PDA

View Full Version : மீனாட்சியம்மாள்



தீபா
04-08-2008, 02:41 PM
பின்னிரவில் அழுத பெருமழை விடியலை பிறந்ததும் கண்ணீர் அறற்றுவதை நிறுத்திக் கொண்டது. வெளியே எழுந்த மண் வாசனையை சுவைத்தபடி வாசலில் அப்பியிருந்த சேற்றை விளக்குமாறால் துடைத்துக் கொண்டிருந்தாள் மீனாட்சியம்மாள். ஓட்டு வீடு என்றாலும் அங்கங்கே ஒழுகிக் கொண்டு இருக்கும். இரவில் மழை பெய்தால் தூங்கமுடியாத அளவுக்கு வீட்டினுள் மழைநீர் தேங்கி நிற்கும்; அவள் மனதில் தேங்கி நிற்கும் பாசத்தைப் போல.

மீனாட்சியம்மாளுக்கு அறுபத்தி நான்கு வயதாகிறது. மெலிந்த தேகம். தொங்கிக் கொண்டிருக்கும் சதைகள். மழுங்கிய பார்வை. அக்கிழவியை வேறெப்படியும் வர்ணிக்க எழுத்து வாராது. கணவனின் இறப்புக்குப் பிற்பாடு தனியாகவே வாழும் இவளுக்கு நான்கு ஆண் பிள்ளைகள். ஒவ்வொருவரையும் படிக்க வைத்து ஆளாக்கி மீனாட்சியம்மாள் பட்ட பாடு வேறு யாருக்கும் வந்திருக்காது. மீனாட்சியின் கணவர் மொடா குடிகாரன். இருந்த போதும் சரி, இறந்த பிறகும் சரி, குடும்பத்திற்கு ஒன்றும் அவ்வளவு நஷ்டம் இல்லை என்றே சொல்லிவிடலாம்.

முதல் மகன் ராமுகுமார் பிரபல வக்கீல். கணவன் மானத்தை அடமானம் வைக்க, மீனாட்சியம்மாளோ வீட்டை அடமானம் வைத்தாள். ராமு நன்றாக படித்து வரவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவளுக்கு மேலோங்கியிருந்தது. இரண்டாம் மகன் பாலுவோ படிக்காமல் திரிந்தவன் என்றாலும் துணிக்கடை வைக்கும் அளவுக்கு உயர்த்தி விட்டாள் மீனாட்சி. மூன்றாவது மகன் சுந்தரமும் நான்காம் மகன் பாலனும் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களாக வெளிநாடு பறந்துவிட்டார்கள்.. ஆக மொத்தம் அனைவருமே நல்ல நிலைமையில்தான் இருக்கிறார்கள்.... மீனாட்சியம்மாளைத் தவிர,

ராமுவுக்குத் திருமணம் முடிந்ததுமே அவனோடு உண்டான பாசம் அறுந்துவிட்டது எனலாம். ராமு விருப்பப்பட்ட வாழ்வை அவனாகவே தேர்ந்தெடுக்க வழிகோலிய மீனாட்சியம்மாளுக்கு, தக்க முறையில் நன்றிக்கடனாக ராமு திருப்பிக் கொடுத்தான். என்றாவது ஒருநாள் வீட்டுக்கு வரும் தன் அம்மாவை, தன் மனைவியை விட்டே விரட்டி விடுவான். அவ்வளவு பாசம் அவனுக்கு.. மீனாட்சியம்மாள் எத்தனை முறை உதைபட்டாலும் மகனைப் பார்க்கவேண்டும் என்ற பாசத்தில் வந்துவிடுவாள்.

இரண்டாம் மகன் பாலு பெரும்பாலும் வீட்டுக்கு வருவதே இல்லை. அதனால் நேரே துணிக்கடைக்குத்தான் செல்லுவாள். ஆனால் அவளுக்கு வரவேற்பு வேறுவிதமாக இருக்கும். அனைவர் மத்தியிலும் ஏதோ ஒரு பிச்சைக்காரியைப் போலத் திட்டுவான்.. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு போவாள்.. மற்ற இருவரைப் பற்றி அடிக்கடி கவலைப் பட்டுக் கொண்டே இருப்பாள். வெளிநாடு சென்றவர்கள் என்ன ஆனார்களோ என்று அனுதினமும் பதறிக் கொண்டிருப்பாள்.

தினமும் ஏதாவது ஒரு அலுவலகத்திற்குச் சென்று கூட்டிப் பெருக்கி வாரம் நூறு நூற்றைம்பது வாங்குவாள். தன் செலவு போக மீதம் வைத்து அதில் ஏதாவது துணிமணி வாங்கி பேரப்பிள்ளைகளுக்குக் கொண்டு சேர்ப்பது கிழவியின் வழக்கம்.

தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்னர்.

கையில் இருந்த நானூறு ரூபாய்க்கு ராமுவின் மகனுக்கும் பாலுவின் மகன் மற்றும் மகளுக்கும் இரண்டு பாவாடை கவுன்களும், ஒரு சட்டையும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள். கையில் சிறு தூக்கு குண்டாவில் ஆசையாக செய்த ரவா லட்டும் இருந்தது. ராமுவின் வீட்டில் பாலுவும் இருந்தது இரட்டை சந்தோசம் அவளுக்கு. நேரே உள்ளே சென்றவளிடம் வேண்டா வெறுப்பாக துணிமணிகளையும் லட்டு போசியையும் வாங்கி வைத்துக் கொண்டார்கள் மருமகள்கள். அந்த வேண்டா வெறுப்புத்தனம் நன்றாகவே தெரிந்துகொண்டாள் கிழவி. எல்லாரும் ஒருவித பரபரப்பில் இருந்தார்கள். தீபாவளிக்கு ஏதோ பெயர் நுழையமுடியாத ஊருக்குச் செல்லுவதாகத் தெரிந்துகொண்டாள்.. மகன், பேரன்களின் சந்தோசமே அவளுக்கு முக்கியமாகக் இருந்தது.

ராமு, நேராக அம்மாவிடம் வந்தான். ஊருக்குச் செல்லுகிறோம், நீ வீட்டுக்குப் போய்விடு என்று அழுத்தமாகக் கூறினான். மீனாட்சியம்மாவுக்கு சற்று ஏமாற்றம்தான். எப்படியோ சந்தோசமாக இருந்தால் சரி என்று வந்த சில மணித்துளிகளிலேயே கிளம்பிவிட்டாள்..

வாசலில் ராமுவின் மகன் விக்ரம் மோட்டார்வண்டியில் நுழைந்தான். கிழவியைக் கண்டதும் வண்டியை நிறுத்தினான். மீனாட்சியம்மாள் நேரே அவனிடம் சென்று, " ஒரு அம்பது ரூவா இருந்தா கொடுடா.. " என்றாள்.

ஐம்பது லட்சத்திற்கும் பெருமான சொத்துக்களை உருவாக்கித் தந்தவளுக்கு ஐநூறாகவே கொடுத்து வண்டியை முறுக்கினான் விக்ரம்.
கண்ணீர் துளிக்க தெருவில் நடக்கலானாள் மீனாட்சியம்மாள்.

அன்புடன்
தென்றல்

mukilan
04-08-2008, 04:38 PM
சுயநலம் பாராது பிள்ளைகளின் நலனுக்காக உழைத்த மீனாட்சியம்மாள் தன்னை வருத்தி உருக்கிக்கொண்டு வெளிச்சம் பரப்பும் மெழுகுவர்த்தியைப் போல பிரகாசமாகத் தெரிகிறார்.

வர்ணனைகள், பாத்திரங்களையும், சூழ்நிலைகளையும் கண்முன் காண்பிப்பதில் வெற்றி பெற்றிருக்கின்றன. தாய்ப்பாசத்தையும், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர் படும் பாட்டையும் சாமர்த்தியமாக வெளியிட்டிருக்கிறீர்கள். பாரட்டுக்கள் தென்றல்.

முதல் முயற்சி என்பதாலோ என்னவோ முடிவு சற்று சுவை குறைவாகத் தோன்றுகிறது. இவ்வளவும் கொடுத்த அந்தப் பாசக்காரக் கிழவி பேரனிடமா ஐம்பது ரூபாய்க்கு கையேந்தவேண்டும். அதைவிட அவளிடம் இருந்த ஐந்து ரூபாயையேனும் அந்தப் பேரனுக்கு கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்தப் பேரன் மனமுவந்து(மருமகள்கள் போல் வேண்டாவெறுப்பாக இல்லாமல்) அதை ஏற்றிருந்தால் மீனாட்சியம்மாள் மட்டுமல்ல நானும் மகிழ்ந்திருப்பேன்.
உங்களின் நடைக்கும் வர்ணனைகளுக்கும் என் பாராட்டுக்கள்.

இளசு
04-08-2008, 09:56 PM
அனைவரும் உள்நுழைந்து ஸ்பரிசிக்கக்கூடிய நல்ல கரு.. நம்மைச் சுற்றியுள்ளவற்றில் கதைக்களன் அமைத்தமைக்குப் பாராட்டுகள் தென்றல்..

சொன்ன விதத்தில் கொஞ்சம் அவசரம் தெரிகிறது.. கதைமாந்தர் பற்றிய பிம்பம் இன்னும் அழுத்தமாய்ப் பதிய வேண்டும் - எம் மனதில்..

முடிவை கொஞ்சம் இன்னும் கூராய்ச் செதுக்கியிருக்கலாம் எனத் தோன்றுகிறது...

பாராட்டுகள் கதாசிரியர் தென்றலுக்கு..
அடுத்தடுத்து இன்னும் சிறுகதைகள் எழுத என் ஊக்கம்.. மிளிர்வு தன்னால் கூடும். வாழ்த்துகள்..

பென்ஸ்
05-08-2008, 01:02 AM
தென்றல்....

மிக மிக அருமையான கதை.... சில வரிகளில் சோகத்தை வடித்து கொடுத்திருக்கிறீர்கள்...

பொதுவாக கதை எழுதும் போது ஒரு கரு, அதை விளக்க காட்சியமைப்புகள், காட்சியமைப்புகளை நயமாக்க வார்த்தைவிளையாட்டுகள்.. கடைசியாக கதையின் முடிவு....
பொதுவாகவே பாஸிடிவானவோ அல்லது சோகமான கதையை வெற்றிபெற செய்யும் முடிவுகளை எழுத்தாலர்கள் கையாளுவார்கள்... அது கதைக்கும் வெற்றி, வாசிப்பவர்களுக்கும் சுகம்...
முடிவை எடுக்கும் பொறுப்பை வாசகர்களிடம் கொடுக்கும் போது.. பலரும் அதை விரும்புவதில்லை....

ஆனால் யதார்த்தம் கதையில்லையே...
இந்த கதை யதார்த்தமாய்....

எனக்கு இந்த கதை பிடித்திருந்தாலும், இது யவருக்கும் நடக்க கூடாது என்ற எண்ணம் என் மனதில் இருப்பதால்... ரசிக்க முடியவில்லை.

பாராட்டுகள்...

விகடன்
05-08-2008, 05:12 AM
கதையின் கரு அருமை.
நீங்கள் சொல்லவந்தது சரிதான் தென்றல். ஒருவர் தனது சக்திக்குற்பட்டுத்தானே கையுறையோ, அல்லது சன்மானமோ வழங்கமுடியும். அது பெறுபவர் சார்பில் துச்சமான பொருளாகவோ, தரம் குறைந்த பொருளாகவோ இருக்கலாம். ஆனால் அதை கொடுத்தவரின் மனதை புண்படும்படியாக ஏதும் செய்யவோ சொல்லவோ கூடாது.

இங்கும் கிழவியை பார்த்தால் அவள் தன்னுடைய ஜீவனோபாயத்திற்கே ஏதும் வைக்காமல் அனைத்திற்கும் துணிமணிகள் வாங்கிவிட்டாள். ஆனால், அவளின் அந்த பொருட்களை மட்டுமின்றி பாசத்தை, மனதையும் கூடவே புறக்கணிக்கப்பட்டு விடுகிறது.

கிழவியின் ஸ்தானத்திலிருந்து பார்த்தால் மனதை நெருடும் கதை.
பாராட்டுக்கள் தென்றல்.

meera
05-08-2008, 06:19 AM
நல்ல கதை கண்ணில் நீர் வரவைக்கும் கதை. அனைவருக்கும் இந்த முதுமை சொந்தம் என்பதை ஏனோ பல சொந்தங்கள் மறந்துவிடுகின்றன.

பாராட்டுக்கள் தென்றல்.

சிவா.ஜி
05-08-2008, 06:22 AM
நடை அழகு, கரு பேரழகு, காட்சிப்படுத்தலும் அருமை. முடிவு மட்டும், முகிலனும், இளசுவும் சொன்னதைப்போல அவசரமாய் முடிந்திருக்கிறது. மேலும் மேலும் வளர வாழ்த்துகள் தென்றல்.

தீபா
05-08-2008, 07:51 AM
சுயநலம் பாராது பிள்ளைகளின் நலனுக்காக உழைத்த மீனாட்சியம்மாள் தன்னை வருத்தி உருக்கிக்கொண்டு வெளிச்சம் பரப்பும் மெழுகுவர்த்தியைப் போல பிரகாசமாகத் தெரிகிறார்.

வர்ணனைகள், பாத்திரங்களையும், சூழ்நிலைகளையும் கண்முன் காண்பிப்பதில் வெற்றி பெற்றிருக்கின்றன. தாய்ப்பாசத்தையும், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர் படும் பாட்டையும் சாமர்த்தியமாக வெளியிட்டிருக்கிறீர்கள். பாரட்டுக்கள் தென்றல்.

முதல் முயற்சி என்பதாலோ என்னவோ முடிவு சற்று சுவை குறைவாகத் தோன்றுகிறது. இவ்வளவும் கொடுத்த அந்தப் பாசக்காரக் கிழவி பேரனிடமா ஐம்பது ரூபாய்க்கு கையேந்தவேண்டும். அதைவிட அவளிடம் இருந்த ஐந்து ரூபாயையேனும் அந்தப் பேரனுக்கு கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்தப் பேரன் மனமுவந்து(மருமகள்கள் போல் வேண்டாவெறுப்பாக இல்லாமல்) அதை ஏற்றிருந்தால் மீனாட்சியம்மாள் மட்டுமல்ல நானும் மகிழ்ந்திருப்பேன்.
உங்களின் நடைக்கும் வர்ணனைகளுக்கும் என் பாராட்டுக்கள்.

ஆஹா ஆஹா!!!! என்னை உயர்த்தும் உங்களுக்கு என் வணக்கத்திற்குரிய பாராட்டுக்கள்.....

இது உண்மைக் கதை.. அதனால் முடிவு மாற்றம் செய்யவில்லை.... இருப்பினும் உங்கள் கருத்தை நினைத்து பெருமைப்படுகீறேன்... இப்படியும் முடித்திருக்கலாமோ என்று...

நன்றி திரு.முகிலன்...

தீபா
05-08-2008, 07:57 AM
அனைவரும் உள்நுழைந்து ஸ்பரிசிக்கக்கூடிய நல்ல கரு.. நம்மைச் சுற்றியுள்ளவற்றில் கதைக்களன் அமைத்தமைக்குப் பாராட்டுகள் தென்றல்..

சொன்ன விதத்தில் கொஞ்சம் அவசரம் தெரிகிறது.. கதைமாந்தர் பற்றிய பிம்பம் இன்னும் அழுத்தமாய்ப் பதிய வேண்டும் - எம் மனதில்..

முடிவை கொஞ்சம் இன்னும் கூராய்ச் செதுக்கியிருக்கலாம் எனத் தோன்றுகிறது...

பாராட்டுகள் கதாசிரியர் தென்றலுக்கு..
அடுத்தடுத்து இன்னும் சிறுகதைகள் எழுத என் ஊக்கம்.. மிளிர்வு தன்னால் கூடும். வாழ்த்துகள்..

அடுத்தடுத்த கதைகளில் குறைகளை நிவர்த்தி செய்ய இருக்கிறேன்.. என்னை செதுக்கியமைக்கு நன்றிகள் திரு.இளசு...


தென்றல்....

மிக மிக அருமையான கதை.... சில வரிகளில் சோகத்தை வடித்து கொடுத்திருக்கிறீர்கள்...

பொதுவாக கதை எழுதும் போது ஒரு கரு, அதை விளக்க காட்சியமைப்புகள், காட்சியமைப்புகளை நயமாக்க வார்த்தைவிளையாட்டுகள்.. கடைசியாக கதையின் முடிவு....
பொதுவாகவே பாஸிடிவானவோ அல்லது சோகமான கதையை வெற்றிபெற செய்யும் முடிவுகளை எழுத்தாலர்கள் கையாளுவார்கள்... அது கதைக்கும் வெற்றி, வாசிப்பவர்களுக்கும் சுகம்...
முடிவை எடுக்கும் பொறுப்பை வாசகர்களிடம் கொடுக்கும் போது.. பலரும் அதை விரும்புவதில்லை....

ஆனால் யதார்த்தம் கதையில்லையே...
இந்த கதை யதார்த்தமாய்....

எனக்கு இந்த கதை பிடித்திருந்தாலும், இது யவருக்கும் நடக்க கூடாது என்ற எண்ணம் என் மனதில் இருப்பதால்... ரசிக்க முடியவில்லை.

பாராட்டுகள்...

மிக்க நன்றி திரு.பென்ஸ். உங்களுக்காகவே உள்ளே வந்தேன். உங்கள் பின்னூட்டம் இங்கே பதித்தது குறித்து நிரம்ப மகிழ்வு....

தீபா
05-08-2008, 08:00 AM
கதையின் கரு அருமை.
நீங்கள் சொல்லவந்தது சரிதான் தென்றல். ஒருவர் தனது சக்திக்குற்பட்டுத்தானே கையுறையோ, அல்லது சன்மானமோ வழங்கமுடியும். அது பெறுபவர் சார்பில் துச்சமான பொருளாகவோ, தரம் குறைந்த பொருளாகவோ இருக்கலாம். ஆனால் அதை கொடுத்தவரின் மனதை புண்படும்படியாக ஏதும் செய்யவோ சொல்லவோ கூடாது.

இங்கும் கிழவியை பார்த்தால் அவள் தன்னுடைய ஜீவனோபாயத்திற்கே ஏதும் வைக்காமல் அனைத்திற்கும் துணிமணிகள் வாங்கிவிட்டாள். ஆனால், அவளின் அந்த பொருட்களை மட்டுமின்றி பாசத்தை, மனதையும் கூடவே புறக்கணிக்கப்பட்டு விடுகிறது.

கிழவியின் ஸ்தானத்திலிருந்து பார்த்தால் மனதை நெருடும் கதை.
பாராட்டுக்கள் தென்றல்.

மிக்க நன்றி திரு.விராடன். அக்கிழவியை நான் கண்ட போது நெஞ்சம் அடைத்தது....


நல்ல கதை கண்ணில் நீர் வரவைக்கும் கதை. அனைவருக்கும் இந்த முதுமை சொந்தம் என்பதை ஏனோ பல சொந்தங்கள் மறந்துவிடுகின்றன.

பாராட்டுக்கள் தென்றல்.

நன்றி சகோதரி..


நடை அழகு, கரு பேரழகு, காட்சிப்படுத்தலும் அருமை. முடிவு மட்டும், முகிலனும், இளசுவும் சொன்னதைப்போல அவசரமாய் முடிந்திருக்கிறது. மேலும் மேலும் வளர வாழ்த்துகள் தென்றல்.

நன்றி திரு.சிவா. அடுத்தடுத்த கதைகளில் செதுக்க முயல்கிறேன்... நன்றி...

பூமகள்
05-08-2008, 08:22 AM
கதையில் எதார்த்தம் அதிகமானாய் இருக்கிறது..
உண்மை என்று சொன்ன பின் மனம் பதைக்கிறது..!!

வாழ்க்கையில் ஏற்றியவர்களை மறந்து எதைத் தேடி ஓடுகிறார்கள்?
அவர்களும் ஒரு நாள் மகவுகளால் மறக்கப்படும் நிலை வரும்..!!

இவ்வகை துயர் இல்லாமல் போகட்டுமென விரும்புகிறது உள்ளம்..!!

கதை பற்றிய என் விமர்சனம் சான்றோர்கள் கூறியுள்ளதால் அவர்களை வழிமொழிகிறேன்..!!

நல்ல கரு... நல்ல முயற்சிக்கு பாராட்டுகள் தென்றல்.. :)

தீபா
05-08-2008, 08:26 AM
கதையில் எதார்த்தம் அதிகமானாய் இருக்கிறது..
உண்மை என்று சொன்ன பின் மனம் பதைக்கிறது..!!

வாழ்க்கையில் ஏற்றியவர்களை மறந்து எதைத் தேடி ஓடுகிறார்கள்?
அவர்களும் ஒரு நாள் மகவுகளால் மறக்கப்படும் நிலை வரும்..!!

இவ்வகை துயர் இல்லாமல் போகட்டுமென விரும்புகிறது உள்ளம்..!!

கதை பற்றிய என் விமர்சனம் சான்றோர்கள் கூறியுள்ளதால் அவர்களை வழிமொழிகிறேன்..!!

நல்ல கரு... நல்ல முயற்சிக்கு பாராட்டுகள் தென்றல்.. :)


முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

நடக்கலாம். எதுவும்...

பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி.