PDA

View Full Version : படித்ததில் பிடித்தது மனதைப் பிழிகிறது....



subas
03-09-2008, 02:18 PM
பத்திரிகையில் வந்த ஒரு செய்தியை என்ன காரணமாகவோ அண்ணனும் நண்பருமான ஒருவர் என்னுடன் மின் கடிதத்தில் பகிர்ந்து கொண்டார். காரணமே இல்லாமல் நானும் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். மனசின் ஓரத்தில் ஏதோ ஓர் ஆற்றாமை என்றே எண்ணுகிறேன். இதில் தவறுகள் இருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்து என்னுடைய இந்தப் பதிவை உடனடியாக நீக்கிவிடுமாறு பணிவுகலந்த தாழ்மையுடன் வேண்டுகிறேன். விஷயம் இது தான் -

கலாசார மாற்றத்தில் இலங்கை அகதிகள்

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் விளைவாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளின் வாழ்க்கை முறை மாற்றம் கண்டுள்ளது. அவர்களிடம் கலாசார மாற்றமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழகத்தின் "தினமணி' பத்திரிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு தொடங்கி உள்நாட்டுப் போரையடுத்து அந்த நாட்டு தமிழ் மக்கள் புலம் பெயரத் தொடங்கினர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்த இலங்கை தமிழ் அகதிகளை தங்க வைக்க தமிழகத்தில் சுமார் 117 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் தற்போது சுமார் ஒரு இலட்சம் அகதிகள் உள்ளனர்.

சுமார் கால் நூற்றாண்டு காலம் இந்தியாவில் தங்கிவிட்ட இவர்களின் வாழ்க்கை முறையில் தற்போது பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. உணவு முறையில் இருந்து தெய்வ வழிபாடு வரை அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் உணவு மற்றும் பணத் தேவைக்காக வெளியில் உள்ள மக்களுடன் பழகத் தொடங்கினர். இதன் விளைவாக இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையோடு ஒன்றிவிட்டனர்.

25 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் இருப்பதால் இங்கு பிறந்து வளர்ந்து வரும் சந்ததியினருக்கு தங்களது பாரம்பரியம், கலாசாரம் பற்றித் தெரிவதில்லை. அதுமட்டுமன்றி இளைய சந்ததியினர் தங்களது தாய்நாடு இந்தியா என்று நினைக்கும் அளவுக்குக் கூட இருக்கின்றனர்.

பொதுவாக இலங்கைத் தமிழர்கள் மாவட்ட ரீதியாகத் தான் வேறுபட்டு நிற்பர். ஆனால், இங்குள்ள மக்களுடன் அன்யோன்யமாகப் பழகி வருவதன் விளைவாக சாதி ரீதியாகவும் வேறுபட்டு நிற்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும், அகதிகள் பலர் தங்களது இலங்கைத் தமிழ்ப் பேச்சை மறந்து தமிழ் நாட்டுத் தமிழை வட்டார வழக்குடன் சரளமாகப் பேசுகின்றனர்.

இலங்கைத் தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் விதத்திலும் அங்குள்ள வழமையையும் தொன்மையையும் எடுத்துக் கூறும் வகையிலும் பல்வேறு பாடல்கள் உண்டு. இந்தப் பாடல்கள் தான் உலகத்தின் பிற தமிழர்களிடமிருந்து இலங்கைத் தமிழர்களை உயர்த்திக் காட்டுவதாகக கூறப்படுகிறது.

ஆனால், அந்தப் பாடல்களையும் சிறிது சிறிதாக இலங்கை அகதிகள் மறந்து வருவதாகத் தெரிகிறது. முகாம்களிலுள்ள ஒருசில முதியவர்களைத் தவிர வேறு யாருக்கும் அந்தப் பாடல்களைப் பற்றி தெரியவில்லை. மாறாக தமிழ்த் திரைப்படப் பாடல்களை நன்றாகத் தெரிந்து வைத்துள்ளனர்.

இது போல அவர்களது பாரம்பரிய உணவு முறையும் அவர்களிடமிருந்து விடைபெறும் தறுவாயிலுள்ளது. பெரும்பாலானோர் தமிழகத்து உணவு முறைக்கு வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றனர்.

உதாரணமாக இலங்கையில் வாழும் தமிழர்களின் உணவுப் பதார்த்தத்தில் விழா நாட்களில் மட்டுமே "சாம்பார்' இடம்பெறும். ஆனால், தமிழகத்துக்கு வந்த பின்னர் வாரத்தில் 3 நாட்கள் "சாம்பார்' வைக்கின்றனர். கார வகை உணவுகளை அதிகமாக அங்கு சேர்த்தவர்கள் இங்கு கார வகை உணவுகளைத் தவிர்த்து காய்கறிகளை அதிகம் சேர்க்கின்றனர்.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் உடலோடு ஒட்டிய ஆடைகளை அதிகமாக அணிவது வழக்கம். அகதிகளாக அவர்கள் தமிழகம் வந்த பின்னர் ஆடைகளை தொய்வாக அணிகின்றனர். பெண்கள் அரைப் பாவாடை, ஸ்கர்ட் போன்ற ஆடைகளை விரும்பி அணிவதுண்டு. இங்கு வந்த பின்னர் சேலை, தாவணி, நைற்றி போன்ற ஆடைகளுக்கு மாறத் தொடங்கியுள்ளனர்.

இப்போது அகதி இளைஞர்களிடம் மது கலாசாரமும் வேகமாகப் பரவத் தொடங்கியிருக்கிறது.

இந்த கலாசார மாற்றத்தைக் கவனித்த சில தொண்டு நிறுவனங்கள் அகதி முகாம்களிலுள்ள இலங்கைத் தமிழர்களிடம் அவர்களது கலாசாரத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வகையில் நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

ஆனால், இதற்கு அந்த மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை. அதேநேரத்தில் "தங்கள் தாய்நாடான இலங்கைக்குச் செல்லும் போது தங்களது கலாசாரத்துக்கு மீண்டும் முழுமையாக மாறும் வாய்ப்புள்ளதாக' முகாம்களில் வாழும் முதியவர்கள் சிலர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஓவியா
04-09-2008, 09:33 AM
என் சுய கருத்து,

இலங்கை மக்களை அகதிகள் என்று வரிக்கு வரி எழுதி வைத்து படிக்கையிலே எழுதியவரின் மீது ஒருவித வெறுப்புதான் வருகின்றது... ச்சே மனமே வலிக்கின்றது.

இவர்களை 'புலம் பெயந்த மக்கள்' என பண்பாக அழைப்பதே சாலச்சிறந்தது.

தீபன்
04-09-2008, 10:18 AM
சொல்லில் என்ன இருக்கிறது...? நிலமை ஒன்றுதானே...? பண்போடு கூப்பிட்டாலும் எதுவுமில்லாதவன் இல்லாதவன்தான். உண்மையில் புலம்பெயர்ந்தவர்கள் என்ற சொல் அத்தகைய மக்களுக்கு பொருந்தாது. நாடு விட்டு நாடு சென்று வாழும் எல்லோருமே புலம்பெயர்ந்தவர்கள் தான். இருக்க வளியில்லாமல் எதுவும் இல்லாமல் வாழ இடம்தேடி வந்தவர்களை அகதி என்றுதான் சொல்லவேண்டும். அதனிலும் சிறப்பாக சொல்வதானால் ஏதிலிகள் எனலாம்.

தற்காலிக கலாச்சார மாற்றத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை. வாழும் உரிமை கிடைக்கும்போது அது தானே சரியாகும் என்பது என் கருத்து.