View Full Version : இது என்ன உறவோ?!
ஷீ-நிசி
22-08-2008, 03:25 PM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/IthuEnnaUravo.jpg
இரத்த சொந்தமுமில்லை!
சொந்த இரத்தமுமில்லை!
இது என்ன உறவோ?!
இதயத்தில் வலிகூடி –அழும்
இமைகளில் வழிந்தோடி -விழும்;
கண்ணீர்துளிகளை,
துடைத்திடும் நேரங்களில்….
உன்னில் அன்னையை உணர்கிறேன்!!
தேவைகளின் இறுக்கத்திலே -ஒரு
தீவைப் போல இருக்கையிலே,
இன்னலென உணர்ந்த கணமே -எனக்கு
மின்னலென உதவின மனமே!
உன்னில் தந்தையை உணர்கிறேன்!!
உனக்கு பிடிக்காதவர்களோடு
நான் பேச நேர்ந்தால்,
உனக்கு பிடித்தவர்களோடு
நான் பேசிக்கொண்டேயிருந்தால்….
உனக்குள் எழும் கோபவேளைகளில்;
உன்னில் காதலை உணர்கிறேன்!!
இது என்ன உறவோ?!
இதன் பெயர்தான் நட்போ!!
ஓவியன்
22-08-2008, 05:17 PM
காதலைப் பேசுவுதிலும் நட்பைப் பேசுவதில் எனக்கும் அலாதி பிரியம்...!!
இந்த நட்பு சிலவேளை 'இது என்ன உறவோ..??' எனத் தடுமாற வைத்து விடும் தான்..!!
நட்பிலே இருக்கும் உள்ளங்களையல்ல, மாறாக அந்த நட்பை அடிக்கடி பார்க்க நேரும் உள்ளங்களை..!!
ஆனால், உண்மையான நட்பு என்றென்றும் காலத்தால் வாழ்ந்து நிற்கும்..!!
பாராட்டுக்கள் ஷீ..!!
புரிந்து கொள்ளப்படாத
நாள்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தாமாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன் புன்னகை
-அறிவுமதி
பூமகள்
22-08-2008, 06:10 PM
நட்பின் பெருமை.. சொல்ல வார்த்தைகள் இல்லை..
நட்பூக்களை இங்கு பதியம் செய்த ஷீக்கு முதல் வாழ்த்துகளும் பாராட்டுகளும்..!!
அம்மா, அப்பா மட்டுமல்ல எல்லா சொந்தங்களையும் ஓர் உருவமாக்கிப் பார்ப்பது நல் நட்பில் மட்டுமே சாத்தியம்..!!
*************************************************************
ந(ம்)ல் நட்பூ...
பூவாகி மலர்ந்து மணம் வீசும் காலம்....
வாழ்வின் எல்லைக் கோடு வரை நீளும்..!!
அவற்றின் சுவாசப் பைகளில்..
சில்லரைச் சிதறல்களாக.. நம் சிரிப்பொலிகளைப் பதிவாக்கி அவ்வப்போது குலுக்கிப் பார்க்கிறேன்..
சத்தமற்ற தனித்த பொழுதெல்லாம்..
நம் நட்பெனக்கு.. சத்தமெழுப்பி இசை பாடி மகிழ்விக்கிறது..
பல மைல்கள் தொலைவிருந்தாலும்..
பேசி மாதங்கள் பல கடந்திருந்தாலும்..
சில காலம் நிரம்பிய உன்னை
பல நேரம் தினமும் நினைத்திருப்பேன்..
மனதினுள் வேண்டிக் கொண்டே இருக்கிறேன்..
எனக்காக அல்ல உனக்காக..
நம் உரையாடல்கள்..
நான் பேச...
நீ பதிலுரைப்பது..
மௌன மன படங்களாகவே
என் கண் முன் விரிகிறது..
உன் பதிலை
நானே யூகிக்கிறேன்..
என் பதிலை
நீயும் யூகித்திருப்பாய் என்ற
நம்பிக்கையில்..
புரிதலின் எல்லை
நாம் வரைந்த
கோடுகளையும் கடந்து நிற்கிறது..
உலகின் எங்கிருந்தாலும்
எனக்கான நட்பு..
மகிழ்வில் உன்னோடு
ஆரவரிக்கும்..
துயரில் உன்னோடு
தோள் கொடுக்கும்..
கலங்காதே என் நட்பே...!!
(என் தோழிக்கு சமர்ப்பணம்...!!)
அமரன்
22-08-2008, 10:02 PM
எப்போதும் நான் சொல்வது.. இப்போது குசேலனும் சொல்லி இருக்காப்ல.. மாதா, பிதா, குரு, தெய்வம் வரிசையில் ஐந்தாவதாக நட்பையும் சேர்க்கலாம். இன்னும் ஒரு படி மேலே போய் அன்னை, தந்தை, ஆசான் மூன்றையும் தன்னகத்தே கொண்டது நட்பு என்பேன். அந்த நட்புக்காக ஒரு கவிதை..
என் சினேகந்தான்; எனக்கு மட்டுந்தான் வசனத்தை வாசித்த போது சுவாசத்தில் சுகந்தத்தை உணர்ந்தேன்.
வழக்கம் போலவே இதமான எதுகை, மோகன மோனை துள்ளும் சந்தம் எல்லாமே வசீகரிக்கின்றன..
அக்னி
22-08-2008, 11:30 PM
பருவம், பால்
வேறுபாடின்றி...
வயதெல்லை தாண்டிக்,
கூடியே வாழாமல்,
கூட வரும் நட்புக்கு இணை ஏது...
ஷீ-நிசியின் வரிகள் போன்று,
இரத்த சொந்தமோ, சொந்த இரத்தமோ அன்றி,
உள்ளத்தில் வியாபிக்கும் நட்பென்னும் பந்தம்,
ஒளிரட்டும் எல்லோரிடமும்...
பாராட்டுக்கள் காட்சிக் கவிஞரே...
ஷீ-நிசி
23-08-2008, 12:35 AM
நன்றி ஓவி
நன்றி பூ
நன்றி அமரா
நன்றி அக்னி
பூக்களே பூக்களின் அழகை பேசியதுபோல் இருக்கிறது...
என் நட்பூக்களே இந்நட்பின் அழகை பேசியது!
நறுக்கிய வரிகள்.. பொறுக்கிய வார்த்தைகள் இறுக்கிய மொழிக்கட்டு தருக்கிய கவிதை..
நட்புக்கு ஊடான இடைவெளியைத் துளைத்து எழும் உணர்வுகளுக்கு வார்த்தைகளால் வண்ணமிட்டிருக்கிறீர்கள்..
காதல் என்றால் இரு உணர்வுகளின் பிணைப்புதான். அது நட்பிலும் சாத்தியப்படும்.
அன்புடன்
தென்றல்
poornima
23-08-2008, 07:00 AM
உங்கள் கவிதையும் அந்த பின்னணிப் பட சூழலும் பள்ளி நாட்களை நினைவுப் படுத்துகின்றன..
எளிமையான வரிகளில் நட்பின் அருமையை வலிமையாய் உணர்த்தியிருக்கிறீர்கள்..
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே - முஸ்தஃபா முஸ்தஃபா - காதல் தேச வாலியின் வரிகள் நினைவாடலில்
ஏனையவை விதிக்கப்பட்ட உறவு!
காதல், நட்பு மட்டுமே விதிவிலக்கு!
காதலில் ஜீன்கள் பெருக்கும் சுயநலக் கணக்குண்டு..
நட்பில் நல்லதைப் பெருக்கும் பிறர்நலம் மட்டுமே!
மனிதமிருகம் மேலெழும்பும் உன்னதக் களம் நட்பு!
அழகாய் எதையும் சொல்லும் ஷீநிசிக்கு வாழ்த்து!
leomohan
23-08-2008, 08:33 AM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/IthuEnnaUravo.jpg
இரத்த சொந்தமுமில்லை!
சொந்த இரத்தமுமில்லை!
இது என்ன உறவோ?!
அற்புதமான வரிகள் ஷீநிசி. அருமையான கவிதை. வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் கவிதையை படிக்கிறேன். வாழ்த்துகள்
வசீகரன்
23-08-2008, 09:29 AM
மிக அமைதியான மனநிலைக்கு ஆட்படுத்தும்
ஒரு அழகிய படத்துடன்..
மிக அமைதியான எளிமையான வரிகளில்..
நட்பின் கரம் பற்றி நடக்கும் ஒரு கவிதை.,..
ரொம்பவே சிலாகித்தேன் நிஷி அவர்களே..
நட்பு என்பது மருண்ட வானில் தோன்றும் அழகிய
வானவில் போன்றது...! உங்கள் வரிகளில்
அந்த அழகு தெரிந்தது..!
நாகரா
23-08-2008, 11:45 AM
துன்பம் துடைத்திடும் தாயன்பாய்
இன்னல் நீக்கி உதவிடும் தந்தையாற்றலாய்
நெஞ்சம் நெகிழ வைக்கும் காதலுணர்வாய்
நற்றமிழில் நட்பைப் பாடும் உம் கவிதை அருமை!
வாழ்த்துக்கள் ஷீ-நிசி
ஷீ-நிசி
23-08-2008, 02:05 PM
நன்றி தென்றல்
நன்றி பூர்ணிமா,
நன்றி இளசு ஜி.......
நன்றி மோகன் ஜி (எங்க ஆளையே காணல :) )
நன்றி வசீகரன்,
நன்றி நாகரா
kampan
23-08-2008, 02:17 PM
அழகான கவிதை
நட்பிலே
அன்னையின் அரவணைப்பு
தந்தையின் ஆதரவு
காதலியின் அன்பு
இருப்பதை உணர்த்தியது
வாழ்த்துக்கள் சிறீ
ஷீ-நிசி
23-08-2008, 02:18 PM
நன்றி கம்பன்!