PDA

View Full Version : வித்தியாச விருந்து



அமரன்
27-05-2008, 12:47 PM
இந்த ஊருக்கு வந்து ஐந்து ஆண்டுகள் சென்றுவிட்டது. இது போல இதுவரை நடந்ததில்லை. கடந்த ஒருவாரமாகத்தான் இப்படி நடக்குது. யாராக இருக்கும்? அவனா? அவளா? அவர்களா? நிச்சயமாக அவளாக இராது. இந்த ஊர்ப்பெண்களுக்கு இருட்டுக் கட்டினாப்பிறகும் நடமாடும் தைரியம் இருந்தாலும், இப்படிச் செய்ய அவர்களால் இயலாது. அவன் அல்லது அவர்கள்தான் செய்கிறார்கள். இன்றைக்கு எப்படியாவது யாரென்று பார்த்துவிட வேண்டும். இந்த நினைப்பு நித்திரையை திருடியது. அவர்கள் இன்றைக்கு வருவார்களா என்ற சிந்தனை சோர்வை விரட்டியது.

இரவு பதினொரு மணி இருக்கும். கேட்டைத் திறந்தேன். கேட்டின் இருமருங்கும் நின்ற போவன்வில்லா மரங்கள் கையசைத்தன. குளிரை முகத்திலறைந்த தென்றல் காகிதப்பூவொன்றை நெற்றியில் வைத்தது. பாதையின் மண்ணில் பாதங்களைப் பதித்தேன். மூன்று நிமிட நடையின் பின் வலப்பக்கம் திரும்பினேன். படுத்திருந்த நாய் உறுமியபடி தலை நிமிர்த்தியது. அடையாளம் உணர்ந்து காலைத் தொட்டது மட்டுமில்லாமம் தொடர்ந்து வந்தது. பகலில் மட்டும் மணிக்கொரு பஸ் போகும் ரோட்டைக் கடந்து ஒற்றையடிப் பாதையில் பயணித்தோம். அவர்கள் இன்றைக்கும் வருவார்களா என்ற யோசனை எனக்குள் ஓடியபடி இருந்தது.. .

இரண்டு பக்கமும் பற்றைக்காடுகள்.. பற்றைக்காட்டுப்பூக்களின் கலவை வாசனை.. சில் வண்டுகளின் ரீங்கார சங்கீதம்.. சின்னப் பூச்சிகளின் இராகமாளிகை.. கறுப்பு வானில் மின்னும் நட்சத்திரங்களைப் போல ஆங்காங்கே பறக்கும் மின்மினிகள்.. ஆபத்தை அறிந்து அடக்கமாக வீரமுழக்கமிடும் நாய்.. எதுவுமே தொந்தரவு செய்யாத என்னை, மரவள்ளித் தோட்டம் தொட்டு உலுப்பியது.

மரவள்ளி மரங்களை அடுத்தாற்போல மருதண்ணனின் தோட்டம். கடந்த மாதந்தான் காய்கறிப்போகம் முடித்து பசளைக்காக சனற்பயிர் பயிரிட்டிருந்தான். சும்மா சொல்லக் கூடாது. மருதண்ணனின் மனம் மாதிரி அமோகமாக வளர்ந்திருந்தன சனற்செடிகள். அடுத்தாப்போல மதர்த்து வளர்ந்த வாழைகள்.. பாதிக்கு மேல் குலைதள்ளி இருந்தன. இடைப்பழம் கண்டதும் வெட்டலாம் என்று நினைத்து விட்ட குலைகள் மகிழ்ச்சியில் ஆடின.. சனல்பயிர்கள் காற்றில் சுதிபிடித்துப் பாடின.. அவர்கள் வரவேண்டும் என்ற என் பிரார்த்தனையில் அவையும் பங்கெடுத்தது போல் தோன்றியது.

வாழைச் சருகுகளை மிதித்தபடி நடந்து மறைவான வசதியான வரம்பில் அமர்ந்தேன். சூழ்ந்திருந்த இருட்டும் என்னை மறைக்க உதவியது. காத்திருந்தேன்... பாம்பூறும் வலி தாங்காமல் சருகுகள் முனகின. கூடவே முனகிய நாயை மென்மையாகத் தடவிக்கொடுத்தேன். நாயை வருடிக் கொடுப்பதை அடிக்கடி செய்யவேண்டி இருந்தது. அரை மணிநேரம் போயிருக்கும்.. குசு குசு குரல்கள் காதில் விழுந்தன. கூர்மையானேன்.. ஒன்று ஆணுடையது. மற்றது பெண்ணுடையது.. கூர்மையை அதிகரித்தேன்.. எனக்கும் அவர்களுக்கும் இடையிலான தூரமும் குறைந்தது.. சின்னபசங்க குரல்.. அடப்பாவிங்களா.. இந்தவசுல இந்தக் குணமா? உன்னிப்பாக காதுகொடுத்தேன்...

"இந்தா சின்ராசு... அந்தியில நீ கேட்ட மரவள்ளிக்கிழங்கு அவியலும் அம்மியில் அரைத்த சம்பலும்"

"எனக்கு வேண்டாம்.. எனக்குத் தந்ததுனாலதானே உங்க ஆத்தா உன்னை வெஞ்சுது. என்னையும் அடிச்சிச்சு"

"ஆத்தா எப்பவும் அப்பிடித்தானே.. அதையெல்லாம் பெரிசா எடுத்துக்காதே.. இந்தா இதை தின்னு.... அட.. பிகு பண்ணாமல் தின்னு..."

அமைதி நிலவியது...

"எனக்கும் அப்பன் ஆத்தா இருந்திருந்தா உங்க தோட்டத்துல வேலைக்காரனா இருந்திருக்க மாட்டேன்ல.. தினப்படிக்கு வேண்டியதை சாப்பிட்டிருப்பேன்ல.. நீயும் ஆத்தாக்கிட்ட ஏச்சு வாங்கிருக்க மாட்டேல்லா.. ..... ..... ..... ..... ஏன் சின்னம்மா? எங்கப்பன் ஆத்தா எங்கேன்னு உனக்காச்சும் தெரியுமா?"

"என்னைய விட ஒருவயசு கூடின உனக்கே தெரியாதபோது எனக்கெப்படிடா தெரியும்.. சை... அதை விடுடா.. உனக்கு எத்தனை தரம் சொல்லிருக்கேன்.. என்னைய சின்னம்மான்னு கூப்பிடாதன்னு. வித்யான்னு கூப்பிடுன்னு. இனிமே என்னைய சின்னம்மான்னு கூப்பிட்டா, உங்கூடப் பேசமாட்டேன்"

எனக்கு எல்லாம் புரிந்தது.. சிறுதூரத்தில் இருந்த மரவள்ளித் தோட்டக்காரன் வீட்டுப்பொண்ணும் எடுபிடிவேலை செய்யும் சின்ராசுவும், அப்பழுக்கற்ற சினேகத்தைப் பரிமாறிக்கொள்ள ஒதுங்கி உள்ளார்கள்..

சே... இந்தப் பாழாய்ப்போன உலகத்தில் பாசப்பிரிவினைக்குத்தான் எத்தனை காரணங்கள். பாசப்பறவைகளைக் கலைக்க எத்தனை ஆயுதங்கள்..

இதுவரை, வாழைக்குலைக் கள்வர்கள் வரவேண்டும் என்று வேண்டியமனது, அவர்கள் வரக்கூடாதென்று வேண்டத் தொடங்கியது.

மன்மதன்
27-05-2008, 02:14 PM
சிறுகதையில் ஒரு நாவலையே அடங்கியிருக்கிறது..

கதையுடனும், கதையின் நாயகனுடனும் நானும் பயணித்தேன்..

ஏதோ கூடவே செல்வது போல...ஒரு அனுபவம்..

ஒரு எழுத்தாளனுக்கு வேறென்ன வேண்டும்..

கை தேர்ந்த எழுத்தாளர்கள் லிஸ்டில் அமரன் பெயரையும் சேர்த்து விடலாம்...


கடைசி வரி தான் சற்று புரியாமல் இருக்கிறது..

மனோஜ்
27-05-2008, 03:07 PM
நல்ல கதை பாங்கு இயற்கையை அப்படியே கண்ணில் கொண்டு வந்துவிட்டிர்கள் அமரன் நன்றி

அமரன்
27-05-2008, 03:13 PM
கடைசி வரி தான் சற்று புரியாமல் இருக்கிறது..

மறைந்திருந்து பார்ப்பத்தில்தான் எத்தனை சுகம்.. "அவர்கள்" வந்தால் சுகம் சோகமாகிடுமே..

மன்றச்சாலையில் எழுதிப்பழகும் எனக்கு உங்கள் ஊக்கம் நம்பிக்கையைத் தருகிறது மன்மதரே... மிக்க நன்றி.

மனோஜ்..
காட்சியைக் காணச்செய்தது நான் செய்த பாக்கியம்.. வந்து இருந்து பார்த்துக் கைதட்டியமைக்கு நன்றியும் அன்பும்..

பூமகள்
27-05-2008, 03:15 PM
படித்து சில நிமிடங்கள் மௌனம்... அது சொன்ன செய்திகளை அடிக்க கைக்கு வேகம் போதவே இல்லை..

கதைக் களம்.. அழகான சூழல்.. கதை சொல்பவரின் பெயர் கூட சொல்லாமல்.. அவரோடு கூடவே பயணித்து அவருக்கு பதில் நாய்க்குட்டியை தடவிக் கொடுத்தது என் கற்பனை...

மெல்ல மெல்ல காற்றில் கலந்த பூக்களின் ரம்யமான நுகர்வையும்.. மின்மினிகளின் கண் சிமிட்டையும் ரசித்து பயணித்தேன்..

ஒரு கதையெனில் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற அழகிய தோற்பாட்டை என்னுள் ஏற்படுத்திவிட்டது..

இந்த கதையை ஏன் உடனே படிக்கவில்லையென செல்லமாய் என்னை கடிந்து கொண்டேன்..

கடைசி வரிகளில்... அழகான ஒரு உணர்வு தொட்டுச் செல்கிறது.. உங்களின் எழுத்துகளை ரொம்பவும் ரசிக்கிறேன்.. அமரன் அண்ணா

இப்படியான ஒரு உணர்வை படிப்பவங்க மனத்தில் ஏற்படுத்தனும் என்பது தான் எனது லட்சியம்.. ஹூம்.......... அதுக்கு உங்க கிட்ட ட்ரைனிங் எடுத்தா தான் நடக்கும் போல இருக்கு..!!:traurig001::traurig001:

ரியலி ஹேட்ஸ் ஆஃப் டூ யூ அமர் ஜீ..!! :)

மன்மதன்
27-05-2008, 03:17 PM
மறைந்திருந்து பார்ப்பத்தில்தான் எத்தனை சுகம்.. "அவர்கள்" வந்தால் சுகம் சோகமாகிடுமே..

மன்றச்சாலையில் எழுதிப்பழகும் எனக்கு உங்கள் ஊக்கம் நம்பிக்கையைத் தருகிறது மன்மதரே... மிக்க நன்றி.



நன்றி அமரரே...

Narathar
27-05-2008, 03:21 PM
அருமையான கதைக்களம்......
யதார்த்தமான வர்ணனைகளால் கதைக்குள் சட்டென எங்களை உள்வாங்கிக்கொண்டீர்கள் அந்த திறமை சிலருக்குத்தான் வரும் அது உங்களிடமிருக்கிறது. வாழ்த்துக்கள்.

இன்னும் எழுதுங்கள்.. வாசிக்க நாம் இருக்கின்றோம்.

என்ன மன்மதா? கதை டிஸ்கஷனுக்கு நம்ம அமரனையும் அழைப்போமா?

மன்மதன்
27-05-2008, 03:26 PM
என்ன மன்மதா? கதை டிஸ்கஷனுக்கு நம்ம அமரனையும் அழைப்போமா?

கண்டிப்பா நாரதரே..:icon_b:

அறிஞர்
27-05-2008, 09:44 PM
நன்றியுள்ள நாய்...

இரவு சூழ்ந்த நேரத்தில் அழகிய பயணம்..

நல்ல உள்ளம் படைத்த சிறுவர்கள்...

அனைத்தும் உள்ளடக்கிய அருமையான கதை...
வாழ்த்துக்கள் அமரா...

மதி
28-05-2008, 03:13 AM
அழகான கதை.. அமைதியான களம்.. நிறைந்த ஸ்நேகம்..
தெளிந்த நடையில் சிக்கலின்றி கதையை கையாண்டுள்ளீர்கள்..

வர்ணனைகள் அற்புதம்..

வாழ்த்துகள் அமரரே..

இராஜேஷ்
28-05-2008, 03:32 AM
கவிதை நடையில் உரைநடை, அருமை அண்ணா அருமை!!.

SathyaThirunavukkarasu
28-05-2008, 03:32 AM
நல்ல கதை, அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்

பூமகள்
28-05-2008, 05:46 AM
நேற்று ஒன்றை மறந்தே விட்டேன்....
இத்தகையதொரு அழகான கதையைப் படைத்த அமரன் அண்ணாவுக்கு 10,000 பொற்காசுகளை அகமகிழ்வுடன் பரிசாக வழங்குகிறேன்..!!

தொடர்ந்து இது போன்ற எழுத்து பாணியில்.. மென்மேலும் எழுத வேண்டுகிறேன்..! :)

அனுராகவன்
28-05-2008, 05:54 AM
அரிய கதை..
என் நன்றியும்,வாழ்த்தும்...

அமரன்
28-05-2008, 06:40 AM
இன்னும் எழுதுங்கள்.. வாசிக்க நாம் இருக்கின்றோம்.என்ன மன்மதா? கதை டிஸ்கஷனுக்கு நம்ம அமரனையும் அழைப்போமா?
என்னாக்கங்களை வாசிக்கும், என்னை நேசிக்கும் உங்களைப் போன்றவர்கள்தான் எழுதத் தூண்டுகின்றீர்கள்.. மீண்டும் ஒரு தூண்டல்.. மிக்க நன்றி நாராதரே

கண்டிப்பா நாரதரே..:icon_b:

படம் வெளியாகும்போது என்கதையை திருவிட்டார்கள் என்று கேஷ் போடுவேன் பரவாயில்லையா..



இப்படியான ஒரு உணர்வை படிப்பவங்க மனத்தில் ஏற்படுத்தனும் என்பது தான் எனது லட்சியம்.. ஹூம்.......... அதுக்கு உங்க கிட்ட ட்ரைனிங் எடுத்தா தான் நடக்கும் போல இருக்கு..!!:traurig001::traurig001:
நான் மன்றப்பள்ளியின் மாணவன். இங்குள்ள வகுப்பறைகளில் தினமும் கற்கிறேன். கற்பவனைப்பார்த்து எழுதுவது சரியல்ல? கற்பிப்பவர்களைப் பார்த்து எழுதுங்கள்.. (சகமாணவனை பார்த்து எழுதினால் குற்றம்). ஒவ்வொன்றையும் பதியும்போது வாத்தியார்கள் குட்டுவார்களோ என்ற நடுக்கத்துடனும் விருப்பத்துடனும்தான் பதிவேன்.. என்னைப்போய்..

தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்திய உங்களுக்கு நன்றி.. பொற்கிளிக்கும் நன்றிங்கோ..



அனைத்தும் உள்ளடக்கிய அருமையான கதை...
வாழ்த்துக்கள் அமரா...
நன்றி அண்ணா...


வாழ்த்துகள் அமரரே..
நன்றிங்க..(அடுத்த புது) மாப்பிள்ளை.. இப்பெல்லாம் உங்களை அடிக்கடி காண முடியலையே.. அங்கதானா..

கவிதை நடையில் உரைநடை, அருமை அண்ணா அருமை!!.
சந்தத்தில் சிந்தும் வாழ்த்து.. நன்றி கண்ணா நன்றி..

நல்ல கதை, அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்
நிசந்தான்.. புரியாதவர்களும் உள்ளார்கள்.. எனவே, தாழுடைக்க தாள்களில் சாவிகள் செய்கிறார்கள்..

அரிய கதை..
என் நன்றியும்,வாழ்த்தும்...
மிக்க நன்றி அனு.

மதி
28-05-2008, 09:06 AM
நன்றிங்க..(அடுத்த புது) மாப்பிள்ளை.. இப்பெல்லாம் உங்களை அடிக்கடி காண முடியலையே.. அங்கதானா..



இப்படியெல்லாம் கிளப்பி விட்டுடாதீங்க.. அப்புறம் பொண்ணு தேடறது கஷ்டமாயிடும்... :eek::eek::eek:

மன்மதன்
28-05-2008, 12:32 PM
படம் வெளியாகும்போது என்கதையை திருவிட்டார்கள் என்று கேஷ் போடுவேன் பரவாயில்லையா..
.

ஹாஹ்ஹா.. அப்படியெல்லாம் பண்ணிடுவோமா??
உங்க பேர் டைட்டிலில் வரும் அமரன்.. :)

பூமகள்
28-05-2008, 01:02 PM
நன்றிங்க..(அடுத்த புது) மாப்பிள்ளை.. இப்பெல்லாம் உங்களை அடிக்கடி காண முடியலையே.. அங்கதானா.
எங்கங்க அண்ணா??!! :icon_ush::icon_ush:

இப்படியெல்லாம் கிளப்பி விட்டுடாதீங்க.. அப்புறம் பொண்ணு தேடறது கஷ்டமாயிடும்... :eek::eek::eek:
இவரு பயப்படுவதப் பார்த்தால்... ஏதோ ரகசியம் இருக்கறாப்ல இருக்கே??!! :rolleyes: ;):p :lachen001::lachen001:

Narathar
28-05-2008, 04:36 PM
படம் வெளியாகும்போது என்கதையை திருவிட்டார்கள் என்று கேஷ் போடுவேன் பரவாயில்லையா..
.

படத்துக்கு "கேஷ்" போட்டா நீங்க தயாரிப்பாளராயிற்றே??

நாராயணா!!!!

மலர்
28-05-2008, 04:52 PM
அடடே....!!!
முதல் முறை வாசிக்கும் போதே புரிஞ்சிட்டே.:eek: :eek:
அப்போ நான் முன்னேறிட்டனா...:rolleyes: :rolleyes:
இல்லை அமரு எழுத்தை மாத்திட்டாரா......:fragend005: :fragend005:
ஹீ..ஹீ..... சும்மா சும்மா.. :D :D

அழகான வர்ணனை.... நேர்த்தியான கதைநகர்வு...
தொடர்ந்து படைக்க வாழ்த்துக்கள்..... அமரு :icon_b: :icon_b:

டைட்டில் கூட கொஞ்சம் வித்தியாசமாவே தான் இருக்கு....:cool: :cool:

Narathar
28-05-2008, 04:56 PM
டைட்டில் கூட கொஞ்சம் வித்தியாசமாவே தான் இருக்கு....:cool: :cool:


அது ஏதோ வரி விளக்கு கொடுக்கிறாங்கலாமில்ல.. அதுதான்

மலர்
28-05-2008, 04:59 PM
அது ஏதோ வரி விளக்கு கொடுக்கிறாங்கலாமில்ல.. அதுதான்
:D :D :D :D :D
நான் கூட அமரு கலக்கலா யோசிச்சி வித்தியாசமா வச்சிருக்காருன்னுல்ல
நினைச்சிட்டேன் அண்ணா.... :frown: :frown: :frown:

Narathar
29-05-2008, 05:29 AM
:D :D :D :D :D
நான் கூட அமரு கலக்கலா யோசிச்சி வித்தியாசமா வச்சிருக்காருன்னுல்ல
நினைச்சிட்டேன் அண்ணா.... :frown: :frown: :frown:



இத்தகையதொரு அழகான கதையைப் படைத்த அமரன் அண்ணாவுக்கு 10,000 பொற்காசுகளை அகமகிழ்வுடன் பரிசாக வழங்குகிறேன்..!!

பார்த்தீங்களா????
வரி விளாக்குன்னு நான் சொன்னது இதைத்தான்...........

அமரன்
29-05-2008, 08:31 PM
படத்துக்கு "கேஷ்" போட்டா நீங்க தயாரிப்பாளராயிற்றே??நாராயணா!!!!
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... இப்பவே கண்ணைக் கட்டுதே..
கேஸ் போடவும் கேஷ் தேவைதானே. இப்ப என்ன செய்வீங்க.. இப்ப என்ன செய்வீங்க..

எனது படைப்பு இன்னொருவரை சேர்ந்திருக்கிறது என்பது மகிழ்ச்சிகரமான செய்தி. அந்தவகையில் இந்தக்கதை மலரை அடைந்தது என்னை ஆனந்தப்படவைக்கிறது. இதுக்காகவே இன்னும் பல எழுதலாம்.. நன்றி மலரு..

இளசு
12-07-2008, 09:20 PM
மீனும் தேனும் இராமனுக்கு விருந்தாய் - குகன் கொடுத்தான்..
தான் ருசி பார்த்த மாமிசம் சிவனுக்கு விருந்தாய் - கண்ணப்பன் அளித்தான்..

அன்பால் அளிக்கும் விருந்தின் மதிப்பு அலாதி..

வித்யா சின்ராசுக்கு அளித்த அவியலும் சம்பலும் அதில் சேர்த்தி!

அமரா..

பாம்பு ஊர சப்திக்கும் சருகும்
அமைதி காக்க நாயை அடிக்கடி வருடுவதும்
சலசலக்கும் சணற்பயிரும்
விருந்தைக் குலைக்கும் வாழைக்குலைத் திருடர் வராமல் இருக்க வேண்டும் பதைபதைப்புமாய்..

அந்த இரவில்.. அந்த கூதலில் அந்த வயலில் நானும் இருந்தேன்..

அன்புரசிகன் கதைகளிலும் இந்த சூழலில் இழுக்கும் வளமை கண்டிருக்கிறேன்..

உன் நுண்ணிய காட்சிப்பதிவால் சுண்டி இழுக்கப்பட்டது என் மனம்..

மனம் நிறைந்து வழியும் பாராட்டுகள் அமரா!

விகடன்
13-07-2008, 07:44 AM
வித்தியாச விருந்து என்ற தலைப்பில் இறுதிவரை எதனை கண்டுபிடிக்க ரோந்தில் இருந்திருந்தீர்கள் என்று சொல்லாமல் இறுதியில் சொல்லியிருப்பது கதையில் ஒரு சுவாயஸ்யத்தையும் இறுதி மூச்சுவரையிலான ஏக்கத்தையும் தக்கவைத்திருந்தது.
ஒரு வயதே கூடிய சின்னம்மா தன்னை சின்னம்மா என்றழைக்க வேண்டாம் என்பது இயற்கை., அவர்களை காணும்வரை நடந்த பாதையில் சந்தித்த காட்சிகள், அதிலும் காவல்க்காரனான நாயின் குணவியல்புகள் என பலவற்றை சிறப்பாக வர்ணித்திருந்தமை என்னை மிகக்கவர்ந்துவிட்டன.

பாராட்டுக்கள் அமரன்.

அமரன்
25-07-2008, 12:48 PM
மனம் நிறைந்து வழியும் பாராட்டுகள் அமரா!

அண்ணா..
அறிந்ததையும் அகழ்ந்து எடுத்ததையும் ஆக்கியதையும் நினைவில் வைத்து, பொருத்தமான இடத்தில் அள்ளித்தந்து மகிழ்ச்சியில் நனையவைக்கும் உங்களின் ஊக்கத்துக்கு நிகராக ஏதுமில்லை.. இனித்த மனத்துடன் நன்றி நவில்கிறேன்.


விராடா!
சிலவரிகளில் என் கதைக்கருவை பிரசவித்த வித்தகம் கண்டு மகிழ்ந்தேன்.

mukilan
27-07-2008, 01:46 AM
பாம்பூறும் வலி தாங்காமல் முனகும் சருகுகள். இறந்த இலைகளுக்கும் இதயத்துடிப்பைக் கொடுத்த கவிதைநயத்தைப் பாராட்டுவதா?

மருதண்ணனின் மனசைப் போலவே வளர்ந்த சனற்பயிர் வெள்ளத்தனைய மலர்நீட்டம் எனச் சொன்ன குறள் விளக்கத்தைப் பாராட்டவா?
சனற்பயிர் என்றால் என்ன அமரன்? சணல் கயிறுக்கான பயிரா அல்லது சனப்பை எனச் சொல்லப் படும் தழையுரச் செடியா?

தொழிலாளிக்கும் முதலாளியின் மகளுக்கும் உள்ள பாசப்பிணைப்பு வெளிப்படுத்தும் செங்கொடி சித்தாந்தத்தை வியப்பதா?

அனைவற்றையும் வியந்தபடி வித்யாசமாக விருந்து படைத்த அமரனுக்கு என் பாராட்டுக்கள்.

அமரன்
27-07-2008, 10:10 AM
சிறுபோகத்துக்குக் பெரும்போகத்துக்கும் இடைப்பட்ட குறுகிய காலத்தில் அல்லது சாகுபடிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வளர்த்து, வெட்டி தோட்டத்திலேயே போட்டுவிடுவார்கள். மண்ணின் வளம் பெருகும் என்பதுக்காக.. அதனை சனற்பயிர் என்று சொல்வார்கள்.. சரியான பெயர் தெரியாது முகிலன். சனப்பை எனப்படும் தழையுரச்செடி என்பது இப்போது தெரிந்தது..

அற்புதமான மருந்தாக பின்னூட்டம்.. மிக்க நன்றி.

MURALINITHISH
14-08-2008, 08:48 AM
சிறு குழந்தைகளின் பாசங்கள் கூட தடுக்க படுகிறது அதுதான் வயதியானவர்களின் உலகம்