PDA

View Full Version : கவிதை



நாகரா
15-07-2008, 05:14 AM
கருத்துக்கும்
சொல்லுக்கும்
இடையே
கீற்றப்படும்
நேர்க்கோடு

சொல் உடம்பெடுத்த
கருத்து உயிர்

உணர்வு வானில்
எழுத்து மின்னல்

வயிற்றுக்கு மேல்
மூளைக்கு ஏறிய
மனிதன்
இருதயத்தில் இறங்கிய
வரலாற்றுப் பயணம்

பகுத்தறிவுக்கும்
உள்ளுணர்வுக்கும்
இடையே
நடந்த போராட்டத்தில்
தெறித்த குருதித் துளிகள்

காலத்தை வெல்லப்
புறப்பட்ட
எழுத்து வீரர்களின்
அணிவகுப்பு

மனிதன்
தன்னைச் செதுக்கிய போது
சிதறிய
உடலுயிர்த் துகள்கள்

வயிற்றை மறந்த மனிதனின்
அறிவுப் பசி பரிமாறிய
சொற்சோறு

மனக் குரங்கின்
மனித பரிணாமம்

சொற் காதலியைப்
புணரும்
கருத்துக் காதலன்

கருத்தையும்
சொல்லையும்
அளக்கப் புறப்பட்ட
குறளடிகள்

மனிதனின் நெற்றிக் கண்

ஆறாவது அறிவின்
வரிவடிவம்

அழகின் தாய்மொழி

சுய தேடலின் சுவடு

கண்ணீர்
புன்னகை
கோபம்
காமம்
காதல்
என்ற வண்ணங்களால்
எழுதும் சித்திரம்

எண்ணங்களின்
சுருக்கெழுத்து

காயங்கள் தாமே
தயாரிக்கும் மருந்து

கண்ணீர்த் துளிகளில்
கருக் கொள்ளும்
கனல் பொறிகள்

எண்ணங்களின் இலையுதிர்காலம்
எழுத்து வசந்தமாகும்
அதிசய ஏற்பாடு

செவிகள்
விழிகள்
நாசி
நாவு
விரல்கள்
இவற்றை விதைத்து
கண்ணீர்
வியர்வை
குருதி
இவற்றைப் பாய்ச்சி
ஞானச் சூரிய ஒளியில்
வளரும் பயிர்

விரல்களின் வழியே
உயிரின் கசிவு

செவிகளின் வழியே
உயிரின் மீட்பு

விரல் துளைகளுள்ள
மெய்ப் புல்லாங்குழலில்
உயிரின் மூச்சுகள்
வாசிக்கும் மானுட கீதம்

உணர்வுகளின் போதையில்
எண்ணங்களின் உளறல்

பாலகன்
15-07-2008, 05:46 AM
சொல் உடம்பெடுத்த
கருத்து உயிர்


கவிதைக்கு அற்புதமான ஆடைகளை அணிவித்த தங்களது இந்த கவிதை அருமையிலும் அருமை

அதில் எனக்கு பிடித்த வரிகள் மேலே உள்ளது...........

சொல் உடம்பெடுத்த
கருத்து உயிர்
நல்மாந்தர் தேடி
அலைந்ததாம் அதனை
புரிந்துகொள்ள...............

அன்புடன்
அழகன்

ஓவியன்
15-07-2008, 05:47 AM
ஆஹா, கவிதைதான் எத்துணை வலிமையான ஆயுதம்...

அந்த வலிமையான ஆயுதம் தாங்கும் ஒவ்வொருவரும் சமூகத்தின் போராளிகளே....

நல்ல வரிகளுக்கு நன்றியும் பாராட்டுக்களும் அண்ணா..!!
:)
தாமரை அண்ணாவின், இந்தக்கவிதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6077)யையும் கொஞ்சம் சுட்டிப் பாருங்கள்...

நாகரா
15-07-2008, 05:48 AM
உம் உற்சாக வரிகளுக்கு நன்றி அழகரே!

நாகரா
15-07-2008, 05:53 AM
உம் பாராட்டுகளுக்கும், தாமரையாரின் "கவிதை"ச் சுட்டிக்கும் நன்றி ஓவியன்.

இளசு
15-07-2008, 08:52 PM
கவிதை என்றால் என்ன?


நண்பன், ராம்பால், கவிதா தொடங்கி
ஆதவன், ஷீநிசி, தாமரை வரை
பலர் மன்றில் அலசிய கரு..

இங்கே நாகரா பார்வையில்
நயாகராவாய் பாய்கிறது...


க.நா.சுப்ரமணியம் கவிதை பற்றி
கச்சிதமாய் இப்படிச் சொல்கிறார்:

கவிதை வேண்டுமானால்
சொற்களைக் கூராக்கு
இசையை ஒதுக்கிவிடு
உருவங்களை உயிராக்கு
சிந்தனைகளை நேராக்கு

உபயோகமற்ற பாத்திரங்களை
ஏற்றி வைக்கும் மச்சிருட்டாக
கவிதையை நினைக்காதே.'


கவிதை பற்றியே நல்ல கவிதை படைத்த
கவி நயாகரா நாகராவுக்கு வாழ்த்துகள்!

நாகரா
15-07-2008, 10:22 PM
உம் வாழ்த்துக்களுக்கு நன்றி இளசு