PDA

View Full Version : இரவில் வந்தவள்-நிறைவடைந்தது



சிவா.ஜி
14-04-2008, 06:54 AM
பாகம்-1

ரங்கனுக்கு 25 வயது ஆகிறது. அவனுடைய குடும்பத்தில் ஆண்களுக்கெல்லாம் 19 வயதுக்குள்ளேயே திருமணத்தை முடித்துவிடுவார்கள். இவன் ஒருவன்தான் அந்த பந்தத்தில் மாட்டிக்கொள்ளாமல் இன்னும் சுதந்திரமாய் சுற்றித்திரிந்துகொண்டிருக்கிறான்.

வளையல் வியாபாரம் செய்கிறான். கூடுமானவரை சந்தைகளில்தான் கடைவிரிப்பான். திங்கட்கிழமைத் தொடங்கி வெள்ளி வரை சுற்றுவட்ட ஊர்களில் ஏதோ ஒரு ஊரில் சந்தை இருக்கும். போச்சம்பள்ளி, சாமல்பட்டி, குந்தாரப்பள்ளி புதன் சந்தை, பாலக்கோட்டுக்கு அருகில் வெள்ளிச்சந்தை என்று நடந்தேதான் எல்லா இடங்களுக்கும் போவான். அந்தக் காலத்தில் பேருந்து இல்லை. 70 வருடத்துக்கு முந்தைய காலம்.

அன்று வெள்ளிச்சந்தையில் நல்ல வியாபாரம். கொண்டுபோன வளையல்களெல்லாம் விற்றுவிட்டன. சந்தோஷமாய் திரும்பும் வழியில் கள்ளுக்கடைக்குள் நுழைந்தான். ரத்தப்பொறியல் சூடாக,காரமாக இருந்ததில் இரண்டு மொந்தை அதிகமாக உள்ளே இறங்கியது. வீட்டுக்குப் போக இன்னும் 6 மைல்கள் நடக்கவேண்டும். கையில் பாரம் இல்லாததாலும், உற்சாகபானம் உள்ளே இருந்ததாலும், நடை வேகமாக இருந்தது.

நடு நிசி. காட்டுப்பாதை. தொட்டால் ஒட்டிக்கொள்ளும் இருட்டு. நகத்துணுக்கு நிலாவின் வெகு சொற்ப வெளிச்சத்தில் தெரிந்தது பாதை. காற்று மரங்களுக்குள் நுழைந்து வெளிவந்ததில் இரைச்சலைப்போல சத்தம் வந்தது. யாரோ வேகமாக முச்சிரைப்பதைப்போல. வேறு சத்தங்கள் இல்லை. குத்துமதிப்பாய் ஒத்தையடிப்பாதையில் லேசான தடுமாற்றத்துடன் கால்களை எட்டிப்போட்டுக்கொண்டிருந்தான்.

சர சரவென்று சருகுகள் மிதிபடும் சத்தம் கேட்டது. என்ன சத்தம் வந்தாலும் திரும்பிப்பார்க்ககூடாது என்பது அவர்களுக்கு பாலபாடம். அவனும் அப்படியே திரும்பிப்பார்க்காமல் நடையில் வேகம் கூட்டினான். காற்றில் குளிர் கூடத்தொடங்கியது. லேசாய் வெளிச்சம் காட்டிக்கொண்டிருந்த நிலாகூட ஏதோ ஒரு மேகத்துக்குள் ஒளிந்துகொண்டதில் இருட்டு கும்மிருட்டாகியது.

பின்னால் கேட்ட சத்தம் இப்போது பக்கத்தில் கேட்டது. தென்னை மரத்திலிருந்து கை நழுவிய மரமேறியைப்போல, போதை வேகமாக விழுந்துகொண்டிருந்தது. போதைக் குறையக்குறைய பயம் அதிகமானது. இதயத்துடிப்பு காதுகளில் கேட்டது. தானாய் வியர்க்க ஆரம்பித்தது. இப்போது சத்தம் நின்றுவிட்டது. பாதையில் அவனுக்கு முன்னால் ஒரு உருவம் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தது. உருவம் நெருங்குவதற்கு முன்னமே மல்லிகை வாசம் மூக்கைத் தொட்டது.

மல்லிகை வாசம் யாருடைய வரவை சொல்கிறது என்பது அவனுக்கு மிக நன்றாகவே தெரியும். தெரிந்ததால் இதயம் இன்னும் வேகமாகத் துடிக்கத்தொடங்கியது. தைரியமான ஆள்தான். பல இரவுகள் இப்படி தனியாக நடந்தவன்தான். ஆனால் இன்றைய அனுபவம் அவன் தைரியத்தை முழுவதுமாய்க் கரைத்துவிட்டது. கால்கள் பிடிமானத்தை இழக்க ஆரம்பித்துவிட்டன. கண்கள் இருளத்தொடங்கி...அந்த உருவம் இவனைத் தொட்டதும் முற்றிலுமாக உணர்விழந்து விழுந்தான்.



தொடரும்

செல்வா
14-04-2008, 07:05 AM
ஆகா...... ஆகா..... அண்ணா... ஆரம்பிச்சாச்சா.... எடுத்த உடனே மயக்கமா.... நல்லாருக்கு.... ஹி...ஹி...துண்டு போட்டு முத இடம் புடிச்சிட்டோம்ல...... அண்ணா... கலக்குங்க.... மலரு ஓடி வா ஓடி வா.... உங்க சொந்தக்காரங்கள எல்லாம் சிவா அண்ணா கூட்டிட்டு வரபோறாங்க....

meera
14-04-2008, 09:51 AM
சிவா அண்ணா அசத்தலான ஆரம்பம்.இந்த முறை நான் மிஸ் பண்ணாம படிப்பேன்.

மொக்க மதி, மலரு ஓடி வாங்க ஓடி வாங்க அண்ணா ஆரம்பிட்டுட்டார்.

சிவா.ஜி
14-04-2008, 10:01 AM
மலரு ஓடி வா ஓடி வா.... உங்க சொந்தக்காரங்கள எல்லாம் சிவா அண்ணா கூட்டிட்டு வரபோறாங்க....

ஆமா மல்ரு...சீக்கிரமா வா. நீ வரலங்கறாதாலதான் இன்னும் அவியளைக் காமிக்கல..

சிவா.ஜி
14-04-2008, 10:32 AM
சிவா அண்ணா அசத்தலான ஆரம்பம்.இந்த முறை நான் மிஸ் பண்ணாம படிப்பேன்.

மொக்க மதி, மலரு ஓடி வாங்க ஓடி வாங்க அண்ணா ஆரம்பிட்டுட்டார்.

நன்றிம்மா. மதியையும், மலரையும் அழைச்சிட்டீங்களா...வந்துடுவாங்க...

மதி
14-04-2008, 10:46 AM
இதோ வந்துட்டேன்...

அண்ணா சொன்ன மாதிரியே மல்ரு சொந்தக்காரங்கள கூட்டிட்டு வந்துட்டீங்க... ஆரம்பமே திகிலாய்... இன்னும் போகப் போக எத்தனை பேருடைய தூக்கம் போகப் போகுதோ..

தொடருங்கள்.

சிவா.ஜி
14-04-2008, 12:11 PM
இதோ வந்துட்டேன்...

அண்ணா சொன்ன மாதிரியே மல்ரு சொந்தக்காரங்கள கூட்டிட்டு வந்துட்டீங்க... ஆரம்பமே திகிலாய்... இன்னும் போகப் போக எத்தனை பேருடைய தூக்கம் போகப் போகுதோ..

தொடருங்கள்.

ஆஹா மதி வந்தாச்சா...ஆமா மல்ரு சொந்தக்காரங்களோட எண்ட்ரி அடுத்த பாகத்துலதான். நன்றி மதி.

சிவா.ஜி
14-04-2008, 02:05 PM
பாகம்-2

விழித்தபோது ஒரு அழகிய முகம் தெரிந்தது....பிரகாசமான கண்கள், மல்லிகை வாசம் உணர்ந்ததும், மீண்டும் மூடிக்கொள்ள ஆசைப்பட்டபோது...

அட என்னய்யா நீ பேயைப் பாத்தவன் மாதிரி இப்படி பொசுக்கு பொசுக்குன்னு மயக்கம் போடற...கண்னை முழிச்சிப் பாரு...நானும் பொம்பளைதான்.

என்ற குரலைக்கேட்டதும் சடக்கென்று எழுந்து அமர்ந்தான். அப்போதுதான் அவளை நன்றாகப் பார்த்தான். அழகாக இருந்தாள். கிராமியக் களையோடு இருந்தாள். தலையில் மல்லிகை. ஆனால் வெள்ளைப் புடைவையெல்லாம் ஒன்றுமில்லை. கட்டம்போட்ட சேலையைத்தான் அணிந்திருந்தாள். அவள் அறியாமல் கால்களைப் பார்த்தான். இருந்தது. அப்பாடா பேய் இல்ல..நிம்மதியாய் ஒரு மூச்சை விட்டுக்கொண்டே...

அதுசரி இந்த நேரத்துல நீ என்னா பண்ற இங்க...?

இந்தா...அதோ தெரிதே அந்த கிராமத்துல எங்க அத்தவூடு இருக்கு. அதுக்கு ஒடம்பு சரியில்லன்னு ஆள் வந்து சொல்லிச்சி. காவேரிப்பட்ணத்துலந்து கெளம்பி வந்தேன். கெளம்பும்போதே நேரமாயிடிச்சி. எங்கம்மாவும் நானும் மட்டுந்தான் வூட்ல இருக்கோம். அதுக்கு ராத்திரியில சரியா கண்ணு தெரியாது. அதான் காத்தால வரேன்னு சொல்லி என்னை போச்சொல்லிச்சி. இந்த பக்கமெல்லாம் எனக்கு பழகுன இடம்தான். அதான் தைரியமா வந்தேன். நீ என்னாடான்னா என்னப் பாத்துட்டு உழுந்துட்ட. எழுயா மேல.ஆம்பளையா இருந்துக்கினு இப்பிடி பயப்பட்ற..

ஏம்மா எனக்கு மட்டும் என்ன இந்த எடம் புதுசா...இந்த ராத்திரியில உன்னை பாத்ததும் மோகினிப்பிசானுன்னு நெனைச்சிட்டேன். சரி சரி..நான் வரேன்...இன்னும் மூணு மைல் போவுனும்.

ம்...நல்லா நெனைச்சே, மோகினிப்பிசாமில்ல....சரி பாத்து போய்யா..

கிளம்பிவிட்டானேத் தவிர சட்டென்று அவளை இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கவேண்டுமென்று தோன்றியதால் திரும்பிப்பார்த்தான். அவள் அங்கு இல்லை. அட அதுக்குள்ள மாயமா மறைஞ்சிட்டாளே...நிஜமாவே அவ பொம்பளைதானா...வேற மாதிரியா இருந்தா இன்னேரம் அடிச்சிருக்குமே...இரண்டுவிதமாகவும் நினைத்துக் குழப்பத்துடன் கொஞ்சம் பயமும் வந்து சேர்ந்துகொள்ளவும்..நடையை விரைவுபடுத்தினான்.

அடுத்த நாள் தன் நன்பன் முருகேசனிடம் சொன்னான்.

பொம்பளையாத்தான் இருக்குண்டா...பிசாசா இருந்தா இன்னேரம் உனக்கு சங்குதான்.

அப்புறம் எப்பட்றா அவ்ளோ சீக்கிரமா மறைஞ்சா..?

குறுக்கு வழியிலப் போயிருப்பாடா...இவன் வேற...போய் எதானா வேலை இருந்தாப் பாரு.

இருந்தும் முழுதாகச் சமாதானமாகமல்தான் இருந்தான் ரங்கன்.

இரண்டுநாளில் இந்த சம்பவத்தை மறந்துவிட்டான். மீண்டும் அவளைப் பார்த்தான். ஆனால் இந்தமுறை மாலை இருள் கவியத்தொடங்கும் நேரத்தில். அதே பாதையில். வெள்ளிச் சந்தை முடிந்து வரும்போது. இந்தமுறை விற்காத பாக்கி வளையல்கள் ஒரு மூட்டையில் அவன் தோளில் தொங்கிக்கொண்டிருந்தது.

அவளைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டான்.

நீதான அன்னிக்கு ராத்திரி வந்த...

ஆமாய்யா நாந்தான். என்னாது மூட்டையில?

வளையல்...

நீ வளையல் யாவாரியா?

ஆமா...சந்தையில வித்துட்டு வரேன்.

யோவ் எனக்கும் கொஞ்சம் வளையல் குடுய்யா....

அவனுக்கென்னவோ அவனுடைய தாத்தா சொன்னது அப்போது நினைவுக்கு வந்தது.

பின்னாலேயே வரும்...பீடிகுடு...பீடிகுடுன்னு கேட்டுக்கினே வரும் திரும்பிப்பாத்தம்னா ஒரே அடிதான். ரத்தம் கக்கி வுழவேண்டியதுதான்..

அவள் வளையல் கொடு என்று கேட்டதும் இதுதான் அவன் நினைவுக்கு வந்தது..லேசான பீதியுடன்..அவளை உற்றுப்பார்த்தான்.

என்னாய்யா அப்படி பாக்குற...காசு தரேன்ய்யா...என்றதும்,

ச்சே எப்பவுமே தப்பாவே நினைக்கறோமே என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே,

காசெல்லாம் ஒண்ணும் வேணாம்..இந்தா உனக்குப் புடிச்ச வளையல்ங்களை நீயே எடுத்துக்க. அன்னிக்கு எனக்கு உதவி செஞ்சதுக்கு நானே உனக்கு சும்மா தரேன்.

கண்கள்விரிய அந்த வளையல் மூட்டையைப் பார்த்தவள் ஆசையாய் அள்ளிக்கொண்டாள்.

இந்தாயா நீயே போட்டுவுடு...

அவள் கையைத் தொட்டதும்..அவனுக்குள் ஜில்லென்ற உணர்வு தோன்றியது. நிஜமாவே ஜில்லுன்னுதான் இருக்கா. ஐஸ் கணக்கா இருக்கே.... வெகு சுலபமாய் வளையல்கள கைகளுக்குள் நுழைந்தன. எலும்பேயில்லையா இவளுக்கு..

கை நிறைய வளையல்களைப் போட்டுக்கொண்டு அசைத்து அசைத்து அவள் உண்டாக்கிய சத்தம் இவனுக்குள் ஒரு இனம்புரியாத பயத்தை உருவாக்கியது. அவசரமாய் மூட்டையைக் கட்டிக்கொண்டு,

சரி நேரத்தோட வூட்டுக்கு போகனும் நான் கெளம்பறேன்..என்று சொல்லிவிட்டு பதிலைக் கூட எதிர்பார்க்காமல் விரைந்து நடந்தான்.

அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தவள் சிரித்தாள். அது ஒரு அமானுஷ்ய சிரிப்பு.

தொடரும்

மதி
14-04-2008, 04:01 PM
ஆஹா....
கிளம்பிடுச்சா...மோகினி பிசாசு..

பயம்மாஆஆஆஆஆஆஆஆஆஆ...இருக்கு.

அக்னி
14-04-2008, 04:58 PM
சிவா.ஜி...
அசத்தல் ஆரம்பம்... அதற்கு முதலில் பாராட்டுக்கள்...
முதலே சொன்னது போலவே ஒரு திகில் கதை. மூடநம்பிக்கைகளைச் உடைக்கப் போகின்றீர்களா அல்லது அசாதாரண நிகழ்வுகளைக் காட்டப் போகின்றீர்களா என்றெண்ணிச் சோர்ந்து போகின்றேன்.
திகில் கலந்த சோர்வு... ஆனால், சுவாரசியமாய்...

meera
15-04-2008, 02:34 AM
அண்ணா, தொடருங்கள் தொடருங்கள்.

மலரு சொந்தங்களை பார்க்க ரொம்ப ஆவலா இருக்கு.

சிவா.ஜி
15-04-2008, 04:17 AM
மூடநம்பிக்கைகளைச் உடைக்கப் போகின்றீர்களா அல்லது அசாதாரண நிகழ்வுகளைக் காட்டப் போகின்றீர்களா .

நன்றி அக்னி. இது எங்கள் பகுதியில் நடந்ததாக சொல்லப்பட்ட கதை. எனக்கு அமானுஷ்யங்களில் நம்பிக்கையில்லை. ஆனால் இது முழுக்க முழுக்க அசாதாரண நிகழ்வுகள் உள்ள கதையாக இருக்கும். எந்த லாஜிக்கும் இருக்காது.

சிவா.ஜி
15-04-2008, 04:18 AM
நன்றி மதி, நன்றி மீரா. தொடர்ந்து போவோம்.

lolluvathiyar
16-04-2008, 06:29 AM
ஐயோ சிவாஜி ஒரு சூப்பர் கதை எழுதி முடித்த கையோடு இப்ப எங்க ஒரு திரிலிங்க் கதை எழுத ஆரம்பிச்சுட்டீங்களே. ஆகா அது பென்னா மோகினியா வளையல் எல்லாம் போட சொல்லுதே. (ஹி ஹி பென்னாக இருந்தால் நான் அந்த வளையல் காரனாக மாறி விடுகிறேன்)

சிவா.ஜி
16-04-2008, 06:32 AM
ஐயோ சிவாஜி ஒரு சூப்பர் கதை எழுதி முடித்த கையோடு இப்ப எங்க ஒரு திரிலிங்க் கதை எழுத ஆரம்பிச்சுட்டீங்களே. ஆகா அது பென்னா மோகினியா வளையல் எல்லாம் போட சொல்லுதே. (ஹி ஹி பென்னாக இருந்தால் நான் அந்த வளையல் காரனாக மாறி விடுகிறேன்)
வளையல் போட்டுட்டு அந்தப் பொண்ணுக்கிட்ட கதாநாயகன் மாட்டிக்கிட்டு படற அவஸ்தையை இனி படிக்கப்போறீங்க. அப்புறமா சொல்லுங்க வளையல்காரனா மாறப்போறீங்களான்னு.

நன்றி வாத்தியார்.

பூமகள்
16-04-2008, 11:03 AM
சிவா அண்ண...!!
என்ன மாதிரி :icon_rollout::wuerg019:பச்சப்புள்ளைகள் உலவுற இடத்துல இப்படி, "நடு நிசி.. காட்டுப்பாதை.. சர சரன்னு சருகு கத்துதுன்னு.." முதல் நாலு வரி படிச்சிட்டு பின்னாடி இருக்கும் ஒவ்வொரு பத்தியின் ஆரம்ப வார்த்தை பார்த்தே நடுக்கம் வந்துட்டது..!!:eek::eek:

நான் அப்புறமா மந்திரிச்சி தாயத்து கட்டிட்டு வந்து படிக்கிறேன் சிவா அண்ணா..!!:icon_ush::icon_ush: (ஏற்கனவே... தாமரை அண்ணாவின் கோடாங்கி கதையை படிக்காம இருக்கேன்..!! :icon_ush:இதுல இன்னொன்னா??!! :eek:)

திகில் கதையா?? :sprachlos020::sprachlos020:அசத்துங்க அசத்துங்க..!!:icon_b::icon_b: வாழ்த்துகள் சிவா அண்ணா..!!:icon_rollout:

சிவா.ஜி
16-04-2008, 11:07 AM
சிவா அண்ண...!!
என்ன மாதிரி http://www.tamilmantram.com:80/vb/பச்சப்புள்ளைகள் உலவுற இடத்துல http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/
http://www.tamilmantram.com:80/vb/
என்னம்மா நீ இப்படிச் சொல்ற...நம்ம தங்காச்சி மல்ரு...பேய்க்கதை எழுதுங்க அண்ணான்னு சொல்லுது. எதுக்கும் மலரு மன்றத்துல இருக்கும்போது மட்டும் இந்தப்பக்கம் வாம்மா....அப்பதான் வேற எந்த பேயோட தொந்தரவும் இல்லாம இருக்கும்.

சிவா.ஜி
16-04-2008, 11:56 AM
பாகம்-3

வீட்டுக்கு வந்தும் அந்தப் பெண்ணின் முகம் அவனுக்குள் என்னவோ செய்துகொண்டிருந்தது. மற்ற எண்ணங்களை எல்லாம் ஜெயித்து அவளைப் பற்றிய எண்ணங்களே முன்னால் வந்துகொண்டிருந்தது. அவளுடையக் கையைத்தொட்டபோது உணர்ந்த சில்லிப்பு இன்னும் இருந்தது. வீட்டிலிருக்கும்போது, சந்தைக்குப் போகும்போது, வியாபாரத்திலிருக்கும்போது, சாப்பிடும்போது, உறங்கும்போது என்று எல்லா நேரங்களிலும் அவளது நினைவுகளாலேயே ஆக்ரமிக்கப்பட்டிருந்தான்.

வெள்ளிவரை தாக்குப்பிடிக்கவே சிரமப்பட்டான். மனதுக்குள் இனம்புரியாத அச்சமிருந்தாலும் அவளைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் மட்டும் குறையவே இல்லை. அந்த வெள்ளியன்றும் அதே நேரத்தில் அதே வழியாகத் திரும்பி வந்தான். எல்லா வளையல்களும் விற்றுவிட்டிருந்தாலும், அவளுக்கென கொஞ்சம் வளையல்களைத் தனியே எடுத்து வைத்திருந்தான்.

அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் அவளும் அங்கே இருந்தாள்.

என்ன நீ உங்க அத்தை வீட்டிலேயே தங்கிட்டியா...எப்பப்பாரு இங்கேயே இருக்கே....

அவன் கேட்டதும் உடனே பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அவளுடைய முதுகு அதிர்வில் அவள் அழுவதை உணர்ந்தான்.

ஏய் என்ன ஆச்சு எதுக்கு இப்ப அழுவுற...நான் என்னா சொல்லிட்டேன்னு இப்படி அழுவுற...உங்க அத்தைக்கு ஏதானா ஆயிடிச்சா...

மெல்லத்திரும்பியவளின் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. மூக்கு நன்றாக சிவந்து இருந்தது. அந்த சிவந்த மூக்கின் மேல் அவள் அணிந்திருந்த மூக்குத்தி ரோஜாப் பூவின் மேல் உட்கார்ந்திருக்கும் கருவண்டாய் தெரிந்தது.

அத்தைக்கெல்லாம் ஒண்ணும் ஆவலய்யா....அவளுக்கென்னா குண்டுக்கல்லாட்டம் நல்லாத்தான் இருக்கா...எனக்குத்தான் ரோதனை...

சொல்லிவிட்டு மீண்டும் அழுதாள். முந்தானையால் மூக்கு சிந்தினாள். ரங்கனால் தாங்க முடியவில்லை.

அட மொதல்ல நீ அழுவறத நிறுத்து. என்னா உன் ரோதனைன்னு சொன்னாத்தான தெரியும்..

எங்கம்மாளுக்கு வயசாவுதாம். கண்ணு வேற சரியாத் தெரியமாட்டேங்குதாம்..அவ செத்ததுக்கப்பறம் நான் தனியா இருந்து கஷ்டப்படுவேன்னு சொல்லி...

சொல்லி.......

என்னை என் மாமன்காரனுக்கு கல்யாணம் பண்ணி வெக்கிறதா சொல்றாங்க...

சொல்லிவிட்டு அவனுடைய முகத்தைப் பார்த்தாள்.

அவளுக்கு கல்யாணமான எனக்கென்ன என்று மனசு ஒரு பக்கம் சொன்னாலும், எதையோ இழப்பதைப்போல ஒரு வெறுமையையும் உணர்ந்தான். அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது.

அவங்க சொல்றதும் வாஸ்தவம்தானே? கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே...

என்று சொன்னவனை முறைத்துக்கொண்டே

என் மாமனுக்கு 50 வயசாவுது ரெண்டாந்தாரமாக் கட்டி வெக்கப் போறாங்களாம்...என்று சொல்லும்போதே குரலில் கோபமும் இயலாமையும் தலைகாட்டத் தொடங்கியது.

அடடா...அப்ப அதுக்குத்தான் அழுவுறியா?

ஆமா...ஆனா நான் இப்ப நீ இந்தப்பக்கமா வருவேன்னுதான் உண்னைப் பாக்க வந்தேன்.

என்னை எதுக்குப் பாக்கனும்..?

யோவ் ஒண்ணும் தெரியாதமாறி பேசாதய்யா. நான் இப்பவே உன்கூட வந்துடறேன். என்னை உன் கூட கூட்டிகிட்டு போயிடுய்யா. நான் உன்கூடவே இருந்துடறேன்...

இவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. என்ன சொல்கிறாள் இவள். இரண்டு நாள்தான் பார்த்திருக்கிறோம் அதற்குள் என்னோடு வந்துவிடுகிறேன் என்று சொல்கிறாளே..என்று நினைத்தாலும், சந்தோஷமாகத்தான் இருந்தது. இந்த ஒருவாரத்தில் நான் அனுபவித்ததையே அவளும் அனுபவித்திருப்பாளோ என்ற எண்ணம் தோன்றியதும் அவளைக் கனிவுடன் பார்த்துக்கொண்டே..

இப்படி திடுதிப்புன்னு கூட்டிட்டுப் போன்னு சொன்னா எப்படி...எங்க வூட்ல என்னா சொல்வாங்களோ..

எங்கியாவது ஒரு குடிசையில வெச்சிடுய்யா. வூட்டுக்கு என்னாத்துக்கு கூட்டினு போற? நான் தனியா இருந்துக்கறேன். வூட்ல எல்லாம் சமாதானமாயிட்டாங்கன்னா அப்புறமா அங்க போய்க்கலாம்...

நீ சொல்றதும் சரிதான். சரி கெளம்பு. என் சிநேகிதன் ஒருத்தன் இருக்கான். அவனுது கூட ஒரு வீடு காலியாத்தான் இருக்கு அங்க போயிடலாம்.

துணிந்து முடிவெடுத்தான். இல்லை அவளுடைய அழகு அவனை அப்படி முடிவெடுக்க வைத்தது. விதி யாரை விட்டது. முருகேசன் வீட்டுக்கு அழைத்துப்போனான். அவளை ஒரு இடத்தில் நிறக வைத்து விட்டு அவன் மட்டும் போய் முருகேசனை அழைத்து வந்தான்.

இவதான் நான் சொன்னனே அந்தப் பொண்ணு..

முருகேசனிடம் காட்டினான்.

இருட்டாய் இருந்ததால் அவளுடைய முகத்தைப் பார்க்க முடியவில்லை. அவர்களை அழைத்துக்கொண்டு காலியாய் இருந்த அந்த கூரைப் போட்ட வீட்டுக்கு வந்தான். சிறிய வீடு. உள்ளே நுழைந்து லாந்தர் விளக்கைக் கொளுத்தினான். அந்த விளக்கு வெளிச்சத்தில் அவள் தேவதையாகத் தெரிந்தாள். பய அதான் பொதுக்கடீர்ன்னு விழுந்துட்டான் என்று நினைத்துக்கொண்டே

ரங்கா இங்கே தங்கிக்கங்க. பகல்ல யாராச்சும் பாத்துக்கேட்டாங்கன்னா என்ன சொல்லுவீங்க?

எங்கடா அக்கம் பக்கத்துல வூடுங்களே இல்ல. யார் வந்து கேக்கப் போறாங்க...என்று ரங்கன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே....

நான் பகல்ல வெளியவே வரமாட்டேன். யாரானா தெரிஞ்சவங்கப் பாத்துட்டு என் மாமன்காரன்கிட்ட சொல்லிட்டாங்கன்னா என்னா பண்றது?

குரல்கூட அழகாய்த்தான் இருக்கிறது. ஆனாலும் அந்தக் குரலில் ஏதோ ஒன்றை உணர்ந்தான் முருகேசன். அடி வயிற்றில் ஒரு ஜில்லிப்பு.

அந்த உணர்வுகளோடே அவளை மீண்டும் பார்த்தான். அவள் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவனுக்கு அச்சத்தைக் கொடுத்தது.


தொடரும்

செல்வா
16-04-2008, 12:31 PM
:eek::eek::eek::eek::icon_shok::icon_shok::icon_shok:
அண்ணா பாக்கட் நாவல் ஆரம்பிச்சுரலாமா....? நான் தான் மேனேஜர். :D

சிவா.ஜி
16-04-2008, 12:36 PM
பேஷா ஆரம்பிச்சுடலாமே. ஆனா நம்ம பாக்கெட் நிறையுமா....யோசிக்கனும் (அப்புறம் மேனேஜர் சாம்பளமில்லாம வேலை செய்ய வேண்டி வரும்...ஹா...ஹா...ஹா..)

மதி
16-04-2008, 01:17 PM
படிக்கும் போதே அடிவயிறுல ஜிலீர்ங்குது..
கலக்குங்க..

அக்னி
16-04-2008, 04:40 PM
உரையாடல் யதார்த்தம், தெளிவான, திகிலான கதை நகர்வு...
திகில் தொடரட்டும்...
உறையக் காத்திருக்கின்றோம்...

சிவா.ஜி
16-04-2008, 04:53 PM
படிக்கும் போதே அடிவயிறுல ஜிலீர்ங்குது..
கலக்குங்க..

ஆஹா..ஜிலீர் வந்துடுடிச்சா....தொடர்ந்து வாங்க...இன்னும் நிறைய பாக்கலாம்.

சிவா.ஜி
16-04-2008, 04:56 PM
உரையாடல் யதார்த்தம், தெளிவான, திகிலான கதை நகர்வு...
திகில் தொடரட்டும்...
உறையக் காத்திருக்கின்றோம்...

மிக்க நன்றி அக்னி. முடிந்தவரை எழுத முயற்சிக்கிறேன்.

meera
17-04-2008, 04:09 AM
அண்ணா, ஒரே பக் பக்னு இருக்கு. அடுத்த பாகத்திற்காய் காத்திருக்கிறோம்

சிவா.ஜி
17-04-2008, 04:25 AM
அண்ணா, ஒரே பக் பக்னு இருக்கு. அடுத்த பாகத்திற்காய் காத்திருக்கிறோம்
நன்றிம்மா. இன்னைக்கே அடுத்த பாகத்தைக் கொடுத்திடறேன்.

சிவா.ஜி
17-04-2008, 07:04 AM
பாகம்-4


ரங்கனை அத்தனை சந்தோஷமாக அதுவரை யாரும் பார்த்ததில்லை. வாய்கொள்ளாச் சிரிப்பும், பூரித்த முகமுமாக அவன் வியாபாரத்துக்குப் போவதைப் பார்த்து முருகேசனுக்கு சந்தோஷமாக இருந்தது. ரங்கனின் பெற்றோருக்கும் அது மகிழ்ச்சியையே கொடுத்தாலும், இவனுக்கு ஒரு திருமணத்தை செய்து வைத்துவிடவேண்டுமென்ற எண்ணம் மனதில் இருந்துகொண்டே இருந்தது. அவன்தான் பிடி கொடுக்காமல் நழுவிக்கொண்டே இருந்தான். அப்படியும் விடாமல் அவனுக்கு பெரியாம்பட்டியில் ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். வீட்டுவேலைகளில் கெட்டிக்காரியாய் இருந்தாள். ஒற்றை ஆளாகவே காடு கழனிகளையும் பார்த்துக்கொண்டு, ஆடு மாடுகளைக் கவனித்து கொண்டிருந்தாள்.

ஆனால் ரங்கன் பெண்பார்க்கவே வரமாட்டேனென்று உறுதியாக சொல்லிவிட்டான். ஏன் இவன் இப்படி கல்யாண விஷயத்தில் விட்டேற்றியாக இருக்கிறானென்று அவர்களுக்குப் புரியவில்லை. வியாபரத்துக்குப் போகிறான். பல நேரங்களில் வீட்டுக்கு வருவதேயில்லை. அப்படி எங்குதான் போகிறான், என்னதான் செய்கிறானென்று அவர்களுக்கு கவலை. ரங்கன் எதைப்பற்றியும் கவலைப் படாமல் அந்தப் பெண்ணுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தான்.

அவளும் இவனிடம் பணம் காசை எதிர்பார்க்காமல், அவன் கொண்டுவந்து கொடுக்கும் கொஞ்ச பணத்திலேயே அவனுக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப்போட்டாள். மிக சந்தோஷமாக அவனை வைத்துக்கொண்டாள். இதெல்லாம் கொஞ்ச நாள்தான். அன்று ரங்கனைப் பார்த்த முருகேசனுக்கு கவலையாக இருந்தது. ஆரம்பத்திலிருந்த அந்த ஜொலிப்பு இப்போது இல்லையே. நாளுக்குநாள் மெலிந்து கொண்டே வருகிறான். கண்கள் குழிவிழுந்துவிட்டன. கைகளில் அந்த பழைய பலம் இல்லை. மொத்தத்தில் பேயறைந்தவனைப் போல இருந்தவனைப் பார்த்து,

என்னடா ரங்கா இப்படி இருக்கே...?

கேட்டவனை சோர்வுடன் பார்த்துக்கொண்டே..

ஏண்டா எனக்கென்னா நல்லாத்தானே இருக்கேன்..

பொய்சொல்லாதடா...முன்ன இருந்த மாதிரியா இருக்கே...என்னவோ காயலா வந்து படுத்து எழுந்தவன் மாதிரிதான இருக்க...

அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லடா...

என்று சொன்னாலும் அவன் குரலில் தடுமாற்றம் இருந்தது.

ரங்கா என்னவோ பிரச்சனை இருக்கு, ஆனா என்கிட்ட சொல்ல மாட்டேங்குற...நான் உன் சிநேகிதண்டா ஏதா இருந்தாலும் என்கிட்ட சொல்லு...

வற்புறுத்திக் கேட்டவனை ஒரு இயலாப் பார்வைப் பார்த்துவிட்டு,

எனக்கு யாவாரத்துல ஒண்ணும் பெருசா வருமானம் இல்லடா. அதுலயும் பாதியை எங்க வூட்டுக்கு குடுத்துடறேன். மீதிக் காசைத்தான் அவகிட்ட குடுக்கறேன். ஆனா தினமும் கறியும், மீனுமா ஆக்கிப் போடறா. வெளியிலயும் போறதில்ல. எங்க வாங்குற இதெல்லாம்ன்னு கேட்டா வூட்டாண்டையே கொண்டாந்து தராங்கன்னு சொல்றா. எனக்கென்னவோ அவ ஏதானா தப்புத்தண்டா பண்றாளோன்னு சந்தேகமா இருக்குடா...

ஓரளவு எதிர்பார்த்ததுதானென்றாலும் முருகேசனுக்கு இதைக் கேட்டதும் சங்கடமாக இருந்தது.

அப்படியெல்லாம் ஒண்ணும் இருக்காதுடா. நீ மனசைப் போட்டு கொழப்பிக்காத...

இல்லடா முருகேசா...நான் சனிக்கிழமை மட்டுந்தான் வூட்ல இருப்பேன். மத்த நேரமெல்லாம் ராத்திரிக்குத்தான் வரேன். அப்பவெல்லாம் நல்ல சாப்பாடு செஞ்சு போடறவ, சனிக்கிழமை மட்டும் சோறே ஆக்கறதில்ல. எப்பப்பாரு படுத்துக்கிட்டே இருக்கா. கேட்டா சனிக்கிழமை நான் ஒண்ணும் சாப்பிடறதில்லைன்னு சொல்றா.

முருகேசனுக்கு வித்தியாசமாக இருந்தது.

ஏன் அப்படி பண்றா..?

அதான் எனக்கும் தெரியலை. வூடுன்னு இருந்தா ஒரு சாமிப்படமாவது இருக்கனுன்னு அன்னிக்கு ஒரு படத்தை வாங்கிகிட்டுப் போனா, அதைப் பாத்துட்டு பத்ரகாளியாட்டம் கத்தறா...நானே பயந்துட்டேன். ஏண்டி நீ சாமி கும்புட மாட்டியான்னு கேட்டா, முழிக்கறா...ஆனா அந்தப் படத்தைக் கையால கூடத் தொடல. அதை மொதல்ல வெளியே தூக்கிப் போட்டுட்டு வான்னு கத்துறா.

முருகேசனுக்கு லேசாக ஏதோ விளங்கத்தொடங்கியது. அன்று பார்த்த அவளுடைய பார்வை நினைவுக்கு வந்தது.

அப்படியா...ஏன் அப்படி பண்றா...? சரி வுடு ஏதானா காரணம் இருக்கும்.

ரங்கனை சமாதானப் படுத்த அப்படி சொன்னாலும், தான் நினைப்பதை அவனுக்குச் சொல்லி அவனை பயமுறுத்த வேண்டாமென்று நினைத்தான். இருந்தாலும் அவன் மனதில் ஒரு திட்டம் உருவானது.

என்னடா யோசனை பண்ற..?

ஒண்ணுமில்லடா...சரி உனக்கு சந்தைக்குப் போறதுக்கு நேரமாச்சு, நீ கிளம்பு. நான் அப்புறமா வந்து பாக்கறேன்.

வூட்டுக்கெல்லாம் வந்துடாதடா. அவ உங்க ஆளுங்க யாரும் இந்த வூட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்றா..நாளைக்கு புதன் சந்தைக்கு வருவயில்ல அங்க பாக்கலாம். அப்ப நான் கிளம்பறேன்.

அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்த முருகேசனுக்கு, ரங்கன் கடைசியாய் சொன்னதைக் கேட்டதும் அவன் நினைத்தது சரிதான் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

உடனே அந்த பெண் இருக்கும் வீட்டுக்குக் கிளம்பினான்.

அககம் பக்கம் அதிகமாய் வீடுகள் இல்லை. முருகேசனின் தாத்தாவுக்கு ஒரு தொடுப்பு இருந்தது. அவளைத்தான் அவர் அங்கே குடி வைத்திருந்தார். தாத்தா இறந்த பிறகு அவளும் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு திப்பனப்பள்ளிக்கே போய்விட்டாள். இவர்கள் யாரும் அதில் புழங்குவதே இல்லை. முருகேசன் மட்டும்தான் அடிக்கடி அந்த வீட்டுக்கு வந்து போய்க்கொண்டிருப்பான். சேக்காளிகளோடு சாராயம் குடிப்பதற்காக.

வீட்டை நெருங்கியதும் கதவைத் தட்டாமல் பின் பக்கமிருந்த ஜன்னலுக்கு அருகில் சென்றான். நேராக நிற்காமல் சுவரோடு சாய்ந்து கொண்டு லேசாக விரலால் ஜன்னல் கதவைத் தள்ளினான். கிடைத்த சிறிய இடைவெளியில் உள்ளே பார்த்தான்.

உள்ளே அந்தக் காட்சியைப் பார்த்ததும் வெலவெலத்துப்போய்விட்டான்.


தொடரும்

sns
17-04-2008, 07:14 AM
ஆக என்ன ஒரு அற்புதமான திகில் கதை சிவாஜி அண்ணா இப்போது எல்லா பரிமானாங்களிலும் அசத்த ஆரம்பித்துவிட்டார் , வாழ்த்துக்கள் அண்ணா

lolluvathiyar
17-04-2008, 07:17 AM
வளையல் போட்டுட்டு அந்தப் பொண்ணுக்கிட்ட கதாநாயகன் மாட்டிக்கிட்டு படற அவஸ்தையை இனி படிக்கப்போறீங்க.

ம் அது எல்லாம் சுக*மான* அவ*ஸ்தைக*ள் சிவா ஜி, ச*ரி நீங்க* சொல்ல*ற*தை பார்போம் (மிர*ட்டீட்டே இருக்கீங்க*)


பாகம்-3
இவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. என்ன சொல்கிறாள் இவள். இரண்டு நாள்தான் பார்த்திருக்கிறோம் அதற்குள் என்னோடு வந்துவிடுகிறேன் என்று சொல்கிறாளே..


ம் அதுதான் இந்த உனர்ச்சி மிகவும் பவர்புல் உனர்ச்சி இது ஏற்பட கால அவகாசம் அதிகம் தேவை படுவதில்லை.

ஆனா நீங்க எங்கியோ திரிலிங்கா கொன்டு போறீங்க மீன் குழம்பு ஆசை காட்டி பின்னால அது எப்படி வந்ததுனு பயமுறுத்தறீங்க. காத்து கருப்பு ஏதாவது .......? சரி சீக்கிரம் தொடருங்க.

சிவா.ஜி
17-04-2008, 07:29 AM
ஆக என்ன ஒரு அற்புதமான திகில் கதை சிவாஜி அண்ணா இப்போது எல்லா பரிமானாங்களிலும் அசத்த ஆரம்பித்துவிட்டார் , வாழ்த்துக்கள் அண்ணா

ரொம்ப நன்றி sns. என்னுடைய கதைக்கு உங்கள் முதல் பின்னூட்டமே உற்சாகமான ஊக்குவிப்பாய் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

சிவா.ஜி
17-04-2008, 07:31 AM
நன்றி வாத்தியார். ரொம்ப பெருசா எல்லாம் ஒண்ணுமில்ல. ஏதோ தெரிஞ்சதை, கேட்டதை வைத்து எழுதுகிறேன்.

meera
17-04-2008, 08:55 AM
சிவா அண்ணா, காதை கொடுங்க ஒரு ரகசியம் சொல்றேன்.


இந்த கதை முழுதும் எனக்கு மட்டும் தனிமடல் அனுப்பிருங்க அண்ணா.

பொறுமையா காத்திருக்க முடியலை ஹி ஹி:aetsch013::aetsch013:

logini
17-04-2008, 09:04 AM
அண்னா அருமையாக இருக்கு உங்கள் திகில் கதை. அவன் அப்படி என்ன காட்சி பார்த்து வெலவெலத்துப்போனான் என்று சீக்கிரமாக எழுதிடுங்க சஸ்பன்ஸ் தாங்கல..

சிவா.ஜி
17-04-2008, 09:42 AM
தங்கைகள் மீரா, லோஜினி கொஞ்சம் பொறுங்க சீக்கிரமாவே மீதியை கொடுத்துடறேன். ரொம்ப நன்றிம்மா.

மதி
17-04-2008, 05:06 PM
வைக்க வேண்டிய இடத்துல சஸ்பென்ஸ் வச்சு முடிச்சிட்டீங்களே...
சீக்கிரம் செல்வாக்கு நீங்க சொன்னது தான் உங்களுக்கும். ஆபிஸுக்கு லீவ் போட்டாவது எழுதி பதியுங்க..

சிவா.ஜி
17-04-2008, 06:41 PM
வைக்க வேண்டிய இடத்துல சஸ்பென்ஸ் வச்சு முடிச்சிட்டீங்களே...
சீக்கிரம் செல்வாக்கு நீங்க சொன்னது தான் உங்களுக்கும். ஆபிஸுக்கு லீவ் போட்டாவது எழுதி பதியுங்க..
நாளைக்குப் போட்டுடறேன் மதி. ரொம்ப நன்றி தொடர்ந்த ஊக்கத்துக்கு.

இதயம்
17-04-2008, 09:41 PM
சிவாவின் கதை எழுதும் திறமையின் அடுத்த பரிணாம வளர்ச்சியாய் திகில் கதை..! சிலர் திகில் கதை எழுதுகிறேன் பேர்வழி என்று கண்டதை எழுதி கடைசியில் எப்போ முடிப்பார் என்று நம்மை திகில் படுத்துவார்கள். ஆனால், இந்த கதையில் உண்மையிலேயே திகில் தெரிகிறது. குறிப்பாக நான்காவது அத்தியாயம் வெலவெலக்க வைக்கும் திகிலோடு முடிந்திருக்கிறது. முருகேசன் அப்படி என்ன தான் பார்த்தான் என்பதை தெரிந்து கொள்ள நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்..! (ஒருவேளை ஜகன்மோகினி ஸ்டைலில் அந்த பெண் தன் காலை அடுப்புக்குள் வைத்து எரித்து சமைத்துக்கொண்டிருந்தாளோ..?!!). இக்கதையை படிக்கும் நாமெல்லாம் இந்த பெண் பேயோ என்று நினைத்துக்கொண்டிருக்க, நாம் பேய் வடிவம் கொடுத்தவளுடன் வாழும் ரங்கனோ அவள் ஒழுக்கமில்லாதவளோ என்று நினைக்கிறேன். மன உணர்வுகளின் விகிதாச்சாரம் பரந்து விரிந்து முரண்பாடுகளை காட்டுகிறது..!!

பேய், பிசாசு என்பனவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும், சுடுகாடு என்று அறியாமல் அந்த பிரதேசத்தை கடும் இரவில், தனிமையில் கடக்க முடியும் என்னால், அது சுடுகாடு என்று அறிந்த பிறகு கடப்பது அத்தனை எளிதல்ல..! பகுத்தறிவுக்கும் மீறிய சில விஷயங்கள் நடப்பதுவும், நம்புவதும் இருக்கிறதென்றால் அதற்குள் அடங்கும் இந்த அமானுஷ்ய சங்கதிகள்.!! திகில் உணர்வு மிகவும் விநோதமானது. பேய் கதையை தனிமையில் அமர்ந்து படிக்க அச்சமாக தான் இருக்கும். ஆனால், மனம் படிக்க சொல்லும்.

இந்த பின்னூட்டம் எழுத தொடங்கிய போது இரவு 12.03. இந்த கதைக்கு பொருத்தமான நேரம். ஆனால், திகிலோ, பயமோ அத்தனை இல்லாததற்கு காரணம் நம் ஊர் போன்ற கரிய இருட்டு, அத்துவான பிரதேசம், தன்னந்தனியாய் நிற்பது போன்றவை இல்லாததாக இருக்கலாம்..!! ஆனால் உள்ளுக்குள் ஒரு உதறல் இந்த கதையால்..! இதை எழுதிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென்று ஒரு பொருள் தற்செயலாக மேஜையிலிருந்து விழுந்தால் மனசுக்குள் திகில் பந்து உருவாகி உருளுவதும், இதயத்துடிப்பு அதிகமாவதும் நிச்சயம்.! பயத்தை வெளியே காட்டாமல் இருப்பது தான் வீரமாம்..!! அந்த வகையில் நானும் வீரனே...!! (மேஜையிலிருந்து எதுவும் விழாத வரை..! ஹி...ஹி...!!)

சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தாமல் இருந்தது இந்த கதையின் கூடுதல் பலம். திகிலில்லா தலைப்பு இக்கதைக்கு்கொஞ்சம் பலவீனம்..! கதை நகர, நகர அடுத்து என்னவாக இருக்கும் என்ற ஆவல் அதிகப்படுகிறது. கதாசிரியர் கேட்ட கதை என்பதால் சம்பவங்கள் நூல் பிடித்தது போல் அழகாய் தொடர்ந்து வருவதை நம்மால் உணர முடிகிறது. உரையாடல்கள் வெகு எதார்த்தம். பாமர மக்களின் மனநிலையை அப்படியே படம் பிடித்து காட்டுவது போல் உரையாடல்களை அமைத்திருப்பதன் மூலம் கதாசிரியர் அம்மக்கள் தொடர்பான வாழ்க்கையை பார்த்து,படித்த படிமங்கள் தெரிகிறது. பேய்க்கதையின் வெற்றி என்பது கதையின் மூலம் பேய் என்ற அரூபத்தை மனதால் உணர்வது தான். தனிமையில் இருக்கும் போது யாரேனும் ஒருவர் இந்த கதையை படிக்க வர தயங்கினால் அது இந்த கதையின் வெற்றி..!!

ஒரு கதாசிரியராய் சிவாவின் முன்னேற்றம் பிரமிக்க வைக்கிறது. பாராட்டு என்ற என்ற சக்தியை மட்டும் வைத்துக்கொண்டு சகட்டுமேனிக்கு கதைகளை எழுதி தள்ளுகிறார். மோதல் கதை மட்டுமல்ல, மோகினி கதையும் உங்களுக்கு வசப்படுகிறது சிவா...! போகும் இடம் வெகு தொலைவில் இருக்கிறது.. தளராமல் தொடருங்கள்..! வாழ்த்துக்கள்..!!

lolluvathiyar
18-04-2008, 05:31 AM
பேய், பிசாசு என்பனவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும், சுடுகாடு என்று அறியாமல் அந்த பிரதேசத்தை கடும் இரவில், தனிமையில் கடக்க முடியும் என்னால், அது சுடுகாடு என்று அறிந்த பிறகு கடப்பது அத்தனை எளிதல்ல..!

என்ன இதயம் இப்படி சொல்லீட்டீங்க, நல்ல பசங்களுக்கு தான் சுடுகாட்ட கன்டா பயமா இருக்கும், சின்ன வயசுல எங்க ஊர்ல நைட் பெரிசுக யாருக்கும் தெரியாம திருட்டு தம் மற்றும் தன்னி அடிக்க நாங்க தேர்ந்துடுக்கற இடம் சுடுகாடுதான். (எந்த டிஸ்ட்ரர்பும் இருக்காது). போலீஸ்காரன் கூட நைட் அங்க வரமாட்டான்.

சிவா.ஜி
18-04-2008, 05:56 AM
ஆனால், இந்த கதையில் உண்மையிலேயே திகில் தெரிகிறது. குறிப்பாக நான்காவது அத்தியாயம் வெலவெலக்க வைக்கும் திகிலோடு முடிந்திருக்கிறது. முருகேசன் அப்படி என்ன தான் பார்த்தான் என்பதை தெரிந்து கொள்ள நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்..!
வாழ்த்துக்கள்..!!
எப்போதுமே இதயத்த்ஹின் பின்னூட்டம் பல சங்கதிகள் அடங்கிய அழகான விவரணமாக இருக்கும். இந்தப்பின்ன்னூட்டமும் அப்படியே. வெறுமனே கதை நன்றாக இருக்கிறது அல்லது சொதப்பலாக இருக்கிறது என்று சொல்லாமல் ஆழமாக அலசுவார். அந்த அலசல் எழுதுபவருக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். அதற்காகவே என்னுடைய மனமார்ந்த மிகப்பெரிய நன்றி.

அதே போல் கதை நகர்வை வைத்து அடுத்ததை யூகிக்கும் திறனும் உங்களுக்கு அதிகம். கணிப்பு பெரும்பாலும் மிகச் சரியாகவே இருக்கும்.
ஊக்கத்திற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி இதயம்.

meera
18-04-2008, 06:16 AM
அண்ணா, அடுத்த பாகத்தை விரைவில் தாருங்கள்.

தாமரை
18-04-2008, 06:29 AM
சிவாஜி, எத்தனை நடுராத்திரி இந்த ஊர் வழியால்லாம் போயி, இருட்டான இடத்தில காரை நிறுத்திட்டு (ம்ம் அதேதான்)

ஆனால் ஒருத்தர் கூட வரவேயில்லையே!..

இருக்கட்டும், கதை ஆரம்பத்தைப் பார்த்ததுமே 15 வயசில எங்கப்பாவைப் பிடிச்சு சாகும் வரை கூடவே இருந்த மோகினி ஞாபகம் வருதுப்பா!

சிவா.ஜி
18-04-2008, 06:43 AM
பாகம்-5

அன்று ரங்கனோடு லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் பார்த்த பெண்ணா இவள்? தேவதையைப்போல இருந்தவள் விகாரமான முகத்தோடு ஏதோ ஒரு மிருகத்தின் பச்சை மாமிசத்தை தன் கோரைப்பற்களால் கடித்து இழுத்துக்கொண்டிருந்தாள். வாயோரத்தில் வழிந்த ரத்தத்தோடு பார்க்கவே பயங்கரமாக இருந்தாள். அருகிலேயே ஒரு பெரிய வாணலியில் பலவிதமான ஜந்துக்கள் கொதித்துக்கொண்டிந்தது. இடையிடையே தன் கைகளை அந்த கொதிக்கும் எண்னைக்குள் விட்டு துழாவிக்கொண்டிருந்தாள். கண்களைப் பார்த்ததும் உடல் நடுங்கியது. கருவிழிகளே இல்லாமல் வெள்ளை மட்டுமே தெரிந்த அந்த கண்களின் அமானுஷ்ய தோற்றம் உடலை சில்லிட வைத்தது.

அவள் மட்டும் பார்வையைத் திருப்பி பார்த்துவிட்டால் நம் கதி அவ்வளவுதான் என்ற நினைப்பு வந்தது. பயத்தோடு உடனடியாக அந்த இடத்தைவிட்டு நீங்கி மெள்ள நடந்து கொஞ்ச தூரம் வந்ததும் ஓட்டமெடுத்தான். அவளது வெள்ளை விழிப்பார்வை அவனுடைய பிடரியைத் தொடுவதைப்போல உணர்ந்தவன் இன்னும் வேகமெடுத்து ஓடி வந்து மூச்சிரைக்க ஒரு இடத்தில் நின்றுவிட்டான். உடலில் படபடப்பு இன்னும் அடங்கவில்லை. தொப்பலாக நனைந்திருந்தான். நுரையீரல் காற்றுக்காக தவித்தது. வாயாலும் மூக்காலும் வேகவேகமாக மூச்சை உள்ளிழுத்துக்கொண்டான்.

சற்று ஆசுவாசம் கிடைத்ததும், தான் நினைத்தது சரிதான். இவள் பெண்ணல்ல மோகினிப்பிசாசு. என்பது திட்டவட்டமாகத் தெரிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டே அடுத்து செய்யவேண்டிய காரியத்தை யோசிக்கத் தொடங்கினான். ரங்கனை இவளிடமிருந்து காப்பாற்ற வேண்டும். இப்போதே போய் அவனிடம் சொல்லி இனி அந்த வீட்டுக்குப் போக வேண்டாம் என்று சொன்னாலும் அவள் சும்மா இருக்க மாட்டாள். அவன் எங்கிருந்தாலும் வந்து அவனை அழித்துவிடுவாள். அதனால் அவள் அதை செய்வதற்குள் நாமே முந்திக்கொள்ள வேண்டும். சிந்தித்துக்கொண்டே நடந்தவன் கடைகள் இருக்குமிடத்துக்கு வந்து சேர்ந்திருந்தான். பளிச்சென்று அவன் மூளையில் ஒரு மின்னல் வெட்டியது.

காரிமங்கலத்தில் ஒரு பேயோட்டி இருக்கிறான். முனுசாமி. கபாலப் பூஜை செய்து எந்தப் பேய்களையும் விரட்டிவிடுவான். காளி உபாசகன். ஆம். அவன்தான் சரி. முதலில் போய் ரங்கனைப் பார்த்து விவரங்களை சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இன்றைக்கு சந்தை நடக்குமிடத்துக்கு விரைந்தான்.


சந்தையில் ரங்கனைத் தேடிப்பிடித்து, இவனை ஆச்சர்யத்துடன் பார்த்தவனை,

ஒன்றும் பேசாமல் என் கூட வா.....என்று யாருமில்லாத ஒரு இடத்துக்கு அவனை அழைத்துக்கொண்டு வந்தான்.

தான் பார்த்த அத்தனை விஷயங்களையும் அவன் சொல்லச் சொல்ல ரங்கனுக்கு பயத்தில் அடிவயிறு கலங்கியது. கைகாலெல்லாம் நடுங்கத் தொடங்கிவிட்டது.

அய்யயோ...இத்தினி நாளா அந்த பிசாசுக்கூடவா நான் குடும்பம் நடத்திக்கிட்டிருந்தேன்...என்னடா முருகேசா இப்ப என்ன பன்றதுடா..

பரிதாபமாகக் கேட்டவனைப் பார்த்து,

நீ ஒண்ணும் கவலைப் படாதடா...எல்லாம் பாத்துக்கலாம். உன் ஒடம்பு எளைச்சிக்கிட்டு வரும்போதே எனக்கு ஒரு சந்தேகம். கொஞ்ச கொஞ்சமா உன் ரத்தத்தை உறிஞ்சிருக்கு அந்த பிசாசு. இன்னும் கொஞ்ச நாள் அதுகூட இருந்திருந்தியானா அவ்ளோதான். நல்லவேளை நீ என்கிட்ட அவளைப் பத்தி சொன்னே.

இப்பதாண்டா எனக்கும் புரியுது அவ ஏன் சாமிப்படத்தை வேணான்னு சொன்னான்னு.

ஆமாடா. இதுங்கல்லாம் கல்யாணம் ஆனவங்களைப் புடிக்கறதில்ல. உன்ன மாதிரி இருக்கறவங்களைத்தான் புடிக்கும்.

சரி இப்ப என்னடா பண்ணப்போறோம்?

காரிமங்கலத்துல இருக்கானே அந்த பூசாரி முனுசாமி அவனைக் கூட்டிக்கிட்டு போய் அவளை அடக்கிடலாண்டா.

எப்புட்றா..அவனைக் கூட்டிக்கிட்டு அந்த வீட்டுக்குப் போனா அவளுக்கு உடனே தெரிஞ்சிடுமே....மூணு பேத்தையும் காலி பண்ணிடமாட்டா...?

அதுக்கெல்லாம் வழி இருக்குடா. நீ ஒண்ணும் கவலைப் படாதே. வா இப்பவே காரிமங்கலம் போலாம்.

இரண்டு பேரும் அப்போதே கிளம்பி அந்த பேயோட்டியைப் பார்க்கப் போனார்கள்.


தொடரும்

சிவா.ஜி
18-04-2008, 06:51 AM
சிவாஜி, எத்தனை நடுராத்திரி இந்த ஊர் வழியால்லாம் போயி, இருட்டான இடத்தில காரை நிறுத்திட்டு (ம்ம் அதேதான்)

ஆனால் ஒருத்தர் கூட வரவேயில்லையே!..

இருக்கட்டும், கதை ஆரம்பத்தைப் பார்த்ததுமே 15 வயசில எங்கப்பாவைப் பிடிச்சு சாகும் வரை கூடவே இருந்த மோகினி ஞாபகம் வருதுப்பா!

ஆமா நானும் இந்தப் பகுதிகளுக்கு நிறைய முறை போயிருக்கேன். இப்படியெல்லாம் ஒண்ணுமேயில்லை. ஆனா இதை மாதிரி நிறைய கதைகளை எங்க கிராமத்துல சொல்வாங்க.

என் மாமனார்கூட ஒருமுறை ராணுவத்திலிருந்து விடுப்பில் வந்த போது, இரவு தன் கிராமத்துக்கு போய்க்கொண்டிருக்கும்போது தன்னைத்தொடர்ந்து வரும் காலடி சத்தத்தைக் கேட்டு அலறி அடித்துக்கொண்டு பெட்டிகளை அங்கே போட்டுவிட்டு இரண்டு கிலோமீட்டர் ஓடி வீட்டுக்குப் போயிருக்கிறார். ஆனால் அது பன்றி என்பது தெரிந்ததும் அனைவரும் அவரைக் கேலி செய்திருக்கிறார்கள்.

உங்க அப்பாவை மட்டுமில்லை தாமரை எங்கப்பாவையும் பிடித்திருந்தது.

மதி
18-04-2008, 11:17 AM
அதே விறுவிறுப்பு...
பிசாசின் வர்ணனை பயங்கரம்... பேயோட்டியாச்சா..இல்லியா?

அமரன்
18-04-2008, 12:35 PM
அசத்தல் தொடர். திகில் படர்த்தும் அம்சங்களை கொண்டுள்ளது. இடையில் கவியும் கவித்துவம் சிலிர்க்க வைக்கிறது. நகத்துணுக்கு நிலாவில் சூழலை சொன்னது. ரோஜாஇதழ் வண்டில் அவள் அழகை வர்ணித்தது என வார்த்தைச் சிக்கனத்தில் கச்சிதமான பொருளடக்கம். கொலுசுச்சத்தமோ, வளையோசையோ இல்லாமல் வரும் மோகினி.. வளையாரல்காரன் கதை பாத்திரம். பொருத்தமான ஜோடித்தேர்வு. தவறுகள் ஏதும் தெரியவில்லை. இதயத்தின் கதம்ப கருத்து பிரமாதம். மதியின் தொடரூக்கம் உற்சாகம்.

இதைப்படித்தும் எனக்கு பயம் வரவில்லை. ஏன்னா பலதடவை நான் பேசியது பொழுது பட்ட நேரத்தில்தான்..:D

சிவா.ஜி
18-04-2008, 01:24 PM
பாகம்-6

பூசாரி முனுசாமி வினு சக்ரவர்த்தியைப் போல இருந்தார். அவரைப் பர்த்தாலே பாதிப் பேய்கள் துண்டைக்காணோம் துணியைக்காணோமென்று ஓடிவிடும் போன்றதொரு தோற்றம். வீட்டுக்குள்ளேயே சிறிய காளிக் கோயில் அமைத்திருந்தார். அங்கே அத்தனை பூஜை சாமான்களோடும், அருகில் இருந்த மண்டையோடுகளோடும் அவரைப் பார்க்கவே பயமாகத்தான் இருக்கும்.

ரங்கனும், முருகேசனும் அவரிடம் விவரத்தை சொன்னதும். கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் சொன்ன விவரங்கலை வைத்து அது எந்த ரகத்தைச் சேர்ந்தது என்று கணித்துக்கொண்டிருந்தார். பிறகு மெல்ல கண்களைத் திறந்து இவர்களைப் பார்த்து

அது மோகினி பிசாசேதான். ஆனா ஒரு மாதிரியானது. மத்த பிசாசுங்க மாதிரி இது வழியில பாக்குறவங்களையெல்லாம் அடிக்காது. உன்ன மாதிரி எவனையாவது புடிச்சிக்கிட்டு, கூடவே இருந்து கொஞ்சங்கொஞ்சமா கொன்னுடும். ரங்கா அது தினம் உன்னை அது கூட படுக்கச் சொல்லியிருக்குமே..?

ஆமா பூசாரி அய்யா. சனிக்கிழமையில பகலெல்லாம் தூங்கிகிட்டிருந்தாலும் ராவானா தொல்ல பண்ண ஆரம்பிச்சுடுவா. நான் எவ்வளவு சொன்னாலும் விடவே மாட்டா. ஆரம்பத்துல எந்த பிரச்சனையுமில்ல ஆனா போகப்போக எனக்கு என் சக்தியெல்லாம் வடிஞ்சி போயிட்ட மாதிரி ஆயிடிச்சிய்யா.

அதேதான். உன் சக்தியையெல்லாம் அவ உறிஞ்சி எடுத்துக்கிட்டிருந்திருக்கா. இன்னும் ஒரு வாரமோ ரெண்டு வாரமோ மொத்தமா உறிஞ்சிட்டு உன்னைக் காலி பண்ணியிருக்கும் அந்த பிசாசு. நல்லவேளை இப்பவே தெரிஞ்சி என்கிட்ட வந்துட்டீங்க. பாத்துடலாம் நானா அந்த பிசாசான்னு...

ரங்கனுக்கும், முருகேசனுக்கும் அப்போதுதான் நிமதியே வந்தது.

ரங்கா நீ ஒரு வேலை செய்யனும்

சொல்லுங்க பூசாரியய்யா

நான் உனக்கு ஒரு கரித்துண்டு தரேன். அதை எடுத்துக்கிட்டுப் போய் வீட்ல நாளைக்கு காலையில் வெயில் ஏறுனப்பறம் ஒரு வட்டம் போடு. அவலை நைஸா பேசி அந்த வட்டத்துக்குள்ள நிக்க வெச்சிடு. அப்புறம் நாங்க வந்துடறோம்.

ஏன் பூசாரியய்யா அவ அந்த வட்டத்துக்குள்ள இருந்து வெளியே வரமுடியாதா? கேட்ட முருகேசனிடம்

இது சாதாரன கரித்துண்டு இல்ல முருகேசா, ஆண் சக்தி விரயமாகாத தலைச்சன் பிள்ளையை எரிச்சதுல மிச்சமான ஒரே ஒரு துண்டு. பொதுவா எல்லாம் எரிஞ்சி சாம்பலாயிடும் இல்லன்னா அங்கங்க கொஞ்சம் கரித்துண்டு மிச்சமாயிடும். ஆனா இது அப்படியில்ல ஒரே ஒரு துண்டு மட்டுமே மிச்சமாயிருக்கு. அதனால இதுக்கு விஷேசமான சக்தி இருக்கு. எந்த பிசாசையும் இது கட்டிப்போட்டுடும். நாம உள்ளே போனவுடனே அவ நம்மளை அடையாளம் கண்டுகிட்டு அழிச்சிடாம இருக்கத்தான் அவளைக் கட்டிப்போட சொன்னேன்.

அப்படியே செஞ்சிடறேன்ய்யா சொன்ன ரங்கனைப் பார்த்து,

ரொம்ப ஜாக்கிரதையா செய் ரங்கா. நீ அவளைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டதை தப்பித்தவறி கூட காமிச்சிக்கொடுத்துடாத. அப்புறம் அவ்ளோதான். நான் இன்னிக்கு ராத்திரி சுடுகாட்டுக்குப் போய் ஒரு பூஜை பண்ணிட்டு நாளைக்கு அங்கே வந்துடறேன். முருகேசா நீ என் கூடவே இரு நாம சேந்தே போயிடலாம்.

சரிங்க பூசாரியய்யா

ரங்கன் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அவள் யார் என்று தெரிந்துவிட்டதால் உள்ளுக்குள் ஒரு உதறல் இருந்துகொண்டே இருந்தது. மிக சிரமப்பட்டு அதை வெளியே கான்பிக்காமல் சகஜமாய் இருந்தான். அன்று இரவு அருமையான சாப்பாடு செய்தாள். அவள் கண்களில் ஒரு வெறி இருந்தது. அவளுக்கும் தெரியும் இவன் இன்னும் கொஞ்ச நாளில் சாகப்போகிறானென்று. அடுத்த இரையைத் தேடுவதற்குள் இவனை முழுதுமாய் உறிஞ்சிவிட முடிவு செய்து அன்று மற்ற நாளைவிட ஆக்ரோஷமாய் அவனுடன் கலந்தாள்.

விடிந்தும் வேலைக்கு கிளம்பாதவனை ஆச்சர்யத்துடன் பார்த்து,

ஏன்யா இன்னைக்கு யாவாரத்துக்குப் போகலையா..?

ஒடம்பு சரியில்ல புள்ள....அம்புட்டுதூரம் நடக்க முடியாது. அதான் இன்னைக்கு வூட்லயே இருக்கலான்னு நெனைச்சேன்.

அவள் முகத்தில் சுரு சுருவென்று கோபம் ஏறியதைப் பார்த்து பயந்துவிட்டான் ரங்கன். உடனே அவளை சமாதானப்படுத்தும் விதமாக

என்ன புள்ள இன்னைக்கு உன்கூட கொஞ்சம் உல்லாசமா இருக்கலான்னு நெனைச்சா கோவப்படுறியே..ஏன் நான் வூட்ல தங்குறது உனக்குப் பிடிக்கலையா? அப்படீன்னா சொல்லு நான் எங்க வூட்டுக்கே போயிடறேன்..

உடனே பதறிப்போய்,

அதெல்லாம் ஒண்ணுமில்லைய்யா...யாவாரத்துக்குப் போகாம இருந்தா ஆம்பளைக்கு அது நல்லாவா இருக்கும். அதுக்குத்தான் கொஞ்சம் கோவம் வந்துச்சி. சரி சரி இங்கேயே இரு ஆனா சாப்பாடு ஆக்கறதுக்குத்தான் வூட்ல ஒண்ணுமே இல்ல. என்றதும்

உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே ஆமா உன்னோட இரையை அவளோ சீக்கிரமா போக உட்டுறிவியா என்று நினைத்துக்கொண்டு,

நான் போய் கடையிலருந்து ஏதானா வாங்கிக்கிட்டு வந்துடறேன் நீ என்னாத்துக்கு கஷ்டப்படறே. உன்மேல எனக்கு எவ்ளோ ஆசை தெரியுமா? அதான் எங்க வூட்ல எனக்குப் பாத்த பொண்ணைகூட வேணான்னு சொல்லிட்டேன்..என்று அவளை தாஜா பண்ணி நைஸாக அவன் ஏற்கனவே வரைந்து வைத்திருந்த அந்த வட்டத்துக்குள் கொண்டு வந்து நிறுத்திவிட்டான். உடனடியாக அவன் அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்து விட்டான். அவளும் வெளியே வர முயற்ச்சித்தபோதுதான் உணர்ந்தாள் அவள் கட்டப்பட்டுவிட்டதை.

முகம் விகாரமாக மாறத்தொடங்கிவிட்டது. பேய்க்கூச்சல் போட ஆரம்பித்துவிட்டாள்

அவளது கூச்சலை வெளியே நின்று கேட்டுக்கொண்டிருந்த பூசாரியும் முருகேசனும் உள்லே நுழைந்தார்கள்.

அவர்களைப் பார்த்த உடனே இன்னும் அதி பயங்கரமாக கத்த ஆரம்பித்துவிட்டாள். கெட்ட வார்த்தைகளில் அவர்களைத் திட்டி

டேய் நீங்கள்லாம் எதுக்கு வந்திருக்கீங்கன்னு எனக்குத் தெரியுண்டா....உங்களை நார் நாரா கிழிச்சிப் போட்டுடுவேன் ஓடிப்போயிடுங்க..என்று அலறினாள்.

பூசாரி வெடிச்சிரிப்பு சிரித்துக்கொண்டே எப்புட்றி உன்னால முடியும். எங்கே வெளியே காலை வெச்சுப் பாரு...?

என்று எகத்தாளமாய் கேட்டதும்,

ரௌத்திரமாகி உடலை உதறிக்கொண்டு ஆடத் தொடங்கிவிட்டது அந்த மோகினிப்பிசாசு. தன் முழு உருவத்துக்கு அது மாறி விட்டிருந்தது. ரங்கனும், முருகேசனும் நடுக்கத்தோடு அதையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

தொடரும்

சிவா.ஜி
18-04-2008, 01:27 PM
நன்றி அமரன். திகில் மட்டுமே கொடுக்க நினைக்கவில்லை. எழுதிப்பழகுகிறேன். இன்னும் என் எழுத்தை செம்மையாக்கிக்கொண்டு மீண்டும் எழுதுவேன். அப்போது இன்னும் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

அமரன்
18-04-2008, 02:48 PM
நன்றி அமரன். திகில் மட்டுமே கொடுக்க நினைக்கவில்லை. எழுதிப்பழகுகிறேன். இன்னும் என் எழுத்தை செம்மையாக்கிக்கொண்டு மீண்டும் எழுதுவேன். அப்போது இன்னும் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

நீங்க எப்படி எழுதினாலும் பயம்கொள்ள மாட்டேன். மலரிடம் பலதடவை பேசியவனாச்சே நான்.:lachen001::lachen001:

மதி
18-04-2008, 07:03 PM
நீங்க எப்படி எழுதினாலும் பயம்கொள்ள மாட்டேன். மலரிடம் பலதடவை பேசியவனாச்சே நான்.:lachen001::lachen001:

:D:D:D:D:D:D:D:D

அறிஞர்
18-04-2008, 10:12 PM
ஆஹா "ஜகன் மோகினி" படம் பல முறை பார்த்து இருப்பீர்கள் போல...

வர்ணனை அந்த படத்தில் இருப்பது போல் உள்ளது..

கலக்குங்க....

திகில் தொடர் இன்னும் பலரை பயமுறுத்தப்போகுது..

சிவா.ஜி
19-04-2008, 04:24 AM
இப்படிப்பட்ட மோகினி கதைகள் என்றாலே ஜகன்மோகினி தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. ஆனால் அந்தப் படம் வருவதற்கு முன்னரே இந்தக் கதை எங்களுக்கு சொல்லப்பட்டது. ஆனால் அச்சு அசலாக அப்படியே திரைப்படத்தில் காட்டியிருந்தார்கள். எனவே இதிலிருந்து ஒன்று தெரிகிறது..எல்லா இடத்திலும் இப்படியான கதைகள் உலவிக்கொண்டிருக்கின்றன என்பது. எனக்கு சொல்லப்பட்டதை உரையாடல்கள் இட்டு நிரப்பி வருகிறேன் அவ்வளவுதான்.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அறிஞர்.

சிவா.ஜி
19-04-2008, 06:03 AM
பாகம்-7

உடலை முறுக்கிக்கொண்டு அந்த பிசாசு வட்டத்துக்குள்லிருந்து வெளியே வர ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்க, பூசாரி தன் வேலைகளை ஆரம்பித்தார். கொண்டு வந்திருந்த பூஜைப்பொருள்களையெல்லாம் மான்தோலின் மீது பரப்பினார். நடுநாயகமாக ஒரு மண்டையோட்டை வைத்தார். தாம்பாளத்தில் சுடுகாட்டுச் சாம்பலும், குங்குமமும் இருந்தது. சில மயிற்கற்றைகள், எலும்புத்துண்டுகள், செப்புத்தகடுகள் என்று சற்று நேரத்தில் அந்த இடமே மாறிவிட்டது.

ரங்கனும், முருகேசனும் பூசாரிக்கு உதவினார்கள். மனை ஒன்றை போட்டு அதன் மீது அமர்ந்து கொண்ட முனுசாமி பூசாரி. கண்களைஇறுக மூடிக்கொண்டு சாம்பலை ஒரு பிடி அள்ளிக்கொண்டு அதை தன் நெற்றியின் மேல் வைத்துக்கொண்டு ஏதோ மந்திரத்தை சத்தமில்லாமல் உச்சரித்தார்.

மோகினியின் ஆட்டம் அதிகரித்தது. காதுகொண்டு கேட்கமுடியாத வசவுகளை வாரி இறைத்துக்கொண்டிருந்தது. அதை எதையுமே சட்டைசெய்யாமல் தன் முழு கவனத்தையும் செலுத்தி மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருந்த பூசாரியை அச்சத்தோடுபார்த்துக்கொண்டிருந்தார்கள் இருவரும்.

ஒரு செப்புத்தகடை எடுத்து அதில் எழுதி இருப்பதை சத்தமாக வாசிக்கத்தொடங்கியதும், அந்த மோகினிப்பிசாசு வலியால் அலறும்
மிருகத்தைப்போன்ற ஒரு பெருங்குரலெடுத்து கத்தியதைக் கேட்டதும் இரண்டு பேருக்கும் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள உடல்நடுங்கியது. திடீரென்று வெளியே மழை பிடித்துக்கொண்டது. ஓடிச்சென்று ஜன்னல் கதவுகள் நன்றாக அடை பட்டிருக்கிறதா என உறுதி செய்து கொண்டார்கள். மழை பெய்வதும் அவர்களுக்கு சாதகமாகவே ஆகிவிட்டது. இந்தப் பிசாசின் அலறல் ஒலி அதில் அடங்கிப்போய்விடும். அக்கம் பக்கத்திலிருப்போருக்கு இங்கே நடப்பதைக் கவனிக்க முடியாது.

ஆனால் மழைதொடர்ந்ததில் சுவரோரங்களிலிருந்து தண்ணீர்கசியத்தொடங்கியது. தரையைத் தொட்ட தன்னீர் தாரையாக வழிந்து மெள்ள முன்னேறிக்கொண்டிருந்தது அந்த கரிக்கோடை நோக்கி. அது மட்டும் அந்தக் கோட்டைத் தொட்டுவிட்டால் கோடு ஒரு இடத்தில் அழிந்துவிடும். ஊசிமுனை அளவு இடைவெளி போதும் அந்த பிசாசு வெளியேறிவிடும். ஆனால் இந்த ஆபத்தைக் கவனிக்காமல் பூசாரியும் கண்களை மூடிக்கொண்டிருந்தார். ரங்கனும், முருகேசனும் அவரையே பார்த்துக்கொடிருந்தார்கள்.

மந்திர உச்சாடனம் உச்சஸ்த்தாயியை அடைந்து கொண்டிருந்தது. அலறல் அதிகரித்தது. அவளது உடல் தற்போது அங்கம் அங்கமாய்
துடித்துக்கொண்டிருந்தது. தலைவிரிக்கோலமாய் அது ஆடிய அந்த வெறியாட்டத்தின் வேகம் கூடிக்கொண்டே இருந்தது. தண்ணீர் தாரைகரிக்கோட்டை சமீபித்து விட்டது.

அந்த சமயத்தில் மிகப்பெரிய ஒரு மின்னல் வெட்டி தொடர்ந்து இடியின் சத்தம் கேட்டதும் பூசாரி கண் திறந்து அந்தப் பிசாசைப் பார்த்தார். பார்வையை அகற்றியவரின் கண்களில் அந்த தண்ணீர்த்தாரைப் பட்டது. பதறிக்கொண்டு முருகேசா அந்த தண்ணி, கோட்டைத் தொடறதுக்குள்ள நிறுத்து என்று அலறினார். எந்தத் தண்ணீர் என்று புரியாமல் பூசாரியைப் பார்த்தவன், அவர் பார்வை சென்ற திசையைப் பார்த்ததும் அவன் கண்களில் அந்த தண்ணீர்க்கோடு நகர்ந்து வருவது பட்டது. மின்னல் வேகத்தில் ஓடிச்சென்று தன் கால்களால் அதை வழித்து அப்பால் எறிந்தான். உடனடியாக தன் வேட்டியை அவிழ்த்து தரையில் போட்டு அணை கட்டினான்.

பூசாரி அவன் செயலைப் பார்த்து பெருமிதமாய் சிரித்தார். நடந்ததையெல்லாம் கவனித்த அந்த பிசாசு தனக்கு கிடைக்க இருந்த
விடுதலையைக் கெடுத்த முருகேசனைக் கொலைப்பார்வைப் பார்த்தது. அப்போது மட்டும் அவன் அதன் கைகளில் கிடைத்திருந்தால் இரண்டாகக் கிழித்துப்போட்டிருக்கும்.

நிம்மதிப்பெருமூச்சுடன் தன் இறுதி மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே தன் பையிலிருந்து ஒரு கண்ணாடிக் குடுவையை வெளியே எடுத்து வைத்தார். அதைப் பார்த்ததும் மோகினிக்கு விளங்கிவிட்டது. தன்னை அதற்குள் அடைக்கப்போகிறார்கள் என்று. இப்போது ஆரவாரமெல்லாம் அடங்கி மேலே செருகிக்கொண்ட பார்வையுடன் அந்த மூன்று பேரையும் பார்த்த அந்த பிசாசு..

டேய்...என்னை இதுக்குள்ள அடைக்கப்பாக்குறீங்களா...அடைச்சாலும், அதுக்குள்ள போறதுக்கு முன்னால இவனுக்கு ஒரு சாபம் குடுக்கறேன். உனக்கு இனிமே பிறக்கப்போற குழந்தைங்க கிட்ட என்னோட அம்சம் ஒண்ணாவது இருக்கும். நீ வாழ்நாள் பூரா என்னை நெனைச்சுக்கிட்டே அழனும். ஹா..ஹா...ஹா... என்று இடிச்சிரிப்பு சிரித்தது. ரங்கன் அதீத பயத்துடன் பூசாரியைப் பார்க்க அவர் இது எதையும் காதில் வங்காமல் உடல் அதிர மந்திரம் சொல்லிக்கொண்டே தன் கையில் அந்த சாம்பலையும், குங்குமத்தையும் எடுத்து மோகினியின் மேல் வீசினார்.

வீல்...என்ற பெரும் சத்தத்தோடு அந்த உருவம் புகையாய் மாறி அந்தக் குடுவைக்குள் நுழைந்தது. உடனடியாக அதை அடைத்தார் பூசாரி.

அடைத்த அந்த குடுவையை தரையில் வைத்துவிட்டு ஆயாசமாக தரையில் சாய்ந்தார். உடலின் சக்தியெல்லாம் வடிந்துவிட்டவரைப் போல அவர் கிடந்தார். ரங்கனும், முருகேசனும் நடந்த நிகழ்ச்சியை நம்ப முடியாதவர்களாக வாய்ப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தவர்கள் ஓடிச்சென்று பூசாரியை தூக்கி உட்கார்த்தி வைத்தார்கள். மெல்லக் கண் திறந்த பூசாரி,

இந்த குடுவையை காட்டுக்குள்ல கொண்டுபோய் ஆறடி ஆழத்துக்கு குழி வெட்டி பொதைச்சுடுங்க. பொதைச்சதுக்கான அடையாளமே தெரியக்கூடாது. அவ்ளோதான் ரங்கா உன்னைப் பிடிச்சிஆட்டிக்கிட்டிருந்த பிசாசு ஒழிஞ்சது. போ, போய் நிம்மதியா யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமாய் இரு என்றவரிடம் கடைசியாய் அந்த மோகினிப்பிசாசு சொன்னதைச் சொன்னார்கள்.

ம்...ஆமா ரங்கா...கண்டிப்பா அந்த சாபம் பலிக்கும். ஆனாக் கவலைப் படாதே. எந்த ஆபத்தும் இல்லை. தினம் அம்மன் சிலைக்கு பூஜை செஞ்சிக்கிட்டு வா. அதிகமா பாதிப்பு வராது.

எல்லாம் முடிந்து நிம்மதியாய் அடுத்த மாதமே ரங்கனின் பெற்றோர் பார்த்து வைத்திருந்த அந்த பெண்னைக் கல்யாணம் செய்து கொண்டான். முதல் குழந்தை ஆண். ஆசையோடு எடுத்துக் கொஞ்சப்போனவன் அதன் கைகளைப் பார்த்து திடுக்கிட்டான். உள்ளங்கை முழுவது பல்லாங்குழிப் பலகையைப் போல குழிக் குழியாய் இருந்தது.

முற்றும்.

பின் குறிப்பு: என்னுடை வகுப்புத்தோழர்கள் இரண்டு பேர். அண்னன் தம்பிகள். ஒரு வருட வித்தியாசம்தான் என்றாலும் ஒரே மாதிரி இருப்பார்கள். அவர்கள் கைகளில் உள்ளங்கையில் குழிகள் இருந்தன. அவர்கள் மற்றவரின் கைகளப் பிடித்தால் உப்புக் காகிதத்தால் தொட்டதைப் போன்ற சொரசொரப்பு இருக்கும். ஏன் அப்படி என்று கேட்டபோதுதான் நான் மேலே சொன்ன கதை எனக்கு சொல்லப்பட்டது.

அமரன்
19-04-2008, 07:39 AM
அற்புதமான நடை. எங்கும் தொய்வில்லை. விறு விறுப்புக்கு பஞ்சமில்லை. உங்கள் எழுத்தை களவாடி சொன்னால், கை நழுவிய மரமேறியைப் போல எழுத்தோட்டம். அச்சத்தின் அத்தனை வகைகளையும் காட்டிக்கொடுத்தது கதை.

சிவா... சின்ன ஆச்சரியக்கேள்வி. உங்களாம் எப்படி தொடர்ந்து எழுத முடிகிறது. நினைத்ததும் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றனவா கற்பனையும் எழுத்துகளும். பிரமிக்கிறேன். பெருமிதக்கிறேன். வழக்கம் போலவே பரிசுத்தொகை அனுப்பியாச்சு.

lolluvathiyar
19-04-2008, 08:33 AM
கதை விருவிருப்பாக சென்று ஒரு வழியாக முடிந்து விட்டது. காலம் காலமாக மக்களிடம் இருந்து வந்த மூட நம்பிக்கையை வைத்து மிக அழகாக சிவா ஜி எழுதி இருக்கிறார். கிராமங்களில் புளியமரத்தில் நிரைய ஆனி அடித்திருக்கும், அது எல்லாம் காத்த பிடித்தவர்களை முடியை வைத்து கட்டியது என்று சொல்வார்கள்.
பென்கள் எப்பவும் எமோசனுக்கு பெயர் போனவர்கள், சில பிரச்சனைகளுக்கு பேயாட்டம் ஆடிவிடுவார்கள். அவர்களை அடக்க புருசன் பேய் பட்டம் கட்டி ஓட்டுவான். சில சமயம் தன் ஆசைக்கு இனங்காத பென்களுக்கு இந்த பட்டம் கட்டி அடி தந்து வழிக்கு கொன்டு வருவார்கள் இல்லாவிட்டால் பழி வாங்குவார்கள். இப்படி பல சொந்த காரனங்களுக்காக பழி வாங்கவே இந்த பேய் சமாசாரம் பயன்படுத்த பட்டது. சாதர்ன மக்களுக்கு பேய் பயத்தை ஏற்படுத்தினால் இரவில் சிலருக்கு சுடுகாடு அருகே சாராயம் காய்ச்சி விற்க மற்றும் குடிக்க பயன்படும்.
மேலும் புளிமரத்துக்கு அடியில் தூங்கினால் பேய் பிடிக்கும் என்று ஒரு பயத்தை ஏற்படுத்தி இருந்தார்கள்.
அதற்க்கு காரனம் மரங்கள் இரவு நேரங்களில் ரெஸ்பிரேசன் செய்யும் (ஆக்சிஜனை சுவாசித்து கார்பன் டையாக்சைடை வெளியேற்றும்) புளியமரத்தில் இலைகள் அதிகமாக இருப்பதால் இது அதிகமாக வரும், மேலும் வெப்பமும் அதிகமாக வெளியேற்றும், இதனால் அதனடியில் படுத்தவர்களுக்கு மூச்சு தினரல் வரலாம், ஜுரம் வரலாம் ஹிஸ்டிரியாக மாறும் அதை பேய் பிடித்து விட்டது என்று சொல்வார்கள்.
அருமையான கதை சிவா ஜி பாராட்டுகள்

அறிஞர்
19-04-2008, 08:40 AM
ஒரு மர்ம தொடரை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டீர்கள்....
நன்றி சிவாஜி...

சிவா.ஜி
19-04-2008, 09:53 AM
அற்புதமான நடை. எங்கும் தொய்வில்லை. விறு விறுப்புக்கு பஞ்சமில்லை. உங்கள் எழுத்தை களவாடி சொன்னால், கை நழுவிய மரமேறியைப் போல எழுத்தோட்டம். அச்சத்தின் அத்தனை வகைகளையும் காட்டிக்கொடுத்தது கதை.

நன்றி அமரன். இதயம் சொன்னதைப் போல நீங்கள் அனைவரும் கொடுக்கும் ஊக்கம் என்ற மருந்து உற்சாகத்தை உசுப்பிவிடுகிறது. என் எழுத்துக்கு முழுமுதல் காரணம் மன்ற உறவுகளாகிய நீங்களனைவரும்தான். ஊக்கப் பரிசுக்கும் என் நன்றி கலந்த வந்தனங்கள்.

சிவா.ஜி
19-04-2008, 09:54 AM
வாத்தியாரின் வழக்கம்போல அசத்தலான அறிவியல்பூர்வ அலசல் பிரமிக்க வைக்கிறது. எப்படி வாத்தியாரே இப்படியெல்லாம்.. அது சரி வாத்தியாருக்கு சொல்லியா கொடுக்கனும். ரொம்ப நன்றி வாத்தியார்.

சிவா.ஜி
19-04-2008, 09:55 AM
ஒரு மர்ம தொடரை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டீர்கள்....
நன்றி சிவாஜி...

மிக்க நன்றி அறிஞர்.

மதி
19-04-2008, 02:18 PM
தொடர் கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல் இருந்தது..
மோகினி பிசாசு பேய் கதைகள் அதிகம் படித்ததில்லை...

கலக்கல் சிவா ண்ணா.. அடுத்து என்ன?

சிவா.ஜி
19-04-2008, 02:40 PM
தொடர் கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல் இருந்தது..
மோகினி பிசாசு பேய் கதைகள் அதிகம் படித்ததில்லை...

கலக்கல் சிவா ண்ணா.. அடுத்து என்ன?

அடுத்து ஊருக்குத்தான். வந்த பிறகுதான் அடுத்தது. இன்னும் நிறைய விஷயங்கள் கிடைக்குமே...?

visu_raj87
19-04-2008, 03:26 PM
அருமையாக கதையை கொண்டு போகிறீர்கள்

சிவா.ஜி
19-04-2008, 03:36 PM
அருமையாக கதையை கொண்டு போகிறீர்கள்

நன்றி விசுராஜ். உங்களுடைய முதல் பதிவையே என் கதைக்கு இட்டதில் மிக்க மகிழ்ச்சி. அறிமுகப்பகுதியில் தங்களைப்பற்றி ஒரு அறிமுகம் கொடுத்தீர்களானால் மிகவும் நன்றாக இருக்கும்.

MURALINITHISH
21-08-2008, 09:15 AM
அப்பப்பா அருமையான கதை அதிலும் உங்கள் எழுத்துகள் படிப்பவரின் மனதை பயத்தால் பாடு படுத்துகிறது திக் திக் என்று அதிலும் கிளைமேக்ஸில் இன்னோரு கிளைமேக்ஸ் அந்த கோட்டை தண்ணீர் அழிக்குமா அழிக்காது என்று நல்ல கதை என்னதான் பேய் இல்லை என்று தெரிய்ந்தாலும் இந்த மாதிரி கதை படிக்கும் போது நெஞ்சில் ஒரு திக் திக்தான்

சிவா.ஜி
22-08-2008, 04:31 PM
மன்றத்தின் பல பகுதிகளுக்கும் தேடிச் சென்று, பதிவுகளை வாசித்துப் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி முரளி நிதிஷ். உங்கள் பின்னூட்டம் மேலும் ஊக்கப்படுத்துகிறது.

தாமரை
27-07-2009, 11:24 AM
மோகினியுடன் குடும்பம் நடத்திய ஆண்மகன் - நடந்தது என்ன - விஜய் டிவி யில் இந்த வாரம் இரவு 10 மணிக்கு வரப்போகும் ஒரு நிகழ்ச்சியாம். அதற்காக அதே போன்ற இந்தக் கதையை மேலெழுப்புகிறேன்

ஆதி
27-07-2009, 11:39 AM
மோகினியுடன் குடும்பம் நடத்திய ஆண்மகன் - நடந்தது என்ன - விஜய் டிவி யில் இந்த வாரம் இரவு 10 மணிக்கு வரப்போகும் ஒரு நிகழ்ச்சியாம். அதற்காக அதே போன்ற இந்தக் கதையை மேலெழுப்புகிறேன்

அண்ணா, கண்ணதாசனின் "அவளுக்காக ஒரு பாடல்" புத்தகம் கூட மோகினியோடு குடும்பம் நடத்திய கதைதான்.. கண்ணதாசன் தன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவமாக சொல்கிறார்... பல இடங்களில் மெய் சிலிர்த்து போனேன்.. "அபர்ணா"வை நினைத்து அவர் பல பாடல்கள் திரைப்படங்களிலும் எழுதி இருக்கிறார்.. "கலங்காதிரு மனமே" எனும் அவரின் முதல் பாடல் கூட "அபர்ணா"வின் பிரிவால் அவருக்கு அவரே எழுதி ஆறுதல் பாடல் என்று சொல்கிறார்.. வாய்ப்புகிடைத்தால் வாசித்துப்பாருங்கள் அண்ணா அந்த புத்தகத்தை..

கா.ரமேஷ்
27-07-2009, 12:23 PM
இருந்தாலும் நீங்க இப்படியா பயமுறுத்துவது... மொத்தமாக படிக்க முடிந்தது,அருமையான திகில் கதை வாழ்த்துக்கள் தோழரே...

சிவா.ஜி
29-07-2009, 07:36 AM
மிக்க நன்றி ரமேஷ். திரியை மேலெழுப்பிய நடமாடும் என்சைக்ளோபீடியா தாமரையாருக்கும் நன்றி.

SureshAMI
05-08-2009, 03:42 PM
பயந்துட்டேன்

vinothan.sigamani
01-09-2009, 10:13 AM
அருமையாக இருந்தது

சிவா.ஜி
01-09-2009, 12:05 PM
மிக்க நன்றிகள் சுரேஷ் மற்றும் வினோதன் சிகாமணி.

samuthraselvam
02-09-2009, 07:53 AM
அருமையான மோகினி கதை.... எனக்கு பேய் கதை என்றால் மிகவும் பிடிக்கும்... இரவில் எல்லா விளக்குகளையும் போட்டுட்டாவது படிச்சிடுவேன்....இதுபோலவே இன்னும் நிறைய பேய் கதைகளை எழுதுங்கள்...

இப்போ நீங்கள் இருக்கும் சூழ்நிலை கூட உங்களுக்கு அருமையான திகில் கதை எழுதும் கருவை கொடுக்குமே.... கடலை மையமாக வைத்து ஒரு பேய் கலந்த திகில் கதை எழுதுங்கள் அண்ணா...

சிவா.ஜி
02-09-2009, 08:07 AM
நல்ல யோசனைதான் லீலும்மா. முயற்சி செய்யறேன். கடலிரவுக் காரிகை அப்படீன்னு ஏதாவது....ஹா...ஹா...

படித்து பாராட்டி பின்னூட்டமிட்டதற்கு அன்புத் தங்கைக்கு அன்பான நன்றிகள்.

பா.ராஜேஷ்
02-09-2009, 06:08 PM
அருமையான பேய் கதை அண்ணா... படிக்கும் பொது பயம் தோன்றியதை மறுக்க முடியாது. ராத்திரி விபுதி பூசிக்கிடுத்தான் தூங்கனும் ;)....

சிவா.ஜி
09-09-2009, 04:21 PM
ரொம்ப நன்றி ராஜேஷ். இதுக்கு மன்றத்துல முன்னால மலருன்னு ஒரு வாலு இருந்திச்சி....அதுக்குதான் நன்றி சொல்லனும்.

sarcharan
06-05-2010, 12:19 PM
சிவா ஜி அவர்களே..
அப்பா... திகில் கதை.. சின்ன பிள்ளையை இருக்கும் போது அம்புலிமாமா-வில் இது போல ஒரு கதை படித்தேன்.

முன், இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லாது இருந்தது. இப்பொழுது பேய், பிசாசு உண்டு என்று நம்புகிறேன்.

சிவா.ஜி
06-05-2010, 12:38 PM
ரொம்ப நாளைக்கு அப்புறம் மோகினியை தூசு தட்டி எடுத்துப் படித்து, பாராட்டியதுக்கு ரொம்ப நன்றி சரண்.

(அதுசரி....சமீபத்துல ஏதாவது பேயைப் பாத்தீங்களா?...ஹா..ஹா...)

அன்புரசிகன்
09-05-2010, 09:47 AM
நாம வீடு மாறின கப்ல கதை பதிஞ்சிருக்கீங்க... இன்று தான் என் கண்ணில் சிக்கியது. மிகவும் ஆவலைத்தோண்டிய தொடர்... சூப்பரா இருந்தீச்சு... இடையே வடிவேலின் "கிளம்பீடுதுப்பா....." ஞாபகம் வந்தது.

வாழ்த்துக்கள் அண்ணா...

சிவா.ஜி
09-05-2010, 10:22 AM
இந்தக்கதைக்கு உங்கப் பின்னூட்டமில்லாதக் குறையும் நீங்கிடிச்சு அன்பு.

ரொம்ப நன்றி. கிளப்பிவிட்ட...சரவணனுக்கும் நன்றி.

செல்வா
09-05-2010, 03:44 PM
இந்தக் கதையோட ஆரம்பப் பாகங்கள வாசிச்சுட்டு பாக்கட் நாவல் மேனேஜர் போஸ்ட்டுக்கு அப்ளை பண்ணிட்டு போனதோட சரி....

இன்னிக்கிதான் வந்திருக்கேன்.

என்ன அண்ணா... அப்ளிகேசன தூசுதட்டி பார்த்து ஒரு முடிவு பண்ணுங்க.. அப்படியே விவசாயத்தயும் பாத்துட்டு பேய்களையும் ஒரு கை பாக்கலாம்.

சூப்பரா கதை முடிச்சிருக்கீங்க அண்ணா....

ஒரு சின்ன பொறிய வச்சிட்டு கதை எழுதுற உங்க கற்பனையும் வேகத்தையும் நடையையும் பார்த்து அசந்து போய் நிக்கிறேன்.

இந்த மாதிரி அடுத்த கதை எப்போ எழுத போறீங்க அண்ணா...

சிவா.ஜி
11-05-2010, 06:33 AM
ஆமா இன்னும் அந்த அப்ளிகேஷன் காத்துக்கிட்டுதான் இருக்கு. அடுத்தமுறை சந்திக்கும்போது பேசி 'முடிச்சிடலாம்'

ஆரம்பத்துல வந்தவரை ஆளக்காணோமே....ஏதாவது மோகினியோட வலையில விழுந்துட்டாரான்னு நினைச்சேன்....கடைசியிலயும் வந்து நிம்மதியைக் கொடுத்திட்டீங்க செல்வா. ரொம்ப நன்றி.

(அடுத்த தொடர் ஆரம்பிக்கனும்....என்னவோ...நேரமே சரியா சிக்க மாட்டேங்குது. கூடியவிரைவில் ஆரம்பிச்சிடுவேண்டியதுதான்)

xavier_raja
11-05-2010, 08:52 AM
ஒரு நல்ல திகில் தொடர்கதை படைத்த உங்களுக்கு என் வாழ்த்துகள்.. சிறந்த எழுத்தாளர்களுக்கு உள்ள ரசனைகள் உங்களுக்கும் உள்ளது.. கதையின் ஒவ்வொரு பாகம் முடியும்பொழுதும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருகிறேர்கள்... பாராட்டுகள்..

சிவா.ஜி
11-05-2010, 09:05 AM
ரொம்ப ரொம்ப நன்றிங்க சேவியர் ராஜா. உங்களைப்போன்றோரின் ஊக்கம்தான் என்னையும் எழுத வைக்கிறது.