PDA

View Full Version : தமிழ் மன்ற கவிஞர்கள் கவிதை



கலைவேந்தன்
24-06-2008, 07:27 PM
நண்பர்களே!

அடுத்த வரி எழுதுங்க கவிதை விளையாட்டில் நம்மன்ற நண்பர்களின் பங்கேற்பினால் உருவான கவிதைகளை இங்கே வழங்குகிறேன்!

கவிதை எண் 01

உன்பாதக் கொலுசினில் என்பார்வை பிறழுது
உன் பாதமோ என் பார்வையை நசுக்குது.
என் பாவையினுள் உன் பிம்பமே நுழையுது
மின்னல் போலொரு தண்ணொளி வீசுது

உந்தன் கன்னல் மொழி கவிதையாகுது
ஜல் ஜல் ஓசையில் சங்கீதம் பாடுது
சில்லென்ற உன்குரல் ஜதியும் சேர்க்குது
நில்லென்றாலும் என் காதல் நிற்காது போகுது

முத்துபோல் நகைத்தவளே முகந்திருப்பும் மர்மமென்ன?
முள்ளாய் இருந்து உனை உறுத்தும் உண்மையென்ன?
சித்திரமாய் உன் உருவம் என்மனதில் வரித்ததென்ன?
பத்திரமாய் இருந்து கொண்டும் நான் தொலைத்ததென்ன..?

உன்னன்புப் பார்வையில் என்சோகம் மறந்தேன்
பெண்ணவளாம் தோகைமயில் என்வசம் இழந்தேன்
கண்மணியே பார்வை நான் ஒளியின்றி கருத்தேன்..
விண் நிலவே வெளிச்சம் தர மாட்டாயா?

கலைவேந்தன்
24-06-2008, 07:30 PM
கவிதை எண் 02

ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?
ஏரியும் நிலமானால் ஏருக்குவழி என்ன ?
ஊருக்கு வழிசெய்ய வகைசெய்ய வேண்டாமா?
நீர் ஆதாயம் பெற நீராதாரம் இழக்கலாமா?

மழைக்கொடையை நம்பிதானே வயல்மடையும் இருக்கு
மரமழித்ததில் மழைக்கொடையும் குறைந்திருக்கு
தழைச்சத்து மணிச்சத்து மண்ணுத்தாய் பெறவேண்டும்
விளைச்சலை வெளிச்சத்தை பூமித்தாய் தர வேண்டும்!

விவசாயி அகம்குளிர்ந்தா நம்உதரம் தான் நிறையும்
பருவத்தேவான மடைதிறந்தால், ஞாலவளம் கொழிக்கும்.
மண் நனைந்து பயிர் விளைந்து வையகமே செழிக்கும்
கண்விரிந்து பூக்களென பூமிகூட சிரிக்கும்

காணிநிலம் விதைத்துபின்னர் வகைதொகையாய் களையெடுத்து
பேணிப் பராமரித்துப்பின்னர் பக்குவமாய் விளைச்சல்பெற்று
கோணிப் பை நிறைய கொண்டநெல்லை கொண்டு சென்று
கூனிக் குறுகி நின்றோர் குவலயத்தை வெல்வர் அன்று..!

இயற்கையை இயற்கையாய் இருக்க விடலாம்
செயற்கையை இயற்கையில் கலக்க வேண்டாம்
வயல்களில் விதைகளை விதைத்திடலாம்
வாழ்வை வளம்பெறச் செய்திடலாம்!

கலைவேந்தன்
24-06-2008, 07:32 PM
கவிதை எண் 03

வானமே எல்லை என்று எட்டிவிடடா!
வாட்டம் எமக்கிருந்தால் எட்டாதடா...
ஆட்டம் நிறைந்தது அகில வாழ்க்கையடா..!
ஊக்கமில்லையேல் இல்லை வாகையடா..!

ஆக்கம் உள்ள ஆடவனாய் அடிஎடுத்து வையடா
தூக்கம் தவிர்த்து உன் வாழ்வில் முன்னேறு
நோக்கம் உயர்வென்ற உறுதியோடு
தயக்கம் களைந்தே நீ முன்னேறு...

எள்ளுவார் ஒதுக்கி ஏற்றத்தை எட்டிப்பிடி
அள்ளிநம் தாய்மண்ணின் பெருமைகளை யோசி
முட்டாசுக் கவிஞனின் கனவுகளை நீ வாசி
கனவுகளை நனவாக்க உழைத்து பாடுபடு...

கற்பனையை உரமாக்கி நீயும் வீரம்பெற்றிடு.
உழைப்பை உயர்வாய் உள்ளத்தில் வைத்திடு
உலகியலை அறிந்துநீயும் உன்னதமாய் வாழ்ந்திடு
அழகியலாய் உலகில்நீயும் என்றுமே மகிழ்ந்திடு...

கலைவேந்தன்
24-06-2008, 07:34 PM
கவிதை எண் 04

கால்கள் இல்லையே காலணி அணிவதற்கு -ஆயினும்
கைகள் இருக்கே காலணி செய்வதற்கு!
கால்களே இல்லாத மனிதர்களும் உண்டல்லவா?
ஊனமிருந்தும் உழைப்பது தெய்வீகம் இல்லையா!

கள்ளுக்கடைக்கு செல்லமட்டும் காலிருந்து என்ன பயன்?
உள்ளுவதை உயர்வாய் எண்ணு ஊனம் என்ன செய்யும்?
வெல்லுவதை தடை செய்யுமா இல்லாத கால்கள்
செல்லுமிடமெல்லாம் சிறப்பெய்துவாய் நீயே!

கலைவேந்தன்
24-06-2008, 07:38 PM
கவிதை எண் 05

வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்
காசு உள்ள மனிதர்க்கில்லை தூக்கமது ஒரு கணமும்
மாசிலா முகம் கண்டு மயங்கினேன் எந்நாளும்!
உன் நேசமுள்ள மனதுக்கு ஏங்குகிறேன் இன்னாளும்

மூடிவைத்த உன் மனதைத் திறந்துவைக்க மாட்டாயா?
எனக்கான வசிப்பிடம் அங்குதானே கண்ணே!
தேடிவைத்த கனவுகளை இதயவங்கியில் ஏற்பாயா?-இல்லை
தாடிவைத்து காதலினை தூக்கிலிட்டு செல்வாயா?

பேசாமல் மௌனத்தில்உன் பேச்சை அடைப்பாயா ?
பேசியே மௌனத்தில் என் பேச்சை அடைப்பாயா..?
மோசமான குளிர்காற்று மோகத்தைத் தருகிறதே..!
நெஞ்சமதை சுட வைத்து குளிர்நாணம் எரிகிறதே..!

என் ஓராயிரம் கேள்விக்கு ஓர் பதிலைத் தருவாயா?
ஒரு பதிலும் தராவிட்டால் உண்மையில் அது வாயா..?
என்னுள் ஆயிரம் கேள்விகள் மீண்டும் தெளிப்பாயா ?
முடிவாய் 'ம்' சொல்லி என் இம்சை களைவாயா...?

சின்னதாய் புன்னகைத்து சித்திரமாய் ஒளிர்வாயா?
என்னதான் நினைக்கிறாய் என்றாவது விளக்குவாயா ?
எனதாய் மாறிவிட என்னை நீ கொள்வாயா..?
மெல்லத்தான் பேசிடுவாய் பொன் மேனியது நடுங்காமல்

உன்முகம் வாடும்போது என்மனம் வாடக்கண்டேன்!
அம்முகம் கலங்காதிருக்க காதலன் நான் நாட்டம் கொண்டேன்!
பெண்முகில்நீ பெய்யும்மழையில் பலயுகங்கள் நனைந்திருப்பேன்!
வென்னிலவே வந்துவிடு எந்நாளும் இணைந்திருப்போம்!

கலைவேந்தன்
24-06-2008, 07:39 PM
கவிதை எண்: 06

வா தோழா...தாய்மண்ணை சீராக்குவோம்!
நீ விழுந்துகிடந்த குழிகளையெல்லாம் மேடாக்குவோம்!
வா தருமமதை காப்பாற்ற போராடுவோம்..!
சீராய நம் தாய்நாட்டை வளமாக்குவோம்!

வளமில்லையா களமில்லையா ஏனேகிறாய் அயல்நாடு?
வரும் செல்வந்தனைப் பேண தாயில்லையா உன் வீட்டில்?
இளம்தூண்கள் தேவைதோழா இருப்பவைகள் செல்லரித்துவிட்டன..
வளமான பலதோள்கள் நம்நாட்டைக் காக்கவேண்டும்.

பொன்னான திருநாட்டை என்னாளும் காப்போம் வா..!
கண்ணின் இமையாக காத்திடுவோம் வா
உன்னின் சக்தியால் உறுதியாக்குவோம் வா!
ஒற்றுமை உணர்வை பெருக்குவோம் வா!

சாதிகளை சாகடிக்க வேல் கொண்டு வா..!
நீதிதனை நிலைநாட்ட வாள் கொண்டு வா...!
புதிதாக சாத்திரம் பல புனைவோம் வா..!!
புதியபாரதத்தைப் படைத்திடுவோம் வா!

கலைவேந்தன்
26-06-2008, 04:31 PM
கவிதை எண் 07

தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

தாழை மடல்விரிந்து தரணிஎல்லாம் மணம்பரப்பும்
நறுமணம் தரும் பூஞ்சோலைகளும் அருகில் உண்டு
வாழைகளும் தெங்கினமும் வாழவைக்க காத்திருக்கும்
சோலைவனத் தென்றலிலே திளைத்து நின்றதுண்டு..

நீர் வீழ்ச்சியாய் வரும் அன்பு மழையில் நனைந்ததுண்டு
பால் வாழ்க்கைக் காயும்போது பரியும் மனமே கற்கண்டு
சேல் விளையாடும் செந்தாமரைக் குளமுண்டு!
நூலிழை இடையாளின் நயனமொழி நிறைய உண்டு!

யாழினும் இனிய மழலை ஒலிகளும் நிறைய உண்டு!
தேன்மழை பொழியும் மதுர மொழிகளும் பல உண்டு..!
மௌன மொழியால் காதலி என்னை இம்சிப்பதும் உண்டு!
மனமெலாம் நிறைந்தெனை மகிழ்வுறச் செய்வதுண்டு!

கருமை செம்மையென வளமான நிலங்களுண்டு..!
வயிறு நிறைந்து மனம் குளிர வாழ்த்துவருமுண்டு
உழைத்து இளைத்தவர்களால் பெருத்த விளைச்சல்களும் உண்டு
களைத்து கஞ்சி குடிக்க கருவேல மர நிழலுமுண்டு!

கொஞ்சி விளையாட கஞசிக் கலயம் சுமந்து வநத கருப்பாயியும உண்டு
இத்தனை தந்த உழவனுக்கு நீ தந்ததென்ன இறைவா?
எத்தனை உழைத்த போதும் ஏழ்மைதானே தந்தனை நீயும்?
உன்னடிபணிந்த அவரைக்காத்திடவேண்டும் இறைவா

கலைவேந்தன்
30-06-2008, 05:53 AM
கவிதை எண் 08


துன்பம் துயர் ஏதுமில்லை என்றுமுந்தன் அன்பின் எல்லை
எல்லையில்லா இன்பம் தந்தாய் உன் காதலால்
அன்பை கொடுத்து நேசம் வளர்த்தாய் காதல் கொண்டாய்
உன் காதலால் என் இதயத்தை வென்றாய்

இனி நம் அன்பால் உலகை வெல்வோம் வா
இனியதோர் உலகம் கண்டு இன்முகம் செய்வோம்வா
இல்லை என்ற சொல்லை களைந்தெறிவோம் வா
உள்ளதைப் பகிர்ந்து உள்ளங்குளிர வாழ்வோம் நாம்!

கனவும் கற்பனையும் கொண்டதல்ல வாழ்க்கை
மனதின் உரமே வார்த்திடும் வாழ்க்கையை
கவலைகள் என்றும் சூழாதிருக்க உனை காத்து
தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்குவேன் வா

விலையிலா மாணிக்கம் வியந்திடும் ரத்தினம்
சிறுபுன்னகையால் என் துன்பமெல்லாம் போக்கி
குறுகுறுப்பாய் எனைநோக்கி புன்முறுவல் தந்து
உருவாக்குவாய் உன்னவனாய் என்னை ஏற்று!

கலைவேந்தன்
16-07-2008, 07:43 PM
கவிதை எண் 09

ஏற்றி வைத்த தீபத்தில் ஒளியாய் இருந்து
தேற்றிவிட நீ வேண்டும் மழையாய் பரிந்து
நாற்றின் நற்குணமெல்லாம் பயிரினில் வரும்போல
என் கண்ணீர்முத்துக்கள் உன் கைகள் தாங்கி

என் உள்ளத்து அசைவுகளை உணர்ந்து
நானழும் பொதெல்லாம் என்முகம் தாங்கி
தோளணைத்து தோழமையுடன் என்சோகம் வாங்கி
மாளாது வந்திட்ட மாயைதனை போக்கி

என் நம்பிக்கை நட்சத்திரமாய் திகழ்ந்து
எப்போதும் என்னருகில் என் துணையாய் நின்று
எப்போதும் என்னை உன் அணைப்பிற் காத்து
ஏணியாய் இருந்து ஏற்றிவிட்ட அன்னையே வணங்குகிறேன்

கலைவேந்தன்
20-07-2008, 05:58 PM
கவிதை எண் 10

பூகம்பம் அசைக்காத என்னை ஒரு பூக்கம்பம் அசைத்ததே!
புயல் அடித்து வீழாத என்னை ஒரு கயல் விழி வீழ்த்தியதே!
புலி நோக்கி அஞ்சாத என்னை உன் புன்னகை சாய்த்ததே!
ஏகாந்த பெருவெளியில் என்னில் பல ஏக்கங்கள் வெடிக்குதே!

ஏக்கங்கள் தேக்கங்களாகமல் என்னை வந்து சேர்
சேர்த்து வைத்த எண்ணங்களை செவியோடு பகர்ந்திடுவேன்
கோர்த்து வைத்த உணர்வுகளைக் கண்களால் உரைத்திடுவேன்!
கனவுகளாய் கண்ணில் மலர்ந்து இதயத்தில் நுழைந்திடு நீ

இதயத்தில் நுழைந்தவள் தாமதிக்காமல் என்னுயிரோடு கலந்துவிடு நீ
இல்லையெனில் ஜாதியும் மதமும் என்னை மண்ணோடு சேர்த்துவிடும்
பூ-வென்ற மென்மனதில் தேன்கவிதைச் சுவைகூட்டி வண்டழைத்து
வாவென்றே எனைஅழைத்து உபசரித்து விருந்திடு நீ!


உன் சுகம் உன் சந்தோஷம் மட்டுமே நான் நினைவில் கொண்டு
என் அகம் நிறைய மகிழ்வைச் சுமந்து உன் கனவில் மிதந்து
நெஞ்சம் முழுதும் உன் நினைவுகளை மட்டுமே சுமந்து திரிந்து
தஞ்சம் அடைகிறேன் உன்னைச் சரணடைந்து

கலைவேந்தன்
30-07-2008, 03:54 PM
கவிதை எண்:11

நிலவுரதம் வானோட போவதெங்கே சொல்லம்மா...!!
என் கனவு நிதம் உனைத்தேடி அலைவதென்ன செல்லம்மா...!!
வழி பார்த்து காத்திருந்த சூரியனை குளிர்விப்பதேனடி பொன்னம்மா
என் கனவுகளில் வந்து நீயும் எனை அணைப்பாய் கண்ணம்மா!

காதல் தூது உன்னிடம் சொல்ல தென்றலை அழைக்கிறேன் நானும்
உன் வழி மீது வழி வைத்து கண்கள் பூத்தன தங்கம்மா
என் வலியை சுகமாக்கியதில் இருக்குதடி உன் பங்கம்மா
உன் வருகை இன்னும் நிகழவில்லை ஏனம்மா?

தாமதிக்காமல் என்னுயிரே என் நிழலோடு கலந்துவிடுவாயா
சாமநிலா போலஎன்னை சுககுளிரில் அணைத்திடுவாயா??
மாயம் செய்து மறைந்தவனைக் காணாது தவித்திடுவாயா
காயமின்றி கடித்துவைத்த காதலியை மறப்பாயா?


சாயம் வெளுத்ததென்று சந்திக்காமல் இருந்திடுவாயா?
சந்தித்த நாட்களும் நொடிகளும் நினைவில் கொள்வாயா?
பேசாத பேச்சையெல்லாம் மௌனத்தில் சொல்வாயா?
எனக்கும் உனக்குமான பந்தயத்தில் காதலே, நீ வெல்வாயா?

கலைவேந்தன்
02-08-2009, 04:14 PM
கவிதை எண்: 12

ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி

விடியாத பொழுதில் தொடங்கும் வேலை
முடியாத நிலையில் களைப்பான மாலை
கண்ணுறங்காது தொடரும் ஏழையின் நிலை
மண்ணுதிரும் வியர்வைதானா அதற்கு விலை?

வேதனைதரும் குழ்ந்தைதொழிலாளர்களின் அவலநிலை
கட்டிடத் தொழிலாளர்களின் நிரந்தரமற்ற வாழ்க்கை
இத்தனை காயங்களும் ஆறுவது எப்போது?
சிந்திக்க வேண்டிய நேரம் இப்போது

செய்வது நாம் எப்போது?
இப்போதே என முனைவதில் தப்பேது?
தப்பின்றி செய்தால் அதற்கு ஒப்பேது?
எப்பொழுதோ செய்ய வேண்டியதல்லவா இது?

ஏழையும் அரசாளலாம் என்ற நிலை வரும்பொழுது
வாழும் நாட்டில் வறுமை என்பதே இருக்காதே...
பசியுடன் ஒரு வயிறும் பிறக்காதே
வருங்காலம் இந்நாளை எதிர்பார்த்து ஆவலோடு இருக்கிறது...

தரும் காலம் ஒருநாள்வரலாம் எதிர்பார்த்திரு
இருந்தாலும் இல்லை என்று சொல்வாருண்டு
ஏழையின் துயர் தீர்க்க முன்வருபவர் யாருண்டு??
நானிருக்கிறேன் என்பதைவிட நாமிருக்கிறோம் சொல்வதில் பெருமையுன்டு