PDA

View Full Version : மௌனங்களின் நிழற்குடை- இசாக்



shibly591
03-07-2008, 07:59 AM
மௌனங்களின் நிழற்குடை
- இசாக்
காதலர்களின் வெண்கொற்றக்குடை
- கவிச்சித்தர் மு.மேத்தா

துபாய் நகரத்தில் துளிர்விட்டுத் தழைத்துக் கடல்கடந்த நாடுகளும் தன்னைக் கண் உயர்த்திக் காணவைத்திருக்கும் அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை - மூன்று காரியங்களை முனைப்புடன் செய்திருக்கிறது. ஒன்று - கவிஞர்களை நண்பர்களாக்கியிருக்கிறது. இன்னொன்று - நண்பர்களைக் கவிஞர்களாக்கியிருக்கிறது. மற்றொன்று - கவிஞர்களையும் நண்பர்களையும் சாதி மத பேதமற்ற, சமதர்மவேட்கையுள்ள சமுதாயச் சிந்தனைகளோடு சங்கமமாக்கியிருக்கிறது.


தலைவர் அப்துல் கதீம், செயலாளர் இசாக் இருவரும் பவளவிழாவில் ஆனந்த விகடனால் பாராட்டப்பட்டவர்கள். இருவருடைய கவிதைகளையும் 'முத்திரைக் கவிதைகள்' என்று வெளியிட்டு ஆனந்த விகடன் முத்தம் கொடுத்திருக்கிறது.


கவிஞர் பேரவையின் தலைவர் அப்துல் கதீம் - தண்ணீரைப் போல அனைவரையும் தழுவிக்கொள்பவர். கவிதையில் சொற்செருக்கு இருந்தாலும், வாழ்க்கையில் தற்செருக்கு சிறிதுமிலாத் தகைமையாளர். அதனால் தான் - பாட்டெழுதி நீட்டுகிற பாட்டாளிகளை எல்லாம் கவிஞர் பேரவையின் கூட்டாளிகளாக்கிக் குலவ வைத்திருக்கிறார். உரிமையோடு ஒவ்வொரு கவிஞரையும் உலவ வைத்திருக்கிறார். தமிழ்க் கவிஞர் பேரவையின் செயலாளர் - தம்பி இசாக்! எளிமையும் இனிமையும் இணைந்தவர். நட்பிலும் அன்பிலும் நனைந்தவர். இவர்களுடன் - பட்டணம் மணி, கவிமதி, தமிழன்பு, சாஜஹான், முத்துகுமரன் உள்ளிட்ட கவிஞர்கள் லியாக்கத் அலி, பாரத், முத்தமிழ்வளவன், ஹபீப் போன்ற கவிதை ஆர்வலர்கள் என்று இந்தக் கவிஞர் படையின் அணித்தலைவர் வரிசை நீள்கிறது... அமீரகத்தில், இவர்களால் தமிழ்க் கவிதை வாழ்கிறது.


தம்பி இசாக் - ஏற்கனவே தன் கவிதை நூல்களால் வாசகர்களின் இதயங்களில் வலம் வருபவர். தமிழுக்கு நலம் தருபவர். தற்போது தன் காதல் கவிதைத் தொகுதியினால் தமிழர்தம் கை விரல்களுக்கெல்லாம் கணையாழி சூட்டியிருக்கிறார்.


மௌனங்களின் நிழற்குடை - காதலர்களின் வெண்கொற்றக்குடை! 'இசாக்'கின் எழுதுகோல் நம் இதயத்தில் நடக்கும் நடைஉண்மைக் காதலர்களின் உள்ளம் உடுத்திக்கொள்ளும் உடை! இது - பகட்டான காதலை எதிர்த்து - எளிமையான காதல் இதயங்கள் முழங்கும் பறை முழக்கம்! உள்ளன்பு பூத்த உண்மைக் காதலின் உரை விளக்கம்!


இக்கவிதைத் தொகுதியில் - கிராமத்து தேவதை ஒருத்தி தன் கிரீடத்தோடு தரிசனம் காட்டுகிறாள். ஜன்னலைத் திறந்தால், கண்களைப் பறிக்கும் மின்னலாய் - எதிர்வீட்டில் ராஜ பரிபாலனம் செய்தபடி இசாக்கைப் பார்த்து இளநகை செய்கிறாள். வானத்திலிருந்து நட்சத்திரப் படிக்கட்டுகளில் பூமிக்கு இறங்கி வந்து, 'வரம்... வரம் வேண்டுமா? வரம்...' என்று நம் கவிஞரை வம்புக்கு இழுக்கிறாள்... 'கனவு மெய்ப்பட வேண்டும்' என்ற பாரதியின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவள் போல - கட்டிப்பிடித்து இசாக்கைக் காதலோடு அனைத்துக் கன்னத்தில் முத்தமிட்டுக் களிவெறியூட்டுகிறாள். தம்பி இசாக்கின் மீது, தவிர்க்கவே முடியாத பொறாமை நமக்குள் புறப்படுகிறது.


பாரிஜாதப் பூவின் பார்வை படுவதற்காக - ஆரம்ப நாட்களில், தம்பி இசாக் தமிழ்த்தவம் செய்திருப்பார் போலும் -

'கண்ணாமூச்சி
விளையாட்டு காட்டுகிறது
இந்த காதல்
உனக்குள் என்னையும்
எனக்குள் உன்னையும்
ஒளித்து வைத்துக்கொண்டு.'
'நவீன ஓவியத்தை போல
ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு பொருளை உணர்த்துகிறது
உன் புன்னகை.'
'சாலையின்
ஒரு பகுதியில் நீ
மறுபகுதியில் நான்
ஊர்திகளின் நெரிசலில் சிக்கி
பாவம்
இந்த காதல்.'

என்று - எல்லாக் காதல்களையும் போலவே புலம்பலோடுதான் ஆரம்பிக்கிறது இவரது காதலும். ஆனால் - அரும்பிய காதல் மொட்டாகிவிட்டதென்பதை -

'உன்
பொய்க் கோபம் பற்றி
எனக்குத் தெரியாதா..
கிள்ளியவனென்பதற்காக
மணம்
வீசவா மறுக்கும் மல்லிகை?'

என்ற காதலனின் கேள்வி காட்டிக் கொடுத்து விடுகிறது.


தூரதேசப் பயணத்தைப் பற்றித் தன் ஆசைகளின் அரசகுமாரியிடம் சொல்லிக்கொள்ளச் செல்கிறான் காதலன். அப்போது எதிர்பாராத இன்பப் பரிசொன்று காதலனுக்குக் கிடைக்கிறது. அது - கைமேல் கிடைத்த பரிசல்ல - கன்னத்தின் மேல் கிடைத்த பரிசு. மொட்டான காதல் மலராகிவிட்டது. ஆளரவமற்ற தனிமை - அந்த அன்புப் பரிசை அள்ளித்தந்து விட்டது. ஆனாலும் காதலன் பின்னர் கடிதத்தில் கேட்கிறான்:

'அமைதியாக பார்த்து கொண்டிருந்த
கிளி
பிறகெதாவது சொன்னதா.?'

இந்தக் கேள்வியில் - காதலன் சிறந்த கவிஞனாகி விடுகிறான்.


காதலி காதலை ஏற்றுக்கொள்ளும் வரைக்கும்தான் காதலன் பலவீனமானவனாய்க் காட்சியளிக்கிறான். காதலை ஏற்றுக் கொண்டபிறகோ - காதலி - பித்துப் பிடித்துப் பேதலித்துவிடுகிறாள்.

'ஏன்
இப்போதெல்லாம் கோபமாக பேசுவதில்லை
என் மீது
கோபமா?'

என்று அப்பாவித்தனமாகப் பேசுகிறாள் அந்தப் பேதை.

'புதிதாக எடுத்ததாக
புகைப்படமொன்றை அனுப்பினாய்
அதை
பார்த்து இரசிக்க
என்னை
எப்போது அனுப்பி வைப்பாய்!'

என்று உள்ளத்தை மறைக்கத் தெரியாமல் அவள் உளறத் தொடங்கிவிடுகிறாள்.

'எண்ணெய் தேசத்தில்
பணியாற்றுவதென்னவோ நீ
என்ன
கொடுமை
அணைக்க முடியா நெருப்பாய்
கொளுந்து விட்டு
எரிந்து கொண்டிருக்கிறேன் நான்..!
-
இதுதான்
எல்லை தாண்டிய
பயங்கரவாதமோ?'

என்று அந்த அபலை கேட்கும் கேள்வியை 'உண்மைதான்' என்று தலையசைத்து நாமும் ஒப்புக் கொள்கிறோம்.


காதல் - மனதை மென்மைப் படுத்துகிறது. மானுடத்தை மேன்மைப்படுத்துகிறது. அதனால்தான் காதலர் இருவரும் கருணையோடு சொல்கிறார்கள்:

'எல்லோருக்கும் ரசிப்புக்குரியதுதான்
புல்லாங்குழலொலி
நமக்கு மட்டும்
அதில்
மூங்கில் காடுகளின்
சோக கீதமாக கேட்கிறதே..'

இதுதான் கதலின் விந்தை! மனசுகளைப் பேசவைக்கும் மந்திரம்தான் காதல்! தம்பி இசாக்கின் காதலர்கள் ஈராக்கில் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்களோ?...


அணுகுண்டை வீசப் போகிறவனைக்கூட அரைநொடியாவது - தன் கடுஞ்செயலுக்காக கண்ணீர் வடிக்கச் செய்யும் அகவலிமை காதலுக்கு உண்டு. விலங்குகளை மனிதர்களாகவும் - மனிதர்களை மாமனிதர்களாய் உயர்த்தவும் -காதலால் முடியும்! அதனால்தான் கவிஞர்களெல்லாம் கசிந்துருகிக் கண்ணீர் மல்கிக் கரைந்து கரைந்து காதலைப் பாடுகிறார்கள்!


தம்பி இசாக் எழுதியுள்ள காதல் கவிதைகள் - நம் கண்ணெதிரே - சில ஓரங்க நாடகங்களை நடத்திக் காட்டுகின்றன. நம் உள்ளங்களைத் தம் வசம் கடத்திக் காட்டுகின்றன. மேடையாய் நம் இதயம் மிதக்கத் தொடங்குகிறது!


கற்பனைச் சொற்களால் இக்காதல் மாளிகை கட்டப்படவில்லை. ஒப்பனை நினைவுகளாலும் உருவாக்கப்படவில்லை. விழி வழி நுழைந்து இதயத்தைப் பிழிந்த மொழி இங்கே ஒளி வீசுகிறது. உள்ளங்களை உருக்கும் சொற்கள் கருக்கொள்கின்றன. தம்பி இசாக்கின் இந்த உயிர்ச் சித்திரங்களோடு நாமும் உலவி வரலாமா?


அன்புடன்
மு.மேத்தா

நன்றி-வார்ப்பு

shibly591
03-07-2008, 08:01 AM
மௌனங்களின் நிழற்குடை
- இசாக்
மழை திறந்த சன்னல்கள்
- பழநிபாரதி

காதல் நம் அம்மாக்களின் அம்மா.
சூரியனும் சந்திரனும் அவளது இரண்டு மார்பகங்கள்.
நம்மையெல்லாம் தூங்கவைக்க அவள் கட்டிவிட்டிருக்கிற ராட்சத தொட்டில்தான் இந்த பூமி.
காற்று அவள் தாலாட்டு.
அவள் நம்மையெல்லாம் மழையால் குளிப்பாட்டி, மலர்களால் தலைதுவட்டி, மரங்களைக் கிளுகிளுப்பைகளாய் ஆட்டி ரசிக்க வைக்கிறாள்; பசிக்க வைக்கிறாள்; ருசிக்க வைக்கிறாள்.

அவள் பாலூட்டிக் கொண்டே இருக்கிறாள்..
முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறாள்...
மூச்சு முட்டுகிறது என்று அவளிடமிருந்து நாம்தான் நம்மை ஒரு நிமிடம் விடுவித்துக்கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்; அவளுக்கு அது சலிப்பதே இல்லை.

காதலின் அந்தத் தாய்க்குணங்களையும் பால் மணக்கும் மொழியில் கவிதைளாக்கி இருக்கிறார் இசாக்.

"பிற்பகல் பொழுதில்
பெய்து கொண்டிருந்த மழையை
ரசிக்க
சன்னல் திறந்தேன்
நீயும் சன்னல் திறந்து நிற்கிறாய்
நான்
என்ன செய்ய
சொல்"

இந்த வரிகளில் காதல் அவர்களைக் கதவுகள் திறந்து அழைத்து வருகிறது. வெட்டவெளியில் அவர்களை மழையின் குழந்தைகளாக ஆக்குகிறது. மல்லிகை மணக்கும் மெல்லிய இருட்டில் மயக்குகிறது. ஒருவருக்கொருவர் மழையாகிற ஈர ரகசியத்தை அவர்களுக்குள் ஊற்றி விடுகிறது.

"எண்ணெய் தேசத்தில்
பணியாற்றுவதென்னவோ நீ
என்ன
கொடுமை
அணைக்க முடியா நெருப்பாய்
கொளுந்துவிட்டு
எரிந்துகொண்டிருக்கிறேன் நான்"

என்று தகிக்கிற இசாக்கின் காதலிதான் இந்தக் கவிதைகளில் என்னை அதிகம் கவர்ந்தவர். காதலி எப்போதும் கிசுகிசுத்துப் பேச வேண்டியதில்லை; உரக்கவும் பேசவேண்டும்.

இசாக்கின் காதலி வாழ்வில் காதலைப் பார்க்காமல் வாழ்வையே காதலாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

"அடேய்
உன்னை
பணம் பூக்கிற செடியாகவும்
என்னை
குழந்தை காய்க்கிற மரமாகவும்
சமைத்துக்கொண்டிருக்கிறது சமுதாயம்
ஆனால்
மனிதர்களாகவே
வாழத்தூண்டுகிறது காதல்"

இசாக்கின் காதலி, இசாக்கின் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; இசாக்குக்கும் தாயாகி அவரை நேர்ப்படுத்தி நிற்கிற அழகு அது. பாரதியின் கண்ணாம்மாவைப் போல கபடங்கள் அற்ற வெள்ளைக் காதலி போலும் அவர்.

"தனித்திருக்கிறாய் என்பதறிந்து
தொலைபேசியில்
அழைத்தேனென்கிறாயே
அடேய்
நீதான்
எப்போதும் என்னோடு இருக்கிறாயே"

என்று காதலை தனக்குள் வைத்து வாழும் பணிவும்

"அடேய்
அந்த இரவுகளில்
அவிழ்த்தெறிந்த கூச்சங்களெல்லாம்
நீ
இல்லாத இரவுகளில்
கேலியாக பார்க்கின்றன"

என்று பெண்மையின் தேவையை கேட்டு வாங்கும் துணிவும் அவருக்குள் சமமாக இருக்கின்றன.

இப்படி அனைத்திலுமான ஆண் பெண் சமத்துவப் பதிவுகள்தாம் இன்றைய காதல் கவிதைகளில் இசாக்கின் கவிதைகளைத் தனித்து அடையாளப்படுத்துகின்றன. இருவரும் சேர்ந்து சிரிப்பது எவ்வளவு சுகமோ, அப்படியே சேர்ந்து அழுவதும் சுகமென்பதை இந்தக் கவிதைகள் காதலர்களுக்கு உணர்த்தும்.

"தூர தேசத்துப் பயணம் பற்றி
சொல்ல வந்த
எனக்கு
எதிர்பாராத பரிசாக
இறுக அணைத்து
ஒரு ச்ச்ச் கொடுத்தாய்
எவருமில்லையென

அமைதியாக பார்த்து கொண்டிருந்த
கிளி
பிறகெதாவது சொன்னதா.?"

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் நமது ?முத்தொள்ளாயிர?த்தில் பார்த்த கிளி, அதே அழகோடு சங்ககாலத்தைத் தாண்டி இந்தக் காலத்திற்குள் வந்து இசாக்கின் கவிதையில் உட்கார்ந்திருக்கிறது.

நமது பண்பாட்டில்... மொழியில் இந்தத் தொடர்ச்சி ஓர் அழகு. இந்தக் கிளியின் கண்கள் நமக்குள் காதலை விதைக்கிறது. படபடக்கும் அதன் சிறகுகள் இதயத்துக்குள் வானத்தை விரிக்கிறது.

என்றென்றும் அன்புடன்
பழநிபாரதி

நன்றி-வார்ப்பு

மன்மதன்
03-07-2008, 08:55 AM
பகிர்தலுக்கு நன்றி ஷிப்லி..!


'ஏன்
இப்போதெல்லாம் கோபமாக பேசுவதில்லை
என் மீது
கோபமா?'

ஆதவா
03-07-2008, 12:37 PM
இசாக் என்பவர் இந்த மன்றத்தில் இருந்தவர் தானே!!?? (முத்துக்குமரன்-பிரியன்?) பழைய நண்பர்கள் தெரிந்தால் சொல்லவும்..

மன்மதன்
03-07-2008, 02:06 PM
இசாக் என்பவர் இந்த மன்றத்தில் இருந்தவர் தானே!!?? (முத்துக்குமரன்-பிரியன்?) பழைய நண்பர்கள் தெரிந்தால் சொல்லவும்..

ஆமாம் ...
என்னை தமிழ் மன்றத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவர்..
நல்ல படைப்பாளி..
சமூக சிந்தனையாளர்..
காதல் கவிதைகளிலும் முத்திரையை பதித்தவர்..
பழைய பதிவு(கவிதை)களை தேடி படிங்க ஆதவா ..:)

பாரதி
03-07-2008, 02:42 PM
நண்பர் இசாக்கின் அருமையான கவிதைகளை கண்ணுற்ற கவிஞர்களின் கருத்துக்கள் மிகமிக நன்று.

அன்பு இசாக்... உங்களின் கவிதைப்பயணம் இன்னும்... இன்னும்... என்றென்றும் பயணிக்கட்டும்.

அளவில்லா மகிழ்ச்சி தந்த பதிவிற்காக மிக்க நன்றி ஷிப்லி.

இளசு
03-07-2008, 04:48 PM
இங்கே பகிர்ந்து மகிழ்ச்சியை அளித்தமைக்கு நன்றி ஷிப்லி அவர்களே!

ஷாஜகான் ( நண்பன்), முத்துக்குமரன் (பிரியன்) - நூல் தொகுப்பில்
மன்றத்தை மனதார நினைவுகூர்ந்திருக்கிறார்கள்.

இளவல் இசாக் மற்றும் அனைத்து அமீரக கவி-நண்பர்களின் பயணம் இன்னும் பல வெற்றிகளோடும், பயன்களோடும் தொடர வாழ்த்துகள்..