PDA

View Full Version : மின்னஞ்சல் கதை - 2: மழை நடனம்



பாரதி
01-03-2008, 05:21 PM
மின்னஞ்சல் கதை - 2. மழை நடனம்.

எழுதியவர்: .................

இது உண்மையில் நடந்ததா இல்லை கற்பனையா என்று தெரியாது.

நன்றி: திரு. கிரண் ராஜா சண்முகம்.

வேலைப்பளு மிகுந்த காலை நேரம் 08:30.

எண்பது வயதான ஒரு முதியவர் அவர் கட்டை விரலில் போடப்பட்டிருந்த தையலைப் பிரிப்பதற்காக வந்திருந்தார். ஒன்பது மணிக்கு ஒரு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி அவசரப்பட்டார்.

வேறு மருத்துவர் கவனிக்க குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு மேலாகும் என்பதால், அவரை ஒரு இருக்கையில் அமரச்செய்தேன். அவர் அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

எனக்கும் அப்போதைக்கு வேறு நோயாளிகள் இல்லாததால், அவரை கவனிப்பது என முடிவு செய்தேன். அவரது காயத்தை ஆராய்ந்ததில் அது நன்கு குணமடைந்தது தெரிய வந்தது. ஆகவே தாதியை அழைத்து அவரது தையலைப் பிரிக்கவும், காயத்திற்கு மருந்து போடவும் கூறினேன்.

அவரது காயத்தை ஆராயும் போது, "வேறு மருத்துவரிடம் செல்ல அப்பாயிண்ட் மெண்ட் வாங்கி இருக்கிறீர்களா என்ன..? இவ்வளவு அவசரத்தில் இருக்கிறீர்களே?" எனக் கேட்டேன்.

அதற்கு அவர் மறுதலித்து ஒரு மருத்துவமனைக்கு அவரது மனைவியுடன் காலை உணவருந்த செல்ல வேண்டியிருப்பதாக கூறினார்.

அவரது மனைவியின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவரது மனைவி அங்கு சில காலமாக தங்கியிருப்பதாகவும் ஒரு வகை (Alzheimer's disease) வியாதியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அவர் தாமதமாக போனால் அவரது மனைவி விசனப்படுவார்களா என வினவினேன்.

அதற்கு அவர் தான் யாரென்றே அவரது மனைவியால் கண்டு கொள்ள முடியாதென்றும், கடந்த ஐந்து வருட காலமாக அப்படித்தான் இருப்பதாகவும் கூறினார்.

ஆச்சரியத்தில் "நீங்கள் யாரென்றே உங்கள் மனைவிக்குத் தெரியாது. இருந்தாலும் தினம் காலை அவரைக் காண செல்கிறீர்களா..!?" எனக் கேட்டேன்.

எனது கையை மெல்லத்தட்டிய படியே "அவளுக்கு என்னைத் தெரியாது. ஆனால் இன்னும் எனக்கு அவளை யாரென்று தெரியுமே!" என்று கூறியபடியே புன்னகைத்தார்.

அவர் கிளம்பும் போது "இப்படியான ஒரு அன்புதான் எனக்கும் கிடைக்க வேண்டும்" என்று எண்ணியபடியே திரண்டு வந்த கண்ணீரை அடக்கிகொண்டேன்.

உண்மையான அன்பு என்பது இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வதில்தான். இப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தோ மாற்றி அடைவதோ அல்ல... என்பதும் புரிந்தது.

உலகில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் எல்லாம் மிகச்சிறந்தவற்றை அடைந்து விட்டதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதல்ல. அவர்கள் தங்களுக்கு கிடைப்பவற்றை மிகச்சிறந்ததாக மாற்றிக்கொள்கிறார்கள்!

புயலை எதிர்கொள்வது என்பதில் மட்டுமில்லை... மெல்லிய மழைச்சாரலில் நடனமாடுவதையும் சேர்த்துதான் இந்த உலக வாழ்க்கை!

kavitha
03-03-2008, 10:03 AM
உலகில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் எல்லாம் மிகச்சிறந்தவற்றை அடைந்து விட்டதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதல்ல. அவர்கள் தங்களுக்கு கிடைப்பவற்றை மிகச்சிறந்ததாக மாற்றிக்கொள்கிறார்கள்

மிக உயரிய சிந்தனை.


உண்மையான அன்பு என்பது இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வதில்தான். இப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தோ மாற்றி அடைவதோ அல்ல... என்பதும் புரிந்தது.
இதை முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாவிட்டாலும்.... இந்தக்கதைக்கு இது பொருத்தம் என்பதால் ஒப்புக்கொள்ளமுடிகிறது.

வாழ்வியலில் இதுபோன்ற தியாகிகளை பார்ப்பது அரிது. கதையிலாவது பார்க்கமுடிகிறதே...! ஆனந்தம். நன்றி பாரதி!

பூமகள்
03-03-2008, 12:02 PM
சீரிய சிந்தனையை உள்வாங்க முடிகிறது..!!
சொல்லப்படாத பட நல்ல உணர்வுகளை மனத்தில் ஏற்படுத்துகிறது.

வருங்காலம் வசந்தமாக இவ்வகை நற்சிந்தனைகள் தேவை..!!
அத்தகைய சிந்தனையை எங்கள் எண்ணங்களில் விதைத்த பாரதி அண்ணாவுக்கு எனது நன்றிகள். :)

aren
03-03-2008, 12:16 PM
பாரதி எங்கேயிருந்து உங்களுக்கு இப்படி அருமையான கதைகள் கிடைக்கின்றன. இன்று இரண்டு படித்தேன், இரண்டும் அருமையாக இருந்தது.

இன்னும் கொடுங்கள்!!!!

அன்புரசிகன்
03-03-2008, 02:21 PM
வாழ்க்கைக்கு நல்ல பாடம் புகட்டுவதாக உங்கள் ஆக்கம் இருக்கிறது.

எதிர்பார்ப்பு எதுவுமில்லாதது தான் பாசமும் காதலும் என்பதை நாசூக்காக கூறியிருக்கிறீர்கள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

பாரதி
05-03-2008, 06:15 PM
கருத்துக்களுக்கு நன்றி கவிதா, பூமகள், ஆரென், அன்புரசிகன்.

அன்பு ஆரென், மின்னஞ்சல்களை படிப்பதே பெரும் வேலையாகி விட்ட நிலையில் பல நண்பர்களும் அப்படியே தங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை எனக்கும் அனுப்புகிறார்கள். நான் பணிபுரிந்த பழைய நிறுவனத்தின் நண்பர்கள் மட்டும் இணைந்து நடத்தி வரும் யாஹு குழுமத்திலிருந்து வந்தவையே இவை. வரும் போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.

அறிஞர்
05-03-2008, 10:32 PM
அருமையான கதை....
அன்பு செலுத்த ஒருவர்.....
பெறக்கூடியவர் நிலை எப்படி இருந்தாலும்.....
தன் அன்பை தவறாமல் வெளிப்படுத்துபவரின் செயல் பெரிதே...
இதுவே உண்மையான அன்பின் வெளிப்பாடு...

பாரதி
10-03-2008, 04:18 PM
கருத்துக்கு மிக்க நன்றி அறிஞரே.

அமரன்
10-03-2008, 04:33 PM
மனநலம் குன்றியோர் பலர் யாரோ ஒருவரின் அருகாமையால் அமைதியாகி, அவர்கள் முகத்தில் இனம்புரியாத ஒரு உணர்வு படர்வதை கண்ணுற்று உள்ளேன். அப்போதெல்லாம் எப்படி இப்படி என்று எனக்குள் கேள்வி எழும்பி விடை தெரியாமலே அடங்கிவிடும். இந்தக்கதையைப் படித்த பின்னரே புரிந்தேன்.. விடை சலடனப்பட்டிருக்கும்... இதுவரை இவன் என்னைத் தொடவில்லையே என.. நன்றிகள் அண்ணா.. வாழ்க்கைக்கு அவசியமானது. கதையாக வார்ப்புருப் பெற்றுள்ளது.

மன்மதன்
17-03-2008, 03:45 PM
அருமையான மின்னஞ்சல்..

தமிழாக்கம் செய்து பகிர்ந்தலுக்கு நன்றி..

மனோஜ்
17-03-2008, 05:27 PM
அன்பு என்பது எதையும் ஏற்கக்குடியது என்பதை அழகாய் உணர்த்தும் கதை நன்றி பாரதி அண்ணா

இளசு
17-03-2008, 09:38 PM
எனக்கு அவளை யாரென்று தெரியும் இன்னும்...

வாழ்வின் ஜீவாதார வரி!

இருப்பதை ஏற்பதும், ஏற்றதை மதித்து நேசிப்பதும் தெய்வ குணங்கள்..
அன்பு என்னும் உலகத்துக்கு மிக ஏற்ற விதிகள்.

நல்லுணர்வுகளை மீட்(டெடுக்)கும் இவ்வகை ஆக்கங்களுக்கு அடிமை நான்..

தொடர்க பாரதியின் சீரிய சேவை!

பாரதி
22-03-2008, 07:42 AM
கருத்தளித்த அமரன், மன்மதன், மனோஜ், அண்ணா ஆகியோருக்கு நன்றி.