாகரிகப் பூச்சு.

பாராட்டுகள் ஜுனைத்.

தீபா
25-10-2008, 03:00 AM
சொக்கினேன்... உங்கள் கவிதையய விமர்சிக்கும் அளவுக்கு என்னிடம் ஒன்றுமில்லை...தகுதியுமில்லை.

வாழ்த்துக்கள் சார்.

பாண்டியன்
25-10-2008, 07:58 AM
நாகரீக பட்டிக்காட்டானுக்கு வாழ்த்துகள்