PDA

View Full Version : பாட்டி(குட்டிக்கதை)



ஐரேனிபுரம் பால்ராசய்யா
28-08-2008, 12:59 PM
"டாடி, பாட்டிகிட்ட கதை கேட்கணும்போல இருக்கு, அம்மா கூட்டிக்கிட்டு போகமாட் டேங்கறாங்க!'' என்று அடம்பிடித்தான் இளமதியன்.
``இவ்வளவுதானா, நாளைக்கே ஏற்பாடு பண்ணிடுறேன்!'' என்று அவனைச் சமாதானப்படுத்தினார் அவனது தந்தை.
மறுநாள் காலையில் தனது மகனை அழைத்துக் கொண்டு அந்த முதியோர் இல்லத்துக்குச் சென்றார் அவர்.
பேரனைப் பார்த்த மகிழ்ச்சியில் அவனை வாரி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு கதை சொல்ல ஆரம்பித்தாள் பாட்டி.
``கதை இதோட முடியல. அடுத்தவாரம் வா, மீதிக்கதைய சொல்றேன்!'' என்றாள் பாட்டி. கதை கேட்ட மகிழ்ச்சியில் சரியென்று தலையாட்டிவிட்டு தனது தந்தையோடு வெளியேறினான் இளமதியன். ``ஒரு குட்டி கதைய அருமையா சொல்லி முடிச்சுட்டு, பேரன்கிட்ட `கதை முடியல, அடுத்த வாரம் வா'ன்னு பொய் சொன்னீங்களே ஏன்?'' அந்தப் பாட்டியுடன் தங்கியிருந்த விசாலாட்சி கேட்டாள். ``அப்படியாவது என் மகனும் பேரனும் என்ன பார்க்க வர்றதுக்கு மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமில்லையா?'' என்றபோது, விடைபெற முடியாமல் துளிர்த்திருந்த ஒரு துளி கண்ணீரும் பொசுக்கென்று வெளியேறியது

அக்னி
29-08-2008, 02:07 AM
பாசத்தைக் காட்டவும், கொஞ்சவும் கூடச்,
சதி செய்ய வேண்டிய நிலையில் முதியவர்கள்...

ஆக்கிய நாம், நாளை ஆக்கப்படலாம்...

வெட்கிக்க வேண்டிய, உணர வேண்டிய, திருந்த வேண்டிய அவசிய நிலை...

சமுதாயத்தை ”நறுக்” என்று குட்டும் கதை...

பாராட்டுக்கள் ஐ பா ரா அவர்களே...

அமரன்
29-08-2008, 07:32 AM
கடுகுக் கதை. கணத்தில் கன்னத்தில் கோடிடாவிட்டாலும் கண்ணைக் கசக்கவைத்து விட்டீர்கள். இதே கதையை அப்பனுக்கும் முந்திச் சொல்லி இருப்பார்கள். கதை முடிந்தும் தொடரும் அவலம் அவருக்கு தெரிந்திருக்கும்.

பாராட்டுகள் ஐ.ரா.

இளசு
30-08-2008, 07:33 AM
உறவுகள் தொடர்கதை!

தொடர உதவும் உபாயங்கள் -அழகானவை, ரசிக்கத்தக்கவை, நெகிழவைப்பவை!

பாராட்டுகள் பால்ராசய்யா அவர்களே!

poornima
30-08-2008, 07:49 AM
தொடர வேண்டும் என்பதற்காகவே தொடர்கிறாள் பாட்டி
முற்றிய வயதில்..

நாளைய என் தலைமுறைகள் இழக்கும் சுகங்களில் ஒன்று
பாட்டியும் - பாட்டி சொல்லும் கதைகளும்..

பாராட்டுகள் ஐ.பா.ராசையா