PDA

View Full Version : நண்பனின் உள்வெளியிலிருந்து.....



Nanban
11-04-2008, 09:28 PM
உள்வெளியிலிருந்து….

ஒவ்வொருவருக்குள்ளும் மற்றவர்க்குச் சொல்வதற்கென ஒரு உள்வெளி இருக்கிறது. ஆயிரமாயிரம் சிந்தனைகள், கற்பனைகள், கனவுகள் கணந்தோறும் தோன்றிக் கொண்டே இருக்கும் அந்த வெளிகளில்.

எல்லோராலும், எல்லாப் பொழுதுகளிலும், அந்த வெளிகளைத் திறந்து, வெளிவந்து பரந்து விரிந்த பிரபஞ்ச வெளியில் கலந்துவிட இயல்வதில்லை தான். ஆனாலும், அவ்வாறு கலந்து அதன் மூலம் தன்னைப் போன்ற பிற மனிதனின் உள்வெளிகளையும் தரிசித்து விட முடியுமாவென்ற ஆவல் மட்டும் என்றுமே தணிந்து விடுவதில்லை.

இந்தத் தணியாத ஆவல், தரும் ஏக்கமே படைப்பாக வெளிவருகிறது - கவிதையாக, கதையாக, ஓவியமாக, ஒளியாக, ஒலியாக இன்னபிற படைப்பு வடிவங்களைத் தாங்கிக் கொண்டு.

இந்தத் தாகத்துடன், முனைந்து முயற்சிப்பவர்களுக்கு, இந்த வெளி உலகுடன் தொடர்புப் படுத்திக் கொள்ள முனையும் உள்வெளி என்றுமே விரிந்து கொண்டே இருக்கும் - புதிய புதிய நயங்களுடன்.

கடந்த நான்கு ஆண்டுகளாக அவ்வப்பொழுது எழுதி, இணையத்தில் இடம் பெற்ற கவிதைகள், இன்று நூலாக பதிவுறுகிறது.

எந்த ஒரு இலட்சியமும், எளிதாகக் கை கூடி விடுகிறது – நதியின் கரை போல நின்று, சரியானத் தடங்களை நோக்கி, திருப்பி விட்டுக் கொண்டே இருக்கும் நண்பர்களால்.

முதன் முதலில், சாதாரணமாகவே எழுதத் தொடங்கினாலும், அதைப் பிரம்மாண்டமாகப் பாராட்டி, புகழ்ந்து உற்சாகப் படுத்திய தமிழ் மன்றம் டாட் காமின் இளசு, அத்தகைய கரைகளில் ஒருவராக இருந்தார் என்றால், ஆங்கிலக் கலப்புகளை நீக்கி, தமிழை முதன்மைப் படுத்த தொடர்ந்து கேட்டுக்கொண்டே அதற்கான உதவிகளையும் செய்து கொடுத்து வரும் இசாக் மற்றொரு கரையாக இருக்கிறார்.

எழுதுவதற்குத் தளம் அமைத்துக் கொடுத்த தமிழ் மன்றம் தான் இத்தகைய நண்பர்களையும், உடன் பிறவா சகோதரர்களையும் அடையாளம் காட்டியது.

இன்று இணையத்தில் பரவலாக எழுதினாலும், முதலில் நடை பயின்றது தமிழ் மன்றம் என்றால் மிகையாகாது. பின்னர் வலைப் பூக்களும், முறையான வடிவ இணைய பத்திரிக்கைகளும் இயங்கும் தளமாக ஆகிவிட்டன. இவ்வாறு பலவாறான தளங்களில் தோன்றிய கவிதைகள் தொகுக்கப்பட்டு, இன்று விரியக் காத்திருக்கின்றன உங்களிடத்தில்.

எந்த ஒரு இசத்தையும் சாராமல், மனதில் தோன்றிய பொழுதெல்லாம், தோன்றிய படியே எழுதி இருப்பதால், குறிப்பிடத்தக்க அளவில் நடையில் மாற்றங்கள் இருக்கலாம். தேதி வாரியாகத் தொகுக்கப்படாததினால், இந்த மாற்றங்களை முன்னும் பின்னுமாகக் கூட காண நேரிடலாம்.

அறிமுகமற்ற நிலையில், ஒரு தொலை பேசி அழைப்பை ஏற்று, இக்கவிதைகளை வாசித்து, தனது கருத்துகளை அணிந்துரையாக எழுதித் தந்த நண்பர் கடற்கரய்க்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எந்த ஒரு நிர்ப்பந்தத்திற்கும் இடமில்லாத மனம் போன போக்கில் இசங்களையேத் தாண்டியே எழுத வேண்டும் என்ற அவா புதிய தெம்புகளைத் தரும் என்ற நம்பிக்கையில்

அன்புடன்
நண்பன்
* * *


நீண்ட நாட்களுக்குப் பின் உங்களிடையே வருவதில் அத்தனை மகிழ்ச்சி…

நீண்ட நாட்களாக அந்த அவாவிருந்தது… உங்களிடத்தில் எழுதிப் பழகிய நாட்களில் தொடங்கிய கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வழங்கி விட வேண்டும் என்ற அந்த விருப்பம் வருகின்ற ஏப்ரில் 18ஆம் தேதியன்று நிறைவேறுவதாக அமைகின்றது.

‘விரியக் காத்திருக்கும் உள்வெளி’ என்று தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படுகிறது. என்னைக் கவிதை எழுதச் செய்த – உற்சாகப்படுத்திய தமிழ் மன்றத்தில் அந்தச் செய்தியைச் சொல்வதென்பது அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. நீங்கள் மேலே வாசித்தவை அந்த நூலின் என்னுரையாக எழுதப்பட்டது.

கவிஞர் இன்குலாப் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள, 18-04-2008 அன்று, கராமா எஜுஸ்கேன் அரங்கில், சிறப்புற இந்த விழா நடைபெறவிருக்கிறது. இந்த நூலுடன், நண்பர் முத்துகுமரனின் கவிதை நூலும் வெளியிடப்படும். இதற்கான விழா அழைப்பிதழ் என் வலைப்பூவில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற பெருவிருப்புடன், அன்புடன் அழைக்கின்றேன்…

அன்புடன் நண்பன்

சிவா.ஜி
11-04-2008, 09:54 PM
அன்புடன் மிக மிக வரவேற்கும் நன்பன நீங்கள். நான் இப்போது இணைந்தவன். நீங்கள் மன்றத்தின் மூத்தவர். உங்கள் கவிதைகளைப் படித்து....இவர் இன்றிருக்கவில்லையே என ஏங்கியவன் நான். மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு உங்களை மன்றம் கான்பதில் மிக மிக மகிழ்வு. தங்களின் கவிதைகள் அச்சாவதில் அளவற்ற ஆனந்தம். ஒரு குறை உள்ளது...தாமதமாகிவிட்டது. அவ்வளவே.

மதி
11-04-2008, 11:34 PM
மிக்க சந்தோஷமான செய்தி நண்பன். வாழ்த்துகள்..

பாரதி
11-04-2008, 11:35 PM
ஆஹா...!

வாழ்த்துப்பகுதியில் திரி தொடங்க வேண்டுமென்று வந்தால்... இங்கே உங்களின் நேரடி அழைப்பு!

நூல் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். நண்பர் முத்துக்குமரனின் "உயிர்த்துளி"யும் உடன் வெளியாவதும் ஆனந்தத்தைத் தருகிறது.

உங்களிருவரைக் குறித்தும் எல்லையற்ற உவகையும் பெருமிதமும் கொள்கிறேன் நண்பர் நண்பனே.

பல நண்பர்களையும் விடாமல் எழுதத்தூண்டிய உங்களின் எழுத்துக்கள் எப்போதும் இங்கே பசுமையாய் இருக்கிறது!

விரியத்தொடங்கியிருக்கும் உங்கள் உள்வெளி இனி பிரபஞ்சமெங்கும் கலக்கட்டும். உயிர்த்துளியும் உடன் துளிர்த்து மலரட்டும்.

எழுத்துலகில் உங்களுக்கென ஒரு தனியிடத்தை தக்க வைத்துக்கொள்வீர்கள் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் வாழ்த்துக்கள் நண்பரே.


.

அறிஞர்
11-04-2008, 11:48 PM
வாழ்த்துக்கள் நண்பனே....

தங்கள் எழுத்துக்கள்... மன்றத்தில் தங்கி.. பலரை பரவசப்படுத்துகிறது...

தங்களின் புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற எங்களுடைய வாழ்த்துக்கள்.....

தாங்கள் இங்கு வந்து இந்த சந்தோசமான செய்தி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி....

எங்களிடமிருந்து அன்பு வேண்டுகோள்
"நேரம் கிடைக்கும்பொழுது வந்து, புதியவர்களை ஊக்குவியுங்கள்" என்பதே....

ஓவியன்
12-04-2008, 02:00 AM
இரண்டு நாள் இடைவேளையின் பின் மன்றத்தினுள் நுளைந்த எனக்கு, இன்ப அதிர்சி...!!

அது சித்திரைப் புத்தாண்டுப் பரிசாக....!!! :)

எழுத்துக்களால் என்றுமே நம் மனதில் உயர்ந்த இடத்திலிருக்கும் உங்கள் நற்செய்தி ஒன்றுடனான மீள் வரவு கண்டு மனம் ஆனந்தத்தில் ஆர்ப்பாட்டம் போடுகிறது...!!

மனதார வாழ்த்துகிறேன் அண்ணா, நேரம் கிடைக்கையில் எல்லாம் நம்மிடை இணந்திருங்கள் என்ற அன்பு வேண்டுகோளுடன்..........

பூமகள்
12-04-2008, 05:57 AM
வாழ்த்துகள் நண்பன் அண்ணா..!!

தமிழ் மன்ற குடும்பத்தின் குழந்தை பூ, இந்த ஆலமரத்தினை பெருமிதத்தோடு பாக்கிறது..!!

மிக நல்ல செய்தி சொன்னீர்கள்..!!

மீண்டும் மன்றம் வந்து, மன்றத்தோடு என்றும் இணைந்து எங்களுக்கு உங்களின் தெள்ளமுதக் கவியை நிறுத்தாலும் தருமாறு வேண்டிக் கொள்கிறேன். :)

meera
12-04-2008, 06:25 AM
உங்களை வாழ்த்தும் அளவுக்கு வயதோ,அனுபவமோ இல்லை. இருந்தாலும் என் வாழ்த்துகள் நண்பன் அண்ணா.

உங்கள் தொகுப்பும், முத்துகுமரன் அண்ணாவின் தொகுப்பும் இனிதாய் மலரட்டும்.

ஆதவா
12-04-2008, 07:36 AM
வணக்கம் நண்பன் மற்றும் நண்பர் பிரியன்

உங்கள் உள்வெளியின் வெளிப்பயணத்திற்கு முதற்கண் வணக்கத்திற்குரிய வாழ்த்துகள்.

உயிர்த்துளியின் வெளியீட்டிற்கும் எனது வாழ்த்துகள்.

தமிழ்மன்றத்தை மறவாத உங்களைப் போல உங்களை மறவான தமிழ்மன்றத்தின் பிணைப்பே எம்மை வியக்கவைக்கிறது. முத்தாய்ப்பாக உங்களின் முன்னுரையில் நம் மன்றத்தை, அது உங்களை உயர்த்திய உண்மையை இழைத்து வைத்தமை மேலும் வியக்கவைக்கிறது. எங்களுக்கும் சிறு ஆவலுண்டு. நண்பனை மறக்காத மன்றம் போல என்னை மறக்காத மன்றம் ஒருநாள் இருக்கவேண்டும் என்பதே. உழைப்பு எத்துணை பலன்களைத் தரும் என்பது எல்லா விசயத்திலும் பொருத்தாமானதே!

வெறும் பொழுது போக்கவோ, வீண் அரட்டை மட்டும் அடித்துக் கொண்டிருக்கவோ அல்லாமல் சிறந்த படைப்பாளியாக, சிறந்த சிலைவடிக்கும் சிற்பியாக, இன்னும் சிலர் உளியாகக் கூட இருக்கிறார்கள் இங்கே. என்னிடம் சிலர் கேட்டதுண்டு ; ஆறுதலுக்காகவும், எனது பொழுதைப் போக்கவும் மன்றத்தை உபயோகிப்பதில் தவறென்ன என.. அவர்களுக்கெல்லாம் மன்றத்தின் சார்பாக எனது பதில், அரசனாக இருந்தால் ஓய்வின்றி போராடு, அல்லாதவனாக இருந்தால் அதைவிட போராடு என்பதே!!

உங்கள் போராட்டம், உங்கள் மனம் எழுதிய பாதை எல்லாம் இணைந்து காகித உலகுக்கு வரும் போது நாங்கள் எண்ணுவது, அந்த இடத்தை எப்படியாவது அடையவேண்டும் என்பது. நேற்றைய உலகு இன்றில்லை, நாளைய மாற்றத்தை உருவாக்குவது நாம்..

உங்கள் உலகை எம் மடியில் தவழவைத்தமைக்கு தமிழ்மன்றமும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது..........

இறுதியில் எனது கோரிக்கையும் இதுவே...........

ஆங்காங்கேயோ அல்லது ஒருங்கிணைந்தோ அலைந்து திரியும் எம் படைப்புகளுக்கு நேர்பாதை யிட விமர்சன ஊக்கிகளாகவேனும் வரவேண்டுமென்பதே!!!

அன்புடன்
ஆதவன்

kavitha
12-04-2008, 09:17 AM
முதன் முதலில், சாதாரணமாகவே எழுதத் தொடங்கினாலும், அதைப் பிரம்மாண்டமாகப் பாராட்டி, புகழ்ந்து உற்சாகப் படுத்திய தமிழ் மன்றம் டாட் காமின் இளசு, அத்தகைய கரைகளில் ஒருவராக இருந்தார் என்றால், ஆங்கிலக் கலப்புகளை நீக்கி, தமிழை முதன்மைப் படுத்த தொடர்ந்து கேட்டுக்கொண்டே அதற்கான உதவிகளையும் செய்து கொடுத்து வரும் இசாக் மற்றொரு கரையாக இருக்கிறார்.

எழுதுவதற்குத் தளம் அமைத்துக் கொடுத்த தமிழ் மன்றம் தான் இத்தகைய நண்பர்களையும், உடன் பிறவா சகோதரர்களையும் அடையாளம் காட்டியது.

இன்று இணையத்தில் பரவலாக எழுதினாலும், முதலில் நடை பயின்றது தமிழ் மன்றம் என்றால் மிகையாகாது. பின்னர் வலைப் பூக்களும், முறையான வடிவ இணைய பத்திரிக்கைகளும் இயங்கும் தளமாக ஆகிவிட்டன. இவ்வாறு பலவாறான தளங்களில் தோன்றிய கவிதைகள் தொகுக்கப்பட்டு, இன்று விரியக் காத்திருக்கின்றன உங்களிடத்தில்.

அன்பு நண்பன்,

இப்பதிவைக்கண்டு மிகவும் பூரிப்படைகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பே இசாக் அண்ணன் அவர்களிடமிருந்து மின் அழைப்பிதழ் எனக்கு வந்திருந்தது. அதை இங்கே பரிமாறக்கொள்ள உங்கள் அனுமதியை எப்படிப்பெறுவது என்று குழம்பிக்கொண்டிருந்த நிலையில் இப்பதிவு தித்திக்கும் தேம்பாகாய் இருக்கிறது.

மன்றத்தை மறவாத உங்கள் அன்பும், மன்றத்தையும் இளசு அண்ணாவையும் உங்கள் புத்தக முன்னுரையில் இட்டிருப்பது பெருமிதம் கொள்ளவைக்கிறது.

புத்தக வெளியீடு சென்னையில் இருந்திருந்தால் எப்படியாவது வந்து சேர்ந்திருப்பேன். துபாயில் என்பதால், என் போன்றோர் புத்தகத்தைப்பெறுவது எப்படி? எந்த பதிப்பகத்தாரால் வெளீயீடு செய்யப்படுகிறது? எங்கே கிடைக்கும் என்ற விவரம் கூறினால் நலமாய் இருக்கும்.

நம் பிரியன் (முத்துக்குமரன்) அவர்களுக்கும் எனது வாழ்த்துகள். :)

இருவரும் முன்பு போல் மன்றம் வந்தருளவேண்டும் என்பதே எனது அவாவும்.

நன்றி.

என்றும் நட்புடன்,

கவிதா.

நாகரா
12-04-2008, 11:46 AM
வெளிவர இருக்கும் உமது "உள்வெளி" கவிதைத் தொகுப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், நண்பன்.

poornima
12-04-2008, 02:27 PM
அனைவர் சொல்வதிலிருந்தும் நீங்கள் மன்றத்தின் முக்கியத் தூணாக இருந்திருப்பீர்கள் என்று கருதுகிறேன். உங்கள் நூல் வெளியீட்டு விழா இனிதே சிறக்க வாழ்த்துக்கள் நண்பா.(ஆமாம் உண்மை பெயர் என்ன?)

Nanban
12-04-2008, 04:47 PM
அனைவர் சொல்வதிலிருந்தும் நீங்கள் மன்றத்தின் முக்கியத் தூணாக இருந்திருப்பீர்கள் என்று கருதுகிறேன். உங்கள் நூல் வெளியீட்டு விழா இனிதே சிறக்க வாழ்த்துக்கள் நண்பா.(ஆமாம் உண்மை பெயர் என்ன?)

மிக்க நன்றி - பூர்ணிமா.

நான் மன்றத்தின் தூணாக இருந்தேனா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் எழுதியவைகளைத் தயக்கமின்றி பிரசவிக்கும் இடமாக தமிழ் மன்றத்தைப் பயன்படுத்திக் கொண்டேன் என்பது தான் உண்மை.

என் பெயர்? மிக இனிமையான பெயர். காதலுக்கு இலக்கணம் சொல்லும் பெயர். கலைகளை வார்த்தெடுப்பதை தன் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த ஒரு பேரரசனின் பெயர்.

இனி நீங்கள் தான் கண்டு சொல்ல வேண்டும்

மிக்க அன்புடன்,
நண்பன்

Nanban
12-04-2008, 04:49 PM
வெளிவர இருக்கும் உமது "உள்வெளி" கவிதைத் தொகுப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், நண்பன்.

மிக்க நன்றி...நாகரா.

Nanban
12-04-2008, 05:24 PM
உங்களை வாழ்த்தும் அளவுக்கு வயதோ,அனுபவமோ இல்லை. இருந்தாலும் என் வாழ்த்துகள் நண்பன் அண்ணா.

உங்கள் தொகுப்பும், முத்துகுமரன் அண்ணாவின் தொகுப்பும் இனிதாய் மலரட்டும்.

ஆஹா!!! நான் என்ன மூத்த அரசியல் தலைவரா - வாழ்த்துவதற்கு வயதையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு?

தாராளமாக வாழ்த்துங்கள்.

சிந்தனைக்கும், கற்பனைகளுக்கும் வயது கிடையாது. என்றுமே இளமை தான்...

Nanban
12-04-2008, 05:28 PM
வாழ்த்துகள் நண்பன் அண்ணா..!!

தமிழ் மன்ற குடும்பத்தின் குழந்தை பூ, இந்த ஆலமரத்தினை பெருமிதத்தோடு பாக்கிறது..!!

மிக நல்ல செய்தி சொன்னீர்கள்..!!

மீண்டும் மன்றம் வந்து, மன்றத்தோடு என்றும் இணைந்து எங்களுக்கு உங்களின் தெள்ளமுதக் கவியை நிறுத்தாலும் தருமாறு வேண்டிக் கொள்கிறேன். :)


நண்பன் என்ற பெயரை வைத்துக் கொண்டதே, உறவுகள் தரும் மனச்சிக்கல்களையும் தாண்டி இயல்பாய், நட்பாய், சிநேகமாய் உறவாட வேண்டுமென்பதற்காகத் தானே?

நண்பன் என்றே கூப்பிடுங்கள்...

மேலும் ஆலமரமாக யாரையும் பார்க்காதீர்கள். ஆலமரம் எந்த ஒரு சிறு புல், பூண்டையும் கூட தன் நிழலில் வளரவிடுவதில்லை. நான் அத்தகைய ஒரு மரமாக யாருடைய பாதையிலும் நிற்க மாட்டேன்.

பூமகளாக, வெளிச்சம் உண்டு, காற்றில் தவழ்ந்து செழித்து வளர வாழ்த்துகள்.

அன்புடன்

நண்பன்

Nanban
12-04-2008, 05:34 PM
இரண்டு நாள் இடைவேளையின் பின் மன்றத்தினுள் நுளைந்த எனக்கு, இன்ப அதிர்சி...!!

அது சித்திரைப் புத்தாண்டுப் பரிசாக....!!! :)

எழுத்துக்களால் என்றுமே நம் மனதில் உயர்ந்த இடத்திலிருக்கும் உங்கள் நற்செய்தி ஒன்றுடனான மீள் வரவு கண்டு மனம் ஆனந்தத்தில் ஆர்ப்பாட்டம் போடுகிறது...!!

மனதார வாழ்த்துகிறேன் அண்ணா, நேரம் கிடைக்கையில் எல்லாம் நம்மிடை இணந்திருங்கள் என்ற அன்பு வேண்டுகோளுடன்..........


சித்திரை இனி தமிழ்ப் புத்தாண்டல்லவே? சற்று காலம் பிடிக்கும் இல்லையா? தை திருநாளை வருடப் பிறப்பாக எண்ணிப் பார்க்க? தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதாவது புது வருடம் வந்தால், ஏதாவது வழி பிறக்கலாமென்பது தானே அதன் பொருள். இப்பொழுது தான் நாம் பழைய பாதைகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறோம், அல்லவா?

மாற்றங்கள் தான் வாழ்க்கை. இதை ஏற்றுக் கொள்ள சற்று காலம் பிடிக்கலாம். பழைய இயல்பிற்குத் திரும்ப சற்றே கால அவகாசம் தேவைதான் - இல்லையா?


உங்கள் மகிழ்வு - ஆர்ப்பரிக்கும் மனம் இதெல்லாம் என்னையும் உற்சாகம் கொள்ளச் செய்கிறது. உற்சாகம் ஒருவரிலிருந்து மற்றவர்க்குத் தொற்றிக் கொள்வது இயற்கை தானே?

உங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகளுக்கு எனது நன்றிகள் பல.

என்றும் இது போன்ற அன்பான வாழ்த்துகளுக்கு உரியவனாக இருக்க வேண்டுமே என்ற உணர்வும் தலை தூக்குகிறது.

மிக்க நன்றி - ஓவியன்

அன்புடன்

நண்பன்

Nanban
12-04-2008, 05:37 PM
மிக்க சந்தோஷமான செய்தி நண்பன். வாழ்த்துகள்..

மதி

மிக்க நன்றிகள். சந்தோஷத்துடன் வாழ்த்தும் உங்கள் மனதிற்கு...

அன்புடன்

நண்பன்

Nanban
12-04-2008, 05:44 PM
அன்புடன் மிக மிக வரவேற்கும் நன்பன நீங்கள். நான் இப்போது இணைந்தவன். நீங்கள் மன்றத்தின் மூத்தவர். உங்கள் கவிதைகளைப் படித்து....இவர் இன்றிருக்கவில்லையே என ஏங்கியவன் நான். மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு உங்களை மன்றம் கான்பதில் மிக மிக மகிழ்வு. தங்களின் கவிதைகள் அச்சாவதில் அளவற்ற ஆனந்தம். ஒரு குறை உள்ளது...தாமதமாகிவிட்டது. அவ்வளவே.

அன்புடன் சிவா.ஜி.க்கு

மிக மகிழ்ச்சி. நான் இருந்த பொழுது என்னுடன் பழகியவர்கள் என்னிடம் மிக்க அன்பாக இருப்பது இயல்பானது. என்னையறியாமலேயே, எனது எழுத்துகளை மட்டுமே வாசித்து, என் மீது இத்தனை அன்பும் மதிப்பும் வைத்திருப்பது குறித்து பிரமிக்கிறேன். இந்த அன்பிற்கும், பாசத்திற்கும் நான் எவ்வாறு பதில் செய்வேன் என்று திகைத்து நிற்கிறேன்.



அன்புடன்

நண்பன்

Nanban
12-04-2008, 05:47 PM
பாரதி, அறிஞர், ஆதவா, கவிதா....

மிக்க மகிழ்ச்சியுடன் எனது நன்றிகள்...

விரிவான பதில் எழுத எனக்கு நிறைய அவகாசம் தேவைப்படுகிறது. அத்தனை எளிது இல்லை - சம்பிராதாயமான வார்த்தைகளைப் பேசி நன்றி மட்டும் சொல்லி முடித்துக் கொள்ள.

எனக்குத் தேவைப்படும் அவகாசத்தை நீங்கள் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

அன்புடன்

நண்பன்

ஓவியன்
12-04-2008, 06:12 PM
மாற்றங்கள் தான் வாழ்க்கை. இதை ஏற்றுக் கொள்ள சற்று காலம் பிடிக்கலாம். பழைய இயல்பிற்குத் திரும்ப சற்றே கால அவகாசம் தேவைதான் - இல்லையா?

உண்மைதான் அண்ணா, மாற்றம் என்பது மாற்றமில்லாதது என்பார்கள்....
அந்த மாற்றத்தை இலகுவில் உள்வாங்கிக் கொள்ள வைப்பதற்கு காலத்தை விட சிறந்த மருத்துவர் இல்லைதான்...!

உங்களது முன்னைய எழுத்துக்களால் மட்டுமே உள்வெளியை அறிந்த நாம், தொடர்ந்தும் உங்கள் உள்வெளியில் கலந்திட முடியுமென்ற எண்ணம் ஒன்றே அந்த கால அவகாசத்தையும் இலகுவில் வென்றிடுவதற்கு.... :)

அறிஞர்
13-04-2008, 12:54 AM
எனக்குத் தேவைப்படும் அவகாசத்தை நீங்கள் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்,
அன்புடன்

நண்பன்
இதழ் வெளியீடு முடிந்து.. பொறுமையாய் வாருங்கள்.....
நம்பிக்கையுடன் நாங்களும் காத்திருக்கிறோம்.

அன்புரசிகன்
13-04-2008, 02:02 AM
அனைத்தும் நலமாய் திகழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பாரதி
13-04-2008, 06:01 AM
பாரதி, அறிஞர், ஆதவா, கவிதா....

விரிவான பதில் எழுத எனக்கு நிறைய அவகாசம் தேவைப்படுகிறது.

எனக்குத் தேவைப்படும் அவகாசத்தை நீங்கள் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

அன்புடன்

நண்பன்

நிச்சயம் நண்பரே... ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்போம்.

சுகந்தப்ரீதன்
14-04-2008, 04:06 AM
வாழ்த்துக்கள் நண்பரே...!!

மேலும் பல கவிதை தொகுப்புகளை தாங்கள் வெளியிட எனது வாழ்த்துக்கள்..!!

மீண்டும் மன்றம் வந்தது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது..!! தொடர்ந்து மன்றத்தில் இணைந்திருந்தால் இம்மகிழ்ச்சி எங்களுக்கு இன்னும் இரட்டிப்பாகும் செய்வீர்களா நண்பரே..?!

ஆதவா
14-04-2008, 05:39 AM
பாரதி, அறிஞர், ஆதவா, கவிதா....

மிக்க மகிழ்ச்சியுடன் எனது நன்றிகள்...

விரிவான பதில் எழுத எனக்கு நிறைய அவகாசம் தேவைப்படுகிறது. அத்தனை எளிது இல்லை - சம்பிராதாயமான வார்த்தைகளைப் பேசி நன்றி மட்டும் சொல்லி முடித்துக் கொள்ள.

எனக்குத் தேவைப்படும் அவகாசத்தை நீங்கள் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

அன்புடன்

நண்பன்

நிச்சயம் காத்திருப்போம்... அத்தகைய நாளை எதிர்பார்த்துக்கொண்டு.........

நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள இயலாவிடினும் மனமார வாழ்த்துகிறேன்........

அன்புடன்
ஆதவன்....

அமரன்
14-04-2008, 06:33 PM
நண்பனுக்கு வாழ்த்துகள்..
எது உங்களை எனக்கு தந்ததோ. எது உங்கள் பால் என்னை ஈர்த்ததோ. எது உங்களை நினைத்து உருகச்செய்ததோ. அதற்கு கிடைக்கும் அங்கீகாரத்தின் எல்லை விரிகிறது எனும்போது ஆனந்தமும் பெருகுகிறது. இந்த இழையில் கூடப் பாருங்கள். பின்னூட்டங்களை உள்ளார்ந்து பார்த்து, கருத்து செறிவு நிறைந்த உங்கள் பதில் பின்னூட்டம். எழுதுவது உங்களுக்கு தவம் போன்றது என்பது புலனாகிறது. பெருமிதத்துடன் பாராட்டுகிறேன்.

kavitha
15-04-2008, 10:57 AM
எனக்குத் தேவைப்படும் அவகாசத்தை நீங்கள் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

அன்புடன்

நண்பன் அதுவரை காத்திருக்கிறோம். நன்றி :)