PDA

View Full Version : புனல் ( அ.மை. -31)



இளசு
01-03-2008, 11:24 AM
அறிவியல் மைல்கற்கள் - 31



புனல்


(ஹைட்ரஜன் மற்றும் நீரின் கதை -
ஹென்றி கேவண்டிஷ்- Henry Cavendish (1731-1810)

------------------------------------------------

அ.மை. 30 - தழல் இங்கே..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14679

------------------------------------------------------


நீரின் கதை கேட்குமுன், தனிமங்களின் தொடக்கக் கதையைக் கொஞ்சம் பார்ப்போம்..

ஆதியில் ஹைட்ரஜன் மட்டுமே இருந்தது!
அண்டம் முழுதும் ஹைட்ரஜன் மயம்...!

ஆதி அணு ஹைட்ரஜன். அதன் அணு எண் 1.

எல்லாமே ஒன்றின் பெருக்கம்..

இவ்வுலகம், அண்டம், பால்வீதி எல்லாமே ஹைட்ரஜனில் தொடக்கம்.

வெப்பம் மகாசக்தி. அதன் தாக்கத்தில் ஹைட்ரஜன் பிளந்து, இணைந்து பிறந்த
அடுத்த தலைமுறை - ஹீலியம். அதன் அணு எண் -2.

இப்படி ஒவ்வொன்றாய் பல அணுக்கள் - Elements - தனிமங்களாய் மெல்ல
உருவெடுத்தன. இங்கும் எங்கும் எல்லாமே ஹைட்ரஜனின் கூட்டு வடிவங்களே..

இப்படி மெல்ல மெல்ல உருவாகி, தனிப்பெயராகித்
தனித்து இயங்கினாலும் - தனிமங்களுக்கு இரு மனநிலை.

ஒன்று - பிளந்து கூடி நிலைமாறுவது.
மற்றொன்று - இருப்பதைத் தக்கவைத்து நிலையாய் இருப்பது.

மாற்றமே வளர்ச்சி..ஆனால் அதில் சிதைந்து அடையாளம் இழக்கும் '' ரிஸ்க்'' இருக்கிறது.
''ஸ்திரத்தன்மையே '' பாதுகாப்பு. ஆனால் அதில் தேங்கி சிதிலமாகும் அபாயம் இருக்கிறது.

அண்டமெங்கும் சிதறிப்பரவி இருக்கும் எல்லாத் தனிமங்களும்
இந்த இருதலைக் கொள்ளி எறும்புகள் நிலையில்.

அப்படி இருக்கும் எல்லாமே - ஒரு தனிமத்தை நோக்கி,
''இருந்தா உன்னைப் போல் இருக்கணும்ப்பா'' என எல்லை வகுத்து
அதை நோக்கி நகர்கின்றன..

அப்படி எல்லா தனிமங்களும் பொறாமைப்படும் அளவு உச்ச ''ஸ்திர'' நிலை அடைந்த
ஒருவர் - இரும்பு.

அணு எண் - 26 உள்ள இரும்பே periodic table ன் நடுநிலை நாயகன்.

இரும்புக்குக் குறைவான அணு எடை ( protons + neutrons) உள்ளவை , ஒன்றுடன் ஒன்று கூடி
''இரும்பு'' போல ஆகிவிடலாம் என முயன்றுகொண்டே இருக்கின்றன.

இரும்புக்கு அதிகமான அணு எடை உள்ள தனிமங்கள் எல்லாம் கருப்பிளந்து ( Nuclear Fission)
எடை குறைந்து '' இரும்பு போல '' நிலைத்துவிடலாம் என அலைபாய்கின்றன.
(இதுதான் இயற்கையிலேயே இருக்கும் கதிர்வீச்சுகளின் - radiation -பிறப்பிடம்.)

எல்லாச் சாலைகளும் ரோமாபுரி நோக்கி என்பது போல
எல்லாத் தனிமங்களும் இரும்பை நோக்கி எனச் சொல்லலாம்.

உதாரணம் சொல்லவேண்டுமென்றால் -
எல்லாமே ஒரு பைசா காசுகளாக (ஹைட்ரஜன்) அண்டம் முழுதும் இறைந்து கிடந்தது.
இரு பைசாக்கள் வெப்பத்தில் ஒட்டிக்கொண்டால் ஹீலியம்.
ஆறு பைசாக்கள் இணைந்தால் கார்பன். (? அரை அணாக் காசு)

ஒரு அரையணா +இரு பைசா ஒட்டினால் ஆக்சிஜன்.(8)

ஒட்டும்போது சில கூடுதல் ( நியூட்ரான்) எடை கூடி இன்னும் தனித்துவம் பெரிய அ(ண்)ணாக்களுக்கு!

நாலணா (கால் ரூபாய்க் காசு) - இரும்பு என வைத்துக்கொள்ளலாம். ( 26 பைசாக்கள் வெப்பத்தால் ஒட்டியது)
ஒரு ரூபாய்க் காசு - யுரேனியம் (92) என வைத்துக்கொள்ளாம்.

எல்லாக் காசுகளும் நாலணா ஆக முயன்றுகொண்டே இருக்கின்றன
என்பதுதான் அணு -இயற்பியலின் தங்க முடிச்சு!

------------------------------------------------------------


முன்கதை கேட்டுவிட்டீர்கள் அல்லவா..? இனி ''மெயின்'' கதைக்குப் போகலாம்.

நீர் - இது தனிமங்களின் கூட்டு அன்று. அதுவே ஒரு ''தனிமம்'' என்பது
ஆண்டாண்டுகாலமாய் நம்மவர்கள் நம்பி வந்த கருத்து.

காற்றைப்பிரித்து ஆக்சிஜன், நைட்ரஜன் என பல தனிமங்களின் கூட்டு அது எனச் சொல்ல
எத்தனை காலம் ஆனதோ... அதே காலம் நீரைப் பிரித்துப் பார்க்கவும் ஆனது.

நீரைப் பிரித்து அதில் ஆக்சிஜன் இருப்பதை நேரடியாய் அறியுமுன்னே
ஆக்சிஜனைக் கொளுத்தி அதனால் நீர் உருவாவதைத்தான் முதலில் கண்டார்கள்.
கண்டவர் - ஜான் வால்டேர் ( ஆக்சிஜன் நாயகர் ப்ரீஸ்ட்லியின் நண்பர்).
இவர் ஆக்சிஜனை சாதாக் காற்றுடன் கலந்து கொளுத்திய குடுவையில்
''நீர்த்துளிகள்'' படிவதைக் கண்டார்!

ஆக்சிஜன் '' எரிவதன்'' காரணி என லாவாய்சியர் சொன்னவுடன் அதை எரித்து
சோதனை செய்த பெரிய விஞ்ஞானிகள் பல பேர் இப்படி சோதனைச் சாதனங்கள்
நனைவதைக் கண்டனர். '' எரித்தால் நனையும்'' புதிர் கண்டு திகைத்தனர்.

இப்புதிரை அவிழ்க்க மூன்றாண்டுகள் கடும் சோதனை செய்தார் கேவண்டிஷ்.
ஒரு பங்கு ஆக்சிஜனையும் , இருபங்கு ஹைட்ரஜனையும் சேர்த்து சூடாக்கி,
'எரித்து - நீர் ஆக்கினார்''.

லாவாய்சியரோ சுலபமாய் குறைந்த காலம் எடுத்துக்கொண்டு,
பிழம்பான இரும்புக்கம்பியின் மேல் நீரை ஊற்றி - ஆக்சிஜன் + ஹைட்ரஜனாய்ப் பிரித்துக்
காட்டி அதே இடத்துக்குச் சீக்கிரம் வந்தார்.

பிரிக்காதே.. தனிமம்.. புனிதம்... என நீரை அறிவியலார் வணங்கியது நெடுங்காலம்!
ஆக்சிஜன் கண்டதால், தவிர்க்க இயலா தொடர்ச்சியாய் அது இருக்கும் நீரை
விஞ்ஞானிகள் அறிவுபூர்வமாய் அணுகியது இக்காலம் ( 1784).

இரு தனிமங்களைச் சேர்த்து நீராக்க கேவண்டிஷ் எடுத்துக்கொண்டது அதிக காலம்!
நீரைப் பிரித்து இரு தனிமங்கள் என நிரூபிக்க லாவாய்சியருக்கு ஆனது குறைந்த காலம்!

இவையெல்லாம் நம் முன்னோடி அறிவாளர்கள் நமக்கு செய்து கொடுத்து விளக்கியது-
மனித வரலாற்றின் பொற்காலம்!

பாரதி
01-03-2008, 11:34 AM
ஆஹா....! எத்தனை எளிமையாய் சொல்கிறீர்கள் அண்ணா...

எல்லாமே நா நயத்திலும், நாணயத்திலும்தான் என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறீர்கள். இதனால்தானோ "இரும்பு மனிதன்" என்ற அடைமொழி வந்தது?

மாற்றம் வந்துகொண்டேதான் இருக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை எண்ணிப்பார்க்க வாய்ப்பளித்த புனல் நாயகர்களுக்கு நன்றி.

அண்ணாவிற்கு என் அன்பு.

சிவா.ஜி
01-03-2008, 11:51 AM
அழகான,எளிமையான,கவிதைத்துவமான....பாமரனும் புரிந்துகொள்ளத்தக்க வகையில் தெள்ளிய ஓடை போன்ற எழுத்தில் புனல் அறியப்பட்ட அறிவியல் வரலாறை அளித்த இளசுவுக்கு ஒரு ஜே.......

அறிவியலைப் பற்றி எழுதிய கட்டுரையில் அற்புதமான வாழ்வியல் தத்துவமாய்

மாற்றமே வளர்ச்சி..ஆனால் அதில் சிதைந்து அடையாளம் இழக்கும் ரிஸ்க் இருக்கிறது.

ஸ்திரத்தன்மையே பாதுகாப்பு. ஆனால் அதில் தேங்கி சிதிலமாகும் அபாயம் இருக்கிறது.

இந்த வரிகளைப் பார்த்ததும் பிரமித்துவிட்டேன்...எத்தனை ஆழமான சிந்தனை.இளசுவால் மட்டுமே முடியும் வித்தை இது...

தெரியாத பல விஷயங்களைத் தெளிவாக்கும் அறிவியல் சுரங்கத்துக்குள் எங்களை அழைத்துப்போகும் இளசுவுக்கும் அவரின் இணையற்ற எழுத்துக்கும் ஒரு சல்யூட்.

kavitha
03-03-2008, 10:11 AM
ஒட்டும்போது சில கூடுதல் ( நியூட்ரான்) எடை கூடி இன்னும் தனித்துவம் பெரிய அ(ண்)ணாக்களுக்கு!

அறிவியலை வாழ்க்கையோடு இணைத்துச் சொல்லும் உங்கள் பாங்கே தனி அழகு அண்ணா..
இந்த முறையும் மிக எளிமையாக புரிந்துக்கொண்டோம். தொடர்ந்து படிக்க ஆவல். நன்றி.

யவனிகா
03-03-2008, 12:02 PM
பாதுகாக்கப் படவேண்டிய பெட்டகம் இளசு அண்ணாவின் இந்தத் தொடர்.
சில நேரம் இளசு அண்ணாவின் வரிகளைப் படிக்கும் போது ஆச்சர்யத்தில் அடுத்த வரி மனதில் பதியவே சமயம் எடுக்கும்.
மலைப்பும் பெருமையுமாய் இருக்கிறது....அண்ணா....
பெற்றெடுப்பள் தாய்...கற்றுக் கொடுப்பவன் தகப்பன்...
உங்களிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது...
அண்ணாந்து உங்கள் முகம் நோக்கியவாறு குழந்தையாய் நாங்கள்..!!!

பூமகள்
03-03-2008, 12:14 PM
ஹைட்ரஜன் ஹீலியம் என... லாக் புக்கில் அடங்கியிருக்கும் தனிமங்களின் அட்டவணையை அப்படியே கண் முன் நிறுத்தியது..!!

அறிவியல் படித்திருந்தாலும்.. இப்போது தான் முழுமையாக புரிதல் வந்திருக்கிறது என்று ஒப்புக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் பெரியண்ணா. அதற்கு தங்களின் சீரிய இந்த பதிவுகள் தான் சாட்சி.

புனல் பிறந்த கதை
புரட்டிப் போட்டது
மனங்களை..!!

பஞ்ச பூதங்களில்
காற்றையும் நீரையும்
கரைத்துக் குடித்துவிட்ட
திருப்தி தெளிவு
என்னுள்ளே..!

மாற்றமே வளர்ச்சி..ஆனால் அதில் சிதைந்து அடையாளம் இழக்கும் '' ரிஸ்க்'' இருக்கிறது.
''ஸ்திரத்தன்மையே '' பாதுகாப்பு. ஆனால் அதில் தேங்கி சிதிலமாகும் அபாயம் இருக்கிறது.
அதிகம் ஓடினாலும் பிழை..!!
ஓடாது நின்றாலும் பிழை..!!

அசந்து நிற்கிறேன் பெரியண்ணா..!!
அண்ணலின் ஒவ்வொரு மைல் கல்லிலும் என் பாதம் பதிய முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.

தொடருங்கள் அண்ணலே..!! :)

இளசு
20-06-2008, 09:22 PM
பின் தொடர்ந்து நல்லூக்கம் தரும் அன்பு பாரதி, சிவா, கவீ, யவனி, பூ -

அனைவருக்கும் என் நன்றிகள்..

இடைவெளிகள் விழுந்தாலும், இவ்வூக்கம் தரும் தெம்பில்
தொடர்ந்து இப்பாதையில் நடைபோடுவேன்..

தொடர்ந்து வாருங்கள் சொந்தங்களே!

பூமகள்
21-06-2008, 07:16 PM
தொடர்ந்து வாருங்கள் சொந்தங்களே!
உங்கள் வழியில் நடக்க இங்கே போட்டியே நடக்கிறது பெரியண்ணா..!:icon_rollout:

நிச்சயம்.. தங்கள் வழி நடப்போம்..!! சிறப்போம்..!! :)

mukilan
23-06-2008, 03:47 PM
எனக்கு ஏன் இப்படி ஒரு ஆசிரியர் இல்லாமல் போய்விட்டார் என வருந்துகிறேன் அண்ணா. இவ்வளவு எளிதாக யாரும் விளக்காததால் எனக்கு அறிவியலின் மீது சிறு கசப்பு எப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது.யவனிகா சொல்வது போல அண்ணாவின் அறிவியல் மைந்தர்கள் அனைத்தையும் தொகுத்து மின்புத்தகமாக வைத்துக்கொள்ள வேண்டும் எதிர்காலத்தில் குழந்தைகள் அறிவியலை கசப்புடன் அனுகாமல் இருப்பதற்கு நாம்தானே வழி செய்ய வேண்டும்.

பூமகள்
23-06-2008, 03:56 PM
மிக நல்ல யோசனை முகிலன் அண்ணா..!!
இப்போதே...ஆவணம் செய்ய ஆவன செய்யுங்களேன் மன்ற முத்துகளே..!!
நானும் நிச்சயம் முயல்கிறேன்..!! :)

இளசு
23-06-2008, 06:27 PM
வருக முகில்ஸ்..

உன் வருகையே பேரினிப்புதான் எனக்கு..

முதல் 25 பாகங்களை பாரதி பி.டி.எஃப் கோப்பாக மாற்றியாச்சு முகில்ஸ்..

ஐம்பது பாகம் முடியட்டும்.. ஒரு தொகுப்பு ஆக்கலாம்..

நூறு பாகம் வரை எழுதும் ஆசை உண்டு..
நான் தனிமரமல்லன்.. எனவே நாம் தோப்பாகலாம்..


சேர்ந்து பயணிப்போம்..

mukilan
23-06-2008, 06:38 PM
நலம் அண்ணா. ஒரு வழியாக தேர்வுகளை முடித்து விட்டு வந்து விட்டேன். பாரதி அண்ணாவின் மகத்தான பணிக்குத் தலை வணங்குகின்றேன். இன்னமும் முத்துக்கள் வருவதானால் காத்திருப்பதில் சுகம்தானே? காத்திருக்கிறோம் அண்ணா.

aren
27-06-2008, 02:13 PM
மிகவும் அருமையான பதிவு. தெரியாத பல விஷயங்களை எங்களுக்கு புரியும் வகையில் சொல்லும் உங்கள் பாணியே தனி இளசு அவர்களே. இன்னும் கொடுங்கள்.

kavitha
30-06-2008, 08:45 AM
ஐம்பது பாகம் முடியட்டும்.. ஒரு தொகுப்பு ஆக்கலாம்..

நூறு பாகம் வரை எழுதும் ஆசை உண்டு..
நான் தனிமரமல்லன்.. எனவே நாம் தோப்பாகலாம்..


சேர்ந்து பயணிப்போம்..

எனில் என்னிடம் சில அறிவியல் செல்வங்கள் கிடைத்திருக்கின்றன அண்ணா. உங்களுக்கு அனுப்பி வைக்க அனுமதி அளிப்பீர்களா?

aren
30-06-2008, 08:51 AM
வருக முகில்ஸ்..

உன் வருகையே பேரினிப்புதான் எனக்கு..

முதல் 25 பாகங்களை பாரதி பி.டி.எஃப் கோப்பாக மாற்றியாச்சு முகில்ஸ்..

ஐம்பது பாகம் முடியட்டும்.. ஒரு தொகுப்பு ஆக்கலாம்..

நூறு பாகம் வரை எழுதும் ஆசை உண்டு..
நான் தனிமரமல்லன்.. எனவே நாம் தோப்பாகலாம்..


சேர்ந்து பயணிப்போம்..


இதை பிரிண்டு செய்ய என்னால் ஆன உதவிகளைச் செய்ய நான் தயார். எல்லாம் ரெடியாகட்டும், நிச்சயம் புத்தகமாக வெளியிடலாம்.

இளசு அவர்களே தொடருங்கள். இது ஒரு பொக்கிஷம்.

இளசு
03-07-2008, 06:53 PM
எனில் என்னிடம் சில அறிவியல் செல்வங்கள் கிடைத்திருக்கின்றன அண்ணா. உங்களுக்கு அனுப்பி வைக்க அனுமதி அளிப்பீர்களா?

நிச்சயமாய் கவீ..
இதற்கெல்லாமா அனுமதி கேட்பார்கள்?


இதை பிரிண்டு செய்ய என்னால் ஆன உதவிகளைச் செய்ய நான் தயார். எல்லாம் ரெடியாகட்டும், நிச்சயம் புத்தகமாக வெளியிடலாம்.

இளசு அவர்களே தொடருங்கள். இது ஒரு பொக்கிஷம்.

உங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி அன்பின் ஆரென்..

பணிப்பளுவால் மனமொன்றி அடுத்த பாகம் தொடர இயலா நிலை இப்போது..
விரைவில் அடுத்த பாகத்தில் சந்திக்கிறேன் -

தலைப்பு : நிலமகளின் பரமபதம்..

Narathar
29-09-2008, 10:40 PM
விஞ்சானத்தை உங்களைப்போல இலகுவாக போதிக்கும் ஒரு ஆசான் கிடைத்திருந்தால்.... என் தாயின் கனவுக்கமைய நான் இன்று ஒரு வைத்தியராய் இருந்திருப்பேன்.....

இந்த தனிமங்களையும் தனிம எண்களையும் கண்டு பயந்துதான் வர்த்தகத்துறைக்கு எனது படிப்பை மாற்றிக்கொண்டேன்....

நான் அறியாததை.. அறியவிரும்பாததை அழகாகச்சொல்லி வாசிக்கத்தூண்டுகின்றீர்கள்

அருமையான பதிப்பு வாழ்த்துக்கள்