PDA

View Full Version : இறைவனுக்கு இரக்கமில்லை



சிவா.ஜி
16-04-2008, 02:31 PM
பாடும் பறவைகளாய்
ஓடித்திரிந்த
பள்ளிப் பிள்ளைகளை
பலிகொண்ட பாலத்தை
பார்க்கவில்லையா அந்த
காக்கும் கடவுள்...?

எத்தனை ஆசைகளோடு
சுற்றுலா போனவர்கள்
மொத்தமாய்
வேறுலகம் போய் விட்டார்களே

வானம்பாடிகளை
கானம் பாட அனுப்பிவிட்டு, இன்று
வானம் ஏகிவிட்ட உயிரில்லா
வெற்றுடல் பார்த்து
பெற்றவர்கள் கதறுவதைக்
காண முடியா இதயம்
மூச்சடைத்து நிற்கிறது!

நம் தாகத்துக்கு
நர்மதையைக் குடிப்போம்,
நர்மதையின் தாகத்துக்கு
நாற்பதுயிரைக் குடித்ததே.....அது
நதியா..? நமனா....?

நீர்குடித்த மழலைகளை
நேர் நின்று பார்க்க
நெஞ்சுக்குத் துணிவில்லை
நேரவிட்டு வேடிக்கைப் பார்த்த
இறைவனுக்கு இரக்கமில்லை!



(நேற்று குஜராத்தில் பள்ளிச் சுற்றுலாவுக்குப் போன பேருந்து,பாலத்திலிருந்து விழுந்து நர்மதை நதியில் மூழ்கியதில் பள்ளிச் சிறார்களோடு நாற்பது பேர் உயிரிந்தனர். அந்த சின்னஞ்சிறு புஷ்பங்களின் மறைவுக்கு மன வேதனையுடன் இந்த கவிதாஞ்சலி)

Keelai Naadaan
16-04-2008, 03:00 PM
சொல்ல வார்த்தைகளில்லை.

ஷீ-நிசி
16-04-2008, 03:10 PM
அந்த பிஞ்சுகளின் ஆன்மா சாந்தியடையட்டும். மனவருத்தத்தில் பிறந்த கவிதை...

நமனா???

புரியவில்லையே சிவா.ஜி!

சிவா.ஜி
16-04-2008, 03:50 PM
எமனுக்கு இன்னொரு பெயர் நமன். ஷீ-நிசி
(நாமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம்- படித்திருப்பீர்களே)

அனுராகவன்
17-04-2008, 07:48 AM
என்ன செய்வது..
விதியின் விளையாட்டு...
நல்ல கவி ..
என் கண்கள் கலங்குகிறது..

நேசம்
17-04-2008, 02:56 PM
பத்திரிக்கையில் செய்தியை படிக்கும் போது மனம் கனமாக இருந்த்தது.ஒட்டுநரின் அதிக வேகம் தான் விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

நம்பிகோபாலன்
17-04-2008, 03:57 PM
மழலை பட்டாளம்
மலராமல்
மருகி போக
விதியின் விளையாட்டா
இல்லவேயில்லை
இது
நதியின் விளையாட்டு
கணத்த இதயத்துடன்.....

அமரன்
18-04-2008, 12:55 PM
யாரை குற்றம் சொல்ல..
பேரூந்தில் கோளாறா.. ஓட்டுனர் தவறுதா.. குட்டையான எல்லையைக் கொண்ட பாலக் கட்டும்மான பிழையா.. எல்லாம் இறைவன் என்றால் அவன் தவறுதான் இது..

இரக்கமும் இறைவந்தான்..

அஞ்சலிகள்.

ஆதி
24-04-2008, 10:40 AM
வாழ்வின் பாதைகள் எங்கும்
சுருண்டுப் படுத்திருக்கிறது
சர்பமாய் சாவு..
தவறி மிதிப்பவர்களின்
உயிர் கொத்திவிட..

கனவுகளோடு புரப்பட்டு
கனவுகளாய் முடிந்த
கவிதைகளுக்கு என்
கண்ணீர் அஞ்சலிகள்..

ஓவியன்
02-05-2008, 03:21 PM
மொட்டலர முன்னரே பூக்களைப் பறித்தானே...?? :frown:

அந்த மழலைச் செல்வங்களுக்கு என் கண்ணீர்ப் பூக்களும்....

ஆதவா
19-06-2008, 09:47 AM
இம்மாதிரி கவிதைகளுக்கு பாராட்டு தரமுடியுமா? கவிதையைப் பாராட்டி மகிழ்வதா அல்லது கருவினைக் கண்டு நோவதா?

எனக்குத் தொண்டை அடைக்கவில்லை, விக்கலில்லை, நாற்பது உயிர்கள் இறந்தது கண்டு கண்ணிர் வரவில்லை, ஏன், எதுவுமே ஆகவில்லை......... ஆனால்.. ஆனால்...

ஏதோ ஒரு தருணத்தில் நினைத்துக் கொள்வேன். அந்த நாற்பதில் ஒன்று என் மகனாக இருந்தால்/???

யார் இறந்தாலும் இப்படித்தான் சிவா அண்ணா.. துக்கம் அடைந்து உருக நான் புத்தனாக பிறக்கவில்லை. கொடூரத்தை ரசித்த கண்களால் அந்த கொடூரத்தின் பிண்ணனியில் விளையும் விளைவுகளைப் பற்றியோ பின்புலத்தில் நடக்கும் காட்சிகள் பற்றியோ அறிய நான் முற்படுவதில்லை.

சுருங்கச் சொன்னால்... கவிதை எந்த அளவுக்கு அழகோ அந்த அளவுக்கு கரு ஒவ்வாதது..

நமன் - யமன்.. பழைய சொற்களைக் கொண்டுவந்ததற்கு நன்றி... சிலர் ஞமன் என்று கூட சொல்லுவார்கள்..

ஆதியின் வரிகளும் அழகு

சிவா.ஜி
19-06-2008, 10:12 AM
உண்மையை உண்மையாக உரைத்துவிட்டீர்கள் ஆதவா. இந்தக் கவிதைக்குப் பாராட்டா...? கூடாது. மனதில் தோன்றியதை, அந்த பாரத்தை கொஞ்சம் வரிகளில் இறக்கி வைத்தேன். செய்தியில் அந்தக் காட்சியைக் கண்டபோது மனம் பதை பதைத்தது. நானும் ஒரு தந்தை என்ற வகையில் வேதனைப்பட்டேன். உண்மையிலேயே இந்தக் கவிதைக்குப் பாராட்டை எதிர்பார்த்து நான் பதிக்கவில்லை. அந்த பிஞ்சுகளுக்காக என் உள்ளம் அழுததைத்தான் பதிவு செய்தேன். நன்றி ஆதவா

ஆதவா
19-06-2008, 10:59 AM
உண்மையை உண்மையாக உரைத்துவிட்டீர்கள் ஆதவா. இந்தக் கவிதைக்குப் பாராட்டா...? கூடாது. மனதில் தோன்றியதை, அந்த பாரத்தை கொஞ்சம் வரிகளில் இறக்கி வைத்தேன். செய்தியில் அந்தக் காட்சியைக் கண்டபோது மனம் பதை பதைத்தது. நானும் ஒரு தந்தை என்ற வகையில் வேதனைப்பட்டேன். உண்மையிலேயே இந்தக் கவிதைக்குப் பாராட்டை எதிர்பார்த்து நான் பதிக்கவில்லை. அந்த பிஞ்சுகளுக்காக என் உள்ளம் அழுததைத்தான் பதிவு செய்தேன். நன்றி ஆதவா

உள்ளத்தின் உள்ளூர மொழியைச் சிதைக்காமல் வார்த்தைக் கண்ணீர் விடும் சில கவிஞர்களில் நீங்களும் ஒருவர் என்று அறிந்தவன்...........

அவ்வழுகையின் கூரிய தாக்கம்..

வலிக்கிறது எமக்கும்...

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
19-06-2008, 11:01 AM
உங்கள் அஞ்சலியோடு சேர்த்து இந்த புதியவனின் அஞ்சலியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கு இறைவன் அருள் புரியட்டும். கவிதைக்கு நன்றி சிவா